Showing posts with label RSS. Show all posts
Showing posts with label RSS. Show all posts

Sunday, 12 May 2024

சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவே கிடையாதா?

இராஜஸ்தானில் குடிநீர் பானையைத் தொட்ட ஒரு தலித் சிறுவனை அடித்துக் கொன்ற சம்பவம், தமிழ்நாட்டில் வேங்கை வயல் சம்பவம்  என சாதி ரீதியான ஒடுக்கு முறைகள் குறித்து whatsapp நண்பர்கள் குழு ஒன்றில் காரசாரமான விவாதம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 
அந்த விவாதத்தில் நான் பதிவு செய்த கருத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 

***
நண்பா,

எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் சாதிய முரண்களும் மோதல்களும் குறையப் போவதில்லை. இன்றைய நாடாளுமன்ற ஜனநாயக முறையில் கம்யூனிஸ்டுகள் வந்தால் ஓரளவுக்கு குறையக் கூடும். அவ்வளவுதானே ஒழிய முற்றிலுமாக சாதிய மோதல்கள் நின்று விடாது.


காரணம் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் பிணக்குகளும் இந்து மதத்தோடு, சொல்லப்போனால் மனுதர்ம சாஸ்திரத்தோடு பிணைக்கப்பட்டவை. மனுதர்ம சாஸ்திரத்தை ஆகப்பெரும்பான்மையோர் படிக்கவில்லை என்றாலும் அதைத்தான் ஒவ்வொரு சாதியினரும் கடைபிடித்து வருகின்றனர். இது மன்னராட்சி காலத்தில் மிக வலுவாக ஊன்றபட்ட ஒன்று.

தமிழ்நாட்டின் வள்ளலார் முதல் கேரளாவின் தர்மதீர்த்த அடிகளார் வரை எத்தனையோ மத சீர்திருத்த வாதிகள் இந்தச் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராகப் பேசியிருக்கிறார்கள். ஆனாலும் பெரிதாக எதுவும் மாறிவிடவில்லை. காரணம் இந்து மதத்தில் குறிப்பாக மத அதிகாரத்தில் உள்ள பார்ப்பனியம்தான். இங்கு நான் தனிப்பட்ட பார்ப்பனர்களைச் சொல்லவில்லை.

பார்ப்பனியம் என்பது ஒரு சித்தாந்தம். மக்களை, ஏற்றத்தாழ்வுடைய வருணங்களாகவும் படிநிலைச் சாதிகளாகவும் பகுத்து அவர்களுக்கான கடமைகளையும் வகுத்து அதை நிலை நிறுத்தி வைத்திருப்பபது மனுதர்ம சாஸ்திரம்.

மனுதர்ம சாஸ்திர நூலைப் படித்தால் இது நன்றாக விளங்கும். "சனாதன தர்மம் எங்கே இருக்கிறது? இதோ இங்கே! என்கிற தொடரில் இது பற்றி விரிவாக எழுதி இருக்கிறேன்.

டாக்டர் அம்பேத்கரைப் போல மனுதர்ம சாஸ்திரத்தை மிக விரிவாக ஆய்வு செய்தவர் எவரும் இல்லை. இவருக்கு முன்பாகவே மராட்டியத்தின் ஜோதிராவ் புலேவும் அதைப் பற்றி அலசி இருக்கிறார்.  எனவே, மத அதிகாரத்திலிருந்து பார்ப்பனர்களையும், இந்து மதத்திலிருந்து பார்ப்பனிய சித்தாந்தத்தையும் அகற்றாமல், அன்றாட வாழ்க்கை நடைமுறைகளில் பார்ப்பனிய பண்பாட்டு நடைமுறைகளுக்கு மாற்றாக புதிய பண்பாட்டு நெறிமுறைகளை வகுத்து நடைமுறைப் படுத்தாமல் சாதியை முரண்களும் மோதல்களும் நிற்கப் போவதில்லை. 

இந்து மதத்திலேயே பார்ப்பனிய மேலாதிக்கத்திற்கு எதிராகக் கிளம்பியவர்கள்தான் பங்காரு அடிகளார், பிரேமானந்தா, அமிர்தானந்தமயி, நித்தியானந்தா உள்ளிட்ட நவீன கால ஆன்மீகவாதிகள். தனிப்பட்ட முறையில் இவர்களது நடைமுறையில் சில முறைகேடுகள் இருந்த போதிலும் உண்மையிலேயே இவர்கள் பார்ப்பனிய மேலாதிக்கத்தில் உடைசலை ஏற்படுத்தியவர்கள். 

பார்ப்பனியத்துக்கு எதிராகப் போராடிய ஆன்மீகவாதிகளில் வள்ளலாரே முன்னிலை வைக்கிறார். ஐயா வைகுந்தர் வழிபாடும் அத்தகையதே.  இன்றைய குன்றக்குடி அடிகளாரும், சுகிசிவம் போன்ற ஆன்மீக வாதிகளும் இதில் அடங்குவர்.

ஆன்மீகத்தில் நம்பிக்கையும் நாட்டமும் உள்ளவர்கள் மேற்கண்ட ஆன்மீகவாதிகளை பின்பற்றலாமே ஒழிய பார்ப்பன குருமார்களை அல்ல.

இந்து மதத்தில், மனுதர்ம சாஸ்திர நடைமுறைகளில் மாற்றமே நடைபெறவில்லையா என்று கேட்டால் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியும் உற்பத்தி உறவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் இதற்கு வித்திடுகிறது. அவரவர் அவரவர் சாதியிலேயே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று இந்து மதவாதிகளும் மனுதர்ம சாஸ்திரமும் வலியுறுத்தினாலும், சாதி மறுப்பு காதல்  திருமணங்கள் அதிகரித்து வருவதற்கான அடிப்படை காரணம் நவீன கால உற்பத்தி முறையும் அது ஏற்படுத்தி உள்ள உற்பத்தி உறவுகளும்தான் என்றால் அது மிகையல்ல. சாதி மறுப்பு திருமணங்களுக்கு தாமாக முன்வரும் குடும்பங்களும் அதிகரித்து வருகின்றன.

எனவே புதிய உற்பத்தி முறை மற்றும் உற்பத்தி உறவுகளை நோக்கி இந்தச் சமூகம் நகரும் போது, இது போன்ற மதமாச்சரியங்களும் அது தொடர்பான ஏற்றத்தாழ்வுகளும், மதத்தின் மீதான நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல மறைந்து போகும்.

ஊரான்

Monday, 18 September 2023

"வினைசெய் 2.0" வெனையாக மாறுகிறதோ?

வினைசெய் 2.0, Scientist, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல்,  என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,  

வினைசெய், Journalist, என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம், 

வினைசெய் 2.0, Friends, உழைக்கும் மக்களுக்கான ஊடகக் குரல், என்ற பெயரில் ஒரு சமூக ஊடகம்,

என ஒரே பெயரில் மூன்று முகநூல் கணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. முதலாவதாக உள்ள வினை செய் ஊடகம் வலைப்பூவாகவும் பதிவாகி உள்ளது. 


