Friday 16 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்---4

அவாளெல்லாம் "சூத்திரவாள்!" என்று தொலைக்காட்சி ஊடகங்களில் சில பார்ப்பனப் பண்டிதர்கள் பேசுவதை நாம் பார்த்திருப்போம்! சுப்ரமணிசாமி கூட பல நேரங்களில் கலைஞர் உள்ளிட்ட மற்றவர்களைக் குறிப்பிடும் போது அவாளெல்லாம் சூத்திரவாள்  என்று பேசியதைக் கேட்டிருப்போம். பார்ப்பனர்கள் சொல்லுகிற சூத்திரவாள் பட்டியலில் யார் யாரெல்லாம் வருவார்கள்? பார்ப்பனர்களைத் தவிர பிள்ளைமார், முதலியார், ரெட்டியார் உள்ளிட்ட மற்ற அனைவருமே சூத்திரவாள்தான் என்பதில் பார்ப்பனர்கள் மிகத் தெளிவாகவே இருக்கின்றனர். ஆனால் தாங்கள்தான் சூத்திரர்கள் என்று எந்த ஒரு சாதியும் ஏற்றுக்கொள்ள முன் வருவதில்லை.

ஆனால் வன்னியர்களும், முத்தரையர்களும், தேவர்களும், மறவர்களும் தங்களை ஆண்ட பரம்பரை என்றும், தாங்கள் மட்டுமே சத்திரியர்கள் என்றும் பெருமை பேசிக் கொள்கின்றனர் இது உண்மையா? 

அதேபோல சில செட்டியார்கள் தங்களை வைசியர்கள் என்று கருதிக் கொள்கின்றனர்? இதுவும் உண்மையா?

வருணக் கோட்பாடும், சாதியக் கட்டமைப்பும் இரண்டாயிரம் ஆண்டு வரலாறு கொண்டது. அம்பேத்கரும் பெரியாரும் மட்டுமா சனாதனத்திற்கு எதிராகப் போராடினார்கள்? பார்ப்பனியம் தோன்றிய காலத்தில் இருந்தே அதற்கு எதிரானப் போராட்டத்தை மக்கள் மட்டுமல்ல மன்னர்களும்கூட முன்னெடுத்துள்ளனர்.

தென் இந்திய நிலப்பகுதியான திராவிட பூமியை ஆண்ட சத்ரிய மன்னர்கள் அனைவரும் பார்ப்பனிய எதிர்ப்பின் முன்னோடிகள். அந்தப் பாரம்பரியம்தான் இன்றும் தமிழகத்தில் தொடர்கிறது.

பார்ப்பனியத்துக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த மாவலி, இரணியன் உள்ளிட்ட ஏராளமான சத்ரிய மன்னர்களை நயவஞ்சகமாகக் பார்ப்பனர்கள் கொன்றொழித்தார்கள். பார்ப்பனியத்தை ஏற்க மறுத்த ஏனைய சத்ரிய மன்னர்களை சத்ரிய நிலையிலிருந்து தரவிறக்கம் செய்து சூத்திரர்கள் என அறிவித்தனர். (மனு  10-43, 44)

சதியால் கொல்லப்பட்ட மாவலி மன்னன்

பார்ப்பனியத்திற்கு எதிராக எப்பொழுது மன்னர்கள் போராடினார்களோ அப்பொழுதே பார்ப்பனனுக்குக் கெட்ட காலமும் தொடங்கிவிட்டது. அதனால்தான் "கலி முத்திடுச்சு" என்று சொல்லி காலத்தை நான்காக வகுத்து பார்ப்பன எதிர்ப்புக் காலத்தைக் கலிகாலம் என்றாக்கினர். 

தற்போதைய காலமும் கலிகாலம்தான். அதனால்தான் கலிகாலத்தில் பார்ப்பனன், சூத்திரன் ஆகிய இரு வர்ணங்களைத் தவிர வேறு  வர்ணங்கள் கிடையாது என்கின்றனர் பார்ப்பனர்கள்.

மனுதர்ம சாஸ்திரம் உருவாக்கிய கேடுகளிலேயே மிகக் கொடிய கேடு இந்தியாவின் ஊர்-சேரி அமைப்புதான். தீண்டாமை என்னும் அவலம் இந்த நூற்றாண்டிலும் தொடர்வதற்கு அடிப்படையே மனுதர்ம சாஸ்திரம்தான்.

பிறப்பின் அடிப்படையில் மக்களை நான்கு வருணங்களாகப் பிரித்து சூத்திரர்களை இழிமக்கள் என்றான். பார்ப்பனப் பெண்ணுக்கும் சூத்திர பையனுக்கும் பிறந்த வாரிசை சண்டாளன் (பறையர்) என்று சொல்லி ஊருக்கு வெளியே விரட்டி அடித்தான். அவையே இந்தியாவின் சேரிகளாக நிலை பெற்று இன்றளவும் தீண்டாமைக்கு நிலவுவதற்கு அடிப்படையாய் அமைந்தன. (மனு: 10-12).

