Thursday, 20 January 2022

இந்தியாவில் தேசிய இனச் சிக்கலும், தமிழ்த் தேச விடுதலையும்! தொடர்-9

சீமான், மணியரசன் போன்றவர்கள் ஒருபுறம் தமிழ்த்தேசியம் பேசினாலும், அவர்கள் போலித் தமிழ்த் தேசியவாதிகள் என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமான ஒன்றல்ல. ஆனால் மார்க்சிய ‘ஒளியில்’ தமிழ்த் தேசியம் பேசும் மார்க்சிய-லெனினியர்களைப் புரிந்து கொள்வதுதான் சற்றே கடினமானது.

தமிழ்த் தேசியத்திற்கான அவசியத்தை, மார்க்சிய ஆசான்களை மேற்கோள் காட்டி இவர்கள் பேசினாலும், இந்தியாவில் ஒரு வலுவான ஒன்றுப்பட்ட மார்க்சிய-லெனினியக் கட்சியைக் கட்டுவதற்கான இயலாமையினாலும் மற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஏற்படுத்திய தாக்கத்தினாலும்தான் இவர்கள் தமிழ்த்தேச விடுதலை அரசியலை முன்னெடுப்பதாகத் தோன்றுகிறது. கள  நிலவரத்தைவிட, தங்களின் சொந்த விருப்பமே இவர்களிடம் மேலோங்கி இருப்பதாகக் கருத முடிகிறது.

1917 சோசலிசப் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் மாருஷ்யர்கள், ஆர்மீனியர்கள், உக்ரேனியர்கள், லித்துவேனியர்கள், லாத்வியர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடாக ருஷ்யா இருந்ததைப் போன்றுதான், தமிழர்கள், மலையாளிகள், கன்னடர்கள், மராட்டியர்கள், பஞ்சாபிகள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடாக இந்திய ஒன்றியம் உள்ளது. மொழி, பொருளாதாரம், கல்வி, பண்பாடு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் மாருஷ்ய தேசிய இனத்தின் ஒடுக்குமுறை பிற தேசிய இனங்கள் மீது இருந்தபோதிலும், பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சிக்காக செயல்பட்ட லெனினும், ஸ்டாலினும் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை குறித்து 1912-1914 வாக்கிலேயே மிகச்சரியான வழிகாட்டுதல்களைக் கொடுத்தனர்.

ருஷ்யாவில் தேசிய இன ஒடுக்குமுறை இருந்தபோதிலும், ஒவ்வொரு தேசிய இனமும், தேசிய இன விடுதலையை முன்னெடுக்க வேண்டும் என்று அன்றைய ருஷ்ய கம்யூனிஸ்டுகள் யாரும் அறைகூவல் விடுக்கவில்லை. மாறாக, தேசிய இனங்களின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்த அதே வேளையில், ஒன்றுபட்ட ருஷ்யப் பாட்டாளி வர்க்கத்தை ஐய்க்கியப்படுத்தி, பலப்படுத்தி சோசலிசப் புரட்சியை நடத்திக் காட்டினர். தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான சுயநிர்ணய உரிமை, அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அங்கமானது.

1990-களில் பாட்டாளி வர்க்க நலனைக் கைவிட்டுவிட்டு, முதலாளித்துவ நாடாக ருஷ்யா சிதைவுற்ற பிறகு, மாருஷ்ய தேசிய இனம் பிற தேசிய இனங்களை ஒடுக்கிய போது, அரசியல் சட்டம் வழங்கிய சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அமைதியான முறையில் தேசிய இனங்கள் பல்வேறு தேசங்களாகப் பிரிந்து சென்று தங்களுக்கான தனித்தனி அரசுகளை ஏற்பத்திக் கொண்டன. இங்கே, தேசிய இனங்கள் பிரிந்து செல்வதற்கான கோரிக்கையும் பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கை அல்ல; மாறாத அது அந்தந்த தேசிய இனத்தைச் சார்ந்த முதலாளித்துவத்தை மீட்டெடுத்த முதலாளிகளின் கோரிக்கையாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

நம் கண்முன்னே மிகச்சரியான ருஷ்ய அனுபவம் இருந்த போதும், இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலையை முன்னெடுப்பதுதான் முதன்மையானது என சில மார்க்சிய-லெனினியர்கள் பேசுகின்றனர். தேசிய இனங்களின் விடுதலை பற்றிப் பேசும் இவர்களிடையே சில விசயங்களில் ஒத்த கருத்தும்கூட இல்லை.

இந்தி மொழி பேசும் 'இந்திப் பெருந்தேசிய' இனம்தான் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதாகச் சிலரும், இந்திய–பார்ப்பனிய ஏகாதிபத்தியம்தான் பிற தேசிய இனங்களை ஒடுக்குவதாகச் சிலரும் என வெவ்வேறு வகைகளில் தேசிய இன ஒடுக்கு முறையை விவரிக்கின்றனர்.

ஸ்டாலின் வகுத்தளித்த ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய வரையறை, ஒடுக்கும் ‘இந்திப் பெருந்தேசிய இனத்திற்குப்’ பொருந்துகிறதா என்பது பற்றியோ அல்லது லெனின் வகுத்தளித்த ஏகாதிபத்தியம் பற்றிய வரையறையின்படி, இந்திய-பார்ப்பனிய ‘ஏகாதிபத்தியம்’ பொருந்துகிறதா என்பது பற்றியோ தெளிவுபடுத்துவதற்கு இவர்கள் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும், தனித்தனி மொழி, ஆட்சிப்பகுதி, பொருளாதார வாழ்வு அதற்கேற்ற பண்பாடு நிலவுகிற அதே வேளையில் வருண-சாதி அடைப்படையிலான மாறுப்பட்ட மன இயல்பும் எல்லா தேசிய இனங்களுக்கிடையிலும் ஊடுருவியிருக்கிறது. இத்தகைய மன இயல்புக்கு அடிப்படையாக இருப்பது பார்ப்பன-சனாதன இந்து தர்மமாகும். தேசிய இன ஒடுக்கு முறைக்கு இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயல்கிறது காவி கும்பல்

தேசிய இனங்களின் தனித்தனி மொழிகளை நசுக்கி இந்தி–சமஸ்கிருத மொழித் திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, மாட்டுக்கறி உணவுத் தீண்டாமை, ஜல்லிக்கட்டுத் தடை என பல்வேறு வடிவங்களில் தேசிய இனங்களின் மன இயல்பை-பண்பாடுகளை அழித்துவிட்டு, பார்ப்பன சனாதன ஒற்றை இந்துத்துவா பண்பாட்டை–மன இயல்பை இந்தியாவெங்கும் நிலைபெறச் செய்ய, தேசிய இனங்கள் மீதான ஒடுக்கு முறையை ஏவி வருகிறது ஆர்எஸ்எஸ் தலைமையிலான காவி கும்பல்.

