Showing posts with label கோவன். Show all posts
Showing posts with label கோவன். Show all posts

Tuesday, 11 November 2025

கம்யூனிஸ்டுகளின் போர்க்களங்கள்!

சிறுத்தைகளிடமும், சிங்கங்களிடமும், ஓநாய்களிடமும், முதலைகளிடமும் சிக்கிக் கொள்ளும் ஆடுகளும், மாடுகளும், மான்களும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள போராடுகின்றன. இதே விலங்குகள்கூட அதேவகை விலங்குகள் வேறு இடங்களிலிருந்து தங்களது எல்லைகளுக்குள் பிரவேசிப்பதையும் எதிர்த்துப் போராடுகின்றன. தாங்கள் வாழும் பகுதியை அவைகளுக்கு யாரும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லையென்றாலும், அது அவைகளுக்கான உயிர் வாழும் உறைவிடங்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தனித்தோ அல்லது கூட்டாகச் சேர்ந்தோ உயிர் வாழ்வதற்காக (struggle for survival) நடத்தப்படுகின்றன.

மனிதர்களும் இங்கே போராடுகின்றனர். தாங்கள் உயிர் வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விலங்குகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; அதே வேளையில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பண்ணையார்கள் போன்ற மனித விலங்குகளுக்கு எதிராகவும், அது ஆளும் அரசாயினும் எதிர்த்துப் போராடுகின்றனர். 

இந்துமதி

கருத்துரிமை, மனித மாண்பு சிதைக்கப்படும் பொழுதும், அரசியல் உரிமைகள் நசுக்கப்படும், பறிக்கப்படும் பொழுதும் மனிதர்கள் உலகம் முழுவதும் போராடுகின்றனர். முதலையின் வாயில் சிக்கிய மானைக் காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து உதவும் குரங்கைப் போல, மனிதர்களும், சக மனிதர்களின் நலனைக் காக்க, அது தூரதேசமாயினும் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர்.

மனித குலத்தின் ஒவ்வொரு சாராரும், தங்களின் நலனுக்காகப் போராடினாலும், பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் அகிலம் முழுக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

தமிழ்நாட்டிலும்கூட எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றனவோ, அது தனியார் ஆலைகளானாலும், அரசு நிறுவனங்களானாலும், பள்ளி கல்லூரிகளானாலும், முறைசாரா தொழிலாளர்கள் என்றாலும், வேளாண்மை என்றாலும் அங்கெல்லாம் கம்யூனிஸ்டுகளை மட்டுமே பார்க்க முடியும். 
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள்.  ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், வெற்றியின் சுவடுகளை நினைவுகூர்வதன் மூலம், அவர்கள் மேலும் மேலும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.

1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சிதான் கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது. ரஷ்யப் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நினைவு கூர்வதன் மூலம் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர். 

இந்த ஆண்டு, நவம்பர் 9ஆம் தேதி அன்று, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் சார்பில் வேலூர், தொரப்பாடி, வள்ளலார் மண்டபத்தில், நடைபெற்ற 109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.

சிறுவர்களின் சிலம்பாட்டம், கலைஞர்களின் பாடல்கள், தலைவர்களின் சொற்பொழிவு என களைகட்டிய இந்த விழாவில்  எழுந்த கரவொலிகள், வேலூர் கோட்டையில் முட்டி மோதி, கீழ்த்திசை மலைகளில் தவழ்ந்த மேகங்களில் ஊடுருவி சிலாகித்தன. 

இந்த விழாவில், இளம் தோழர்  இந்துமதி அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற நேருரையைக் கேட்டபோது ஆனந்தப்பெருக்கில் எனது கண்கள் சற்றே பணிந்து நீரைச் சொரிந்தன. விழாக்கள்கூட கம்யூனிஸ்டுகளுக்கு போர்க்களம்தான். போர்க்களங்களே வீரர்களை அடையாளம் காட்டுகின்றன!

தமிழ்மணி

விழாக் காட்சிகள்






Thursday, 25 July 2024

வினவோடு வீணாய் போக வேண்டாம்!

இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டை நெருங்க உள்ளதாம்.  மா-லெ இயக்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் புரட்சி முன்னேறவில்லையாம். இனி மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதையில் இந்தியப் புரட்சியை முன்னெடுக்கப் போகிறார்களாம். இப்படி அன்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது வினவு கும்பல்.

மகஇக முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் விலகளையொட்டி  கட்சி அணிகள் தொடுத்த கேள்விக் கணைகளைக் கண்டும்,  'பெல் சிட்டி' ஊழலுக்கு பழைய தலைமை துணை போனதால் எழுந்த பிரச்சனையை எதிர்கொள்ளத் திராணியற்று, பெரும்பான்மைக் கருத்தை ஏற்க மறுத்து, கட்சியை விட்டு ஓடிய பழைய தலைமையோடு ஓடியவர்கள்தான் இந்த வினவு கும்பல். அதன் பிறகு கட்சிப் பணத்தைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் அவர்களும் பிளவுண்டு. போனார்கள். 

இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு, ஏதோ கட்சியில் வலது சந்தர்ப்பவாதப் போக்கு வந்ததனால்தான் கட்சிப் பிளவுபட்டதாகக் கதை அளக்கிறார்கள்.

தோழர் மருதையன் விலகளை தவறாகக் கையாண்ட பழைய தலைமை, அதே நேரத்தில் அப்பொழுது எழுந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளரின் 'பெல் சிட்டி' ஊழலுக்கு துணை போன பழைய தலைமை ஆகிய இரு காரணங்களுக்காகத்தான் பழைய தலைமை அமைப்பை விட்டு ஓடி தனியாகச் செயல்பட்டது. இதுதான் பிளவுக்கு அடிப்படையான காரணம். இவையெல்லாம் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

தங்களை மிகப்பெரிய சித்தாந்தவாதிகளாக காட்டிக் கொள்வதற்காக அமைப்பில் வலது திசைவிலகல் தோன்றியதுதான் பிளவுக்குக் காரணம் என பழைய வெங்காயத்தையே தொடர்ந்து உரித்துக் கொண்டிருக்கிறது இந்த வினவு கும்பல். வினவு தளத்தை பெரும்பான்மையாக உள்ளவர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக நயவஞ்சகமாக வினவு இணைய தளத்தை கைப்பற்றிக் கொண்டது இந்த சதிகார கும்பல்.

இவர்கள் உரிக்கின்ற இதே வெங்காயத்தைத்தான் இவர்களிடமிருந்து பிரிந்து போன 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' என்ற பெயரில் செயல்படும் இன்னொரு குழுவும் உரித்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் இந்தியப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறித் திரிகிறது.

ஒரு கட்சி அல்லது குழு என்று சொன்னால், அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் அல்லது அமைப்பு பிரச்சனையாக இருந்தாலும் அதில் பல நூறு கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதில் பெரும்பான்மைக் கருத்து எதுவோ அதை ஏற்றுக்கொண்டு, அந்த அமைப்பிலேயே தொடர்ந்து  செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும்.  

சிறுபான்மை கருத்து உடையவர்கள் தங்களுடைய கருத்தின் நியாயத்தை, அந்த அமைப்பிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி அவர்களுடைய கருத்தைப் பெரும்பான்மையாக்குவதற்கு முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். அதை விடுத்து எடுத்தேன் கவித்தேன் என்று சிறுபான்மை கருத்து உடையவர்கள் வெளியே சென்று தனியாக செயல்படுவது புரட்சிக்கும் மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும்.

ஒருவேளை சிறுபான்மையாய் இருந்தாலும், தாங்கள்தான் மிகப் பெரிய அதிபுத்திசாலிகள் என்று கருதி வெளியேறும் பட்சத்தில், வெளியேறிய பிறகு வேறு ஒரு புதிய பெயரில் செயல்படுவதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். ஆனால் இந்தச் சிறுபான்மை வினவு கும்பலோ, கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகளான மகஇக, மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்கிற பெயரிலேயே செயல்பட்டு, பிற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிற அளவுக்குத்தான் இவர்களுடைய அரசியல் புரிதலும் இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்கள் அரசியலில் கன்றுக்குட்டிகளாக இருந்து கொண்டு, புதியவர்களிடம் பழைய வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு மற்றவர்களைக் குறை கூறித் திரிகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அரசியலை மாற்றிக் கொள்பவர்களுக்கு பழைய அமைப்பு பெயர்களைப் பயன்படுத்துவதற்கு எந்த அருகதையும் இல்லை.

வினவு கும்பலில் எஞ்சி இருக்கின்ற புரட்சியை நேசிக்கின்ற, ஜனநாயகத்தை மதிக்கின்ற தோழர்கள், அந்தக் கும்பலை விட்டு வெளியேறி தோழர் கோவன், ராஜூ தலைமையிலான தாய் அமைப்பில் இணைந்து செயல்படுவதுதான் இன்றைய காலத்தின் தேவை. இல்லையேல், வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, போராட்டம் வழக்கு, கைது, சிறை உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டு செய்கின்ற அத்தனை அர்ப்பணிப்புகளும், தியாகங்களும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போகும். இதை இப்போது அவர்கள் உணர முடியாது. 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர முடியும். இதுதான் பழைய தோழர்களின் அனுபவம்.

வினவோடு இருந்து வீணாய்ப் போக வேண்டாம் என்று வேண்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு. வினவு கும்பலிடம் இருந்து பிரிந்து போன மற்றொரு சிறுபான்மை கும்பலான 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' தோழர்களுக்கும் இந்த வேண்டுகோளை சேர்த்தே முன்வைக்கிறேன்.

பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிளவுண்டு கிடக்கும் எல்லா மார்க்சிய - லெனினிய குழுக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

ஒரு சிலரின் அரசியல் அரிப்புக்காக பல நூறு தோழர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. யாரையும் புண்படுத்துவதற்கோ மட்டம் தட்டுவதற்கோ அல்ல.

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள் 




Friday, 21 June 2024

கோவனுக்கு எதிராக நெளியும் புழுக்கள்!

கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் நடந்த பிறகு கோவனுக்கு எதிராக சில திண்ணைத் தூங்கிகள், கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து எள்ளி நகையாடி வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக ஓராண்டுக்கு முன்பு அவர் பாடிய பாடல் இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியவில்லை போலும். திருச்சியில் இரண்டு டாஸ்மாக் சாராயக்கடைகளை மகஇக போராட்டத்தின் மூலம் மூடி இருக்கிறார்கள். அப்பொழுது எழுதப்பட்ட பாடல் அது.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.


ஒரு பாடல் வைரல் ஆவதும், வைரல் ஆகாமல் இருப்பதும் சமூக ஊடகங்களைப் பொறுத்தது. ஊத்திக் கொடுத்த உத்தமியை பிரபலமாகியவர்கள் தமிழ்நாடு காவல்துறையும் சமூக ஊடகங்களும்தான்‌.

நிற்க, கலைஞர் ஆட்சி காலத்தில் கலைஞருடைய பெயரைக் குறிப்பிட்டு அவர் மேடைகளில் பாடிய பொழுது திமுக காரர்களின் நேரடி தாக்குதலுக்கெல்லாம் உள்ளாகி இருக்கிறார் என்பது இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியாது.

நிற்க, ஒரு கலைஞனின் செயல்பாடுகள், ஏன் இப்போது அப்படி இல்லை, இப்படி இல்லை என்று புலம்புகின்ற திண்ணைத் தூங்கிகள்,  எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ  அப்படி இந்தத் திண்ணைத் தூங்கிகள் செய்வதை யார் தடுத்தது? 

திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும் கடந்த காலங்களில் பல்வேறு மேடைகளில் உயிரைப் பணயம் வைத்து அவரோடு ஒரு மேடைப் பேச்சாளராக உடன் பயணித்தவன் நான். அப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம். அதனால் அத்தகைய செயல்பாடுகளை எல்லாம் கூகுளில் தேடினாலும் கிடைக்காது. தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரைக் குறை கூறுவதற்கு திண்ணைத் தூங்கிகள் எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. 

நெளிகிற புழுக்கள் நெளிந்து கொண்டே இருக்கட்டும். அருவருப்பாகத்தான் இருக்கும். ஆனால், புழுக்களின் காலம் மிகவும் சொற்பமானது.

தமிழ்மணி

Wednesday, 19 June 2024

தோழர் ஆர்.கே மறைவு உணர்த்தும் பாடம் என்ன?

தமிழ்நாட்டில் நக்சல்பாரி அரசியலை, மக்கள் திரள் அரசியலாக மிக ஆழமாகப் பதிய வைத்த, கடந்த ஆண்டு தோழர் அன்பழகன், தற்போது தோழர் ஆர்.கே என இரு நக்சல்பாரித் தலைவர்கள் மரணித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் உயிர்ப்போடு நினைவுகூறப்பட வேண்டிய அவர்களின் அரசியல் பங்களிப்பு அவ்விருவரின் அந்திமக்காலச் செயல்பாடுகளால் அவர்களின் மரணம் குடத்துக்குள் இட்ட விளக்காய் குன்றிப் போனது.

அவர்களின் கடந்தகால சாதகங்கள், சாதனைகளை ஒரு பக்கமும், கடைசி காலகட்டத்தில் அவர்களின் அரசியல் மற்றும் அமைப்பு நடைமுறைகளையும் ஒப்பிட்டு பரிசீலிக்க வேண்டும்.  அவர்கள் மரணிக்கும் போது ஏன் தனிமைப்பட்டு, கேட்க நாதியற்றுப் போனார்கள்-குறிப்பாக தோழர் ஆர்.கே - அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும். மரணிக்கும் போது ஒரு மகத்தான தலைவராக மரணித்தத் தோழர் சீனிவாசனோடு இவர்கள் இருவரின் மரணத்தையும் ஒப்பீடு செய்யலாம். 

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெருமான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு ஒரே அமைப்பில் தொடர்ந்து செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும். அதேபோல சிறுபான்மை கருத்துள்ளவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதன் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும் பெரும்பான்மையாக உள்ளோர் கடைபிடிக்க வேண்டிய ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடாகும். இரு தரப்புமே இதை மீறும்பொழுதுதான் சிறுபான்மையோர் மற்றும் தனிநபர்கள் வெளியேறுவதும், அமைப்பு பிளவு படுவதும் நடக்கிறது. 

இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் ஊன்றி நிற்காமல் போனதனால்தான் தோழர் அன்பழகன், தோழர் ஆர்.கே இருவரின் பெரும் பங்களிப்பால் உருவான ஒரு அமைப்பு பிளவுபட்டுப் போனது என்பதைவிட பிளவுகளுக்கு அவர்களே காரணமாகவும் அமைந்துவிட்டார்கள். இது பிளவுபட்டுக் கிடக்கும் பிற மா-லெ குழுக்களுக்கும் பொருந்தும். 

தோழர் ஆர்.கே

பொதுவாக அரசியல் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் பற்றி கூடுதல் மதிப்பீடும், மக்கள் திரள் அமைப்பில் செயல்படுபவர்களுக்கு குறைவான மதிப்பீடும் என்கிற ஒரு போக்கு மா-லெ இயக்கங்களில் நிலவுகிறது. என்னதான் சரியான அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தாலும் அதை மக்கள் மொழியில் அற்பணிப்போடு எடுத்துச் செல்லும் மக்கள் தலைவர்கள் இல்லை என்றால் அத்தகைய அரசியல் நிலைப்பாடுகள் மக்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

சித்தாந்தத்தை ஒருவர் எழுதி வைத்தாலும் அது விவாதத்திற்குப் பிறகு அணிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அது அமைப்பின் சித்தாந்தமாகிவிடுகிறது. பிற்காலத்தில் அது தவறு என கண்டறியப்பட்டால் அதற்கு அமைப்புதான் பொறுப்பே ஒழிய எழுதி முன்வைத்த தனிநபர்கள் அல்ல.‌ 

ஒருவர் முன்வைத்த சித்தாந்தம் பின்னாளில் தவறு என கண்டறியப்பட்டால், அவரை மட்டுமே ஒரு அமைப்பு குறை கூறுவதும், அல்லது ஒரு சரியான சித்தாந்தத்தை முன்வைத்து ஒரு அமைப்பு வெற்றி பெற்று விட்டால் அது தன்னால்தான் என அந்தத் தனிப்பட்ட நபர் பெருமையுடன் உரிமை கோருவதும் இரண்டுமே தவறான போக்குகளாகும்.  

மேலும் சித்தாந்தத் தலைமையாக கருதப்படுபவர்கள், தங்களது இறுதி மூச்சுவரை, நிலவுகின்ற அரசியல் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மிகச் சரியான அரசியலை முன்வைத்து அது பெரும்பான்மையான அணிகளால் ஏற்கப்பட்டு, மக்களிடையே செல்வாக்கைப் பெறுகிறதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.

மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு தோழர் ஆர்.கே மறைவுற்றுள்ள இந்தத் தருணத்தில் ஒரு விரிவான பரிசீலனை தேவை எனக் கருதுகிறேன். இதுவே மார்க்சிய-லெனினியர்கள் தங்கள் தவறுகளைக் களைந்து கொண்டு ஒன்றுபடவும், வளர்ச்சி பெறவும் உதவும். எதிர்மறை அம்சங்களைப் பரிசீலிக்கும் பொழுதுதான் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதை உணரமுடியும்.

தோழர் ஆர்.கே வுக்கு சிவப்பஞ்சலி!

தமிழ்மணி

Monday, 18 September 2023

"வினைசெய் 2.0" வெனையாக மாறுகிறதோ?

வினைசெய் 2.0, Scientist, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல்,  என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,  

வினைசெய், Journalist, என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம், 

வினைசெய் 2.0, Friends, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல், என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,

என ஒரே பெயரில் மூன்று முகநூல் கணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக உள்ள வினை செய் ஊடகம் வலைப்பூவாகவும் பதிவாகி உள்ளது. 


*****
கார்ப்பரேட் காவிப்  பாசிசம் வீழ்த்துவது பற்றிய சரியான திசை வழி என்ன? என்ற‌ தலைப்பில் பல்லாவரம் முகவரியைக் கொண்ட வினைசெய் 2.0, Scientist, என்ற முகநூல் கணக்கில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

அது குறித்த ஒரு சுருக்கமான பார்வை.

*****
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை வழி எனவும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் வழி எனவும் தொடங்குகிறது இக்கட்டுரை.

கடந்த கால செயல்பாடு

1990 களில், "நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற சரியான செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, ஆயிரக்கணக்கான மக்களை அணி திரட்டியதாகவும், 2015 வாக்கில் "கட்டமைப்பு நெருக்கடி" என்கிற செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, அதை ஒரு சாகச நடவடிக்கையாக மாற்ற துணிந்ததாகவும், பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை உணராமல் செயல்பட்டதாகவும், அப்போது, பாசிச எதிர்ப்பு அரசியலை திணிப்பதாக அமைப்பில் இருந்த சில குட்டி முதலாளித்துவப் பிரிவினர் விமர்சனம் வைத்ததாகவும் கூறுகிறது இக்கட்டுரை.

எதிர்காலச் செயல்பாடு

2019 வாக்கில் "கார்ப்பரேட் காவிப் பாசம்" நாட்டின் பிரதான அபாயமாக மாறிவிட்டதால், பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியாக இருக்கும், 

ஆளு வர்க்கப் பிரிவினரின் ஒரு சாராரையும், இதர முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மேலிருந்து "பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளுக்கு எதிராகத் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்தியும், 

விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்கள் மற்றும்  அறிவுத் துறையினரை உள்ளடக்கிய, "பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வேண்டும் என்கிற இருவழிப் பாதைதான் சரியானது எனவும், 

இதன் மூலம் மட்டும்தான் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவி, அதைத் தொடர்ந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேற முடியும் என்கிறது கட்டுரை.

தோழர் பாலன் உள்ளிட்ட சிலர் பாசிசத்தை அதன் தொடக்கக் காலத்திலேயே வீழ்த்த வேண்டும் என்பதை மறுப்பதாகவும், தரவுகள் எதுவும் இன்றி குறை கூறுகிறது இக்கட்டுரை.

தோழர் மருதையன் மீதான விமர்சனம்

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஒரு முகாம், அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றொரு முகாம் என இரு முகாம்கள் மட்டுமே இருப்பதால், பாஜக முகாமை வீழ்த்த, திமுக முகாமை ஆதரிக்க வேண்டும் என அமைப்பிலிருந்து வெளியேறி திமுக-வை ஆதரிக்கும் மகஇக முன்னாள் பொதுச் செயலாளர் மருதையன் செயல்பட்டு வருவதாகவும், 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மருதையன் திட்டவட்டமாக முன்வைப்பதாகவும், இது பாசிசத்தை வீழ்த்தாது, மாறாக மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் வீழ்த்துகிற, தோற்றத்தில் முற்போக்கு தன்மை கொண்ட குட்டி முதலாளித்துவ தர்க்கம் இது; மேலும், இது போலி ஜனநாயக அமைப்பை நம்ப வைப்பதாகும் என்பதால் இதை நிராகரிக்க வேண்டும் என்கிறது இக்கட்டுரை.

சில தனி நபர்களும், சில சிறு குழுக்களும் பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும், இது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைக் குழப்பி, பாட்டாளி வர்க்கத்தைக் கையேறு நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறது இக்கட்டுரை.

யார் இந்த வினைசெய்?

ஒன்றுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக, அதே பெயரில் செயல்படும் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்யினரை இந்தக் கட்டுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதைப் பார்க்கும் போது,  வினைசெய் ஆசிரியர் குழு, தாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தாத போதும், இவர்கள் வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பை ஆதரிப்பவர்கள் என யூகிக்க முடிகிறது.

வினைசெய் ஆசிரியர் குழு முன்வைத்துள்ள பாசிச எதிர்ப்புத் திட்டம் சரியானதா தவறானதா என்கிற விவாதம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஜனநாயக சக்திகளையும், தனி நபர்களாக உள்ள அறிவுத் துறையினரையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்; கையாள வேண்டும் என்கிற போதாமை வினைசெய் ஆசிரியர் குழுவிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தோழர் மருதையன் என்ன செய்கிறார்?

சொந்தக் காரணங்களுக்காகவும், அரசியல் கருத்து வேறுபாடு காரணங்களுக்காகவும் ஒருவர் ஒரு அமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது அவரது ஜனநாயக உரிமையாகும். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகத் தோழர் மருதையன் மகஇக-விலிருந்து வெளியேறவில்லை; மாறாக அரசியல் தலைமைக் குழுவில் இருந்த ஒரு சிலர் அவரை பார்ப்பனர் என்று முத்திரை குத்தி, சாதி ரீதியாக தனிமைப்படுத்தியதனால் வெறுப்புற்று வெளியேறியவர். 

அமைப்பை விட்டு வெளியேறினாலும், அவர் நாட்டு நடப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல் சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை எதிர்த்துக் கருத்துத் தளத்தில் முன் எப்போதையும்விட மிகத் தீவிரமாக தனது ஆழமான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வருகிறார். களத்திலும் சில போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் ஒரு தனிநபராக இருந்தாலும், அவர் முன்வைக்கிற கருத்துகளை இலட்சக்கணக்கானோர் ஆதரிப்பதோடு, அரசியல் துறையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இன்று அவர் அறியப்படுகிறார். 

