Friday 24 December 2021

குமரனுக்கும் இந்தக் கிழவன்தான் இனி கைத்தலம்!!

எந்த ஒரு கலைஞனும், ஒரு சமூகத்தை அதன் முழுமையான வடிவில் காண்பதில்லை. அதனால் அவனது படைப்புகளில் குறைகள் இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் உண்மையைத் தேடுபவர்கள் அந்தக் குறைகளைக் கண்டு அந்தக் கலைஞனை ஒதுக்கி விடுவதில்லை. மாறாக அந்தக் கலைஞன் விட்ட இடத்திலிருந்து விடுபட்ட உண்மைகளைத் தேடுகிறார்கள். அதானே அறிவுடைமை! அதனால்தானே கலைகள்  ஒவ்வொரு நாளும் வளர்ச்சி அடைகின்றன. இந்தக் கூற்று கலைகளுக்கும் கலைஞனுக்கும் மட்டுமானதல்ல, அனைவருக்குமானதுதான்.

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு, பெண் விடுதலை, சாதிய ஏற்றத்தாழ்வு மற்றும் தீண்டாமை உள்ளிட்ட அநீதிகள், பார்ப்பனிய சனாதன எதிர்ப்பு, சுயமரியாதை, கல்வி - வேலை வாய்ப்புகளில் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கு உரிய பங்கீட்டைப் பெறும் சமூக நீதிக் கோட்பாடு, சமதர்ம சமுதாயம் என பல்வேறு தளங்களில் தடம் பதித்தவர் தந்தை பெரியார். 

இயக்கவியல் பொருள் முதல் வாதத்தைக் 'கரைத்துக் குடித்தவர்களைக்' காட்டிலும் அவர் பொதுவுடைமையை அதிகமாகவே நேசித்தார் என்பதை பெரியாரை வாசித்தாலே புரிந்து கொள்ள முடியும். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்குபவர்களால் நிச்சயமாக உண்மையைத் தேடிச் செல்ல முடியும். மாறாக அவர் விட்டதை மட்டும் பேசிக் கொண்டிருந்தால் முட்டுச்சந்தில் முட்டிக் கொண்டுதான் நிற்க வேண்டும். வரலாறு கற்றுத் தரும் பாடம் இதுதான்.

இதை மிகச் சரியாகப் புரிந்து கொண்டதால்தான் இன்று பொதுவுடைமையாளர்களும் பெரியாரைப் போற்றி புகழ்வதோடு அவரது நினைவையும் நெஞ்சிலேந்துகிறார்கள். 

பெரியாரின் நாற்பத்தி எட்டாவது நினைவு நாளான இன்று காலை வேலூர் மாவட்ட மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தோழர் செல்வம், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி ஆகியோர் பெரியாரை நினைவு கூர்ந்தனர். வேலூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

கையில் மாலையுடன், ஒரு பேனரை பிடித்துக்கொண்டு பேருந்து நிறுத்தத்திலிருந்து பெரியார் சிலையை நோக்கி, சுமார் 25 பேர் ஒரு 100 மீட்டர் தூரம் நடந்து சென்றதையே ஏதோ அனுமதியில்லாமல் பேரணி நடத்தி சட்டத்தை மீறி விட்டதாக வேலூர் போலீசார் சற்றுநேரம் களேபரம் செய்து விட்டனர். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள், வளர்ப்பு  அப்படித்தானே இருக்கும் என்று சொல்வதைத் தவிர?






தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம் வேலூர் மாவட்டம்



No comments:

Post a Comment