Wednesday 21 October 2020

ஹத்ராஸ்: நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி! மக்கள் அதிகாரம் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம்!

உலகிலேயே பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் பாஜக ஆளும் யோகி ஆதித்யநாத் சாமியாரின் உத்தரப் பிரதேச மாநிலம் இதில் முதலிடம் வகிக்கிறது. வெட்கக்கேடு!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸைச் சேர்ந்த வால்மீகி பிரிவு 19 வயதான பட்டியல் இன பெண் மனீஷா நான்கு தாகூர் ஆதிக்கச் சாதி வெறியர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டு, முதுகுத்தண்டு உடைக்கப்பட்டு மிகக் கொடூரமாக தாக்கப்பட்டதால் முதலில் ஹத்ராஸ் மருத்துவமனையிலும், அதன் பிறகு அலிகர் மருத்துவமனையிலும் இறுதியாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி 2020, செப்டம்பர் 29 அன்று மரணமடைகிறார். இறந்த மனீஷாவின் உடலை பெற்றோரிடம் தராமல் இரவோடு இரவாக போலீசாரே வெட்ட வெளியிலே பெட்ரோல் ஊற்றி எரித்து விடுகிறார்கள். மனீஷாவின் முகத்தைக் கூட பெற்றோருக்குக் காட்டாமல் உத்தரபிரதேச யோகி போலீஸ் நடந்து கொண்டது காட்டுமிராண்டித் தனத்தின் உச்சகட்டம் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனீஷாவின் உடலில் விந்தணுக்களுக்கான தடயம் எதுவும் இல்லை என்று சொல்லி அவர் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படவில்லை என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல் துறைக் கண்காணிப்பாளரும் கூறி தங்களின் கயமைத்தனத்தை வெளிப்படுத்தினர். மனிஷாவின் குடும்பத்தினரே அவரைக் கொன்று விட்டதாக முதல் குற்றவாளியான சந்தீப் சிங் பேசுகிறான். குற்றம் சுமத்தப்பட்ட 4 பேரும் அப்பாவிகள் என்று பேட்டி அளிக்கிறான் 49 குற்ற வழக்குகளை சுமந்து நிற்கும் ரஞ்சித் பகதூர் ஸ்ரீவஸ்தவா என்கிற பிஜேபி தலைவன்.

மனீஷாவுக்கு நீதி கேட்டு நாடே கொந்தளித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மனீஷாவின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி ரவுடித்தனம் செய்தது உத்தரப் பிரதேச போலீஸ். எங்களுக்கு நிவாரணம் தேவையில்லை, நீதிதான் வேண்டும் என்று மனீஷாவின் பெற்றோர் போராடி வருகின்றனர். 

மனீஷாவின் உடலை பெற்றோருக்குத் தராமல் ஏன் இரவோடு இரவாக எறித்தீர்கள் என்று அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு நீதிபதி ராஜன்ராய் பங்கஜ் மிதல் கேள்வி எழுப்பினார். மறுநாள் காலை அயோத்தி தீர்ப்பு வரவிருப்பதால் சட்ட ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று மழுப்பியது காவல்துறை. இறந்த ஒரு உடலைக் கூட பாதுகாக்க முடியாத நீங்கள் நாட்டு மக்களை எப்படிக் காக்கப் போகிறீர்கள் என்று சரமாரியாக நீதிபதி கேள்வி எழுப்பினார். இறுதியாக இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டள்ளது. மனீஷாவைக் காக்கத் தவறியதோடு மட்டுமன்றி அதன் பிறகு யோகி சாமியார் நடந்து கொண்டது அவர் இனியும் ஆட்சியில் நீடிப்பதற்கு அருகதை அற்றவர் என்பதால் அவரது அரசு உடனடியாக கலைக்கப் பெற்றிருக்க வேண்டும்.