அறிவுத்துறையினரைக் கையாள்வது எப்படி?

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. என்பார் மாவோ.

ஆனால், இதற்கு மாறான பார்வையைக் கொண்டுள்ளது வினைசெய் கட்டுரை.  தோழர் மருதையன் குறித்தப் பார்வையில் அது வெளிப்படுகிறது. அவர் திமுக-வை ஆதரிப்பதாகக் குறை கூறும் வினைசெய், திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு சிலரை ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்கள் தங்கள் மேடைகளில் ஏற்றி உரையாற்ற வைக்கிறார்களே? ஏன் காங்கிரஸ்காரர்களைக்கூட மேடை ஏற்றுகிறார்களே? இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? 

"பொதுவுடைமை சார்ந்த இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப் படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்"

குட்டி முதலாளிகள், புரட்சியில் அவர்களின் பங்கு குறித்தும் வினைசெய் குழுவிற்கு போதியப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் தோழர் மருதையனை குட்டிமுதலாளி என முத்திரை குத்துகின்றனர். குட்டி முதலாளிகளின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை மாவோவைப் படித்தால்தானே புரிந்து கொள்ள முடியும். தோழர் மருதையனை விமர்சிப்பதில் வெற்றிவேல் செழியன் கோஷ்டியும், வினைசெய் ஆசிரியர் குழுவும் ஒரே அலைவரிசையில்தான் சிந்திக்கின்றனர்.

பிற கட்சிகள், சிறு குழுக்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் பொழுது, தரவுகளோடு முன்வைக்க வேண்டும். மேலும், எது சரியானது என்று முன்வைக்கும் பொழுது, அதற்கான ஆதாரங்களை, சான்றோர்களின் நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும்.

கட்டுரையின் எழுத்து நடையும், கருத்துக் கோர்வையும் செரிவானதாக இல்லாமல், அள்ளி இறைத்தாற்போலுள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக,

தொகுப்பாக, வினைசெய்யில் வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை என்பது தரவுகள் ஏதுமில்லாமல், யூகத்தின் அடிப்படையில், அகநிலைவாத கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றுதான் முடிவு செய்ய முடிகிறது .இது குறித்து வினைசெய் ஆசிரியர் குழு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அது ஒன்றுதான், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு பரந்து விரிந்த அணியைக் கட்டவும், மக்களை அணி திரட்டவும் உதவும். மாறாக, இதே பாணியில் எழுதிக் கொண்டிருந்தால் ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகளிடமிருந்தும், அறிவித்துறையினரிடமிருந்தும் தனிமைப்படுவதைத் தவிர வேறு எந்தப் பலனும் கிட்டாது.

நட்பு சக்திகளிடம் வினைசெய், வெனையாக மாறக்கூடாது என்பதே என் போன்ற வாசகர்களின் அவா.

தோழமையுடன்

தமிழ்மணி

*****

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

நீங்கள் குட்டி முதலாளியா?

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

*****
வினை செய் கட்டுரை
*****
கார்ப்பரேட் காவிப் பாசிசம் வீழ்த்துவதுப் பற்றிய சரியானத் திசை வழி என்ன?

புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளுக்கு அறை கூவல்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் அரசியல் நடத்தை வழி!

“குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும், மக்களையும், பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைச் சரியாக அவதானித்து, செயல்தந்திர அரசியல் வழியைத் தீர்மானிப்பது, அதற்கேற்பப் போராட்ட வடிவங்களையும், அமைப்பு வடிவங்களையும், முழக்கத்தையும் தீர்மானிப்பது” என்பதையே எமது செயல்தந்திர அரசியல் வழியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கங்கள் 90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியதைச் சரியாக அவதானித்து “நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தைச் செயல்தந்திர அரசியலாகக் கொண்டுச் சென்றோம்.

2015 ஆம் ஆண்டில் எமது தலைமைக் குழு அவதானித்தபடி நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு கட்டமைப்பு நெருக்கடி என முன்வைத்துச் செயல்பட துவங்கினோம். இந்த அவதானிப்பில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய அமைப்பு இல்லாதச் சூழலில், புரட்சிகர அமைப்பின் அகநிலைச் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், புறநிலை எதார்த்தத்தை மதிப்பீடு செய்வதிலும் மிகையான பார்வையில், அகநிலைவாதக் கண்ணோட்டத்தில், மக்கள்திரள் வழியிலான அரசியலை நிராகரித்து, புரட்சிகர அரசியலைச் சாகச நடவடிக்கையாக மாற்றத் துணிந்து செயல்பட்டோம். 

இவ்வாறு நாட்டின் மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கைத் தவறாக அவதானித்ததை நடைமுறை அனுபவத்தின் மூலமாக பாரிய அரசியல் தவறு என உணர்ந்து கொண்டோம். நாட்டை மறுகாலனியாக்குகின்ற சூழலில் அதற்குப் பொருத்தமாக பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசச் சக்திகளை ஏகாதிபத்தியங்களும் அவர்களின் தலைவனான அமெரிக்க மேல்நிலை வல்லரசும் ஆதரிக்கத் துவங்கியது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையிலானப் பார்ப்பனப் பாசிஸ்டுகள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அதாவது பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தவறு என உணர்ந்தோம். 

கட்டமைப்பு நெருக்கடி எனும் அரசியல் நிகழ்ச்சிப் போக்கின்போதே, கார்ப்பரேட் காவிப் பாசிசம் ஏறித்தாக்கி வருகிறது என வரையறுத்து முன் வைத்தபோது எமது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த ஒரு தோழரும், அமைப்பு முறையின்றி அவருக்கு விசுவாசமாக இருந்த கீழைக்காற்று பதிப்பகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்ட துரை. சண்முகம் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ பிரிவினர் சிலரும் கொல்லைப்புறமாகப் பாசிச எதிர்ப்பு அரசியலை திணிக்கின்றனர் என குதியாட்டம் போட்டனர்.

மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டும் செயல்தந்திர அரசியல் வழி!
90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்படத் துவங்கியபோது நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு என்பது மறுகாலனியாதிக்க அபாயமும், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசச் சக்திகள் தலைதூக்குவதும்தான் என்பதை அனுமானித்து அதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். செயல்தந்திர அரசியல் வழியில் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அரசியலைத் தயக்கமின்றி முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்களை புரட்சிகர அமைப்புகளின் கீழ் திரட்டி வந்தோம்.

2007 ஆம் ஆண்டு நடந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத நெருக்கடியானது உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு வடிவங்களைத் தூக்கி எறிந்து விட்டு பாசிச சர்வாதிகார ஆட்சி வடிவங்களையே முன்னிறுத்தியது.  உலகில் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், மறு பங்கீடு செய்து கொள்வதற்கும் உரிய வழிமுறையாக மறுகாலனிய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை காலனிய நாடுகளின் மீது திணித்தனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது நாட்டின் பிரதான அபாயமாக மாறியது. இந்த நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி 2019 முதல் தீவிரமாக விவாதித்தாலும், 2021 ஆம் ஆண்டுதான் உரிய தரவுகளுடன் கார்ப்பரேட் காவிப் பாசிசமே நாட்டின் பிரதான அபாயம் எனவும், அது இந்தியாவின் வரலாற்றுத் தன்மைகளுக்கு பொருத்தமாக, கார்ப்பரேட் -காவிப் பாசிசம் எனும் இந்தியப் பாசிசமாக வெளிப்படுகிறது எனவும் வரையறைச் செய்து முன்வைத்தோம். 

அதனை வீழ்த்துவதற்கு புரட்சிகர ஜனநாயகச் சக்திகள், பாசிசத்தை எதிர்க்கின்ற அரசியல் இயக்கங்கள், ஆளும்வர்க்கத்தின் பாசிச எதிர்ப்புப் பிரிவு, தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே அணியாகக் கொண்டு வந்து பரந்த அளவிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியமைப்பதும், அதற்கு இணையாகவே கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத் துறையினர் அனைவரையும் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதும், அந்த முன்னணிகளின் மூலமாக தேர்தல் அரசியல் மற்றும் தேர்தலுக்கு வெளியில் போராடி, தற்காலிக இடைக்கால அரசாங்கமாக, ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை நாங்கள் முன் வைக்கின்றோம்.  

சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற புதிய ஜனநாயகப் புரட்சிக்கு ஒரு இடைக்கட்டமாக தோன்றியுள்ள ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதன் விளைவாக அரசியல், அமைப்பு, பண்பாட்டுத் துறைகளில் அமுல்படுத்தப்படும் பாசிசமயம், அரசு, அரசாங்கம் இரண்டுமே பாசிசமயமாவது போன்றவற்றை அவதானித்து அதனை வீழ்த்துவதற்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உடனடிக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம். அப்படிப்பட்டக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறோம்.

குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை முறியடிக்கின்ற வகையில் செயல்தந்திரங்களை வகுத்து செயல்படும்போது, அவை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் போர்தந்திர அரசியலுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அணுகுமுறையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைக்கின்றோம். இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கியத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம். இவைதான் சர்வதேச ரீதியில் பாசிசத்தை எதிர்த்துப் போராடி முறியடித்தக் கம்யூனிச இயக்கங்களின் அனுபவம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து வெளியேறியத் தோழர் பாலன் போன்ற சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் என முன்வைத்துக் கொண்டு தேர்தல் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிநபர்கள், அமைப்பு பலம் இல்லாத வாய்ச்சவடால் பேர்வழிகள் போன்றவர்களை இணைத்துக் கொண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என ஒன்றை நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்தை வீழ்த்துவதற்கு திட்ட வகைப்பட்ட செயல்பாடு அல்லது மாற்றுத் திட்டம் இல்லாத மானசீகவாதம் என்பதுதான் இவர்களின் பாசிச எதிர்ப்பு கொள்கையாக இருப்பதால் இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அடுத்து வெற்றிவேல் செழியன் என்பவருடன் எமது அமைப்பை விட்டு வெளியேறியச் சிலர் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், இன்னமும் நாட்டில் பாசிச அபாயம் வரவில்லை, வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது ஐக்கிய முன்னணி கட்டுவோம். அதுவரை மக்கள் முன்னணியைக் கட்டி செயல்படுவோம் எனப் பாசிச எதிர்ப்பு பற்றி தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறிய வழிமுறையைத் திரித்துப் புரட்டி சந்தர்ப்பவாதமாகப் பேசி வருகின்றனர். பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை மறுக்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை எமது அமைப்பு 90களில் இருந்து கடைப்பிடித்து வரும் செயல்தந்திர அரசியல் வழிமுறையில் செயல்பட தேவையில்லை, “செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து அதன் கீழ் மக்களை திரட்டுவது என்பதே அல்லேலூயா பஜனைப் போல பேசுவதுதான்” எனத் தனது அணிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டே, பொது வெளியில் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனப் பேசுகின்றனர். தேர்தலை எந்தக் காலத்திலும் பயன்படுத்தவே முடியாது எனும் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளாக செயல்படுகின்றனர். தேர்தல் பற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தையோ அல்லது தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு போன்றவற்றைப் பற்றி தோழர் ஸ்டாலின், லெனின் போன்றவர்கள் முன்வைத்ததைப் பற்றியோ எதையும் ஆழமாகக் கிரகித்துக் கொள்ளத் திராணியின்றி உள்ளனர். எமது அமைப்பின் அரசியல் கோட்பாட்டு முடிவுகளைக் கூட இது நாள் வரை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு உள்ளனர் என்பதும் உறுதியாகிறது. 