பன்னாட்டு ஏகபோக நிதிமூலதனத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு, கார்ப்பரேட் முதலாளிகளும் தங்களின் சந்தையை விரிவாக்கம் செய்யவும், பலப்பத்தவும், சுரண்டலை விரிவு படுத்தவும் வேண்டி, தொழிலாளர் சட்டத் திருத்தம்-வேளாண் சட்டத் திருத்தம்-மின்சாரச் சட்டத் திருத்தம் உள்ளிட்ட எண்ணற்ற சட்டத் திருத்தங்கள், எட்டு வழிச் சாலை, ஜிஎஸ்டி-பண மதிப்பிழப்பு, ஒன்றிய அரசிடம் அதிகாரக் குவிப்பு என பல்வேறு வடிவங்களில் தேசிய இனங்களின் அதாவது மாநிலங்களின் ஆட்சிப் பகுதிகள் மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அதிகாரங்களைப் பறித்துக் கொண்டு அவ்விடத்தில் ஒரே இந்தியா, அதற்கேற்ற ஒற்றைப் பொருளாதார ஒருங்கிணைப்பு மூலம் மாநிலங்கள் அதாவது தேசிய இனங்கள் மீது மோடி துணையோடு கார்ப்பரேட் ஒடுக்கு முறையை ஏவி வருகின்றனர்.

அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் பார்ப்பன–பனியா பின்புலம் கொண்டவர்கள் என்பதால் இவர்கள் ஆர்எஸ்எஸ் இந்துத்துவா காவி சக்திகளோடு கைகோர்க்கின்றனர்.

காப்பரேட்டுகளும், காவிகளும் ஒரு வீரிய ஒட்டு ரகமாக ஒன்று சேர்ந்து கொண்டு, இந்திய உழைக்கும் மக்கள் மீதும், பல்வேறு தேசிய இனங்கள் மீதும் ஏவப்பட்டு வரும் ஒடுக்குமுறையை, அடக்கு முறையை, பாசிசத்தை வீழ்த்துவதுதான் உழைக்கும் மக்களின், பாட்டாளி வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்டுக் கிடக்கும் அனைத்து தேசிய இன மக்களின் ஒரே கடமையாகும். அதுதான் இன்றைய முதன்மைப் பிரச்சனையாகும். 

எனவே, பல்வேறு தேசிய இனங்கள் உள்ள இந்திய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.

நீண்ட கால நோக்கில், நிதிமூலதன ஆதிக்கக் கும்பலையும் வீழ்த்த வேண்டியிருப்பதால், அனைத்துத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளி வர்க்கம், தவிர்க்க முடியாமல்  சர்வதேசப் பாட்டாளி வர்க்கத்துடன் ஐக்கியப்பட வேண்டி உள்ளது.

தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை இருப்பதனாலேயே ஒவ்வொரு தேசிய இனமும் தனியாகப் பிரிந்து செல்வதற்கான போராட்டத்தை உடனடியாக பாட்டாளி வர்க்கம் முன்னெடுக்க வேண்டும் என லெனினும், ஸ்டாலினும் எங்குமே வலியுறுத்தவில்லை. மாறாக, சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை வலியுறுத்துகிற அதே வேளையில், ஒவ்வொரு ஒடுக்கு முறைக்கும் எதிரானப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கம் அன்றாடம் மேற்கொள்ள வேண்டும் என வழிகாட்டினர்.

அனைத்து தேசிய இனங்களையும் சார்ந்த பாட்டாளி வர்க்க ஒருங்கிணைப்பை எந்த அளவுக்குப் பலப்படுத்துகிறோமோ அந்த அளவுக்கு அப்போராட்டத்தில் வெற்றியைக் காண முடியும். அதற்கான எடுப்பான உதாரணம்தான் வேளாண் சட்டங்களுக்கு எதிரான ஒருங்கிணைந்தப் போராட்டம்.

தேசிய இன ஒடுக்கு முறைக்கு எதிராக நுட்பமான, கரடு முரடான வழிகளிலும் போராட வேண்டும் என்பதை டெல்லிக்கு எதிரான ஜல்லிக்கட்டுப் போராட்டம் நமக்கு உணர்த்தி உள்ளது. தேசிய இன. ஒடுக்கு முறைக்கு எதிரானப் போராட்டங்களை கம்யூனிஸ்டுகள் கையில் எடுக்கத் தவறினால், புற்றீசல்கள் போல ‘தமிழ்த் தேசியவாதிகள்’ தோன்றிக் கொண்டேதான் இருப்பர்.

முற்றும்.

தமிழ்மணி

தொடர்புடைய நூல்கள்

1. மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும்-ஸ்டாலின்

2. தேசிய இனங்களின் பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-லெனின்

3. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை-லெனின்

4. தேசீயக் கொள்கையும் பாட்டாளி வர்க்கச் சர்வதேசீயவாதமும்:  சில பிரச்சைனைகள்-லெனின்

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5


தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7



சுயநிர்ணய உரிமை என்றால் என்ன? தொடர்-8

சுயநிர்ணயம் என்ற சொல்லின் பொருள் என்ன? சட்டரீதியான வரையறைகளிலிருந்து இதற்கு விடை தேடுவதை விடுத்து, உலகம் முழுவதிலும் நடைபெற்று வரும் தேசிய இயக்கங்களின் அனுபவத்திலிருந்து வரலாற்று–பொருளாதார ரீதியில் ஆராய்ந்து பார்த்தால், தேசிய இனங்களின் சுயநிர்ணயம் என்பதன் பொருள், மாருஷ்ய நாட்டரசிலிருந்து உக்ரைன், லித்துவேனியா, லாத்வியா போன்ற தேசிய இனங்கள் அல்லது இந்திய ஒன்றியம் என்கிற நாட்டரசிலிருந்து தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து போன்ற தேசிய இனங்கள், அரசியல் ரீதியில் பிரிந்து தங்களுக்கான சுதந்திரமான தேசிய அரசு ஒன்றை அமைத்தல் என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது.

