Showing posts with label அம்பேத்கர். Show all posts
Showing posts with label அம்பேத்கர். Show all posts

Tuesday, 19 September 2023

உங்களுக்குக் கோபம் வராதா?

மார்க்சிய கோட்பாடு பேசக்கூடியவர்கள், பெரியார்-அம்பேத்கர் இருவரின் சிந்தனைகளைப் பேசக் கூடியவர்கள், தமிழ்த் தேசியம் பேசக் கூடியவர்கள், அனைவருமே இன்று சனாதனத்தை எதிர்த்துப் பேசுகின்றனர், முடிந்த அளவு போராடவும் செய்கின்றனர். 


ஆனால், இவர்கள் குட்டி குட்டியாய் பல நூறு அமைப்புகளாய் சிதருண்டுக் கிடக்கின்றனர். அற்பக் காரணங்களுக்காக இவர்கள் பிளவுபடுவது அன்றாட வாடிக்கையாக  மாறிவிட்டது. இத்தகையப் பிளவுகளின் போது, குட்டி குட்டி அமைப்புகளில் உள்ள கீழ்மட்டத் தொண்டர்களின் அரசியல் புரிதலின்மை காரணமாகவும், பழக்க தோசத்தாலும், உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் சாதியப் பாசத்தாலும், தங்களுக்கு ஏற்ற ஒரு அணியில் இவர்கள் ஐக்கியமாகி விடுகின்றனர். 

தங்களுடைய கோட்பாடும் நடைமுறையும்தான் ஆகச்சிறந்தது என்று இவர்கள் ஒவ்வொருவரும் கருதிக் கொள்கின்றனர். நாலு பேரைக் திரட்டி, ஒரு ஆர்ப்பாட்டம் நடத்திவிட்டால், சமூக ஊடகங்களில் நாலு வரிக்கு ஒரு மீம்சை போட்டுவிட்டால், அதற்கு நாலு லைக்கும் வந்துவிட்டால், தமிழ்நாடே இவர்கள் பின்னால் இருப்பது போலக் கனவுலகில் மிதக்கின்றனர். 

ஆனால், பெரும்பாலான குட்டி குட்டி அமைப்புகளையும் அவர்களின் கோட்பாடுகளையும் தமிழ்நாட்டுக் குடிகளில் சில நூறு பேருக்குக்கூட தெரியாது என்பதே எதார்த்தம். 

ஐம்பது அமைப்புகள் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினால் நூறுபேரைக்கூட திரட்ட முடியவில்லை. இன்றைய அரசியல் சூழலில் நாலு பேர்கூட இல்லாதவர்களுக்கெல்லாம் எதற்குத் தனி இயக்கம்? கட்சி? 

எனவே, ஏற்கனவே ஒன்றாய் இருந்து பிரிந்து போன குட்டி குட்டி இயக்கங்கள் தங்களை சுயபரிசீலனை செய்து, கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக முன்வைத்துப் பேசி, மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இத்தகைய அமைப்புகளில் உள்ள ஒரு சில பிழைப்புவாதிகள் இதற்கு முட்டுக் கட்டை போடக் கூடும். இவர்கள் இயக்கத் தலைமையாகக்கூட இருக்கலாம். அத்தகையோரை இனம் கண்டு ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒன்றிணைவதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.

முதல் கட்டமாக,

மார்க்சியம் பேசக்கூடிய கட்சிகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணையவும்,

அம்பேத்கர்-பெரியார் சிந்தனைகளைப் பேசக் கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், 

தமிழ்த் தேசியம் பேசக்கூடிய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணையவும், வேண்டும். 

ஓராண்டு காலத்திற்குள் இது நடந்தால் நாட்டுக்கு நல்லது. அதற்கு அடுத்த கட்டமாக மேற்கண்ட அமைப்புகள் அனைத்தும் ஒரே அமைப்பாக ஒன்றிணைய வேண்டும். 

இதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.  இத்தகைய கட்சிகள், இயக்கங்களின் பிரதிநிதிகள் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை ஒவ்வொரு மாவட்டத்திலும், உடனடியாக உருவாக்கி வெளிப்படையான திறந்த விவாதங்களை கீழிருந்து முன்னெடுக்க வேண்டும்.

இது இன்றைய காலத்தின் கட்டாயம். மார்க்சை, பெரியாரை, அம்பேத்கரை, தமிழ் தேசியத்தை நேசிக்கின்ற ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து செயலாற்ற வேண்டும்.

