Tuesday 19 September 2023

உங்களுக்குக் கோபம் வராதா?

மார்க்சிய கோட்பாடு பேசக்கூடியவர்கள், பெரியார்-அம்பேத்கர் இருவரின் சிந்தனைகளைப் பேசக் கூடியவர்கள், தமிழ்த் தேசியம் பேசக் கூடியவர்கள், அனைவருமே இன்று சனாதனத்தை எதிர்த்துப் பேசுகின்றனர், முடிந்த அளவு போராடவும் செய்கின்றனர். 


ஆனால், இவர்கள் குட்டி குட்டியாய் பல நூறு அமைப்புகளாய் சிதருண்டுக் கிடக்கின்றனர். அற்பக் காரணங்களுக்காக இவர்கள் பிளவுபடுவது அன்றாட வாடிக்கையாக  மாறிவிட்டது. இத்தகையப் பிளவுகளின் போது, குட்டி குட்டி அமைப்புகளில் உள்ள கீழ்மட்டத் தொண்டர்களின் அரசியல் புரிதலின்மை காரணமாகவும், பழக்க தோசத்தாலும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் சாதியப் பாசத்தாலும், தங்களுக்கு ஏற்ற ஒரு அணியில் இவர்கள் ஐக்கியமாகி விடுகின்றனர். 

தங்களுடைய கோட்பாடும் நடைமுறையும்தான் ஆகச்சிறந்தது என்று இவர்கள் ஒவ்வொருவரும் கருதிக் கொள்கின்றனர். நாலு பேரைக் திரட்டி, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டால், சமூக ஊடகங்களில் நாலு வரிக்கு ஒரு மீம்சை போட்டுவிட்டால், அதற்கு நாலு லைக்கும் வந்துவிட்டால், தமிழ்நாடே இவர்கள் பின்னால் இருப்பது போலக் கனவுலகில் மிதக்கின்றனர். 

ஆனால், பெரும்பாலான குட்டி குட்டி அமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் தமிழ்நாட்டுக் குடிகளில் சில நூறு பேருக்குக்கூட தெரியாது என்பதே எதார்த்தம். 

ஐம்பது அமைப்புகள் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் நூறுபேரைக்கூட திரட்ட முடியவில்லை. இன்றைய அரசியல் சூழலில் நாலு பேர்கூட இல்லாதவர்களுக்கெல்லாம் எதற்குத் தனி இயக்கம்? கட்சி? 

எனவே, ஏற்கனவே ஒன்றாய் இருந்து பிரிந்து போன குட்டி குட்டி இயக்கங்கள் தங்களை சுயபரிசீலனை செய்து, கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக முன்வைத்துப் பேசி, மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இத்தகைய அமைப்புகளில் உள்ள ஒரு சில பிழைப்புவாதிகள் இதற்கு முட்டுக் கட்டை போடக் கூடும். இவர்கள் இயக்கத் தலைமையாகக்கூட இருக்கலாம். அத்தகையோரை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றிணைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக,

மார்க்சியம் பேசக்கூடிய கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணையவும்,

அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளைப் பேசக் கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், 

தமிழ்த் தேசியம் பேசக்கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், வேண்டும். 

ஓராண்டு காலத்திற்குள் இது நடந்தால் நாட்டுக்கு நல்லது. அதற்கு அடுத்த கட்டமாக மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். 

இதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  இத்தகைய கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை ஒவ்வொரு மாவட்டத்திலும், உடனடியாக உருவாக்கி வெளிப்படையான திறந்த விவாதங்களை கீழிருந்து முன்னெடுக்க வேண்டும்.

இது இன்றைய காலத்தின் கட்டாயம். மார்க்சை, பெரியாரை, அம்பேத்கரை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

கோபம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. மாறாக உங்களுடைய கோபம் சனாதனத்திற்கு எதிரானதாக, சுரண்டல் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

இத்தகைய கோபக்காரர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது

தமிழ்மணி

Monday 18 September 2023

"வினைசெய் 2.0" வெனையாக மாறுகிறதோ?

வினைசெய் 2.0, Scientist, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல்,  என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,  

வினைசெய், Journalist, என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம், 

வினைசெய் 2.0, Friends, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல், என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,

என ஒரே பெயரில் மூன்று முகநூல் கணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக உள்ள வினை செய் ஊடகம் வலைப்பூவாகவும் பதிவாகி உள்ளது. 


*****
கார்ப்பரேட் காவிப்  பாசிசம் வீழ்த்துவது பற்றிய சரியான திசை வழி என்ன? என்ற‌ தலைப்பில் பல்லாவரம் முகவரியைக் கொண்ட வினைசெய் 2.0, Scientist, என்ற முகநூல் கணக்கில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

அது குறித்த ஒரு சுருக்கமான பார்வை.

*****
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை வழி எனவும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் வழி எனவும் தொடங்குகிறது இக்கட்டுரை.

கடந்த கால செயல்பாடு

1990 களில், "நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற சரியான செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, ஆயிரக்கணக்கான மக்களை அணி திரட்டியதாகவும், 2015 வாக்கில் "கட்டமைப்பு நெருக்கடி" என்கிற செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, அதை ஒரு சாகச நடவடிக்கையாக மாற்ற துணிந்ததாகவும், பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை உணராமல் செயல்பட்டதாகவும், அப்போது, பாசிச எதிர்ப்பு அரசியலை திணிப்பதாக அமைப்பில் இருந்த சில குட்டி முதலாளித்துவப் பிரிவினர் விமர்சனம் வைத்ததாகவும் கூறுகிறது இக்கட்டுரை.

எதிர்காலச் செயல்பாடு

2019 வாக்கில் "கார்ப்பரேட் காவிப் பாசம்" நாட்டின் பிரதான அபாயமாக மாறிவிட்டதால், பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியாக இருக்கும், 

ஆளு வர்க்கப் பிரிவினரின் ஒரு சாராரையும், இதர முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மேலிருந்து "பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளுக்கு எதிராகத் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்தியும், 

விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்கள் மற்றும்  அறிவுத் துறையினரை உள்ளடக்கிய, "பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வேண்டும் என்கிற இருவழிப் பாதைதான் சரியானது எனவும், 

இதன் மூலம் மட்டும்தான் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவி, அதைத் தொடர்ந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேற முடியும் என்கிறது கட்டுரை.

தோழர் பாலன் உள்ளிட்ட சிலர் பாசிசத்தை அதன் தொடக்கக் காலத்திலேயே வீழ்த்த வேண்டும் என்பதை மறுப்பதாகவும், தரவுகள் எதுவும் இன்றி குறை கூறுகிறது இக்கட்டுரை.

