Tuesday 15 August 2023

தஞ்சை: விவசாயிகள் விடுதலை முன்னணி, மாநாட்டு அனுபவம்!... தொடர்-1

2023, ஆகஸ்டு 13, அதிகாலை 4.34 மணிக்கு கைபேசி ஒலிக்கிறது. மறுமுனையில் வேலூரிலிருந்து இராவணன். காலை 7.00 மணிக்கு ஆற்காட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறார்.

பயணத்திற்குத் தேவையான உணவை எனது இணையர்  தயார் செய்ய, 23 ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் எனது இணைபிரியா நண்பன் சுசுகி மேக்ஸ் 100 ஐத் தட்டிக் கொடுத்து காலை 7.20 மணிக்கு ஆற்காட்டை நோக்கி விரைகிறோம்.

எனது நண்பனுக்கு வயதாகி விட்டதால் இப்பொழுதெல்லாம் அவனை அதிக தூரம் விரட்டுவதில்லை. அதனால் அவனுக்குக் கால் வயிறு அளவுக்குத்தான் கஞ்சி ஊற்றுவேன். போகும் வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் நூறு ரூபாய்க்கு அவன் வயிற்றை நனைத்து, பத்து நிமிடத்தில் ஆற்காடு சென்றடைந்தோம்.

நாங்கள் பயணிக்க வேண்டிய வாகனம் ஏற்கனவே அங்கே எங்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தது. தாமதத்திற்கான குற்ற உணர்வு என்னை ஆட்கொள்ள, அருகில் இருந்த வண்டி நிறுத்தத்தில், பத்து ரூபாய் கொடுத்து எனது நண்பனை ஓரங்கட்டினேன். இதுவே பாலாற்றங்கரைக்கு வடக்கே உள்ள முத்துக்கடையிலும், வாலாசாப்பேட்டையிலும் ரூ.15/-, இது 24 மணி நேரத்திற்கு. அதுவே சென்னை போன்ற நகரங்களில் 12 மணி நேரத்திற்கு ரூ.20/-. ஏன் இத்தனை வேறுபாடு? பேராசை யாரைத்தான் விட்டது என்று எண்ணியவாறு தெற்கு நோக்கி தோழர்களுடன் பயணமானேன்.

பசியாற அங்காளத்தாள்

காலையிலேயே முழு வயிற்றை நிரப்பிக் கொண்டதால், சற்றும் களைப்பின்றி எங்களைச் சுமக்கும் வாகனம், ஆரணி மற்றும் சேத்துப்பட்டு நகரங்களைத் தாண்டி விரைந்து கொண்டிருக்கிறது. எங்களுக்குப் பசி எடுக்க, அருக்கம்பூண்டியில் எங்கள் ஆத்தா அங்காளத்தாள் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறாள். பரந்து விரிந்த சிமெண்ட் தரை தளம், ஓய்வெடுக்க கொட்டகைகள், தாகம் தீர்க்க தண்ணீர்த் தொட்டி என தன்னை நாடி வருவோருக்கு தேவையான வசதிகளை செய்து கொண்டு படுகளத்தில் ஒரு ஓரமாக மல்லாக்கப் படுத்துக் கொண்டிருக்கிறாள் அங்காளத்தாள். பார்ப்பனியம் யாரைத்தான் விட்டு வைத்தது? எங்கள் ஆத்தாவையும்  ஈஸ்வரனுக்கு வைப்பாட்டியாக்கி, அவளை ஸ்ரீ அங்காள பரமேஸ்வரியாக்கிவிட்டனர்.

இட்லி, பொங்கல், எலுமிச்சை சோறு, புளி சோறு, சப்பாத்தி  மற்றும் மாட்டுக் கறி என தோழர்கள் கொண்டு வந்த  உணவை அனைவரும் பகிர்ந்து கொள்கின்றனர். கிரிவலப் பாதையில் அசைவ உணவா? என ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுமானால் அங்கலாய்க்கலாம். ஆனால் எங்கள் ஆத்தாவே அசைவப் பிரியர் என்பதால் இங்கு அங்கலாய்க்க ஏதுமில்லை. தோழர் சரவணன் குடும்பத்தாரின் முன்முயற்சியால் அவர்கள் கொண்டு வந்த கூடுதல் இட்லி அனைவரின் தேவையையும் இட்டு நிரப்பியது.

நாம் எதற்காகத் தஞ்சை நோக்கிப் பயணிக்கிறோம் என்பதை விளக்கி, தோழர்கள் அகிலன், இராவணன், சரவணன், சாமி ஆகியோர் உரையாற்ற, 'சாமக்கோழி கூவும் நேரத்திலே', 'வெள்ளி முளைக்கையிலே நெல்லறுக்கப் போயிருந்தோம்', 'ஆலைத் தொழிலாளி நாங்கடா', 'காடுவெட்டி நெல் குவித்து', போன்ற பிரபலமான மக்கள் கலை இலக்கியக் கழகப் பாடல்களைத் தோழர்கள் அகிலன், வாணி உள்ளிட்டோர் பாட, பயணம் தொடர்ந்தது.