இதுபோன்ற கொடுமைகள் உத்தரப் பிரதேசத்துக்கு புதியதல்ல. 2017 ஆம் ஆண்டு பாரதிய ஜனதாக் கட்சி சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செங்கர் என்பவன்,  வேலை கேட்டுச் சந்திக்க வந்த 17 வயதுப் பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அதன் பிறகு அந்தப் பெண்ணின் தந்தையும் கொலை செய்யப்பட்டார். யோகி சாமியாரின் வீட்டிற்கு முன் அந்தப் பெண் தீக்குளிக்க முயன்ற போதுதான் இந்த சம்பவம் வெளியுலகத்திற்குத் தெரிய வந்தது.

அதே உத்தரப்பிரதேசத்தில் 2019ஆம் ஆண்டு 23 வயதான இளம்பெண் இரண்டு காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, அந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்தபோது, நான்கு பேர் கொண்ட கும்பலால்  அப்பெண் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டார்.

2018 ஆம் ஆண்டு காஷ்மீரின்  கத்துவாவில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கஞ்சிராம் கும்பலால் மயக்க மருந்து கொடுத்து கோவிலுக்குள் அடைக்கப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். ஒரு சிறுமிக்கு நேர்ந்த இந்த கொடூரம் அறிந்து நாடே தலை குனிந்தது.

2012 ஆம் ஆண்டு பிஸியோதெரபி மாணவி நிர்பயா ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமான முறையில் சிதைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளின் 4 பேர் 2020 ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்ட பிறகு "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பெண்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானது" என்று மோடி ட்வீட் செய்கிறார். அவர் ட்வீட் செய்த பக்கங்கள் மறைவதற்கு முன்பாகவே மனீஷா கோரமான முறையில் சிதைக்கப்பட்டுள்ளார். மக்களைக் காக்க வேண்டிய மோடி யாருக்கு உபதேசம் செய்கிறார் என்று தெரியவில்லை. 

ஆளுங்கட்சிப் பிரமுகர்களின் ஆசியோடு அபலைப் பெண்களைக் கொடூரமாகச் சிதைத்து வருகின்றனர் காமுகர்கள். "என்ன விட்டுடுங்க அண்ணா" என்று கெஞ்சிய பொள்ளாச்சி மாணவியின் கதறல் இன்றும் நம் கண்களைக் கசிய வைத்துக் கொண்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாஜகவின் சுவாமி சின்மயானந்தா, கைலாசாவின் நித்யானந்தா, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் என பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்களின் பட்டியல் நீள்கிறது. ‌

பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு மின்சாரம் பாய்ச்சிப் படுகொலை செய்யப்பட்ட திண்டுக்கல் கலைவாணியின் வழக்கில் போதிய சாட்சியங்கள் இல்லை என்று சொல்லி 2020, செப்டம்பரில் குற்றவாளிகளை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம். ‌

பெண்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தகுதியற்ற நாடு இந்தியா என்பதை மேற்கண்ட சம்பவங்கள் நிரூபிக்கின்றன. ஏராளமான சட்டங்கள் இருந்தும், அவற்றை அமுல் படுத்தும் அதிகாரிகள் இருந்தும், நீதி வழங்க நீதி மன்றங்கள் இருந்தும் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அதிகரிக்கின்றனவே! ஏன்?

கல்வி உரிமை, சொத்துரிமை என சொந்தக்காலில் நிற்பதற்கான அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டு பெண்ணானவள் ஆணைச் சார்ந்துதான் வாழவேண்டும்; பெண் என்பவள் படுக்கைக்காகவும், அலங்காரத்திற்காகவும், காமத்திற்கும் படைக்கப்பட்டவள்; வீட்டைக் கவனித்துக் கொள்வதும், விருந்தினர்களை  உபசரிப்பதும், கணவனுக்குப் பணிவிடை செய்வதுமே அவளது வேலை என மனுவால் வகுக்கப்பட்ட நீதி இன்றும் தொடர்கிறது. பெண்கள் மீதான ஆணாதிக்கத்திற்கு அடிப்படையாக இருப்பது இத்தகைய இந்து மத தர்மம்தான். 

