Friday 13 November 2020

நவம்பர் 26, 27 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை ஆதரித்து மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி!


#மக்கள்_அதிகாரம் 

தமிழ்நாடு - புதுவை

---------++++++++----------

நவம்பர் 26, 27.

நாடு தழுவிய தொழிற்சங்கங்களின்.
வேலை நிறுத்தம், மறியல் போராட்டம்!

அகில இந்திய விவசாய சங்கங்கள் ஒருங்கிணைப்புக்குழுவின்  நாடு தழுவிய மறியல்! பாராளுமன்ற முற்றுகை! ஆதரிப்போம்! பங்கேற்போம்!

இந்தியாவின் ஆதாரமாகவும் அடிப்படையாகவும் விளங்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகள், அனைவரையும் கார்ப்பரேட் கொள்ளையர்களின் கொத்தடிமைகளாக்கும் தேச விரோத பாஜகவின் பாசிச மோடி ஆட்சி, கடந்த நூறு ஆண்டுகளாக தொழிலாளி வர்க்கம் பல்லாயிரம் உயிர்த்தியாகம், சிறைக் கொடுமைகளைக் தாங்கிப் போராடிப் பெற்ற சட்டபூர்வமான உரிமைகளையும், அதற்கான 44 தொழிலாளர் நலச்சட்டங்களையும் ஒழித்து, முழுக்க முழுக்க சுரண்டும் முதலாளிகளுக்குச் சாதகமான நான்கு விதித்தொகுப்புகளாக மாற்றி துரோகமிழைத்துள்ளது.

அதேபோல் இந்தியாவின் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் கோடிக்கணக்கான சிறு, குறு நடுத்தர விவசாயிகளின் நிலங்களை மறைமுகமாகப் பறித்து அவர்களையும் அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் கொள்ளையர்களிடம் அடகு வைக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களையும் அமல்படுத்தத் தொடங்கிவிட்டது மோடி அரசு.

மேற்கண்ட இரு நடவடிக்கைகளும் இந்தியாவில் இதுவரை யாரும் செய்யத் துணியாத துரோகச்செயல். 

இந்திய மக்களில் 85% பேரை நடுத்தெருவில் நிறுத்தும் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை நாம் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவதன் மூலம் மட்டுமே முறியடிக்க முடியும்.

அந்த வகையில் வரும் நவம்பர் 26, 27 தேதிகளில் நடைபெறும் தொழிலாளர்கள், விவசாயிகள் போராட்டங்களை மக்கள்அதிகாரம்  ஆதரித்து எல்லா இடங்களிலும் பங்கேற்கிறது. 

அத்துடன் 27ஆம் தேதி டெல்லி முற்றுகையிலும் சில தோழர்கள் பங்கேற்கவிருக்கின்றனர்.

எனவே இப்போரட்டங்களில் விவசாயிகள் தொழிலாளிகள் மட்டுமின்றி அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கேற்று வெற்றி பெறச் செய்யவேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

காளியப்பன்,
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்.

No comments:

Post a Comment