Tuesday, 2 June 2026

அசைவ உணவு: தேவையா? நுகர்வுப் போதையா?

மனித நாகரிகத்தின் தொடக்க காலத்தில், வேட்டையாடுதல் என்பது உணவுக்கான ஒரு வாழ்வாதாரத் தேவையாக இருந்தது. ஆனால், வேளாண்மை செழித்த இக்காலத்திலும் அசைவ உணவின் மீதான அதீத ஈர்ப்பு என்பது வெறும் உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவையல்ல; அது ஒரு திட்டமிட்ட நுகர்வுப் போதையாக உருவெடுத்துள்ளது.


1. ஊட்டச்சத்தா? நுகர்வு விதியா?

மருத்துவக் காரணங்களுக்காகவோ அல்லது குறிப்பிட்ட உடல்நலத் தேவைகளுக்காகவோ ஒருவர் அசைவ உணவை எடுத்துக் கொள்வதில் தவறில்லை. ஒரு மருந்தைப் போல உடலுக்குத் தேவையான அளவில் அதை அணுகுவது ஆரோக்கியமானது. ஆனால், இன்று அசைவ உணவு என்பது மருத்துவத் தேவையைக் கடந்த ஒரு நுகர்வுப் பழக்கமாகிவிட்டது. ஞாயிறு வந்தாலே கறிக்கடைக்குச் செல்வதும், பகல் நேரங்களில் பிரியாணிக் கடைகளை மொய்ப்பதும், மாலை நேரங்களில் சிக்கன் பக்கோடா, கவாப் கடைகளைத் தேடி அலைவதும் ஊட்டச்சத்துக்கான தேடல் அல்ல; அது நாக்கு ருசி சார்ந்த நுகர்வுப் பழக்கம் மட்டுமே.

2. சமூக அழுத்தம்: கௌரவத்தின் அடையாளமாக கறிச்சோறு

இன்று அசைவம் என்பது வெறும் உணவுப் பழக்கம் மட்டுமல்ல, அது ஒரு வலுவான சமூக அழுத்தம்.
  • விருந்தோம்பல் அறம் சிதைக்கப்படுதல்: ஒரு வீட்டிற்கு உறவினரோ அல்லது நண்பரோ வந்துவிட்டால், அவர்களுக்கு அசைவ உணவு சமைத்துப் போடாவிட்டால் அது கௌரவக் குறைவாகக் கருதப்படுகிறது.
  • பலிபீடமாகும் நடுத்தர வர்க்கம்: "ஒரு கறிச்சோறு கூட போடவில்லை" என்ற அவச்சொல்லுக்கு அஞ்சி, பல குடும்பங்கள் கடன் வாங்கியாவது அசைவ விருந்து வைக்கின்றன. இது தனிமனித விருப்பத்தையும் தாண்டி, சமூகத்தால் திணிக்கப்பட்ட ஒரு கட்டாயச் சடங்காக மாறியுள்ளது.
3. சேமிப்பை உறிஞ்சும் வணிகப் பொருளாதாரச் சங்கிலி

இந்தப் பழக்கத்தின் பின்னால் மிகப் பெரிய வணிகப் பொருளாதாரமும், திட்டமிட்டச் சுரண்டலும் இயங்குகிறது.
  • பொருளாதாரச் சுரண்டல்: இன்று ஒரு சாதாரண குடும்பம் வாரந்தோறும் கறி அல்லது மீன் வாங்கினாலே மாதத்திற்கு மூவாயிரம் முதல் நான்காயிரம் ரூபாய் வரை செலவழிக்கிறது. (இது குடும்பத்திற்கு குடும்பம் மாறுபடும் — இங்கே ஒரு தோராய மதிப்பீடு மட்டுமே). இதனுடன் உணவகங்களில் அசைவ உணவு உண்ணும் செலவுகளையும் சேர்த்தால், குடும்ப வருமானத்தின் குறிப்பிடத்தக்க பகுதி இந்த நுகர்வுக்கே செல்கிறது. கல்வி, மருத்துவம், புத்தகங்கள், சேமிப்பு போன்றவற்றிற்குச் செல்ல வேண்டிய பணம், சுவை சார்ந்த நுகர்வுச் சந்தைக்குள் இழுக்கப்படுகிறது. எனவே அசைவ உணவுப் பழக்கம் என்பது தனிப்பட்ட உணவுத் தேர்வு மட்டுமல்ல; உழைக்கும் மக்களின் சேமிப்பை உறிஞ்சும் ஒரு பெரிய வணிக அமைப்பின் பகுதியாகவும் உள்ளது.

4. வேளாண்மையிலிருந்து கால்நடை வணிகத்திற்கு

அசைவ உணவுக்கான தேவை செயற்கையாக அதிகரிக்கப்படுவதால், பல பாரம்பரிய விவசாயிகள்கூட தங்களது நிலங்களை விட்டு கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு போன்ற வணிகத் துறைகளுக்கு மாறுகின்றனர். இதனால் உணவுத் தானிய உற்பத்திக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய வளங்கள், அதிக லாபம் தரும் கால்நடை வணிகத்திற்குத் திருப்பப்படுகின்றன. இது உணவு உற்பத்தியின் சமூக நோக்கத்தைக் குறைத்து, சந்தை லாப நோக்கத்தை மேலோங்கச் செய்கிறது.

தீர்வு என்ன?

தீர்வு என்பது அசைவ உணவை முழுமையாகத் தடை செய்வது அல்ல; அதன் பின்னணியில் உள்ள அரசியலையும் சந்தை யுக்தியையும் புரிந்துகொள்வதாகும்:
  • உடல்நலத் தேவையுள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி தேவையான அளவு மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.
  • உணவை ஒரு 'நுகர்வுப் போதையாக' மாற்றும் சந்தை உத்திகளைப் புறக்கணிக்க வேண்டும்.
  • குடும்பச் செலவுகளில் உணவுக்காகச் செலவிடப்படும் தொகையை பகுத்தறிவோடு மதிப்பீடு செய்ய வேண்டும்.
  • சுவை மற்றும் நுகர்வை விட ஆரோக்கியம் மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
முடிவுரை

உணவு என்பது உடலை வளர்ப்பதற்கான எரிபொருளாக இருக்க வேண்டுமே தவிர, மனிதனை அடிமைப்படுத்தும் நுகர்வுப் போதையாகவோ அல்லது உழைக்கும் மக்களின் சேமிப்பைப் பறிக்கும் வணிகப் பொறியாகவோ மாறக் கூடாது.

எனவே கேள்வி "அசைவமா? சைவமா?" என்பதல்ல; "தேவையா? நுகர்வுப் போதையா?" என்பதுதான்.

மனிதனின் தேவைகள் வரம்புடையவை; ஆனால் சந்தையின் லாப வேட்கை வரம்பற்றது. எனவே அசைவ உணவின் பிரச்சினை கறி சாப்பிடுவதிலோ சாப்பிடாமலிருப்பதிலோ இல்லை. மனிதனின் இயல்பான தேவையை முடிவற்ற நுகர்வாக மாற்றும் சந்தை அமைப்பில்தான் உள்ளது.

ஊரான் @ பொன். சேகர்

Sunday, 31 May 2026

காவிக்குள் அடங்காத வள்ளுவம்: பாவாணர் காட்டும் தமிழ் - ஆரிய முரண்பாடுகள்

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரைச் சனாதனக் காவிக்குள் சிறைப்படுத்த முயலும் கவர்னர் மாளிகையின் செயல், தமிழ் மரபின் மீதான பண்பாட்டுத் தாக்குதலாகும். 

திருவள்ளுவர் முன்மொழிந்த தமிழ் நெறிக்கும், காவி போற்றும் ஆரிய நெறிக்கும் இடையிலான அடிப்படை வேறுபாடுகளை மொழி ஞாயிறு பேராசிரியர் தேவநேயப் பாவாணர் அவர்கள் பட்டியலிட்டுத் தோலுரித்துக் காட்டுகிறார்.

1.மானுட சமத்துவம் vs வருணப் படிநிலை

ஆரிய நெறி பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும்போது, வள்ளுவம் அதை அடியோடு மறுக்கிறது:
  • சமூக அந்தஸ்து: தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன் அல்ல என்பது தமிழ்க் கருத்து; ஆனால் தமிழன் பிராமணனுக்குத் தாழ்ந்தவன் என்பது ஆரியக் கருத்து.
  • பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்: பிறப்பால் உயர்வு தாழ்வு பாராட்டாத சமத்துவக் கொள்கை தமிழ் நெறி; பிறப்பால் பார்ப்பான் உயர்ந்தவன் மற்றோர் எல்லாம் கீழானவர்கள் என்பது ஆரிய நெறி.
  • குலப்பாகுபாடு: தமிழர் நெறியில் குலம் என்பது தொழிலால் அமைவது; ஆரிய நெறியிலோ அது பிறப்பால் தீர்மானிக்கப்படுவது.
2. உழவே தலை 

காவி போற்றும் சனாதனம் உழவுத் தொழிலை சிறுமைப்படுத்தும்போது, வள்ளுவர் உழவனைத் தலைவனாகக் கொண்டாடுகிறார்:
  • தமிழர் பார்வை: உழவு என்பது உயிர்களைக் காக்கும் உயரிய தொழில்.
  • ஆரியப் பார்வை: உழவு என்பது உயிர்களைக் கொல்லும் 'இழி தொழில்' என ஆரிய நெறி இழிவுபடுத்துகிறது. (இதையொட்டிதான் ஆரியம் பெற்றெடுத்த பிள்ளையின் ஆட்சியில் ஒரு அமைச்சர் உழவுத் தொழிலை இழிவு படுத்துகிறாரோ?).
3. நீதி மற்றும் சமூக ஒழுங்கு

குற்றத் தண்டனை குறித்த பார்வைகளிலும் இரு துருவ முரண்பாடுகள் உள்ளன:
  • குற்றத் தண்டனை: குற்றத் தண்டனை என்பது சாதி வேறுபாடின்றி நடுநிலையாக இருக்க வேண்டும் என்பது தமிழ் நெறி; ஆனால் அது குலமுறையைப் பற்றியது (சாதிக்கு ஏற்ப தண்டனை மாறுபடும்) என்பது ஆரிய நெறி. (அதனால்தான் முடி திருத்துவோனுக்கு ஒரு நீதி அர்ச்சக பாப்பானுக்கு ஒரு நீதி என்பதை அமைச்சர் ரமேஷ் நிறுவி உள்ளாரோ?).
  • நாகரீகம்: இந்திய நாகரீகம் தமிழருடையது என்பது வரலாற்று உண்மை; ஆனால் அது ஆரியருடையது என்பது அவர்களின் வாதம்.
4. அறம் மற்றும் வாழ்வியல் மாற்றங்கள்
  • அறம்: அறம் என்பது யாவருக்கும் பொதுவான நல்வினை; தருமம் என்பது சாதிக்கொரு நீதி பேசும் வர்ணாசிரம ஒழுக்க வேறுபாடு
  • கல்வி: கல்வி அனைவருக்கும் பொதுவானது என்பது தமிழ் மரபு; ஆனால் கல்வி பிராமணருக்கே சிறப்பு என்பது ஆரிய மரபு.
  • இறப்பு: ஒரு உயிர் பிரிவதை வெறும் 'நிகழ்ச்சி'யாகப் பார்ப்பது தமிழ் நெறி; ஆனால் இறப்பது என்பது ஒரு 'நிகழ்ச்சி அன்று' (அது தீட்டு அல்லது சடங்கு சார்ந்த ஒன்று) என்பது ஆரியப் பார்வை.
4. இல்லறமே நல்லறம் - துறவற மாயை

துறவறத்தை உயர்த்திப் பிடித்து, இல்லறத்தைச் சிறுமைப்படுத்தும் காவிச் சிந்தனைக்கு வள்ளுவம் நேர் எதிரானது:
  • இல்லறத்தில் இருந்தே ஒருவன் வீடுபேறு அடைய முடியும் என்பது தமிழ் நெறி; ஆனால் துறவறத்தால் மட்டுமே வீடுபேறு என்பது ஆரியக் கொள்கை.
  • தமிழர் நெறி இல்லறம், துறவறம் என இரண்டாகப் பிரிக்கிறது; ஆரிய நெறியோ மாணவம், மனைவாழ்க்கை, காடுறைவு, துறவு என நான்காகப் பிரிக்கிறது.
5. மொழி மற்றும் வழிபாட்டு உரிமை
  • தமிழே கடவுள் மொழி என்பதும், கோயில் வழிபாடு தமிழில் அமைய வேண்டும் என்பதும் தமிழ் மரபு; ஆனால் வடமொழியே தேவமொழி என்பதும், வழிபாடு வடமொழியில் மட்டுமே நடக்க வேண்டும் என்பதும் ஆரியப் பிடிவாதம். (அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதை மறுப்பதும் இதனால்தானோ?).
முடிவுரை

வள்ளுவர் காட்டிய நெறி என்பது மானுட சமத்துவம், உழைப்பின் மேன்மை மற்றும் பகுத்தறிவு சார்ந்தது. சனாதனத்தின் வர்ணாசிரமப் படிநிலைகளையும், பிறப்புப் பாகுபாடுகளையும் வேரறுக்கத் தோன்றியவர் திருவள்ளுவர். 