பெண்களைப் போகப் பொருளாக சித்தரிக்கும் ஆபாசத் திரைப்படங்கள், வன்புணர்வுக்குத் தூபம் போடும் ஆபாச இணையதளங்கள்  மூலம் லாபம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் முதலாளிகளால் பாலுறவு வக்கிரங்கள் ஆண்களிடையே விதைக்கப்படுகின்றன. எனவே ஆணாதிக்கச் சிந்தனைக்கு அடித்தளமாக உள்ள மனு வாதத்தையும், ஆபாச திரைப்படங்களையும் மற்றும் இணையதளங்களையும் ஒழித்துக் கட்டினால் மட்டுமே பெண்களைப் பாதுகாக்க முடியும். அதற்கு மக்கள் அதிகாரமாய் நாம் அணியமாக வேண்டும்.

மேற்கண்ட விவரங்கள் 20.10.2020 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆம்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசுவதற்காகத் தயாரிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்ததோடு 10 நிமிடத்தில் ஆர்ப்பாட்டத்தை முடிக்கச் சொன்னதோடு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அனைவரையும் கைது செய்து  வழக்குப் புனைந்து மாலையில்தான் விடுவித்தது. அதனால் ஆர்ப்பாட்டத்தில் முழுமையாக மேற்கண்ட விவரங்களைப் பேச முடியவில்லை. 

பெண்களைப் பாதுகாக்கப் போராட்டம் நடத்தினால், சட்டவிரோதமாகக் கூடுதல் தொற்று நோய்களைப் பரப்புதல் (143, 188, 269 & 270 of IPC), பேரழிவு மேலாண்மை சட்டம் ( section 52(b) of disaster management act) மற்றும் தொற்று நோய்களின் சட்டப் பிரிவுகளின் (section 2&3 of epidemic diseases act) கீழ் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு (Crime No.1874/2020) செய்துள்ளது ஆம்பூர் காவல் துறை.

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி!

உ.பி யோகி சாமியாரின் குண்டாஸ் ஆட்சியை நீக்கு!

அதிகரிக்கும் தீண்டாமைக் கொடுமை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குக் களத்தில் இறங்கிப் போராடுவதே தீர்வு!

உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து,

உத்தரபிரதேச மாநிலம், ஹத்ராஸிலே தாகூர் ஆதிக்கச் சாதியைப் சேர்ந்த 4 காமுகர்களால் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பட்டியலினப் பெண் மனீஷாவுக்கு நீதி கோரி மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மண்டலம் சார்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர் பா.கார்த்திக் தலைமையில் ஆம்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்குரைஞர் பொன்.சேகர் ஆர்பாபாட்டத்தில் உரையாற்றினார்.

மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதே கோரிக்கையை முன்வைத்து மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு நகரங்களில் 20.10.2020 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.


ம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்

விழுப்புரம்

பத்திரிகை செய்தி....

20.10.2020

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி!

உ.பி யோகி குண்டாஸ் ஆட்சியை நீக்கு! 

என்ற முழக்கத்தின் அடிப்படையில்  மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்து இருந்தோம். அதன் ஒரு பகுதியாக விழுப்புரத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி இருந்தோம் அனுமதியை விழுப்புரம் மாவட்ட காவல்துறை மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவில் இன்று 20.10.20 காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 அதில் கீழ்க்கண்ட முழக்கங்களை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

உ.பி  - ஹத்ராஸ், மணிப்பூர் எனத் தொடரும் தலித் சிறுமிகள் ,பெண்கள் மீதான வன் கொலைகளைக் கண்டித்தும்! இந்து ராஷ்டிரத்திற்கு யோகி சாமியார் அரசே சாட்சி!

இந்த ஆர்ப்பாட்டத்தில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் ராஜ் தலைமை தாங்கினார். அதன்பிறகு கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

 புரட்சிகர மாணவர் இளைஞர் - முன்னணியின் விழுப்புரம்  அமைப்பாளர் தோழர் ஞானவேல் கண்டன உரை ஆற்றினார். இறுதியாக கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் முடிக்கப்பட்டது. 

