Sunday, 22 September 2024
மார்க்சியவாதிகளே! மாணவர்களாய் மாறுங்கள்!
Friday, 7 June 2024
மார்க்சிய-லெனினிய வாதிகளுக்கு இந்திய வாக்காளர்கள் உணர்த்தும் பாடம் என்ன?
Thursday, 20 January 2022
இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும், தமிழ்த் தேச விடுதலையும்! தொடர்-9
சீமான், மணியரசன் போன்றவர்கள் ஒருபுறம் தமிழ்த்தேசியம் பேசினாலும், அவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆனால் மார்க்சிய ‘ஒளியில்’ தமிழ்த் தேசியம் பேசும் மார்க்சிய-லெனினியர்களைப் புரிந்து கொள்வதுதான் சற்றே கடினமானது.
தமிழ்த் தேசியத்திற்கான
அவசியத்தை, மார்க்சிய ஆசான்களை மேற்கோள் காட்டி இவர்கள் பேசினாலும், இந்தியாவில் ஒரு
வலுவான ஒன்றுப்பட்ட மார்க்சிய-லெனினியக் கட்சியைக் கட்டுவதற்கான இயலாமையினாலும் மற்றும்
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தினாலும்தான் இவர்கள் தமிழ்த்தேச விடுதலை
அரசியலை முன்னெடுப்பதாகத் தோன்றுகிறது. கள நிலவரத்தைவிட, தங்களின் சொந்த விருப்பமே
இவர்களிடம் மேலோங்கி இருப்பதாகக் கருத முடிகிறது.
1917 சோசலிசப் புரட்சிக்கு
முந்தைய காலகட்டத்தில் மாருஷ்யர்கள், ஆர்மீனியர்கள், உக்ரேனியர்கள், லித்துவேனியர்கள்,
லாத்வியர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடாக ருஷ்யா இருந்ததைப் போன்றுதான்,
தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், மராட்டியர்கள், பஞ்சாபிகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய
இனங்களை உள்ளடக்கிய நாடாக இந்திய ஒன்றியம் உள்ளது. மொழி, பொருளாதாரம், கல்வி, பண்பாடு
உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்குமுறை பிற தேசிய இனங்கள் மீது
இருந்தபோதிலும், பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்காக செயல்பட்ட லெனினும், ஸ்டாலினும்
தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து 1912-1914 வாக்கிலேயே மிகச்சரியான வழிகாட்டுதல்களைக்
கொடுத்தனர்.
ருஷ்யாவில் தேசிய
இன ஒடுக்குமுறை இருந்தபோதிலும், ஒவ்வொரு தேசிய இனமும், தேசிய இன விடுதலையை முன்னெடுக்க
வேண்டும் என்று அன்றைய ருஷ்ய கம்யூனிஸ்டுகள் யாரும் அறைகூவல் விடுக்கவில்லை. மாறாக,
தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த அதே
வேளையில், ஒன்றுபட்ட ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை ஐய்க்கியப்படுத்தி, பலப்படுத்தி சோசலிசப்
புரட்சியை நடத்திக் காட்டினர். தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமானது.
1990-களில் பாட்டாளி
வர்க்க நலனைக் கைவிட்டுவிட்டு, முதலாளித்துவ நாடாக ருஷ்யா சிதைவுற்ற பிறகு, மாருஷ்ய
தேசிய இனம் பிற தேசிய இனங்களை ஒடுக்கிய போது, அரசியல் சட்டம் வழங்கிய சுயநிர்ணய உரிமையைப்
பயன்படுத்தி, அமைதியான முறையில் தேசிய இனங்கள் பல்வேறு தேசங்களாகப் பிரிந்து சென்று
தங்களுக்கான தனித்தனி அரசுகளை ஏற்பத்திக் கொண்டன. இங்கே, தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான
கோரிக்கையும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை அல்ல; மாறாத அது அந்தந்த தேசிய இனத்தைச்
சார்ந்த முதலாளித்துவத்தை மீட்டெடுத்த முதலாளிகளின் கோரிக்கையாகும் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்.