எனவே, அவருக்குக் காவிச் சாயம் பூசுவது என்பது சனாதனத்தால் வீழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் அடையாளத்தைச் சிதைக்கும் செயலாகும். பாவாணர் காட்டிய இந்தத் தெளிவு, காவியின் முகமூடியைக் கிழித்து வள்ளுவத்தின் உண்மை நிறமான சமத்துவத்தை நிலைநாட்டுகிறது.

ஊரான்

சான்று நூல்: திருக்குறள் தமிழ் மரபுரை: மொழிஞாயிறு பேராசிரியர் ஞா.தேவநேயப் பாவாணர், பக்கம் 705, 706.

Thursday, 28 May 2026

கல்குவாரிகள்: கை மாறும் கல்லாப் பெட்டிகள்!

மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்குவாரிகளை தற்காலிகமாக மூடியுள்ளதாகச் செய்திகள் வருகின்றன. அவசரப்பட்டு ஒரு நடிகனுக்கு வாக்களித்தது போல, இது ஏதோ சுற்றுச்சூழலைக் காப்பதற்கான நடவடிக்கை என அவசரப்பட்டு முடிவுக்கு வந்துவிடாதீர்கள். இது உண்மையில் சூழலியல் அக்கறையா? அல்லது வேறு ஏதேனும் கணக்கா? கொஞ்சம் அலசலாம்.


இயற்கையும் மனிதத் தேவையும்

மனிதன் இயற்கையிலிருந்து முற்றிலும் பிரிந்து தனித்து வாழ்ந்துவிட முடியாது. உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம் - இந்த அடிப்படைத் தேவைகள் ஒவ்வொன்றிற்கும் நாம் இயற்கையையே சார்ந்திருக்கிறோம்.

ஒரு வீடு கட்ட வேண்டுமென்றால் கதவு, ஜன்னல், அலமாரி, கட்டில் என அனைத்திற்கும் மரம் தேவைப்படுகிறது. மரம் வேண்டாமென இரும்புக்கு மாறினால், சுரங்கங்கள் தோண்டப்பட வேண்டும்; மலைகள் வெட்டப்பட வேண்டும். இது பூமித்தாயின் வயிற்றைக் கீறும் செயல்தானே? 

சிமெண்டிற்குச் சுண்ணாம்புக்கல், செங்கல்லுக்கு மண், ஜல்லி மற்றும் எம்-சாண்டிற்கு மலைகள், மணலுக்கு ஆறுகள் என இயற்கை வளங்களைத் தொடாமல் ஒரு வீட்டைக் கட்டவே முடியாது.

PVC-க்கு மாறினால் கூட, அதன் மூலப்பொருளான எத்திலீன் தயாரிக்கக் கச்சா எண்ணெய் வேண்டும். அதற்கும் பூமியைத் துளையிடத்தான் வேண்டும். 

மின்சாரம் இல்லாமல் கால் மணிநேரம் கூட நம்மால் இருக்க முடிவதில்லை. அந்த மின்சாரத்தைத் தயாரிக்க நிலக்கரிச் சுரங்கங்கள் தேவைப்படுகின்றன.

கால்களாலேயே காசியைத் தொட்ட காலம் போய், இன்று பக்கத்துத் தெருவிற்குச் செல்லவும் இருசக்கர வாகனங்களைத் தேடுகிறோம். பெருகிவிட்ட வாகனங்கள் விழுங்கும் எரிபொருளை எடுக்க இயற்கையைக் குதற வேண்டியிருக்கிறது; அவை வெளியிடும் நச்சுப் புகையால் வானம் மாசுபடுகிறது. 

ஆக, இயற்கையைத் தொடாமல் நவீன மனித வாழ்க்கை சாத்தியமில்லை.

தேவையா? பேராசையா?

இங்கேதான் முக்கியமான கேள்வி எழுகிறது: நமது தேவைக்காக இயற்கையைத் தொடலாம், ஆனால் அதன் அழிவின் எல்லை எங்கே தொடங்குகிறது?
  • ஒரு குடும்பம் வாழ ஒரு சிறிய வீடு கட்டுவது 'தேவை'; ஆனால் ஆடம்பர பங்களா கட்டுவது 'பேராசை'.
  • ஒரு மனிதன் பயணிக்க ஒரு வாகனத்தைப் பயன்படுத்துவது 'வசதி'; ஆனால், ரகரகமாய் கார்களை அடுக்கி வைத்திருப்பது 'ஆடம்பரம்'.
  • ஒரு கிராமத்தின் தேவைக்காக மணல் எடுப்பது 'பயன்பாடு'; பெரும் லாபத்திற்காக ஆறுகளையே காலி செய்வது 'கொள்ளை'.
இன்று உலகை அழிப்பது சாதாரண மக்களின் தேவைகள் அல்ல; லாப வேட்டையாடும் கார்ப்பரேட் பொருளாதார அமைப்புதான். ஒரு விவசாயி தன் வீட்டிற்காக இரண்டு மரம் வெட்டினால் அது பேரழிவாகாது. ஆனால், ஆயிரக்கணக்கான ஏக்கர் காடுகளை அழித்து ரிசார்ட்டுகளையும் அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் கட்டும் நிறுவனங்கள்தான் இயற்கையைச் சிதைக்கின்றன. ஏற்றுமதிக்காக மலைகளையே விழுங்கும் கிரானைட் கொள்ளைதான் உண்மையான பேரழிவு.

கட்டுமானங்களுக்குத் தேவை சமூகக் கட்டுப்பாடு

வீடு கட்ட அனுமதி வழங்கும் அரசு, அது வரைபடம் மற்றும் வரி விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என்று மட்டுமே பார்க்கிறது. மாறாக, அந்த வீட்டில் எத்தனை பேர் வசிக்கப் போகிறார்கள், அது தேவையைக் காட்டிலும் ஆடம்பரத்திற்காகக் கட்டப்படுகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

இன்று இரண்டு பேர் வாழும் குடும்பத்திற்காக ஆயிரக்கணக்கான சதுர அடியில் அரண்மனை போன்ற வீடுகள் கட்டப்படுகின்றன. வீட்டுக்குள்ளேயே நீச்சல் குளம், செயற்கை நீரூற்று என வளங்களை விரயம் செய்வது 'பணக்காரப் பெருமை'யாக மாற்றப்பட்டுள்ளது. இது தனிநபர் ஆடம்பரம் மட்டுமல்ல, இயற்கை வளங்களின் மீதான அப்பட்டமான கொள்ளை.

எனவே நமது கோரிக்கை:
  • குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வீட்டுப் பரப்பளவிற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்.
  • தேவையற்ற ஆடம்பரக் கட்டுமானங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.
  • மிகை வளப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தச் சட்ட நடவடிக்கை தேவை.
  • நான்கு பேர் உள்ள வீட்டிற்குப் பல கார்கள் எதற்கு என்ற கேள்வி வாகனங்களுக்கும் பொருந்த வேண்டும்.
மறைக்கப்படும் உண்மைகளும் தீர்வும்

இன்று "பசுமை" பற்றிப் பேசுபவர்கள் கூடத் தாங்கள் பயன்படுத்தும் செல்போன், கணினி, ஏசி, கார்கள் ஆகியவற்றின் பின்னால் இருக்கும் இயற்கை அழிவைப் பேசுவதில்லை. 

தீர்வு என்ன?
  • தேவைக்கு மட்டுமே உற்பத்தி மற்றும் லாப நோக்கமற்ற வளப் பயன்பாடு.
  • ஆடம்பரத்தைக் குறைத்த எளிமையான வாழ்க்கை.
  • "எவ்வளவு அதிகம் சம்பாதிக்கலாம்?" என்பதற்குப் பதிலாக "எவ்வளவு போதுமானது?" என்ற சிந்தனை மாற்றம்.
முடிவுரை

இயற்கையைப் பாதுகாப்பது என்பது மனிதனைக் காடுகளுக்குத் திருப்பி அனுப்புவது அல்ல; மாறாக, மனிதப் பேராசைக்கு எல்லை வைப்பதுதான் உண்மையான சுற்றுச்சூழல் அரசியல்.

ஆட்சிகள் மாறும் போதெல்லாம் கல்குவாரிகள் தற்காலிகமாக மூடப்படுவதாக வரும் அறிவிப்புகள் எல்லாம், கல்லாப்பெட்டிகளைக் கைமாற்றுவதற்கான கால அவகாசம்தானே ஒழிய, நிச்சயமாகச் சுற்றுச்சூழலைக் காப்பதற்காக அல்ல.

ஊரான்

Wednesday, 27 May 2026

நட்பின் கோடை மழையில் துளிர்க்கும் 69.

கோடையும் குளிரும் போல, வன்மையும் மென்மையும் கலந்ததுதான் மனித வாழ்க்கை.  
கோடை வெயிலில் வாடி நிற்கும் மரங்களும் செடிகளும், திடீரெனப் பொழியும் ஒரு கோடை மழையில் புத்துயிர் பெற்று சிலிர்ப்பதைப் போல, நமது வாழ்க்கைப் பயணத்தின் அலுப்பையும் களைப்பையும் நண்பர்களின் வாழ்த்து மழை தென்றலாய் குளிர்விக்கிறது.

23.06.2018, பணி ஓய்வு விழாவின் போது..

இன்றுடன் 68 முடிந்து, 69-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறேன். மேகம் பொழியும் மழை இயற்கையை உயிர்ப்பிப்பதைப் போலவே, நண்பர்கள், தோழர்கள், உறவுகள் பொழியும் அன்பும் வாழ்த்துகளும் என் மனதை நனைத்து, புத்துணர்ச்சியூட்டுகின்றன.

இந்த இனிய நாளில், புலனம் வழியாகவும், பிற வழிகளிலும் வாழ்த்து மழை பொழிந்த அனைத்து நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

பல நண்பர்கள் நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து, வாழ்த்துத் தேனை செவிகளில் பாய்ச்சினர். எழுதப்பட்ட வாழ்த்துச் சொற்கள் கண்கள் வழியே மனதிற்குள் இறங்கி நெஞ்சத்தை நெகிழ்விக்க சில நொடிகள் தாமதமாகலாம் என்பதாலோ என்னவோ, அவர்களின் குரலில் இருந்த அன்பு நேரடியாக இதயத்தைத் தொட்டது.

25.05.2026, திருச்சி

எனக்கு ஆன்மீகப் பற்று இல்லை என்பது என்னை அறிந்தவர்களுக்கு தெரியும். இருந்தாலும், பல நண்பர்கள் தாங்கள் நம்பும் இறைவனின் பேரருள் எனக்குக் கிடைக்க வேண்டும் என்று மனமார வாழ்த்தியிருக்கிறார்கள். அது அவர்களின் உள்ளார்ந்த அன்பின் அழகான வெளிப்பாடு.

மனிதர்களுக்கு இடையே வேற்றுமையை வளர்க்க சிலர் ஆன்மீகத்தைப் பயன்படுத்தும் இந்தக் காலத்தில், அதையே ஒரு நாத்திகனுக்கும் அன்பின் தூதாக அனுப்பி, தூய நட்புக்குப் பாலம் அமைக்கும் என் நண்பர்களின் பெருந்தன்மையை எண்ணி மனம் நெகிழ்கிறது.

என் வாழ்க்கைப் பயணத்தின் களைப்பைப் போக்கி, என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கும் நண்பர்கள், தோழர்கள், உறவுகள் அனைவருக்கும் இந்த 69-ஆம் அகவையின் தொடக்கத்தில் என் அன்பும், நெகிழ்ச்சியான நன்றிகளும்!