கோபம் உங்களுக்குள் இருக்கக் கூடாது. மாறாக உங்களுடைய கோபம் சனாதனத்திற்கு எதிரானதாக, சுரண்டல் ஒடுக்குமுறைக்கு எதிரானதாக இருக்க வேண்டும்.

இத்தகைய கோபக்காரர்கள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. இல்லையேல் வரலாறு நம்மை மன்னிக்காது

தமிழ்மணி

Thursday, 31 August 2023

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீண்டகால அடிப்படையில் சமூக மாற்றம், புரட்சி, அதற்கான கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகள், நிலவுகின்ற அரசியல் சூழலில் பாசி எதிர்ப்பு மற்றும் அதற்கான ஐக்கிய முன்னணி அல்லது மக்கள் முன்னணி பற்றி இன்று எண்ணற்ற அமைப்புகள் பேசி வருகின்றன.

தங்களுடைய அமைப்புகளின் கோட்பாடு மற்றும் நடைமுறை, உண்மையில் அறிவியல் பூர்வமானதா என்பதைப் புரிந்து கொள்கிற ஆற்றல் இந்த அமைப்புகளில் உள்ள அணிகளில் பலருக்கும் இல்லை என்றாலும், தங்களுடைய அமைப்பு மட்டும்தான் மிகவும் சரியானது என நம்பி இவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாகக் களமாடி வருகின்றனர். 

மேற்கண்ட இயக்கங்களின் நீண்ட காலத் திட்டம் மற்றும் உடனடித் திட்டம் குறித்த ஆவணங்களைப் பரிசீலித்தால் மட்டுமே அத்தகைய அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியும். ஒரு சில அமைப்புகளைக் தவிர, பெரும்பாலான அமைப்புகளுக்கு அத்தகைய ஆவணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

நிற்க, இன்று வெளிப்படையாகச் செயல்படுகின்ற சில அமைப்புகளின் தலைவர்கள், திடீர் என்று வானத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல; மாறாக, ஏதோ ஒரு தாய் அமைப்பிலிருந்து, சில கருத்து வேறுபாடுகளுக்காக வெளியே வந்து, தனி அமைப்பு கண்டவர்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் எந்த அமைப்புகளைக் குறைகூறிவிட்டு இவர்கள் வெளியே வந்தார்களோ, அந்த அமைப்புகளோடு இன்று கூட்டு நடவடிக்கை வேறு! இது கேளிக்கூத்தாக இல்லையா என்பதை வெளியே வந்தவர்களும் பரிசீலிப்பதில்லை; தாய் அமைப்பினரும் பரிசீலிப்பதில்லை. இப்படி நான் சொல்வதால், இதை கலைப்பு வாதம் என்றுகூட இவர்கள் முத்திரை குத்தக்கூடும். 

கனவுலகில் தலைவர்கள்

இப்படி, தாய் அமைப்பை விட்டு வெளியே வந்த பிறகு,  புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்ட இவர்களில் ஒரு சிலர், மார்க்ஸ்-லெனின்-பெரியார்-அம்பேத்கர் ரேஞ்சுக்குத் தங்களை நினைத்துக் கொள்கின்றனர். நினைக்கட்டும், அது அவர்களது உரிமை. ஆனால், ஒரு பெயர்ப் பலகை அமைப்பை வைத்துக் கொண்டு, இவர்கள் ஆடுகின்ற ஆட்டம்தான் சகிக்க முடியவில்லை. 

தாய் அமைப்பின் கோட்பாடு-நடைமுறையை குறைகூறி விட்டு வெளியே வந்த இவர்களது புதிய கோட்பாடும், நடைமுறையும் மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிற அளவுக்குப் போதியத் தரவுகளோடு இருப்பதில்லை. கோட்பாடே இல்லாமல் நடைமுறையில் இருப்பவர்களும் இங்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

தாய் அமைப்பை அவதூறு செய்துவிட்டு வெளியேறி, புதிதாக ஒரு அமைப்பை உருவாக்கிக் கொண்டு ,கோட்பாட்டுத் தெளிவையும் பெறாமல், தாய் அமைப்பு என்ன செய்ததோ அதையே இவர்களும் தொடர்ந்து செய்வது என்பதுதான் நூற்றுக் கணக்கில் உள்ள உதிரி அமைப்புகளின் தற்போதைய நிலைமை. 

