Friday, 14 January 2022

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3

ஈழத் தமிழர்கள் மீதான சிங்களப் பேரின ஒடுக்குமுறைக்கு எதிராக 1956 வாக்கில் அமைதியாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம்,  1983  முதல் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, 2009-ல் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம். இதே காலகட்டத்தில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமைதி காத்த தமிழ்த் தேசியம் பேசும் பல அமைப்புகள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு சுயநிர்ணய உரிமை குறித்தும், தேசிய விடுதலை குறித்தும் அதிகமாகப் பேச தொடங்கின.

CPI, CPI(M) ஆகிய இரு பொதுவுடைமைக் கட்சிகளும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்பதில்லை, தனியாகப் பிரிந்து செல்வதையும் ஏற்பதில்லை. 

CPI(M)-லிருந்து வெளியேறி ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ கண்ட மணியரசன், பொதுவுடமையைக் கைவிட்டுவிட்டு ‘தமிழ்த் தேசியப் பேரியக்கத்தில்’ பவனி வருகிறார். 

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ), தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கார்முகில் குழுவினர், ‘இந்தியாவை’க் கைவிட்டுவிட்டு தமிழ்த்தேச விடுதலையை முன்வைத்து ‘தமிழ்நாடு மார்க்சிய லெனினியக்  கட்சி’யாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

மக்கள் யுத்தக் குழுவிலிருந்து வெளியேறிய புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோர் தமிழ்த்தேச விடுதலையை முன்வைத்தனர். தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கினார்.

AMK தலைமையிலான போல்ஷ்விக் பிரிவினரும், மாவோயிஸ்ட் பிரிவினரும் தனி ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் நேரடியாக ஆதரித்தனர்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்த அதேவேளையில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ), மாநில அமைப்புக் கமிட்டி விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை,

இவை தவிர, தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பொழிலன் தலைமையிலான தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, ஆழி செந்தில்நாதனின் தன்னாட்சித் தமிழகம், திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம், திருமொழியின் தமிழ்தேச இறையாண்மை, துரைசிங்கவேலின் மக்கள் ஜனநாயகக் குடியரசு கட்சி, அரங்க குணசேகரனின் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் உள்ளிட்ட சில பல அமைப்புகள் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைக்கின்றனர். மேற்கண்ட அமைப்புகளில், பெரும்பாலான அமைப்புகள் தொடக்க காலம் முதலே தேசிய இனங்களின் உரிமை குறித்து பேசி வருகின்றனர். திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் (2009, மே 17) மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி (2010, மே 18) ஆகிய இரண்டும் ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு தொடங்கப்பட்டவைகளாகும்.

பெரியார் காலம் தொடங்கி இன்றுவரை பெரியார் இயக்கங்கள் தனி ஈழத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கின்ற அதே வேளையில், தமிழகத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக்கான கோரிக்கையை நேரடியாக முன் வைக்கவில்லை என்றாலும் தமிழர் நலன் காக்கக் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1

திராவிடம்! தொடர் - 2

Thursday, 13 January 2022

திராவிடம்! தொடர் - 2

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுதர்ம சாஸ்திரத்திலும் (கி.மு 150-100), கி.பி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் புராணங்களிலும் திராவிடம் குறித்த குறிப்புகள் காணப்பட்ட போதிலும், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பரங்கியன்’ கால்டுவெல்லும், இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியார் உள்ளிட்ட கன்னட-தெலுங்கு-மலையாளிகளும்தான் தமிழர்களிடையே திராவிடத்தைத் திணித்தார்கள் என்று தம்பிகள் பிதற்றி வருகின்றனர். 

வேத காலம் தொட்டு இன்றைய மோடி காலம்வரை-இடையில் மெளரியர்,  களப்பிரர் உள்ளிட்ட ஒரு சில சமண, பெளத்த ஆட்சிகளைத் தவிர-சனாதன தர்மமே இந்தியப் புவிப்பரப்பில் கோலோச்சி வருகிறது. முகலாயர் மற்றும் பரங்கியர் ஆட்சிக் காலத்திலும்கூட சனாதன ஆதிக்கத்திற்குப் பெரிய அளவில் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை. பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டே வந்துள்ளனர். 