பொன். சேகர்
(ஊரான்@தமிழ்மணி)

Tuesday, 26 May 2026

'அதிமுக' எம்எல்ஏக்கள் ராஜினாமா: “ஐஞ்சு வருசமா பட்டினியாக் கிடந்தா எங்களுக்கும் பசிக்கும் இல்ல?”

தமிழ்நாட்டு அரசியல் களம் சந்தர்ப்பவாதத்தின் உச்சத்திற்குச் சென்று கொண்டிருப்பதை அண்மைய நிகழ்வுகள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளன.
அதிமுக சார்பில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளைத் துறந்துவிட்டு அதிகாரப்பூர்வமாக ‘நடிகர் கட்சி’ முகாமில் இணைந்துள்ளனர். ஏற்கனவே அவர்கள் சட்டமன்றத்தில் ஆளும் தரப்புக்கு ஆதரவாக நடந்துகொண்டது அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்ட ஒன்றுதான். ஆனால், இப்போது பதவியையே துறந்து, கட்சி மாறியிருப்பது மிகப் பெரிய அரசியல் கேள்விகளை எழுப்புகிறது.

'குதிரை பேரம்'

வாக்காளர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

ஒரு ஜனநாயகத்தில் மக்கள் ஒரு வேட்பாளருக்கு வாக்களிப்பது அந்த நபருக்காக மட்டும் அல்ல; அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி, கொள்கை, அரசியல் நிலைப்பாடு ஆகியவற்றிற்காகவும்தான்.
‘நடிகர் கட்சியை’ எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களை தவெக-வுக்கு மாற்று என்ற நம்பிக்கையுடன்தான் மக்கள் வெற்றி பெறச் செய்தார்கள். ஆனால், அந்த நம்பிக்கைக்கே இப்போது இந்த எம்எல்ஏக்கள் துரோகம் செய்துள்ளனர்.
மக்களின் வாக்குகளால் வெற்றி பெற்று, பின்னர் வேறு அரசியல் முகாமில் இணைவது என்பது வெறும் கட்சி மாறுதல் அல்ல; அது வாக்காளரின் அரசியல் தீர்ப்பை அவமதிப்பதாகும்.

“செலவுக்கு மேல கொஞ்சம் ஏதோ கணிசமா போட்டுத் தந்தா போதும்!”

இந்த அரசியல் அந்தரப் பல்டியின் பின்னால் இந்தியத் தேர்தல் அரசியலின் கசப்பான பொருளாதாரமும் இருக்கிறது.
தேர்தலில் கோடிக்கணக்கில் செலவு செய்த அரசியல்வாதிகள், “மீண்டும் சீட்டு கிடைக்கிறதா இல்லையா என்பது முக்கியமில்லை; இந்த ஒரு வாய்ப்பிலாவது வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும்” என்ற மனநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

“ஐஞ்சு வருசமா பட்டினிக் கிடந்த எங்களுக்கும் பசிக்கும் இல்ல?” என்ற இந்த பிழைப்புவாத மனநிலையே இன்று கொள்கைகளைவிட பணத்தைப் பெரிய சக்தியாக மாற்றியுள்ளது.
தேர்தல் அரசியல் என்பது இன்று ஒரு அரசியல் சந்தையாக மாறி உள்ளது.

அரசியல் கணக்குகளும் அதிகார நகர்வுகளும்

இந்த ராஜினாமாக்கள் வெறும் தனிநபர் முடிவுகளா? அல்லது பெரிய அரசியல் கணக்கின் ஒரு பகுதியாகா? என்ற கேள்வியும் உடன் எழுகிறது.

இது போன்ற ராஜினாமாக்களால் சட்டமன்றத்தில் உறுப்பினர் எண்ணிக்கை குறையும்போது ஆளும் தரப்பின் பெரும்பான்மை நிலை வலுப்பெற வாய்ப்பு உள்ளது. அதன்பிறகு இடைத்தேர்தல்களிலும் ஆளுங்கட்சிக்கு சாதகமான சூழல் உருவாகலாம்.

இத்தகைய நிலை உருவானால், ஆட்சிக்கு ஆதரவு தரும் கட்சிகளின் அழுத்தம் குறைந்து, ஆளுங்கட்சியின் அதிகாரம் மேலும் வலுப்படும். 

பிழைப்புவாதம்: எல்லா கட்சிகளுக்கும் பொதுவான ஒரு நோய்

இந்தச் சூழலில், “முற்போக்கு”, “சமூகநீதி”, “சாதி ஒழிப்பு” என்று பேசும் கட்சிகளுக்குக் கூட அதிகார அரசியல் மற்றும் பிழைப்புவாத அழுத்தங்கள் வராதா என்ற கேள்வி எழுகிறது.

இந்திய அரசியல் வரலாறு காட்டுவது ஒன்றுதான்:
பிழைப்புவாதம் தலைதூக்குமம் போதெல்லாம் கொள்கைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன.
எனவே, எந்தக் கட்சியையும் தக்க தூய சக்தியாகக் கருதாமல், மக்கள் விழிப்புடன் அரசியலைக் கண்காணிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

முடிவுரை

“ஐஞ்சு வருஷமா பட்டினிக் கிடந்தா எங்களுக்கும் பசிக்கும் இல்ல!” என்று கூறிக்கொண்டு மக்கள் அங்கீகாரத்தை விற்கும் அரசியல்வாதிகளும், அவர்களை வாங்கி  ஆபத்தானவர்கள்.

வாக்காளரின் தீர்ப்பை மதிக்காத இந்த அரசியல் கலாச்சாரம் தொடர்ந்தால், தேர்தல் என்பது மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடு அல்ல; அது வாங்கி விற்கப்படும் வர்த்தகமாகவே மாறிவிடும்.
அதனால்தான், இத்தகைய அரசியல் துரோகங்களை மக்கள் மன்றத்தில் தொடர்ந்து கேள்விக்குட்படுத்துவது அவசியமாகிறது.

ஊரான்

Monday, 25 May 2026

தமிழ்நாட்டில் நடப்பது நடிகர் ஆட்சியா, கவர்னர் ஆட்சியா?

இன்றைய அரசியல் பின்னணி: 

மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக) சார்பாகத் திருச்சியில் நடைபெற இருந்த சனாதன ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஒரு கருத்தாளராகப் பங்கேற்க, கொளுத்தும் வெயிலின் வெக்கைக்கு ஊடாக வேலூரிலிருந்து தோழர்களுடன் திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள காதிகிராப் இடத்தை நான் சென்றடைந்தபோது மாலை 4 மணி. அந்த இடத்தில் கொடிகள் இல்லை, பேனர்கள் இல்லை, ஒலிபெருக்கிகள் இல்லை. ஒரு சில தோழர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், எண்ணற்ற காவலர்களுடன் போலீஸ் வேன்கள் வரிசைகட்டி நின்றன. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்பதை அந்த எதார்த்தக் காட்சிகள் உணர்த்தின.


உடனே தோழர்களைத் தொடர்புகொண்டபோது, பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துத் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிந்தேன். அவ்விடம் சென்றபோது, ஊர்வலமாக வந்த தோழர்களைத் தடுத்துக் காவல்துறையினர் வலுக்கட்டாயமாகக் கைது செய்து வேன்களில் அழைத்துச் சென்றனர். 

அதே நேரத்தில், ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக ஒரு சில இந்து முன்னணி காலிகள், போலீசார் முன்னிலையிலேயே தோழர்களுக்கு எதிராகக் கத்திக் கொண்டிருந்தனர். இதைக் கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையின் அணுகுமுறை மற்றும் ஜனநாயக முறையில் மக்கள் கலை இலக்கியக் கழகம் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்து தோழர்களைக் கைது செய்த விதம்—இந்த அரசு சனாதனத்தைக் காப்பதற்காகவே துடிக்கிறது என்பதை அப்பட்டமாக உணர வைத்தது.



தமிழ்நாட்டில் நடப்பது நடிகர் ஆட்சி அல்ல, இது கவர்னர் ஆட்சிதான் என்பதைத் தமிழ்நாட்டு மக்களுக்கு முதன்முதலாகப் புரியவைத்த நிகழ்ச்சி இதுவாகும். 

கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என்பதற்காக தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

பொதுவெளியில் மக்களிடம் பகிர வேண்டிய தங்களின் காத்திரமான கருத்துகளைத் தோழர்கள் ஒரு மண்டபத்திற்குள் கூடிப் பகிர்ந்து கொண்டனர். அது இப்போது சமூக ஊடகங்கள் வாயிலாகப் பொதுமக்களைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது. அந்த மண்டபத்தில் நான் ஆற்றிய உரையின் தொகுப்பு இதோ:

அறிமுகம்

"சனாதனம் வீழ்க! சமூகநீதி வெல்க!"

அனைவருக்கும் வணக்கம்!

ஒரு காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழக மேடைகளில் ஆளும் வர்க்கத்திற்கு எதிராகத் தமிழ்நாடெங்கும் தமிழ்மணி என்ற பெயரில் முழங்கியவன் நான். நீண்ட காலத்திற்குப் பிறகு, நான் அரசியல் பயின்ற இந்தத் திருச்சி மண்ணில், மீண்டும் ஒரு புரட்சிகர மேடையில் ஏறும் வாய்ப்பை எனக்கு வழங்கிய மகஇக மாநிலப் பொதுச் செயலாளர், என் அன்புத் தோழர் கோவன் அவர்களுக்கும், தலைமைக் குழுத் தோழர்களுக்கும் முதற்கண் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பொன்.சேகர், வழக்குரைஞர்

தோழர்களே, இந்தியாவே இன்று சனாதனம் குறித்துப் பேசிக் கொண்டிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில் தோற்று ஆட்சியை இழந்தபோதும், அதைக் கண்டு எள்ளளவும் துவண்டுவிடாமல், சட்டமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே எழுந்து நின்று, "சனாதனத்தை ஒழிப்போம்" என்று நெஞ்சுறுதியோடு முழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு இந்த முற்போக்கு மேடையிலிருந்து என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! சனாதன எதிர்ப்பு எனும் திராவிடக் கருத்தியலுக்கு அவர் மீண்டும் ஒரு புத்துயிரை ஊட்டியிருக்கிறார்!

சனாதனம் என்றால் என்ன?

தோழர்களே... சனாதனம், சனாதனம் என்கிறார்களே, சனாதனம் என்றால் என்ன?

அதற்கு விளக்கம் சொல்லும் பண்டிதர்கள், 
"ஆதியும் அந்தமும் இல்லாதது, தொடக்கமும் முடிவும் இல்லாதது, என்றும் மாறாதது, 
அழிவில்லாதது, 
எப்பொழுதும் நிலைத்திருப்பது" என்கிறார்கள்.

One infinite, eternal, changeless existence is called Sanatana.

மாற்றமே இல்லாத, அழிவே இல்லாத அப்படிப்பட்ட ஒன்று எது என்று இன்றைய அரசியல்வாதிகளிடமும், சனாதனக் ஆதரவாளர்களிடமும் கேட்டால், ஆளாளுக்குத் தங்களின் சுயநல நோக்கத்திற்கு ஏற்ப வியாக்கியானம் பேசுகிறார்கள்!

குஷ்புவைக் கேட்டால், 'பொட்டு வைப்பதும் பூ வைப்பதும்தான் சனாதனம்' என்கிறார். அனிதா குப்புசாமியைக் கேட்டால், 'வாசல் தெளித்துக் கோலம் போடுவது அதுவும் அரிசி மாவு கோலம் போடுவது சனாதனம்' என்கிறார். இவர்களாவது யோசித்து ஏதோ சொந்தமாகத் தத்துபித்து என்று எதையோ சொல்கிறார்கள்.

ஆனால், சனாதனத்தை முட்டுக் கொடுக்கக் கவிஞர் கண்ணதாசனை வாடகைக்கு அழைத்து வருவோர் சிலர் உண்டு. அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

"தாயின் அன்பு, 
பசித்தவனுக்கு உணவளிப்பது, வெறுப்பவனையும் மன்னிப்பது, சிவனைப் போல அமைதியாக இருப்பது, 
கிருஷ்ணனைப் போலத் துன்பத்திலும் சிரிப்பது, 
புத்தரைப் போல ஆசையை வெல்வது" —இதுதான் சனாதனமாம்!

இப்போது இதனுடைய 'லேட்டஸ்ட் வெர்ஷன்' நம்ம தமிழிசை அக்கா! அமைச்சர் வன்னியரசுக்கு ஒரு தாய் திருநீறு பூசுகிறார். 'திருநீறு பூசும் இந்தத் தாயின் அன்புதான் சனாதனம்' என்று புது வியாக்கியானம் பேசுகிறார் தமிழிசை.