பல்வேறு சாதிகளின் தோற்றம் மற்றும் அவர்கள் வாழ வேண்டிய இடம், செய்ய வேண்டிய தொழில் குறித்து அத்தியாயம் 10-ல் விரிவாக விளக்குகிறான் மனு‌.

மனுதர்ம சாஸ்திரத்தை எரிப்பதற்கு ஓராயிரம் காரணங்கள் உண்டு என்றாலும்,  தீண்டாமைக்கு வழி வகுத்த ஒரு காரணத்திற்காகவாவது அதை எரித்தே ஆக வேண்டும்.

மாதவிடாயைத் தீட்டு என்றான் மனு. அதனால் சபரிமலைக்குச் செல்ல பெண்களுக்குத் தகுதி இல்லை என்பது விதியாகிவிட்டது. மனு சொன்னதைத்தான் உச்ச நீதி மன்றமும் உறுதி செய்கிறது. (மனு: 3-46, 4-57)

வேளாண்மையை இழிதொழில் என்கிறான் மனு. மனு சொன்னதை சிரமேற்கொண்டு, சோத்துக்கே வழி இல்லை என்றாலும் வேளாண் தொழிலை தொட மறுக்கின்றனர் பார்ப்பனர்கள். (மனு: 10-83, 84)

புதிய இல்லம் கட்டும் பொழுது சண்டாளர் அதாவது பறையர் உள்ளிட்டோர் வந்து வேலை செய்திருக்கலாம் என்பதனால் அவ்விடம் தீட்டாகி இருக்கும்; எனவேதான் கிரகப்பிரவேசம் என்ற பெயரில் வீட்டுக்குள் பசு மாட்டை ஓட்டிக் கோமியம் தெளித்து தீட்டுக் கழித்து புனிதமாக்குகிறான். மனு வகுத்த இந்த விதியை எரிக்க வேண்டியவனே அய்யரை வைத்து பிரவேசம் செய்கிறான். (மனு: 5-124)

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும் என்பது குறித்து எழுத ஏராளம் இருக்கு. மக்கள் அதிகாரம் அமைப்பு நடத்தும் மனுதர்ம எரிப்புப் போராட்டம் நாளை நடப்பதால் இத்தோடு இந்தத் தொடரை முடித்துக் கொள்கிறேன். ஏற்கனவே நான் "ஊரான்" வலைப்பூவில் எழுதி வரும் "அம்பேத்கர் பார்வையில் இந்து மதம்!" என்ற தொடரில் சந்திக்கலாம். 

நன்றி! வணக்கம்!

தமிழ்மணி.

தொடர்புடைய பதிவுகள்





Thursday 15 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்---3

பிரம்மாவின் தலை, தோல், தொடை, கால்களில் இருந்து பார்ப்பன சத்ரிய, வைசிய, சூத்திர சாதியினர் பிறந்ததாக மனு கதையளந்தாலும், உண்மையில் மனிதர்கள் பிறப்பது என்னமோ தாயின் வயிற்றிலிருந்துதான். 

ஒரு புது மணப்பெண் மூன்று மாதத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் வருத்தப்படுவதையும், கர்ப்பம் தரித்து விட்டால் மகிழ்ச்சி அடைவதையும் நாம் பார்க்கிறோம். ஆனால் ஒரு பெண் கர்ப்பம் தரிப்பதையே தீட்டு என்கிறான் மனு. அதனால்தான் குழந்தை பிறப்பதற்கு முன்பே சீமந்தம் அல்லது வளைகாப்பு என்று சொல்லக்கூடிய தீட்டுக் கழிப்பு சடங்கைச் செய்யச் சொல்கிறான். தீட்டுக் கழிக்கப்பட்ட பிறகு பிறக்கும் குழந்தையைத்தான் நாம் சீமந்தப் புத்திரன் என்கிறோம்.

சீமந்த புத்திரனாய் இருந்தாலும் முதல் பிறப்பு, குறை பிறப்பே என்கிறான் மனு. பூணூல் அணியும் நிகழ்ச்சியான உபநயனம் செய்யும் பொழுது அவன் மீண்டும் ஒருமுறை பிறக்கிறானாம். இந்த இரண்டாவது பிறப்புக்குத் தகுதியானவர்கள் பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள். இவர்களைத்தான் துவிஜர்கள் அல்லது இரு பிறப்பாளர்கள் என்று அழைக்கிறான் மனு. சமூகத்தின் ஆகப்பெரும்பான்மையாக உள்ள சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் இந்த இரண்டாவது பிறப்பு எடுக்கும் உரிமையை மறுக்கிறான் மனு. 