புகழ் நாட்டம்

நக்சல்பரி என்ற சொல்லை பல அமைப்புகள் கைவிட்ட நிலையில், இரகசிய கட்சி-ஆயுதப் புரட்சி என்ற சொல்லாடல்களை சில அமைப்புகள் கைவிட்டு தேர்தல் அரசியலில் நேரடியாக பங்கேற்கும் நிலையில்-இதை நான் குறையாக இங்கே குறிப்பிடவில்லை- முற்போக்கு இயக்கங்கள் மீதான அரசின் அடக்குமுறை முன்பு போல் இன்று இல்லை என்பதாலும், சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் தனிநபர் புகழ் நாட்டம் காரணமாகவும், இத்தகையோர் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகமாக அவதாரம் எடுத்துள்ளனர். இனியும் புதிய அவதாரங்கள் வரக்கூடும். மக்களின் பின்தங்கிய அரசியல் புரிதல் காரணமாகவும், தாங்கள் சார்ந்த சாதி-மத-இன-மொழி அடிப்படையிலான ஈர்ப்பு காரணமாகவும் இத்தகையோரை சிலர் ஆதரிப்பதுதான் இவர்களின் பலம்.

உண்மையிலேயே வாய்சவடால் அடிக்கும் பல பெயர்ப்பலகை  உதிரி அமைப்புகளை அம்பலப்படுத்தி, மக்களிடமிருந்து தனிமைப் படுத்த வேண்டும். ஆனால், இன்றைய பாசிசச் சூழலில் அதைச் செய்வது, பாசிச சக்திகளுக்கு வலு சேர்க்கும் என்பதால் அடக்கி வாசிக்க வேண்டி உள்ளது. இருந்தாலும், இந்த உதிரி அமைப்புகளின் நீண்ட கால-உடனடித் திட்டம் குறித்தவைகள் மீது அணிகளிடையே விவாதம் நடத்தப்பட வேண்டும். இல்லையேல் மார்க்சியத்தின் பெயராலும், தமிழ் தேசியம் என்ற பெயராலும், அம்பேத்கர்-பெரியாரின் பெயராலும் இன்று நூற்றுக்கணக்கில் செயல்படும் உதிரி அமைப்புகள், நாளை மேலும் பெருகினால் அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி எதிரிகள் பலம்பெறவே உதவும்.

தமிழ்மணி

Tuesday, 13 September 2022

மனுதர்ம சாஸ்திரத்தை ஏன் எரிக்க வேண்டும்? தொடர்-1

செப்டம்பர் 17, 2022, பெரியார் பிறந்த நாளில், மனுதர்ம, வேத-ஆகம எரிப்புப் போராட்டத்தை திருச்சி திருவரங்கத்தில் நடத்தப் போவதாக மக்கள் அதிகாரம் அமைப்பு அறிவித்துள்ளது.

சுமார் 95 ஆண்டுகளுக்கு முன்பு பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களும் மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டத்தை நடத்தியுள்ளார். எப்பொழுதெல்லாம் சனாதன தர்மத்தை நிலை நாட்டுவதற்கு பார்ப்பனியம் மிகுந்த பிரயத்தனம் செய்கிறதோ, அப்பொழுதெல்லாம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் முதல் இன்று வரை மனுதர்ம சாஸ்திர எரிப்புப் போராட்டம் என்பது நடத்தப்பட்டே வருகிறது.

சனாதன தர்மம் என்றால் என்ன?

இன்று, இந்து மதம் என்று அழைக்கப்படும் ஒன்றுதான் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு சனாதன மதம் என்று அழைக்கப்பட்டு வந்தது. சனாதனம் என்றால் மாறாதது, நிலையானது என்று பொருள். தர்மம் என்றால் வாழ்வியல் முறை மற்றும் கடமைகளைக் குறிப்பதாகும். எளிமையாகச் சொன்னால் இந்து மதத்தில் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் கடமைகளையும் குறிப்பதுதான் சனாதன தர்மம் ஆகும்.