கணவன்-மனைவி இருவருக்குமான விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பது எப்படித் தவறாகாதோ, அது போன்றுதான் தேசிய இனங்கள் பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதும் தவறாகாது. கணவன்-மனைவி இருவருக்குமிடையே பிணக்குகள் தோன்றிய உடனேயே அவர்கள் பிரிந்து சென்று விடுவதில்லை. மாறாக, பிணக்குகளுக்கான காரணங்களைக் குறிப்பிட்ட குடும்ப வாழ்க்கையைப் பருண்மையாக ஆய்வு செய்த பிறகு, பிணக்குகளை தீர்ப்பதற்கு வேறு வழியே இல்லை என்கிற சூழ்நிலையில்தான் அவர்கள் பிரிந்து வாழ்வதற்கு விவாகரத்துக் கோருகிறார்கள். அது போன்றுதான் தேசிய இனப்பிரச்சனை போன்ற சமூகப் பிரச்சனையை ஆராயும் போது அதை, அதன் திட்டவட்டமான வரலாற்று எல்லைக்குள் ஆராய்ந்து, அதன் பிறகே பிரிந்து செல்வது பற்றி தீர்மானிக்க வேண்டும்.

கணவன் மனைவியையோ அல்லது மனைவி கணவனையோ அடக்கி ஒடுக்கும் ஒரு குடும்ப சூழ்நிலையில், அவர்கள் சேர்ந்து வாழலாமா? அல்லது பிரிந்து விடலாமா? குடும்ப நிலைமைகளைப் பாரதூரமாகப் பரிசீலிக்காமல் சேர்ந்து வாழ்வதா? அல்லது பிரிந்து விடுவதா? ‘இரண்டில் ஒன்று பதில் சொல்!’ என்று கேட்பது எப்படி அபத்தமானதோ அது போன்றுதான் தேசிய இனப் பிரச்சனையில் கேட்பதும்.

கணவனின் நலன் அல்லது மனைவியின் நலன் எதுவாக இருப்பினும், மொத்தத்தில் அது குடும்ப நலனுக்கு உட்பட்டதுதான் கணவன்-மனைவி இருவரும் பிரிந்து செல்லும் விவாகரத்து உரிமை. அது போல, பாட்டாளி வர்க்கத்துக்கும், வர்க்கப் போராட்ட நலன்களுக்கும் கீழ்ப்பட்டவைதான் தேசிய இனங்கள் பிரிந்து செல்வது குறித்த பிரச்சனையும்.

கணவன் மனைவி இருவரும். பிரிந்து செல்வதில் முடியுமா அல்லது சேர்ந்து வாழ்வதில் முடியுமா எனபதை எப்படி முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாதோ அது போலத்தான் ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் இன்னொரு தேசிய இனத்திலிருந்து பிரிந்து போவதில் முடியுமா அல்லது சம அந்தஸ்து பெற்று சேர்ந்திருப்பதில் முடியுமா என்பதை முன்கூட்டியே யாரும் சொல்ல முடியாது.

முடிவு எதுவானாலும், தனது மேம்பாட்டுக்கு வழிசெய்வதுதான் பாட்டாளி வர்க்கத்துக்கு முக்கியமானது. ஆனால், முதலாளித்துவ வர்க்கத்துக்கோ, பாட்டாளி வர்க்க நலனைவிட தனது நலனை முன்னிறுத்தி, பாட்டாளி வர்க்க நலனுக்கான  மேம்பாட்டை தடை செய்வதுதான் முக்கியம். எனவேதான், பாட்டாளி வர்க்கமானது, எந்த ஒரு தேசிய இனத்துக்கும் சாதகமாக இருப்போம் என்று உறுதி எதையும் அளிக்காமல், இன்னொரு தேசிய இனத்துக்குப் பாதகமாக எதையும் செய்வோம் என்றும் கூறாமல், சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்மறைக் கோரிக்கையுடன் மட்டும் தன்னை நிறுத்திக் கொள்கிறது. பாதகமாக எதையும் செய்ய  மாட்டோம் என்று உறுதி அளிப்பதைத்தான் ‘எதிர்மறை’ கோரிக்கை என்கிறோம்..

சாத்தியமான தீர்வுகள் அனைத்திலும் மிகவும் ஜனநாயகமானத் தீர்வு ஒன்றைப் பெறுவதற்கு நடைமுறையில் சிறந்த உத்தரவாதத்தை இது ஒன்றுதான் அளிக்கிறது. பாட்டாளி வர்க்கத்துக்கும் இந்தகையதொரு உத்தரவாதம்தான் தேவை.

விவாகரத்து உரிமையில் பிரிந்து வாழ்வதற்கு உத்தரவாதம் இருப்பதால்தான் ஒருவர் நலனை மற்றொருவர் பறிக்காமல் அவர்கள் ஒன்றிணைந்து ஒன்றாக வாழ முடிகிறது. தேசிய இனங்களுக்கும் இது சாலப் பொருந்தும்தானே?

விவாகரத்து உரிமை, குடும்பத்தைத் துண்டு படுத்துவதாகும் என்று உரத்துக் குரல் கொடுப்பவர்கள், ஆண்களின் சிறப்பு உரிமைகளையும், பெண்களை ஆண்கள் ஒடுக்குவதையும் ஆரிக்கும் பிற்போக்காளர்கள், நயவஞ்சகர்கள் ஆவர். விவாகரத்து உரிமையினால் குடும்பங்கள் துண்டுபட்டுப் போவதில்லை; மாறாக நாகரிக சமுதாயத்தில் அது ஒன்றுதான் ஜனநாயக அடிப்படையிலான சாத்தியமான நிலையான, குடும்ப உறவுகளை வலுப்பத்தும் ஒன்றாகும்.