அது மட்டுமல்ல, இந்த இரண்டாவது பிறப்பில் காயத்ரியை தாயாகவும், ஆச்சாரியானை அதாவது பார்ப்பனனை தகப்பனாகவும் கருத வேண்டும் என்கிறான். எளிமையாகச் சொன்னால் சத்திரியனும் வைசியனும் பார்ப்பானுக்குப் பிறந்தவர்கள் என்கிறான். (2-170). யாருக்கு யார் தகப்பன்? இது ஆகக் கொடுமையிலும் கொடுமை, அசிங்கத்திலும் அசிங்கமல்லவா? மனுதர்மம் இதைத்தான் சொல்லுகிறது. இதைக் கேள்வி கேட்டால் இந்து மதத் துரோகி என்கிறனர் சங்கிகள்.

பெண்களையும், சூத்திரர்களையும்தான் மிக அதிகமாக இழிவு படுத்துகிறான் மனு. பல இடங்களில் அவை சொல்லப்பட்டிருந்தாலும் நான் இந்தத் தொடரில் வரிசைக் கிரமமாக சில விசயங்களை எழுதி வருகிறேன்.

சிரிங்கார சேஷ்டைகளினால் மனிதர்களுக்குக் கெடுதலை உண்டு பண்ணுவது பெண்களின் சுபாவம்; அதனால் பெண்களிடம் மற்றவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்கிறான் மனு (2-213). 

தாய், தங்கைகளுடன் தனியாக ஒன்றாக உட்காரக் கூடாதாம். இந்திரியங்களின் கூட்டம் தெரிந்தவனையும் மயக்கிவிடுமாம். (2-215).

இப்படி எல்லாம் பெண்களை இழிவாகப் பேசுகின்ற மனுதர்மம் புனித நூலாம்; தங்களை ஆகக் கீழ்த்தரமாக சித்தரிக்கும் மனுதர்மத்தை எரிக்கின்ற போராட்டத்தில் பெண்கள் அல்லவா முன் வரிசையில் நிற்க வேண்டும்.

திருமணம் செய்யும் பொழுது இருபிறப்பாளர்களான பார்ப்பனர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அவரவர் சாதிக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சாதி மறுப்பு திருமணத்துக்குத் தடை போட்டவன் முதன் முதலில் மனுதான். (3-12).

இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் மட்டும்தான் சாதி கடந்து செய்து கொள்ளலாம் என்கிறான். பார்ப்பனன் தனக்குக் கீழே உள்ள சத்திரிய-வைத்திய-சூத்திரப் பெண்களையும், சத்ரியன் தனக்குக் கீழே உள்ள வைசிய-சூத்திரப் பெண்களையும், வைசியன் தனக்குக் கீழே உள்ள சூத்திரப் பெண்ணையும் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் சூத்திரன் தனது சாதிக்குள் மட்டும்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும். (3-13).

தன் சாதிக்குள் பெண்ணே கிடைக்கலைன்னா கூட, சூத்திர சாதிப் பெண்ணை திருமணம் செய்யக்கூடாது என்று பார்ப்பனனுக்கும் சத்திரியனுக்கும் அறிவுரை கூறுகிறான் மனு. (3-14).

பார்ப்பனனும், சத்திரியனும், வைசியனும் தனக்குக் கீழே உள்ள சாதிப் பெண்ணை திருமணம் செய்து கொண்டால் அவர்கள் சூத்திரத் தன்மையை அடைகிறார்கள். (3-15). சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்பவர்களை சாதியப்படி நிலையில் கீழே தள்ளிவிடுகிறான் மனு.

மேற்கண்ட விதிகளைத்தான் இன்றைக்கும் இந்துக்கள் கடைபிடிக்கின்றர். பார்ப்பனர்கள்-சத்திரியர்கள்-வைசியர்கள் இவர்களுக்குள், அதாவது உயர் சாதியினருக்கு இடையில் சாதி மறுப்புப் திருமணங்கள் என்றால் ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்கின்றனர. ஆனால் ஒரு சேரிப் பையன் பிற சாதிப் பெண்களை திருமணம் செய்து கொண்டால் ஒரே ரணகளம் ஆகிறது.

ரணகளத்திற்கு வித்திட்ட மனுவை கொளுத்தாமல் கொஞ்சவா முடியும்?

வருணங்களையே நான் இங்கே சாதியாகக் குறிப்பிடுகிறேன்‌. வருணங்கள்தான் சாதிகளாக பரிணமித்தன என்பதை மனுதர்மமே பறைசாற்றுகிறது. இன்றைக்குப் பார்ப்பன வருணம் இருப்பது அனைவரும் தெரிந்ததுதான். பார்ப்பானை நாம் ஒரு சாதியாகத்தான் பார்க்கிறோம். ஆனால் சத்திரிய, வைசிய சாதிகள் இன்று இருக்கின்றனவா? சூத்திர சாதி என்றால் யார் என்பது குறித்து நமக்கு குழப்பம் இருக்கிறது. இது குறித்து அடுத்து பார்ப்போம்.

