Wednesday, 22 April 2026

கொரோனாவை விடக் கொடியது: ஒரு அரசுப் பேருந்துப் பயணத்தின் 'கலீஜ்' அனுபவம்!

தக்கோலம்-வேலூர் செல்லும் பேருந்தில் வாலாஜாவிலிருந்து விஷாரம் வரை ஒரு குறு பயணம். வழக்கமாக அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டிருக்கும் "சரியான கட்டணம் கொடுக்கவும்", "தலை, கைகளை வெளியே நீட்டாதீர்கள்" போன்ற வாசகங்கள் நம் கண்ணில் படும். ஆனால், இந்தப் பயணத்தில் என் கண்ணில் பட்டது அந்தப் பேருந்தின் 'சுயரூபம்' தான்.


தூசு மாசுகளின் உறைவிடம்

பேருந்தின் உள்ளே நுழைந்தாலே மூக்கைத் துளைக்கும் நாற்றம். இது பேருந்தா இல்லை கோழி வண்டியா என்ற சந்தேகம் எழுகிறது. பக்கவாட்டு மைக்கா கண்ணாடிகள் முதல் அமரும் இருக்கைகள் வரை சென்டிமீட்டர் கணக்கில் அழுக்கு படிந்து கிடக்கிறது. ஒரு மனிதன் பிறந்தபோது குளிப்பாட்டப்பட்டு, பிறகு தள்ளாத வயது வரை குளிக்கவே இல்லை என்றால் எப்படியிருக்குமோ, அப்படி இருக்கிறது இந்தப் பேருந்தின் நிலை. நூறு வருஷத்து அழுக்கை மொத்தமாகச் சுமந்து கொண்டு ஓடுகிறது அந்த வாகனம்.

உயிருக்கு உலை வைக்கும் உள்கட்டமைப்பு

கூரையைப் பார்த்தால் பயம் வருகிறது. ஒயர்கள் ஆங்காங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. எலக்ட்ரீஷியன் வேலையில் கஞ்சத்தனம் காட்டியது போல ஆங்காங்கே இன்சுலேஷன் டேப் ஒட்டுப் போட்டு வைத்திருக்கிறார்கள். ஒட்டடையும், தூசியும் சேர்ந்து பேருந்தை ஒரு பழைய இரும்புக்கடை போல மாற்றியிருக்கிறது.

பக்கத்தில் அமர்ந்திருப்பவர் தும்மினால் வரும் பயத்தை விட, அந்தச் சீட்டில் ஒட்டியிருக்கும் பல காலத்து வியர்வையும், அழுக்கும் தரும் பயம் அதிகம். தலையைச் சொரிந்து, மூக்கைத் துடைத்து பயணிகள் விட்டுச் சென்ற அத்தனை 'கலீஜ்களும்' அந்த இருக்கைகளில் உறைகின்றன.

இந்தப் பயணம் என்பது வெறும் பயணம் அல்ல; இது ஈஸ்னோபில் (Eosinophil) அளவை அதிகரித்து, நுரையீரலைப் பாதித்து, மூச்சுத் திணறலை உண்டாக்கும் ஒரு மெதுவான மரணப் பயணம்.


அதிகாரிகளின் அலட்சியமும், குளுகுளு கார் பயணங்களும்

பேருந்தின் முன்பக்கம் வெங்கடாஜலபதி படம் இருக்கிறது. அவர் வண்டியைக் காப்பார் என்ற நம்பிக்கை டிரைவருக்கு இருக்கலாம், ஆனால் பயணிகளின் ஆரோக்கியத்தை யார் காப்பது?

நிமிஷத்திற்கு ஒரு தரம் தங்கள் கார்களைத் துடைத்து மின்னச் செய்யும் அரசியல்வாதிகளுக்கும், குளுகுளு காரில் செல்லும் அதிகாரிகளுக்கும் சாமானியன் செல்லும் இந்தப் பேருந்து நரகத்தைப் பற்றித் தெரிய வாய்ப்பில்லை.

ஆறு மாதத்திற்கு ஒருமுறை  'பாத்ரூம் ஆசிட்' போட்டு கழுவினால் கூடப் போகும் அழுக்கு இது. ஆனால், பொதுமக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு இதைக் கவனிக்க நேரமில்லை.

முடிவுரை

கொரோனா காலத்தில் மாஸ்க் போட்டோம். ஆனால், இன்றைய அரசுப் பேருந்து பயணங்களுக்கு அதைவிடக் கூடுதலான பாதுகாப்புத் தேவைப்படுகிறது. பேருந்தின் வெளியே எதுவும் தெரியாத அளவுக்குப் படிந்துள்ள இந்த அழுக்கைப் போக்க ஒரு பொதுநல வழக்குத்தான் போட வேண்டும் போலிருக்கிறது.

சாமானியன் கொடுக்கும் கட்டணத்திற்கு அவனுக்குக் கிடைப்பது ஒரு பாதுகாப்பான பயணமா? அல்லது நோய்த்தொற்று நிறைந்த நரகமா? பதில் சொல்ல வேண்டியது போக்குவரத்துத் துறையும், ஆளும் வர்க்கமுமே!

ஊரான்

No comments:

Post a Comment