சுயநிர்ணய உரிமை சுதந்திரத்தை, அதாவது பிரிந்து போகும் சுதந்திர உரிமையை ஆதரிப்பதானது நாட்டைத் துண்டாடுவதற்குத் தூண்டிவிடுவதாகும் என்று குற்றம் சாட்டுவது நயவஞ்சகமானது, முட்டாள்தனமாது. விவாகரத்து சுதந்திர உரிமையை ஆதரிப்பவர்கள், குடும்ப உறவுகளைக் கெடுப்பவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது எந்த அளவுக்கு முட்டாள்தனமானதோ அந்த அளவுக்கு முட்டாள்தனமானது தேசிய இனங்கள் பிரிந்து போவதற்கான சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது. உண்மையில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை எதிர்ப்பது என்பது ஒடுக்கும் தேசிய இனத்திற்கான சிறப்புச் சலுகைகளை ஆதரிக்கும், ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும்.

எல்லாத் தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகும் உரிமை உண்டு என்று சொல்வதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட தேசிய இனம் பிரிந்து போவதற்குச் “சரி” அல்லது “இல்லை” என்று தெளிவாகச் சொல் என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம். உதாரணமாக, இலங்கையில் தமிழீழம், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் தனியாகப் பிரிந்து செல்லலாமா? கூடாதா?. இரண்டில் ஒன்று தெளிவாகச் சொல்!” என்று கேட்பதற்கு எதிராக நிற்கிறது பாட்டாளி வர்க்கம்.

சம அந்தஸ்தும், தனக்கான தனி தேசிய அரசு ஒன்றை அமைத்துக் கொள்ளும் உரிமையும் ஒரு தேசிய இனத்திற்கு வேண்டும் என்பதை அங்கீகரிக்கும் அதே வேளையில், எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த பாட்டாளிகள் கூட்டாக இணைந்திருப்பதை மிகவும் முதன்மையானதாகக் கருதிப் போற்றுகிறது பாட்டாளி வர்க்கம்.

ஒடுக்கப்பட்ட தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம், ஒடுக்கும் தேசிய இனத்தை எதிர்த்து எந்த அளவுக்குப் போராடுகிறதோ அந்த அளவுக்கு, அப்போராட்டத்தை ஒவ்வொரு நிலையிலும் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாகப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும்; ஏன் என்றால் ஒடுக்குமுறைக்கு சிறிதும் விட்டுக் கொடுக்காத தீவிரமான எதிரி பாட்டாளி வர்க்கம் மட்டும்தான்.

பல்வேறு தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில், பெரிய தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், தனிச் சலுகைகள் எதையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்காது. வர்க்க லட்சியத்தை நோக்கி நடைபோடுவதற்கு, அத்தகைய நாட்டில் வாழும் அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களையும் ஒற்றுமைப் படுத்த வேண்டும்.

ஒடுக்கும் பெரிய தேசிய இனத்துக்கான சிறப்பு உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் எதிர்த்தும், அனைத்து தேசிய இனங்களும் தங்களுக்கான தேசிய அரசுகளை அமைத்துக் கொள்ளச் சம உரிமை உண்டு என்பதை ஆதரித்தும் அன்றாடப் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சிகளை பாட்டாளி வர்க்கம் மேற்கொள்ள வேண்டும். இந்த வகையில்தான் அனைத்து தேசிய இனங்களைச் சேர்ந்த பாட்டாளிகள் சம அந்தஸ்துடன் ஒரு கூட்டணியை அமைத்துக் கொள்ள முடியும்.

உண்மையில் இந்தப் பிரச்சாரம் மட்டும்தான் மக்களிடையே சோசலிச உணர்வை  ஏற்படுத்தும். பல தேசிய இனங்கள் இருக்கும் ஒரு நாட்டில், அமைதி நிலவுவதற்கும், தேசிய இனங்கள் மிகவும் அமைதியாகத் தனித் தனி அரசுகளாகப் பிரிவதற்கும் அதிக வாய்ப்புகளை மேற்கண்ட பிரச்சாரம் மூலம் மட்டும்தான் ஏற்படுத்த முடியும். தேசிய இனப் பிரச்சனையில் பாட்டாளி வர்க்கத்தின் ஒரே கொள்கை இதுதான்.

எல்லா வகையான தேசியவாதத்தையும், குறிப்பாக ஒடுக்கும் தேசிய இனத்தின் தேசிய வாதத்தை எதிர்த்துப் போராடுவது (1) மற்றும் பொதுவாக எல்லா தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை ஏற்றுக் கொள்வதோடு மட்டுமன்றி, அரசு அமைப்பதற்கான, சம உரிமைகளை, அதாவது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை, பிரிந்து போகும் உரிமையை ஏற்றுக்கொள்வது (2) ஆகியவைதான் பாட்டாளி வர்க்கத்தின் முன் உள்ள இரண்டு கடமைகளாகும்.

அதே சமயத்தில் அனைத்து விதமான தேசிய வாதத்தையும் எதிர்த்துப் போராட வேண்டி, பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் ஐக்கியத்தை, பாட்டாளி வர்க்க அமைப்புகளின் ஐக்கியத்தைப் பேணிப் பாதுகாப்பதும் பாட்டாளி வர்க்கத்தின் கடமையாக உள்ளது. இந்த அமைப்புகளை நன்கு நெருக்கமான சர்வதேச பொது  நிறுவனமாக இணைப்பதும் முக்கியக் கடமையாக உள்ளது.

“எல்லா தேசிய இனங்களுக்கும் சம உரிமைகள்; தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை; எல்லாத் தேசிய இனங்களையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கிடையில் ஒற்றுமை”-இதுதான் மார்க்சியம் போதிக்கும் செயல் திட்டமாகும்.


1896, லண்டன் சர்வதேசக் காங்கிரசின் தீர்மானங்கள், ருஷ்யக் கம்யூனிஸ்ட் கட்சியின் 1903 செயல் திட்டம் மற்றும் 1912, 1913, 1914, 1916, 1922 ஆண்டுகளில்
  லெனின், ஸ்டாலின் ஆகிய இருவரின் வழிகாட்டுதல்படிதான் தேசிய இனப் பிரச்சனை குறித்து இங்கே விவாதிக்கப்பட்டுள்ளது.

தாெடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5



தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7


Tuesday, 18 January 2022

தேசிய இனங்களின் உருவாக்கமும், தேசிய இன ஒடுக்கு முறையும்! தொடர்-7

தொடக்க கால மனிதச் சமூகம் தனித்தனி இனக் குழுக்களாக வாழ்ந்த போது சொத்துடைமையாளர்கள் என தனியாக யாரும் இருந்ததில்லை. உடைமை வர்க்கம், உழைக்கும் வர்க்கம் என இருவேறு வர்க்கங்கள் இல்லை. அங்கே சுரண்டல் இல்லை; அதனால் வர்க்கப் போராட்டமும் இல்லை; இயற்கையை எதிர்த்தப் போராட்டத்தைத் தவிர!

அதன் பிறகு உருவான அடிமை உடைமைச் சமூகம், நிலவுடைமைச் சமூகம், முதலாளித்துச் சமூகங்களில் உடைமை வர்க்கமும் உழைக்கும் வர்க்கமும் இருந்ததால் வர்க்கங்களுக்கிடையில் ஓயாதப் போராட்டங்கள் தொடர்ந்தன, இன்றும் தொடர்கின்றன. 

சொத்துடைமைக்கும், சுரண்டலுக்கும் முற்றுப்புள்ளி வைத்து உருவானதுதான் பொதுவுடைமைச் சமூகம். இது வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு சமூக மாற்றமாகும். 

பழைய சமூகக் கட்டமைப்பை வீழ்த்தி விட்டுத்தான் புதிய சமூகமும் தோன்றுகிறது. அவ்வாறு தோன்றும் பொழுது பல புதிய சமூக சூழ்நிலைமைகளும் உருவாகின்றன. நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவம் வளர்ந்து வந்த 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான், மக்கள் தேசங்களாக இணைந்து அமையப் பெற்றனர். மேற்கு ஐரோப்பாவில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற தேசங்கள் உருவாகின. இவை தனித்தனியே ஒரே தேசமாகவும், ஒரே நாட்டரசாகவும் அமைந்தன. கிழக்கு ஐரோப்பாவில் பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஆஸ்திரியா, ஹங்கேரி, ருஷ்யா போன்ற நாட்டரசுகள் தோன்றின.

நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்படாத, முதலாளித்துவ வளர்ச்சி பலவீனமாக உள்ள பல்வேறு தேசிய இனங்கள் வாழும் இந்தியா போன்ற கிழக்கிந்திய நாடுகளிலும், அரசுகளின் உருவாக்கம் இப்படித்தான் நடந்தேறின. ருஷ்யாவைப் போன்று இந்தியாவும் பல தேசங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டரசாக உருவாகியது.


பல தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டரசில், பெரிய தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள். தங்களுடைய சந்தை நலனுக்காக அரசியல், பொருளாதாரம், மொழி, கல்வி, மதம் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் பிற தேசிய இனங்களை ஒடுக்க முனைகின்றனர். 

முதலாளித்துவம் வளர்ச்சியடைந்த நாடுகளில், முதலாளிகளே ஆளும் வர்க்கங்களாக அமைகின்றனர். முதலாளித்துவம் வளர்ந்து வருகின்ற அதே வேளையில் நிலவுடைமையும் நீடிக்கின்ற நாடுகளில் முதலாளிகளும் நிலப்பிரபுக்களும் ஆளும் வர்க்கங்களாக அமைகின்றனர்.

எனவே, பல தேசிய இனங்கள் உள்ள ஒரு நாட்டில் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த ஆளும் வர்க்கத்திற்கு எதிராக, ஒடுக்கப்படும் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளிகள் தங்களுடைய சந்தை நலனுக்காகப் போராடுகின்றனர். தங்களது சொந்த நலனுக்கானப் போராட்டத்தை, நாடு/இன நலனுக்கானப் போராட்டமாக முன்வைப்பதால் அது மக்களின் ஆதரவைப் பெறுகிறது. இப்படித்தான் ஒரு தேசிய இயக்கம்-தேசியப் போராட்டம் தொடங்குகிறது.

தேசியப் போராட்டம் உண்மையில் முதலாளிகளின் நலனுக்காகவும், லாபத்திற்காகவும் நடைபெறும் முதலாளித்துவப் போராட்டமாக இருந்தாலும், ஒடுக்கும் தேசிய இனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், இடம் விட்டு இடம் பெயர்தல், வாக்குரிமை, மொழி உரிமை, பண்பாட்டு உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை மறுப்பதால் அவை தொழிலாளர்களையே அதிகம் பாதிக்கின்றன. இதனால் ஒடுக்கப்படும் தேசிய இனத்திலிருந்து அறிவாளிகள் வளர முடிவதில்லை. 

தேசிய ஒடுக்கு முறை, தொழிலாளி வர்க்க நலனுக்கு கேடு பயப்பதாகும். சமூக மற்றும் வர்க்கப் போராட்டத்திலிருந்து தொழிலாளர்களை திசை திருப்பி, தேசியப் பிரச்சனைகளிலும், முதலாளிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையிலான பொதுவான பிரச்சனைகளிலும் கவனத்தைத் திசைதிருப்பி, பாட்டாளி வர்க்க நலனைத் திரித்துப் பொதுவான நலன் மற்றும் தேசிய ஒருமைப்பாடு குறித்த சூழ்நிலையை உருவாக்குகிறது.

அனைத்து தேசிய இனத் தொழிலாளர்களின் ஒற்றுமைக்கு இது பெரிய தடையை ஏற்படுத்துகிறது. எடுத்துக் காட்டாக போலந்து தொழிலாளர்கள் முதலாளித்துவ தேசியவாதிகளின் (பிற்காலத்தில் லெக் வாலெசா) பிடியில் சிக்கிக் கொண்டதை யாவரும் அறிவோம்.

தமிழர் எதிர் கன்னடர் உள்ளிட்ட பிற தேசிய இனத்தவர், மராட்டியர் எதிர் பிற தேசிய இனத்தவர் என ஒன்றிற்கு எதிராய் ஒன்றைத் தூண்டிவிட்டு வன்முறை, படுகொலைக்கு வித்திடுகிறது தேசியப் பிரச்சனை. தொழிலாளர்களைப் பிளவு படுத்தும் இத்தகையப் போக்கு பாட்டாளி வர்க்க நலனுக்குப் பெரும் கேடு விளைவிப்பதாகும். 