தோழர்களே! இவர்களெல்லாம் சொல்வதுதான் சனாதனமா என்று தர்ம சாஸ்திரம் தெரிந்த ஒரு உண்மையான ஆச்சாரியாரிடம் போய்க் கேட்டால், அவர் இவர்களின் முகத்திலேயே காரித் துப்புவார்!

தோழர்களே… 
ஆதியும் அந்தமும் இல்லாத, 
தொடக்கமும் முடிவும் இல்லாத, 
என்றும் மாறாத, 
அழிவில்லாத, 
எப்பொழுதும் நிலைத்திருக்கிற அது எது தெரியுமா? வரலாற்றுத் தரவோடு சொல்கிறேன், குறித்துக் கொள்ளுங்கள்!

காசியில் 1898-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட 'மத்திய இந்துக் கல்லூரி', பின்னாளில் 1916-இல் 'பனாரஸ் இந்து பல்கலைக்கழகமாக' உயர்த்தப்பட்டபோது, அங்கு ஒரு பாடப்புத்தகம் வைக்கப்பட்டது. அந்தப் புத்தகத்தின் பெயர் என்ன தெரியுமா?

"An Elementary Sanatana Dharma: Hindu Religion and Ethics".

அமெரிக்காவின் கலிபோர்னியா நூலகத்தில் இருந்த அந்தப் புத்தகத்தை, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2007-இல் டிஜிட்டல் ஆவணமாக ஏற்றி வைத்துள்ளது. அந்த நூல் என்ன சொல்கிறது?

"வேதங்களையும், புனித நூல்களையும் அடிப்படையாகக் கொண்டு பல்லாண்டுகளுக்கு முன்பே மனிதர்களுக்கு வழங்கப்பட்டதுதான் சனாதன தர்மம்." 

அன்று 'இந்து மதம்' என்ற ஒன்றோ, 'இந்தியா' என்ற ஒன்றோ கிடையாது. ஆரிய இனத்தை அடிப்படையாகக் கொண்ட 'ஆரிய மதம்'தான் இருந்தது. அந்த நிலப்பரப்பிற்குப் பெயர் 'ஆரிய வர்த்தம்'! இதுதான் வரலாற்று உண்மை!


சடங்குகளில் உயிர் வாழும் சனாதனத்தின் வேர்கள்

இந்தச் சனாதன தர்மத்திற்கு எது அஸ்திவாரம்?
சுருதிகள் என்று சொல்லப்படும் நான்கு வேதங்கள்தான் சனாதனத்தின் அஸ்திவாரம் (Foundation)! 

யாக்ஞவல்கியர், பராசர, நாரத, மனுதர்மம் போன்ற 18 ஸ்மிருதிகள்தான் சனாதனத்தைத் தாங்கும் சுவர்கள்! அதில் மனுதர்மம் என்கிற சுவர் ரொம்ப ரொம்ப ஸ்ட்ராங்கான சுவர். 

18 புராணங்களும், இரண்டு இதிகாசங்களும் அந்தச் சுவர்களைக் காக்கும் முட்டுக் கொம்புகள்! பகவத்கீதை சைடில் கொடுக்கப்படும் ஒரு துண்டுக் கட்டை.

நமது அன்றாட வாழ்வியலுக்கான கடமைகளைச் சட்டமாகத் தொகுத்துச் சொல்வதுதான் மனுதர்ம சாஸ்திரம்! மனுதர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லப்பட்டுள்ளதோ அதுதான் சனாதனம். மற்றவர்கள் சொல்வதெல்லாம் சனாதன தர்மத்திற்குள் வராது.

உலகப் படைப்பு, கல்வி, இல்லறம், உணவு, சாதிகள், வினைப்பயன் என 12 அத்தியாயங்களில் 2685 ஸ்லோகங்களைக் கொண்டது இந்த மனுதர்மம். என்றைக்கோ, கி.மு 2-ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 2-ஆம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட அந்தச் சட்டம், இன்னமும் நம் வீடுகளில் அழியாமல் உயிர்ப்புடன் இருக்கிறது என்றால் சனாதனம் அழிவில்லாததுதானோ என்ற ஐயம் நமக்கும் எழத்தானே செய்கிறது?

நம் வாழ்க்கையில் அது எப்படி அழியாமல் தொடர்கிறது? நமது இல்லங்களில் நடக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் மற்றும் வாழ்வியல் தீட்டுகள் வழியாகத்தான்! 

மாதவிடாய், திருமணம், சீமந்தம், குழந்தைக்குப் பெயர் சூட்டல், மொட்டை அடித்தல், கிரகப்பிரவேசம், மரணம், காரியம், திதி என அனைத்திலும் மனு சொன்னதைத்தான் நாம் இன்றும் நமது இல்லங்களில் சடங்காகச் செய்து கொண்டிருக்கிறோம்!
நம்மில் பலரும் மனுவை வாசித்திருக்க மாட்டோம். ஆனால் மனுவை வாசிக்காமலேயே, அதை எப்படிட கடைபிடிக்கிறோம்? எல்லாம் பழக்க வழக்கம் என்ற பெயரில் நமக்கு ஊட்டப்படுவதால்தான்!

எதற்காக இத்தனை சடங்குகள்? பார்ப்பனர்கள் தங்களின் வருவாய்க்காக, தங்களின் உத்தியோகத்திற்காக ஏற்படுத்திக் கொண்ட சுரண்டல் முறை இது! 

புரோகிதம் என்பது ஒரு கார்ப்பரேட் தொழிற்சாலை தோழர்களே! இது 'work from home' அல்ல, 'work from others home' மூலம் சம்பாதிக்கும் அரிய வகைத் தொழில் அது! 

நீங்கள் இதைச் செய்யவில்லை, அதைச் செய்யவில்லை என்றால் 'குடும்பத்திற்கு ஆகாது, வாரிசுக்குக் கேடு' என்று அச்சமூட்டி, கடன் வாங்கியாவது காரியம் செய்வதையும் திதி கொடுப்பதையும் கட்டாயமாக்கி விட்டார்கள்.

சனாதனத்தின் பாதி உயிர் இந்த புரோகிதத் தொழிலில்தான் இருக்கிறது தோழர்களே! அவன் சனாதனத்தைக் காக்கப் பொதுத்துறைகளை ஒழிக்க முயற்சிக்கும் போது, நாம் ஏன் சனாதனத்தை அழிக்க இந்த புரோகிதத் தொழிலை ஒழிக்க முயற்சிக்கக் கூடாது? நம் வீட்டிற்குள் படர்ந்திருக்கும் சடங்கு சம்பிரதாயங்கள் எனும் சனாதன வேர்களை முதலில் வெட்டி எறிய வேண்டியது நம் கையில்தான் இருக்கிறது.

ஷியாம் சிங்கா ராய் படத்தில் தேவதாசி முறையை ஆதரித்த ஒரு புரோகிதனை கதையின் நாயகன் நெருப்பில் தூக்கி வீசும் காட்சியைப் போல—கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை என்ற பெயரில் நெருப்பில் போடுகிறாயா, இதோ நீயும் நெருப்பிலேயே எரிந்து போ என்று வீசுவானே—அதைப் போல, இங்கே கிரகப்பிரவேசம் என்ற பெயரிலும் கும்பாபிஷேகம் என்ற பெயரிலும் தீட்டுக் கழிப்பு நிகழ்ச்சிகளை நடத்தும் பார்ப்பனப் புரோகிதர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடுத்து முடக்க வேண்டும்.

ஆம், அது ஒரு தீண்டாமை நிகழ்வு! கட்டிட வேலைகளின் போது சண்டாளர்கள், அதாவது பறையர்கள் வந்து போய் இருப்பார்கள், அதனால் தீட்டுப்பட்டுவிட்டது என்பதற்காக மாட்டுக் கோமியம் தெளித்துத் தீட்டுக் கழிக்கும் இழிவுதான் அது. 1940-களின் பிற்பகுதியில் வெளியான சில பழைய திரைப்படங்களின் விருந்து காட்சிகளில் கூட, ஒரு குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தை (பறையர்களை) இழிவுபடுத்திச் சனாதனத் திமிரோடு வசனங்கள் வைக்கப்பட்டன. அந்தச் சாதிய இழிவின் தொடர்ச்சிதான் இன்றைய புரோகிதத் தீட்டுக் கழிப்புகளும்!

இதற்கு டெல்லியின் தயவோ, ஆட்சியாளர்களின் தயவோ தேவையில்லை! தேவையற்ற வீட்டுச் சடங்குகளை நாம் கைவிட வேண்டும்; இல்லை எனில் புரோகிதன் இல்லாத 'சுயமரியாதை' முறைகளுக்கு நாம் பழக வேண்டும். மக்களை இதற்குத் தயார்படுத்த வேண்டிய பொறுப்பு முற்போக்கு இயக்கங்களாகிய நம்முடையது.


ஊர்-சேரி எனும் தீண்டாமைக் காடுகள்

அடுத்ததாக, சனாதனத்தின் உச்சகட்டக் கொடூரம்—சாதியத் தீட்டு!

வருணக் கலப்பு, சங்கர ஜாதிகள் உற்பத்தி, அவர்களுக்கான தொழில், உணவு, உடை, வாழ்விடம் மற்றும் தீட்டு... இவற்றை உள்ளடக்கிய 'ஊர் - சேரி' எனும் தீண்டாமைக் காடுகள்! சனாதனம் செழித்து வளர்ந்திருக்கும் இந்த ஊர்-சேரி தீண்டாமைக் காடுகளை அழித்து, பொதுக் குடியிருப்புகளை உருவாக்குவதன் மூலம் மட்டும்தான் சாதி-தீண்டாமை எனும் சனாதனத்தைப் பலவீனப்படுத்த முடியும்!

வரலாற்றைப் பாருங்கள்...

சோசலிச மாடலில், நேரு மற்றும் இந்திரா காந்தியின் காலத்தில் உருவாக்கப்பட்ட பிஹெச்இஎல் (BHEL) போன்ற பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றுக்கான டவுன்ஷிப் (Township) குடியிருப்புகளும், கலைஞர் காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் (TNHB) குடியிருப்புகளும், அண்ணா நகர், கே.கே. நகர், தில்லை நகர், வள்ளலார் நகர் போன்ற நகர்ப்புற பொதுக் குடியிருப்புகளும், அதைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் உருவான பெரியார் நினைவு சமத்துவபுரங்களும் ஊர்-சேரி தீண்டாமைக்குக் குழிபறிக்கும் ஆக மிகச் சிறந்த திட்டங்கள்.

இவை பல்வேறுபட்ட சாதிகளைச் சேர்ந்த மனிதர்களை அக்கம்பக்கமாக வாழ வைத்தன! அதன் மூலம், ஊர்-சேரிகளில் நிலவிய சாதியப் பகைமை ஓரங்கட்டப்பட்டு, வர்க்கத் தோழமையும் சகோதரத்துவமும் வளர்வதற்கு அவை வித்திட்டன!

ஆனால், 1990-களுக்குப் பிறகு புகுத்தப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் தனியார்மயமாக்கல் மூலமாகப் பொதுத்துறைகளை நலிவடையச் செய்து, டவுன்ஷிப் போன்ற முற்போக்குக் குடியிருப்புகளை ஒன்றிய ஆட்சியாளர்கள் ஒழித்துக் கட்டினார்கள்!

கலைஞருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களால் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளும், சமத்துவபுரங்களும் மெல்ல மெல்ல ஓரங்கட்டப்பட்டன.

நான் எச்சரிக்கிறேன்...

பொதுத்துறை நிறுவனங்களைக் காப்பதற்கான வர்க்கப் போராட்டம் என்பது, டவுன்ஷிப் போன்ற பொதுக் குடியிருப்புகளைப் பாதுகாப்பதற்கான, அதாவது சனாதனத்தை ஒழிப்பதற்கான போராட்டத்துடன் இணைந்தது! வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள், பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் போன்ற பொதுக் குடியிருப்புகளை விரிவுபடுத்தி, அங்கு அரசு மேம்பட்ட வசதிகளைச் செய்து தர வேண்டும். பெருமளவில் மக்களை அங்கே குடியேறுவதற்கு ஈர்க்க வேண்டும்.