தோழர் மருதையன் மீதான விமர்சனம்

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஒரு முகாம், அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றொரு முகாம் என இரு முகாம்கள் மட்டுமே இருப்பதால், பாஜக முகாமை வீழ்த்த, திமுக முகாமை ஆதரிக்க வேண்டும் என அமைப்பிலிருந்து வெளியேறி திமுக-வை ஆதரிக்கும் மகஇக முன்னாள் பொதுச் செயலாளர் மருதையன் செயல்பட்டு வருவதாகவும், 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மருதையன் திட்டவட்டமாக முன்வைப்பதாகவும், இது பாசிசத்தை வீழ்த்தாது, மாறாக மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் வீழ்த்துகிற, தோற்றத்தில் முற்போக்கு தன்மை கொண்ட குட்டி முதலாளித்துவ தர்க்கம் இது; மேலும், இது போலி ஜனநாயக அமைப்பை நம்ப வைப்பதாகும் என்பதால் இதை நிராகரிக்க வேண்டும் என்கிறது இக்கட்டுரை.

சில தனி நபர்களும், சில சிறு குழுக்களும் பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும், இது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைக் குழப்பி, பாட்டாளி வர்க்கத்தைக் கையேறு நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறது இக்கட்டுரை.

யார் இந்த வினைசெய்?

ஒன்றுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக, அதே பெயரில் செயல்படும் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்யினரை இந்தக் கட்டுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதைப் பார்க்கும் போது,  வினைசெய் ஆசிரியர் குழு, தாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தாத போதும், இவர்கள் வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பை ஆதரிப்பவர்கள் என யூகிக்க முடிகிறது.

வினைசெய் ஆசிரியர் குழு முன்வைத்துள்ள பாசிச எதிர்ப்புத் திட்டம் சரியானதா தவறானதா என்கிற விவாதம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஜனநாயக சக்திகளையும், தனி நபர்களாக உள்ள அறிவுத் துறையினரையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்; கையாள வேண்டும் என்கிற போதாமை வினைசெய் ஆசிரியர் குழுவிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தோழர் மருதையன் என்ன செய்கிறார்?

சொந்தக் காரணங்களுக்காகவும், அரசியல் கருத்து வேறுபாடு காரணங்களுக்காகவும் ஒருவர் ஒரு அமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது அவரது ஜனநாயக உரிமையாகும். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகத் தோழர் மருதையன் மகஇக-விலிருந்து வெளியேறவில்லை; மாறாக அரசியல் தலைமைக் குழுவில் இருந்த ஒரு சிலர் அவரை பார்ப்பனர் என்று முத்திரை குத்தி, சாதி ரீதியாக தனிமைப்படுத்தியதனால் வெறுப்புற்று வெளியேறியவர். 

அமைப்பை விட்டு வெளியேறினாலும், அவர் நாட்டு நடப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல் சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை எதிர்த்துக் கருத்துத் தளத்தில் முன் எப்போதையும்விட மிகத் தீவிரமாக தனது ஆழமான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வருகிறார். களத்திலும் சில போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் ஒரு தனிநபராக இருந்தாலும், அவர் முன்வைக்கிற கருத்துகளை இலட்சக்கணக்கானோர் ஆதரிப்பதோடு, அரசியல் துறையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இன்று அவர் அறியப்படுகிறார். 

அறிவுத்துறையினரைக் கையாள்வது எப்படி?

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. என்பார் மாவோ.

ஆனால், இதற்கு மாறான பார்வையைக் கொண்டுள்ளது வினைசெய் கட்டுரை.  தோழர் மருதையன் குறித்தப் பார்வையில் அது வெளிப்படுகிறது. அவர் திமுக-வை ஆதரிப்பதாகக் குறை கூறும் வினைசெய், திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு சிலரை ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்கள் தங்கள் மேடைகளில் ஏற்றி உரையாற்ற வைக்கிறார்களே? ஏன் காங்கிரஸ்காரர்களைக்கூட மேடை ஏற்றுகிறார்களே? இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? 

"பொதுவுடைமை சார்ந்த இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப் படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்"

குட்டி முதலாளிகள், புரட்சியில் அவர்களின் பங்கு குறித்தும் வினைசெய் குழுவிற்கு போதியப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் தோழர் மருதையனை குட்டிமுதலாளி என முத்திரை குத்துகின்றனர். குட்டி முதலாளிகளின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை மாவோவைப் படித்தால்தானே புரிந்து கொள்ள முடியும். தோழர் மருதையனை விமர்சிப்பதில் வெற்றிவேல் செழியன் கோஷ்டியும், வினைசெய் ஆசிரியர் குழுவும் ஒரே அலைவரிசையில்தான் சிந்திக்கின்றனர்.

பிற கட்சிகள், சிறு குழுக்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் பொழுது, தரவுகளோடு முன்வைக்க வேண்டும். மேலும், எது சரியானது என்று முன்வைக்கும் பொழுது, அதற்கான ஆதாரங்களை, சான்றோர்களின் நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும்.

கட்டுரையின் எழுத்து நடையும், கருத்துக் கோர்வையும் செரிவானதாக இல்லாமல், அள்ளி இறைத்தாற்போலுள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக,

தொகுப்பாக, வினைசெய்யில் வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை என்பது தரவுகள் ஏதுமில்லாமல், யூகத்தின் அடிப்படையில், அகநிலைவாத கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றுதான் முடிவு செய்ய முடிகிறது .இது குறித்து வினைசெய் ஆசிரியர் குழு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அது ஒன்றுதான், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு பரந்து விரிந்த அணியைக் கட்டவும், மக்களை அணி திரட்டவும் உதவும். மாறாக, இதே பாணியில் எழுதிக் கொண்டிருந்தால் ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகளிடமிருந்தும், அறிவித்துறையினரிடமிருந்தும் தனிமைப்படுவதைத் தவிர வேறு எந்தப் பலனும் கிட்டாது.

நட்பு சக்திகளிடம் வினைசெய், வெனையாக மாறக்கூடாது என்பதே என் போன்ற வாசகர்களின் அவா.

தோழமையுடன்

தமிழ்மணி

*****

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

நீங்கள் குட்டி முதலாளியா?

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

*****
வினை செய் கட்டுரை
*****
கார்ப்பரேட் காவிப் பாசிசம் வீழ்த்துவதுப் பற்றிய சரியானத் திசை வழி என்ன?

புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளுக்கு அறை கூவல்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் அரசியல் நடத்தை வழி!

“குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும், மக்களையும், பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைச் சரியாக அவதானித்து, செயல்தந்திர அரசியல் வழியைத் தீர்மானிப்பது, அதற்கேற்பப் போராட்ட வடிவங்களையும், அமைப்பு வடிவங்களையும், முழக்கத்தையும் தீர்மானிப்பது” என்பதையே எமது செயல்தந்திர அரசியல் வழியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கங்கள் 90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியதைச் சரியாக அவதானித்து “நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தைச் செயல்தந்திர அரசியலாகக் கொண்டுச் சென்றோம்.