நம் கண்முன்னே மிகச்சரியான
ருஷ்ய அனுபவம் இருந்த போதும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையை முன்னெடுப்பதுதான்
முதன்மையானது என சில மார்க்சிய-லெனினியர்கள் பேசுகின்றனர். தேசிய இனங்களின் விடுதலை
பற்றிப் பேசும் இவர்களிடையே சில விசயங்களில் ஒத்த கருத்தும்கூட இல்லை.
இந்தி மொழி பேசும் 'இந்திப் பெருந்தேசிய' இனம்தான் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதாகச் சிலரும், இந்திய–பார்ப்பனிய
ஏகாதிபத்தியம்தான் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதாகச் சிலரும் என வெவ்வேறு வகைகளில் தேசிய
இன ஒடுக்கு முறையை விவரிக்கின்றனர்.
ஸ்டாலின் வகுத்தளித்த
ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய வரையறை,
ஒடுக்கும் ‘இந்திப் பெருந்தேசிய இனத்திற்குப்’ பொருந்துகிறதா என்பது பற்றியோ அல்லது
லெனின் வகுத்தளித்த ஏகாதிபத்தியம் பற்றிய வரையறையின்படி, இந்திய-பார்ப்பனிய ‘ஏகாதிபத்தியம்’
பொருந்துகிறதா என்பது பற்றியோ தெளிவுபடுத்துவதற்கு இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும்,
தனித்தனி மொழி, ஆட்சிப்பகுதி, பொருளாதார வாழ்வு அதற்கேற்ற பண்பாடு நிலவுகிற அதே வேளையில்
வருண-சாதி அடைப்படையிலான மாறுப்பட்ட மன இயல்பும் எல்லா தேசிய இனங்களுக்கிடையிலும் ஊடுருவியிருக்கிறது. இத்தகைய மன இயல்புக்கு அடிப்படையாக இருப்பது பார்ப்பன-சனாதன இந்து
தர்மமாகும். தேசிய இன ஒடுக்கு முறைக்கு இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது
காவி கும்பல்
தேசிய இனங்களின் தனித்தனி
மொழிகளை நசுக்கி இந்தி–சமஸ்கிருத மொழித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு,
மாட்டுக்கறி உணவுத் தீண்டாமை, ஜல்லிக்கட்டுத் தடை என பல்வேறு வடிவங்களில் தேசிய இனங்களின்
மன இயல்பை-பண்பாடுகளை அழித்துவிட்டு, பார்ப்பன சனாதன ஒற்றை இந்துத்துவா பண்பாட்டை–மன
இயல்பை இந்தியாவெங்கும் நிலைபெறச் செய்ய, தேசிய இனங்கள் மீதான ஒடுக்கு முறையை ஏவி வருகிறது
ஆர்எஸ்எஸ் தலைமையிலான காவி கும்பல்.
பன்னாட்டு ஏகபோக நிதிமூலதனத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளும்
தங்களின் சந்தையை விரிவாக்கம் செய்யவும், பலப்பத்தவும், சுரண்டலை விரிவு படுத்தவும்
வேண்டி, தொழிலாளர் சட்டத் திருத்தம்-வேளாண் சட்டத் திருத்தம்-மின்சாரச் சட்டத் திருத்தம்
உள்ளிட்ட எண்ணற்ற சட்டத் திருத்தங்கள், எட்டு வழிச் சாலை, ஜிஎஸ்டி-பண மதிப்பிழப்பு,
ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்பு என பல்வேறு வடிவங்களில் தேசிய இனங்களின் அதாவது மாநிலங்களின்
ஆட்சிப் பகுதிகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அதிகாரங்களைப் பறித்துக்
கொண்டு அவ்விடத்தில் ஒரே இந்தியா, அதற்கேற்ற ஒற்றைப் பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம்
மாநிலங்கள் அதாவது தேசிய இனங்கள் மீது மோடி துணையோடு கார்ப்பரேட் ஒடுக்கு முறையை ஏவி
வருகின்றனர்.
அதானி, அம்பானி போன்ற
கார்ப்பரேட் முதலாளிகள் பார்ப்பன–பனியா பின்புலம் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் ஆர்எஸ்எஸ்
இந்துத்துவா காவி சக்திகளோடு கைகோர்க்கின்றனர்.