திடீரென்று இப்போது, “வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என மொட்டையாக முழக்கத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் முன்வைக்கின்ற ஜனநாயகம் போலி ஜனநாயகமா அல்லது புதிய ஜனநாயகமா என்பதைக் கூட தெளிவாக முன் வவைக்கவில்லை. அவர்களின் மேடையில் பேசும் திருமுருகன் காந்தி, வேண்டாம் பிஜேபி என்றால் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்; அவர்கள் முட்டாள்கள் இல்லை என உளறிக் கொட்டினார். திருமுருகன் போன்றக் குட்டி முதலாளித்துவச் சக்திகளுடன் ஐக்கியத்தைப் பேணி, மார்க்சிய லெனினிய செயல்தந்திர அரசியல் வழியை நிராகரித்து செயல்படும் வெற்றித் தரப்பினர் முன்வைக்கின்ற இந்த வழிமுறையும், போகாத ஊருக்கு இல்லாத வழியை முன்வைக்கின்ற வழியாகும் என்பதால் அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

முத்துக்குமார் என்பவருடன் வெளியேறிச் சென்றுள்ள சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தலாம், ஆனால் முதலாளித்துவக் கட்சிகளான திமுக, காங்கிரஸ் பின்னால் நின்று கொண்டு அதனை எதிர்கொள்ளக் கூடாது என அகநிலைவாத அடிப்படையில் பேசித் திரிகின்றனர். இவர்களும் தேர்தல் புறக்கணிப்பு எனக் கூறிக் கொண்டாலும் திட்டவட்டமாகப் புதிய ஜனநாயகப் புரட்சி என முன் வைப்பதில்லை. மாறாக ஜனநாயக குடியரசு என ஏதோ ஒன்றை இவர்கள் அகநிலைக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர். இந்த வரையறை எதிரிகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும், உத்திரவாதமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகளான இவர்கள், தனக்கு நேரடியாகப் பாதிப்பு இல்லை எனும் கண்ணோட்டத்தில் இருந்து தான்தோன்றித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பதும் என இருப்பதால் இந்த வழிமுறையும் பாசிசத்தைத் துளி கூட அசைத்துப் பார்க்காது என்றே கருதுகிறோம்.
 
அதுமட்டுமின்றி பாசிசம் வரவில்லை, இந்தியா முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றெல்லாம் பருண்மையான ஆய்வு முடிவுகள் இன்றி வாய்வழி பிரச்சாரம் செய்வதன் மூலம், மார்க்சிய லெனினிய வழிமுறையைக் கைவிட்டு விலகி விட்டனர் என அவதானிக்கின்றோம்.

எமது அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அல்லது பிளவுபடுத்திக் கொண்டு வெளியேறிய வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு குழுக்களாக, தனிநபர்களாக இருந்துக் கொண்டு மேற்கண்டக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இதன் மூலம் புரட்சிகர அரசியல் முன்னேறுவதற்கு தற்காலிகமாக சில தடைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றுள்ள தோழர்களையும் குழப்பியடித்து, விரக்தியிலும், எதுவும் நடக்காது எனும் சூனியவாதத்திலும் மூழ்கடிக்க எத்தனிக்கின்றனர். இதனால்தான் வெற்றிவேல் தரப்பின் செய்தித் தொடர்பாளர் மருது என்பவர் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என உளறிக் கொண்டுள்ளார்.

பாசிசம், பாசிச எதிர்ப்பு என்பதில் இரண்டே முகாம்கள்தான் உள்ளது. ஒன்று கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டு வரும் ஆர் எஸ் எஸ் பாஜக முகாம்.. மற்றொன்று அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட முகாம். இந்த இரண்டு எதிரெதிர் முகாம்களில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ள தேர்தல் கட்சிகளில் ஒரு பிரிவைச் சார்ந்து, அதாவது திமுக, காங்கிரசைச் சார்ந்து நின்று ஆர் எஸ் எஸ் பாஜக பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என எமது அமைப்பிலிருந்து வெளியேறி, திமுகவை ஆதரித்து வரும் முன்னாள் மகஇக செயலர் மருதையன் செயல்பட்டு வருகிறார்.
 
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் எனத் திட்டவட்டமாக அவர் முன் வைக்கிறார். இது பாசிசத்தை வீழ்த்துவதற்கு முழுமையற்ற, மக்களை மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் ஆழ்த்துகின்ற எளிமையான, ஆனால் தோற்றத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட வழிமுறையாகும். இது பாசிச எதிர்ப்பு போர்வையில் உலவுகின்ற குட்டி முதலாளித்துவ தர்க்கம் ஆகும். 

அது மட்டுமல்ல, இது பாசிசத்தை வீழ்த்துவது எனும் முகாந்திரத்துடன் தற்போது இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயகத்தை நம்பி ஏமாறுவதாகும். பாசிசம் தோன்றுவதற்கு அடிப்படையான போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை நம்ப வைத்து மக்களை மீண்டும் பாசிச புதைகுழிக்குள் ஆழ்த்துவதற்கு செயல்படுகிறது என்பதால் இந்த வழிமுறையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கின்றோம்.

நாட்டை சூழ்ந்திருக்கும் மிக முக்கியமான கொடூரமான அபாயமான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாங்களும் செயல்படுகின்றோம் எனக் கூறிக்கொண்டு இத்தகையத் தவறானக் கண்ணோட்டத்தை, பாசிசத்தை சிறிதும் அசைத்துப் பார்க்காத வழிமுறைகளை முன் வைக்கின்ற தனி நபர்கள் மற்றும் சிறு சிறு குழுக்கள் போன்றவை பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்துத் தனக்குப் புரிந்த வகையில் எதிர்த்துப் போராடுவதற்கானத் தீர்வை முன்வைக்கின்றனர். இவை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் திசை வழியைக் குழப்புவதிலும், பாட்டாளி வர்க்கத்தை கையறு நிலைக்கு தள்ளுவதிலும் உரிய பங்களிக்கின்றது என்பதால் இவற்றை நிராகரிக்க வேண்டும் எனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்வைக்கின்றோம்.

நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவது எனும் வகையில் ஆர்எஸ்எஸ் செயல்படுவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மீது அன்றாடம் வன்முறைகளும், கொலை வெறியாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை பார்ப்பனக் கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்ற எத்தனிக்கும் சனாதனத் தர்மம் எனும் வர்ணாசிரமக் கொடுமை உயர்ந்தது எனத் துணிச்சலுடன் பேசப்படுகிறது. இன்று, நாட்டின் அரசியல், பொருளாதாரம் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் மறுகாலனியாகி வருகிறது. 

இத்தகையக் கொடூரமானச் சூழ்நிலையில் நாட்டை ஏறித்தாக்கி வரும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட்டுச் சேர்ந்து, தற்காலிகமான சில சமரசங்களுடன்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாகவே இருக்கின்றோம். இதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றோம். 

அதே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும் அவர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி மூலம் நேரடியாக கீழிருந்து ஆர்எஸ்எஸ் பாஜகவை நேருக்கு நேர் நின்று வீழ்த்துவதற்குத் தயார்படுத்துவதும், அதற்கு இணையாக நாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கீழிருந்து   அமல்படுத்துகின்ற வகையில் செயல்படுவதும் அவசியம் என்பதை முன் வைக்கின்றோம்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு இருவழிப் போராட்டங்களின் மூலமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என முன்வைப்பதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றான காங்கிரசுடன் எந்த காலத்திலும் உறவு கூடாது. கடந்த காலத்தில் அப்படித்தானே இருந்தோம் என அனுபவவாதம் பேசுவதுடன், தேர்தல் அரசியல் கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக் கூடாது எனப் பிதற்றுவதன் மூலம் சுயம்பிரகாசவாதிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அகநிலை சக்திகளின் பலம், பலவீனம் பற்றி புரிந்துக் கொள்ளாத அல்லது புரிந்துக்கொள்ள விரும்பாத இத்தகைய வறட்டுக் கோட்பாட்டுவாதமும், குறுங்குழுவாத கண்ணோட்டமும் பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்தாது என்பது மட்டுமல்ல. ஒரு துளி அளவிற்குக் கூடப்  பாசிஸ்டுகளை பின்வாங்கச் செய்யாது என்பது மட்டும் நிச்சயமாகும். 

இத்தகைய வறட்டு கோட்பாட்டுவாதிகளை பொறுத்தவரை அவர்களின் நோக்கம், கட்சியை நடத்திக் கொண்டிருப்பது அல்லது தன்னை முற்போக்கு சக்திகளாகக் காட்டிக் கொள்வது என்பதுதானே ஒழிய வேறில்லை. ஆனால் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் தற்காலிக இடைக்கால அரசாங்கத்தை, ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதும், புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து எமது செயல்பாடுகளில் தங்களின் துணையுடன் முன்னேறுகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
வினை செய்.
*****

Thursday, 8 June 2023

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

பொதுவுடமை கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட மக்கள் அதிகாரம், மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகள் 2020 ஆம் ஆண்டு இரண்டாகப் பிளவு பட்டன. 

இந்தப் பிளவின் போது வழக்கறிஞர் ராஜு தோழர் கோவன், தோழர் காளியப்பன் இவர்களின் தலைமையை ஏற்றுக் கொண்டு மொத்த அணிகளில் கிட்டத்தட்ட 80% சேர் ஒரு அணியாக தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இவர்களிடமிருந்து பிரிந்த மற்ற 20% பேர் தோழர் வெற்றிவேல் செழியன் அவர்களின் தலைமையில் ஓர் அணியாகவும் சில காலம் செயல்பட்டனர்.

இந்தப் பிளவிற்குப் பிறகு தோழர் வெற்றிவேல் செழியன் தலைமையிலான அணி 50:50 என்ற அளவில் இரண்டாகப் பிளவு பட்டு, ஒரு தரப்பு வினவு அணியாகவும், மற்றொரு தரப்பு செங்கனல் அணியாகவும் செயல்பட்டு வருகின்றனர்.

மூன்று அணிகளுமே மக்கள் அதிகாரம் பெயரிலேயே செயல்படுகின்றனர். அதேபோல புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்கிற தொழிற்சங்கத்தின் பெயரை மூன்று அணிகளுமே பயன்படுத்துகின்றனர். 

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய  அமைப்புகளின் பெயரை ராஜு தரப்பினரும், வினவு தரப்பினரும் பயன்படுத்திய வருகின்றனர். 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் அமைப்பின் பெயரை ராஜு தரப்பினர் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். 

மேற்கண்ட அமைப்புகள் பிளவு படும் போது அரசியல் ரீதியான காரணங்களுக்காக பிளவு படவில்லை. மாறாகத் தோழர்கள் மருதையன் மற்றும் நாதன் ஆகிய இருவரும் அரசியல் தலைமைக் குழுவிலிருந்து விலகிய போது அது குறித்த பரிசீலனையில் அரசியல் தலைமை குழுவில் இருந்த பிற தோழர்களின் அமைப்பு ரீதியிலான தவறான அணுகுமுறையினால்தான் அவர்கள்  இருவரும் விலக நேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து தங்களது தவறை ஒப்புக் கொண்ட அரசியல்  தலைமைக் குழு பதவி விலகியது. மேற்கொண்டு அமைப்பை வழிநடத்திச் செல்லவும் இந்த விலகள் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்கும் ஒரு தற்காலிகத் தலைமைக் குழு தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் அதற்கானப் பணிகளை மேற்கொண்டு வந்த போதுதான், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில தலைமையில் இருந்த ஒருவரின் பெல் சிட்டி ஊழல் நக்கீரனில் வெளிவந்தது. ஊழலில் சம்பந்தப்பட்டத் தோழரை வழிநடத்தியவர்கள், பழைய அரசியல் தலைமைக் குழுவின் செயலாளர் மற்றும் மற்றொரு உறுப்பினர் இருவரும் பதில் சொல்ல வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். மருதையனின் விலகளைக் கூட எளிதில் எதிர்கொள்ள முடியும், ஆனால் பெல் சிட்டி ஊழலை அணிகளிடம் எதிர்கொள்ள முடியாது என்று அஞ்சி நடுங்கிய பழைய செயலாளர் இடைக்கால குழு மீதும், மருதையன் மீதும் சதிக்கோட்பாடுகளை உருவாக்கி அமைப்பை உடைத்துக் கொண்டு 20% ஆட்களுடன் வெளியேறினார். இதுதான் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பிளவுக்கான உண்மையான காரணம்.

