Sunday, 12 May 2024
சாதிய ஒடுக்கு முறைகளுக்கு முடிவே கிடையாதா?
Monday, 18 September 2023
"வினைசெய் 2.0" வெனையாக மாறுகிறதோ?
தொடர்புடைய பதிவுகள்
பொதுவுடமை இயக்கங்களில் அறிஞர்களின் தேவை!
தமிழ் நாட்டில் புற்றீசல்கள் போல பல்கிப் பெருகும் முற்போக்கு உதிரி அமைப்புகள்!
நீங்கள் கூத்தாடிகளாக இருக்க விரும்புகிறீர்களா?
பொதுவுடமைக் கட்சிகளைப் பார்ப்பனர்கள் உடைக்கிறார்களா?
Tuesday, 27 June 2023
பாம்பு படமெடுத்து சீறுகிறது! என்ன செய்யப் போகிறோம்?
தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருப்பது பாஜக-ஆர் எஸ் எஸ் அபாயம். ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக - வை விரட்டியடிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் புதை குழிக்குத் தள்ளப்படுவோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
பாஜகவுக்கு எதிரானக் கருத்துக்களை கூர்மைப்படுத்தி அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பாஜகவை எதிர்க்கின்ற அனைவருக்கும் உண்டு. பாஜகவுக்கு எதிராக திராவிட இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் என பலரும் களமாடி வருகின்றனர். இதுகுறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய போராட்டச் செய்திகள் மற்றும் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர்.
ஆனால், இத்தகையக் செய்திகளை/கருத்துக்களை, கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் பகிர வேண்டும்; பரப்ப வேண்டும். அதற்கு மாறாக, தங்களுடைய இயக்கம் சார்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை மட்டும் பகிர்வது, மாற்று இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என்பது பாஜகவுக்கு மட்டுமே வலு சேர்க்கும் என்பதை பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிற அனைவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
தங்களுடைய கட்சிகளை/இயக்கங்களை மட்டுமே வளர்ப்பது என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, பிஜேபி-யை வீழ்த்துவதற்காக செயலாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் தொடர அனுமதிப்போமேயானால், வரும் காலத்தில் பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளுமே காணாமல் ஆக்கப்பட்டுவிடும். குறைந்தபட்சம் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது மேற்கண்ட ஆலோசனையை கணக்கில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதே எனது அவா.
உங்களைக் கொத்திக் கொல்ல கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து நிற்கிறது. மக்கள் படைக்கட்டி, களத்தில் முட்டி மோதி படமெடுத்து நிற்கும் பாம்பை வீழ்த்துவோம் என வீரவசனம் பேசிக்கொண்டு அதற்கான வியூகங்களை நீங்கள் வகுப்பதற்குள் அது உங்களைப் போட்டுத் தள்ளிவிடும். கால் செருப்போ, தோளில் உள்ள கைத்துண்டோ எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு, படை எடுத்து நிற்கும் பாம்பைத் தட்டி விட்டு, பிறகு அதை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு தடிகளை எடுப்பதே அறிவுடைமை.
தமிழ்மணி
Thursday, 23 March 2023
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - இறுதிப் பகுதி
IX
ஹிண்டன்பர்க்கைப்
புரிந்து கொள்ள வேண்டுமா? நாக்பூரைப் படி!
குஜராத்தில்
இஸ்லாமியர்களைக் கொன்றொழித்ததைப்போல, இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும்
கொல்ல முடியாது என்பதால், அவர்களை நாட்டைவிட்டே விரட்டும் நோக்கத்துடன் 2019 ஆம் ஆண்டு
கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களுக்குப்
பிறகு அச்சட்டம் ஷாகின்பாக்குகளில் புதைக்கப்பட்டன.
நிலத்தைவிட்டே
விவசாயிகளை வெளியேற்றி, விலை நிலங்களை கார்ப்பரேட்டுகளின் கைகளில் ஒப்படைக்க ஏதுவாக
2020 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வேளாண் திருத்தச் சட்டங்கள், ஓராண்டு 'டெல்லி சலோ' போராட்டங்களால் புதை குழிக்கு அனுப்பப்பட்டன.
ஏற்கனவே தொழிலாளர்களுக்கு
ஓரளவு பாதுகாப்பாக இருந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை, 4 சட்டத் தொகுப்புகளாக்கி, தொழிலாளர்களின்
கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பறித்து, இனி தொழிலாளர்களை முதலாளிகள் வரைமுறையின்றி சுரண்டுவதற்கு
ஏற்ப, 2022 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட தொழிலாளர் நல சட்டத் திருத்தங்கள் மட்டும் ஏனோ
போதிய எதிர்ப்பின்றி நடைமுறைக்கு வந்துவிட்டன.
