இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் பெ. சண்முகம் அவர்கள், சேலம் பாலியல் வன்கொடுமை குறித்துக் கீழ்க்கண்ட அறிக்கையைத் தனது முகநூலில் வெளியிட்டிருந்தார்:
"சேலத்தின் 50-க்கும் மேற்பட்ட பெண்களுக்குப் பாலியல் வன்கொடுமை! சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுக் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!"
ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டு, இத்தகைய கொடூரச் சம்பவத்திற்கு வெறும் ‘அறிக்கை’ மட்டும் விடுவது போதாது என்ற ஒரு குடிமகனின் தார்மீக உரிமையோடு, அந்தப் பதிவின் கீழ் நான் ஒரு எளிய விமர்சனத்தை வைத்தேன்.
அதன் விளைவாக அங்கு நடந்த விவாதம் இதோ:
- ஊரான்: "அறிக்கை மட்டும் போதுமா? வீதியில் இறங்கிப் போராட வேண்டாமா? எது தடுக்கிறது? அவன்தான் குற்றவாளி என்று சொல்வதற்கு தைரியம் இல்லை. கட்சியில் இருந்து நீக்கிவிட்டால் மட்டும் கட்சி உத்தம கட்சி ஆகிவிடுமா?"
- Balaji KR: "முகநூலில் கருத்துப் போடுவது உங்களுக்குப் பெரிய வேலையா இருக்கு."
- ஊரான்: "அதுக்குத்தானே முகநூல் இருக்கு? ஏன் விமர்சனம் என்றால் கசக்கிறது?"
- Balaji KR: "உனக்கு கருத்துப் போடுவது மட்டும்தான் இனிக்குதா?"
- ஊரான்: "'உங்களுக்கு' எனத் தொடங்கி 'உனக்கு' என எனை நோக்கி விளிப்பு. அடடே... என்னே ஒரு கம்யூனிசப் பண்பாடு?"
- Balaji KR: "போராட்டக் களத்திலும் கருத்தியலாகவும் இணைந்தே நாங்கள்.. நீங்கள்??"
- ஊரான்: "உங்களது முகநூல் கணக்கைப் பார்த்தேன். முப்பதாயிரம் போஸ்ட்கள், 7.6 ஆயிரம் நட்புகள். உங்களுக்கும் முகநூலில்தான் பெரிய வேலை போல?"
- Balaji KR: "கேட்டதுக்கு பதில்??"
- ஊரான்: "நான் யார் என்று 'ஊரான்' மற்றும் 'எதிர்த்துநில்' வலைப்பூவில் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையேல் மரணித்துப் போன 'பெல்' முகில் அவர்களின் கல்லறையில் காது வைத்துக் கேளுங்கள்; அவர் என்னைப் பற்றிச் சொல்லுவார். நிற்க, கேள்வி கேட்டது நான். அதற்கு நாகரிகமாகப் பதில் சொல்லத் தெரியவில்லை. என்னுடைய மகன் வயதுகூட உங்களுக்கு இல்லை. என்னை ஒருமையில் 'உனக்கு' என்று விளிக்கிறீர்கள். இதுதான் கம்யூனிசம் உங்களுக்குக் கற்றுக் கொடுத்த நாகரிகமோ?"
சுயரூபம் என்ன?
இந்த Balaji KR என்பவர் ஏதோ ஒரு பிழைப்புவாதக் கட்சியைச் சேர்ந்த தனிநபர் என்றால் கடந்து சென்றிருக்கலாம். ஆனால், விசாரித்துப் பார்த்தபோதுதான் அதிர்ச்சி காத்திருந்தது! திண்டுக்கல்லைச் சேர்ந்த இவர், தற்போதைய DYFI மாவட்டச் செயலாளர், முன்னாள் SFI மாவட்டச் செயலாளர்.
இடதுசாரி அமைப்பின் மிக முக்கியப் பொறுப்பில் இருக்கும் ஒரு இளைஞர், மாற்றுப் பார்வையை முன்வைக்கும் ஒரு மூத்த குடிமகனிடம் உரையாடும் பண்பாடு இதுதானா? இத்தகைய அநாகரிகப் போக்கைக் கொண்டவர்கள் பொறுப்பில் இருந்தால், மக்கள் மத்தியில் அந்த அமைப்பின் மீதும், அதன் தலைவர்கள் மீதும் எப்படி மதிப்பு வரும்?
தீர்ப்பு உங்கள் கையில்!
இன்று முற்போக்கோ, பிற்போக்கோ... யாராக இருந்தாலும் அவர்கள் வைக்கும் கருத்துகளின் மீது நாம் எவ்வித விமர்சனமும் வைத்துவிடக் கூடாது போலிருக்கிறது. ஒன்று அமைதியாகக் கடந்து சென்றுவிட வேண்டும்; இல்லையென்றால், அதிகாரத் தோரணையில் நம்மை ஒருமையில் கடித்துக் குதறிவிடுவார்கள்.
விமர்சனங்களை உள்வாங்கும் சகிப்புத்தன்மையும், தார்மீகப் பண்பாடும் அற்ற இந்தச் போக்குதான்... கம்யூனிஸ்டுகள் மக்கள் மத்தியில் மதிப்பிழந்து போவதற்கான மிக முக்கியக் காரணம்!
ஊரான் @ பொன். சேகர்
குறிப்பு:
தோழர் முகில் பரமானந்தம் அவர்கள் பெல் (BHEL) நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் முக்கியக் களப்பணியாளர். நானும் அவரும் திருச்சியிலும், இராணிப்பேட்டையிலும் பணியாற்றிய போது மிக நெருக்கமாகத் தோழமையோடு பழகியவர்கள்
எனது சமூகப் பங்களிப்பையும் களப்பணியையும் அவர் நன்கு அறிந்தவர் என்பதனால், அவரது நினைவை இந்தப் பதிவில் நான் குறிப்பிட நேர்ந்தது.

No comments:
Post a Comment