2015 ஆம் ஆண்டில் எமது தலைமைக் குழு அவதானித்தபடி நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு கட்டமைப்பு நெருக்கடி என முன்வைத்துச் செயல்பட துவங்கினோம். இந்த அவதானிப்பில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய அமைப்பு இல்லாதச் சூழலில், புரட்சிகர அமைப்பின் அகநிலைச் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், புறநிலை எதார்த்தத்தை மதிப்பீடு செய்வதிலும் மிகையான பார்வையில், அகநிலைவாதக் கண்ணோட்டத்தில், மக்கள்திரள் வழியிலான அரசியலை நிராகரித்து, புரட்சிகர அரசியலைச் சாகச நடவடிக்கையாக மாற்றத் துணிந்து செயல்பட்டோம். 

இவ்வாறு நாட்டின் மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கைத் தவறாக அவதானித்ததை நடைமுறை அனுபவத்தின் மூலமாக பாரிய அரசியல் தவறு என உணர்ந்து கொண்டோம். நாட்டை மறுகாலனியாக்குகின்ற சூழலில் அதற்குப் பொருத்தமாக பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசச் சக்திகளை ஏகாதிபத்தியங்களும் அவர்களின் தலைவனான அமெரிக்க மேல்நிலை வல்லரசும் ஆதரிக்கத் துவங்கியது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையிலானப் பார்ப்பனப் பாசிஸ்டுகள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அதாவது பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தவறு என உணர்ந்தோம். 

கட்டமைப்பு நெருக்கடி எனும் அரசியல் நிகழ்ச்சிப் போக்கின்போதே, கார்ப்பரேட் காவிப் பாசிசம் ஏறித்தாக்கி வருகிறது என வரையறுத்து முன் வைத்தபோது எமது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த ஒரு தோழரும், அமைப்பு முறையின்றி அவருக்கு விசுவாசமாக இருந்த கீழைக்காற்று பதிப்பகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்ட துரை. சண்முகம் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ பிரிவினர் சிலரும் கொல்லைப்புறமாகப் பாசிச எதிர்ப்பு அரசியலை திணிக்கின்றனர் என குதியாட்டம் போட்டனர்.

மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டும் செயல்தந்திர அரசியல் வழி!
90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்படத் துவங்கியபோது நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு என்பது மறுகாலனியாதிக்க அபாயமும், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசச் சக்திகள் தலைதூக்குவதும்தான் என்பதை அனுமானித்து அதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். செயல்தந்திர அரசியல் வழியில் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அரசியலைத் தயக்கமின்றி முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்களை புரட்சிகர அமைப்புகளின் கீழ் திரட்டி வந்தோம்.

2007 ஆம் ஆண்டு நடந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத நெருக்கடியானது உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு வடிவங்களைத் தூக்கி எறிந்து விட்டு பாசிச சர்வாதிகார ஆட்சி வடிவங்களையே முன்னிறுத்தியது.  உலகில் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், மறு பங்கீடு செய்து கொள்வதற்கும் உரிய வழிமுறையாக மறுகாலனிய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை காலனிய நாடுகளின் மீது திணித்தனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது நாட்டின் பிரதான அபாயமாக மாறியது. இந்த நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி 2019 முதல் தீவிரமாக விவாதித்தாலும், 2021 ஆம் ஆண்டுதான் உரிய தரவுகளுடன் கார்ப்பரேட் காவிப் பாசிசமே நாட்டின் பிரதான அபாயம் எனவும், அது இந்தியாவின் வரலாற்றுத் தன்மைகளுக்கு பொருத்தமாக, கார்ப்பரேட் -காவிப் பாசிசம் எனும் இந்தியப் பாசிசமாக வெளிப்படுகிறது எனவும் வரையறைச் செய்து முன்வைத்தோம். 

அதனை வீழ்த்துவதற்கு புரட்சிகர ஜனநாயகச் சக்திகள், பாசிசத்தை எதிர்க்கின்ற அரசியல் இயக்கங்கள், ஆளும்வர்க்கத்தின் பாசிச எதிர்ப்புப் பிரிவு, தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே அணியாகக் கொண்டு வந்து பரந்த அளவிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியமைப்பதும், அதற்கு இணையாகவே கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத் துறையினர் அனைவரையும் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதும், அந்த முன்னணிகளின் மூலமாக தேர்தல் அரசியல் மற்றும் தேர்தலுக்கு வெளியில் போராடி, தற்காலிக இடைக்கால அரசாங்கமாக, ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை நாங்கள் முன் வைக்கின்றோம்.  

சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற புதிய ஜனநாயகப் புரட்சிக்கு ஒரு இடைக்கட்டமாக தோன்றியுள்ள ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதன் விளைவாக அரசியல், அமைப்பு, பண்பாட்டுத் துறைகளில் அமுல்படுத்தப்படும் பாசிசமயம், அரசு, அரசாங்கம் இரண்டுமே பாசிசமயமாவது போன்றவற்றை அவதானித்து அதனை வீழ்த்துவதற்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உடனடிக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம். அப்படிப்பட்டக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறோம்.

குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை முறியடிக்கின்ற வகையில் செயல்தந்திரங்களை வகுத்து செயல்படும்போது, அவை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் போர்தந்திர அரசியலுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அணுகுமுறையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைக்கின்றோம். இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கியத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம். இவைதான் சர்வதேச ரீதியில் பாசிசத்தை எதிர்த்துப் போராடி முறியடித்தக் கம்யூனிச இயக்கங்களின் அனுபவம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து வெளியேறியத் தோழர் பாலன் போன்ற சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் என முன்வைத்துக் கொண்டு தேர்தல் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிநபர்கள், அமைப்பு பலம் இல்லாத வாய்ச்சவடால் பேர்வழிகள் போன்றவர்களை இணைத்துக் கொண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என ஒன்றை நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்தை வீழ்த்துவதற்கு திட்ட வகைப்பட்ட செயல்பாடு அல்லது மாற்றுத் திட்டம் இல்லாத மானசீகவாதம் என்பதுதான் இவர்களின் பாசிச எதிர்ப்பு கொள்கையாக இருப்பதால் இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அடுத்து வெற்றிவேல் செழியன் என்பவருடன் எமது அமைப்பை விட்டு வெளியேறியச் சிலர் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், இன்னமும் நாட்டில் பாசிச அபாயம் வரவில்லை, வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது ஐக்கிய முன்னணி கட்டுவோம். அதுவரை மக்கள் முன்னணியைக் கட்டி செயல்படுவோம் எனப் பாசிச எதிர்ப்பு பற்றி தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறிய வழிமுறையைத் திரித்துப் புரட்டி சந்தர்ப்பவாதமாகப் பேசி வருகின்றனர். பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை மறுக்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை எமது அமைப்பு 90களில் இருந்து கடைப்பிடித்து வரும் செயல்தந்திர அரசியல் வழிமுறையில் செயல்பட தேவையில்லை, “செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து அதன் கீழ் மக்களை திரட்டுவது என்பதே அல்லேலூயா பஜனைப் போல பேசுவதுதான்” எனத் தனது அணிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டே, பொது வெளியில் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனப் பேசுகின்றனர். தேர்தலை எந்தக் காலத்திலும் பயன்படுத்தவே முடியாது எனும் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளாக செயல்படுகின்றனர். தேர்தல் பற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தையோ அல்லது தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு போன்றவற்றைப் பற்றி தோழர் ஸ்டாலின், லெனின் போன்றவர்கள் முன்வைத்ததைப் பற்றியோ எதையும் ஆழமாகக் கிரகித்துக் கொள்ளத் திராணியின்றி உள்ளனர். எமது அமைப்பின் அரசியல் கோட்பாட்டு முடிவுகளைக் கூட இது நாள் வரை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு உள்ளனர் என்பதும் உறுதியாகிறது. 