தமிழ்மணி

---தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்-2



Wednesday 14 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்-2

சனாதன தர்மம், மனு என்பவனால் தொகுக்கப்பட்டதனால் அது மனுதர்ம சாஸ்திரம் என்று அழைக்கப்படுகிறது. உலகம் எப்படி உருவானது என்பதில் தொடங்கி, அதில் உயிரினங்கள்,  மரங்கள், செடிகள், பறவைகள், விலங்குகள், எப்படிப் தோன்றின, மனிதர்களின் தோற்றம்-வளர்ச்சி-தொழில்-திருமணம்-சமூக வாழ்க்கை-இறப்பு-கருமாதி உள்ளிட்ட சகலத்தையும் குறித்து ஏராளமான விதிகளை 12 அத்தியாயங்களாகத் தொகுத்துள்ளான் மனு. 

மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு வாக்கியமும் ஏட்டளவில் மட்டும் இருப்பதாக யாரும் கருதி விடாதீர்கள். அதில் சொல்லப்பட்டுள்ள விதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இந்துவின் அன்றாட வாழ்வில் நடைமுறையில் இரண்டறக் கலந்துள்ளன. இந்திய கிறிஸ்தவர்களைக் கூட மனு ஆட்கொண்டுள்ளான் என்றால் அது மிகையல்ல. மனுதர்மத்தில் சொல்லப்பட்டுள்ள ஒவ்வொரு சுலோகத்தையும் அன்றாட வாழ்வின் நடைமுறையோடு பொருத்திப் பார்க்கும் பொழுது அதை நம்மால் உணர முடியும்.

பிறப்பில் ஏற்றத் தாழ்வு!

பிரம்மாவின் முகத்திலிருந்து பார்ப்பனனும், தோளிலிருந்து சத்திரியனும், தொடையிலிருந்து வைசியனும், காலிலிருந்து சூத்திரனும் தோன்றியதாக மனு கூறுகிறான். (மனு: 1-31) பிரம்மாவின் முகத்திலிருந்து தாங்கள் தோன்றியதாகப் பார்ப்பனர்கள் தங்களைக் கருதிக் கொள்வதால்தான் மற்ற எல்லோரையும் விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கர்வம் அடைகின்றனர். பிறப்பின் அடிப்படையில் தன்னை ஒருவன் உயர்ந்தவனாகக் கருதிக் கொள்கிறான் என்றால் மற்றவர்கள் எல்லாம் அவனுக்குக் கீழே உள்ள தாழ்ந்தவர்கள் என்று பொருள் இயல்பாகவே வந்துவிடுகிறதுல்லவா?

பிரம்மனின் தேகம் பரிசுத்தமானதாம்; அதிலும் தொப்புளுக்கு மேலே அதிகம் பரிசுத்தமானதாம்; மேலும் பிரம்மாவின் முகம் மிகவும் பரிசுத்தமானதாம் (1-92). இந்த அதிகம் பரிசுத்தமான இடத்தில் பார்ப்பனன் பிறந்ததினால்தான் அவன் தன்னை உயர்த்தவனாகக் கருதிக் கொள்கிறான்.

இந்த ஒரு காரணத்திற்காகவே மனுதர்ம சாஸ்திரத்தை நாம் ஏன் எரிக்கக் கூடாது?

எந்தத் தொழிலை நீ செய்யலாம்?

ஒவ்வொரு மனிதனிடமும் எத்தகையத் திறமை இருக்கிறதோ, அதற்கு ஏற்ப அவன் தனது தொழிலைச் செய்வதற்கு மனு இடம் தரவில்லை. மாறாக பிறப்பின் அடிப்படையிலேயே மனிதர்களுக்கானத் தொழிலை தீர்மானிக்கிறான் மனு. பார்ப்பானுக்கு படிப்பையும், சத்ரியனுக்கு குடிகளைக் காக்கும் அரச பொறுப்பையும், வைசியனுக்கு வேளாண்மையையும் - வியாபாரத்தையும், மேற்கண்ட மூன்று பிரிவினருக்கும் அடிமைப் சேவகம் செய்வதை சூத்திரனுக்கும் தொழிலாக வகுக்கிறான் மனு. அதுவும் மற்ற மூன்று வருணத்தாருக்கும் பொறாமை இன்றி பணி செய்வதை சூத்திரனுக்கு முக்கியக் கடமையாக ஏற்படுத்தினானாம் பிரம்மன். (மனு: 1-88, 89, 90, 91). சூத்திரர்கள் எக்காரணத்தைக் கொண்டும் படித்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறான் மனு.  அதையேதான் 'நீட்' என்ற பெயரில் இன்றைய மனுவாதிகள் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த ஒரு காரணம் போதாதா மனுதர்ம சாஸ்திரத்தை ஏறிப்பதற்கு?

குருவுக்குத் தெரியாமல் எவன் ஒருவன் கல்வியை அல்லது வித்தையை கற்றுக் கொள்கிறானோ அவன் வேதத்தை திருடிய குற்றத்திற்கு ஆளாகிறான். (மனு: 2-116)  ஏகலைவனின் கட்டை விரல் அதற்காகத்தான் வெட்டப்பட்டது. இதை குரு பக்தி என கதையாக்கினார்கள் மகாபாரதத்தில். 


அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனை!

ஓதுவித்தல் தொழிலைப் பார்ப்பனர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று அன்றைக்கே முழு இட ஒதுக்கீடு செய்தவன் மனு. (1-88). அனைத்து சாதி அர்ச்சகர் பிரச்சனையில் தங்களுக்கு வருமானம் போகிறதே என்கிற கவலையைவிட, தங்களுடைய அந்தஸ்தும் அதிகாரமும் பறிபோகிறதே என்பதனால்தான் இதைப் பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.

பெயர் சூட்டுவதில் தீண்டாமை!

விரும்பியப் பெயரை வைப்பதற்குக்கூட மனு நமக்கு இடம் தரவில்லை. பார்ப்பானுக்கு மங்களத்தையும், சத்திரியனுக்கு பலத்தையும், வைசியனுக்கு பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் குறிக்கும்படி பெயர் சூட்ட வேண்டும் என்கிறான் மனு. (2-31). 

அவ்வாறு பெயர் சூட்டும் போது பார்ப்பானுக்கு சர்மா என்றும், சத்திரியனுக்கு வர்மா என்றும், வைசியனுக்கு பூதி என்றும், சூத்திரனுக்கு தாசன் என்றும் முடியும் வகையில் பெயர் சூட்ட வேண்டும் என்கிறான் மனு. (2-32). ஒருவனின் பெயரை வைத்தே அவன் உயர்ந்தவனா, தாழ்ந்தவனா என்பதை பறை சாற்றுகிறான் மனு. பெயர் வைப்பதில் கூட ஏற்றத் தாழ்வை புகுத்தி இருக்கும் மனுதர்ம சாஸ்திரத்தை எரிக்காமல் கொண்டாடவா முடியும்?

மன்னனுக்கே மரியாதை இல்லை! 

பத்து வயது பார்ப்பானை தந்தையாகவும், நூறு வயது சத்ரியனை மகனாகவும் கருத வேண்டுமாம். (மனு: 2-135). சத்ரியனுக்கே இந்தக் கதி என்றால் சூத்திர மண்ணாங்கட்டிகளின் நிலையை எண்ணி பாருங்கள்.  'டேய் முனியா' என்று ஒரு நூறு வயது முதியவரைப் பார்த்து, பூணூல் அணிந்த ஒரு பத்து வயது பார்ப்பனச் சிறுவன் அழைத்ததில்லையா? சாதியப் படிநிலையில் கீழே இருப்பவனுக்கு மேலே உள்ளவன் கொடுக்கும் மரியாதை இதுதான். இப்படி ஒரு கேடுகெட்ட விதியை வகுத்த மனுவை என்ன செய்யலாம்?

தமிழ்மணி

---தொடரும்

தொடர்புடைய பதிவுகள்





Tuesday 13 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்-1

செப்டம்பர் 17, 2022, பெரியார் பிறந்த நாளில், மனுதர்ம, வேத-ஆகம எரிப்புப் போராட்டத்தை திருச்சி திருவரங்கத்தில் நடத்தப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.

சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார். எப்பொழுதெல்லாம் சனாதன தர்மத்தை நிலை நாட்டுவதற்கு பார்ப்பனியம் மிகுந்த பிரயத்தனம் செய்கிறதோ, அப்பொழுதெல்லாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முதல் இன்று வரை மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம் என்பது நடத்தப்பட்டே வருகிறது.

சனாதன தர்மம் என்றால் என்ன?

இன்று, இந்து மதம் என்று அழைக்கப்படும் ஒன்றுதான் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சனாதன மதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. சனாதனம் என்றால் மாறாதது, நிலையானது என்று பொருள். தர்மம் என்றால் வாழ்வியல் முறை மற்றும் கடமைகளைக் குறிப்பதாகும். எளிமையாகச் சொன்னால் இந்து மதத்தில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் கடமைகளையும் குறிப்பதுதான் சனாதன தர்மம் ஆகும்.

இந்திய நாட்டில் வாழுகின்ற ஒரு இந்தியக் குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவனுடைய கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பது குறித்து எப்படி "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" வரையறுக்கிறதோ, அது போல ஒரு இந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவனது கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பது குறித்து இந்து மதச் சட்டம் வரையறுக்கிறது. மனுதர்ம சாஸ்திரம்தான் அந்த இந்து மதச் சட்டம். மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவின் "புதிய அரசியலமைப்புச் சட்டத்தை" நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் ஏற்கனவே தயாரித்து விட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு மக்கள் கூட்டம் சேர்ந்து ஒன்றாக வாழும் பொழுது, அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?, அவர்களுக்கான கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பதை அந்த மக்கள் கூட்டம் வரையறுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. உலகில் உள்ள எல்லா மதக் குழுக்களும், இனக் குழுக்களும் அத்தகைய நெறிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர். 