தகவல்

மண்டல ஒருங்கிணைப்பாளர்

தோழர் மோகன்ராஜ்

மக்கள் அதிகாரம்

விழுப்புரம் மண்டலம்

தொடர்ப்புக்கு: 94865 97801

கடலூர்

உபி அதராஸ் பழங்குடிப் பெண். திண்டுக்கல் கலைவாணி பாலியல் படுகொலை! அதிகரிக்கும் தீண்டாமை கொடுமை மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்கு களத்தில் இறங்கிப் போராடுவதை தீர்வு! என தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரத்தின் சார்பில்  போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கடலூரில் 20 10 2020 அன்று காலை 11 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் வட்டார குழு உறுப்பினர்  நந்தா தலைமை தாங்கினார். தோழர்கள் ஆனந்தி. ரவி முன்னிலை வகித்தார்கள். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர் பூங்குழலி முழக்கமிட்டார். நிகழ்ச்சியின் துவக்கத்தில் பட்டயம் படித்துமுடித்து ஆட்டோ ஓட்டி தொழில் செய்துவரும் சார்லஸ் அவர்கள் பெண்கள் மீதான பாலியல் கொடுமை பற்றி சிறப்பான ஒரு பாடலைப் பாடினார். கடலூர் பாராளுமன்ற தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் கிஷோர் என்கிற தாமரைச்செல்வன் வழக்கறிஞர் துவக்க உரையாற்றினார். முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் .கு. பாலசுப்பிரமணியன் அவர்களும். கடலூர் அனைத்து பொது நல இயக்கத்தின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் வெண்புறா சி.குமார் . விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் திச திரு மார்பன். திராவிடர் கழகத்தின் மாவட்ட தலைவர் தென் சிவக்குமார். தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில செயலாளர் எஸ் கஜேந்திரன். செல்வம். மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் செந்தில்குமார். ம மீனவர் விடுதலை வேங்கைகள்  மாவட்ட பொருளாளர் தோழர் நா .உதயகுமார் திராவிடர் விடுதலை கழகத்தின் நகர செயலாளர் சிவக்குமார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி .  மாவட்ட குழு உறுப்பினர் தோழர் வெங்கடேசன் ஆகியோர் உரையாற்றினார்கள் இறுதியாக மக்கள் அதிகாரத்தின்  மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர். சி.ராஜு ‌. காவல்துறை நீதித்துறை மருத்துவத்துறை மின்சாரத் துறை. பொதுப்பணித் துறை சுகாதாரத்துறை உள்ளிட்ட அனைத்தும் தோற்றுப்போய் மக்களின் எதிரியாக மாறி விட்டதையும் .நீதித்துறை மூலமோ அதிகாரிகளிடம் மனு கொடுப்பதன் மூலமோ மாற்றி வாக்களிப்பதின் மூலமோ தீர்வு கிடையாது என்று உணர்த்தி பேசினார். மக்கள் அதிகாரமே தீர்வு என்பதையும் முன்வைத்துப் பேசினார் அனைத்து இந்த கட்டமைப்புக்குள் அனைத்தும் தோல்வி அடைந்து விட்டன எனவே புதியதொரு அதிகாரத்தை மக்கள் அதிகாரத்தை நிறுவ மக்கள் தங்கள் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள களத்திற்கு வந்து போராடி தன்னை அடக்குபவர்களுகெதிராக மக்கள் அதிகாரத்தை செலுத்துவதே மாற்றும் என்பதை முன்வைத்து விளக்க உரையாற்றினார். வட்டார குழு உறுப்பினர் தோழர் ரவி நன்றி கூறினார் மக்கள் அதிகாரம் மற்றும் பல்வேறு ஜனநாயக சக்திகள் பொதுநல இயக்கங்களைச் சேர்ந்த அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்ற அவர்கள் சுமார் 150க்கும் மேற்பட்ட கண்டுகொண்டார்கள் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக அமைந்தது . 

தகவல்:    

மக்கள் அதிகாரம் கடலூர் மண்டலம் .8110815963

திருச்சி

#நள்ளிரவில்_எரிக்கப்பட்ட_நீதி!  