இவை தவிர,
அரசியல் துறையில்,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்கட்சிப் பிரதிநிதிகளை மிரட்டிப் பணிய வைப்பது
அல்லது விலைக்கு வாங்கி ஆட்சிக் கவிழ்ப்புகளை நடத்தி மாநில அரசுகளை தனது கட்டுப்பாட்டில்
கொண்டு வருவது, மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் எதிர்கட்சியினர்
மீது ஆயுதப் பயிற்சி பெற்ற RSS குண்டர்களைக் கொண்டு தாக்குதல் நடத்துவது, பொய்வழக்குகள்
போட்டு அடக்க முனைவது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் RSSல் பயிற்சி பெற்ற தனது
ஆட்களை ஆளுநர்களாக நியமித்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பது, வெளிஉறவு உள்ளிட்ட முக்கியமானத் துறைகளில் RSS ஆட்களை பணியில் அமர்த்துவது, மாநில மொழிகளை ஒழித்துக்கட்டி
அவ்விடத்தில் முதலில் இந்தியைப் புகுத்தி இறுதியல் சமஸ்கிருத்தை இந்தியாவின் ஆட்சி
மொழியாக்குவது
பொருளாதாரத்
துறையில்,
அரசு மற்றும்
பொதுத்துறை நிறுவனங்களை ஒழித்துவிட்டு தனியார் முதலாளிகளை குறிப்பாக குஜராத்தைச் சேர்ந்த
அதானி-அம்பானி போன்ற முதலாளிகள் நாட்டு வளங்களை கொள்ளையடிக்க வழிவகை செய்வது, அதற்கு
ஏற்ப சட்டங்களை இயற்றுவது அல்லது திருத்துவது, பொதுத்துறை வங்கிகளில் குவிந்து கிடக்கும்
மக்கள் பணத்தை முதலாளிகளுக்குக் கடனாக வாரிக் கொடுப்பது, பிறகு வாராக் கடன் என்ற போர்வையில்
அவற்றைத் தள்ளுபடி செய்து வங்கிகளுக்கு பட்டை நாமம் போடுவது,
மோடி அரசின்
அரசியல்-பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய மக்கள் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது
என்பதற்காக சாதி-மத-இன-மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தியே வைத்திருக்க முயற்சிப்பது,
மக்களின் ஒற்றுமையை சிதைப்பதற்காக அவ்வப் பொழுது சாதி-மத-இனக் கலவரங்களை திட்டமிட்டே
அரங்கேற்றுவது,
என ஒட்டு மொத்தமாக
ஒரு மக்கள் விரோத அரசாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது மோடி அரசு.
மோடியை இயக்குவது
RSS. RSS-ஐக் கட்டுப்படுத்துவது பார்ப்பனர்கள். பார்ப்பனர்களின் நோக்கம் தங்களின் மேலாதிக்கத்தை
நிலை நிறுத்தவது. ஒரு பக்கம் நாமெல்லாம் இந்துக்கள் என அணிதிரட்டிக் கொண்டே மறுபக்கம் மற்ற சாதியினரைவிட பார்ப்பனர்களே மேலானவர்கள் என்கிற சமத்துவமற்ற படிநிலை வருண-சாதி அமைப்பு முறையை நியாயப்படுத்துவது, ஒவ்வொரு சாதியும் அவரவர் குலத்தொழிலை மேற்கொள்ள வேண்டும் எனப் பேசுவது, இதையே இந்து தர்மம்-சனாதன தர்மம் எனக் கூறிக் கொண்டு, நாக்பூரில் திட்டம் வகுத்து அதை இந்தியா முழுக்கச் செயல்படுத்தி வருகின்றனர்.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின் மூலம் வேலைவாய்ப்பு பெற்ற பலர், பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதால் அது சாதிய அமைப்பு முறைக்கு பேராபத்து என ஆர்.எஸ்.எஸ் கருதுகிறது. எனவே தொழில் நடத்துவதிலிருந்து அரசு முற்றிலுமாக வெளியேற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டுதான் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி வருகிறது மோடி அரசு. புதிய தாராளமயக் கொள்கையும் இவர்களின் நோக்கத்தோடு ஒன்று சேர்வதால் இது மேலும் தீவிரமடைகிறது.
மன்னராட்சி கோலோச்சிய நிலவுடமை காலகட்டத்தில், ஒவ்வொரு சாதியினரும் அவரவர் குலத்தொழிலை மட்டுமே செய்வதை உறுதி செய்வது, குடிமக்களிடம் வரி வசூல் செய்வது, சட்டம் ஒழுங்கு மற்றும் எல்லைகளைக் காப்பது உள்ளிட்ட நிர்வாக வேலைகளை மட்டுமே மன்னனின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு மேற்கொண்டு வந்தது. பார்ப்பனர்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்ததால் சாதியப் படுநிலையில் தங்களை மேலானவர்களாக நிலை நிறுத்திக் கொண்டதோடு, மன்னனே தங்களுடைய ஆலோசனைப்படிதான் ஆட்சி நடத்த வேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தி வந்தனர். பிற்கால சேர சோழ பாண்டியர் ஆட்சிகள் இவ்வாறுதான் நடைபெற்று வந்துள்ளன.
