கூண்டில் இருக்கும் கிளிக்குத் தெரியும்
அது சிறை என்று.
ஆனால்
ஜாதகக் கூண்டுக்குள் இருக்கும் மனிதனுக்குத் தெரியவில்லை —
அது ஒரு கல்லறை என்று!
பச்சை நிறச் சிறகுகள் விரித்து
வானம் தொட்டுப் பறக்க வேண்டிய பறவை,
சீட்டெடுத்துக் கொடுத்துவிட்டு
ஒரு தானியத்திற்காகத் தவமிருக்கிறது.
பகுத்தறிவுச் சிறகுகள் கொண்ட மனிதனோ —
காகிதச் சிறை கட்டிக்கொண்டு
கிரகங்களுக்கு அஞ்சிக்
கண்ணுக்குத் தெரியாத வேலிக்குள்
முடங்கிக் கிடக்கிறான்.
வனத்துறையே…
கிளிக்குப் பேசத் தெரிந்திருந்தால்
அதுவே கேட்டிருக்கும்:
“என் சிறையை உடைக்க வந்த நீ,
உன் அறிவை அடைத்திருக்கும்
இந்த ஜோதிட வேடர்களை
எப்போது வேட்டையாடப் போகிறாய்?” என்று.
விதி என்பது
வேடன் வீசும் வலை.
அதை அறுக்கத் துணிந்தவன் —
பறவை!
அதில் சிக்குண்டு கிடப்பவன் —
கிளியை விட பரிதாபமான கைதி!
காலம் எனும் காட்டில்
கிரகங்கள் மரங்கள் அல்ல;
நீதான் அதன் வேர்!
வேரை மறந்துவிட்டு
வெறும் கட்டம் சொல்பவர்களிடம்
எத்தனை காலம்
உன் அறிவை அடகு வைப்பாய்?
தமிழ்மணி
.jpeg)
No comments:
Post a Comment