*****
கார்ப்பரேட் காவிப்  பாசிசம் வீழ்த்துவது பற்றிய சரியான திசை வழி என்ன? என்ற‌ தலைப்பில் பல்லாவரம் முகவரியைக் கொண்ட வினைசெய் 2.0, Scientist, என்ற முகநூல் கணக்கில் அண்மையில் ஒரு கட்டுரை வெளியாகி உள்ளது.

அது குறித்த ஒரு சுருக்கமான பார்வை.

*****
கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கான திசை வழி எனவும், புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் வழி எனவும் தொடங்குகிறது இக்கட்டுரை.

கடந்த கால செயல்பாடு

1990 களில், "நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!" என்ற சரியான செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, ஆயிரக்கணக்கான மக்களை அணி திரட்டியதாகவும், 2015 வாக்கில் "கட்டமைப்பு நெருக்கடி" என்கிற செயல் தந்திர முழக்கத்தை முன்வைத்து, அதை ஒரு சாகச நடவடிக்கையாக மாற்ற துணிந்ததாகவும், பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை உணராமல் செயல்பட்டதாகவும், அப்போது, பாசிச எதிர்ப்பு அரசியலை திணிப்பதாக அமைப்பில் இருந்த சில குட்டி முதலாளித்துவப் பிரிவினர் விமர்சனம் வைத்ததாகவும் கூறுகிறது இக்கட்டுரை.

எதிர்காலச் செயல்பாடு

2019 வாக்கில் "கார்ப்பரேட் காவிப் பாசம்" நாட்டின் பிரதான அபாயமாக மாறிவிட்டதால், பாசிச சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதியாக இருக்கும், 

ஆளு வர்க்கப் பிரிவினரின் ஒரு சாராரையும், இதர முற்போக்கு ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து மேலிருந்து "பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளுக்கு எதிராகத் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்தியும், 

விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளிட்ட அடிப்படை வர்க்கங்கள் மற்றும்  அறிவுத் துறையினரை உள்ளடக்கிய, "பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி" என்ற ஒரு அமைப்பை உருவாக்கி, பாசிச சக்திகளை நேருக்கு நேர் நின்று வீழ்த்த வேண்டும் என்கிற இருவழிப் பாதைதான் சரியானது எனவும், 

இதன் மூலம் மட்டும்தான் ஒரு ஜனநாயகக் குடியரசை நிறுவி, அதைத் தொடர்ந்து ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேற முடியும் என்கிறது கட்டுரை.

தோழர் பாலன் உள்ளிட்ட சிலர் பாசிசத்தை அதன் தொடக்கக் காலத்திலேயே வீழ்த்த வேண்டும் என்பதை மறுப்பதாகவும், தரவுகள் எதுவும் இன்றி குறை கூறுகிறது இக்கட்டுரை.

தோழர் மருதையன் மீதான விமர்சனம்

கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டுவரும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக ஒரு முகாம், அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ்-திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் மற்றொரு முகாம் என இரு முகாம்கள் மட்டுமே இருப்பதால், பாஜக முகாமை வீழ்த்த, திமுக முகாமை ஆதரிக்க வேண்டும் என அமைப்பிலிருந்து வெளியேறி திமுக-வை ஆதரிக்கும் மகஇக முன்னாள் பொதுச் செயலாளர் மருதையன் செயல்பட்டு வருவதாகவும், 

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மருதையன் திட்டவட்டமாக முன்வைப்பதாகவும், இது பாசிசத்தை வீழ்த்தாது, மாறாக மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் வீழ்த்துகிற, தோற்றத்தில் முற்போக்கு தன்மை கொண்ட குட்டி முதலாளித்துவ தர்க்கம் இது; மேலும், இது போலி ஜனநாயக அமைப்பை நம்ப வைப்பதாகும் என்பதால் இதை நிராகரிக்க வேண்டும் என்கிறது இக்கட்டுரை.

சில தனி நபர்களும், சில சிறு குழுக்களும் பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பிடுவதாகவும், இது பாசிச எதிர்ப்புப் போராட்டத்தைக் குழப்பி, பாட்டாளி வர்க்கத்தைக் கையேறு நிலைக்குத் தள்ளிவிடும் என்றும் எச்சரிக்கிறது இக்கட்டுரை.

யார் இந்த வினைசெய்?

ஒன்றுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து வெளியேறி தனித்தனியாக, அதே பெயரில் செயல்படும் வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துகுமார் கோஷ்யினரை இந்தக் கட்டுரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளதைப் பார்க்கும் போது,  வினைசெய் ஆசிரியர் குழு, தாங்கள் யார் என்பதை தெளிவுபடுத்தாத போதும், இவர்கள் வழக்கறிஞர் ராஜூ தலைமையிலான மக்கள் அதிகாரம் அமைப்பை ஆதரிப்பவர்கள் என யூகிக்க முடிகிறது.

வினைசெய் ஆசிரியர் குழு முன்வைத்துள்ள பாசிச எதிர்ப்புத் திட்டம் சரியானதா தவறானதா என்கிற விவாதம் செய்யப்பட வேண்டிய ஒன்றுதான் என்றாலும், ஜனநாயக சக்திகளையும், தனி நபர்களாக உள்ள அறிவுத் துறையினரையும் எப்படிப் பயன்படுத்த வேண்டும்; கையாள வேண்டும் என்கிற போதாமை வினைசெய் ஆசிரியர் குழுவிடம் இருப்பதாகத் தெரிகிறது.

தோழர் மருதையன் என்ன செய்கிறார்?

சொந்தக் காரணங்களுக்காகவும், அரசியல் கருத்து வேறுபாடு காரணங்களுக்காகவும் ஒருவர் ஒரு அமைப்பிலிருந்து வெளியேறுவது என்பது அவரது ஜனநாயக உரிமையாகும். அரசியல் கருத்து வேறுபாடு காரணமாகத் தோழர் மருதையன் மகஇக-விலிருந்து வெளியேறவில்லை; மாறாக அரசியல் தலைமைக் குழுவில் இருந்த ஒரு சிலர் அவரை பார்ப்பனர் என்று முத்திரை குத்தி, சாதி ரீதியாக தனிமைப்படுத்தியதனால் வெறுப்புற்று வெளியேறியவர். 

அமைப்பை விட்டு வெளியேறினாலும், அவர் நாட்டு நடப்புகள் எதையும் கண்டு கொள்ளாமல் சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடவில்லை. மாறாக, ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை எதிர்த்துக் கருத்துத் தளத்தில் முன் எப்போதையும்விட மிகத் தீவிரமாக தனது ஆழமான ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து வருகிறார். களத்திலும் சில போராட்டங்களில் பங்கேற்று வருகிறார். தற்போது, அவர் ஒரு தனிநபராக இருந்தாலும், அவர் முன்வைக்கிற கருத்துகளை இலட்சக்கணக்கானோர் ஆதரிப்பதோடு, அரசியல் துறையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த அறிவாளிகளில் ஒருவராக இன்று அவர் அறியப்படுகிறார். 

அறிவுத்துறையினரைக் கையாள்வது எப்படி?