திடீரென்று இப்போது, “வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என மொட்டையாக முழக்கத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் முன்வைக்கின்ற ஜனநாயகம் போலி ஜனநாயகமா அல்லது புதிய ஜனநாயகமா என்பதைக் கூட தெளிவாக முன் வவைக்கவில்லை. அவர்களின் மேடையில் பேசும் திருமுருகன் காந்தி, வேண்டாம் பிஜேபி என்றால் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்; அவர்கள் முட்டாள்கள் இல்லை என உளறிக் கொட்டினார். திருமுருகன் போன்றக் குட்டி முதலாளித்துவச் சக்திகளுடன் ஐக்கியத்தைப் பேணி, மார்க்சிய லெனினிய செயல்தந்திர அரசியல் வழியை நிராகரித்து செயல்படும் வெற்றித் தரப்பினர் முன்வைக்கின்ற இந்த வழிமுறையும், போகாத ஊருக்கு இல்லாத வழியை முன்வைக்கின்ற வழியாகும் என்பதால் அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

முத்துக்குமார் என்பவருடன் வெளியேறிச் சென்றுள்ள சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தலாம், ஆனால் முதலாளித்துவக் கட்சிகளான திமுக, காங்கிரஸ் பின்னால் நின்று கொண்டு அதனை எதிர்கொள்ளக் கூடாது என அகநிலைவாத அடிப்படையில் பேசித் திரிகின்றனர். இவர்களும் தேர்தல் புறக்கணிப்பு எனக் கூறிக் கொண்டாலும் திட்டவட்டமாகப் புதிய ஜனநாயகப் புரட்சி என முன் வைப்பதில்லை. மாறாக ஜனநாயக குடியரசு என ஏதோ ஒன்றை இவர்கள் அகநிலைக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர். இந்த வரையறை எதிரிகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும், உத்திரவாதமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகளான இவர்கள், தனக்கு நேரடியாகப் பாதிப்பு இல்லை எனும் கண்ணோட்டத்தில் இருந்து தான்தோன்றித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பதும் என இருப்பதால் இந்த வழிமுறையும் பாசிசத்தைத் துளி கூட அசைத்துப் பார்க்காது என்றே கருதுகிறோம்.
 
அதுமட்டுமின்றி பாசிசம் வரவில்லை, இந்தியா முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றெல்லாம் பருண்மையான ஆய்வு முடிவுகள் இன்றி வாய்வழி பிரச்சாரம் செய்வதன் மூலம், மார்க்சிய லெனினிய வழிமுறையைக் கைவிட்டு விலகி விட்டனர் என அவதானிக்கின்றோம்.

எமது அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அல்லது பிளவுபடுத்திக் கொண்டு வெளியேறிய வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு குழுக்களாக, தனிநபர்களாக இருந்துக் கொண்டு மேற்கண்டக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இதன் மூலம் புரட்சிகர அரசியல் முன்னேறுவதற்கு தற்காலிகமாக சில தடைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றுள்ள தோழர்களையும் குழப்பியடித்து, விரக்தியிலும், எதுவும் நடக்காது எனும் சூனியவாதத்திலும் மூழ்கடிக்க எத்தனிக்கின்றனர். இதனால்தான் வெற்றிவேல் தரப்பின் செய்தித் தொடர்பாளர் மருது என்பவர் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என உளறிக் கொண்டுள்ளார்.

பாசிசம், பாசிச எதிர்ப்பு என்பதில் இரண்டே முகாம்கள்தான் உள்ளது. ஒன்று கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டு வரும் ஆர் எஸ் எஸ் பாஜக முகாம்.. மற்றொன்று அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட முகாம். இந்த இரண்டு எதிரெதிர் முகாம்களில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ள தேர்தல் கட்சிகளில் ஒரு பிரிவைச் சார்ந்து, அதாவது திமுக, காங்கிரசைச் சார்ந்து நின்று ஆர் எஸ் எஸ் பாஜக பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என எமது அமைப்பிலிருந்து வெளியேறி, திமுகவை ஆதரித்து வரும் முன்னாள் மகஇக செயலர் மருதையன் செயல்பட்டு வருகிறார்.
 
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் எனத் திட்டவட்டமாக அவர் முன் வைக்கிறார். இது பாசிசத்தை வீழ்த்துவதற்கு முழுமையற்ற, மக்களை மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் ஆழ்த்துகின்ற எளிமையான, ஆனால் தோற்றத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட வழிமுறையாகும். இது பாசிச எதிர்ப்பு போர்வையில் உலவுகின்ற குட்டி முதலாளித்துவ தர்க்கம் ஆகும். 

அது மட்டுமல்ல, இது பாசிசத்தை வீழ்த்துவது எனும் முகாந்திரத்துடன் தற்போது இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயகத்தை நம்பி ஏமாறுவதாகும். பாசிசம் தோன்றுவதற்கு அடிப்படையான போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை நம்ப வைத்து மக்களை மீண்டும் பாசிச புதைகுழிக்குள் ஆழ்த்துவதற்கு செயல்படுகிறது என்பதால் இந்த வழிமுறையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கின்றோம்.

நாட்டை சூழ்ந்திருக்கும் மிக முக்கியமான கொடூரமான அபாயமான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாங்களும் செயல்படுகின்றோம் எனக் கூறிக்கொண்டு இத்தகையத் தவறானக் கண்ணோட்டத்தை, பாசிசத்தை சிறிதும் அசைத்துப் பார்க்காத வழிமுறைகளை முன் வைக்கின்ற தனி நபர்கள் மற்றும் சிறு சிறு குழுக்கள் போன்றவை பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்துத் தனக்குப் புரிந்த வகையில் எதிர்த்துப் போராடுவதற்கானத் தீர்வை முன்வைக்கின்றனர். இவை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் திசை வழியைக் குழப்புவதிலும், பாட்டாளி வர்க்கத்தை கையறு நிலைக்கு தள்ளுவதிலும் உரிய பங்களிக்கின்றது என்பதால் இவற்றை நிராகரிக்க வேண்டும் எனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்வைக்கின்றோம்.

நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவது எனும் வகையில் ஆர்எஸ்எஸ் செயல்படுவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மீது அன்றாடம் வன்முறைகளும், கொலை வெறியாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை பார்ப்பனக் கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்ற எத்தனிக்கும் சனாதனத் தர்மம் எனும் வர்ணாசிரமக் கொடுமை உயர்ந்தது எனத் துணிச்சலுடன் பேசப்படுகிறது. இன்று, நாட்டின் அரசியல், பொருளாதாரம் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் மறுகாலனியாகி வருகிறது. 

இத்தகையக் கொடூரமானச் சூழ்நிலையில் நாட்டை ஏறித்தாக்கி வரும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட்டுச் சேர்ந்து, தற்காலிகமான சில சமரசங்களுடன்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாகவே இருக்கின்றோம். இதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றோம். 

அதே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும் அவர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி மூலம் நேரடியாக கீழிருந்து ஆர்எஸ்எஸ் பாஜகவை நேருக்கு நேர் நின்று வீழ்த்துவதற்குத் தயார்படுத்துவதும், அதற்கு இணையாக நாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கீழிருந்து   அமல்படுத்துகின்ற வகையில் செயல்படுவதும் அவசியம் என்பதை முன் வைக்கின்றோம்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு இருவழிப் போராட்டங்களின் மூலமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என முன்வைப்பதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றான காங்கிரசுடன் எந்த காலத்திலும் உறவு கூடாது. கடந்த காலத்தில் அப்படித்தானே இருந்தோம் என அனுபவவாதம் பேசுவதுடன், தேர்தல் அரசியல் கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக் கூடாது எனப் பிதற்றுவதன் மூலம் சுயம்பிரகாசவாதிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அகநிலை சக்திகளின் பலம், பலவீனம் பற்றி புரிந்துக் கொள்ளாத அல்லது புரிந்துக்கொள்ள விரும்பாத இத்தகைய வறட்டுக் கோட்பாட்டுவாதமும், குறுங்குழுவாத கண்ணோட்டமும் பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்தாது என்பது மட்டுமல்ல. ஒரு துளி அளவிற்குக் கூடப்  பாசிஸ்டுகளை பின்வாங்கச் செய்யாது என்பது மட்டும் நிச்சயமாகும். 

இத்தகைய வறட்டு கோட்பாட்டுவாதிகளை பொறுத்தவரை அவர்களின் நோக்கம், கட்சியை நடத்திக் கொண்டிருப்பது அல்லது தன்னை முற்போக்கு சக்திகளாகக் காட்டிக் கொள்வது என்பதுதானே ஒழிய வேறில்லை. ஆனால் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் தற்காலிக இடைக்கால அரசாங்கத்தை, ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதும், புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து எமது செயல்பாடுகளில் தங்களின் துணையுடன் முன்னேறுகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
வினை செய்.
*****

Friday 1 September 2023

தோழர் தமிழரசன் நினைவு நாள்!

தோழர் தமிழரசனின் தனித் தமிழ்நாடு கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டுள்ள இன்றைய சில தமிழ்த் தேசியர்கள், தோழர் தமிழரசன் அவர்கள் மேற்கொண்ட பொன்பரப்பி வங்கிக் கொள்ளை, திருச்சி நேரு சிலை குண்டு வெடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஆதரிக்கிறார்களா? அத்தகைய நடவடிக்கைகள் இன்றைக்கும் பொருந்துமா? பொருந்தும் என்றால் அத்தகைய நடவடிக்கைகள் இனி இவர்கள் தொடருவார்களா? இல்லை தமிழரசனை துதிபாடிக் கொண்டே வெறும் வாய்ச் சவடாலோடு நிறுத்திக் கொள்வார்களா?

திருச்சி நேருசிலை குண்டு வெடிப்பில் எந்தவிதத் தொடர்பும் இல்லாத தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு, பல்வேறு மிரட்டல்கள், சித்திரவதைகளுக்கு உள்ளானது பற்றி இன்று தமிழரசனைப் போற்றி புகழுவோருக்கு ஏதேனும் தெரியுமா?
 
மக்கள் விடுதலைக்காகப் போராடித் தியாகிகளான தோழர்கள் குறித்த நேர்மறை அம்சங்களோடு அவர்களின் எதிர்மறை அம்சங்களையும் பரிசீலிப்பதன் மூலம் மட்டுமே மக்கள் விடுதலையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். 
இத்தகைய பரிசீலனைகளினூடேதான் தோழர் தமிழரசன் அவர்களை நினைவுகூற வேண்டும்.

தமிழ்மணி

Thursday 31 August 2023

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம், புரட்சி, அதற்கான கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகள், நிலவுகின்ற அரசியல் சூழலில் பாசி எதிர்ப்பு மற்றும் அதற்கான ஐக்கிய முன்னணி அல்லது மக்கள் முன்னணி பற்றி இன்று எண்ணற்ற அமைப்புகள் பேசி வருகின்றன.

தங்களுடைய அமைப்புகளின் கோட்பாடு மற்றும் நடைமுறை, உண்மையில் அறிவியல் பூர்வமானதா என்பதைப் புரிந்து கொள்கிற ஆற்றல் இந்த அமைப்புகளில் உள்ள அணிகளில் பலருக்கும் இல்லை என்றாலும், தங்களுடைய அமைப்பு மட்டும்தான் மிகவும் சரியானது என நம்பி இவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாகக் களமாடி வருகின்றனர். 

மேற்கண்ட இயக்கங்களின் நீண்ட காலத் திட்டம் மற்றும் உடனடித் திட்டம் குறித்த ஆவணங்களைப் பரிசீலித்தால் மட்டுமே அத்தகைய அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். ஒரு சில அமைப்புகளைக் தவிர, பெரும்பாலான அமைப்புகளுக்கு அத்தகைய ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நிற்க, இன்று வெளிப்படையாகச் செயல்படுகின்ற சில அமைப்புகளின் தலைவர்கள், திடீர் என்று வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல; மாறாக, ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து, சில கருத்து வேறுபாடுகளுக்காக வெளியே வந்து, தனி அமைப்பு கண்டவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அமைப்புகளைக் குறைகூறிவிட்டு இவர்கள் வெளியே வந்தார்களோ, அந்த அமைப்புகளோடு இன்று கூட்டு நடவடிக்கை வேறு! இது கேளிக்கூத்தாக இல்லையா என்பதை வெளியே வந்தவர்களும் பரிசீலிப்பதில்லை; தாய் அமைப்பினரும் பரிசீலிப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், இதை கலைப்பு வாதம் என்றுகூட இவர்கள் முத்திரை குத்தக்கூடும். 