மாநில நெடுஞ்சாலைகள் பச்சைக் கொடி காட்ட, தேசிய நெடுஞ்சாலைகளோ மோடி என்ற முகமூடியுடன் ஆங்காங்கே மறிக்கிறது. கேட்டதைக் கொடுத்தால்தான் பாதை கிடைக்கும்.

திருமாந்துறை முகமூடிக் கொள்ளையரைத் தவிர்ப்பதற்காக தேசிய நெடுஞ்சாலையை விட்டு விலகி, உள்ளூர் சாலையின் ஊடாக லப்பைக்குடிக்காடு வழியாக அரியலூரை நோக்கிப் பயணமானோம். 

மருதையன் கோவிலும் ஐய்யனாரும்

பிற்பகல் மணி ஒன்றரையைத்தாண்டி விட்டதால் பசியாறுவதற்காக மாத்தூர் மருதையன்கோவில் அருள்மிகு ஐய்யனார் திருக்கோவிலுக்குள் நுழைந்தோம்.

தங்களைப் பாதுகாத்த வீரனை மதிப்பதும் வழிபடுவதும் பழந்தமிழர் வழக்கம். அத்தகைய வீரனைத்தான் இன்றும் பல்வேறு கிராமங்களில் கோவில் எழுப்பி ஐய்யனாராக தமிழர்கள் வழிபட்டு வருகின்றனர். ஐய்யனார் ஒருவன் அல்ல, அவன் ஒவ்வொரு ஊரிலும் இருந்த ஊர்க்காவலன். ஐய்யனாருக்கு மட்டுமன்றி, அவனது சீடர்கள், அவன் பயன்படுத்திய‌ குதிரை உள்ளிட்ட அனைவருக்கும் சிலையமைத்து அழகு பார்க்கின்றனர் தமிழர்கள். இன்று இவர்களோடு கையில் துப்பாக்கியுடன் காவலர்களுக்கும், இராணுவ வீரர்களுக்கும் சிலை அமைத்து வருகின்றனர்.

ஆனால் இந்த ஐய்யனாரையும் பார்ப்பனர்கள் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு ஊருக்கும் வேறுவேறாக இருந்த ஐய்யனாரை, ஈஸ்வரனுக்கும், பெண்ணாக அவதாரம் எடுத்த விஷ்ணுவுக்கும் பிறந்த வாரிசாகக் கதை அளந்து ஐய்யனாரை அசிங்கப்படுத்தி விட்டனர். இங்கே, மருதையன் கோவில் ஐய்யனார் கையில் வீணையைக் கொடுத்து கேவலப்படுத்தி உள்ளனர். இதுவும் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாகத்தான் இருக்க முடியும்.

இது அப்பகுதியில் பிரபலமான கோவில் போல. ஒரு சிலர் பொங்கல் வைத்துக் கொண்டும், ஒரு சிலர்‌ விருந்துக்கான உணவு சமைத்துக் கொண்டும் இருந்தனர்.

கோவிலுக்குள் நுழைந்தால் தண்ணீருக்குப் பஞ்சமிருக்காது என்பதனால்தான் கோவிலைத் தேர்வு செய்து தஞ்சமடைந்தோம். இங்கேயும் அவரவர் கொண்டு வந்த உணவை அனைவரும் பங்கிட்டுப் பகிர்ந்து கொண்டோம். வயிறு முட்ட உண்ணவில்லை என்றாலும் மனம் மகிழ உண்டதனால் யாருக்கும் குறையொன்றுமில்லை.

தஞ்சை ரயிலடி

மீண்டும் பயணம் தொடர்ந்தது. அரியலூர், திருவையாறு வழியாக தஞ்சையை நெருங்கினோம். விவசாயிகள் விடுதலை முன்னணியின் (வி.வி.மு) பேரணி தஞ்சை கீழ்வாசலுக்குப் பதிலாக, ரயிலடிலிருந்து தொடங்குவதாக செய்தி கிடைக்க, நேராக மாலை நான்கு மணிக்கு முன்பாகவே ரயிலடியைச் சென்றடைந்தோம். நாங்கள் சென்ற பிறகே மற்ற ஊர்களில் இருந்து தோழர்கள் வரத் தொடங்கினர்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு கம்பம் மோகன், செல்வராஜ், காரப்பட்டு ஏழுமலை, பெருவளப்பூர் மணி, திருச்சி போஜகுமார், ராஜா, ஜீவா, ஜான், நிர்மலா, குமார், செழியன், வழக்குரைஞர் ஆதி, தருமபுரி இராமலிங்கம், தஞ்சை அருள், இராவணன், காளியப்பன், ராஜன், கோவை சித்தார்த்தன், சிவகங்கை நாகராஜ், சங்கராபுரம் இராமலிங்கம், திருவண்ணாமலை ஆனந்த், பாடகர் கோவன், வழக்குரைஞர் ராஜூ உள்ளிட்ட பழையத் தோழர்களைப் பார்த்து அளவலாவிய போது மனம் ஏனோ குதூகலித்தது. நேரம் ஆக ஆக பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள் குவியத் தொடங்கினர். ரயிலடி எங்கும் செங்கொடிகள் உயரத் தொடங்கின.


தொடரும்….

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

No comments:

Post a Comment