காப்பரேட்டுகளும், காவிகளும் ஒரு வீரிய ஒட்டு ரகமாக ஒன்று சேர்ந்து கொண்டு, இந்திய உழைக்கும் மக்கள் மீதும்,
பல்வேறு தேசிய இனங்கள் மீதும் ஏவப்பட்டு வரும் ஒடுக்குமுறையை, அடக்கு முறையை, பாசிசத்தை வீழ்த்துவதுதான் உழைக்கும் மக்களின், பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்டுக்
கிடக்கும் அனைத்து தேசிய இன மக்களின் ஒரே கடமையாகும். அதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சனையாகும்.
எனவே, பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்திய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.
நீண்ட கால நோக்கில், நிதிமூலதன ஆதிக்கக் கும்பலையும் வீழ்த்த வேண்டியிருப்பதால், அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம், தவிர்க்க முடியாமல் சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டி உள்ளது.
தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதனாலேயே ஒவ்வொரு தேசிய இனமும் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தை உடனடியாக பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என லெனினும், ஸ்டாலினும் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக, சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை வலியுறுத்துகிற அதே வேளையில், ஒவ்வொரு ஒடுக்கு முறைக்கும் எதிரானப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கம் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டினர்.
அனைத்து தேசிய இனங்களையும்
சார்ந்த பாட்டாளி வர்க்க ஒருங்கிணைப்பை எந்த அளவுக்குப் பலப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு
அப்போராட்டத்தில் வெற்றியைக் காண முடியும். அதற்கான எடுப்பான உதாரணம்தான் வேளாண் சட்டங்களுக்கு
எதிரான ஒருங்கிணைந்தப் போராட்டம்.
தேசிய இன ஒடுக்கு
முறைக்கு எதிராக நுட்பமான, கரடு முரடான வழிகளிலும் போராட வேண்டும் என்பதை டெல்லிக்கு
எதிரான ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு உணர்த்தி உள்ளது. தேசிய இன. ஒடுக்கு முறைக்கு
எதிரானப் போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் கையில் எடுக்கத் தவறினால், புற்றீசல்கள் போல
‘தமிழ்த் தேசியவாதிகள்’ தோன்றிக் கொண்டேதான் இருப்பர்.
முற்றும்.
தமிழ்மணி
தொடர்புடைய நூல்கள்
1. மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்-ஸ்டாலின்
2. தேசிய இனங்களின் பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-லெனின்
3. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-லெனின்
4. தேசீயக் கொள்கையும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசீயவாதமும்: சில பிரச்சைனைகள்-லெனின்
தொடர்புடைய பதிவுகள்
சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1
திராவிடம்! தொடர் - 2
தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3
தேசம் என்றால் என்ன? தொடர்-5
தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7
சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? தொடர்-8
சுயநிர்ணயம் என்ற சொல்லின் பொருள் என்ன? சட்டரீதியான வரையறைகளிலிருந்து இதற்கு விடை தேடுவதை விடுத்து, உலகம் முழுவதிலும் நடைபெற்று வரும் தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து வரலாற்று–பொருளாதார ரீதியில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருள், மாருஷ்ய நாட்டரசிலிருந்து உக்ரைன், லித்துவேனியா, லாத்வியா போன்ற தேசிய இனங்கள் அல்லது இந்திய ஒன்றியம் என்கிற நாட்டரசிலிருந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து போன்ற தேசிய இனங்கள், அரசியல் ரீதியில் பிரிந்து தங்களுக்கான சுதந்திரமான தேசிய அரசு ஒன்றை அமைத்தல் என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது.
கணவன்-மனைவி இருவருக்குமான
விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பது எப்படித் தவறாகாதோ, அது போன்றுதான் தேசிய இனங்கள்
பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதும் தவறாகாது. கணவன்-மனைவி இருவருக்குமிடையே
பிணக்குகள் தோன்றிய உடனேயே அவர்கள் பிரிந்து சென்று விடுவதில்லை. மாறாக, பிணக்குகளுக்கான
காரணங்களைக் குறிப்பிட்ட குடும்ப வாழ்க்கையைப் பருண்மையாக ஆய்வு செய்த பிறகு, பிணக்குகளை
தீர்ப்பதற்கு வேறு வழியே இல்லை என்கிற சூழ்நிலையில்தான் அவர்கள் பிரிந்து வாழ்வதற்கு
விவாகரத்துக் கோருகிறார்கள். அது போன்றுதான் தேசிய இனப்பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனையை
ஆராயும் போது அதை, அதன் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் ஆராய்ந்து, அதன் பிறகே பிரிந்து
செல்வது பற்றி தீர்மானிக்க வேண்டும்.