கனவுலகில் தலைவர்கள்

இப்படி, தாய் அமைப்பை விட்டு வெளியே வந்த பிறகு,  புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மார்க்ஸ்-லெனின்-பெரியார்-அம்பேத்கர் ரேஞ்சுக்குத் தங்களை நினைத்துக் கொள்கின்றனர். நினைக்கட்டும், அது அவர்களது உரிமை. ஆனால், ஒரு பெயர்ப் பலகை அமைப்பை வைத்துக் கொண்டு, இவர்கள் ஆடுகின்ற ஆட்டம்தான் சகிக்க முடியவில்லை. 

தாய் அமைப்பின் கோட்பாடு-நடைமுறையை குறைகூறி விட்டு வெளியே வந்த இவர்களது புதிய கோட்பாடும், நடைமுறையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிற அளவுக்குப் போதியத் தரவுகளோடு இருப்பதில்லை. கோட்பாடே இல்லாமல் நடைமுறையில் இருப்பவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

தாய் அமைப்பை அவதூறு செய்துவிட்டு வெளியேறி, புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு ,கோட்பாட்டுத் தெளிவையும் பெறாமல், தாய் அமைப்பு என்ன செய்ததோ அதையே இவர்களும் தொடர்ந்து செய்வது என்பதுதான் நூற்றுக் கணக்கில் உள்ள உதிரி அமைப்புகளின் தற்போதைய நிலைமை. 

புகழ் நாட்டம்

நக்சல்பரி என்ற சொல்லை பல அமைப்புகள் கைவிட்ட நிலையில், இரகசிய கட்சி-ஆயுதப் புரட்சி என்ற சொல்லாடல்களை சில அமைப்புகள் கைவிட்டு தேர்தல் அரசியலில் நேரடியாக பங்கேற்கும் நிலையில்-இதை நான் குறையாக இங்கே குறிப்பிடவில்லை- முற்போக்கு இயக்கங்கள் மீதான அரசின் அடக்குமுறை முன்பு போல் இன்று இல்லை என்பதாலும், சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் தனிநபர் புகழ் நாட்டம் காரணமாகவும், இத்தகையோர் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாக அவதாரம் எடுத்துள்ளனர். இனியும் புதிய அவதாரங்கள் வரக்கூடும். மக்களின் பின்தங்கிய அரசியல் புரிதல் காரணமாகவும், தாங்கள் சார்ந்த சாதி-மத-இன-மொழி அடிப்படையிலான ஈர்ப்பு காரணமாகவும் இத்தகையோரை சிலர் ஆதரிப்பதுதான் இவர்களின் பலம்.

உண்மையிலேயே வாய்சவடால் அடிக்கும் பல பெயர்ப்பலகை  உதிரி அமைப்புகளை அம்பலப்படுத்தி, மக்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும். ஆனால், இன்றைய பாசிசச் சூழலில் அதைச் செய்வது, பாசிச சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது. இருந்தாலும், இந்த உதிரி அமைப்புகளின் நீண்ட கால-உடனடித் திட்டம் குறித்தவைகள் மீது அணிகளிடையே விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லையேல் மார்க்சியத்தின் பெயராலும், தமிழ் தேசியம் என்ற பெயராலும், அம்பேத்கர்-பெரியாரின் பெயராலும் இன்று நூற்றுக்கணக்கில் செயல்படும் உதிரி அமைப்புகள், நாளை மேலும் பெருகினால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிகள் பலம்பெறவே உதவும்.

தமிழ்மணி

Friday 25 August 2023

நாங்குநேரி பள்ளி மாணவன் மீதான தாக்குதலைக் கண்டித்து வேலூரில் மகஇக ஆர்ப்பாட்டம்!

இந்து மதமும் சாதிய வன்மமும்

இந்து மதம் இருக்கும் வரை சாதியும் இருக்கும். சாதி இருக்கும் வரை தீண்டாமையும் இருக்கும். தீண்டாமை என்பது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு சாதியப் படிநிலையிலும் கடைபிடிக்கப்படுகிறது. அது கீழே செல்லச் செல்ல மிகவும் கொடூரமாக வெளிப்படுகிறது. 

அதுதான் நாங்குநேரியில் பட்டியல் சாதியைச் சேர்ந்த சக மாணவனையே, இடைநிலைச் சாதியினரான மறவர் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் கொடும் ஆயதங்களைக் கொண்டு வீடு புகுந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தக் காரணமாய் அமைந்துள்ளது. தமிழ்நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் இந்து மதத்தின் சாதிய வன்மத்தின் உச்சபட்ச வெளிப்பாடு. இக்கொடியத் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கினால்தான் எதிர்காலத்தில் இத்தகையத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியும். 

கிராமமோ நகரமோ, ஒருவன் இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்து, ஒரு இந்துவாக வாழ்கின்ற போது அவன் உள்ளத்தில் தீண்டாமை தவிர்க்க முடியாமல் குடி கொண்டிருக்கும். சாதி மதச் சடங்கு சம்பிரதாயங்களை ஒரு இந்து தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்கும் வரை,  இந்து மத உணர்வும், சாதி-தீண்டாமை உணர்வும் ஒருக்காலும் மறையாது. மாறாக மேற்கண்ட சடங்கு சம்பிரதாயங்களைத் தனது அன்றாட வாழ்வில் கடைபிடிக்காமல், அதிலிருந்து மாறுபட்டு வேறொரு பண்பாட்டு வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் போது சாதி, மத உணர்வும், தீண்டாமை உணர்வும் மெல்ல மெல்ல மறையத் தொடங்கும்.

இந்து மத-சாதி-தீண்டாமை ஒழிப்பு என்பது  அவ்வளவு எளிதானதல்ல; அது ஒரு நீண்ட நெடியப் போராட்டத்தையும் சமூக மாற்றத்தையும் உள்ளடக்கியதாகும்.

நாங்குநேரி தாக்குதலைக் கண்டித்து வேலூரில் மகஇக ஆர்ப்பாட்டம்!

திருநெல்வேலி மாவட்டம்,  நாங்குநேரியில் பள்ளி மாணவன் மற்றும் அவரது தங்கை மீதான சாதிவெறித் தாக்குதல், சக மாணவர்களே வீடு புகுந்து தலை முதல் கால் வரை செதில் செதிலாக வெட்டிய கொடூரத்தைக் கண்டித்து மக்கள் கலை இலக்கியக் கழகம், வேலூர்  ஒருங்கிணைப்பில்  25.08.2023, வெள்ளி மாலை 5.30 மணிக்கு வேலூர், அண்ணா கலையரங்கம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம், தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்கம் (இணைப்பு/பு.ஜ.தொ.மு), தமிழ்நாடு இளைஞர் கட்சி உள்ளிட்ட ஜனநாயக முற்போக்கு அமைப்புகள், கட்சிகளைச் சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பெருந்திரளாக இந்த ஆர்ப்பாட்டத்தில் உணர்வு பூராவமாகப் பங்கேற்றனர்.