எடப்பாடி போன்று, பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தவர்கள் மட்டுமே ஆட்சி நடத்த அனுமதிக்கப்பட்டனர். வேதங்களை ஏற்க மறுத்த, பார்ப்பனர் சொல்படி நடக்க மறுத்த பெளண்டரம், ஒளண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் ஆகிய நாடுகளை ஆட்சி செய்த மன்னர்கள்கூட சத்ரிய நிலையிலிருந்து சூத்திர நிலைக்குத் தரம் இறக்கப்பட்டனர் அல்லது காடுகளுக்கு விரட்டப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர். (மனு: 7-40, 7-41, 10-43, 10-44). அவ்வாறு அழிக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட மன்னர்கள் ஹரிவம்ச நூலில் வரும் வேணன் என்கிற வீணா, விஷ்ணு புராணத்தில் வரும் நிமி மற்றும் நகுஷன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

திராவிட நாட்டில் இருந்த வேங்கட மலையை பலராமர் தரிசித்ததாக பாகவதம் கூறுகிறது (கி.பி 4-5 ஆம் நூற்றாண்டு புராணம்).

திராவிடம் என்கிற நாடு, விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென் இந்தியாவைக் குறிப்பதாகும் என்பதை அம்பேத்கர் தெளிவு படுத்துகிறார். (தொகுதி-10)  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் திராவிட நாட்டில் பேசப்பட்டதால்தான்  அந்த நாட்டைக் குறிக்கும் வகையில் அம்மொழிகளைத் திராவிட மொழிகள் என்கின்றனர். 

திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சமஸ்கிருதச் சொல்,  பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என திரித்துப் பேசுவதன் மூலம் வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்கிற திராவிடக் கருத்தியலை நிராகரித்து பார்ப்பனியத்திற்குச் சேவை செய்ய முயல்கின்றனர் சீமானும், மணியரசனும்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவு

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1



Wednesday, 12 January 2022

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1

தமிழ்த் தேசியம் என்றால் அது சீமான்தான் என்கிற கருத்து இன்று இளைஞர்கள் மத்தியில் மிகத் தீவிரமாக பரப்பப்பட்டு வருகிறது. தமிழரை உய்விக்க வந்த மாயோனாக, சீயோனாக சீமானை சில இளைஞர்கள் பார்க்கின்றனர். முப்பாட்டன் முருகன் தொடங்கி பெரும்பாட்டி ஔவை, ஓபிஎஸ்–இபிஎஸ் சித்தப்பாக்கள், சித்தி சசிகலா, வழி காட்டி திருவரங்கம் சங்கர் அப்பா என இவருக்குச் சொந்த பந்தம் ஏராளம் என்பதாலும், அண்ணனின் ஆமைக்கறியால் இவரது தசைகள் முறுக்கேறியதாலும், கிரீன் பெல்ட்-பிளாக் பெல்ட் என விளாசிக் கொண்டிருக்கிறார். இவரது விளாசலில் திராவிடமே திக்குமுக்காடுவதாகத் தம்பிகள் வேறு சாட்டையைச் சுழற்றுகின்றனர். தமிழ் மண்ணையே ஆளத் துடிக்கும் இவருக்கு, பாவம் சொந்தமாக ஒரு வீடு இல்லை என்கிற ‘பெருந் துயரத்தைத்’ தவிர இவரது உல்லாசத்திற்குக் குறை ஒன்றுமில்லை.

நாம் தமிழர்சீமானின் தமிழ்த் தேசியம்!