“அறிஞர்கள் குறித்த சரியானப் பார்வை, புரட்சியின் வெற்றிக்கு முக்கிய முன்நிபந்தனையாகும். இதைக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய அறிஞர்களின் உதவியின்றி, பாட்டாளி வர்க்கம் தனது சொந்த அறிஞர்களை உருவாக்க இயலாது. இது குறித்து கட்சிக் குழுக்கள் மற்றும் தோழர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும்”. என்பார் மாவோ.

ஆனால், இதற்கு மாறான பார்வையைக் கொண்டுள்ளது வினைசெய் கட்டுரை.  தோழர் மருதையன் குறித்தப் பார்வையில் அது வெளிப்படுகிறது. அவர் திமுக-வை ஆதரிப்பதாகக் குறை கூறும் வினைசெய், திமுகவின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட ஒரு சிலரை ஜனநாயக, முற்போக்கு, புரட்சிகர இயக்கங்கள் தங்கள் மேடைகளில் ஏற்றி உரையாற்ற வைக்கிறார்களே? ஏன் காங்கிரஸ்காரர்களைக்கூட மேடை ஏற்றுகிறார்களே? இதையெல்லாம் எந்தக் கணக்கில் சேர்ப்பது? 

"பொதுவுடைமை சார்ந்த இயக்கத்தவர்கள் தங்களுக்குள் கருத்து முரண் ஏற்படும் போது குட்டி முதலாளி என்கிற சொற்பிரயோகத்தை அடிக்கடி பயன்படுத்துவார்கள். சமூகவலைதளங்களிலும் குட்டி முதலாளி என்கிற சொல் பாடாய்ப் படுவதைக் காண முடியும். அதை ஒரு வசைச் சொல்லாகவேப் பயன்படுத்துகின்றனர்"

குட்டி முதலாளிகள், புரட்சியில் அவர்களின் பங்கு குறித்தும் வினைசெய் குழுவிற்கு போதியப் புரிதல் இருப்பதாகத் தெரியவில்லை. அதனால்தான் தோழர் மருதையனை குட்டிமுதலாளி என முத்திரை குத்துகின்றனர். குட்டி முதலாளிகளின் பங்களிப்பு இல்லாமல் புரட்சி சாத்தியமில்லை என்பதை மாவோவைப் படித்தால்தானே புரிந்து கொள்ள முடியும். தோழர் மருதையனை விமர்சிப்பதில் வெற்றிவேல் செழியன் கோஷ்டியும், வினைசெய் ஆசிரியர் குழுவும் ஒரே அலைவரிசையில்தான் சிந்திக்கின்றனர்.

பிற கட்சிகள், சிறு குழுக்களின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்யும் பொழுது, தரவுகளோடு முன்வைக்க வேண்டும். மேலும், எது சரியானது என்று முன்வைக்கும் பொழுது, அதற்கான ஆதாரங்களை, சான்றோர்களின் நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட வேண்டும்.

கட்டுரையின் எழுத்து நடையும், கருத்துக் கோர்வையும் செரிவானதாக இல்லாமல், அள்ளி இறைத்தாற்போலுள்ளது என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

இறுதியாக,

தொகுப்பாக, வினைசெய்யில் வந்திருக்கின்ற இந்தக் கட்டுரை என்பது தரவுகள் ஏதுமில்லாமல், யூகத்தின் அடிப்படையில், அகநிலைவாத கண்ணோட்டத்துடன் எழுதப்பட்டுள்ளது என்றுதான் முடிவு செய்ய முடிகிறது .இது குறித்து வினைசெய் ஆசிரியர் குழு தீவிரமாகப் பரிசீலிக்க வேண்டும். அது ஒன்றுதான், பாசிசத்திற்கு எதிரானப் போராட்டத்தில் ஒரு பரந்து விரிந்த அணியைக் கட்டவும், மக்களை அணி திரட்டவும் உதவும். மாறாக, இதே பாணியில் எழுதிக் கொண்டிருந்தால் ஜனநாயக முற்போக்கு புரட்சிகர சக்திகளிடமிருந்தும், அறிவித்துறையினரிடமிருந்தும் தனிமைப்படுவதைத் தவிர வேறு எந்தப் பலனும் கிட்டாது.

நட்பு சக்திகளிடம் வினைசெய், வெனையாக மாறக்கூடாது என்பதே என் போன்ற வாசகர்களின் அவா.

தோழமையுடன்

தமிழ்மணி

*****

தொடர்புடைய பதிவுகள்

பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!

நீங்கள் குட்டி முதலாளியா?

தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!

நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?

பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?

மூன்று "மக்கள் அதிகாரம்",! குழப்பம் தீருமா?

*****
வினை செய் கட்டுரை
*****
கார்ப்பரேட் காவிப் பாசிசம் வீழ்த்துவதுப் பற்றிய சரியானத் திசை வழி என்ன?

புரட்சிகர, ஜனநாயகச் சக்திகளுக்கு அறை கூவல்!

புதிய ஜனநாயகப் புரட்சிக்கு வழிகாட்டும் அரசியல் நடத்தை வழி!

“குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும், மக்களையும், பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளைச் சரியாக அவதானித்து, செயல்தந்திர அரசியல் வழியைத் தீர்மானிப்பது, அதற்கேற்பப் போராட்ட வடிவங்களையும், அமைப்பு வடிவங்களையும், முழக்கத்தையும் தீர்மானிப்பது” என்பதையே எமது செயல்தந்திர அரசியல் வழியாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.

இந்திய ஆளும் வர்க்கங்கள் 90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்தத் துவங்கியதைச் சரியாக அவதானித்து “நாடு மீண்டும் காலனியாவதைத் தடுப்போம்! பார்ப்பன (இந்து) மதவெறிப் பாசிசத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தைச் செயல்தந்திர அரசியலாகக் கொண்டுச் சென்றோம்.

2015 ஆம் ஆண்டில் எமது தலைமைக் குழு அவதானித்தபடி நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு கட்டமைப்பு நெருக்கடி என முன்வைத்துச் செயல்பட துவங்கினோம். இந்த அவதானிப்பில் நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட மார்க்சிய லெனினிய அமைப்பு இல்லாதச் சூழலில், புரட்சிகர அமைப்பின் அகநிலைச் சக்திகளைப் பற்றி மதிப்பீடு செய்வதிலும், புறநிலை எதார்த்தத்தை மதிப்பீடு செய்வதிலும் மிகையான பார்வையில், அகநிலைவாதக் கண்ணோட்டத்தில், மக்கள்திரள் வழியிலான அரசியலை நிராகரித்து, புரட்சிகர அரசியலைச் சாகச நடவடிக்கையாக மாற்றத் துணிந்து செயல்பட்டோம். 

இவ்வாறு நாட்டின் மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்கைத் தவறாக அவதானித்ததை நடைமுறை அனுபவத்தின் மூலமாக பாரிய அரசியல் தவறு என உணர்ந்து கொண்டோம். நாட்டை மறுகாலனியாக்குகின்ற சூழலில் அதற்குப் பொருத்தமாக பார்ப்பன இந்து மதவெறிப் பாசிசச் சக்திகளை ஏகாதிபத்தியங்களும் அவர்களின் தலைவனான அமெரிக்க மேல்நிலை வல்லரசும் ஆதரிக்கத் துவங்கியது. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆர்எஸ்எஸ் தலைமையிலானப் பார்ப்பனப் பாசிஸ்டுகள் தயாராகிக் கொண்டிருந்தபோது, அதாவது பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்காமல் செயல்பட்டுக் கொண்டிருந்ததைத் தவறு என உணர்ந்தோம். 