கணவன் மனைவியையோ அல்லது
மனைவி கணவனையோ அடக்கி ஒடுக்கும் ஒரு குடும்ப சூழ்நிலையில், அவர்கள் சேர்ந்து வாழலாமா? அல்லது பிரிந்து விடலாமா? குடும்ப நிலைமைகளைப் பாரதூரமாகப்
பரிசீலிக்காமல் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து
விடுவதா? ‘இரண்டில் ஒன்று பதில் சொல்!’ என்று கேட்பது எப்படி
அபத்தமானதோ அது போன்றுதான் தேசிய இனப் பிரச்சனையில் கேட்பதும்.
கணவனின் நலன் அல்லது
மனைவியின் நலன் எதுவாக இருப்பினும், மொத்தத்தில் அது குடும்ப நலனுக்கு உட்பட்டதுதான்
கணவன்-மனைவி இருவரும் பிரிந்து செல்லும் விவாகரத்து உரிமை. அது போல, பாட்டாளி வர்க்கத்துக்கும்,
வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் கீழ்ப்பட்டவைதான் தேசிய இனங்கள் பிரிந்து செல்வது குறித்த
பிரச்சனையும்.
கணவன் மனைவி இருவரும்.
பிரிந்து செல்வதில் முடியுமா அல்லது சேர்ந்து வாழ்வதில் முடியுமா எனபதை எப்படி முன்கூட்டியே
யாரும் சொல்ல முடியாதோ அது போலத்தான் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து
பிரிந்து போவதில் முடியுமா அல்லது சம அந்தஸ்து பெற்று சேர்ந்திருப்பதில் முடியுமா என்பதை
முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது.
முடிவு எதுவானாலும்,
தனது மேம்பாட்டுக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது. ஆனால்,
முதலாளித்துவ வர்க்கத்துக்கோ, பாட்டாளி வர்க்க நலனைவிட தனது நலனை முன்னிறுத்தி, பாட்டாளி
வர்க்க நலனுக்கான மேம்பாட்டை தடை செய்வதுதான்
முக்கியம். எனவேதான், பாட்டாளி வர்க்கமானது, எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சாதகமாக இருப்போம்
என்று உறுதி எதையும் அளிக்காமல், இன்னொரு தேசிய இனத்துக்குப் பாதகமாக எதையும் செய்வோம்
என்றும் கூறாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன்
மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது. பாதகமாக எதையும் செய்ய மாட்டோம் என்று உறுதி அளிப்பதைத்தான் ‘எதிர்மறை’
கோரிக்கை என்கிறோம்..
சாத்தியமான தீர்வுகள்
அனைத்திலும் மிகவும் ஜனநாயகமானத் தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு நடைமுறையில் சிறந்த உத்தரவாதத்தை
இது ஒன்றுதான் அளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கும் இந்தகையதொரு உத்தரவாதம்தான் தேவை.
விவாகரத்து உரிமையில்
பிரிந்து வாழ்வதற்கு உத்தரவாதம் இருப்பதால்தான் ஒருவர் நலனை மற்றொருவர் பறிக்காமல்
அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றாக வாழ முடிகிறது. தேசிய இனங்களுக்கும் இது சாலப் பொருந்தும்தானே?
விவாகரத்து உரிமை,
குடும்பத்தைத் துண்டு படுத்துவதாகும் என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், ஆண்களின்
சிறப்பு உரிமைகளையும், பெண்களை ஆண்கள் ஒடுக்குவதையும் ஆரிக்கும் பிற்போக்காளர்கள்,
நயவஞ்சகர்கள் ஆவர். விவாகரத்து உரிமையினால் குடும்பங்கள் துண்டுபட்டுப் போவதில்லை;
மாறாக நாகரிக சமுதாயத்தில் அது ஒன்றுதான் ஜனநாயக அடிப்படையிலான சாத்தியமான நிலையான,
குடும்ப உறவுகளை வலுப்பத்தும் ஒன்றாகும்.