தொழிலாளி வர்க்கம் அனைத்து தேசங்களின் படையாக உருவாக வேண்டியிருப்பதால், தேசிய இன அடக்குமுறைக்கு எதிராக, நுட்பமான, கரடு முரடான வழிகளிலும் தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும். தேசங்களை ஒன்றுக்கொன்று எதிராகத் தூண்டிவிடும் கொள்கையை எதிர்த்து, அனைத்து வடிவங்களிலும் போராட வேண்டும்.

மேற்கண்ட நிலைமைகளைக் கணக்கில் கொண்டுதான், தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் பிரகடனம் செய்கின்றனர்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3



தேசம் என்றால் என்ன? தொடர்-5


Monday, 17 January 2022

இந்தியாவை ஒன்றியம் என்று அழைக்கலாமா? தொடர்-6

முடியாட்சிகளுக்கு (dynasty) முடிவு கட்டப்பட்டு, குடியாட்சிகள் (democracy) மலர்ந்த பிறகு, மக்களிடையே புழக்கத்தில் உள்ள நாடு (country), மாநிலம் (state), பிராந்தியம் (province), தேசம் (nation), ஒன்றியம் (union), அரசு (state), அரசாங்கம் (government)  ஆகிய பல்வேறு பெயர்கள், எதை தேசம் என்று அழைப்பது, எதை நாடு என்று அழைப்பது என்பதில்  குழப்பத்தை ஏற்படுத்தத்தானே செய்கின்றன. இந்தியாவை நாடு என்று அழைப்பதா, தேசம் என்று அழைப்பதா, நடுவண் (மத்திய) அரசு என்று அழைப்பதா? என்ற குழப்பம் நிலவிய போது,  இனி ஒன்றிய அரசு (union government) என்றே அழைக்கலாம் என தமிழக மக்கள் வழிகாட்டியதால் பாஜக-வினர் கடும்  கோபம் கொண்டார்களே ஒழிய நமக்கு ஓரளவுக்குக் குழப்பம் தீரத்தானே செய்தது. 

தொழிற் தகராறு தொடர்பாக நடுவண் அரசுக்கு எதிராக ஒருவர் வழக்குத் தொடுக்க வேண்டுமானால், “Union of india represented by director, ministry of labour…”  என்றுதான் தொடுக்க முடியுமே ஒழிய “Central government or government of india represented by director ministry of labour…” என்று தொடுக்க முடியாது.  மத்திய அரசு என்பது பேச்சு வழக்கு, ஒன்றிய அரசு என்பது சட்ட ரீதியானது (Article 300). ஒன்றிய அரசு என்று தமிழர்கள் அழைப்பதில் ஒரு தேசிய இன உரிமை இழையோடுகிறது அல்லவா? அதுதான் பாஜக-வினரை கோபத்திற்குள்ளாக்குகிறது.

அமெரிக்காவும், இந்தியாவும் பல்வேறு மாநிலங்களை உள்ளடக்கிய நாடுகள்தான் என்றாலும் அவை தன்மையில் வேறுபட்டவை. அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் தேசியத் தன்மை-அதாவது தேசிய இனத் தன்மை கொண்டவை அல்ல. ஆனால் இந்தியாவில் உள்ள ஆகப் பெரும்பாலான மாநிலங்கள் முந்தைய ருஷ்யாவைப் போல, தேசிய இனத் தன்மை கொண்டவை.

வெவ்வேறு மொழி, பண்பாடு உள்ளிட்ட தன்மைகளைக் கொண்ட, பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கியதாக ருஷ்யா இருந்ததால்தான் அது சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் (USSR) என அழைக்கப்பட்டது. இந்தியாவும் அது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருப்பதால் இந்திய ஒன்றியம் என்று அழைப்பதுதான் சாலப் பொருந்தும். ஆனால் அமெரிக்க மாநிலங்கள் அத்தகைய தேசிய இனத் தன்மைகளைக் கொண்டிராததால் அதை ஐக்கிய அமெரிக்க நாடுகள் (USA) என்கிறோம்.

நியாயமாகப் பார்த்தால் இந்தியாவில் உள்ள தேசிய இனத் தன்மை கொண்ட தமிழகம், கேரளம், கர்நாடகம், வங்கம் உள்ளிட்டவைகளை, மாநிலம் என்று அழைப்பதைவிட தேசம் (nation) என்று அழைப்பதுதான் சரியானதாக இருக்க முடியும்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3




Sunday, 16 January 2022

தேசம் என்றால் என்ன? தொடர்-5

தேசம் என்பது குறிப்பிட்ட மக்களைக் கொண்ட ஒரு சமுதாயமாகும். இன அடிப்படையிலோ அல்லது குடி அடிப்படையிலோ அமைந்ததல்ல; மாறாக வரலாற்று ரீதியாக அமையப் பெற்ற நிலையான மக்கள் சமுதாயமாகும்.

அலெக்சாண்டர் போன்றவர்களின் பேரரசுகள், மௌரியப் பேரரசு, குப்தப் பேரரசு, சோழப் பேரரசு, விஜயநகரப் பேரரசு, மைசூர் பேரரசு போன்ற பேரரசுகள் கூட பல்வேறு இனங்கள், பழங்குடிகளைக் கொண்டு வரலாற்று ரீதியாக அமையப்பெற்ற மக்கள் சமூதாயமாக இருந்த போதிலும், இவைகள் எந்தவிதப் பிடிப்புமின்றி பலவந்தமாக சேர்க்கப்பட்ட பல்வேறு குழுக்களின் சேர்க்கையாக இருந்தன. அரசனின் வெற்றி-தோல்வியைப் பொறுத்து மாறக் கூடியதால் இவை நிலையான மக்கள் சமூகமாக அமையப் பெறாததால், இவைகளை தேசங்களாகக் கருத முடியாது. அதேபோல, ஒவ்வொரு நிலையான சமூகமும் தேசமாகிவிட முடியாது. 