கட்டமைப்பு நெருக்கடி எனும் அரசியல் நிகழ்ச்சிப் போக்கின்போதே, கார்ப்பரேட் காவிப் பாசிசம் ஏறித்தாக்கி வருகிறது என வரையறுத்து முன் வைத்தபோது எமது அமைப்பின் தலைமைக் குழுவில் இருந்த ஒரு தோழரும், அமைப்பு முறையின்றி அவருக்கு விசுவாசமாக இருந்த கீழைக்காற்று பதிப்பகத்தின் பொறுப்பாளராகச் செயல்பட்ட துரை. சண்முகம் உள்ளிட்ட குட்டி முதலாளித்துவ பிரிவினர் சிலரும் கொல்லைப்புறமாகப் பாசிச எதிர்ப்பு அரசியலை திணிக்கின்றனர் என குதியாட்டம் போட்டனர்.

மக்களைப் புரட்சிக்கு அணிதிரட்டும் செயல்தந்திர அரசியல் வழி!
90-களில் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் மறுகாலனியாக்கக் கொள்கைகள் அமலாக்கப்படத் துவங்கியபோது நாட்டின் பிரதான நிகழ்ச்சிப் போக்கு என்பது மறுகாலனியாதிக்க அபாயமும், பார்ப்பன (இந்து) மதவெறி பாசிசச் சக்திகள் தலைதூக்குவதும்தான் என்பதை அனுமானித்து அதற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தோம். செயல்தந்திர அரசியல் வழியில் புரட்சிக்கு மக்களை அணிதிரட்ட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அரசியலைத் தயக்கமின்றி முன்வைத்து ஆயிரக்கணக்கான மக்களை புரட்சிகர அமைப்புகளின் கீழ் திரட்டி வந்தோம்.

2007 ஆம் ஆண்டு நடந்த ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் மீள முடியாத நெருக்கடியானது உலகம் முழுவதும் சொல்லிக் கொள்ளப்படும் ஜனநாயக அரசு வடிவங்களைத் தூக்கி எறிந்து விட்டு பாசிச சர்வாதிகார ஆட்சி வடிவங்களையே முன்னிறுத்தியது.  உலகில் செல்வாக்கு மண்டலங்களை உருவாக்கிக் கொள்வதற்கும், மறு பங்கீடு செய்து கொள்வதற்கும் உரிய வழிமுறையாக மறுகாலனிய அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கொள்கைகளை காலனிய நாடுகளின் மீது திணித்தனர்.

இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் கார்ப்பரேட் காவிப் பாசிசம் என்பது நாட்டின் பிரதான அபாயமாக மாறியது. இந்த நிகழ்ச்சிப் போக்கைப் பற்றி 2019 முதல் தீவிரமாக விவாதித்தாலும், 2021 ஆம் ஆண்டுதான் உரிய தரவுகளுடன் கார்ப்பரேட் காவிப் பாசிசமே நாட்டின் பிரதான அபாயம் எனவும், அது இந்தியாவின் வரலாற்றுத் தன்மைகளுக்கு பொருத்தமாக, கார்ப்பரேட் -காவிப் பாசிசம் எனும் இந்தியப் பாசிசமாக வெளிப்படுகிறது எனவும் வரையறைச் செய்து முன்வைத்தோம். 

அதனை வீழ்த்துவதற்கு புரட்சிகர ஜனநாயகச் சக்திகள், பாசிசத்தை எதிர்க்கின்ற அரசியல் இயக்கங்கள், ஆளும்வர்க்கத்தின் பாசிச எதிர்ப்புப் பிரிவு, தனிநபர்கள் உள்ளிட்ட அனைவரையும் ஒரே அணியாகக் கொண்டு வந்து பரந்த அளவிலான பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணி ஒன்றைக் கட்டியமைப்பதும், அதற்கு இணையாகவே கீழிருந்து விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், சிறு தொழில் முனைவோர், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத் துறையினர் அனைவரையும் கொண்ட பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணியைக் கட்டியமைப்பதும், அந்த முன்னணிகளின் மூலமாக தேர்தல் அரசியல் மற்றும் தேர்தலுக்கு வெளியில் போராடி, தற்காலிக இடைக்கால அரசாங்கமாக, ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை நிறுவ வேண்டும் என்பதை நாங்கள் முன் வைக்கின்றோம்.  

சோசலிசத்தை நோக்கி முன்னேறுகின்ற புதிய ஜனநாயகப் புரட்சிக்கு ஒரு இடைக்கட்டமாக தோன்றியுள்ள ஆளும் வர்க்கத்திற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் அதன் விளைவாக அரசியல், அமைப்பு, பண்பாட்டுத் துறைகளில் அமுல்படுத்தப்படும் பாசிசமயம், அரசு, அரசாங்கம் இரண்டுமே பாசிசமயமாவது போன்றவற்றை அவதானித்து அதனை வீழ்த்துவதற்குக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றை உடனடிக் கடமையாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதையும் முன்வைக்கின்றோம். அப்படிப்பட்டக் குறைந்தபட்ச செயல்திட்டம் ஒன்றையும் முன்வைத்து செயல்பட்டு வருகிறோம்.

குறிப்பிட்டத் தருணத்தில் நாட்டையும் மக்களையும் பாதிக்கின்ற மையமான அரசியல் நிகழ்ச்சிப் போக்குகளை முறியடிக்கின்ற வகையில் செயல்தந்திரங்களை வகுத்து செயல்படும்போது, அவை நீண்டகாலக் கண்ணோட்டத்தில் போர்தந்திர அரசியலுக்கு உட்பட்டே செயல்பட முடியும் எனும் மார்க்சிய லெனினிய அணுகுமுறையில் குறைந்தபட்ச செயல் திட்டத்தை முன்வைக்கின்றோம். இந்த குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் புரட்சிகர, ஜனநாயகச் சக்திகள் மற்றும் ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட பேச்சுவார்த்தை நடத்தி ஐக்கியத்தை உருவாக்க முயற்சி செய்து வருகின்றோம். இவைதான் சர்வதேச ரீதியில் பாசிசத்தை எதிர்த்துப் போராடி முறியடித்தக் கம்யூனிச இயக்கங்களின் அனுபவம் என நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

மாவோயிஸ்ட் அமைப்புகளில் இருந்து வெளியேறியத் தோழர் பாலன் போன்ற சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் என முன்வைத்துக் கொண்டு தேர்தல் அரசியல் கட்சிகள், தேர்தலைப் புறக்கணிக்கின்ற அமைப்புகள் ஆகியவற்றுடன் குறிப்பிட்ட விகிதத்தில் உறவும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனிநபர்கள், அமைப்பு பலம் இல்லாத வாய்ச்சவடால் பேர்வழிகள் போன்றவர்களை இணைத்துக் கொண்டு பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி என ஒன்றை நிறுவி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாசிசத்தை வீழ்த்துவதற்கு திட்ட வகைப்பட்ட செயல்பாடு அல்லது மாற்றுத் திட்டம் இல்லாத மானசீகவாதம் என்பதுதான் இவர்களின் பாசிச எதிர்ப்பு கொள்கையாக இருப்பதால் இதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

