Tuesday 21 December 2021

"ஜெய் பீம்" சாதித்தது என்ன?

சிற்பங்கள், கல்வெட்டுகள், ஓவியங்கள், பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள், கூத்து, நடனம், நாடகம், திரைப்படம் என பல்வேறு வடிவங்களில் மனிதன் தனது வாழ்வின் இன்ப துன்பங்களை பதிவு செய்கிறான். இயற்கையை எதிர்த்துப் போராடிய காலம் தொட்டு, இன்று சக மனிதனை எதிர்த்துப் போராடும் காலம் வரை, மனித வாழ்வின் அத்துணை பரிமாணங்களும் கலை வடிவங்களில் பிரதிபலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. விருப்பு-வெறுப்பு, மகிழ்ச்சி-சோகம், வீரம்-கோழைத்தனம், வெற்றி-தோல்வி என மனிதனின் அத்தனை உணர்வுகளையும் கலைப் படைப்புகள் வெளிக்கொணர்கின்றன.

கூத்து போன்ற கலை வடிவங்களில் புராணக்கதைகள் மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுவதால்தான் பழைமைவாத கருத்துக்கள் மக்களிடையே மிக ஆழமாக வேரூன்றி உள்ளன. புராணக் கதைகள் சொல்லும் நீதிகளே நியாயமானவைகளாக நிலை பெற்றுவிடுகின்றன. ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் தங்களுக்குச் சாதகமான கலைகளை வளர்த்தெடுக்க திறமையான கலைஞர்களை பரிசுகள் கொடுத்து பாராட்டி தம் பக்கம் ஈர்த்துக் கொள்கின்றன. 

மன்னர்கள், பண்ணை - ஜமீன்கள், மத போதகர்கள் உள்ளிட்ட ஆதிக்க வாதிகளைப் பற்றிதான் பெரும்பாலான கலைப் படைப்புகள் பேசுகின்றன. ஆனாலும் ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைப் பற்றியும் அவ்வப்போது கலைப் படைப்புகள் படைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. அவை மிகப் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தவும் செய்கின்றன. 

சூர்யா-ஜோதிகா தயாரிப்பில்,  ஞானவேல் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான "ஜெய் பீம்" திரைப்படம் பழங்குடி இருளர் மக்களின் அவலத்தை மிக நேர்த்தியாக, இயல்பாக எடுத்துக் காட்டியதால் இந்திய மக்களின், ஏன் உலக மக்களின் கவனத்தை அது ஈர்த்துள்ளது. காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள், சார்பட்டா பரம்பரை, மேற்கு தொடர்ச்சி மலை, ஜெய் பீம் என தமிழ் திரைத்துறை எடுத்திருக்கும் புதிய பரிமாணத்தை சுட்டிக்காட்டி கோடம்பாக்கம் கோலிவுட்டிலிருந்து மும்பை பாலிவுட் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது என்பதை "த பிரிண்ட்" என்ற ஆங்கில செய்தி  ஊடகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதான் ஜெய் பீம்-ன் வெற்றி.

ஜெய் பீம் திரைப்படம் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது. காலா, அசுரன், கர்ணன், பரியேறும் பெருமாள் என அடுத்தடுத்து சில திரைப்படங்களைப் பார்க்கத் தூண்டியது ஜெய் பீம். 

உலகப் புகழ்பெற்ற மக்சீம் கார்க்கியின் "தாய்" நாவலையும், அலெக்ஸ் ஹேலியின் "ஏழு தலைமுறைகள்" நாவலையும் மீண்டும் படிக்கத் தூண்டியது. உழைப்புச் சுரண்டலுக்கு முடிவு கட்டி, ஒரு சோசலிச சமுதாயத்தை படைக்க விழையும் தாய் நாவலும், இன ஒடுக்குமுறைக்கு ஆளான கருப்பின மக்களின் அவலங்களைப் பேசும் ஏழு தலைமுறை நாவலும் இதுவரை திரைப்படமாக வந்ததா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் மக்களிடையே எடுத்துச் செல்லப்பட வேண்டிய மிக முக்கிய கலைப் படைப்புகள் இவை. 

எனவே, இந்த இரு நாவல்களையும் அதன் அசல் வடிவில், அப்படியே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தரலாம் எனக் கருதுகிறேன். நூல் கிடைக்கப் பெறாதவர்கள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும். இதுதான் ஜெய் பீம் திரைப்படம் என்னுள் ஏற்படுத்தியத் தாக்கத்திற்கு நான் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும்.

தமிழ்மணி

No comments:

Post a Comment