இரு வேறுபட்ட மதக் குழுக்கள் அல்லது இனக் குழுக்களுக்கு இடையே, தாங்கள் கடைபிடிக்கும் நெறி முறைகளில் கருத்து மாறுபாடுகள் ஏற்படும் போது, அவர்களுக்கிடையே பிணக்குகளும், மோதல்களும் நடந்து வருவதை நாம் அறிவோம். எந்த மதக் குழு வெற்றி பெறுகிறதோ அந்தக் குழுவின் பின்னால் மக்கள் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இப்படித்தான் மதங்கள் பரவுகின்றன, அல்லது விரிவடைகின்றன.

சனாதன தர்மத்தை அச்சாரமாகக் கொண்ட இந்து மதத்தில் மட்டும்தான் அவர்களுக்குள்ளேயே பிணக்குகளும் மோதல்களும் அன்றாடம் அரங்கேறுகின்றன. ஆகையினால்தான், பிற மத நம்பிக்கைகளை வீழ்த்தி விட்டு அதனால் தன்னை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

மனுதர்மம்தான் இந்துக்களின் சட்டம்!

இந்திய தண்டனைச் சட்டம் எப்படி 'இந்தியன் பீனல் கோடு' (IPC) என்று அழைக்கப்படுகிறதோ, அதுபோலத்தான் இந்து மதச் சட்டமான மனுதர்ம சாஸ்திரம், 'மனு கோடு' என்று அழைக்கப்படுகிறது. மனுதர்ம சாஸ்திரம்தான் இந்துக்களின் சட்டம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

பொதுவாகப் படிப்பதனால் மட்டும் சட்டங்கள் நமக்குப் புரிந்து விடுவதில்லை. ஒரு சட்டம் காட்சிப்படுத்தப்படும் பொழுது அல்லது கதையாகச் சொல்லப்படும் பொழுது அது எளிமையாகப் புரிவதோடு, ஆழமாக மனதில் வேரூன்றி விடுவதால் வாழ்க்கை நெடுக அதை நாம் கடை‌பிடிக்கிறோம். அப்படித்தான் மனுதர்ம சாஸ்திர சட்டம் என்பது பல்வேறு கதைகள் மூலம் காட்சிப் படுத்தப்பட்டு மக்களிடையே பதியப் பட்டிருக்கிறது‌. 

ஸ்ருதி என்கிற நான்கு வேதங்கள், மனு ஸ்மிருதி உள்ளிட்ட 18 ஸ்மிருதிகள், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் மற்றும் பகவத் கீதை இவையாவும் சனாதன தர்மத்தை மக்களிடைய புரிய வைத்து பதிய வைப்பதற்கானவைளாகும். இவை அனைத்தும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றைத்தான். அதுதான் சனாதன தர்மம்; அதாவது, இந்துக்களின் வாழ்வியல் முறை மற்றும் கடமைகள், உரிமைகள் பற்றியதாகும்.

மனுதர்ம சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால்தான், சனாதன தர்மம் அல்லது இந்து தர்மம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து முடியும். புரிந்தால்தான் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதா அல்லது சனாதன தர்மத்தை வலியுறுத்துகின்ற மனுதர்மம் உள்ளிட்ட இந்து மத நூல்களை எரித்துச் சாம்பலாக்குவதா என்பதை தீர்மானிக்க முடியும்.

எரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்றாலும் நேரம் கருதி அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் அடுத்து பார்ப்போம்‌.

தமிழ்மணி

-தொடரும்...



.




Tuesday 28 June 2022

ஓ! தோழனே! உனது மரணத்தை ஏற்க மனம் ஏனோ மறுக்கிறது!

1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் 20 ஆண்டு காலம் புரட்சிகர அரசியல் பயணத்தில் அவரோடு மிக நெருக்கமாக பயணித்திருக்கிறேன். நான் மிகத் தீவிரச் செயல்பாட்டாளராக வாழ்ந்த காலம் அது. அதன் பிறகு எனது உடல்நலம் வெகுவாக பாதிக்கப்பட்டு சில ஆண்டுகாலம் அவரோடு நெருங்கிப் பழக-பயணிக்க முடியவில்லை என்றாலும் இயக்க வேலைகளினூடே அவரை அவ்வப்பொழுது பார்க்கும் பொழுது ஒரு இனம் புரியாத உற்சாகம் பிறக்கும். பிரியமானவர்களின் ஸ்பரிசம் அது.