அடுத்து வெற்றிவேல் செழியன் என்பவருடன் எமது அமைப்பை விட்டு வெளியேறியச் சிலர் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், இன்னமும் நாட்டில் பாசிச அபாயம் வரவில்லை, வந்தால் பார்த்துக் கொள்ளலாம். அப்போது ஐக்கிய முன்னணி கட்டுவோம். அதுவரை மக்கள் முன்னணியைக் கட்டி செயல்படுவோம் எனப் பாசிச எதிர்ப்பு பற்றி தோழர் ஜார்ஜ் டிமிட்ரோவ் கூறிய வழிமுறையைத் திரித்துப் புரட்டி சந்தர்ப்பவாதமாகப் பேசி வருகின்றனர். பாசிசத்தை அதன் தயாரிப்பு கட்டத்திலேயே முறியடிக்க வேண்டும் என்பதை மறுக்கின்றனர். 

இவர்களைப் பொறுத்தவரை எமது அமைப்பு 90களில் இருந்து கடைப்பிடித்து வரும் செயல்தந்திர அரசியல் வழிமுறையில் செயல்பட தேவையில்லை, “செயல்தந்திர முழக்கங்களை முன்வைத்து அதன் கீழ் மக்களை திரட்டுவது என்பதே அல்லேலூயா பஜனைப் போல பேசுவதுதான்” எனத் தனது அணிகளுக்கு வகுப்பெடுத்துக் கொண்டே, பொது வெளியில் காவி - கார்ப்பரேட் பாசிசம் எனப் பேசுகின்றனர். தேர்தலை எந்தக் காலத்திலும் பயன்படுத்தவே முடியாது எனும் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளாக செயல்படுகின்றனர். தேர்தல் பற்றி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவத்தையோ அல்லது தேர்தல் பங்கேற்பு அல்லது புறக்கணிப்பு போன்றவற்றைப் பற்றி தோழர் ஸ்டாலின், லெனின் போன்றவர்கள் முன்வைத்ததைப் பற்றியோ எதையும் ஆழமாகக் கிரகித்துக் கொள்ளத் திராணியின்றி உள்ளனர். எமது அமைப்பின் அரசியல் கோட்பாட்டு முடிவுகளைக் கூட இது நாள் வரை புரிந்து கொள்ளாமல் செயல்பட்டு உள்ளனர் என்பதும் உறுதியாகிறது. 

திடீரென்று இப்போது, “வேண்டாம் பிஜேபி, வேண்டும் ஜனநாயகம்” என மொட்டையாக முழக்கத்தை முன்வைத்துள்ளனர். அவர்கள் முன்வைக்கின்ற ஜனநாயகம் போலி ஜனநாயகமா அல்லது புதிய ஜனநாயகமா என்பதைக் கூட தெளிவாக முன் வவைக்கவில்லை. அவர்களின் மேடையில் பேசும் திருமுருகன் காந்தி, வேண்டாம் பிஜேபி என்றால் மக்கள் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ அவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள்; அவர்கள் முட்டாள்கள் இல்லை என உளறிக் கொட்டினார். திருமுருகன் போன்றக் குட்டி முதலாளித்துவச் சக்திகளுடன் ஐக்கியத்தைப் பேணி, மார்க்சிய லெனினிய செயல்தந்திர அரசியல் வழியை நிராகரித்து செயல்படும் வெற்றித் தரப்பினர் முன்வைக்கின்ற இந்த வழிமுறையும், போகாத ஊருக்கு இல்லாத வழியை முன்வைக்கின்ற வழியாகும் என்பதால் அதனை நாங்கள் நிராகரிக்கின்றோம்.

முத்துக்குமார் என்பவருடன் வெளியேறிச் சென்றுள்ள சிலர் காவிக் கார்ப்பரேட் பாசிசம் எனக் கூறிக் கொண்டாலும், தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக பயன்படுத்தலாம், ஆனால் முதலாளித்துவக் கட்சிகளான திமுக, காங்கிரஸ் பின்னால் நின்று கொண்டு அதனை எதிர்கொள்ளக் கூடாது என அகநிலைவாத அடிப்படையில் பேசித் திரிகின்றனர். இவர்களும் தேர்தல் புறக்கணிப்பு எனக் கூறிக் கொண்டாலும் திட்டவட்டமாகப் புதிய ஜனநாயகப் புரட்சி என முன் வைப்பதில்லை. மாறாக ஜனநாயக குடியரசு என ஏதோ ஒன்றை இவர்கள் அகநிலைக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றனர். இந்த வரையறை எதிரிகளைப் பற்றிக் குறைத்து மதிப்பிடுவதும், உத்திரவாதமான வாழ்க்கைப் பின்னணியைக் கொண்டுள்ள குட்டி முதலாளித்துவ சக்திகளான இவர்கள், தனக்கு நேரடியாகப் பாதிப்பு இல்லை எனும் கண்ணோட்டத்தில் இருந்து தான்தோன்றித்தனமாகப் பேசிக் கொண்டிருப்பதும் என இருப்பதால் இந்த வழிமுறையும் பாசிசத்தைத் துளி கூட அசைத்துப் பார்க்காது என்றே கருதுகிறோம்.
 
அதுமட்டுமின்றி பாசிசம் வரவில்லை, இந்தியா முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றெல்லாம் பருண்மையான ஆய்வு முடிவுகள் இன்றி வாய்வழி பிரச்சாரம் செய்வதன் மூலம், மார்க்சிய லெனினிய வழிமுறையைக் கைவிட்டு விலகி விட்டனர் என அவதானிக்கின்றோம்.

எமது அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற அல்லது பிளவுபடுத்திக் கொண்டு வெளியேறிய வெற்றிவேல் செழியன் மற்றும் முத்துக்குமார் ஆகிய இருவரும் இரண்டு குழுக்களாக, தனிநபர்களாக இருந்துக் கொண்டு மேற்கண்டக் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
 
இதன் மூலம் புரட்சிகர அரசியல் முன்னேறுவதற்கு தற்காலிகமாக சில தடைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி, அவர்களை நம்பி அவர்களுக்குப் பின்னால் சென்றுள்ள தோழர்களையும் குழப்பியடித்து, விரக்தியிலும், எதுவும் நடக்காது எனும் சூனியவாதத்திலும் மூழ்கடிக்க எத்தனிக்கின்றனர். இதனால்தான் வெற்றிவேல் தரப்பின் செய்தித் தொடர்பாளர் மருது என்பவர் 2024 தேர்தலில் பாஜகவை வீழ்த்த முடியாது என உளறிக் கொண்டுள்ளார்.