ஆனால் இன்று, அரசாங்கமே தொழில் நடத்துவதனால் இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளைப் பயன்படுத்திக் கொண்டு, பிறசாதினர் பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதை பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வசதி வந்தவுடன் பிறசாதியினர் தங்களை மதிப்பதில்லை என்பதாகவும், தங்களுடைய மேலாதிக்கும் சிதைவதாகவும் கருதுகின்றனர். அதனால்தான் முதலில் இட ஒதுக்கீட்டை முற்றிலுமாக ஒழித்துவிட்டு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மட்டுமே வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்று முழங்கியவர்கள், அது சாத்தியமில்லை என்பதனால், தற்காலிகமாக தங்களுடைய ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள 10 சதவீத இட ஒதுக்கீட்டை எடுத்துக் கொண்டனர்.
ஆனால் ”தொழில் நடத்துவது அரசின் வேலை அல்ல, மாறாக சிறந்த நிர்வாகத்தை வழங்குவதே அரசின் கடமை” (good governance) என்கிற தொலைநோக்குப் பார்வையுடன் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வேலை வாய்ப்புகள் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருப்பதனால்தான் பார்ப்பனர்கள் தனியார் மயத்தை வரவேற்கின்றனர், ஊக்கப்படுத்துகின்றனர்.
தொழில் நடத்துவதிலிருந்து அரசு வெளியேறுவதையும், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதையும், பொதுத்துறை வங்கிகளின் பணத்தை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதையும் மோடி அரசு நடைமுறைப்படுத்துவது புதிய தாராளமாக கொள்கையின் அடிப்படையிலானது மட்டுமல்ல, பார்ப்பன மேலாதிக்கத்தை நிலை நாட்டுவதையும் நோக்கமாகக் கொண்டது. இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு கேள்வி கேட்பவரை அடக்கி ஒடுக்கி நசுக்குவது, அதற்காக அரசியல் அதிகாரத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதற்காக அனைத்து பஞ்சமா பாதக செயல்களையும் செய்வது என்பதுதான் மோடி வகையறாக்களின் நடைமுறையாக உள்ளது.
எனவே, நாக்பூரைப் புரிந்து
கொண்டால்தான் மோடி எதற்காக அதானி-அம்பானி உள்ளிட்ட கார்ப்பரேட் பெருமுதலாளிகள் பக்கம்
நிற்கிறார் என்பதையும் முதலாளிகள் ஏன் மோடியை ஆதரிக்கிறார்கள் என்பதையும், ஹிண்டன்பர்க் அறிக்கையையும் நம்மால் புரிந்து
கொள்ள முடியும்.
அரசியல் அதிகாரத்திலிருந்து நாக்பூர் கூட்டத்தை அகற்றாத வரை இந்த அவலங்கள் மேலும் தீவிரமாக தொடரவே செய்யும்.
முற்றும்.
நன்றி
வணக்கம்
பொன்.சேகர்
தொடர்புடைய பதிவுகள்
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-8
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-7
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-6
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-5
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-4
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-3
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-2
ஹிண்டன்பர்க்: இந்தியாவைச் சூறையாடும் அதானி! அரவணைக்கும் மோடி! - தொடர்-1
Monday, 27 December 2021
ஆம்பூரில் கீழ்வெண்மணி நினைவு நாள்!
1968, டிசம்பர் 25; அரைபடி நெல் கூலி கூடுதலாகக் கேட்டதற்காகவா 44 கூலி ஏழை விவசாயிகளை குடிசைக்குள் எரித்துக் கொலை செய்தார்கள் பண்ணையார்கள்? இது நம்பும்படியாகவா இருக்கிறது? அரை படி நெல் என்பது பண்ணையார்களுக்கு பெரிய சுமை அல்லவே! கூலியை உயர்த்திக் கொடுத்துவிட்டு அதற்கேற்ப கூடுதலாக வேலை வாங்கிக் கொள்ள பண்ணையார்களால் முடியும். பிறகு ஏன் 44 பேரை உயிரோடு எரித்தார்கள்?
தஞ்சை மாவட்டத்தைப் பொருத்தவரை கிட்டத்தட்ட
அனைத்து பட்டியலினச் சாதி மக்களும் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகள்தான். இவர்கள் கூலிகளாக இருப்பது மட்டுமல்ல சாதியப் படிநிலையில் ஆக கீழ்மட்டத்தில் இருக்கும் சேரி மக்கள். இவர்கள் கூலி வேலை செய்யும் நிலங்கள் சாதியப் படிநிலையில் மேல்மட்டத்தில் இருக்கும் மூப்பனார், நாயுடு போன்ற ஆதிக்கச்
சாதியினருக்குச் சொந்தமானவை. நிலவுடைமையாளர்களாக இருப்பது மட்டுமன்றி இவர்கள் உயர்சாதியினர் என்பதனால்
ஆண்டைகள் என்றே சேரி மக்களால் அழைக்கப்பட்டனர்.