பொது மொழி

ஒரு பொது மொழி இல்லாத சமூகம் ஒரு தேசம் ஆகிவிட முடியாது. இந்தியாவைப் பொறுத்தவரை அதற்கென ஒரு பொது மொழி இல்லாத காரணத்தால் அதை தேசம் என்று கருத முடியாது; மாறாக மத்தியில் ஒரு அரசு இருப்பதால் அதை ‘அரசு சமூகம்’ என்று வேண்டுமானால் அழைக்கலாம். இந்தியாவில் உள்ள தமிழகம், கேரளம், கர்நாடகம், ஒடிசா, வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் தங்களுக்கென்று தனித்தனி மொழி ஒன்றைக் கொண்டிருப்பதால் இவைகளை தனித்தனி தேசங்கள் என்று அழைக்கலாம். இங்கே குறிப்பிடப்படும் மொழி என்பது தமிழ்,  மலையாளம் உள்ளிட்ட மக்களின்  பேச்சு மொழியே ஒழிய அரசு பயன்பாட்டில் உள்ள ஆங்கிலம், இந்தி மொழிகளை அல்ல. எனவே பொது மொழி ஒரு தேசத்தின் முதன்மை அம்சமாகும்.

பொதுவானப் பிரதேசம்

பல்வேறு மொழிகளைப் பேசக் கூடிய ஒரு நாட்டை தேசம் என்று கருத முடியாது. எனவே, இந்தியாவில் பல்வேறு மொழிகள் பேசப்படுவதால் இந்தியா ஒரு தேசமாகிவிடாது. தலைமுறை தலைமுறையாக, நீண்ட காலம் ஒரே பகுதியில் ஒன்றாகச் சேர்ந்து வாழ ஒரு பொது மொழி அவசியம். ஒரே மொழியைப் பேசக் கூடியவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தால் அவர்கள் தனித்தனி தேசங்களாகவே அறியப்படுவர். இரண்டு தேசங்கள் ஒரு பொது மொழியைப் பேசலாம் (பிரிட்டன்-அயர்லாந்து). ஆனால், ஒரே மொழியைப் பேசும் பிரிட்டனும் அயர்லாந்தும் வேறுவேறு பிரதேசங்களாக இருப்பதால் அவை தனித்தனி தேசங்களாகவே அறியப்படுகின்றன. எனவே, பொதுவான பிரதேசம் என்பது ஒரு தேசத்தின் மற்றொரு முதன்மை அம்சமாகும்.

பொருளாதார வாழ்வு-ஒன்றிணைப்பு

ஒரு பொது மொழி, ஒரு பொதுவானப் பிரதேசம் மட்டும் இருந்து விட்டால் அவை தேசம் ஆகிவிட முடியாது. ஒரு குறிப்பிட்ட பகுதியில், ஒரு பொது மொழியைப் பேசும் மக்களிடையே பொருளாதார பிணைப்பு இருந்தால்தான் அதை தேசம் எனக் கருத முடியும். 

1947-க்கு முன்பு பல்வேறு சிறு சிறு அரசுகளாக, தொடர்பற்று இருந்த தமிழக நிலப்பரப்பில் ஒரு பொதுவான பொருளாதார பிணைப்பு இருந்ததில்லை. சிற்றரசுகளுக்கிடையே ஒருவருக்கொருவர் போர், கொள்ளை காரணமாக ஒருங்கிணைப்பு சீர்குலைந்து இருந்தன. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆங்கிலேயக் காலனி ஆட்சி ஏற்படுத்திய முதலாளித்துவ வளர்ச்சி காரணமாக, சிற்றரசுகள் சிதைந்து தமிழகம் ஒரு தேசமாக உருவெடுத்தது. எனவே, பொதுவான பொருளாதார வாழ்வு மற்றும் பொருளாதார ஒன்றிணைப்பு ஒரு தேசத்தின் மற்றுமொரு முதன்மை அம்சமாகும்.

பொதுவான மன இயல்பு மற்றும் பண்பாடு

மக்களின் குறிப்பிட்ட ஒழுக்க நிலைப் பண்பு, பண்பாடு, மன இயல்பு ஒரு தேசத்தை வரையறுப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றன.

இங்கிலாந்து, அயர்லாந்து தேசத்தவர் ஒரே மொழியைப் பேசினாலும் தமிழகம், தமிழீழம் தேசத்தவர் ஒரே மொழியைப் பேசினாலும் இவர்கள் தனித்தனி தேசத்தவர். இவர்களின் பண்பாடு, மன இயல்பு வேறு வேறானவை. இந்த மன இயல்பும் காலத்திற்கு ஏற்ப மாறக் கூடியது. எனவே, பொதுவான பண்பாட்டைத் தரக்கூடிய ஒரு பொதுவான மன இயல்பு ஒரு தேசத்தின் மற்றுமொரு முதன்மை அம்சமாகும்.

தொகுப்பாக,

“ஒரு தேசம் என்பது, ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகமாகும்” (மார்க்சியமும் தேசிய இனப் பிரச்சனையும் – ஸ்டாலின்).

ஸ்டாலின்

மேலே கூறியவற்றில், ஒரு அம்சம் குறைந்தாலும் அதை ஒரு தேசமாகக் கருத முடியாது; அனைத்து அம்சங்களும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைந்து இருப்பதே ஒரு தேசத்திற்கான அடிப்படையாகும்.

தொடரும்

தமிழ்மணி

 தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3




Saturday, 15 January 2022

எது முதன்மைப் பிரச்சனை? தொடர்-4

அரை நிலவுடைமை, அரைக் காலனிய இந்தியாவில் ஏகாதிபத்தியங்கள், தரகு முதலாளிகள் மற்றும் நிலப்பிரப்புகளின் சுரண்டலிலிருந்து மக்களை மீட்டு, ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வந்த மார்க்சிய-லெனினிய பொதுவுடமை இயக்கங்கள், இன்று தேசிய இன விடுதலை குறித்து அதிகமாகப் பேசத் தொடங்கி விட்டன.

1990-களுக்குப் பிறகு அறிமுகப்படுத்தப்பட்ட தனியார் மயம்-தாராள மயம்-உலக மயம் உள்ளிட்ட புதிய தாராளவாதக் கொள்கையின் விளைவாக உள்நாட்டுத் தொழில்கள் நலிவடைந்தன. பொதுத் துறைகள் மூடப்படுகின்றன. இயற்கை வளங்களும், தொழில்களும் தனியார் வசமாகின்றன. கார்ப்பரேட் முதலாளிகள் நலனுக்காக தொழிலாளர் நலச் சட்டங்கள் உள்ளிட்ட பல சட்டங்கள் திருத்தப்படுகின்றன. கார்ப்பரேட் முதலாளிகளின் வரைமுறையற்ற கொள்ளையினால் சுற்றுச்சூழல் கேடுகளும், இயற்கைச் சீற்றங்களும் அதிகரித்து வருகின்றன. 