தமிழின மீட்சி, தமிழீழத் தனியரசு, மாநிலங்களின் தன்னுரிமை, இறையாண்மைக் குடியரசுகளின் கூட்டு இணையாட்சி-அதற்கேற்ப அரசியல் சட்டத் திருத்தம், ஆட்சி மொழி-வழிபாட்டு மொழி-வழக்காடு மொழி-தமிழில் படித்தவருக்கே வேலை வாய்ப்பு என எங்கும் தமிழ், சமதர்மப் பாதையமைக்கக் கூட்டுறவு முறை, நிலமற்றோருக்கு நிலமும் மனையும், அறிவியல்-தொழில் நுட்ப வளர்ச்சி, உலகத் தமிழர் ஒன்றிணைப்பு, சமனியத் தமிழரசு, வருண–சனாதன அழிப்பு, சாதி-சமய ஆதிக்கம் ஒழிப்பு, சமயம் சாரா அரசு, தனியார் மயம்–கள்ளப் பணம் ஒழிப்பு, மருத்துவம் அடிப்படை உரிமை, ஆண்-பெண் சுயஉதவிக் குழுக்கள், தேசிய இன நட்புறவுக் கழகம் (எ.கா:தமிழர்-வங்காளி) என ஒரு குடுகுடுப்பைக்காரன் குறி சொல்வது போல நீள்கிறது இவரது கொள்கைப் பிரகடனங்கள்.

யாரிடமிருந்து தமிழின மீட்சி? திமுக அதிகாரத்தில் இருந்தாலும் இல்லை என்றாலும் ‘திருட்டு’ திராவிட திமுக-விடமிருந்து என்பார் சீமான். ஆனால் (திராவிடத்தால் துளிர்த்த) இலை மலர்ந்தால் இவர் ஆமைக் கறியோடு இளைப்பாறி விடுவார்.

தமிழீழ தனியரசு–புலம்பெயர்  தமிழரிடமிருந்து பணம் கரப்பதைத் தவிர வேறு ஒரு வெங்காயத்தையும் இவரால் உரிக்க முடியாது. 

சாதி ஆணவப் படுகொலையை “குடிப்பெருமை   கொலை” என பெருமை பேசும் இவர், சாதி ஆதிக்கத்தையும் வருண-சாதியையும் ஒழிக்கப் போகிறாராம்? கிருஸ்தவமும் இஸ்லாமும் ஐரோப்பிய–அரேபிய சமயங்கள்; சைவமும்–மாலியமும் மட்டும்தான் தமிழர் சமயங்கள் என கதை அளந்து கொண்டே, சமயம் சாரா அரசு அமைக்கப் போவதாகச் சரடு விடுகிறார். 

பன்னெடுங்காலமாக தமிழகத்தில் வாழும் தெலுங்கர்களையும், மலையாளிகளையும், கன்னடர்களையும் எதிரிகளாகக் கட்டமைத்துக் கொண்டே தேசிய இன நட்புறவுக் கழகம் பற்றி நரித்தனம் பேசுகிறார்.

திரைப்படங்களில் கச்சைக் கட்டி குத்தாட்டம் போட்டு கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கும், இடுப்பில் பச்சைத் துண்டு கட்டிக் கொண்டு ‘தமிழர்  முன்னணி’ ஆட்டம் போடும் இவருக்கும் பெருத்த வேறுபாடு இருப்பதாகத் தெரியவில்லை; இரண்டிலும் இளைஞர்கள் சீரழிவதைத் தவிர!

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பார்கள். ஆனால் இங்கோ, குட்டி எட்டடி பாய்ந்தால் தாய் பதினாறடி பாய்கிற கதையாகி விட்டது, ஐயா மணியரசனின் கதை. சீமானாவது  இந்து மதம் தமிழர் மதமே இல்லை என்கிறார். ஆனால் மணியரசனோ, தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று  சொல்லி சைவத்தை மீட்டெடுக்கும் திருநாஞானசம்பந்தராய் அவதாரம்  எடுத்து வச்சிரநந்தியைக் கழுவிலேற்றுகிறார்.

இவர்கள் பேசும் தமிழ்த் தேசியத்தால், வேத-எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்ட திராவிடக் கருத்தியலை, தமிழர் நெஞ்சங்களிலிருந்து துடைத்தெறிந்துவிட்டு பார்ப்பனியத்தை மீட்டுருவாக்கம் செய்வதைத் தவிர தமிழர்களுக்கு வேறொரு பயனும் கிட்டப் போவதில்லை.