அதே நேரத்தில், வாழ்விடத் தீண்டாமையை ஒழிக்கும் உத்தியாக, சாதியப் பிரிவினையைத் தக்கவைக்கும் ஊர்-சேரி கட்டமைப்புகளுக்கான வசதிகளை அரசு மெல்ல மெல்லக் குறைக்க வேண்டும். மக்களை நவீனச் சமத்துவக் குடியிருப்புகளை நோக்கி நகர்த்த இது உதவும்!

சாதியற்றோர் பட்டியல்

இறுதியாக, சனாதனத்தின் தத்துவார்த்தக் காலை ஒடிக்க வேண்டும். எப்படி ஒடிப்பது என்பதற்கான ஒரு மாற்றுத் திட்டத்தை இந்த மேடையில் நான் முன்வைக்கிறேன்!

சாதி மறுப்புத் திருமணம் செய்வோரையும், சாதியைத் துறப்போரையும் ஒருங்கிணைத்து "சாதியற்றோர் தனிப் பட்டியல்" (No Caste Category) உருவாக்கப்பட வேண்டும்! ஏற்கனவே தெலுங்கானாவில் சாதியற்றோர் பட்டியல் உள்ளது. சுமார் 3.4 சதவீதம் பேர் அங்கே சாதியற்றோர் பட்டியலில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். சாதியற்றோர் பட்டியலுக்குள் வருபவர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்!

மக்கள்தொகைக்கு ஏற்ப சாதிவாரி விகிதாச்சார இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதோடு, சாதியை ஒழிக்க முற்படுவோருக்குப் பயன்படும் வகையில் இந்தச் 'சாதியற்றோர் தனிப் பட்டியல்' மற்றும் அவர்களுக்கான தனிப் பங்கீட்டை நாம் கொண்டு வர வேண்டும்! அதற்கு முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்.

தோழர்களே! நம் இல்லங்களில் புரோகிதரைத் தவிர்ப்பதும், ஊர்-சேரி கட்டமைப்புகளை அழித்துப் பொதுக் குடியிருப்புகளை உருவாக்குவதும், சாதியற்றோர் தனிப் பட்டியலைக் கொண்டு வருவதும் அவ்வளவு எளிதல்ல... 

ஆனால், நீண்டகால நோக்கில், சனாதன ஒழிப்பை நோக்கிய நமது பயணத்தை நாம் இன்றிலிருந்தே, இந்தத் திருச்சி மண்ணிலிருந்தே தொடங்க வேண்டும்! இதையே கொள்கை முழக்கங்களாக முன்வைத்து, இன்றைய சமூக நலத்துறை அமைச்சர் காதுகளுக்கும் எட்டச் செய்வோம்!

முடியும் தோழர்களே... நம்மால் முடியும்! சனாதனத்தின் வேர்களை அன்றைய சித்தர்களைப் போல, மகாத்மா ஜோதிராவ் புலேவைப் போல, வள்ளலாரைப் போல, அண்ணல் அம்பேத்கர் - தந்தை பெரியாரைப் போல, முத்தமிழறிஞர் கலைஞரைப் போல நம்மால் வெட்டி வீழ்த்த முடியும்! இப்போது நம் கைகளில் கிடைக்கிற ஆயுதங்கள் சிறு சிறு கத்திகளாக இருந்தாலும் அவற்றைக் கையில் எடுப்போம்! அவை கூர்தீட்டப்பட்டு, கோடரிகளாக மாறும்போது... இந்தச் சனாதனம் வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி வீழ்த்தப்படுவது நிச்சயம்!

கடைசியாக ஒரு செய்தியை மட்டும் சொல்லி என் உரையை முடிக்கிறேன் தோழர்களே... இங்கே வேங்கைவயல் போன்ற கொடூர தீண்டாமைகளைப் பொதுக் குடியிருப்புகளால் மட்டும்தான் தடுத்து நிறுத்த முடியும்! அதேபோல, 1990-களில் உருவெடுத்த சாதியவாதக் கட்சிகளை மக்கள் ஓரம் ஒதுக்கி வைக்க வேண்டும்! 

மார்க்சிய-லெனினிய புரட்சிகர அமைப்புகளின் பின்னால் மக்கள் திரளும்போதுதான், அகமண முறைக்கு மாற்றாகச் சமூகத்தில் சுமுகமான முறையில் புறமண முறை அதிகரிக்கும்!
அப்படி மக்கள் திரளும்போதுதான்... இளவரசன் - திவ்யா காலத்து சாதிவெறி நச்சுப் பாசறையான நாயக்கன்கொட்டாய் போல் அல்லாமல், தோழர்கள் அப்பு - பாலன் காலத்து வர்க்கப் புரட்சியின் சமத்துவ நாயக்கன்கொட்டாய்களாகத் தமிழ்நாடு மாறும்! 

அண்ணல் அம்பேத்கர் கண்ட சாதி ஒழிப்புச் கனவு நனவாவதும், இந்த நாட்டின் நக்சல்பாரிகளைப் பலப்படுத்துவதில்தான் உள்ளது என்பதைக் கூறி விடைபெறுகிறேன்!

வெல்லட்டும் சனாதன எதிர்ப்புப் போராட்டம்! நக்சல்பாரி நாடெங்கும் பரவட்டும்!
நன்றி, வணக்கம்!

முழு உரையைக் கேட்க: https://www.facebook.com/share/p/1Cipxng5sL/

பொன்.சேகர்
வழக்குரைஞர்


Sunday, 24 May 2026

பென்சன்தாரர்களின் அவலம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சிறிய விபத்திற்குப் பிறகு, நான் இருசக்கர வாகனங்களைத் தொடுவதில்லை. எங்குச் சென்றாலும் ஷேர் ஆட்டோவும் அரசுப் பேருந்தும்தான் என் கால்கள்.

நேற்று வரை 10 ரூபாய் வாங்கிய ஷேர் ஆட்டோ இன்று 20 ரூபாய் கேட்கிறது. காரணம் கேட்டால்—பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்கிறார்கள். அவர்களையும் குறை சொல்ல முடியாது. அவர்கள் கூட உழைத்து வாழும் வர்க்கம்தானே!


அதே தூரத்தைப் பேருந்தில் சென்றால் 5 ரூபாய் தான். ஆனால், பேருந்து எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. நகரப் பேருந்துகள் குறைந்து போனதால், அவற்றை நம்பிக் காத்திருந்தால் காலம்தான் கழியும். வேறு வழியின்றி, ஒரு நாளைக்கு ஒருமுறை வெளியே சென்றுவந்தாலே ஆட்டோவுக்கே 40 ரூபாய் செலவாகிறது.

இங்கேதான் என் வாழ்வின் உண்மையான கணக்கு தொடங்குகிறது.

நான் வாங்கும் EPF பென்ஷன் 2400 ரூபாய்; BHEL பென்ஷன் 3300 ரூபாய். மொத்தம் 5700 ரூபாய். நான் பணி ஓய்வு பெற்று எட்டு ஆண்டுகள் ஆகிறது. இந்த எட்டு ஆண்டுகளாக இதே தொகைதான். உயர்வும் இல்லை.

என் வாழ்நாள் சேமிப்பில் சில லட்சங்களை அஞ்சலக நிரந்தர வைப்புத் தொகையாக வைத்துள்ளேன். அதிலிருந்து மாதம் சுமார் 10,000 ரூபாய் வட்டி வருகிறது. ஆனால், வட்டி விகிதமும் ஆண்டுகளாக உறைந்து கிடக்கிறது; சில நேரங்களில் குறைகிறது கூட.

ஆக, என் மொத்த மாத வருமானம் 15,700 ரூபாய்.

ஆனால் வெளியுலகம் அப்படியே நிற்கிறதா?

மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மின்கட்டணம், மருந்துச் செலவு, போக்குவரத்து—எல்லாம் ஏவுகணை வேகத்தில் உயர்கின்றன. நாங்கள் வாங்கும் பென்ஷனுக்கு அரசு ஊழியர்களைப் போல ‘பஞ்சப்படி’ (DA) கிடையாது. வட்டித் தொகைக்கும் எந்த பாதுகாப்பும் இல்லை.

இந்த நிலையில் நான் எதை இறுக்கிக் கட்டுவது? வயிற்றையா, மற்ற பிற அவசியத் தேவைகளையா?

“நடந்து போய்வரலாம்” என்றால், விலைவாசியைப் போலவே வயதும் ஏறிக்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் எனக்கு 68 வயது முடிகிறது. உடல் ஒத்துழைப்பதில்லை. இனி ஆட்டோவை அதிகம் நம்பியே வாழ வேண்டிய நிலை.

“பிள்ளைகள் கவனிக்க மாட்டார்களா?” என்று சிலர் கேட்கலாம். ஆனால், இன்றைய பொருளாதார சூழலில் அவர்கள் தங்கள் குடும்பத்தையே தக்கவைத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். அவர்களின் சுமைக்கு மேலாக நம்முடைய மருந்துச் செலவையும், போக்குவரத்துச் செலவையும் சேர்க்க எந்த சுயமரியாதை உள்ள தந்தைக்கும் மனம் வராது.

இது என்னுடைய தனிப்பட்ட சோகக் கதை அல்ல. இந்த நாட்டில் பணி ஓய்வு பெற்ற எண்ணற்ற தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கை இதுதான்.

குறைந்தபட்ச EPF பென்ஷனை உயர்த்தித் தரக்கோரி நாடு முழுவதும் முதியவர்கள் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், “உயர்த்தப் போகிறோம்” என்ற வாக்குறுதிகளைத் தவிர இதுவரை ஒரு நயா பைசா கூட உயரவில்லை.

இந்த நாடு நிமிர்ந்து நிற்க தங்கள் இளமையையும், உழைப்பையும், வியர்வையையும் கொடுத்த தொழிலாளர்கள்—இன்று முதுமையில் விலைவாசிக்குப் பின்னால் நசுங்கிக் கிடக்கிறார்கள்.

உழைப்பவனுக்குப் பாதுகாப்பு தராத இந்த அமைப்பு, கார்ப்பரேட் லாபங்களையும் மதவாத அரசியலையும் மட்டும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.

முதுமையின் இந்த எதார்த்தக் குரல், என்றுதான் ஆட்சியாளர்களின் செவிகளை எட்டப்போகிறதோ?

பொன் சேகர்
(ஊரான்)

Saturday, 23 May 2026

கூட்டணி அரசியல் லாவணிகள்!

I

நடிகரின் புதிய ஆட்சி பொறுப்பேற்று சில நாட்களே ஆன நிலையில், ஏற்கனவே ஏராளமான முரண்பாடுகளும் அரசியல் எதார்த்தங்களும் வெளிப்படத் தொடங்கியுள்ளன. தேர்தல் மேடைகளில் மக்கள் பார்க்கிறதொன்று; ஆனால் ஆட்சிக் கட்டமைப்பின் உள்ளே இயங்கும் நிரந்தர அதிகார இயந்திரம் முற்றிலும் வேறொன்று.

அரசு என்ற இயந்திரத்தையும், அதன் நிரந்தர அதிகார வட்டாரங்களையும் புரிந்து கொள்ளாமல் ஆட்சியில் அமரும்போது என்ன நடக்கும் என்பதை இன்று நாம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் பெரும்பாலும் கவனிக்காத ஒரு உண்மை என்னவென்றால், அதிகார மையங்களின் உள்ளே எப்போதும் சுற்றித் திரியும் நிரந்தர “காக்ரோச்சுகள்” இருக்கின்றன. புதிய எம்.எல்.ஏ-க்களையும், அமைச்சர்களையும் எப்படி தங்கள் வழிக்குக் கொண்டு வருவது என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

அதனால்தான், “புதிய ஆட்சி” என்ற எதிர்பார்ப்பு உருவானாலும், பல நேரங்களில் நடப்பது “பழைய கள்ளு புதிய மொந்தை” என்பதுதான்.

காய்ந்த மாடு வரப்போரம் மேய்ந்தால் சேதாரம் குறைவு. ஆனால் அது கொல்லைக்குள் இறங்கிவிட்டால், நமக்கான கஞ்சிக்கே கேடு. அரசியலிலும் அதே நிலைதான். யார் எங்கே மேய வேண்டும், எவ்வளவு மேய வேண்டும் என்பதை நிர்ணயிப்பது பெரும்பாலும் இந்த நிரந்தர அதிகார அமைப்புகள்தான். மாடுகள் மேயப் போனாலும், கரை ஏற வேண்டுமென்றால் காக்ரோச்சுகளின் உதவி தேவைப்படும் அளவுக்கு அரசியல் அமைப்பு சிக்கலானதாக மாறியுள்ளது.