2014-ல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சாதித்-தீண்டாமை வன்கொடுமைகளும், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்களும், இஸ்லாமியருக்கு எதிரான தாக்குதல்களும்,  மாட்டுக்கறி உள்ளிட்ட உணவுத் தீண்டாமை, இந்தித் திணிப்பு-சமஸ்கிருத மயம் உள்ளிட்ட தாக்குதல்களும் அதிகரித்துள்ளன.

கார்ப்பரேட்டுகளும், காவிகளும் ஒன்று சேர்ந்து கொண்டு, சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட சனாதன இந்தியாவை உருவாக்க முனைகின்றனர். எதிர்த்துப் பேசுவோர், UAPA உள்ளிட்ட கொடும் சட்டங்கள் மூலம் சிறையில் அடைக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட்-காவிப் பாசத்தை வீழ்த்துவதே இன்றைய முதன்மைப் பிரச்சனையாக இருப்பதால் ஆர்எஸ்எஸ்-பாஜகவுக்கு எதிரான சக்திகள் ஒருங்கிணைய வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழுப்பப்படும் காலகட்டம் இது. 

ஆனால், தேசிய இனச் சிக்கல்தான் இன்றைய முதன்மைப் பிரச்சினை. எனவே, தேசிய இன விடுதலையை முன்னெடுப்பதன் மூலம் மட்டும்தான் ஒட்டுமொத்தப் பிரச்சனைகளையும் தீர்க்க  முடியும் என்கின்றனர் தமிழ்த் தேசியம் பேசுவோர். எனவே, தேசிய இனப் பிரச்சினை குறித்தப் புரிதல் இருந்தால்தான் எது சரியானது என்பதைத் தீர்மானிக்க முடியும்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1


திராவிடம்! தொடர் - 2


தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3


Friday, 14 January 2022

தமிழீழ விடுதலைப் போராட்டமும் தமிழகத்தில் அதன் தாக்கமும்! தொடர்-3

ஈழத் தமிழர்கள் மீதான சிங்களப் பேரின ஒடுக்குமுறைக்கு எதிராக 1956 வாக்கில் அமைதியாகத் தொடங்கிய தமிழீழ விடுதலைப் போராட்டம்,  1983  முதல் ஆயுதப் போராட்டமாக உருவெடுத்து, 2009-ல் விடுதலைப் புலிகள் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு முடிவுக்கு வந்தது என்றே சொல்லலாம். இதே காலகட்டத்தில், இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சுயநிர்ணய உரிமைக்கானப் போராட்டம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது அமைதி காத்த தமிழ்த் தேசியம் பேசும் பல அமைப்புகள் ஈழவிடுதலைப் போராட்டத்திற்குப் பிறகு சுயநிர்ணய உரிமை குறித்தும், தேசிய விடுதலை குறித்தும் அதிகமாகப் பேச தொடங்கின.

CPI, CPI(M) ஆகிய இரு பொதுவுடைமைக் கட்சிகளும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையையும் ஏற்பதில்லை, தனியாகப் பிரிந்து செல்வதையும் ஏற்பதில்லை. 

CPI(M)-லிருந்து வெளியேறி ‘தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி’ கண்ட மணியரசன், பொதுவுடமையைக் கைவிட்டுவிட்டு ‘தமிழ்த் தேசியப் பேரியக்கத்தில்’ பவனி வருகிறார். 

இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மா-லெ), தமிழ்நாடு அமைப்புக் கமிட்டி என்ற பெயரில் செயல்பட்டு வந்த கார்முகில் குழுவினர், ‘இந்தியாவை’க் கைவிட்டுவிட்டு தமிழ்த்தேச விடுதலையை முன்வைத்து ‘தமிழ்நாடு மார்க்சிய லெனினியக்  கட்சி’யாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொண்டனர்.

மக்கள் யுத்தக் குழுவிலிருந்து வெளியேறிய புலவர் கலியபெருமாள், தமிழரசன் ஆகியோர் தமிழ்த்தேச விடுதலையை முன்வைத்தனர். தமிழரசன் தமிழ்நாடு விடுதலைப் படையை உருவாக்கினார்.

AMK தலைமையிலான போல்ஷ்விக் பிரிவினரும், மாவோயிஸ்ட் பிரிவினரும் தனி ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் நேரடியாக ஆதரித்தனர்.

தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை ஆதரித்த அதேவேளையில், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ), மாநில அமைப்புக் கமிட்டி விடுதலைப் புலிகளை ஆதரிக்கவில்லை,

இவை தவிர, தியாகு தலைமையிலான தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், பொழிலன் தலைமையிலான தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி, ஆழி செந்தில்நாதனின் தன்னாட்சித் தமிழகம், திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம், திருமொழியின் தமிழ்தேச இறையாண்மை, துரைசிங்கவேலின் மக்கள் ஜனநாயகக் குடியரசு கட்சி, அரங்க குணசேகரனின் தமிழக மக்கள் புரட்சிக் கழகம் உள்ளிட்ட சில பல அமைப்புகள் தமிழ்த் தேசிய அரசியலை முன்வைக்கின்றனர். மேற்கண்ட அமைப்புகளில், பெரும்பாலான அமைப்புகள் தொடக்க காலம் முதலே தேசிய இனங்களின் உரிமை குறித்து பேசி வருகின்றனர். திருமுருகன் காந்தியின் மே 17 இயக்கம் (2009, மே 17) மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி (2010, மே 18) ஆகிய இரண்டும் ஈழப் போராட்டம் முடிவுக்கு வந்த பிறகு தொடங்கப்பட்டவைகளாகும்.

பெரியார் காலம் தொடங்கி இன்றுவரை பெரியார் இயக்கங்கள் தனி ஈழத்திற்கான போராட்டத்தை ஆதரிக்கின்ற அதே வேளையில், தமிழகத்தில் தமிழ்த் தேசிய விடுதலைக்கான கோரிக்கையை நேரடியாக முன் வைக்கவில்லை என்றாலும் தமிழர் நலன் காக்கக் குரல் கொடுத்து வருகின்றனர்.

தொடரும்

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள்

சீமானின் தமிழ்த் தேசியம் தமிழர்களைக் கரை சேர்க்குமா? தொடர்-1

திராவிடம்! தொடர் - 2