பாசிசம், பாசிச எதிர்ப்பு என்பதில் இரண்டே முகாம்கள்தான் உள்ளது. ஒன்று கார்ப்பரேட் காவிப் பாசிசத்தைக் கொண்டு வரும் ஆர் எஸ் எஸ் பாஜக முகாம்.. மற்றொன்று அதனை எதிர்த்துப் போராடும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட முகாம். இந்த இரண்டு எதிரெதிர் முகாம்களில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு எதிராகக் கூட்டணி அமைத்துள்ள தேர்தல் கட்சிகளில் ஒரு பிரிவைச் சார்ந்து, அதாவது திமுக, காங்கிரசைச் சார்ந்து நின்று ஆர் எஸ் எஸ் பாஜக பாசிசத்தை வீழ்த்தி விட முடியும் என எமது அமைப்பிலிருந்து வெளியேறி, திமுகவை ஆதரித்து வரும் முன்னாள் மகஇக செயலர் மருதையன் செயல்பட்டு வருகிறார்.
 
தேர்தலின் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் எனத் திட்டவட்டமாக அவர் முன் வைக்கிறார். இது பாசிசத்தை வீழ்த்துவதற்கு முழுமையற்ற, மக்களை மீண்டும் பாசிச காட்டாட்சியின் கீழ் ஆழ்த்துகின்ற எளிமையான, ஆனால் தோற்றத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட வழிமுறையாகும். இது பாசிச எதிர்ப்பு போர்வையில் உலவுகின்ற குட்டி முதலாளித்துவ தர்க்கம் ஆகும். 

அது மட்டுமல்ல, இது பாசிசத்தை வீழ்த்துவது எனும் முகாந்திரத்துடன் தற்போது இந்தியாவில் நிலவுகின்ற போலி ஜனநாயகத்தை நம்பி ஏமாறுவதாகும். பாசிசம் தோன்றுவதற்கு அடிப்படையான போலி ஜனநாயக அரசு கட்டமைப்பை நம்ப வைத்து மக்களை மீண்டும் பாசிச புதைகுழிக்குள் ஆழ்த்துவதற்கு செயல்படுகிறது என்பதால் இந்த வழிமுறையை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கின்றோம்.

நாட்டை சூழ்ந்திருக்கும் மிக முக்கியமான கொடூரமான அபாயமான கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு நாங்களும் செயல்படுகின்றோம் எனக் கூறிக்கொண்டு இத்தகையத் தவறானக் கண்ணோட்டத்தை, பாசிசத்தை சிறிதும் அசைத்துப் பார்க்காத வழிமுறைகளை முன் வைக்கின்ற தனி நபர்கள் மற்றும் சிறு சிறு குழுக்கள் போன்றவை பாசிச அபாயத்தை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்துத் தனக்குப் புரிந்த வகையில் எதிர்த்துப் போராடுவதற்கானத் தீர்வை முன்வைக்கின்றனர். இவை பாசிச எதிர்ப்புப் போராட்டத்தின் திசை வழியைக் குழப்புவதிலும், பாட்டாளி வர்க்கத்தை கையறு நிலைக்கு தள்ளுவதிலும் உரிய பங்களிக்கின்றது என்பதால் இவற்றை நிராகரிக்க வேண்டும் எனப் பாட்டாளி வர்க்கத்தின் முன்வைக்கின்றோம்.

நாட்டில் உள்ள மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவது எனும் வகையில் ஆர்எஸ்எஸ் செயல்படுவதால் மிகப்பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. தலித்துகள், பழங்குடியினர் மீது அன்றாடம் வன்முறைகளும், கொலை வெறியாட்டமும் நிகழ்த்தப்படுகிறது. சொல்லிக் கொள்ளப்படும் இந்துக்களை பார்ப்பனக் கும்பலின் நிரந்தர அடிமைகளாக மாற்ற எத்தனிக்கும் சனாதனத் தர்மம் எனும் வர்ணாசிரமக் கொடுமை உயர்ந்தது எனத் துணிச்சலுடன் பேசப்படுகிறது. இன்று, நாட்டின் அரசியல், பொருளாதாரம் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நாடுகளின் மறுகாலனியாகி வருகிறது. 

இத்தகையக் கொடூரமானச் சூழ்நிலையில் நாட்டை ஏறித்தாக்கி வரும் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் மட்டுமின்றி ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவுடன் கூட்டுச் சேர்ந்து, தற்காலிகமான சில சமரசங்களுடன்தான் ஆர்எஸ்எஸ் பாஜகவை வீழ்த்த முடியும் என்பதில் தெளிவாகவே இருக்கின்றோம். இதற்கு தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்த வேண்டும் எனப் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை முன்வைக்கின்றோம். 

அதே சமயத்தில் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டு பல்வேறு பிரிவு உழைக்கும் மக்களை வர்க்க ரீதியாக அணி திரட்டுவதும் அவர்களின் ஒற்றுமையைக் கட்டியமைப்பதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக மக்கள் முன்னணி மூலம் நேரடியாக கீழிருந்து ஆர்எஸ்எஸ் பாஜகவை நேருக்கு நேர் நின்று வீழ்த்துவதற்குத் தயார்படுத்துவதும், அதற்கு இணையாக நாங்கள் முன்வைக்கும் குறைந்தபட்ச செயல்திட்டத்தைக் கீழிருந்து   அமல்படுத்துகின்ற வகையில் செயல்படுவதும் அவசியம் என்பதை முன் வைக்கின்றோம்.

பாசிசத்தை வீழ்த்துவதற்கு இருவழிப் போராட்டங்களின் மூலமாக முன்னேறிச் செல்ல வேண்டும் என முன்வைப்பதைப் புரிந்து கொள்ள முடியாத சிலர் ஆளும் வர்க்கக் கட்சிகளில் ஒன்றான காங்கிரசுடன் எந்த காலத்திலும் உறவு கூடாது. கடந்த காலத்தில் அப்படித்தானே இருந்தோம் என அனுபவவாதம் பேசுவதுடன், தேர்தல் அரசியல் கட்சிகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டு நடவடிக்கைக் கூடாது எனப் பிதற்றுவதன் மூலம் சுயம்பிரகாசவாதிகளாகத் தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அகநிலை சக்திகளின் பலம், பலவீனம் பற்றி புரிந்துக் கொள்ளாத அல்லது புரிந்துக்கொள்ள விரும்பாத இத்தகைய வறட்டுக் கோட்பாட்டுவாதமும், குறுங்குழுவாத கண்ணோட்டமும் பாசிசத்தை ஒருபோதும் வீழ்த்தாது என்பது மட்டுமல்ல. ஒரு துளி அளவிற்குக் கூடப்  பாசிஸ்டுகளை பின்வாங்கச் செய்யாது என்பது மட்டும் நிச்சயமாகும். 

இத்தகைய வறட்டு கோட்பாட்டுவாதிகளை பொறுத்தவரை அவர்களின் நோக்கம், கட்சியை நடத்திக் கொண்டிருப்பது அல்லது தன்னை முற்போக்கு சக்திகளாகக் காட்டிக் கொள்வது என்பதுதானே ஒழிய வேறில்லை. ஆனால் கார்ப்பரேட் காவிப் பாசிசத்தை வீழ்த்துவதன் மூலம் தற்காலிக இடைக்கால அரசாங்கத்தை, ஜனநாயகக் கூட்டரசை நிறுவுவதும், புதிய ஜனநாயகப் புரட்சியை நோக்கி முன்னேறுவதும் காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து எமது செயல்பாடுகளில் தங்களின் துணையுடன் முன்னேறுகிறோம்.

தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
வினை செய்.
*****

Tuesday, 27 June 2023

பாம்பு படமெடுத்து சீறுகிறது! என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருப்பது பாஜக-ஆர் எஸ் எஸ் அபாயம். ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக - வை விரட்டியடிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் புதை குழிக்குத் தள்ளப்படுவோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பாஜகவுக்கு எதிரானக் கருத்துக்களை கூர்மைப்படுத்தி அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பாஜகவை எதிர்க்கின்ற அனைவருக்கும் உண்டு. பாஜகவுக்கு எதிராக திராவிட இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் என பலரும் களமாடி வருகின்றனர். இதுகுறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய போராட்டச் செய்திகள் மற்றும் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

ஆனால், இத்தகையக் செய்திகளை/கருத்துக்களை, கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் பகிர வேண்டும்; பரப்ப வேண்டும். அதற்கு மாறாக, தங்களுடைய இயக்கம் சார்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை மட்டும் பகிர்வது, மாற்று இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என்பது பாஜகவுக்கு மட்டுமே வலு சேர்க்கும் என்பதை பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிற அனைவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தங்களுடைய கட்சிகளை/இயக்கங்களை மட்டுமே வளர்ப்பது என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, பிஜேபி-யை வீழ்த்துவதற்காக செயலாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் தொடர அனுமதிப்போமேயானால், வரும் காலத்தில் பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளுமே காணாமல் ஆக்கப்பட்டுவிடும். குறைந்தபட்சம் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது மேற்கண்ட ஆலோசனையை கணக்கில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதே எனது அவா.

உங்களைக் கொத்திக் கொல்ல கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து நிற்கிறது. மக்கள் படைக்கட்டி, களத்தில் முட்டி மோதி படமெடுத்து நிற்கும் பாம்பை வீழ்த்துவோம் என வீரவசனம் பேசிக்கொண்டு அதற்கான வியூகங்களை நீங்கள் வகுப்பதற்குள் அது உங்களைப் போட்டுத் தள்ளிவிடும். கால் செருப்போ, தோளில் உள்ள  கைத்துண்டோ எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு, படை எடுத்து நிற்கும் பாம்பைத் தட்டி விட்டு, பிறகு அதை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு தடிகளை எடுப்பதே அறிவுடைமை. 

தமிழ்மணி

Thursday, 23 March 2023

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - இறுதிப் பகுதி

 IX

ஹிண்டன்பர்க்கைப் புரிந்து கொள்ள வேண்டுமா? நாக்பூரைப் படி!

குஜராத்தில் இஸ்லாமியர்களைக் கொன்றொழித்ததைப்போல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் கொல்ல முடியாது என்பதால், அவர்களை நாட்டைவிட்டே விரட்டும் நோக்கத்துடன் 2019 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களுக்குப் பிறகு அச்சட்டம் ஷாகின்பாக்குகளில் புதைக்கப்பட்டன.

நிலத்தைவிட்டே விவசாயிகளை வெளியேற்றி, விலை நிலங்களை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க ஏதுவாக 2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்கள், ஓராண்டு 'டெல்லி சலோ' போராட்டங்களால் புதை குழிக்கு அனுப்பப்பட்டன.

ஏற்கனவே தொழிலாளர்களுக்கு ஓரளவு பாதுகாப்பாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, 4 சட்டத் தொகுப்புகளாக்கி, தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து, இனி தொழிலாளர்களை முதலாளிகள் வரைமுறையின்றி சுரண்டுவதற்கு ஏற்ப, 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள் மட்டும் ஏனோ போதிய எதிர்ப்பின்றி நடைமுறைக்கு வந்துவிட்டன.

இவை தவிர,

அரசியல் துறையில்,

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட  எதிர்கட்சிப் பிரதிநிதிகளை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தி மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவது, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் எதிர்கட்சியினர் மீது ஆயுதப் பயிற்சி பெற்ற RSS குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது, பொய்வழக்குகள் போட்டு அடக்க முனைவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் RSSல் பயிற்சி பெற்ற தனது ஆட்களை ஆளுநர்களாக நியமித்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பது, வெளிஉறவு உள்ளிட்ட முக்கியமானத் துறைகளில் RSS ஆட்களை பணியில் அமர்த்துவது, மாநில மொழிகளை ஒழித்துக்கட்டி அவ்விடத்தில் முதலில் இந்தியைப் புகுத்தி இறுதியல் சமஸ்கிருத்தை இந்தியாவின் ஆட்சி மொழியாக்குவது

பொருளாதாரத் துறையில்,

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த அதானி-அம்பானி போன்ற முதலாளிகள் நாட்டு வளங்களை கொள்ளையடிக்க வழிவகை செய்வது, அதற்கு ஏற்ப சட்டங்களை இயற்றுவது அல்லது திருத்துவது, பொதுத்துறை வங்கிகளில் குவிந்து கிடக்கும் மக்கள் பணத்தை முதலாளிகளுக்குக் கடனாக வாரிக் கொடுப்பது, பிறகு வாராக் கடன் என்ற போர்வையில் அவற்றைத் தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு பட்டை நாமம் போடுவது,

மோடி அரசின் அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக சாதி-மத-இன-மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தியே வைத்திருக்க முயற்சிப்பது, மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்காக அவ்வப் பொழுது சாதி-மத-இனக் கலவரங்களை திட்டமிட்டே அரங்கேற்றுவது,

என ஒட்டு மொத்தமாக ஒரு மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு.

மோடியை இயக்குவது RSS. RSS-ஐக் கட்டுப்படுத்துவது பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நோக்கம் தங்களின் மேலாதிக்கத்தை நிலை நிறுத்தவது. ஒரு பக்கம் நாமெல்லாம் இந்துக்கள் என அணிதிரட்டிக் கொண்டே மறுபக்கம் மற்ற சாதியினரைவிட பார்ப்பனர்களே மேலானவர்கள் என்கிற சமத்துவமற்ற படிநிலை வருண-சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துவது, ஒவ்வொரு சாதியும் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்ள வேண்டும்  எனப் பேசுவது, இதையே இந்து தர்மம்-சனாதன தர்மம் எனக் கூறிக் கொண்டு, நாக்பூரில் திட்டம் வகுத்து அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தி வருகின்றனர்.


அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பலர், பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் அது சாதிய அமைப்பு முறைக்கு பேராபத்து என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. எனவே தொழில் நடத்துவதிலிருந்து அரசு முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி வருகிறது மோடி அரசு. புதிய தாராளமயக் கொள்கையும் இவர்களின் நோக்கத்தோடு ஒன்று சேர்வதால் இது மேலும் தீவிரமடைகிறது.

மன்னராட்சி கோலோச்சிய நிலவுடமை காலகட்டத்தில், ஒவ்வொரு சாதியினரும் அவரவர் குலத்தொழிலை மட்டுமே செய்வதை உறுதி செய்வது, குடிமக்களிடம்  வரி வசூல் செய்வது, சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லைகளைக் காப்பது உள்ளிட்ட நிர்வாக வேலைகளை மட்டுமே மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு மேற்கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்ததால் சாதியப் படுநிலையில் தங்களை மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொண்டதோடு, மன்னனே தங்களுடைய ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி வந்தனர். பிற்கால சேர சோழ பாண்டியர் ஆட்சிகள் இவ்வாறுதான் நடைபெற்று வந்துள்ளன.