அதன் பிறகு அந்த 20% பேரும் இரண்டாகப் பிளவுபட்டனர் எனபது தனிக்கதை.

உண்மை இவ்வாறு இருக்க, மருதையன் என்கிற பார்ப்பனர்தான் இந்தப் பிளவுக்குக் காரணம் என்று அவரது பிறப்பை சுட்டிக் காட்டி வினவு தரப்பு, செங்கனல் தரப்பு, மே 17 இயக்கம், நாம் தமிழர், ஏஎம்கேவின் சில சீடர்கள் மற்றும்  ஊழல்-பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் அமைப்பு விரோத செயல்பாடுகளுக்காக ஏற்கனவே அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட சில உதிரிகள் உள்ளிட்ட சிலர் தோழர் மருதையன் மீது அவதூறு பிரச்சாரத்தைப் பரப்பி வருகின்றனர். 

பிஎஸ்என்எல் என்கிற பொதுத்துறை நிறுவன வேலையை விட்டுவிட்டு, நீண்ட நாள் திருமணம் செய்து கொள்ளாமல், குடும்பத்தை விட்டுப் பிரிந்து, 40 ஆண்டு காலம் முழு நேரமாக ஒரு பொதுவுடமை இயக்கத்தில் வேலை செய்த ஒருவரை, அந்த அமைப்பை உடைப்பதற்காகவே அமைப்பில் பதுங்கி இருந்து வேலை செய்தார் என்று மேற்கண்ட நபர்கள் பழி சுமத்துகின்றனர். ஒரு அரை கிறுக்கன் கூட இதை ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால் மேற்கண்ட கேனக் கிறுக்கர்கள் தொடர்ந்து மருதையன் மீதான அவதூறுப் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர்.

மக்கள் அதிகாரம் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்குக் காரணம் மருதையன் என்கிற பார்ப்பனர்தான் என்று அழிச்சாட்டியம் செய்யும் இந்தக் கேனக் கிறுக்கர்கள் கீழ்கண்ட அமைப்புகள் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர்கள் காரணம் என்பதை பட்டியலிடுவார்களா?

ஒன்றாக இருந்த வினவு தரப்பு  2022 ல் பிளவுபட்டு வினவு தரப்பு, செங்கனல் தரப்பு என பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

கடந்த காலங்களில் ஒன்றுபட்ட CPI, CPI  -CPI(M) என இரண்டாகப் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

அதன் பிறகு CPI(M) பிளவுபட்டு CPI(ML) உருவாவதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

அந்த CPI(ML) பிளவு பட்டு CPI(ML)-விடுதலை, CPI(ML)-மக்கள் யுத்தக் குழு, CPI(ML)-செங்கொடி, MCC, உள்ளிட்ட பல்வேறு குழுக்களாக அகில இந்திய அளவில் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

2004 ல் CPI(ML)-மக்கள் யுத்தக் குழு, MCC, கட்சி ஐக்கியம் (PU) ஆகிய மூன்று அமைப்புகளும் ஒன்றிணைந்து CPI (மாவோயிஸ்ட்) கட்சி உருவானது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, CPI(ML)- மக்கள் யுத்தக் குழு பிளவு பட்டு தமிழரசன் தலைமையிலான தமிழ்நாடு விடுதலை படையாகவும், ஏஎம்கே தலைமையிலான போல்ஷ்விக் அணியாகவும் பிளவுபட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்? 

சமீபத்திய சில ஆண்டுகளில் ஏ.எம்.கே தலைமையிலான போல்ஷ்விக் குழுவினர் மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம், மக்கள் ஜனநாயக இளைஞர் முன்னணி மற்றும் பாட்டாளி வர்க்க சமரன் அணி என மூன்றாகப் பிளவு பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு தமிழகத்தில் உருவான மேற்கு பிராந்தியக் குழு CPI(ML)-SOC, மற்றும் CPI(ML)-TNOC (தற்போதைய TNML), என 70களின் இறுதியில் இரண்டாகப் பிளவுப்பட்டதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்? மேற்கண்ட CPI(ML)-SOC தான் தற்போது மூன்றாகப் பிளவு பட்டிருக்கிறது‌. இந்த பிளவுக்குத்தான் தோழர் மருதையனை பார்ப்பனர் என்று வசைபாடி குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள்.

இவை தவிர RSP, SUCI போன்ற அமைப்புகளும் பொதுவுடமை அமைப்புகளிலிருந்து பிளவு பட்டு வந்தவர்கள்தான். தோழர்கள் தியாகு,  பாலன், மிதா.பாண்டியன், அரங்க குணசேகரன் உள்ளிட்ட எண்ணற்றோர் பல்வேறு பொது உடமை அமைப்புகளிலிருந்து பிளவுபட்டு வெளியேறி தங்களுக்கான அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகின்றனர்‌. இவர்கள் பிளவு பட்டு வெளியேறியதற்கு எந்தப் பார்ப்பனர் காரணம்?

பொதுவுடைமை இயக்கங்கள் மட்டுமல்ல திராவிட இயக்கங்கள் கூட திக, மாபெபொக, தபெதிக, திவிக, திமுக, அஇஅதிமுக, (இன்று இபிஎஸ்-ஓபிஎஸ்-டிடிவி) என பல பிரிவுகளாகப் பிளவுபட்டதற்கு யார் காரணம்? பார்ப்பனரா?

இந்திய அரசியல் வரலாற்றில், குறிப்பாக பொதுவுடமை இயக்க வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழ்ந்த சம்பவங்கள், அரசியல்-அமைப்பு சூழ்நிலைகளையொட்டி பிளவுகள் ஏற்பட்டுள்ளன. இதன் அடிப்படையில்தான் பிளவுகளுக்கான காரணங்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மக்கள் அதிகாரம் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கான காரணத்தையும் இந்தக் கண்ணோட்டத்தில்தான் பரிசீலிக்க வேண்டும். இந்தப் பிளவுக்கான காரணத்தை ஏற்கனவே மேலே குறிப்பிட்டுள்ளேன்.

இத்தகைய வரலாற்று உண்மைகளை எல்லாம் மூடி மறைத்துவிட்டு, தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பில் ஏற்பட்டுள்ள பிளவுக்கு மருதையன் பார்ப்பனராக இருப்பதுதான் காரணம் என்று பிதற்றுகின்றனர். 

தோழர் மருதையன்

அமைப்பிலிருந்து வெளியேறிய வினவு மற்றும் செங்கனல் ஆகிய இரண்டு தரப்பும் சிறுபான்மையினர். நியாயமாகப் பார்த்தால் வெளியேறிய சிறுபான்மையினர் புதிய பெயரில் செயல்படுவதுதான் ஜனநாயகம்.  ஆனால் இதை கிஞ்சித்தும் மதிக்காமல் ஒரே பெயரில் செயல்படுகின்றனர். காரணம் புதிய பெயரில் செயல்பட்டால் அவர்கள் போணியாக மாட்டார்கள். அதற்கான அரசியல் மற்றும் அமைப்பு பலமும் அவர்களிடம் கிடையாது. அதனால்தான் அழிச்சாட்டியமாக பிளவுக்குக் காரணம் மருதையன் என்கிற பார்ப்பனர்தான் என்று பிதற்றி வருகின்றனர். இதற்கு சில அனாமதேயங்களையும் உடன் அழைத்துக் கொள்கின்றனர்.

தமிழ்மணி


 

Saturday, 27 May 2023

கோவனின் கால் தூசுக்குப் பெறாதவர்கள் கோவனை விமர்சிப்பதா?

அரசியல் கட்சிகளுக்கிடையே, இயக்கங்களுக்கிடையே ஆயிரம் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பு. அத்தகையக் கருத்து வேறுபாடுகளை கடுமையான முறையில்கூட விமர்சனம் செய்யலாம். அதுதான் ஒரு சரியான அணுகுமுறையாக இருக்கக் கூடும்.

சமீபத்திய கள்ளச்சாராயச் சாவுகள் குறித்து, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் தோழர் கோவன் அவர்களை தனிப்பட்ட முறையில் ஒரு சிலர் இழிவு படுத்தி வருகின்றனர். குறிப்பாக வினவு தளத்தைச் சார்ந்த மருது (எ) ராமு என்கிற ஒரு நபர், தோழர் கோவன் அவர்களை "கோபாலபுரத்து நாய்!" என்று மிகவும் கீழ்த்தரமாகப் பேசியது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மருது என்கிற நபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் உரியதாகும். 

அதுமட்டுமன்றி கோவன் என்கிற பெயரை அமைப்பு வைத்ததாகவும் அந்தப் பெயரை அவர் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த நபர் கட்டளையிடுகிறார். தோழர் கோவனின் அனுபவம் அளவிற்கு கூட மருதின் வயது கிடையாது. தோழர்கள் அமைப்புக்குள் வரும்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய புனைப் பெயர்களை அவர்களேதான் தேர்வு செய்து கொண்டார்கள். உடன் இருந்த என்னைப் போன்றவர்களுக்குத்தான் அது தெரியும்.

தோழர் கோவன் அவர்களை மருது என்கிற நபர் இவ்வாறு இழிவாகப் பேசுவதற்கு அடிப்படையான காரணம் அரசியல் மட்டும் அல்ல, அதில் சாதிய வன்மமும் உள்ளடங்கி இருக்கிறது.

எனவே, தோழர் கோவன் அவர்களை இழிவுபடுத்திப் பேசிய வினவு கும்பலைச் சேர்ந்த மருது மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்களை நாம் அனுமதிப்போமேயானால் எதிர்காலத்தில் அரசியல் இயக்கங்களுக்கிடையே மிகவும் மோசமான ஒரு பண்பாட்டை இது உருவாக்கிவிடும்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் ஒடுக்கப்பட்ட மிகவும் ஏழ்மையான கூலி விவசாயக் குடும்பப் பின்னணியைக் கொண்டவராக இருந்தாலும், ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறக்கூடிய மத்திய அரசுக்குச் சொந்தமான புகழ் பெற்ற பெல் (BHEL) நிறுவன வேலையை உதறிவிட்டு புரட்சிப் பணிக்கு வந்தவரை இழிவு படுத்திப் பேசுவோர் ஈவிரக்கமற்ற ஈனர்கள். 

நல்ல ஊதியம் பெறக்கூடிய ஒரு வேலை பறிபோனால் அல்லது வேலையை விட்டு விட்டால் அந்தக் குடும்பம் பொருளாதாரத்திற்காக, எத்தகையத் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதை அனுபவித்தவன் என்கிற உரிமையில் சொல்கிறேன், இத்தகையப் போராளிகளை இழிவுபடுத்துவது மன்னிக்க முடியாத குற்றம்.

எனவே, மருது என்கிற நபருக்கு எதிரான கண்டனங்களை உரத்து எழுப்புவோம்! மருது மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் குரல் கொடுப்போம்!

தமிழ்மணி 

தொடர்புடைய பதிவுகள்

கோவன் திமுக-வுக்கு விலை போகிறாரா?



Monday, 15 May 2023

கோவன் திமுக-வுக்கு விலை போகிறாரா?

