Tuesday, 28 April 2026

எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு சுமையா?

முன்னுரை

எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதையே நம் மனம் நாடுகிறது. 


கர்ப்பம் தரித்தால், குழந்தை பிறந்தால், அதுவும் உடல் ஊனம் ஏதும் இன்றி பிறந்தால், பள்ளிக் கல்லூரித் தேர்வுகளில் வெற்றி பெற்றால், கை நிறைய சம்பளம் வாங்கும் வேலை கிடைத்தால், ஒரு கனவு இல்லத்தைக் கட்டி முடித்தால், விபத்தில் சிக்கி மீண்டு வந்தால்…

இப்படி எண்ணற்ற தருணங்களில் நாம் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த மகிழ்ச்சிக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் எது?

கர்ப்பம் தரிக்க வில்லை என்றால், பிறக்கும் குழந்தை குறைபாடுகளோடு பிறந்தால், தேர்வுகளில் தோல்வி அடைந்தால், வேலை கிடைக்கவில்லை என்றால்...  

சமூகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள், அழுத்தங்கள், இழிவான குறிச்சொற்கள்…

என ஒருவர் தான் சந்தித்த சவால்கள் பலப்பல. இத்தகைய சவால்களுக்குப் பிறகு கிடைக்கும் வெற்றிதான் அவருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.

ஒருவேளை இவையெல்லாம் ஒருவருக்கு இயல்பாகக் கிடைத்து விட்டால், அதாவது ஒருவர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே இருக்க நேர்ந்தால் உண்மையில் அது இனிமையானதா? அல்லது 
குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவரான Max Planck கூறுவது போல  அது ஒருவிதமான சுமையா? 

“தொடர்ச்சியாக மகிழ்ச்சியாக நாட்களைக் கழிப்பது
ஒரு மனிதனுக்குக் கடினமான சுமை.” என்கிறார் மேக்ஸ் பிளாங்க்.

“No burden is so heavy for a man to bear as a succession of happy days." – Max Planck

இது சற்று முரண்பாடாகப் பலருக்கும் தோன்றலாம் ஆனால் மனித மனதின் இயல்பை புரிந்து கொண்டால் இத்தகைய மகிழ்ச்சி ஏன் சுமையாக மாறுகிறது என்பது விளங்கும். 

மகிழ்ச்சி ஏன் சுமையாக மாறுகிறது?

மனிதன் அனுபவிக்கும் மகிழ்ச்சி போன்ற உணர்வுகள்
தனியாக உருவாவதில்லை; அவை ஒருவித ஒப்பீட்டின் மூலம் உருவாகின்றன. 

இருட்டை அனுபவித்தால்தான் ஒளியின் அருமை தெரியும்.
அதேபோல், சவால்கள் இல்லாத வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் மெதுவாக தனது அர்த்தத்தை இழக்கத் தொடங்கும்.

போராட்டங்களின் மதிப்பு

நாம் சந்திக்கும் சவால்கள், தோல்விகள், இழப்புகளால்தான்  நமது மகிழ்ச்சியின் அருமையை நம்மால் ஆழமாக உணர முடியும்.

தோல்விகள் நமக்கு பொறுமையைக் கற்பிக்கின்றன. சவால்கள் நம்மிடம் துணிச்சலை உருவாக்குகின்றன.

மகிழ்ச்சி கஷ்டத்திலிருந்து பிறக்கிறது என்பதல்ல இதன் பொருள்.  கஷ்டத்தை அறிந்த மனம்தான் இன்பத்தை ஆழமாக உணர வைக்கிறது.

இதைத்தான்

“இன்பம் விழையான் இடும்பை இயல்பெனக்
கண்படின் துன்பம் துறும்.” (குறள் 628)

என்று வள்ளுவப் பெருந்தகை கூறுகிறார்.

இன்பத்தை மட்டும் விரும்பாமல்,
துன்பத்தையும் வாழ்க்கையில் இயல்பாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையுடையவனுக்கு
துன்பம் துன்பமாகத் தெரியாது.

வசதியான நாட்களைவிட அல்லது மகிழ்ச்சியான நாட்களைவிட
சவால்கள் நிறைந்த நாட்களே மனிதனை ஆழமாக மாற்றுகின்றன.

நாம் சந்திக்கும் வாழ்க்கைப் போராட்டங்கள் நம்மை உடைத்து விடுவதில்லை; மாறாக, அவை நம்மை உள்ளிருந்து பலப்படுத்துகின்றன.

சவால்கள் இல்லாத வாழ்க்கை எளிதாக இருக்கலாம்; ஆனால் அது ஆழமற்றதாகவும் சலிப்பூட்டுவதுமானதாக அமையும் பொழுது நாம் அனுபவிக்கும் ‘மகிழ்ச்சி’ சுமையானதாக மாறிவிடுகிறது. 

எதிர்மறைகளின் முரண்பாடே இயக்கத்தை உருவாக்குகிறது என மார்க்சியம் கூறுகிறது. முரண்பாடு இல்லையெனில் வளர்ச்சியும் இல்லை.

அதுபோல சவால்கள் இல்லாத வாழ்க்கை எப்பொழுதும் இன்பமாக இருப்பது போலக் காணப்பட்டாலும், அது ஒரு இடத்தில் தேங்கி நின்று சுமையாக மாறும். இதுதான் மேக்ஸ் பிளாங்கின் கூற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம்.

Max Planck பற்றி ஒரு குறிப்பு

Max Planck (1858–1947)
குவாண்டம் கோட்பாட்டின் முன்னோடிகளில் ஒருவர்.
1900ஆம் ஆண்டு ஆற்றல் “quanta” எனும் சிறு தொகுதிகளாக வெளிப்படுகிறது என்ற புரட்சிகரக் கருத்தை முன்வைத்தார்.
இதற்காக 1918ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

அவரது வாழ்க்கை தனிப்பட்ட துயரங்களால் நிரம்பியிருந்தாலும்,
அதே அனுபவங்களே அவரது சிந்தனைகளுக்கு ஆழத்தை அளித்தன.

முடிவுரை

வாழ்க்கை என்பது
மகிழ்ச்சி மட்டும் அல்ல; அது
முயற்சி, தோல்வி, மீண்டு வருதல் ஆகியவற்றின் கலவை.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது ஒரு இலக்கு அல்ல;
வாழ்க்கையின் துன்பங்கள், துயரங்கள், இழப்புகள், சவால்கள், வெற்றி-தோல்வி, மகிழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களை சமநிலையுடன் ஏற்றுக்கொள்வதே உண்மையான வாழ்வு.

மகிழ்ச்சி உண்மையில் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டுமானால்,
அதற்குப் பின்னால் ஒரு போர்ப் பயணம் இருக்க வேண்டும்.

ஊரான்

No comments:

Post a Comment