சுயநிர்ணய உரிமை சுதந்திரத்தை,
அதாவது பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதானது நாட்டைத் துண்டாடுவதற்குத் தூண்டிவிடுவதாகும்
என்று குற்றம் சாட்டுவது நயவஞ்சகமானது, முட்டாள்தனமாது. விவாகரத்து சுதந்திர உரிமையை
ஆதரிப்பவர்கள், குடும்ப உறவுகளைக் கெடுப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது எந்த அளவுக்கு
முட்டாள்தனமானதோ அந்த அளவுக்கு முட்டாள்தனமானது தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய
உரிமையை எதிர்ப்பது. உண்மையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது என்பது
ஒடுக்கும் தேசிய இனத்திற்கான சிறப்புச் சலுகைகளை ஆதரிக்கும், ஜனநாயகத்துக்கு முரணான
செயலாகும்.
எல்லாத் தேசிய இனங்களுக்கும்
பிரிந்து போகும் உரிமை உண்டு என்று சொல்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம்
பிரிந்து போவதற்குச் “சரி” அல்லது “இல்லை” என்று தெளிவாகச் சொல் என்று கேட்பதற்கு எதிராக
நிற்கிறது பாட்டாளி வர்க்கம். உதாரணமாக, இலங்கையில் தமிழீழம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர்
தனியாகப் பிரிந்து செல்லலாமா? கூடாதா?. “இரண்டில் ஒன்று தெளிவாகச்
சொல்!” என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம்.
சம அந்தஸ்தும், தனக்கான
தனி தேசிய அரசு ஒன்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் ஒரு தேசிய இனத்திற்கு வேண்டும்
என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளிகள்
கூட்டாக இணைந்திருப்பதை மிகவும் முதன்மையானதாகக் கருதிப் போற்றுகிறது பாட்டாளி வர்க்கம்.
ஒடுக்கப்பட்ட தேசிய
இனத்தின் முதலாளி வர்க்கம், ஒடுக்கும் தேசிய இனத்தை எதிர்த்து எந்த அளவுக்குப் போராடுகிறதோ
அந்த அளவுக்கு, அப்போராட்டத்தை ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகப்
பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும்; ஏன் என்றால் ஒடுக்குமுறைக்கு சிறிதும் விட்டுக்
கொடுக்காத தீவிரமான எதிரி பாட்டாளி வர்க்கம் மட்டும்தான்.
பல்வேறு தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில், பெரிய
தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், தனிச் சலுகைகள் எதையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்காது.
வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுவதற்கு, அத்தகைய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும்
சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.
ஒடுக்கும் பெரிய தேசிய
இனத்துக்கான சிறப்பு உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் எதிர்த்தும், அனைத்து தேசிய இனங்களும்
தங்களுக்கான தேசிய அரசுகளை அமைத்துக் கொள்ளச் சம உரிமை உண்டு என்பதை ஆதரித்தும் அன்றாடப்
பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளை பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில்தான்
அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் சம அந்தஸ்துடன் ஒரு கூட்டணியை அமைத்துக்
கொள்ள முடியும்.
உண்மையில் இந்தப்
பிரச்சாரம் மட்டும்தான் மக்களிடையே சோசலிச உணர்வை
ஏற்படுத்தும். பல தேசிய இனங்கள் இருக்கும் ஒரு நாட்டில், அமைதி நிலவுவதற்கும்,
தேசிய இனங்கள் மிகவும் அமைதியாகத் தனித் தனி அரசுகளாகப் பிரிவதற்கும் அதிக வாய்ப்புகளை
மேற்கண்ட பிரச்சாரம் மூலம் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். தேசிய இனப் பிரச்சனையில்
பாட்டாளி வர்க்கத்தின் ஒரே கொள்கை இதுதான்.