கார்ப்பரேட்-காவிப் பாசிச அபாயமே இன்றைய பிரதான, தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுமைக்குமான பிரச்சனையாக இருப்பதினால் பாஜகவுக்கு எதிரான சக்திகளை ஒருமுகப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் செயல்பட வேண்டி உள்ளது. 

பார்ப்பனிய மேலாதிக்கத்தை அதாவது சனாதன தர்மத்தை முழுமையாக நிலை நாட்டுவது மற்றும் தொழில் நடத்துவதிலிருந்து அரசு முற்றிலுமாக விலகிக் கொண்டு அவற்றையெல்லாம் தனியாருக்குத் தாரை வார்ப்பது என்கிற இரண்டு முக்கியமானத் திட்டங்களை முன்வைத்துதான் பாரதிய ஜனதாக் கட்சி செயல்படுகிறது. கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் அரசியல்-பொருளாதார-பண்பாட்டுத் துறையில் பாஜக மேற்கொண்டுள்ள திட்டங்களைப் பரிசீலனை செய்தால் இது மிகத் தெளிவாகப் புரியும். விரிவஞ்சி நான் இங்கே அதை விளக்கவில்லை. இது குறித்து ஊரான் வலைப்பூவில் ஏற்கனவே நிறையவே எழுதி இருக்கிறேன். மக்கள் அதிகாரம் இணையதளத்திலும் இது குறித்து விரிவான செய்திகளைக் காணமுடியும்.

இத்தகைய அரசியல் சூழ்நிலையில்தான், கோவனின் செயல்பாட்டையும் அவர் சார்ந்திருக்கிற மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் செயல்பாடுகளையும் பரிசீலிக்க வேண்டும். கோவன் தனிநபர் அல்ல. அவர் சார்ந்திருக்கிற இயக்கத்தின் மூலமாகத்தான் எதையும் மேற்கொள்ள முடியும். 

நிற்க, கடந்த தேர்தலில் திமுக-வா அதிமுக-வா என்று வரும் பொழுது, பாஜகவுக்கு முற்றிலுமாக விலை போன அதிமுக-வை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அதிமுக-வைத் தோற்கடிக்க வேண்டும் என்று பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

சனாதன எதிர்ப்பு, சமூக நீதி உள்ளிட்ட அம்சங்களை மையமாக வைத்துதான் திராவிடக் கருத்தியல் தமிழகத்தில் வலுவாக பேசப்படுகிறது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்த கட்சிகளாக இருந்தாலும், சனாதன எதிர்ப்பை முற்றிலுமாக என்றோ கைவிட்டு விட்டது அதிமுக. 

இன்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. அன்று மூடு டாஸ்மாக்கை என்று பாடிய கோவன் இன்று ஏன் பாடவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். சிலர். 

சனாதனமா, சாராயமா என்று வருகிறபோது சனாதனமே மிக முதன்மையான ஆபத்தாக உருவெடுத்துள்ளது. அதற்கு எதிரானப் பிரச்சாரத்தையே கோவனும் அவர் சார்ந்த இயக்கமும் முன்னெடுத்து வருகின்றனர். அதற்காக, திமுக அரசின் மக்களுக்கு எதிரானத் திட்டங்களை, செயல்பாடுகளை கண்டும் காணாமல் இருக்கவில்லை. மாறாக, அதற்கு எதிரானப் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர். குறிப்பாக, சமீபத்தில் பத்து மணி நேர வேலை சட்டத் திருத்தத்தை எதிர்த்துப் போராட்டங்களை முன்னெடுத்தனர். இது குறித்த செய்திகளை மக்கள் அதிகாரம் (https://makkalathikaram.com/) இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் காண முடியும்.

எனவே, கோவனும் அவர் சார்ந்த இயக்கமும் திமுக-வுக்குத் துணை போகிறது என்று பேசுவது, கோவனையும் அவர் சார்ந்த இயக்கத்தையும் இழிவு படுத்துவதற்கான அல்லது மட்டுப்படுத்துவதற்கான ஒரு யுக்தியாக, ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இத்தகைய பிரச்சாரங்கள் சனாதனத்திற்கே வலு சேர்க்கும் என்பதை பொதுச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் ஒன்றும் பாட்டாளிகளுக்கான கட்சி இல்லையே! இருந்த போதிலும் சமீபத்திய கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அதனுடைய வெற்றியை கம்யூனிஸ்டுகளே கொண்டாடுகிறார்களே! ஏன்? இதுதான் இன்றைய அரசியல் எதார்த்தம். தேவையும் அதுதான்.

தமிழ்மணி




Thursday, 30 March 2023

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை!

அதானியும் இந்தியப் பிரதமர் நரேந்திரனும் (மோடி) கூட்டு சேர்ந்து "மோதானி"யாக (MODHANI) அவதாரம் எடுத்து நாட்டு வளங்களைக் கபளீகரம் செய்ததை ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை அம்பலப்படுத்தியது. இதுகுறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து முறையான விசாரணையை மேற்கொண்டு உண்மை நிலையை நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

"பிரதமர் நரேந்திரன், அதானியுடன் ஒன்றாக விமானத்தில் பயணம் செய்தது ஏன்? மொரீசியஸ், கரீபியன் தீவுகள் உள்ளிட்ட நாடுகளில் அதானியின் பினாமி பெயரில் எந்தவித செயல்பாடும் இல்லாத ஷெல் கம்பெனிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ள ரூ.20000 கோடி பணம் யாருடையது?" என காங்கிரஸ் தலைவர் இராகுல் காந்தி எழுப்பும் எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்கத் திராணியற்ற பிரதமர் நரேந்திரன், பழைய அவதூறு வழக்கு ஒன்றை தூசு தட்டி, ஊராகும் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து, அவரது MP பதவியையும் பறித்துப் பழிவாங்கும் ஈனச் செயலில் ஈடுபட்டுள்ளார் நரேந்திரன்.

இது ஏதோ தனிப்பட்ட இராகுல் காந்தி மீதான தாக்குதல் மட்டுமல்ல; இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல். ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலைக் கண்டித்து நாடெங்கிலும் எதிர்க்கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 30.03.2023 அன்று நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரம் அமைப்பைச் சார்ந்தவர்கள் வழக்கறிஞர் ராஜு தலைமையில் சென்னையில உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்வர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது தமிழ்நாடு காவல்துறை. 

பாஜக கும்பலை ஆட்சிக் கட்டிலிலிருந்து தூக்கி எறியும் வரை "மோதானிக்கு" எதிரானப் போராட்டங்கள் மேலும் பரவட்டும். 

சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை போராட்டக் காட்சிகள்.












Sunday, 26 March 2023

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

தோழர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம், வெற்றிவேல் செழியன் தலைமையிலான 'மக்கள் அதிகாரம்', முத்துக்குமார் தலைமையிலான 'மக்கள் அதிகாரம்' என ஒரே பெயரில் மூன்று குழுக்கள் தமிழகத்தில் செயல்படுகின்றன. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சுமார் 20% பேரோடு வெற்றிவேல் செழியன் வெளியேறினார். உளவுத்துறை இதை 80:20 என்றுதான் குறிப்பிடுகிறது. மக்கள் அதிகாரம் கொடியில் இடது பக்கமாக கருப்பு வண்ணத்தில் இருந்த கையை வெள்ளையாக்கி வலது பக்கம் திருப்பிக் கொண்டனர். 

அதன் பிறகு சுமார் ஓர் ஆண்டுக்கு முன்பு வெற்றிவேல் செழியனுக்கு எதிராகக் கலகம் செய்து செழியனிடமிருந்த சுமார் 50% பேரோடு வெளியேறியவர்கள் முத்துக்குமார் தலைமையில் மக்கள் அதிகாரம் என்ற பெயரில் 'ரைட்ல திருப்ன' கொடியைப் பயன்படுத்திக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.

'ரைட்ல' திருப்பிட்டா மட்டும் வண்டி ஓடுமா என்பது அந்த இருவருக்கும் மட்டும்தான் வெளிச்சம்.

எந்த ஒரு இயக்கமாக இருந்தாலும், அரசியல் மற்றும் அமைப்பு காரணங்களுக்காக, அந்த இயக்கத்தில் கருத்து வேறுபாடுகள் எழுவது இயல்பான  ஒன்றுதான். அவ்வாறு கருத்து வேறுபாடுகள் எழும்போது பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு, மாற்றுக் கருத்து உள்ள சிறுபான்மையினர் செயல்படுவதுதான் ஜனநாயக நடைமுறை. ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டின் அடிப்படை விதிகளில் இதுவும் ஒன்று. கம்யூனிச இயக்கங்களில் செயல்படுவோர் இதை நன்கறிவர்.

பெரும்பான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு, அதே அமைப்பில் செயல்பட விரும்பாதோர், அந்த அமைப்பிலிருந்து வெளியேறி புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு, தனி ஒரு அமைப்பாக செயல்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை.

ஆனால், மேற்கண்ட ஜனநாயகக் கோட்பாடுகளை சிறிதும் மதிக்காமல், வெற்றிவேல் செழியனும், முத்துக்குமாரும், மக்கள் அதிகாரம் பெயரில் செயல்படுவது மிகவும் கேடான, மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் இழிவான சீர்குலைவு நடவடிக்கையாகும்.

அதே போல் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (மகஇக) பாடகர் தோழர் கோவன் தலைமையில் பெரும்பான்யினர் செயல்படும் அதே வேளையில், மதுரையைத் சேர்ந்த இராமலிங்கம் என்பவர் தலைமையில் ஒரு மகஇக செயல்படுவது போலவும், தோழர் லோகநாதன் தலைமையை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு புதிய ஜனநாயகக் தொழிலாளர் முன்னணி செயல்படும் போது, தோழர் அன்பு தலைமையை பெரும்பான்மையினர் ஏற்றுக் கொண்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி செயல்படும் போது, அதே பெயர்களில் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் தரப்பினர் செயல்பட்டுக் கொண்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். 

மேலும் 'வினவு' தளத்தையும், 'புதிய ஜனநாயகம்' அரசியல் ஏட்டையும் பெரும்பான்மையினரிடம், அதாவது தோழர் ராஜூ தரப்பிடம் ஒப்படைக்காமல் சிறுபான்மை கோஷ்டியான வெற்றிவேல் செழியன் தரப்பினர் பயன்படுத்துவதும் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு எதிரானதாகும்.

பல்வேறு ஜனநாயக சக்திகளும், மேற்கண்ட உண்மைகளைப் புரிந்து கொண்டு,  தோழர் காளியப்பன் குறிப்பிட்டதைப் போல வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் தரப்பினரிடம் கேள்விகள் எழுப்ப வேண்டும். 

பிரிந்து சென்றவர்கள் தனிப் பெயரில் செயல்படும்போது காலப்போக்கில் குறிப்பிட்ட பிரச்சனைகளில் அவர்களோடு    கூட்டு சேர்ந்து செயல்படுவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறும்.

சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொண்டால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். இல்லையேல் குழப்பமும், சீர்குலைவும் மட்டும்தான் எஞ்சி நிற்கும்.

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

இழி குணம்: 'பெல் சிட்டி’ ஊழல்! …..14, இறுதிப்பகுதி

தமிழகத்தில் இத்தனை இயக்கங்களா?

Saturday, 10 April 2021

ம.க.இ.க என்ற பெயரில் வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு - கண்டனம்!

ம.க.இ.க என்ற பெயரில் வெளியான பொய்ச் செய்திக்கு மறுப்பு - கண்டனம்!

அன்பார்ந்த தோழர்களே, நண்பர்களே, ஆதரவாளர்களே,

செவ்வணக்கம்! 