தோழர் ஸ்டாலினின் சொற்களில் சொல்லவேண்டுமானால், இவர்கள் இருவரும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய சமூக முறைக்குத் திரும்பச் செல்வதற்கு முயற்சி செய்பவர்கள்; அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு என்றாலும் கூட இந்த முடிவை கம்யூனிஸ்டுகளால் ஆதரிக்க முடியாது. இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் பிழையானது என்பதற்கு, பல்வேறு தேசிய இன மக்களுக்கிடையே பகைமையை வளர்ப்பது, பாட்டாளி வர்க்க ஒற்றுமையை சீர் குலைப்பது என வேறு பல காரணங்கள் இருந்தாலும் தமிழ்த் தேசிய இனத்தைப் பழைய முறைக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் ஒரே காரணத்திற்காக இவர்கள் பேசும் தமிழ்த் தேசியம் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 

பார்ப்பனரல்லாதோர் இயக்கம்-நீதிக்கட்சி தொடங்கி, பெரியார்-அண்ணா-கலைஞர்-ஸ்டாலின் காலம் வரை திராவிடக் கருத்தியலை, பார்ப்பனர்கள் மிகத் தீவிரமாக எதிர்ப்பது ஏன்? இட ஒதுக்கீடு உள்ளிட்ட திராவிடக் கருத்தியலின் சமூக நீதிக் கோட்பாடுகளால், சூத்திரர்கள் இருந்த இடத்தில் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்கள் இருந்த இடத்தில் சூத்திரர்களையும் வைத்ததால்தான் பார்ப்பனர்கள் பெரியார் மீது கடும்கோபம் கொள்ளக் காரணம். அனைத்து சாதி அர்ச்சகர் இதற்கு சமீபத்திய எடுப்பான உதாரணம். 

வட இந்தியாவில் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும், மத்திய- மாநில அமைச்சர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் பார்ப்பனர்களால் வரமுடிகிறது. ஆனால் தமிழகத்திலோ ஒரு வார்டு உறுப்பினராக வருவதற்கே திண்டாட வேண்டியிருக்கிறது. வடக்கும், தெற்கு போல ஆகிவிடுமோ என்ற அச்சம் பார்ப்பனர்களை அச்சுறுத்தியதால்தான், உயர்சாதியினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்து அதிகாரத்தில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சி செய்கின்றனர் போலும். 

பெரியாரின் சமூகநீதிக் கோட்பாடுகளால் ஆதிக்கத்தை இழந்தவர்கள் அலருவதில் அர்த்தம் உண்டு. ஆனால் பெரியாரால் ஆதாயமடைந்தவர்கள் அலருகிறார்கள் என்றால் அதன் பொருள் என்ன?

தொடரும்

தமிழ்மணி


Monday, 27 December 2021

ஆம்பூரில் கீழ்வெண்மணி நினைவு நாள்!

1968, டிசம்பர் 25; அரைபடி நெல் கூலி கூடுதலாகக் கேட்டதற்காகவா 44 கூலி ஏழை விவசாயிகளை குடிசைக்குள்  எரித்துக் கொலை செய்தார்கள் பண்ணையார்கள்? இது நம்பும்படியாகவா இருக்கிறது? அரை படி நெல் என்பது பண்ணையார்களுக்கு பெரிய சுமை அல்லவே! கூலியை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதற்கேற்ப கூடுதலாக வேலை வாங்கிக் கொள்ள பண்ணையார்களால் முடியும். பிறகு ஏன் 44 பேரை உயிரோடு எரித்தார்கள்?

தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட அனைத்து பட்டியலினச் சாதி மக்களும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள்தான். இவர்கள் கூலிகளாக  இருப்பது மட்டுமல்ல சாதியப் படிநிலையில் ஆக கீழ்மட்டத்தில் இருக்கும் சேரி மக்கள். இவர்கள் கூலி வேலை செய்யும் நிலங்கள் சாதியப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருக்கும் மூப்பனார், நாயுடு போன்ற ஆதிக்கச் சாதியினருக்குச் சொந்தமானவை. நிலவுடைமையாளர்களாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் உயர்சாதியினர் என்பதனால் ஆண்டைகள் என்றே சேரி மக்களால் அழைக்கப்பட்டனர்.

நேற்றுவரை கைகட்டி, வாய் பொத்தி, கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூனிக்குறுகி, வாழ்ந்த சேரி மக்கள் இன்று சங்கம் வைத்து, செங்கொடி ஏந்தி, நெஞ்சை நிமிர்த்தி, முழக்கமிட்டு கேட்டதுதான் பண்ணையாளர்களுக்குப் பிரச்சனை.