ஆனால் இன்று, அரசாங்கமே தொழில் நடத்துவதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிறசாதினர் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதை பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வசதி வந்தவுடன் பிறசாதியினர் தங்களை மதிப்பதில்லை என்பதாகவும், தங்களுடைய மேலாதிக்கும் சிதைவதாகவும் கருதுகின்றனர். அதனால்தான் முதலில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துவிட்டு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழங்கியவர்கள், அது சாத்தியமில்லை என்பதனால், தற்காலிகமாக தங்களுடைய ஆதிக்கத்தை  நிலைநிறுத்திக்கொள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர். 

ஆனால்  ”தொழில் நடத்துவது அரசின் வேலை அல்ல, மாறாக சிறந்த நிர்வாகத்தை வழங்குவதே அரசின் கடமை” (good governance) என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் பார்ப்பனர்கள் தனியார் மயத்தை வரவேற்கின்றனர், ஊக்கப்படுத்துகின்றனர்.

தொழில் நடத்துவதிலிருந்து அரசு வெளியேறுவதையும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதையும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதையும் மோடி அரசு நடைமுறைப்படுத்துவது புதிய தாராளமாக கொள்கையின் அடிப்படையிலானது மட்டுமல்ல, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது.  இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு கேள்வி கேட்பவரை அடக்கி ஒடுக்கி நசுக்குவது, அதற்காக அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக அனைத்து பஞ்சமா பாதக செயல்களையும் செய்வது என்பதுதான் மோடி வகையறாக்களின் நடைமுறையாக உள்ளது.

எனவே, நாக்பூரைப் புரிந்து கொண்டால்தான் மோடி எதற்காக அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகள் பக்கம் நிற்கிறார் என்பதையும் முதலாளிகள் ஏன் மோடியை ஆதரிக்கிறார்கள் என்பதையும், ஹிண்டன்பர்க் அறிக்கையையும் நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

அரசியல் அதிகாரத்திலிருந்து நாக்பூர் கூட்டத்தை அகற்றாத வரை இந்த அவலங்கள் மேலும் தீவிரமாக தொடரவே செய்யும்.

முற்றும்.

நன்றி

வணக்கம்

பொன்.சேகர்

(குறிப்பு: ஹிண்டன்பர்க் அறிக்கையையொட்டி அதானி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, 10.03.2023 அன்று காலை 10 மணி அளவில்,  எல்ஐசி அலுவலகத்திற்கு முன்பாக இராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையின் விரிவாக்கப்பட்ட  கட்டுரைத் தொடர் இது).

தொடர்புடைய பதிவுகள்


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6

ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2


ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1

Monday, 27 December 2021

ஆம்பூரில் கீழ்வெண்மணி நினைவு நாள்!

1968, டிசம்பர் 25; அரைபடி நெல் கூலி கூடுதலாகக் கேட்டதற்காகவா 44 கூலி ஏழை விவசாயிகளை குடிசைக்குள்  எரித்துக் கொலை செய்தார்கள் பண்ணையார்கள்? இது நம்பும்படியாகவா இருக்கிறது? அரை படி நெல் என்பது பண்ணையார்களுக்கு பெரிய சுமை அல்லவே! கூலியை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதற்கேற்ப கூடுதலாக வேலை வாங்கிக் கொள்ள பண்ணையார்களால் முடியும். பிறகு ஏன் 44 பேரை உயிரோடு எரித்தார்கள்?

தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட அனைத்து பட்டியலினச் சாதி மக்களும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள்தான். இவர்கள் கூலிகளாக  இருப்பது மட்டுமல்ல சாதியப் படிநிலையில் ஆக கீழ்மட்டத்தில் இருக்கும் சேரி மக்கள். இவர்கள் கூலி வேலை செய்யும் நிலங்கள் சாதியப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருக்கும் மூப்பனார், நாயுடு போன்ற ஆதிக்கச் சாதியினருக்குச் சொந்தமானவை. நிலவுடைமையாளர்களாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் உயர்சாதியினர் என்பதனால் ஆண்டைகள் என்றே சேரி மக்களால் அழைக்கப்பட்டனர்.

நேற்றுவரை கைகட்டி, வாய் பொத்தி, கொடுப்பதை வாங்கிக்கொண்டு கூனிக்குறுகி, வாழ்ந்த சேரி மக்கள் இன்று சங்கம் வைத்து, செங்கொடி ஏந்தி, நெஞ்சை நிமிர்த்தி, முழக்கமிட்டு கேட்டதுதான் பண்ணையாளர்களுக்குப் பிரச்சனை.

சங்கம் எதற்கு? செங்கொடி எதற்கு? கூனிக்குறுகி கேட்க வேண்டியவன் நெஞ்சை நிமிர்த்தி கேட்பது ஆண்ட சாதிக்கு எதிரானதல்லவா? இப்படித்தான் ஆதிக்கசாதி பண்ணையார்கள் விவசாயிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை பார்த்தார்கள். பண்ணை ஆதிக்கமும் சனாதன ஆதிக்கமும் சரிவதை பண்ணையார்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு கோபாலகிருஷ்ண 'நாயுடு' தலைமையில் கீழ்வெண்மணி படுகொலை.

00000

ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, ஒரு பக்கம் நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வருகிறது; மற்றொரு பக்கம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு என்கிற சனாதன தர்ம இந்து  இராஷ்டிரத்தைக் கட்டமைக்க முயன்று வருகிறது.

மேற்கண்ட இரண்டையும் எதிர்ப்பவர்களை ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ஏற்ப, சட்டங்களைத் திருத்தி பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைத்தான் கார்ப்ரேட் காவி பாசிசம் என்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவில்லை என்றால் இந்தியா ஈராயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும். எனவே, சுரண்டப்படும் மக்கள், ஒடுக்கப்படும் மக்கள் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் சனாதன சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயம். இதை  உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பில் 26.12.2021 அன்று மாலை ஆம்பூரில் வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

00000

மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியக் குடியரசுக் கட்சி ஆம்பூர் நகரத் தலைவர் தோழர் சுரேந்திரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சந்திரன்  அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் தோழர் ஏகாம்பரம் அவர்களும், பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர் இராஜேந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில சான்றோர் அணி கவிஞர் திவாகரன் அவர்களும், கவிஞர் யாழன் ஆதி அவர்களும் உரையாற்றினர். 

கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி மக்கள் முன்னணியின் அவசியம் குறித்து மக்கள் அதிகாரம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன் அவர்கள் இறுதியாக எழுச்சியுரை ஆற்றினார். 

இடையிடையே மக்கள் கலை இலக்கியக் கழக வேலூர் மாவட்ட கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ வைத்தன. ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன் அவர்கள் நன்றியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. சுமார் 60 பேர் கலந்து கொண்ட கருத்தரங்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஆம்பூரில் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.












தகவல்

மக்கள் அதிகாரம்
திருப்பத்தூர் மாவட்டம்