இந்திய நாட்டில் வாழுகின்ற ஒரு இந்தியக் குடிமகன் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவனுடைய கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பது குறித்து எப்படி "இந்திய அரசியலமைப்புச் சட்டம்" வரையறுக்கிறதோ, அது போல ஒரு இந்து எப்படி நடந்து கொள்ள வேண்டும்?, அவனது கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பது குறித்து இந்து மதச் சட்டம் வரையறுக்கிறது. மனுதர்ம சாஸ்திரம்தான் அந்த இந்து மதச் சட்டம். மனுதர்ம சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தியாவின் "புதிய அரசியலமைப்புச் சட்டத்தை" நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் ஏற்கனவே தயாரித்து விட்டதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரு மக்கள் கூட்டம் சேர்ந்து ஒன்றாக வாழும் பொழுது, அந்தக் கூட்டத்தைச் சார்ந்தவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் என்ன?, அவர்களுக்கான கடமைகள் என்ன?, உரிமைகள் என்ன?, என்பதை அந்த மக்கள் கூட்டம் வரையறுத்துக் கொள்வதில் தவறேதுமில்லை. உலகில் உள்ள எல்லா மதக் குழுக்களும், இனக் குழுக்களும் அத்தகைய நெறிமுறைகளை வகுத்துக் கொண்டுள்ளனர். 

இரு வேறுபட்ட மதக் குழுக்கள் அல்லது இனக் குழுக்களுக்கு இடையே, தாங்கள் கடைபிடிக்கும் நெறி முறைகளில் கருத்து மாறுபாடுகள் ஏற்படும் போது, அவர்களுக்கிடையே பிணக்குகளும், மோதல்களும் நடந்து வருவதை நாம் அறிவோம். எந்த மதக் குழு வெற்றி பெறுகிறதோ அந்தக் குழுவின் பின்னால் மக்கள் செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விடுகிறது. இப்படித்தான் மதங்கள் பரவுகின்றன, அல்லது விரிவடைகின்றன.

சனாதன தர்மத்தை அச்சாரமாகக் கொண்ட இந்து மதத்தில் மட்டும்தான் அவர்களுக்குள்ளேயே பிணக்குகளும் மோதல்களும் அன்றாடம் அரங்கேறுகின்றன. ஆகையினால்தான், பிற மத நம்பிக்கைகளை வீழ்த்தி விட்டு அதனால் தன்னை மேலும் விரிவுபடுத்திக் கொள்ள முடியவில்லை.

மனுதர்மம்தான் இந்துக்களின் சட்டம்!

இந்திய தண்டனைச் சட்டம் எப்படி 'இந்தியன் பீனல் கோடு' (IPC) என்று அழைக்கப்படுகிறதோ, அதுபோலத்தான் இந்து மதச் சட்டமான மனுதர்ம சாஸ்திரம், 'மனு கோடு' என்று அழைக்கப்படுகிறது. மனுதர்ம சாஸ்திரம்தான் இந்துக்களின் சட்டம் என்பதில் இரு வேறு கருத்துக்கு இடமில்லை.

பொதுவாகப் படிப்பதனால் மட்டும் சட்டங்கள் நமக்குப் புரிந்து விடுவதில்லை. ஒரு சட்டம் காட்சிப்படுத்தப்படும் பொழுது அல்லது கதையாகச் சொல்லப்படும் பொழுது அது எளிமையாகப் புரிவதோடு, ஆழமாக மனதில் வேரூன்றி விடுவதால் வாழ்க்கை நெடுக அதை நாம் கடை‌பிடிக்கிறோம். அப்படித்தான் மனுதர்ம சாஸ்திர சட்டம் என்பது பல்வேறு கதைகள் மூலம் காட்சிப் படுத்தப்பட்டு மக்களிடையே பதியப் பட்டிருக்கிறது‌. 

ஸ்ருதி என்கிற நான்கு வேதங்கள், மனு ஸ்மிருதி உள்ளிட்ட 18 ஸ்மிருதிகள், பாகவதம் உள்ளிட்ட 18 புராணங்கள், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இரு இதிகாசங்கள் மற்றும் பகவத் கீதை இவையாவும் சனாதன தர்மத்தை மக்களிடைய புரிய வைத்து பதிய வைப்பதற்கானவைளாகும். இவை அனைத்தும் வலியுறுத்துவது ஒன்றே ஒன்றைத்தான். அதுதான் சனாதன தர்மம்; அதாவது, இந்துக்களின் வாழ்வியல் முறை மற்றும் கடமைகள், உரிமைகள் பற்றியதாகும்.