மகஇக, வேலூர் மாவட்டத் தலைவர் தோழர் அகிலன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மகஇக மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன்விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேலூர் மாநகர-மாவட்டச் செயலாளர் தோழர் பிலிப், விசிக திருப்பத்தூர்-வேலூர் மண்டல ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சஜன் குமார், கிருத்துவ சமூக நீதிப்ண பேரவை மாநில துணைச் செயலாளர் தோழர் ஆல்பர்ட் ஜெயராஜ், மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் தலைமைக் குழுத் தோழர் சா.குப்பன், AICCTU மாவட்டத் தலைவர் தோழர் ஏழுமலைதோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலசா சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவர் தோழர்.செல்வம்மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் தோழர் கார்த்திக், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி ஆகியோர் நாங்குநேரி தாக்குதலைக் கண்டித்தும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன உரையாற்றினார். 

இடையிடையே, சாதி மற்றும் காவிப் பாசிசத்திற்கெதிரான பாடல்கள், சிறுவர்கள் பங்கேற்புடன் பாடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் எழுச்சிகரமான முழக்கங்கள் உணர்வு பூர்வமாக எழுப்பப்பட்டன. 

இறுதியாக, தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புச் சாரா தொழிலாளர் நலச்சங்க மாவட்டச் செயலாளர் தோழர் சரவணன் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது

சஜன் குமார்

ஆல்பர்ட் ஜெயராஜ்

சா.குப்பன்

பிலிப்


கார்த்திக்



தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்

Saturday 19 August 2023

விவசாயிகள் விடுதலை முன்னணி மாநாடு: நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நிற்பதில்லை! தொடர்-2

பேரணி

மாலை மணி நான்கைக் கடந்தும் தலையை கிறுகிறுக்க வைக்கும் கடும் வெயில், தஞ்சை ரயிலடி முகப்பில் படர்ந்திருந்த பல்மர நிழலில் தோழர்கள் செங்கொடியுடன் சற்றே இளைப்பாற, மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரிவாளைப் பிடித்த கைகளுடன்கூடிய கொடிகள் உயர்ந்த போது ரயிலடியே செங்கடலாய் காட்சியளிக்க, அலை அலையாய் தோழர்கள் அணியமாக, அதுவரை நிழல் தந்து மரங்கள் எல்லாம் மௌனித்தன.

சிறுநகர் "இசைச் சமர்" கலைக்குழுவின்  தாரைத் தப்பட்டைகள் முழங்க, தருமபுரி-கிருஷணகிரி மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர், தோழர் இராமலிங்கம் கொடி அசைத்துப் பேரணியைத் தொடங்கி வைக்க, பழைய பேருந்து நிலையம் நோக்கிச் செங்கடல் நகரத் தொடங்கியது. கடலே நகரும் போது தஞ்சை மட்டும் அதிராதா என்ன?

மூன்றில் ஒரு பங்கு மகளிர், கைக் குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியோர்கள் என குடும்பம் குடும்பமாய் மாந்தவினத்தின் பருவமனைத்தும் கைகோர்த்த கண்கொள்ளாக் காட்சியால் தஞ்சையே வியந்தது. 

அரசியல் கட்சிகள், பிற இயக்கங்கள் சங்கங்கள் சார்பாக பேரணி-மாநாடுகள் என்றால் பெரியவர்கள் மட்டுமே பங்கேற்பதுதான் தமிழ்நாட்டு வழக்கம்.
ஆனால், 1980 களிலேயே இந்த வழக்கத்தை உடைத்தெறிந்து, மாநாடுகளிலும் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் மறியல்களிலும், கைது சிறை என்றாலும் அதற்கும் அஞ்சாது, குடும்பம் குடும்பமாய் அலை அலையாய் மக்களைத் திரட்டும் புதியதொரு பரிமாணத்தை உருவாக்கியது மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயி விடுதலை முன்னணி உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்தான் என்றால் அது மிகையல்ல.

வீரவணக்கம்! வீரவணக்கம்!
தியாகிகளுக்கு வீரவணக்கம்!
தெலுங்கானாவில் நக்சல்பாரியில்,
வடாற்காட்டில் தருமபுரியில், 
புன்னப்புராவில் வயலாரில்,
உழைக்கும் மக்களின் விடுதலைக்காக,
இன்னுயிர் ஈந்தத் தோழர்களே!
நக்சல்பாரித் தோழர்களே!
உங்களுக்கெங்கள் வீரவணக்கம்!


தோழர்களின் நரம்புகளை முறுக்கேற்றும் மந்திர முழக்கங்கள் இவை. மெய்சிலிர்க்கும் இம்முழக்கங்கள் கேட்போரை திகைக்க வைக்கும். மார்ச்சிய-லெனினிய பொதுவுடமைப் போராளிகளை நக்சலைட்' என்ற கிலியூட்டும் வசைச்சொல்லாக ஆளும் வர்க்கம் அதை மாற்ற முயன்ற போது, இல்லை, இது நக்சல்பரிஎன விளித்து அதை மக்கள் மொழியாக மாற்றியது மக்கள் கலை இலக்கியக் கழகம்.
 
அகவை அறுபத்தைந்து ஆனாலும், ஆண்டுகள் பல கழித்து, முன்களத்தில் முழங்கி வந்தேன் இறுதிவரை; பின்புலத்தில் அணித்தோழர்கள் முழங்க! இது ஒரு மெய்சிலிர்க்கும் அனுபவம்.
 
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் சங்கமித்தது செங்கடல். விவசாயிகள் விடுதலை முன்னணித் தோழர் இராமலிங்கம் அவர்கள் கொடியேற்ற, மாலை ஆறு மணிக்கு வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது பொதுக்கூட்டம்.

பொதுக்கூட்டம்
 
பொதுக்கூட்டத்திற்குத் தலைமையேற்ற, விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கம்பம் மோகன் அவர்கள் தனது தலைமை உரையில் குறிப்பிட்டவாறு, பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வதைப் போல தமிழகத்தின் பல் முனைகளிலிருந்தும்  தோழர்கள் காவிரிப் படுகையை நோக்கிப் பாய்ந்ததால்தான் திடலே நிரம்பி வழிந்ததோ!
 
விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் இராவணன் வரவேற்புரை நிகழ்த்த, தோழர் சாமி நடராஜன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் – CPM), தோழர் மாசிலாமணி (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர், CPI), தோழர் சுந்தர் மோகன் (தமிழ்நாடு விவசாயிகள் சங்க மகா சபை), தோழர் பழனி ராஜன் (சமவெளி விவசாயிகள் பாசன சங்கம்), தோழர் திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்), தோழர் சின்னதுரை (தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கட்சி சார்பற்றது) உள்ளிட்ட விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகளை எடுத்துக் கூறினர்.



விவசாயிகள் விடுதலை முன்னணியின் தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர் காளியப்பன் (பொருளாளர், மக்கள் அதிகாரம்), தோழர் இராவணன் (இணைச் செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்), தோழர் அன்பு (மாநிலச் செயலாளர் புரட்சிகர மாணவர் இளைஞர் அணி), தோழர் பழனி (தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
 
SKM அமைப்பின் அகில இந்தியத் தலைவர்களில் ஒருவரான புருஷோத்தம் சர்மா மாநாட்டில் சிறப்புரையாற்றினார். SKM-இன் தமிழ்நாடு தலைவர் தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள் வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத சில காரணங்களால் பெங்களூர் வழக்கறிஞர் தோழர் பாலன் வராத குறையை, மக்கள் அதிகாரத்தின் மாநிலச் செயலாளர், வழக்கறிஞர் ராஜூ அவர்கள் தனது எழுச்சி உரையின் மூலம் ஈடு செய்தார்.
 
பொருளாதார கோரிக்கைகளை பெறுவது மட்டுமல்ல, மாறாக நிலம், அதிகாரம், ஜனநாயகம் கோரும் அரசியல் உரிமையும் விவசாயிகளின் விடுதலைக்கு அடிப்படையானவைகளாகும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் விடுதலை முன்னணியின் மாநிலப் பொருளாளர் தோழர் போடி செல்வராஜ் அவர்கள் மாநாட்டில் நிறைவுரையாற்றினார்.
 
மாநாட்டுத் தீர்மானங்களை விவசாயிகள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த தோழர் ரவி அவர்கள் வாசித்தார்.

கலைநிகழ்ச்சி
 
இடையிடையே பாடல்கள் பாடிய கோவன் தலைமையிலான மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மைய கலைக் குழுவினர், இறுதியில் எழுச்சிமிகு கலை நிகழ்ச்சியை நடத்தி முடிக்க, பாட்டாளி வர்க்க  சர்வதேசிய கீதத்துடன் மாநாடு-பொதுக்கூட்டம் இரவு பத்து மணிக்கு இனிதே நிறைவடைந்தது.

நூல் வெளியீடு
 
மாநாட்டில் விவசாயப் புரட்சியும் மக்கள் திரள் பாதையும் தோழர் ரங்கநாதன் வாழ்க்கைப் பயணம் என்கிற நூலை காரப்பட்டு தோழர் ஏழுமலை அவர்கள் வெளியிட,  புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் முன்னாள் மாநிலத் தலைவர் தோழர் முகுந்தன் அவர்கள் பெற்றுக்கொண்டார். நூலாக்கம் குறித்து காரப்பட்டு தோழர் அம்பேத்கர் அவர்கள் விளக்கினார். (இந்நூல் குறித்துத்  தனி பதிவு ஒன்றை எழுத உள்ளேன்).
 
இயற்கை உபாதைகளுக்காக ஒரு சிலர் எப்போதாவது இருக்கைகளை விட்டு எழுவதைத்தவிர, ஆயிரக்கணக்கானோர் நான்கு மணி நேரம் அசையாமல், அசராமல் அமரந்திருப்பதை மகஇக-விவிமு கூட்டங்களில்தான் காணமுடியும். தேநீரோ, சுண்டல், பொறி-கடலையோ, எதுவும் இங்கே திடலுக்குள் நுழையாது என்பதால் பார்வையாளர்களின் கவனம் சிதறாது.  ஏன்? கைபேசியை நோண்டினாலே தொண்டர்கள் எச்சரிக்கை செய்வர். அவ்வப்பொழுது நாவை நனைக்க அயராமல் தொண்டர்கள் கொடுக்கும் குடிநீர் மட்டும்தான் இங்கு ஆகாரம். சிறுவர்களைக்கூட கூட்டம் சுண்டி இழுத்துக் கொள்ளும்.

அறிவுப் பசிக்கு கீழைக்காற்றும், உணர்வுப் பசிக்கு, விவசாயிகள் விடுதலை முன்னணி, திருவெண்ணைநல்லூர் மூத்த தோழர் ஏழுமலை தொடங்கி வைத்த ஓவியர் முகிலனின் "ஓவியக் காட்சியும்" திடலில் தடம் பதித்தன.
 
புதிய அரசியலை மட்டுமல்ல புதிய பண்பாட்டையும் கைக்கொள்ளும் கூட்டமிது என்பதனால் மதுப்பிரியர்களை இங்கே காண முடியாது. அதனால் திடல் ஓரங்களில், திரைமறைவுகளில் கண்ணாடிக் காடுகள் முளைப்பதில்லை. இதனால்தானே காலை மற்றும் பகல் உணவை முடிக்க, மரத்தடியை நாடாமல் கோயிலடியை எங்களால் நாட முடிந்தது.
 
மாநாடு முடிந்த பிறகு, அவரவர் கொண்டு வந்த கலவை உணவை பகிர்ந்துண்ண, எமக்கோ பாலாவும் ராஜனும் இட்டிலியை பகிர்ந்தளிக்க, பசியாறினோம்.
காலை நேரப்பயணம்-பேரணி-பொதுக்கூட்டம் என தொடர் நிகழ்வால் இரவு பதினோரு மணிக்கு உடல் ஓய்வை நாடினாலும், மாநாட்டு அனுபவத்தை அவரவர் பகிர்ந்த பிறகு, பேருந்துச் சன்னல்களின் மென்காற்று உடலை வருட ஊர் நோக்கிப் பயணமானோம்.
 
'பெல் சிட்டி' ஊழல்வாதிகளை கண்டும் காணாமல் இருந்த ஒரு சிறு கூட்டம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, கையும் களவுமாய் பிடிபட்டபோது, அணிகளின் கேள்விக்கனைகளை எதிர்கொள்ள அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடியதால் இடையில் ஒரு சிறு சலசலப்பு; சற்றே சலிப்பு. உண்மைகளை உணர்ந்தோர் ஓர் அணியில் ஆயிரமாயிரமாய் இங்கே; உணராத அச்சிறு கூட்டம் மேலும் பிளவுண்டு, கேள்வியாய், கனலாய் சீந்த நாதியற்று நடுத்தெருவில்
 
நடுத்தெருவில் நாய்கள் குறைப்பதால் பயணங்கள் நின்றுவிடுமா என்ன?

முற்றும்
 
தமிழ்மணி
 

தொடர்புடைய பதிவுகள்


தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1


நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?