எல்லா வகையான தேசியவாதத்தையும்,
குறிப்பாக ஒடுக்கும் தேசிய இனத்தின் தேசிய வாதத்தை எதிர்த்துப் போராடுவது (1) மற்றும்
பொதுவாக எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமன்றி, அரசு
அமைப்பதற்கான, சம உரிமைகளை, அதாவது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை, பிரிந்து போகும்
உரிமையை ஏற்றுக்கொள்வது (2) ஆகியவைதான் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள இரண்டு கடமைகளாகும்.
அதே சமயத்தில் அனைத்து
விதமான தேசிய வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டி, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின்
ஐக்கியத்தை, பாட்டாளி வர்க்க அமைப்புகளின் ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதும் பாட்டாளி
வர்க்கத்தின் கடமையாக உள்ளது. இந்த அமைப்புகளை நன்கு நெருக்கமான சர்வதேச பொது நிறுவனமாக இணைப்பதும் முக்கியக் கடமையாக உள்ளது.
“எல்லா தேசிய இனங்களுக்கும்
சம உரிமைகள்; தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை; எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த
தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமை”-இதுதான் மார்க்சியம் போதிக்கும் செயல் திட்டமாகும்.
தாெடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1
திராவிடம்! தொடர் - 2
தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3
தேசம் என்றால் என்ன? தொடர்-5
தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7
Sunday, 7 November 2021
வேலூரில் நவம்பர் புரட்சி விழா!
விலைவாசி உயர்வு, அரசு மற்றும் பொதுத்துறைகள் தனியாருக்கு, ஆலை மூடல்-ஆட்குறைப்பு, வேலையின்மை, சுற்றுச்சூழல்-சுகாதாரக் கேடுகள், காசு உள்ளவனுக்கே கல்வி மற்றும் மருத்துவம், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வரதட்சணை, ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சாதி ரீதியிலான வன்கொடுமைகள், மத-மொழி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் என மோடி ஆட்சிக் காலத்தில் இந்திய மக்கள் கடும் துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்னல்களிலிருந்து தங்களுக்கு விடுதலை கிடைக்காதா என்ற ஏக்கப் பெருமூச்சோடு மக்களின் வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.
ருஷ்ய மக்களின் துன்ப துயரங்களுக்கு முடிவுகட்டி இம்மண்ணில் ஒரு பொன்னுலகைப் படைத்த 1917 நவம்பர் 7 சோசலிசப் புரட்சியைப் போன்றதொரு புரட்சியை நோக்கி பயணிப்பதன் மூலமாகத்தான் மக்கள் தங்களது துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும்.
சோசலிசம்தான் உழைக்கும் மக்களுக்கான ஒரே மாற்று என்றாலும்கூட கூட, இன்றைய சூழலில் இந்திய மக்களுக்குப் பெரும் சவாலாக இருக்கும் கார்ப்பரேட்-காவி பாசிச மோடி கும்பலை வீழ்த்துவதே மக்களின் உடனடிக் கடமையாக உள்ளது. அதற்காக, மோடிக்கு எதிராகச் செயல்படும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அறிவுத்துறையினர் ஓர் அணியில் சேர வேண்டும். இல்லையேல் காவிகள் நம்மை கபளீகரம் செய்வதிலிருந்து தப்பிக்க முடியாது. ஆம்! இன்றைய தேவை மோடிக்கு எதிரான ஒரு கூட்டமைப்பு. சாத்தியப்பட்ட எல்லா முனைகளிலும் தாக்குதல் நடத்தி மோடியை வீழ்த்துவதுதான் இன்றைய உடனடிக் கடமை. அதற்கான விதையை ஊன்றும் விதமாக மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அமைப்புகள் நவம்பர் புரட்சி விழாவை தமிழகமெங்கும் கொண்டாடியது. அதன் ஒருபகுதியாக வேலூரில் நடைபெற்ற நவம்பர் புரட்சி விழா குறித்த ஒரு தொகுப்பு.
07.11.2021 மாலை, வேலூர் மாநகரில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி தலைமையில் நவம்பர் புரட்சி விழா எழுச்சியோடு நடைபெற்றது.