நகமும் சதையும் போல எனது குடும்பத்தோடு உறவாடியவர். எனது பிள்ளைகள் சிறுவர்களாக இருந்த போது, அவர்களுக்கு ஒரு மூத்த நண்பனாக விளங்கியவர். நானும் எனது துணைவியாரும் இல்லாத போது அவரே எனது பிள்ளைகளைப் பராமரிப்பார்.  அதனால்தானோ என்னவோ ஒரு இருபது ஆண்டு காலம் அவரை எனது பிள்ளைகள் பார்க்கவில்லை என்றாலும், பிள்ளைகளின் நினைவில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளார். ‘எயிலு’ என எனது இளைய மகனை அவர் வாஞ்சையோடு அழைக்கும் அந்தக் குரல் என் காதுகளில் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

அரசியல் மற்றும் களப்பணிகளின் போது ஏற்படும் தவறுகளை மிகக் கடுமையாக விமர்சிக்கும் அதே வேளையில் மேலும் என்னை வளர்த்துக் கொள்வதற்கு உற்சாகப் படுத்தியவர். சில ஆண்டுகளுக்கு முன்பு என்னைச் சந்திக்க எனது இல்லம் தேடி அவர் வந்த போது நான் “ஊரான்” வலைப்பூவில் எழுதுவது குறித்து அறிந்து கொண்டு, மேலும் மேலும் எழுதுமாறு உற்சாகப் படுத்தியவர். முன்னணியாளர்களின் அரசியல் பயிற்சிப் பட்டறையில் ”மனுதர்ம சாஸ்திரம்” குறித்து உரையாற்ற ஒரு கருத்தாளராக நான் செல்வதற்கு இந்தச் சந்திப்புதான் வழி வகுத்தது. 

மிகக் கடுமையான உணவு கட்டுப்பாடுகளுடன் அப்பொழுது அவர் இருந்ததை நான் பார்த்த போது என் நெஞ்சம் ஏனோ சஞ்சலப்பட்டது. நோய்வாய்ப்பட்டுள்ள காலத்திலும், வயது முதிர்ந்த காலத்திலும் ஒருவர் தன்னைத்தானே பராமரித்துக் கொள்வது எத்துணை கொடூரமானது என்பது அவரைப் போல அனுபவித்தவர்களுக்குதான் புரியும். 

நக்சல்பாரி பொதுவுடமைப் புரட்சி அரசியலை மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் பெயரில் தமிழகத்தில் பரப்புரை செய்ததில், அரசியல் தலைமைக் குழுவின் செயலாளராக இருந்து வழிகாட்டிய அவரது பங்களிப்பு அளப்பரியது. இவரைப்போன்ற முகம் தெரியாதவர்கள்தான் மார்க்சிய-லெனினிய நக்சல்பாரி அரசியலுக்கு முகவரி கொடுத்தவர்கள்.

புரட்சி என்ற நீண்ட நெடிய பயணத்தில், சகடுகள் நிறைந்த இச்சமூகத்தில் பயணிக்கும் போது, சில சறுக்குல்களும் பின்னடைவுகளும் தவிர்க்க முடியாதவை.  கடந்த சில ஆண்டுகளாக அவரது அரசியல் வாழ்க்கையில் சறுக்கல்களும் பின்னடைவுகளும் ஏற்பட்டதன் விளைவாக அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டிருக்கக்கூடும் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. முதுமை காலத்தில் முடிவுக்கு வராத மன உளைச்சல் உயிருக்கே உலை வைக்கும் என்பது எல்லோருக்கும் பொருந்தும்தானே? 

என் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் ‘இஎல்' எனும் என் இனிய தோழனே! சென்று வா! இறுதிக்காலம் மட்டுமே வரலாறு அல்ல. நீ கடந்து வந்த நீண்ட நெடிய பாதையின் சாதகங்கள்-சாதனைகள் நினைவு கூறப்படும் பொழுது சமூக மாற்றம் அடுத்த கட்டத்திற்கு தாவிச் செல்லும்! 

கண்ணீர்த் துளிகளுடன்,

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!

Thursday 27 January 2022

நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தோடு..,!

நெற்றிப் பொட்டு துடிக்கிறது, கண்கள் குளமாகி  விட்டன. நா வறண்டு விட்டது. இதயம் துடிக்கிறது. என்ன வென்று சொல்ல? எழுத வார்த்தைகள் கிடைக்க வில்லை.

சொந்த வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டு மூன்று மணி நேரம் கழித்து பிற்பகல் ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தேன். அகோரப் பசி. வலது கையோ சோற்றுப் பருக்கைகளை வாய்க்குள் திணித்துக் கொண்டிருந்தது. இடது கையோ கைபேசியில் முகநூல் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தது.

விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் அவர்களின் முகநூல் பதிவு ஒன்று என்னை நிலைகுலைய வைத்துவிட்டது. வலது கையில் சோற்றுப் பருக்கைகள் சிதறின. இடது கை விரல்களோ அடுத்தப் பக்கத்திற்குச் செல்ல நடுங்கின.

விவசாயிகள் விடுதலை முன்னணி, கடந்து வந்த கரடுமுரடான பாதையில், நெடியதொரு காலம் உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலைக்கு, தனது சுக போகங்களைத் துறந்து, குடும்பத்தை மறந்து இன்முகத்துடன் ஒப்படைத்த ஒப்பற்றத் தோழனே ஓய்வெடு!” இதுதான் அந்தப் பதிவு.

எனது நாற்பதாண்டு கால புரட்சிகர அரசியல் வாழ்க்கையில் எண்ணற்றோருடன் பயணித்திருக்கிறேன். எல்லோருமே மனதில் நீங்கா இடம் பெற்று விடுவதில்லை. ஒரு சிலரே இதயத்தில் சிம்மாசனமிட்டு அமர்ந்து கொள்கின்றனர்.