நேற்றுவரை கைகட்டி, வாய் பொத்தி, கொடுப்பதை
வாங்கிக்கொண்டு கூனிக்குறுகி, வாழ்ந்த சேரி மக்கள் இன்று சங்கம் வைத்து, செங்கொடி ஏந்தி, நெஞ்சை நிமிர்த்தி, முழக்கமிட்டு கேட்டதுதான் பண்ணையாளர்களுக்குப் பிரச்சனை.
சங்கம் எதற்கு? செங்கொடி எதற்கு? கூனிக்குறுகி கேட்க வேண்டியவன்
நெஞ்சை நிமிர்த்தி கேட்பது ஆண்ட சாதிக்கு எதிரானதல்லவா? இப்படித்தான் ஆதிக்கசாதி பண்ணையார்கள் விவசாயிகளின் கூலி உயர்வுப் போராட்டத்தை பார்த்தார்கள். பண்ணை ஆதிக்கமும் சனாதன ஆதிக்கமும் சரிவதை பண்ணையார்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. விளைவு கோபாலகிருஷ்ண 'நாயுடு' தலைமையில் கீழ்வெண்மணி படுகொலை.
00000
ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஆட்சியதிகாரத்தைக்
கைப்பற்றிய பிறகு, ஒரு பக்கம் நாட்டு வளங்களைக் கொள்ளையடித்து
தொழிலாளர்களை ஒட்டச் சுரண்ட கார்ப்பரேட்டுகளுக்கு பட்டுக் கம்பளம் விரித்து வருகிறது; மற்றொரு பக்கம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு என்கிற சனாதன தர்ம இந்து இராஷ்டிரத்தைக்
கட்டமைக்க முயன்று வருகிறது.
மேற்கண்ட இரண்டையும் எதிர்ப்பவர்களை
ஈவிரக்கமின்றி நசுக்குவதற்கு ஏற்ப, சட்டங்களைத்
திருத்தி பாசிச அடக்குமுறையை ஏவி வருகிறது. இதைத்தான் கார்ப்ரேட் காவி பாசிசம் என்கிறோம். ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலை ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றவில்லை என்றால் இந்தியா ஈராயிரம்
ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படும். எனவே, சுரண்டப்படும் மக்கள், ஒடுக்கப்படும்
மக்கள் சிறுபான்மையினர் உள்ளிட்ட அனைவரும் சனாதன சக்திகளுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டியது காலத்தின்
கட்டாயம். இதை உணர்த்தும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பில் 26.12.2021 அன்று மாலை ஆம்பூரில்
வெண்மணி தியாகிகள் நினைவேந்தல் நிகழ்வு கருத்தரங்கம் நடைபெற்றது.
00000
மக்கள் அதிகாரம் திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்தி
அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், இந்தியக் குடியரசுக் கட்சி ஆம்பூர் நகரத் தலைவர் தோழர் சுரேந்திரன் அவர்களும், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர்
சந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில துணைத் தலைவர் தோழர் ஏகாம்பரம்
அவர்களும்,
பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் மாவட்டச்
செயலாளர் தோழர் இராஜேந்திரன் அவர்களும், இந்தியக் குடியரசுக் கட்சி மாநில சான்றோர் அணி கவிஞர் திவாகரன் அவர்களும், கவிஞர் யாழன் ஆதி அவர்களும் உரையாற்றினர்.
கார்ப்பரேட் காவி பாசிசத்திற்கு எதிரான ஐக்கிய முன்னணி – மக்கள் முன்னணியின் அவசியம் குறித்து மக்கள் அதிகாரம் மாநில
செயற்குழு உறுப்பினர் தோழர் நாகராஜன்
அவர்கள் இறுதியாக எழுச்சியுரை ஆற்றினார்.
இடையிடையே மக்கள்
கலை இலக்கியக்
கழக வேலூர் மாவட்ட கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்கள் பார்வையாளர்களின் நெஞ்சை நெகிழ வைத்தன. ஆம்பூர் மக்கள் அதிகாரம் தோழர் சரவணன்
அவர்கள் நன்றியுடன் கருத்தரங்கம் நிறைவுற்றது. சுமார் 60 பேர்
கலந்து கொண்ட கருத்தரங்கம் கார்ப்பரேட் காவி பாசிசத்துக்கு எதிராக அனைவரும்
ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை ஆம்பூரில் விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.
.jpeg)

.jpeg)
.jpeg)