மக்களின் இன்றைய அவல நிலை குறித்து மக்கள் கலை இலக்கிய கழகத் தோழர் இராவணன் அவர்களும், சங்கமாய் சேருவதன் அவசியம் குறித்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் செல்வம் மற்றும் சேட்டு ஆகியோர் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
அடிமைத்தனம் மற்றும் மூட நம்பிக்கைகளை கைவிட்டு சமூக விடுதலைக்கான போராட்டத்தில் பெண்கள் பங்கேற்பதன் அவசியம் குறித்து வழக்கறிஞர் பாலு அவர்களும், மீண்டும் ஒரு முறை பாஜக ஆட்சிக்கு வருமேயானால் 2025 ல், ஆர்.எஸ்.எஸ்ஸின் நூற்றாண்டு விழாவின் போது இந்து ராஷ்டிரத்தை அறிவிக்கக் கூடும் என்பதால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதை ஒரே லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தோழர் பாலா அவர்களும், சோசலிசத்தை நேசித்த விடுதலைப் போரின் விடிவெள்ளி பகத்சிங்கின் வரலாற்றை பதிவு செய்து தோழர் விசு அவர்களும், நேசம் தலைப்பில் தோழர் இரமணி அவர்களும் உரையாற்றினர்.
அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளில் நலனைக் காக்கவும், பார்ப்பன மேலாதிக்கத்தை நிறுவவும் மேற்கொள்ளப்படும் மோடி அரசின் கார்ப்பரேட்-காவி பாசிசத்தை முறியடிக்க மோடி கும்பலுக்கு எதிராகச் செயல்படும் அனைவரும் ஓரணியில் ஐக்கிய முன்னணியாய் அணிசேர்வதன் அவசியத்தை வலியுறுத்தி தொழிற்சங்க முன்னோடி தோழர் மோகன்குமார் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
“லெனினின் ஏன் தேவைப்படுகிறார்?” என்ற தலைப்பில் மகஇக தோழர் முத்துராமன் கவிதை வாசிக்க, ‘அம்மா இல்லாம யாருமே இல்ல!’ , ‘சம்மதமா? சம்மதமா?’, 'சாமக்கோழி கூவும் நேரத்திலே’, ‘ஊருக்கு ஊரு சாராயம்’, ‘நாடு முன்னேறுதுங்குறான்’, ‘மனுசங்கடா! நாங்க மனுசங்கடா!’, ‘டெல்லி சலோ! டெல்லி சலோ!’, உள்ளிட்ட பாடல்களை கலைக்குழு தோழர்கள் பாட, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியைச் சார்ந்த தோழர் சரவணன் நன்றியுரை கூற விழா இனிதே நிறைவு பெற்றது.
தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்
விழா காட்சிகள்
காலையில் சங்கக் கிளைகளில் கொடி ஏற்றி மக்களுக்கு இனிப்பு வழங்கி நவம்பர் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.
Thursday, 22 July 2021
பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!
மார்க்சியம் பேசுவோர் மத்தியில் அதிகமாகப் புழங்கும் சொற்களில் ‘அறிவுஜீவிகள்’ (intellectuals) என்ற சொல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. ஆனால் தோழர்களுக்கிடையில் பிணக்குகள் எழும்போது இச்சொல் படாதபாடுபடுகிறது.
பூவுலக மாந்தர்கள் அனைவருமே, தங்கள் வாழ்வியில் தொடர்பானவற்றில் குறிப்பிட்ட அளவு அறிவுத் திறனைப் பெற்றிருந்தாலும், சிலர் மட்டுமே ஒரு குறிப்பிட்ட துறையிலோ அல்லது பல்வேறு துறைகளிலோ ஆழமானப் புரிதலையும், அறிவையும் பெற்றிருக்கின்றனர். இவர்கள்தான் ‘அறிவுஜீவிகள்’ என்று கருதப்படுகின்றனர். தமிழும் வடமொழியும் கலந்த இச்சொல்லைவிட அறிவாளிகள் அல்லது அறிஞர்கள் என்று சொல்வதே சாலப் பொருந்தும். அறிவாளிகள் என்ற சொல் பொருத்தமான சொல் என்றாலும், ”மற்றவர்கள் எல்லாம் முட்டாள்களா?” என்று குதர்க்கம் செய்ய வாய்ப்பு இருப்பதால் இத்தகையோரை அறிஞர் (intellectual) / அறிஞர்கள் (intellectuals) என்றே இனி பயன்படுத்துவோம்.