1980 களின் தொடக்க காலத்தில் புதியதொரு புரட்சிகர மாற்று அரசியலை என்னுள் ஆழமாக ஊன்றிய அரசியல் ஆசான் அவர். பிரியமான ரகுவாகத்தான் அவரை நான் அறிவேன். சுமார் பத்து ஆண்டுகாலம் அவருடன் நான் பயணித்திருப்பேன். அதன் பிறகு அரசியல் பணிக்காக அவர் வேறு பகுதிக்குச் சென்று விட்டாலும், அமைப்பின் மாநாடுகளில், பொது நிகழ்ச்சிகளில் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் அவரைக் காண எனது கண்கள் ஏங்கும்.கண்டேன் சீதையைஎன்பதைப் போல அவரைக் கண்டு விட்டால் எனது நெஞ்சம் பூரித்து போகும்.

யார் சொன்னது புரட்சியாளர்கள் கல் நெஞ்சக்காரர்கள் என்று? ரகுவோடு உறவாடியவர்களுக்குத்தான் தெரியும் அவர்கள் ரோசாவின் ராசாக்கள் என்பது.

மக்கள் கலை இலக்கியக் கழக முன்னாள் மாநிலப் பொருளாளர் தோழர் சீனிவாசன் மறைந்த போது அமுதேன்! அழுதேன்! கண்கள் கனலாய் ஆன போதும் அழுதேன்.

என் ஆசான் ஆருயிர்த் தோழன் ரகுவின் மறைவால் இன்று மீண்டும் அழுகிறேன், நேரில் வந்து அழ முடியாத ஆற்றாமையால் தொலைவிலிருந்து துயரத்தை மட்டுமே சுமந்து கொண்டு!




 துயரத்துடன்

தமிழ்மணி

 

 

 

Wednesday 26 January 2022

குடியரசு: கொண்டாட்ட நாளை போராட்ட நாளாக மாற்றிய மோடி!

மரபுவழி மன்னராட்சிப் பிடியிலிருந்தோ அல்லது அன்னிய நாட்டுக் காலனி ஆட்சிப் பிடியிலிருந்தோ ஒரு நாடு விடுதலை பெற்ற பிறகு, அது தனக்கான அரசியல் சட்டத்தை வகுத்துக்கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்டு மக்களுக்காக ஆளப்படும் ஆட்சியையே குடியாட்சி என்கிறோம்.

ஆனால் இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மோடி அரசு மக்களுக்கான அரசாகவாச் செயல்பட்டு வருகிறது? பெரும்பான்மை மக்களின் நலன்களைப் புறக்கணித்துவிட்டு, சிறுபான்மை பார்ப்பன -பனியாக் கும்பலின் நலனுக்கான ஒரு அரசாகத்தான் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அது குடியரசு நாள் கொண்டாட்டத்திலும் வெளிப்படுகிறது.

விடுதலைப் போரின் வீர மரபுகளை நினைவு கூறும் வகையில் மருது சகோதரர்கள், வேலு நாச்சியார், குயிலி உள்ளிட்ரோரைக் காட்சிப் படுத்திய தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளில் வேல் பாய்ச்சி இருக்கிறது மோடி அரசு.

நாராயணகுரு அவர்களை காட்சிப்படுத்திய கேரள அரசின் ஊர்தியையும், சுபாஷ் சந்திரபோஸ் அவர்களைக் காட்சிப்படுத்திய மேற்கு வங்க அரசின் ஊர்தியையும் மோடி அரசு தடை செய்து, அம்மாநில மக்களின் உணர்வுகளை இழிவு படுத்தியிருக்கிறது.

இவை, சனாதனக் கும்பல் மேற்கொள்ளும் பண்பாட்டு வடிவிலான  தேசிய இன ஒடுக்கு முறையின் ஓர் அங்கமாகும்.

பொதுவாகவே விடுதலை நாளும், குடியரசு நாளும் ஒரு சடங்காகவே இதுநாள்வரை கடைபிடிக்கப்பட்டு வந்தது. ஆனால் மோடியின் மேற்கண்ட நடவடிக்கையால், இந்த ஆண்டு குடியரசு நாள் தமிழகத்தைப் பொறுத்தவரை ஒரு போராட்ட நாளாகவே மாறியிருக்கிறது.

தமிழக மக்களின் உணர்வுகளை கொச்சைப் படுத்திய மோடிக்கு எதிராக, இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் கண்டனக் குரல்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வேலூரில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் பழைய பேருந்து நிலையத்தில் மோடி அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங்  அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர்  தோழர் சேட்டு, துணைத் தலைவர் பாபு, தலைவர் செல்வம், ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இறுதியாக சங்க செயற்குழு உறுப்பினர் தோழர் வேல் முருகன் நன்றி உரை கூறினார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.









தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்