II

இந்த எதார்த்தம் வெளிப்படத் தொடங்கிய நிலையில், புதிய ஆட்சி 8000 தனியார் மருத்துவமனைகளுக்கு 'ஆன்லைன்' அனுமதி வழங்கும் முடிவை எடுத்திருக்கிறது. நேற்று வரை “புரட்சிக் கட்டைகளைக்” கொண்டு நடிகர் ஆட்சி அமைக்க முட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இன்று அதே ஆட்சியிடமே “இது கூடாது” என்று அன்புக் கோரிக்கை வைக்கும் நிலைக்கு வந்துள்ளனர்.

அதிகாரத்திற்கு வெளியே பேசப்படும் மொழியும், அதிகாரத்தின் அருகில் சென்றபின் பேசப்படும் மொழியும் எவ்வளவு வேறுபட்டவை என்பதை இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றன.

III

இதே முரண்பாடு கூட்டணி அரசியலிலும் வெளிப்படுகிறது.
“விளிம்பு நிலை சமூகத்தைச் சார்ந்தவர்கள் தலா இரண்டு இடங்களைப் பெற்றிருப்பது…” என்று ஒரு பேட்டியில் திருமாவளவன் கூறுகிறார். 

அவர் குறிப்பிடுவது பட்டியல் சாதியினரையும், இஸ்லாமியர்களையும் என்று எடுத்துக் கொண்டால், ஒரு கேள்வி எழுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஏற்கனவே:

  • பட்டியல் சாதியினருக்கான 46 இடங்கள்,

  • இஸ்லாமியர்களின் சுமார் 9 பிரதிநிதித்துவங்கள்

இருக்கின்றன. அப்படியானால் இவர்கள் எல்லோரும் “விளிம்பு நிலை சமூகத்தைச் சேர்ந்தவர்கள்” இல்லையா? அல்லது கூட்டணிக்குள் கிடைக்கும் பதவிகளே விளிம்பு நிலைப் பிரதிநிதித்துவமாக கருதப்படுகிறதா?

பொதுத் தொகுதிகளிலும் பட்டியல் சாதியினர் வெற்றி பெற்றதாக செய்திகள் உலவின. ஆனால் அதற்கான தெளிவான அதிகாரப்பூர்வ விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை.

அரசியலில் “விளிம்பு நிலை” என்பது உண்மையில் சமூக நிலையை குறிக்கிறதா, அல்லது கூட்டணி பேர அரசியலின் மொழியாக மாறிவிட்டதா என்ற கேள்வி எழுகிறது.

IV

“உன்னால்தான் நான் தோற்றேன்…”

இதோடு மற்றொரு பெரிய கேள்வியும் இணைகிறது:

“என்னால்தான் நீ வென்றாய்…”

என்ற வசவுகள் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் தொடர்கின்றன. அப்படியானால் ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகப் போட்டியிடட்டுமே? கூட்டணி எதற்கு?

மக்கள் யாருக்கு எவ்வளவு வாக்கு தருகிறார்களோ, அதற்கேற்ப சட்டப்பேரவையில் இடங்கள் கிடைக்க வேண்டும். விகிதாச்சார பிரதிநிதித்துவம் (Proportional Representation) மட்டுமே இந்த அரசியல் வியாபாரங்களுக்கு நீண்டகால தீர்வாக அமைய முடியும்.

இல்லையெனில்:

  • தேர்தலுக்கு முன் கூட்டணி,

  • தேர்தலுக்குப் பிறகு குற்றச்சாட்டு,

  • பின்னால் பேரம்,

  • “பேக் டோர் எண்ட்ரி” அரசியல்,

  • முதுகில் குத்தும் துரோகங்கள்

இவை அனைத்தும் தொடர்ந்துகொண்டே இருக்கும்.

மக்கள் தரும் வாக்கு நேரடியாக அதிகாரமாக மாறும் அரசியல் அமைப்பு உருவானால்தான் கூட்டணி லாவணிகளும், அதிகார தரகர்களின் ஆட்டங்களும் குறையும்.

பொன் சேகர்

Friday, 22 May 2026

கணங்கள் முதல் சாதி ஒழிப்பு வரை: சாதி-தீண்டாமை எனும் சனாதன வேர்களை வெட்டுவது எப்படி?

1.உலக வரலாறும் இந்தியப் பிறழ்வும் (The Historical Paradox)

உலகெங்கிலும் மனித சமூகம் ஒரு இயல்பான வரலாற்றுப் பரிணாமப் பாதையைக் கடந்துதான் நவீன சமூகமாக மாறியது. காடுகளில் வேட்டையாடித் திரிந்த மனிதர்கள் ரத்த உறவுகளின் அடிப்படையில் தங்களை 'கணங்களாக' (Clans) சுருக்கிக் கொண்டனர்.

விவசாயமும் கால்நடை வளர்ப்பு முறையும் அறிமுகமானபோது, பல கணங்கள் ஒன்றிணைந்து பெரிய 'குலங்களாக' (Tribes) மாறின. 


வர்த்தகம், நகரமயமாதல், வேளாண்மை வளர்ந்தபோது இந்தக் குலங்களுக்கு இடையே இருந்த ரத்த உறவு எல்லைகள் உடைந்தன; அவர்கள் மொழி மற்றும் நிலப்பரப்பின் அடிப்படையில் ஒன்றிணைந்து ஒரே 'மக்கள் கூட்டமாக' (Civil Society / Nation) மாறினர். சுருக்கமாக, பழங்குடி குலங்கள் என்ற அடையாளம் அழிந்து, 'குடிமகன்' (Citizen) என்ற பொது அடையாளம் பிறந்தது.

ஆனால், இந்தியாவிலும் சிந்துவெளி மற்றும் தொடக்கக் காலங்களில் இதே போன்ற குலக் கூட்டங்கள் (Tribal Republics) இருந்தபோதிலும்,
வர்ணாசிரமக் கட்டமைப்பு பல சமூகங்களின் கலப்பை கட்டுப்படுத்தியது. குலங்கள் மக்கள் கூட்டமாக மாறாமல் தங்களுக்குள்ளேயே சுருங்கி 'சாதிகளாக' உறைந்து போயின.

இதற்கு அண்ணல் அம்பேத்கரும் மார்க்சிய அறிஞர்களும் சுட்டிக்காட்டும் முதன்மைக் காரணி: அகமண முறை (Endogamy) என்னும் இரும்புச் சுவர். குலங்கள் மக்கள் கூட்டமாக மாறுவதற்குக் குலங்களுக்கு இடையே நடந்த கலப்புத் திருமணங்கள் (Exogamy) தான் உலகெங்கும் காரணியாக இருந்தன. ஆனால் மனுதர்மம் வர்ணக் கலப்பைத் தடுக்க 'தன் சாதிக்குள்ளேயே திருமணம் செய்யும்' அகமண முறையைக் கடுமையான சட்டமாக்கியதால், குலங்கள் சாதித் துண்டுகளாகக் கெட்டிப்பட்டுப் போயின.

2. சங்கர ஜாதிகளின் உற்பத்தியும், தீண்டாமையின் தோற்றமும்

இந்தியாவில் ஒவ்வொரு சாதிக்குமான தொழில் எப்படி பிறப்பின் அடிப்படையில் இறுகியது? தீண்டாமை எவ்வாறு உருவானது? இதற்கான விடையைச் சனாதன மனுதர்மத்தின் 'சங்கர ஜாதிகள்' (Mixed Castes) என்ற தத்துவார்த்தச் சதியிலிருந்துதான் நாம் தொடங்க வேண்டும்.

வர்ணாசிரமம் நாலு வர்ணங்களை உருவாக்கியதோடு நிறுத்தவில்லை. இந்த நான்கு வர்ணங்களுக்கு இடையே நடக்கும் மீறல் திருமணங்களால் (கலப்புகளால்) பிறக்கும் வாரிசுகளைச் சனாதனம் 'சங்கர ஜாதிகள்' என்று அழைத்தது. உயர் வர்ணத்து ஆணுக்கும், கீழ் வர்ணத்துப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை 'அனுலோம' (Anuloma) என்றும்; கீழ் வர்ணத்து ஆணுக்கும், உயர் வர்ணத்துப் பெண்ணுக்கும் பிறப்பவர்களை 'பிரதிலோம' (Pratiloma) என்றும் வகைப்படுத்தியது. மனுதர்மம் இந்த பிரதிலோம முறையை மிகக் கடுமையான பாவமாகக் கருதியது.

இந்த வர்ணக் கலப்பில் உருவான வாரிசுகளுக்குள்ளும், அவர்களுக்கு இடையேயும் தலைமுறை தலைமுறையாக ஏற்பட்ட அடுத்தடுத்த கலப்புகள் மூலமாகத்தான் இந்தியாவில் பறையர், நாவிதர், ஆசாரி, சக்கிலியர் உள்ளிட்ட பல்வேறு 'தனித்தனிச் சாதிகள்' உற்பத்தியாயின.

இவ்வாறு உருவான ஒவ்வொரு புதிய சாதிப் பிரிவிற்கும் சனாதன நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பு பிரத்தியேகமான, மாற்ற முடியாத தொழில்களைப் பிறப்பின் அடிப்படையில் கட்டாயப்படுத்தி ஒதுக்கியது. நெசவு, தோல் பதனிடுதல், துப்புரவு எனத் தொழில்கள் அனைத்தும் பிறப்புரிமையாக்கப்பட்டன. 

தொழில்கள் பிரிக்கப்பட்டபோது வர்க்க நகர்வு (Class Mobility) மறுக்கப்பட்டு, மனிதர்கள் அந்தந்தத் தொழிலோடு பிணைக்கப்பட்டனர். அதில் சிலர் கூலி அடிமைகளாக்கப்பட்டனர்.

மனுதர்மத்தின்படி, வர்ண ஒழுக்கத்தை மீறிப் பிறந்த இந்தச் சங்கர ஜாதிகளின் வாரிசுகள் 'ஊருக்குள்' வாழத் தகுதியற்றவர்களாகக் கருதப்பட்டனர். இதன் விளைவாகவே, இந்தியக் கிராமங்களில் 'ஊர் வேறாகவும், சேரி வேறாகவும்' பிரிக்கும் புவியியல் வன்முறை பிறந்தது. 

அவர்கள் ஊருக்கு வெளியே, ஒதுக்குப்புறமான பகுதிகளில் வாழக் கட்டாயப்படுத்தப்பட்டனர்.
இப்படி ஊருக்கு வெளியே தள்ளப்பட்டவர்களில் அதாவது கீழ் வர்ணத்து ஆணுக்கும் பிராமணப் பெண்ணுக்கும் பிறந்த சண்டாள (பறையர்) வாரிசுகளையும் சனாதனம் 'தீண்டத்தகாதவர்கள்' (Untouchables) ஆக்கியது. அவர்களின் நிழலோ, காற்றோ கூட உயர் வர்ணத்தினர் மீது படக் கூடாது என்ற கொடூரம் புகுத்தப்பட்டது. இதுவே இந்தியச் சமூகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடான 'தீண்டாமைக்கு' (Untouchability) அடிப்படையான வரலாற்றுத் தொடக்கமாகும்.

இதனால்தான் மார்க்சிய வரலாற்று ஆய்வாளர் டி.டி. கோசாம்பி, "இந்தியாவில் சாதி என்பது, பழங்குடிக் குழுக்கள் (Tribes) வர்க்கச் சமூகமாக மாற முடியாமல், சனாதன நிலப்பிரபுத்துவ அமைப்பிற்குள் அப்படியே உள்வாங்கப்பட்டு, சாதியாய் உறைந்து போன ஒரு தேக்க நிலை (Stagnation)" என்றார்.

3.புவியியல் பிரிவினை உடைப்பு: ஊரையும் சேரியையும் தரைமட்டமாக்கிய நவீன நகரங்கள்

இந்தியாவில் 'ஊர் - சேரி' என்ற பௌதிகக் கட்டமைப்பு நீடிக்கும் வரை சாதியும் தீண்டாமையும் ஏதோ ஒரு வடிவத்தில் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். கிராமிய நிலப்பிரபுத்துவச் சூழலில் மனிதனின் இருப்பிடமே அவனது சாதியைத் துல்லியமாகக் காட்டிவிடுகிறது. இத்தகைய இருப்பிடப் புவியியல் பிரிவினையை உடைத்து, சாதி ஒழிப்பிற்கான மிக முக்கியமான ஒரு தொடக்கப்புள்ளியை இந்தியாவின் நவீனப் பொதுத்துறை மற்றும் திராவிடக் கொள்கை வடிவமைப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் (Public Sector Undertakings) தோற்றுவிக்கப்பட்டபோது, அவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'டவுன்ஷிப்' (Township) என்னும் குடியிருப்பு அமைப்புகள் சாதிச் சுவர்களை முதன்முதலில் பௌதிக ரீதியாக அசைத்துப் பார்த்தன. அங்கு மேலாளரும், தொழிலாளியும், வெவ்வேறு சாதியினரும் தங்களின் உத்தியோகப்பூர்வப் பதவிப் படிநிலையின் அடிப்படையில் அருகருகே வாழும் சூழல் உருவானதே தவிர, சாதிப் படிநிலைக்கு அங்கு இடமில்லாமல் போனது.