உ.பி. யோகி சாமியாரின குண்டாஸ் ஆட்சியை நீக்கு

 என்ற  தலைப்பில்

இன்று 20.10.2020 மக்கள் அதிகாரம் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சார்பில் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகம் முன் முற்றுகை ஆர்ப்பாட்டம்  நடத்தினர்.  இதில் கலந்து கொண்ட தோழர்கள் :   

விடுதலைச் சிறுத்தைகள் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தோழர் தமிழாதன் , திராவிடர் கழகம், மாவட்ட தலைவர் ஆரோக்கியசாமி, ஜனநாயக சமூக நல கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன், மக்கள் உரிமை மீட்பு இயக்க நிறுவனர்  பஷீர், மக்கள் உரிமை கூட்டணி காசீம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலர் தோழர் ஜீவா, தமிழக விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் மா.ப. சின்னத்துரை  (கட்சி சார்பற்றது)கலந்து கொண்டனர், பாடகர்கோவன்,மற்றும் தோழர்.லதா கலைக்குழுவினர் உபி பாலியல் படுகொலைக்கெதிராக பாடல்களை பாடினார்கள். அதனை தொடர்ந்து  மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் அவர்கள் கண்டன உரையாற்றினார். இந்த முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் திரளான தோழர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

இறுதியாக. போராட்டத்தில் பங்கேற்ற தோழர்களுக்கு மக்கள் அதிகாரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தோழர். ஞா.ராஜா நன்றி கூறினார்.

செய்தி:மக்கள் அதிகாரம்,திருச்சி.

கரூர்

நள்ளிரவில் எரிக்கப்பட்ட நீதி !

உ. பி யில் நடந்த பாலியல் வன்கொடுமைக்கு எதிராக கரூரில் இன்று(20.10.20) மாலை 5 மணிக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மக்கள் அதிகாரத்தின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் சக்திவேல் தலைமை தாங்கினார். 

சாமானிய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் தோழர் குணசேகரன் உரையாற்றினார், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் தோழர் தனபால் அவர்களும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மா லெ  விடுதலை மாவட்ட செயலாளர் தோழர்  ராமச்சந்திரன், தமிழ் புலிகள் அமைப்பின் தோழர் ரமேஷ், வழக்கறிஞர் ஜெகதீசன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் தோழர் சிவா,  மக்கள் அதிகாரத்தின் தோழர் விக்னேஷ் ஆகியோர்  உரையாற்றினார்கள். 

ஆர்ப்பாட்டத்திற்கு போலீசு அனுமதி மறுத்த நிலையில் எஸ்பியிடம் போராடி கால்மணி நேரம் அனுமதி கொடுத்தார்கள் அதையும் எதிர்த்து போராடி ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்தில் இந்த அரசையும் சட்டத்தையும் நம்பி எந்த பயனும் இல்லை, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் அதை தீர்க்க கூடிய அதிகாரம் மக்கள் கைக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தினார்கள் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் குழந்தைகள் வழக்கறிஞர்கள் மாற்றுக் கட்சியின் நண்பர்கள் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

கோவை

மதுரை

தூக்கில்  போடு!  

தூக்கில் போடு! 

உபி  இளம்பெண்  மனிஷா-வை 

கூட்டு பாலியல்  வல்லுறவு செய்த 

தாகூர் சாதி பொறுக்கிகளை 

தூக்கில்  போடு ! தூக்கில் போடு !

தாகூர் சாதி ரத்தமெல்லாம் 

சூடாகத்தான் இருக்குமாம் -

என்று சொல்லும் யோகியை 

தாகூர் சாதி பொறுக்கிகளை 

பிரீசர் பாக்ஸில் வைத்திடுவோம் !

உயிரோடு அடக்கம்  செய்வோம் !

மதுரையில் நடைபெற்ற #மக்கள்அதிகாரம் ஆர்ப்பாட்டத்தில்  கண்டன முழக்கம்.