கடந்த ஏப்ரல் 02 அன்று வினவு தளத்திலும், சிலரது முகநூல் பக்கங்களிலும் “வெற்றிகரமாக நடைபெற்ற ம.க.இ.க. உறுப்பினர் கூட்டத்தின் தீர்மானங்கள்” என்ற தலைப்பிட்டு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பெயரை உபயோகித்து பொய்யான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் கலை இலக்கியக் கழகம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு பகுதிக்கிளைகள், மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழு என்ற அமைப்புக் கட்டமைப்புடன் இயங்குகிறது.  கொரோனா ஊரடங்கிலும் ம.க.இ.க. கொள்கைக்கும், அமைப்பு விதிகளுக்கும் உட்பட்டு மாநில செயற்குழு மற்றும் மாநில பொதுக்குழுக் கூட்டங்கள் கூட்டப்பட்டு முறையாக இயங்கி வருகிறது. இந்நிலையில் ம.க.இ.க. கொள்கை விதிகளுக்கு எதிராக, 03 பேர் கொண்ட சிறுபான்மையினர், முன்னணியாளர் கூட்டம் கூட்டி, சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக கூறி பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில், "அமைப்பு விதிகளின் படி மாநாடு நடத்தாதது, கிளைகளை இயக்காததால் அவைகள் கலைந்து போனது, சதி செயலில் ஈடுபட்டது, போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்ற கொள்கைக்கு எதிராக செயல்பட்டது, பிழைப்புவாத ஓட்டுப்பொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும் அவரவர் விருப்பம் போல் பிரச்சாரம் செய்வது" என தங்களது மனம் போன போக்கில் குற்றச்சாட்டுக்களையும், அவதூறுகளையும் அடுக்கியுள்ளனர்.

எமது அமைப்பில் செயல்பட்டு வந்த மருதையன், நாதன் அமைப்பின் அரசியல் தலைமை மீது அதிகாரத்துவம் உள்ளிட்ட சில விமர்சனங்களைக் கூறி தங்களது விலகலை பொது வெளியில் அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து அணிகளும் அரசியல் தலைமையின் அதிகாரத்துவத்திற்கு எதிராக கடுமையாகப் போராடினார்கள். இதனால், அரசியல் தலைமை மக்கள் திரள் அமைப்புக்களில் தங்களுக்கு சாதகமான சிறுபான்மையினரைக் கொண்டு பெரும்பான்மையாக உள்ள முன்னணியாளர்களை நீக்குவது, அமைப்புகளை பிளவுபடுத்துவது என தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அடிப்படையில் தான் தற்போது ம.க.இ.க. பெயரில் இராமலிங்கம் என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையைப் பார்க்க வேண்டும் எனக் கோருகிறோம். 24 பேர் கொண்ட பொதுக்குழுவில் தங்களுக்கு சாதகமான 3 பேரை மட்டும் வைத்து கூட்டம் நடத்தியதாகவும், அக்கூட்டத்தில் தோழர்கள் காளியப்பன், கோவன், சத்யா ஆகியோரை நீக்கியதாகவும் கூறுவது ஜனநாயக முறைக்கு எதிரான செயலாகும். எனவே, பிளவுபடுத்தும் நோக்கத்துடன் ம.க.இ.க. ஒருங்கிணைப்புக்குழு என்கிற பெயரில் இராமலிங்கம் உள்ளிட்ட சிறுபான்மையினரால் வெளியிடப்பட்ட பொய்யான, அவதூறு தகவல்களை கொண்ட அறிக்கையினை தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் யாரும் பொருட்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம்.

எனினும், அவதூறுகள், பொய்கள் பொதுவெளியில் வெளியிடப்பட்டதால் அவர்களது அறிக்கை எவ்விதத்தில் பொய்யானது என விளக்கி, அதற்கான எமது மறுப்பையும் கண்டனத்தையும் தெரிவிப்பது எமது கடமை என்ற வகையில் இச்செய்தியை வெளியிடுகிறோம்.

மாநில மாநாடு நடத்தப்படவில்லை என்கின்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி: 

 ம.க.இ.க.-வின் கொள்கை விதிப்படி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநாடு கூட்டப்பட வேண்டும் என்ற அடிப்படையில் 2014-க்குப் பிறகு 2016-ல் மாநாடு நடத்த திட்டமிட்ட போது, அப்போதிருந்த அரசியல் தலைமை பல்வேறு காரணங்கள் கூறி மாநாட்டை தள்ளி வைத்தது. இதனால், எமது மாநில செயற்குழு சார்பாக அரசியல் தலைமை மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்ட பிறகே, 2019 இறுதிக்குள் மாநாடு நடத்துவது என 2018-ல் கூட்டப்பட்ட பொதுக்குழுவில் முடிவாக்கப்பட்டது.

இம்முடிவின் படி மாநாட்டு தயாரிப்பு வேலைகள் மற்றும் மாநாட்டு அறிக்கைகளை கதிரவன், சத்யா, கோவன் ஆகிய தோழர்கள் பொறுப்பேற்று தயாரித்தனர். இந்நிலையில், 2019-ல் அமைப்பின் மீது சீர்குலைவுவாதிகள் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்த அவதூறு செய்திகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக மீண்டும் மாநாடு நடத்துவது தள்ளிப் போனது. இது தொடர்பாகவும் ம.க.இ.க.-வின் மாநில செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு வந்தது. ஆனால், அதன்பிறகு தான் 2020-ல் மருதையன் மற்றும் நாதன் விலகல், அதனையொட்டி அமைப்பின் அரசியல் தலைமையில் ஏற்பட்ட பிளவு மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகியவை காரணமாக மாநாடு நடத்துவது தள்ளிச் சென்றது. இவை அனைத்தும், கதிரவன் மற்றும் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்ட பொதுக்குழுவில் பேசி விவாதிக்கப்பட்டுத் தான் முடிவாக்கப்பட்டது. மாநாட்டுத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வந்த கதிரவன் மற்றும் இது தொடர்பாக கூட்டப்பட்ட பொதுக்குழுவில் கலந்து கொண்ட இராமலிங்கம் இருவரும் தற்போது மேற்கண்ட எல்லா உண்மைகளையும் மறைத்து மாநில செயற்குழு,  மாநாட்டை நடத்தவில்லை என்ற பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஒவ்வொரு முறையும் ஜனநாயக பூர்வமாக பொதுக்குழுவில் விவாதித்தே முடிவு செய்யப்பட்டது. எனவே, அணிகளின் ஜனநாயக உரிமை பறிப்பு என்பது பொய்யான குற்றச்சாட்டு ஆகும்.

மாநில செயற்குழு தோழர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனில், பொதுக்குழுவைக் கூட்டியே முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு பொதுக்குழு கூட்டப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் எவருக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. குறைந்தபட்சம், தோழர்கள் காளியப்பன், கோவன், சத்தியா ஆகியோர் மீது இவர்கள் வைக்கும் பொய்க் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு முடிவெடுக்க வேண்டும் என்ற அடிப்படை ஜனநாயகத்தைக் கூட கடைபிடிக்கவில்லை. இவர்கள் தான் அணிகளின் ஜனநாயகம் பறிக்கப்பட்டிருப்பதாகப் பேசுகிறார்கள். மேலும், பொதுக்குழு கூட்டாமல் 3 பேர் சேர்ந்து பேசி முடிவெடுத்து முன்னணியாளர்கள் கூட்டம் என அறிவித்துக் கொண்டனர். இது போன்ற. முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கைகளுக்கு முன்னணியாளர் கூட்டம் கூட்டி முடிவெடுப்பது ம.க.இ.க. அமைப்பு கொள்கை விதிகளுக்கு எதிரானதாகும். எனவே, தோழர்கள் மீதான குற்றச்சாட்டு அவதூறு என்பதாலும், அமைப்பு விதிகளுக்கு எதிராக 3 பேர் கொண்ட சிறுபான்மையினரால் கூட்டப்பட்ட கூட்டம் என்பதாலும், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளும், அக்கூட்டமும் செல்லாததாகும்.

மருதையன், நாதனுடன் இணைந்து கொண்டு சதி செயல்களில் ஈடுபட்டதாக கூறும் அவதூறு பற்றி:

தோழர்கள் காளியப்பன், கோவன், சத்யா உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ம.க.இ.க.-வில் எந்தவித சதி செயல்களிலும் ஈடுபடவில்லை. இவர்கள் கூறும் சதி என்னவென்பதும்  விளக்கப்படவில்லை. மேலும், சதி தொடர்பாக மக்கள் கலை இலக்கியக் கழகம் அமைப்பு சார்பாக எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளவில்லை.  இப்படி எந்தவிதத்திலும் சதி பற்றிய குற்றச்சாட்டை நிரூபிக்காமல், போகிற போக்கில் சதி செய்வதாக அவதூறு செய்வது கண்டனத்துக்குரியதாகும். மேலும், கதிரவன் மற்றும் இராமலிங்கம் உள்ளிட்ட சிறுபான்மையினர் தான் தற்போது, ம.க.இ.க. பற்றியும், அதன் செயற்குழு உறுப்பினர்களைப் பற்றியும் பொய்யான அவதூறு செய்திகளை வெளியிட்டு அமைப்புக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள் என்பது அவர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்தே தெரிகிறது.

போலி ஜனநாயகத் தேர்தலை புறக்கணிப்போம்! என்ற ம.க.இ.க.-வின் கொள்கைக்கு எதிராக செயல்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி:

40 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரசியல் – சமூக நிலைமை, அப்போது இருந்த அரசு வடிவம் – அதன் தன்மை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டே தேர்தல் புறக்கணிப்பு என்ற நிலைப்பாட்டை எடுத்தோம். அதனடிப்படையிலேயே கடந்த 40 ஆண்டுகளாக தேர்தல் புறக்கணிப்பு என்ற அரசியலை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் நாங்கள் இந்த தமிழக தேர்தல் பிரத்யேகமானது. குறிப்பாக பாசிசத்திற்கு  தேர்தல்வழியே சட்ட அங்கீகாரம் கோருவது என்பதால் "பாசிச பா.ஜ.கவையும் அதன் அடிமை அ.தி.முகவையும் தோற்கடிப்பீர்!" என்ற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். தேர்தல் பாதை மூலம் தான் பாசிசத்தை வீழ்த்த முடியும் என்று நாங்கள் எப்போதும், எங்கும் கூறவில்லை. மாறாக, பாசிசத்திற்கு எதிராக  தேர்தலையும் ஒரு  கருவியாக பயன்படுத்துகிறோம் என்பதே எமது நிலையாகும். அதேபோல தோழர்கள் மருதையனும், நாதனும் தி.மு.க.விற்கு வாக்களிக்கவேண்டும் என்று கூறுவதற்கும்  எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. பார்ப்பன பாசிசம் ஏறிதாக்கி வரும் சூழலில், பாராளுமன்ற - சட்டமன்ற வடிவங்களை தனது பாசிச சர்வாதிகாரத்திற்கு உகந்ததாகவும் மக்களின் நம்பிக்கையாக உள்ள தேர்தல் ஜனநாயகத்தை ஒரு வழிமுறையாகவும் பாசிஸ்டுகள் பயன்படுத்துகிறார்கள் என்பது இந்தியாவில் மட்டுமல்ல, உலகளவில் ஒரு புதிய நிகழ்ச்சிப் போக்காக மாறியுள்ளது. இவற்றை அவதானித்து குறிப்பான சூழலில் தேர்தலில் பிற கட்சிகளை போல அல்லாமல் பாசிசத்தை அடிப்படையாக கொண்டு செயல்படும் பாஜக மற்றும் அதன் அடிமை அதிமுக கூட்டணியை புறக்கணிப்பீர்! தோற்கடிப்பீர்! என்று சொல்வதைக் கூட இவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை.