தமிழ்நாட்டில் இந்தச் சமூகப் பொறியியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்கள். அவரால் கொண்டுவரப்பட்ட கே.கே. நகர், தில்லை நகர், அண்ணா நகர் போன்ற புதிய திட்டமிடப்பட்ட நகரக் கட்டமைப்புகளும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் (TNHB) போன்ற பொதுவான குடியிருப்புகளும், சாதி கடந்த பௌதிக வாழ்விடங்களை உருவாக்கின. எல்லாவற்றிற்கும் மேலாக, கலைஞர் உருவாக்கிய 'பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்' என்பது இந்திய வரலாற்றிலேயே சாதி ஆதிக்கப் புவியியலைத் தகர்க்க அரசு அதிகாரத்தால் கட்டப்பட்ட ஆகச்சிறந்த புரட்சிக் கோட்டைகள் ஆகும். 

ஒரே மாதிரியான வீடுகள், ஒரே மாதிரியான பொதுப் பாதைகள், ஒரே பொது நீர்த்தேக்கத் தொட்டி எனப் பல சாதியினரை அருகே அமர்த்தி வாழ வழிவகுத்தது திராவிடக் கோட்பாடு. இது போன்ற ஏற்பாடுகள்தான் வேங்கை வயல்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும்.

இந்த வாழ்விட மாற்றங்களால் விளைந்த நன்மைகள்:
  • பல சாதியினர் அருகருகே வாழும்போது மனிதர்கள் சாதி கடந்து பழகத் தொடங்கினர்.
  • ஆபத்துக் காலங்களில் சாதி பாராமல் ஒருவருக்கொருவர் கை கொடுத்துக் கொள்ளும் வர்க்கத் தோழமை பிறந்தது.
  • ஒருவருடைய நல்லது கெட்டதுகளில் இயல்பாகப் பங்கெடுத்துக் கொள்ளவும், பரஸ்பரம் புரிந்து கொள்ளவும் வழிவகுத்தது.
  • சாதி கடந்த நட்புகளும், இளைய தலைமுறையினரிடையே இயல்பான காதல் திருமணங்களும் மலர்வதற்கும், ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பொதுவான திருவிழாக்களையும் பண்பாட்டு நிகழ்வுகளையும் நடத்துவதற்கும் இதுவே அடித்தளமிட்டது.
புதிய பொருளாதாரக் கொள்கையின் பேரழிவு:
ஆனால், 1990-களுக்குப் பின் புகுத்தப்பட்ட 'புதிய பொருளாதாரக் கொள்கை' மற்றும் தனியார்மயமாக்கல் காரணமாகப் பொதுத்துறை நிறுவனங்கள் நசுக்கப்பட்டன; அதன் விளைவாக டவுன்ஷிப் போன்ற முற்போக்கு அமைப்புகள் சிதைந்து சிதிலமாகின. கலைஞருக்குப் பிறகு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் சமத்துவபுரங்கள் போன்ற முற்போக்குக் குடியிருப்புத் திட்டங்கள் புதிய அரசுகளால் வீரியத்துடன் தொடரப்படாததால், அவை இன்று முடங்கிப் போய்விட்டன. 

எனவே, மக்களின் வாழ்வோடு பிணைந்த இந்த இடஞ்சார்ந்த மாற்றங்களைத் தொடர்ந்து அரசு சார்பாக ஏற்படுத்த வேண்டும். புதிய நவீனப் பொதுக் குடியிருப்புகளை உருவாக்கி, அங்கு அனைத்து நவீன உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். ஏற்கனவே கிராமத்து ஊர்களிலும் சேரிகளிலும் முடங்கிக் கிடக்கும் மக்கள், அந்தச் சனாதன வாழ்விடங்களை விட்டுவிட்டு இந்த நவீனச் சமத்துவக் குடியிருப்புகளை நோக்கி ஓடி வருகின்ற எதார்த்த நிலையை உருவாக்க வேண்டும். 

அப்பொழுதுதான் காலப்போக்கில் சனாதனம் உயிர்ப்புடன் இருக்கும் 'ஊரும் சேரியும்' மனித நடமாட்டமற்றுத் தரைமட்டமாகும்; சாதி தீண்டாமையின் வேர்களும் பௌதிக ரீதியாகப் பலவீனமடைந்து அழியும்! ஆம்! ஊரும் சேரியும் ஒரு சேர சுடுகாடாக மாற்றப்பட வேண்டும்.

4. சாதி ஒழிப்பிற்கான இருமுனைத் திட்டம்: ஒரு தத்துவார்த்த முன்மொழிவு

வாழ்விடங்களை மாற்றுவதுடன் நின்றுவிடாமல், சாதியின் தத்துவார்த்த மற்றும் பொருளாதாரக் கால்களை ஒடிக்க, துல்லியமான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய சாதிவாரிக் கணக்கெடுப்பு (Comprehensive Caste Census) மிக மிக அவசியம். அதன் அடிப்படையில், சாதி ஒழிப்பிற்கான இந்த இருமுனைத் திட்டத்தை நாம் ஒரு நீண்ட கால விவாதப் பொருளாக முன்வைக்கிறோம்:

முன்மொழிவு 1: சாதிவாரி விகிதாச்சார இடஒதுக்கீடு

"உனக்கு இடஒதுக்கீடு இருக்கிறது, எனக்கு இல்லை; உன்னால் என் வாய்ப்பு பறிபோகிறது" என்று முற்பட்ட சாதியினர் முதல் ஒவ்வொரு சாதியினரும் பிற சாதியினர் மீது கக்கும் வன்மத்திற்கும், சாதிப் பொறாமைக்கும் இந்த 'சாதிவாரி இடஒதுக்கீடு' (Proportional Representation) தான் இறுதித் தீர்வு.
சாதிவாரி கணக்கெடுப்பின்படி, பொதுப்பிரிவினர் (OC) எவ்வளவு சதவீதமோ அவ்வளவு இடஒதுக்கீடு; பிற்படுத்தப்பட்டோர் (BC) மற்றும் பட்டியலினத்தவர் (SC/ST) எவ்வளவு சதவீதமோ அவ்வளவு இடஒதுக்கீடு. இப்படி 100% இடஒதுக்கீட்டையும் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பிரித்துக் கொடுத்துவிட்டால், எவனும் அடுத்தவனுடைய பங்கைப் பறிக்க முடியாது; அடுத்தவன் மீது பொறாமைப்பட முடியாது. எவனுடைய போட்டியும் அவனவன் சாதிப் பட்டியலுக்குள் மட்டுமே இருக்கும் என்பதால், இடஒதுக்கீட்டுப் போட்டி-பொறாமைகள் முற்றிலும் ஒழியும். ஒத்த சாதிகள் ஒரே பகுப்பாக இருக்க விரும்பினால் அவர்கள் ஒரே வகுப்பாகவும் இல்லை எனில் தனித்தனி சாதிகளாகவும் தங்களுக்குரிய பங்கை பெற்றுக் கொள்ளலாம்.

முன்மொழிவு 2: சாதியற்றோர் தனிப் பட்டியல் 

சாதி மறுப்பு வாரிசுகளையும், சாதியைத் துறக்க விரும்புவோரையும் இணைத்து "சாதியற்றோர் தனிப் பட்டியல்" (No Caste Category) உருவாக்கப்பட வேண்டும். 
  • உண்மையான பயன் :  சாதியைத் துறந்துவிட்டு வரும் SC, ST, BC. OC என அனைத்துச் வகுப்பினரும் இந்தத் தனி ஒதுக்கீட்டின் கீழ் பயன்பெறுவார்கள். 
  • சாதி ஒழிப்புக்கான நேரடி ஊக்கத்தொகை (Incentive for Caste Abolition): "நான் சாதியைத் துறந்தால், என் குழந்தைக்கு அரசு வேலைவாய்ப்பிலும் கல்வியிலும் 'சாதியற்றோர் தனி ஒதுக்கீடு' என்கிற பாதுகாப்பான தளம் கிடைக்கும்" என்ற எதார்த்த நிலை வரும்போது, பலரும் தங்களின் வாரிசுகளின் எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்புக்காகச் சாதியைத் தூக்கி எறிய முன்வருவார்கள். சாதி மெல்ல மெல்லத் தன் சமூகப் பலத்தை இழந்து சுருங்கி அழியும்.
நிர்வாகச் சிக்கல்களுக்கான தீர்வு:

முற்போக்கு வேடமிட்டு உயர்சாதியினர் தங்களைச் 'சாதியற்றவர்களாக'க் காட்டிக்கொண்டு எளிய மக்களின் சலுகைகளை அபகரிப்பதைத் தடுக்கத் தகுந்த சமூக-சட்ட பாதுகாப்புகளும் தேவைப்படும். 

முடிவுரை

நாம் முன்வைக்கும் இந்த விரிவான திட்டம், தற்போதைய சமூகத்தில் இருக்கும் சாதி வன்மத்தை, சாதிவாரிப் பங்கீடு மூலம் தற்காலிகமாக நிறுத்தி அமைதியை ஏற்படுத்தும்; அதே நேரத்தில், சாதியற்றோர் தனிப் பட்டியல், அவர்களுக்கான தனிப் பங்கீடு மற்றும் சமத்துவப் பொதுக் குடியிருப்புகள் மூலம் சாதி அமைப்பிற்குள் இருப்பவர்களைச் சாதியற்ற நவீன குடிமக்களாக மாற்றத் தூண்டும் ஒரு மாபெரும் "சமூகப் பொறியியலை" (Social Engineering) நிகழ்த்தும்.

அண்ணல் அம்பேத்கர் கண்ட
சாதி ஒழிப்புக் கனவும், தந்தை பெரியார் கண்ட சமூகநீதிக் கனவும் இணையும் ஆகச்சிறந்த தத்துவார்த்தப் புள்ளி இதுவே! 

ஆட்சிகள் வரலாம், போகலாம்; ஆனால் சாதி ஒழிப்பிற்கான இந்த நீண்ட கால தத்துவார்த்த விவாதம் தொடரட்டும்!

ஊரான்

Thursday, 21 May 2026

அதிகாரப் பெருமிதமும், சாதிச் சனாதனமும்: பதவி ஏற்பு விழாவின் பின்னுள்ள அரசியல் எதார்த்தம்!

சாதியற்றவர் பட்டியல் இல்லாத தமிழ்நாடும், சாதிப் பெருமிதங்களும்

தெலங்கானாவில் அண்மைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, தங்களை "சாதியற்றவர்கள்" என்று சுமார் 3.4% மக்கள் தைரியமாகப் பதிவு செய்துள்ளனர். ஆனால், முற்போக்கு பேசும் தமிழ்நாட்டில் அப்படி ஒரு நிலை இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. இங்கு அதிகாரப்பூர்வமாக 'சாதி அற்றவர்கள்' என்று ஒருவரும் கிடையாது என்பதே கசப்பான எதார்த்தம். இதன் விளைவுதான் இன்றைய தமிழக அரசியல் களம் மிகக் கேவலமாக நகர்ந்து கொண்டிருக்கிறது.

"எங்க சாதிக்காரன் நாலு பேருக்கு அமைச்சர் பதவி கிடைச்சிருக்கு", 

"எங்க சாதிக்கு ஏழு பேர் மந்திரி ஆனது ஒரு வரலாற்றுச் சாதனை" 

என்று ஒருபுறம் சாதிப் பெருமிதக் கூச்சல்கள்; 

"எங்க சாதிக்கு இந்த முறை மந்திரி பதவி இல்லையா?" 

என்கிற சலிப்புகள் மறுபுறம்.

தமிழ்நாட்டில் சாதியற்றவர் என்று ஒரு பட்டியல் இல்லாததால், இங்கு எவனுக்கு மந்திரி பதவி கொடுத்தாலும் அவன் ஏதோ ஒரு சாதியின் பிரதிநிதியாகவே பார்க்கப்படுவான். 