சங்கம் எதற்கு? செங்கொடி எதற்கு? கூனிக்குறுகி கேட்க வேண்டியவன் நெஞ்சை நிமிர்த்தி கேட்பது ஆண்ட சாதிக்கு எதிரானதல்லவா? இப்படித்தான் ஆதிக்கசாதி பண்ணையார்கள் விவசாயிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை பார்த்தார்கள். பண்ணை ஆதிக்கமும் சனாதன ஆதிக்கமும் சரிவதை பண்ணையார்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு கோபாலகிருஷ்ண 'நாயுடு' தலைமையில் கீழ்வெண்மணி படுகொலை.

00000

ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஒரு பக்கம் நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வருகிறது; மற்றொரு பக்கம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு என்கிற சனாதன தர்ம இந்து  இராஷ்டிரத்தைக் கட்டமைக்க முயன்று வருகிறது.

மேற்கண்ட இரண்டையும் எதிர்ப்பவர்களை ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ஏற்ப, சட்டங்களைத் திருத்தி பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைத்தான் கார்ப்ரேட் காவி பாசிசம் என்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவில்லை என்றால் இந்தியா ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும். எனவே, சுரண்டப்படும் மக்கள், ஒடுக்கப்படும் மக்கள் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் சனாதன சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை  உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பில் 26.12.2021 அன்று மாலை ஆம்பூரில் வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

00000

மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியக் குடியரசுக் கட்சி ஆம்பூர் நகரத் தலைவர் தோழர் சுரேந்திரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சந்திரன்  அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் தோழர் ஏகாம்பரம் அவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் இராஜேந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில சான்றோர் அணி கவிஞர் திவாகரன் அவர்களும், கவிஞர் யாழன் ஆதி அவர்களும் உரையாற்றினர். 

கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி மக்கள் முன்னணியின் அவசியம் குறித்து மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன் அவர்கள் இறுதியாக எழுச்சியுரை ஆற்றினார். 

இடையிடையே மக்கள் கலை இலக்கியக் கழக வேலூர் மாவட்ட கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ வைத்தன. ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் அவர்கள் நன்றியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட கருத்தரங்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஆம்பூரில் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.












தகவல்

மக்கள் அதிகாரம்
திருப்பத்தூர் மாவட்டம்

Friday, 24 December 2021

குமரனுக்கும் இந்தக் கிழவன்தான் இனி கைத்தலம்!!

எந்த ஒரு கலைஞனும், ஒரு சமூகத்தை அதன் முழுமையான வடிவில் காண்பதில்லை. அதனால் அவனது படைப்புகளில் குறைகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் அந்தக் குறைகளைக் கண்டு அந்தக் கலைஞனை ஒதுக்கி விடுவதில்லை. மாறாக அந்தக் கலைஞன் விட்ட இடத்திலிருந்து விடுபட்ட உண்மைகளைத் தேடுகிறார்கள். அதானே அறிவுடைமை! அதனால்தானே கலைகள்  ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைகின்றன. இந்தக் கூற்று கலைகளுக்கும் கலைஞனுக்கும் மட்டுமானதல்ல, அனைவருக்குமானதுதான்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு, பெண் விடுதலை, சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை உள்ளிட்ட அநீதிகள், பார்ப்பனிய சனாதன எதிர்ப்பு, சுயமரியாதை, கல்வி - வேலை வாய்ப்புகளில் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய பங்கீட்டைப் பெறும் சமூக நீதிக் கோட்பாடு, சமதர்ம சமுதாயம் என பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர் தந்தை பெரியார். 

இயக்கவியல் பொருள் முதல் வாதத்தைக் 'கரைத்துக் குடித்தவர்களைக்' காட்டிலும் அவர் பொதுவுடைமையை அதிகமாகவே நேசித்தார் என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்து கொள்ள முடியும். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குபவர்களால் நிச்சயமாக உண்மையைத் தேடிச் செல்ல முடியும். மாறாக அவர் விட்டதை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டுதான் நிற்க வேண்டும். வரலாறு கற்றுத் தரும் பாடம் இதுதான்.

இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதால்தான் இன்று பொதுவுடைமையாளர்களும் பெரியாரைப் போற்றி புகழ்வதோடு அவரது நினைவையும் நெஞ்சிலேந்துகிறார்கள். 

பெரியாரின் நாற்பத்தி எட்டாவது நினைவு நாளான இன்று காலை வேலூர் மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் செல்வம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி ஆகியோர் பெரியாரை நினைவு கூர்ந்தனர். வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கையில் மாலையுடன், ஒரு பேனரை பிடித்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி, சுமார் 25 பேர் ஒரு 100 மீட்டர் தூரம் நடந்து சென்றதையே ஏதோ அனுமதியில்லாமல் பேரணி நடத்தி சட்டத்தை மீறி விட்டதாக வேலூர் போலீசார் சற்றுநேரம் களேபரம் செய்து விட்டனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், வளர்ப்பு  அப்படித்தானே இருக்கும் என்று சொல்வதைத் தவிர?






தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம் வேலூர் மாவட்டம்



Tuesday, 21 December 2021

"ஜெய் பீம்" சாதித்தது என்ன?

சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கூத்து, நடனம், நாடகம், திரைப்படம் என பல்வேறு வடிவங்களில் மனிதன் தனது வாழ்வின் இன்ப துன்பங்களை பதிவு செய்கிறான். இயற்கையை எதிர்த்துப் போராடிய காலம் தொட்டு, இன்று சக மனிதனை எதிர்த்துப் போராடும் காலம் வரை, மனித வாழ்வின் அத்துணை பரிமாணங்களும் கலை வடிவங்களில் பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. விருப்பு-வெறுப்பு, மகிழ்ச்சி-சோகம், வீரம்-கோழைத்தனம், வெற்றி-தோல்வி என மனிதனின் அத்தனை உணர்வுகளையும் கலைப் படைப்புகள் வெளிக்கொணர்கின்றன.

கூத்து போன்ற கலை வடிவங்களில் புராணக்கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதால்தான் பழைமைவாத கருத்துக்கள் மக்களிடையே மிக ஆழமாக வேரூன்றி உள்ளன. புராணக் கதைகள் சொல்லும் நீதிகளே நியாயமானவைகளாக நிலை பெற்றுவிடுகின்றன. ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் தங்களுக்குச் சாதகமான கலைகளை வளர்த்தெடுக்க திறமையான கலைஞர்களை பரிசுகள் கொடுத்து பாராட்டி தம் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றன. 

மன்னர்கள், பண்ணை - ஜமீன்கள், மத போதகர்கள் உள்ளிட்ட ஆதிக்க வாதிகளைப் பற்றிதான் பெரும்பாலான கலைப் படைப்புகள் பேசுகின்றன. ஆனாலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பற்றியும் அவ்வப்போது கலைப் படைப்புகள் படைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவை மிகப் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. 

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,  ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படம் பழங்குடி இருளர் மக்களின் அவலத்தை மிக நேர்த்தியாக, இயல்பாக எடுத்துக் காட்டியதால் இந்திய மக்களின், ஏன் உலக மக்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது. காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள், சார்பட்டா பரம்பரை, மேற்கு தொடர்ச்சி மலை, ஜெய் பீம் என தமிழ் திரைத்துறை எடுத்திருக்கும் புதிய பரிமாணத்தை சுட்டிக்காட்டி கோடம்பாக்கம் கோலிவுட்டிலிருந்து மும்பை பாலிவுட் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை "த பிரிண்ட்" என்ற ஆங்கில செய்தி  ஊடகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதான் ஜெய் பீம்-ன் வெற்றி.

ஜெய் பீம் திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள் என அடுத்தடுத்து சில திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டியது ஜெய் பீம். 

உலகப் புகழ்பெற்ற மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலையும், அலெக்ஸ் ஹேலியின் "ஏழு தலைமுறைகள்" நாவலையும் மீண்டும் படிக்கத் தூண்டியது. உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டி, ஒரு சோசலிச சமுதாயத்தை படைக்க விழையும் தாய் நாவலும், இன ஒடுக்குமுறைக்கு ஆளான கருப்பின மக்களின் அவலங்களைப் பேசும் ஏழு தலைமுறை நாவலும் இதுவரை திரைப்படமாக வந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய கலைப் படைப்புகள் இவை. 