தேனி




தொகுப்பு: தமிழ் மணி

Thursday 15 October 2020

இழி குணம்: மட்டவெட்டும் மலைபடுகடாமும்!.....1

மலையடிவாரத்தில் புதையுண்டு கிடக்கும் நகரம் மலைபடுகடாம் கண்ட செங்கண் மாநகராக இருக்கக்கூடுமோ என்பது இங்குள்ள ஒரு சில முன்னோர்களின் நம்பிக்கை. இங்கேயும் ஒரு கீழடியோ என நம்பும் வகையில் மேலடியிலேயே சில ஆதாரங்கள் ஆங்காங்கே விரவிக் கிடக்கின்றன; கேட்பாரற்று!

பருவ மழை பொய்த்தாலன்றி நிலத்தடி நீருக்குப் பஞ்சமில்லை. நிரம்பி வழியும் ஏரி நீரும் சிற்றோடைகளின் ஊற்று நீரும் ஒருங்கே சேர்ந்தால் முப்போகத்திற்குப் பஞ்சமில்லை. ஆடை தவிர வேறெதற்கும் அயலாரை நாட வேண்டிய அவசியம் இன்றி சுயசார்பு வாழ்வு வாழும் உழவர் குடி பெருமக்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொஞ்சம் நிலம், கூட்டுழைப்பு,  ஒருவருக்கொருவர் உதவிக்கரம் என வாழ்ந்ததால் பொறாமைக்கு வழி இல்லை; நேர்மைக்குப் பஞ்சமில்லை. சில சமயம் வானம் பொய்த்துப் பஞ்சம் வந்தாலும் பட்டினியால் யாரும் மாண்டதில்லை. 

உலக அளவில் நச்சு ஆலைகளின் பெருக்கம், சுற்றுச்சூழல் கேடு, ஓசோன் சிதைவு, எல்நினோ லாநினோ விளைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றங்கள் மொத்த இயற்கையையும் சீர்குலைத்து விட்டதால் முன்பு போல மழைப்பொழிவு இல்லை, நீர் வளம் இல்லை, விளைச்சல் இல்லை, வருவாய் இல்லை.


அன்று எல்லாம் இருந்தும் கல்வி மட்டும் எட்டாக் கனி; ஒற்றையடிப் பாதையில் ஒரு கிலோ மீட்டர் நடந்தால்தான் அ-னா, ஆ-வன்னா. ஐந்தைத் தாண்டினால் மூன்று கிலோ மீட்டரும், எட்டைத் தாண்டில் ஏழு கிலோ மீட்டரும் பள்ளிக் கல்விக்கு ஓட வேண்டும். ஓடுவதற்கு உயரம் போதவில்லை என்றால் வளர்வதற்காகவே ஐந்திலே மேலும் ஓராண்டு உட்கார வைத்து விடுவார்கள் பாசக்கார ஆசிரியர்கள். 

கொட்டாவாசிகள் என எங்களை விளித்த ஊர்க்காரர்களின் ஏளனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து இத்தனையையும் தாண்டி மிட்டா மிராசுகள் கூட எட்ட முடியாத பட்டத்தை எழுபதுகளுக்கு முன்பாகவே தொட்டவர் எங்கள் அண்ணன் கண்ணன். அவரது பட்டமே நான் பட்டயம் பெற பட்டணத்திற்கு வழிகாட்டியது.

வாரிசுகள் பெருகின; உடைமைகள் சிதறின; போட்டியும் பொறாமையும் நேர்மையின்மையும் சொத்துடைமையின் தவிர்க்க முடியாத குணங்களாய் இன்று மாறிவிட்டன; இங்கு மட்டுமல்ல எங்கும்.

தொடரும்

தமிழ்மணி

Saturday 10 October 2020

நேர்மை!

அன்பிற்கினிய சமூக ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம்.

நேர்மையற்றவர்களை ஆதாரத்துடன் தோலுரிக்க வலைப்பூவும் தயாராகிவிட்டது. 



இது என்னுடைய சொந்த முயற்சி. குப்பை கூளங்களை அள்ளி வீச ஒரு சிலர் முயலக்கூடும். அது திருப்பி அவர்கள் முகத்திலேயே அப்பிக் கொள்ளும்.

தமிழ் மணி