“நடுநிலைப் பள்ளி அல்லது அதற்கும் மேற்பட்ட கல்வி பயின்றோர், மற்றும் அதற்கு இணையான கல்வியைப் பயின்றோர் அனைவரும் அறிஞர்கள் என்றே அறியப்படுகின்றனர். நடுநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், தொழிற்சார் பிரிவினர் (professionals), பொறியாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் (technicians) ஆகிய அனைவரும் இதில் அடங்குவர். இவர்களில் நடுநிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றனர்.” அறிஞர்கள் பற்றிய மாவோவின் வரையறை இது.
மேற்கண்ட அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட துறையில் மாற்றமோ, வளர்ச்சியோ அல்லது சமூக மாற்றமோ, புரட்சியோ சாத்தியமில்லை. அதனால்தான், “புதிய சீனாவை கட்டியமைப்பதற்கான போராட்டத்திற்கு வலு சேர்க்கவும், இலட்சக் கணக்கான உழவர்களை அணி திரட்டவும், புரட்சிகரப் பண்பாட்டு இயக்கத்தை வளர்த்தெடுக்கவும், புரட்சிகர ஐய்க்கிய முன்னணியை விரிவுபடுத்தவும் அறிஞர்களைப் பெருமளவில் கட்சியில் இணைக்க வேண்டும். அறிஞர்களின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை” என்கிறார் மாவோ.
“எனவே, கடினமாகப் பணிபுரிகிற, துன்பத்தைத் தாங்கக்கூடிய அறிஞர்கள் அனைவரையும் பெரும் அளவில் சேர்க்க வேண்டும். பல்வேறு தளங்களில் அவர்கள் வேலை செய்வதற்கு உதவ வேண்டும். கட்சியில் இணையத் தகுதி பெறாதவர்கள் அல்லது விரும்பாதவர்களோடு நல்லுறவைப் பேண வேண்டும். அவர்களின் பணிகளுக்கு உதவ வேண்டும்”.
“எதிரிகளால் அனுப்பப்படும் ஊடுருவல்காரர்கள், விசுவாசம் இல்லாதவர்களைத் தேடிக் கண்டுபிடித்து வெளியேற்ற வேண்டும். ஆனால் நியாயமான, பற்று கொண்ட அறிஞர்கள் மீது ஐயம் கொள்ளக் கூடாது”.
“அறிஞர்கள் அனைவருக்கும் உகந்தப் பணியை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு அரசியல் கல்வி மற்றும் வழிகாட்டுதல் கொடுப்பதன் மூலம் அவர்கள் தங்களது பலவீனங்களைக் களைந்து கொள்வதோடு, புரட்சிகரத் தன்மையை வளர்த்துக் கொண்டு பழைய கட்சி உறுப்பினர்கன், உழவர்கள் மற்றும் தொழிலாளர்களோடு ஐய்க்கியப்படுவார்கள்”.
“நமக்கு ஆதரவாக உள்ள, அதே வேளையில் கட்சியில் சேராத அறிஞர்களை பண்பாட்டு இயக்கத்திலும், ஐயக்கிய முன்னணிப் பணியிலும் இணைக்க வேண்டும்”.
“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”.
அறிஞர்கள் குறித்த மாவோவின்
மேற்கண்ட வழிகாட்டுதலை இந்தியப் பொதுவுடமை இயக்கங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்
என்பதே புரட்சியை நேசிப்போரின் அவாவாகும்.
தமிழ்மணி
Ref: “பெரும் எண்ணிக்கையில் அறிஞர்களைச் சேர்ப்பீர்!” - மாவோ தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், தொகுதி-2, விடியல் பதிப்பகம்
தொடர்புடைய பதிவுகள்
Friday, 23 April 2021
லெனின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள்!
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளால் மகத்தான ரசிய சோசலிசப் புரட்சிக்கு வித்திட்ட பாட்டாளி வர்க்கத்தின் மாபெரும் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் 151-வது பிறந்த நாள் விழா 22.04.2021 அன்று கொண்டாடப்பட்டது.
சென்னை, மகஇக
.jpeg)
.jpeg)
























