எனவே, இந்த இரு நாவல்களையும் அதன் அசல் வடிவில், அப்படியே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தரலாம் எனக் கருதுகிறேன். நூல் கிடைக்கப் பெறாதவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதுதான் ஜெய் பீம் திரைப்படம் என்னுள் ஏற்படுத்தியத் தாக்கத்திற்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும்.

தமிழ்மணி

Sunday, 7 November 2021

வேலூரில் நவம்பர் புரட்சி விழா!

விலைவாசி உயர்வு, அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியாருக்கு, ஆலை மூடல்-ஆட்குறைப்பு, வேலையின்மை,  சுற்றுச்சூழல்-சுகாதாரக் கேடுகள், காசு உள்ளவனுக்கே கல்வி மற்றும் மருத்துவம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வரதட்சணை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதி ரீதியிலான வன்கொடுமைகள், மத-மொழி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என மோடி ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னல்களிலிருந்து தங்களுக்கு விடுதலை  கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டி இம்மண்ணில் ஒரு பொன்னுலகைப் படைத்த 1917 நவம்பர் 7 சோசலிசப் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை நோக்கி பயணிப்பதன் மூலமாகத்தான் மக்கள் தங்களது துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.

சோசலிசம்தான் உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று என்றாலும்கூட கூட, இன்றைய சூழலில் இந்திய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் கார்ப்பரேட்-காவி பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதே மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது. அதற்காக, மோடிக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அறிவுத்துறையினர் ஓர் அணியில் சேர வேண்டும். இல்லையேல் காவிகள் நம்மை கபளீகரம் செய்வதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆம்! இன்றைய தேவை மோடிக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு. சாத்தியப்பட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் நடத்தி மோடியை வீழ்த்துவதுதான் இன்றைய உடனடிக் கடமை. அதற்கான விதையை ஊன்றும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள்  நவம்பர் புரட்சி விழாவை தமிழகமெங்கும் கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக வேலூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா குறித்த ஒரு தொகுப்பு.

07.11.2021 மாலை, வேலூர் மாநகரில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி தலைமையில் நவம்பர் புரட்சி விழா எழுச்சியோடு நடைபெற்றது.

மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் இராவணன் அவர்களும், சங்கமாய் சேருவதன் அவசியம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் செல்வம் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

அடிமைத்தனம் மற்றும் மூட நம்பிக்கைகளை கைவிட்டு சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து வழக்கறிஞர் பாலு அவர்களும், மீண்டும் ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வருமேயானால் 2025 ல், ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழாவின் போது இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கக் கூடும் என்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை ஒரே லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலா அவர்களும், சோசலிசத்தை நேசித்த விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் வரலாற்றை பதிவு செய்து தோழர் விசு அவர்களும், நேசம் தலைப்பில் தோழர் இரமணி அவர்களும் உரையாற்றினர்.

அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளில் நலனைக் காக்கவும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவவும் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிக்க மோடி கும்பலுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் ஓரணியில் ஐக்கிய முன்னணியாய் அணிசேர்வதன் அவசியத்தை வலியுறுத்தி தொழிற்சங்க முன்னோடி தோழர் மோகன்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

லெனினின் ஏன் தேவைப்படுகிறார்? என்ற தலைப்பில் மகஇக தோழர் முத்துராமன் கவிதை வாசிக்க, ‘அம்மா இல்லாம யாருமே இல்ல!’ , ‘சம்மதமா? சம்மதமா?’,  'சாமக்கோழி கூவும் நேரத்திலே,  ஊருக்கு ஊரு சாராயம்,  நாடு முன்னேறுதுங்குறான்,  மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!’,  டெல்லி சலோ! டெல்லி சலோ!’, உள்ளிட்ட பாடல்களை கலைக்குழு தோழர்கள் பாட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சார்ந்த தோழர் சரவணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி

வேலூர் மாவட்டம்

விழா காட்சிகள்












காலையில் சங்கக் கிளைகளில் கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.