"என் சாதிக்காரன் மந்திரி ஆகிவிட்டான்" 

என்று சாமானிய மக்கள் கொண்டாடும் ஒவ்வொரு நொடியும், சாதி என்னும் சனாதனக் கட்டமைப்புதான் இன்னும் இறுக்கமாகிறது என்பதை இவர்கள் எப்போது உணரப் போகிறார்களோ?

21.05.2026

சாமானியன் மந்திரியாவது வரலாற்றுச் சாதனையா?

"பார்த்தாயா! சாமானியனாக இருந்தவன், ரசிகனாக இருந்தவன், ஏழையாக இருந்தவன், குடிசையில் வாழ்ந்தவன், காலில் செருப்புக் கூட அணியாதவன் எல்லாம் இன்றைக்கு மந்திரி ஆகிவிட்டான்! இது ஒரு வரலாற்றுச் சாதனை!" 

என மூக்குக்கு மேலே பெருமை பேசுகின்றனர் சிலர்.

அவர்களிடம் நாம் கேட்க விரும்புவது ஒன்றுதான்: என்றோ ஒரு காலத்தில் கக்கனும், காமராஜரும் ஏழைகளாக இருந்துதான் ஆட்சி நடத்தினார்கள். அவர்கள் கடைசி வரை ஏழைகளாகவே வாழ்ந்து, ஏழைகளாகவே இறந்தும் போனார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஆனால், இன்று 'சாமானியர்கள்' என்று சொல்லிப் பதவி ஏற்றவர்கள் அப்படி வாழ்வார்களா? யாரேனும் ஒரு வெள்ளைத்தாளிலாவது எழுதித் தரத் தயாராக இருக்கிறீர்களா?

அதுமட்டுமல்ல, நேற்றுவரை திமுகவில் 'அமைச்சர் ஜாம்பவான்களாக' வலம் வந்தவர்களில் பலருடைய பின்னணி என்ன? அவர்கள் ஒரு காலத்தில் லாரி கிளீனர்களாகவும், ஆட்டோ ஓட்டுநர்களாகவும், பஸ் டிரைவர்களாகவும் இருந்தவர்கள்தான் என்பது இன்றைய இளைய தலைமுறையில் எத்தனை பேருக்குத் தெரியும்? ஆனால், இன்றோ அவர்கள் கப்பல்களுக்கும், பேருந்துகளுக்கும், பிரம்மாண்டக் கல்லூரிகளுக்கும் அதிபதிகளாக உருவெடுத்து நிற்கிறார்கள்.

எம்.ஜி.ஆர் ஆட்சியின்போதுகூட ரசிகனும், சாமான்யனும் மந்திரிகள் ஆனார்கள். பிறகு கோடிகளில் புரளும் குபேரர்கள் ஆனார்கள். அம்மணிக்கு சமைத்துக் கொடுத்த பெண்மணி எல்லாம் தமிழ்நாட்டை சல்லடை போட்டு அள்ள வில்லையா?

எனவே, வர்க்கப் புரிதல் இல்லாமல், "ஒரு சாமானியன் மந்திரியாகி விட்டான்" என்று இன்று பெருமை பேசுவதெல்லாம் வெற்று வீண் ஜம்பமே தவிர வேறொன்றுமில்லை. 

அரசு பதவி என்பது ஒரு பொன் முட்டையிடும் வாத்து. அந்த வாத்தை வளர்க்க வேண்டிய பொறுப்பு இப்போது அமைச்சர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. வாத்து இடப்போகும் பொன் முட்டைகளை இவர்கள் மக்களுக்குப் பயன்படுத்தப் போகிறார்களா அல்லது தங்களுக்குள்ளேயே பதுக்கப் போகிறார்களா என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதிகாரப் பெருமிதத்தில் அடகு வைக்கப்பட்ட தமிழ்!

இந்தச் 'சாதிப் பெருமிதத்திலும்', 'அதிகாரப் போதையிலும்' மூழ்கிக் கிடந்ததால்தானோ என்னவோ, தங்கள் கண் முன்னே தமிழ் மொழி இழிவுபடுத்தப்பட்ட நிகழ்ச்சியைக் கூட இவர்களால் தாங்கிக் கொள்ள முடிந்தது!

அண்மையில் நடைபெற்ற கூடுதல் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழாவில், தமிழ்நாட்டின் நீண்டகால மரபும் தன்னாட்சி உரிமையுமான ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ முதலிடத்தில் பாடப்படாமல், வந்தே மாதரம் மற்றும் தேசிய கீதத்திற்குப் பின்னால் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது தமிழுக்கும் தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் பண்பாட்டிற்கும் இழைக்கப்பட்ட அப்பட்டமான இழுக்கு! தமிழ் ‘நீசர்களின் பாஷை’ என்கிற சனாதனம் இங்கே அரங்கேறியது உங்களுக்கு உரைக்கவில்லையா?

இங்குதான் நம்முள் ஒரு நியாயமான தார்மீகக் கேள்வி எழுகிறது.

இந்த ஆட்சியில் இதுவரை இக்கட்சிகள் (இடதுசாரிகளும், விசிகவும்) நேரடியாகப் பங்கேற்கவில்லை; வெளியில் இருந்துதான் ஆதரவு தருகின்றன. எத்தனையோ மக்கள் போராட்டங்களை முன்னெடுத்த இடதுசாரித் (CPI, CPM) தோழர்களும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) தலைவர்களும் மேடையிலும் முன்னிலையிலும் அமர்ந்திருக்கும்போதே இந்தத் தவறு அரங்கேறியுள்ளது.

தவறு நடக்கும் இடங்களில் எல்லாம் உடனடியாகக் களமிறங்கிக் ‘கலகம்’ செய்யும் இந்த மக்கள் போராளிகள், தங்கள் கண் முன்னே தமிழ் மொழி பின்னுக்குத் தள்ளப்பட்டபோது அங்கேயே ஏன் குரல் எழுப்பவில்லை? மேடை நாகரிகம் கருதி, தமிழ்நாட்டின் சுயமரியாதையை அடகு வைக்கும் இந்த டிஜிட்டல் கால அடிமைத்தனத்தை அவர்கள் சத்தமில்லாமல் ஏற்றுக்கொண்டார்களா?

ஒன்றிய அரசின் புதிய சுற்றறிக்கை என்று கூறி ஆளுநர் மாளிகை மரபுகளை மாற்ற முயன்றபோது, "தமிழ் மண்ணில் தமிழ்நாடு அரசு வகுத்த நெறிமுறைதான் முதன்மையானது"  என்று அங்கேயே மேடையைப் புறக்கணித்தோ அல்லது முழக்கமிட்டோ தங்களின் தார்மீக எதிர்ப்பைப் பதிவு செய்திருக்க வேண்டாமா? விழா முடிந்து, எல்லாம் கைமீறிப் போன பிறகு கண்டன அறிக்கை விடுவதால் என்ன பயன்?

இணையத்தில் சனாதனமும், பழமைவாதமும் புது வடிவம் பெற்று, செயற்கை நுண்ணறிவு (AI) காலம் வரை தங்களை மீட்டெடுத்துக் கொண்டிருக்கும் இன்றைய வேளையில், அதற்குத் துணை போகும் ஆளுநர் மாளிகைச் சடங்குகளுக்கு முன்னால் நம் முற்போக்குத் தலைவர்கள் மௌன சாட்சிகளாய் நின்றது வேதனைக்குரியது.

அதிகாரத்திற்கு முன்னால் காக்கப்படும் ‘மேடை நாகரிகம்’, தமிழின் சுயமரியாதையை விடவும், சாதி ஒழிப்பு தத்துவத்தை விடவும் பெரிதாகிவிட்டதா தோழர்களே?

ஊரான்

Monday, 18 May 2026

டெலிபதி: அறிவியலா? நம்பிக்கையா?

எண்ண அலைகளும் டெலிபதியும்: அறிவியல் என்ன சொல்கிறது?

மொபைல் போன் வேலை செய்வதற்கு அலைகளை அனுப்ப ஒரு டிரான்ஸ்மிட்டரும், பெற ஒரு ரிசீவரும் தேவை என்பதை முந்தைய கட்டுரையில் பார்த்தோம்.


மனித மூளைக்குள் கோடிக்கணக்கான நியூரான்கள் (Neurons) மின் தூண்டுதல்கள் மூலமாகத் தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன. இதை நாம் EEG (Electroencephalogram) கருவி மூலம் அளவிட முடியும். இதனால் மூளைக்குள்ளும் ஒரு மெல்லிய 'மின் காந்தப் புலம்' இருப்பது உண்மைதான்.

ஆனால், இதைத் தொழில்நுட்பத்தோடு ஒப்பிடும்போது சில முக்கியமான முரண்பாடுகள் உள்ளன:

1. டிரான்ஸ்மிட்டர் பலவீனம்:

மொபைல் போன் கோபுரங்கள் மெகா வாட் அளவில் ஆற்றலைப் பயன்படுத்தி அலைகளைப் பாய்ச்சுகின்றன. ஆனால், மனித மூளை உருவாக்கும் மின் காந்த அலைகள் மிக மிக நுட்பமானவை (Micro-volts). இவை மண்டை ஓட்டைத் தாண்டி சில சென்டிமீட்டர் தூரம் கூடப் பயணிக்க முடியாது. எனவே, ஒருவரது எண்ணம் அலைகளாக மாறி மைல்கள் கடந்து செல்வது என்பது இயற்பியல் (Physics) விதிகளின்படி சாத்தியமற்றது.

2. ரிசீவர் சிக்கல்:

ஒருவர் அனுப்பும் எண்ண அலைகளைப் பெறுவதற்கு இன்னொருவரது மூளையில் அதற்கேற்ற 'ஆன்டெனா' அல்லது 'ரிசீவர்' கிடையாது. ரேடியோவில் குறிப்பிட்ட 'அதிர்வெண்' (Frequency) வைத்தால் தான் பாடல் கேட்கும். மனித மூளையில் அப்படி ஒரு டியூனிங் வசதி இருப்பதாக அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

3. டெலிபதி (Telepathy):

டெலிபதி என்பது ஒருவரின் எண்ணங்களை இன்னொருவர் கருவிகள் ஏதுமின்றி அறிந்துகொள்வது. இது 'பாராசைகாலஜி' (Parapsychology) என்ற துறையில் விவாதிக்கப்படுகிறது. பல ஆய்வுகள் நடத்தப்பட்டாலும், ஒரு கட்டுப்பாடான ஆய்வுக்கூடத்தில் (Controlled Environment) ஒருவரது எண்ணம் மற்றொருவருக்குச் சென்றது என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

4. தற்செயல் நிகழ்வு (Coincidence):

நாம் ஒருவரை நினைக்கும்போது அவரிடமிருந்து அழைப்பு வருவது என்பது பெரும்பாலும் ஒரு 'தற்செயல் நிகழ்வு' அல்லது 'புள்ளிவிவர வாய்ப்பு' (Probability) மட்டுமே. நாம் ஒரு நாளைக்கு நூறு பேரை நினைக்கலாம், அதில் ஒருவர் அழைக்கும்போது மட்டும் "அலைகள் வேலை செய்கிறது" என்று நம்புகிறோம். மற்ற 99 தோல்விகளை நமது மூளை கணக்கில் கொள்வதில்லை.

வாழ்த்துக்கள் வேலை செய்யுமா?

நாம் ஒருவரை வாழ்த்தும்போது, அந்த நேர்மறை எண்ணம் நமக்குள் ஒரு அமைதியைத் தருகிறது. நாம் அந்த நபரை நேரில் சந்திக்கும்போது நமது உடல் மொழி (Body Language) மற்றும் அன்பான அணுகுமுறை அவருக்கு ஒரு மகிழ்ச்சியைத் தருகிறது. இது உளவியல் ரீதியான தொடர்பு (Psychological Connection) தானே தவிர, காற்றில் பாயும் மின்காந்த அலைத் தொடர்பு அல்ல.

முடிவு:

அறிவியல் பூர்வமாகப் பார்த்தால், மனித மூளை ஒரு 'ரேடியோ ஸ்டேஷன்' போல அலைகளைப் பரப்புவது இல்லை. "டெலிபதி" என்பது ஒரு அழகான கற்பனையாகவும், நம்பிக்கையாகவும் இருக்கலாம்; ஆனால் அது இயற்பியல் விதிகளுக்கு உட்பட்ட தொழில்நுட்பம் அல்ல.


பொன்.சேகர்

தொடர்புடைய பதிவு