Thursday, 16 April 2026

மிரள வைக்கும் ‘சிலிகா துகள்கள்’: நம் நுரையீரலில் எழும் 'ஹாலோ பிளாக்குகள்'!

முன்னுரை

கோடைக்காலம் என்றாலே வெப்பம் ஒரு பக்கம் வாட்டுகிறது என்றால், இந்த ஆண்டு 'எல்நினோ' (El Niño) வின் வருகை வேறு நம்மை அச்சுறுத்துகிறது. பசிபிக் பெருங்கடல் வெப்பமடைவதால், நிலப்பரப்பில் வெயில் அதிகரித்து மக்களின் உயிருக்கு உலை வைக்கும் என்று அபாயச் சங்கு ஊதப்படுகிறது. 


சென்ற ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தற்போது ஏரி, குளங்கள் வறண்டு, ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. 
இந்தப் பருவத்தில் பெய்ய வேண்டிய கோடை மழையும் பொய்த்துப் போனால், புதிய புல்லும் முளைக்காது, இருக்கும் பயிரும் கருகிவிடும்.

இதெல்லாம் கிராமத்து மக்களின் பிரச்சினை என்று நகரவாசிகள் ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில், உங்கள் 'ஜன்னல்'  இடுக்குகளில் நுழைந்து உங்களைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கிறது ஒரு நுண்வினை எதிரி.

கண்ணுக்குத் தெரியாத கபளீகரம்

வெயிலின் கொடுமையைத் தணிக்க வீட்டுக்குள் தஞ்சம் புகலாம். ஆனால், காற்றில் கலந்து வரும் தூசு மாசுகளை யாரால் தடுக்க முடியும்? சாலையில் ஓடும் வாகனங்கள் கிளப்பும் புழுதி ஒருபுறம் என்றால், மறுபுறம் அருகிலுள்ள கல் 'குவாரி'களிலிருந்து (Stone Quarries) வெளியேறும் மிக நுண்ணிய பாறைத் துகள்கள் நம் வீடுகளை ஆக்கிரமிக்கின்றன. இது வெறும் தூசு அல்ல; நம் நுரையீரலுக்குள் புகுந்து 'ஹாலோ பிளாக்களை' உருவாக்கும் நச்சுச் துகல்கள்.

தீராத தும்மலும் நேனோ துகள்களும்

வீட்டில் யாருக்காவது தீராத தும்மலா? தும்மலுக்கு மருத்துவம் பார்ப்பதைவிட, அதன் காரணத்தைக் களைவதே நிரந்தரத் தீர்வு. 'ஜன்னல்' சட்டங்கள், 'லாஃப்ட்டுகள்', 'பீரோக்கள்' என எங்கும் படிந்துள்ள தூசைத் துடைத்துவிட்டு, ஒரு நாளைக்குப் பலமுறை தரையை ‘மாபிங்’ செய்தாலும் தும்மல் நிற்கவில்லையா?

அதிர்ச்சியான காரணம் ஒன்று இருக்கிறது. உங்கள் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் ஒரு கல்'குவாரி' இருந்தாலும், அங்கிருந்து பாறைகளை உடைக்கும்போது எழும் ‘நேனோ வடிவிலான சிலிகா துகள்கள்’ (Nano Particles) காற்றோடு கலந்து உங்கள் அறைக்குள் நுழைந்துவிடுகின்றன. 

ஈரத்துணியால்  தரையைத் துடைத்துவிட்டு, அந்தத் துணியை நீரில் அலசிப் பாருங்கள்; நீர் கலங்கலாக மாறும். வெறும் கையால் தரையை தடவிப் பாருங்கள். உங்கள் கைகளில் பாறைத் துகள்கள் ஒட்டியிருக்கும். இதுதான் உங்கள் தீராத தும்மலுக்கும், மூச்சுத்திணறலுக்கும் மூலக்காரணம்.

மெல்லக் கொல்லும் கொலைகாரர்கள்

கல்'குவாரி'கள் பூமித்தாயை மட்டும் சிதைக்கவில்லை; நம்மையும் சேர்த்துத்தான் மெல்லக் கொல்கின்றன. நீங்கள் எத்தனை பாதுகாப்புக் கவசங்களை அணிந்தாலும், காற்றில் மிதந்து வரும் இந்த நுண்ணிய துகள்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்தக் 'குவாரி'களை நிரந்தரமாக இழுத்து மூடுவதுதான் ஒரே தீர்வு. ஆனால், அது கொள்ளையர்கள் உலாவும் இந்த நாட்டில் அவ்வளவு எளிதல்ல.

பாறைகள் முழுவதுமாக வெட்டி முடிக்கப்படும் வரை நாம் உயிரோடு இருந்தால் மட்டுமே பிழைத்திருக்க முடியும். இல்லையென்றால், நம் நுரையீரல்களில் எழுப்பப்படும் ‘ஹாலோ பிளாக்குகள்’ நம்மை எமலோகத்திற்கு இழுத்துச் செல்லும்.

இயற்கைதான் ஒரே துணை

கல்'குவாரி'கள், ஆளுங்கட்சியினருக்கு மட்டுமன்றி சர்வகட்சிப் பிரமுகர்களுக்கும் 'கரன்சிகளை' வாரிக் கொடுக்கும் ‘ஏடிஏம்’ கள். எனவே இவர்கள் யாரும் நம்மைக் காக்க வர மாட்டார்கள்.

இப்போது நம் முன்னால் இருக்கும் ஒரே நம்பிக்கை 'கோடை மழை' மட்டுமே. மழை பெய்தால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் (Mist/Humidity), பறந்து வரும் இந்த நுண்ணிய துகள்களைத் தடுத்து கீழே தள்ளும். காற்றின் ஈரப்பதம் மட்டுமே நம் நுரையீரலுக்குச் சற்றே இளைப்பாறுதல் தரும். 

இயற்கையின் மழை மட்டுமே இந்த நுண்துகள்களைத் தணிக்க முடியும்; வேறு எந்த சக்தியாலும் அதை முழுமையாகத் தடுக்க முடியாது.

முடிவுரை

வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டும் கல்'குவாரி'கள், மனிதனின் சுவாசத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. 

எப்போதோ வரும் பெருமழை நம் தாகத்தைத் தீர்க்கலாம், ஆனால் அடிக்கடி பெய்ய வேண்டிய கோடை மழை மட்டுமே நம் சுவாசத்தைக் காக்கும். 

மிரள வைக்கும் இந்த கரும்பாறை 'நேனோ வடிவிலான சிலிகா' துகள்களிடமிருந்து தப்பிக்க, ‘மேகம் கருக்காதா’ என வானத்தைப் பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!

ஊரான்

1 comment:

  1. வாட்ஸ்அப்: ராஜசேகரன்: இது பயங்கரமான தும்மலாக (ஜலதோஷம்) இருக்கிறதே. அந்த காலத்தில் எங்க வீட்டில் ‘ Feed a cold, starve a fever’ என சொல்வார்கள். But I feel you have to be very careful if you have throat infection. And there’s no medicine for cold,…..

    ReplyDelete