குறிப்பிட்ட தருணத்தின் அரசியல் சூழலை கணக்கில் கொள்ளாத இவர்களின் அரசியல் தற்குறித்தனத்தையும், தேர்தல் என்பதுதான் ஜனநாயகம் என்று கருதும் பெரும்பான்மை மக்களின் உளவியல் பற்றி அறியாத ’அறைவாசிகள்’ என்பதும் மக்களுடன் கிஞ்சித்தும் தொடர்பற்ற கம்யூனிச மேட்டுக்குடிகள் என்பதும் இவர்களின் அறிக்கையில் இருந்து தெளிவாகிறது.

இவர்களின் அரசியல் அறியாமையை பாசிச எதிர்ப்பு போராளி தோழர், டிமிட்ரோவ் இவ்வாறு சுட்டிக் காட்டுகிறார்.

“ஆனால், பாசிஸ்டுகள் தலைதூக்கத் தொடங்கிய காலத்தில் கம்யூனிஸ்டுகள் அதே பழைய நிலையை நீடித்து அனுசரிக்க முடியுமா? உதாரணமாக 1932-ல் ஜெர்மனியில் பாசிஸ்டுகள் லட்சக்கணக்கான தங்கள் அதிர்ச்சிப் படைகளை தொழிலாளி வர்க்கத்திற்கெதிராக உருவாக்கி ஆயுதபாணிகளாக்கி கொண்டிருந்த காலத்தில் கம்யூனிஸ்டுகள் பழைய நிலையை கைக்கொள்ள முடியுமா? நிச்சயமாக முடியாது. பல நாடுகளிலும் கம்யூனிஸ்டுகளின் தவறு, குறிப்பாக, ஜெர்மனியின் நிலைமையில் ஏற்பட்ட மாற்றங்களை கவனிக்க அவர்கள் தவறிவிட்டார்கள். பழைய கோஷங்களையே தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சரியாக இருந்த அதே உபாயங்களையே கையாண்டார்கள். குறிப்பாக, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டம் உடனடி பிரச்சினையாக இருந்த போது 1918 – 20 ஆம் ஆண்டுகளில் போல ஜெர்மனியின் எதிர்ப்புரட்சி சக்திகள் அனைத்தும் வெய்மர் குடியரசின் பதாகையின் கீழ் திரண்டிருந்த காலத்தில் கையாண்ட அதே உபாயங்களையே இப்போதும் நீடித்துக் கையாண்டார்கள். (ஐக்கிய முன்னணி தந்திரம் – தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ்)

மேற்கண்ட மேற்கோள் இவர்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும்.

பிழைப்புவாத ஓட்டுபொறுக்கி அரசியலுக்காகவும், சுயநல சீரழிவு கலாச்சாரத்திற்கு ஏற்பவும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சாரம் செய்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பின் அரசியல் தலைமை குறிப்பிட்ட தருணத்தின் அரசியல் சூழலைக் கணித்து எடுத்த முடிவின் படியே பாசிச பாஜக-வையும், அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் தோற்கடிப்பீர்! என முழக்கம் வைத்து பிரச்சாரம் மேற்கொண்டோம். இம்முடிவு தொடர்பாக தோழமை அமைப்புக்கள் மற்றும் எமது அமைப்பு செயல்படும் பகுதிகளில் உள்ள முன்னணியாளர்கள் கொண்ட கூட்டம் கூட்டப்பட்டு அங்கு விளக்கி எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. எனவே, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப பிரச்சாரம் செய்கின்றனர் என்பது தவறாகும். மேற்கண்ட கூட்டத்திற்கு இராமலிங்கம் மற்றும் கதிரவன் செயல்படும் பகுதிகளுக்கும் தகவல் தரப்பட்டது. அவர்கள்  இருவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

மேலும், புரட்சிர பாடகர் கோவன் மீதும், தோழர் காளியப்பன் மீதும் தேசதுரோக வழக்கு போடப்பட்டவுடன் ‘பிழைப்புவாத’ ஓட்டுக்கட்சிகளைப் போய்ப்பார்த்ததும், ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அமைப்பிற்கு ஏற்பட்ட நெருக்கடியினை தீர்க்க ‘பிழைப்புவாத’ ஓட்டுக்கட்சிகளைப் பார்த்து ஆதரவு திரட்டுவது, அவர்களுடன் கூட்டு நடவடிக்கை குழு கட்டி இயங்குவது போன்ற வேலைகளைச் செய்யச் சொல்லி அப்போதைய அரசியல் தலைமை வழிகாட்டியது. தற்போது பிளவு ஏற்பட்ட பிறகு பிரிந்து சென்ற அதே அரசியல் தலைமை, மக்கள் மீதான பாசிச தாக்குதலை சட்டபூர்வமாக்க பாசிச பாஜக ஆட்சியதிகாரத்திற்கு வருவதை தடுக்க பாசிச பாஜகவையும் அதன் அடிமை அதிமுக கூட்டணியையும் தோற்கடிப்பீர்! என்று பிரச்சாரம் செய்தால் பிழைப்புவாத ஓட்டுப் பொறுக்கி அரசியல் என "இது வேற வாயி" என்பதுபோல அவதூறு செய்கின்றனர். இது தான் அவர்களின் அரசியல் நேர்மை.

கிளைகளை முறையாக கூட்டி இயக்காததால், கலைந்து போனது என்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பு செயல்படும் அனைத்து மாவட்டப் பகுதிகளிலும் கிளைகள் முறையாக கூட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. எந்த கிளைகளும் கலையவில்லை. குறிப்பாக, கொரோனா ஊரடங்கிலும் மாநில செயற்குழு, பொதுக்குழு மற்றும் கிளைகளின் கூட்டங்கள் கூட்டப்பட்டன. தோழர் கதிரவன் 15 நாட்கள் முன்பு வரை, எங்களோடு தொடர்பில் இருந்ததுடன் கடைசியாக நடைபெற்ற மாநில செயற்குழுவிலும் கலந்து கொண்டார். அக்கூட்டத்திலேயே தனக்கு அரசியல் ரீதியில் கருத்து வேறுபாடு இருந்தாலும், ம.க.இ.க.-வில் இருக்கவே விரும்புகிறேன் என செயற்குழுவில் தெரிவித்தார். உண்மை நிலை இவ்வாறு இருக்க, தங்களிடம் பெரும்பான்மை இல்லை என்பதால் கிளைகள் கலைந்து விட்டது என பொய்யான தகவல் கூறி தாங்கள் தான் ம.க.இ.க. என நிறுவ முயற்சித்துள்ளனர்  இந்த சிறுபான்மையினர்.

ஓட்டுச் சீட்டு அரசியல் நடவடிக்கையாலும் பிழைப்புவாத நடவடிக்கையாலும் அணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்ற பொய்யான குற்றச்சாட்டு பற்றி:

எமது அமைப்பு தோழர்களில் பெரும்பான்மையினர் இன்னும் அமைப்பில் தான் எங்களுடன் பயணிக்கின்றனர். எவரும் அதிருப்தியடையவில்லை. எனவே தான் 07.04.2021 அன்று நடைபெற்ற மாநிலப் பொதுக்குழுவில் பெரும்பான்மைத் தோழர்கள் கலந்து கொண்டதுடன் எமது அரசியல் நடவடிக்கை சரியே என ஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், அரசியல் தலைமையில் பிளவு ஏற்படுத்தி சென்றுவிட்ட சிறுபான்மைக் கும்பல், டிசம்பர் 2020-ல் தங்களது அணிகளுக்கு அனுப்பிய அறிக்கைகளின் 5-வது பகுதியில் 307-ஆம் பக்கத்தில் 32-வது வரியில் "ம.க.இ.க. அமைப்பை கலைப்பதாக" அறிவித்து விட்டனர். டிசம்பர் மாதம் கலைப்பதாக தங்களது அணிகளுக்கு அறிவித்து விட்டு, தற்போது இராமலிங்கம் மூலம் ம.க.இ.க.-வை முறைப்படுத்தி இயக்கப் போவதாக பொது வெளியில் அறிவிப்பதும், ஏற்கனவே அவர்கள் கலைத்ததாக அறிவித்த அமைப்பில் தற்போது சிலரை நீக்குவதாக அறிவிப்பதும் நகைப்புக்குரியதாகும். இவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் ‘புரட்டுவாதிகள்’ என்பதை நிரூபித்து விட்டனர்.

ம.க.இ.க. அமைப்பு கொள்கை விதிகளின் படி, அமைப்பை முறையாக பராமரித்து நடத்தி வருகிறோம். மேற்படி சிறுபான்மையினர் வெளியிட்ட பொய்யான மற்றும் அவதூறு செய்தி தொடர்பாக விவாதிப்பதற்கு, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ம.க.இ.க. உறுப்பினர்கள் கலந்து கொண்ட பொதுக்குழுக் கூட்டம் 07.04.2021 அன்று முறையாகக் கூட்டப்பட்டது. கூட்டத்தில், கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) 07.04.2021 அன்று நடைபெற்ற மாநில செயற்குழுவிற்கு தோழர் கதிரவனுக்கும், மாநில பொதுக்குழுவிற்கு தோழர் இராமலிங்கத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், அழைப்பை குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டது. ஆனால், அவர்கள் இருவரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. தோழர்கள் கதிரவன் மற்றும் இராமலிங்கம் ம.க.இ.க. பற்றியும், அதன் செயற்குழு தோழர்கள் பற்றியும் பொய்யான அவதூறு செய்திகளைப் பொதுவெளியில் வெளியிட்டு அமைப்பை பிளவுபடுத்தும் சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அமைப்பு சீர்குலைவு நடவடிக்கைகளில் ஈடுபட்ட இருவரும், ம.க.இ.க. அமைப்பிலிருந்து நீக்கப்படுகின்றனர் என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) மாநில செயற்குழுவில் புதிதாக வேலூர் கிளையில் செயல்பட்டு வரும் தோழர் வாணி அவர்களை இணைப்பது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3) அமைப்புக் கொள்கைக்கு உட்பட்டு வருகின்ற ஆகஸ்டு மாதத்தில் அமைப்பின் 9-வது மாநில மாநாடு மற்றும் பார்ப்பனிய இந்து மதவெறி பாசிச எதிர்ப்பு மாநாடு நடத்துவது என ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

4) கார்ப்பரேட் – காவி பாசிசம் அரசியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் ஏற்படுத்தி வரும் தாக்குதல்களை எதிர்த்து நின்று முறியடிக்கும் வகையில் நீண்ட நெடிய போராட்டத்திற்குத் தயாராகும் வகையில் அமைப்பின் செயல்பாடுகளைக் கட்டியமைப்போம்!

****

இன்று பாசிசம் ஏறித் தாக்கி வரும் சூழலில், அதை வீழ்த்துவதற்குப் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான திட்டங்களை செயல்படுத்தாமல் அமைப்பு ஜனநாயகத்தைக் கட்டிக் காப்பதற்காகப் புறப்பட்டு விட்ட, இராமலிங்கம் பெயரில் வெளியிடப்பட்டுள்ள சிறுபான்மையினரது அறிக்கை என்பது, மிகவும் கேடான வகையில் பொய்களாலும், அவதூறுகளாலும் நிரம்பி உள்ளது. எனவே, இந்தப் பொய்யான அறிக்கையை நிராகரிக்கிறோம். பெரும்பான்மைத் தோழர்களுடன் அமைப்பு செயல்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆகவே, தோழர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள் எமது அமைப்புக்கு இதுவரை அளித்துவந்த ஆதரவை தொடர்ந்து அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

தோழர். காளியப்பன்,
மாநில இணைச் செயலாளர்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
தமிழ்நாடு.

தொடர்புக்கு: 94431 88285