மனுதர்ம சாஸ்திரத்தைப் புரிந்து கொண்டால்தான், சனாதன தர்மம் அல்லது இந்து தர்மம் எப்படிப்பட்டது என்பதைப் புரிந்து முடியும். புரிந்தால்தான் சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டு வாழ்வதா அல்லது சனாதன தர்மத்தை வலியுறுத்துகின்ற மனுதர்மம் உள்ளிட்ட இந்து மத நூல்களை எரித்துச் சாம்பலாக்குவதா என்பதை தீர்மானிக்க முடியும்.

எரிப்பதற்கு ஆயிரம் காரணங்கள் உண்டு என்றாலும் நேரம் கருதி அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் அடுத்து பார்ப்போம்‌.

தமிழ்மணி

-தொடரும்...



.




Thursday, 13 January 2022

திராவிடம்! தொடர் - 2

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனுதர்ம சாஸ்திரத்திலும் (கி.மு 150-100), கி.பி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டதாகக் கருதப்படும் புராணங்களிலும் திராவிடம் குறித்த குறிப்புகள் காணப்பட்ட போதிலும், 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘பரங்கியன்’ கால்டுவெல்லும், இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியார் உள்ளிட்ட கன்னட-தெலுங்கு-மலையாளிகளும்தான் தமிழர்களிடையே திராவிடத்தைத் திணித்தார்கள் என்று தம்பிகள் பிதற்றி வருகின்றனர். 

வேத காலம் தொட்டு இன்றைய மோடி காலம்வரை-இடையில் மெளரியர்,  களப்பிரர் உள்ளிட்ட ஒரு சில சமண, பெளத்த ஆட்சிகளைத் தவிர-சனாதன தர்மமே இந்தியப் புவிப்பரப்பில் கோலோச்சி வருகிறது. முகலாயர் மற்றும் பரங்கியர் ஆட்சிக் காலத்திலும்கூட சனாதன ஆதிக்கத்திற்குப் பெரிய அளவில் ஆபத்து ஏதும் நேர்ந்துவிடவில்லை. பார்ப்பனர்களைத் தவிர மற்ற அனைவரும் சூத்திரர்களாக, தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டு அவர்களுக்குக் கல்வியும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டு ஒடுக்கப்பட்டே வந்துள்ளனர். 

எடப்பாடி போன்று, பார்ப்பனர்களுக்கு அடிபணிந்தவர்கள் மட்டுமே ஆட்சி நடத்த அனுமதிக்கப்பட்டனர். வேதங்களை ஏற்க மறுத்த, பார்ப்பனர் சொல்படி நடக்க மறுத்த பெளண்டரம், ஒளண்டரம், திரவிடம், காம்போசம், யவனம், சகம், பாரதம், பால்ஹீகம், சீநம், கிராதம், தரதம், கசம் ஆகிய நாடுகளை ஆட்சி செய்த மன்னர்கள்கூட சத்ரிய நிலையிலிருந்து சூத்திர நிலைக்குத் தரம் இறக்கப்பட்டனர் அல்லது காடுகளுக்கு விரட்டப்பட்டனர் அல்லது கொன்றொழிக்கப்பட்டனர். (மனு: 7-40, 7-41, 10-43, 10-44). அவ்வாறு அழிக்கப்பட்ட, ஒழிக்கப்பட்ட மன்னர்கள் ஹரிவம்ச நூலில் வரும் வேணன் என்கிற வீணா, விஷ்ணு புராணத்தில் வரும் நிமி மற்றும் நகுஷன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

திராவிட நாட்டில் இருந்த வேங்கட மலையை பலராமர் தரிசித்ததாக பாகவதம் கூறுகிறது (கி.பி 4-5 ஆம் நூற்றாண்டு புராணம்).

திராவிடம் என்கிற நாடு, விந்திய மலைக்குத் தெற்கே உள்ள தென் இந்தியாவைக் குறிப்பதாகும் என்பதை அம்பேத்கர் தெளிவு படுத்துகிறார். (தொகுதி-10)  தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் திராவிட நாட்டில் பேசப்பட்டதால்தான்  அந்த நாட்டைக் குறிக்கும் வகையில் அம்மொழிகளைத் திராவிட மொழிகள் என்கின்றனர். 

திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல, அது சமஸ்கிருதச் சொல்,  பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என திரித்துப் பேசுவதன் மூலம் வேத மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு என்கிற திராவிடக் கருத்தியலை நிராகரித்து பார்ப்பனியத்திற்குச் சேவை செய்ய முயல்கின்றனர் சீமானும், மணியரசனும்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவு

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1