Wednesday, 18 February 2026

சாமியார் வேடம்: ஒரு திட்டமிட்ட ஏமாற்று அரசியல்!

சமூகத்தில் "நல்ல சாமியார்", "கெட்ட சாமியார்" என்ற பாகுபாடே கிடையாது. என்னைப் பொறுத்தவரை சாமியார்கள் என்றாலே அவர்கள் போலிகள்தான். ஒருவர் சாமியார் வேடம் தரிப்பதன் நோக்கமே மக்களை ஏமாற்றுவதற்குத்தான்; அந்த வேடத்திற்குப் பின்னால் நடப்பவை யாவும் திட்டமிட்ட ஏமாற்று வேலைகளே!


கருத்தியல் ஏமாற்று
சுரண்டலின் முதல் படி

ஆன்மீக ஏமாற்று வேலைகளில் இரண்டு வகைகள் உண்டு. அதில் முதலாவது மற்றும் அபாயகரமானது 'கருத்தியல் ஏமாற்று'. கர்ம வினை, விதிப்பயன், மோட்சம் எனப் புரியாத மொழியில் பேசி, மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிப்பதே இதன் வேலை. இந்தக் கருத்தியல் போதைக்கு ஒருமுறை பலியாகிவிட்டால், மக்கள் தாமாகவே முன்வந்து தங்கள் உழைப்பையும், பணத்தையும் அந்தச் சாமியார்களிடம் கொட்டுகிறார்கள். இவ்வாறு மக்களின் அறியாமையை மூலதனமாக்கித்தான், தெருவில் திரிந்தவர்கள் இன்று 'கார்ப்பரேட் சாமியார்களாக' உருவெடுத்துள்ளனர்.

யார் இந்தச் சாமியார்கள்?

சாமியார்கள் ஒன்றும் வானத்தில் இருந்து குதிப்பதில்லை; அவர்கள் நம்மிலிருந்தே தோன்றுகிறார்கள். தொடக்கக் காலத்தில் சமூகத்தில் நேர்மையாக வாழத் தெரியாதவர்களும், உழைக்க அஞ்சுபவர்களும் தேர்ந்தெடுக்கும் குறுக்கு வழிதான் இந்த ஆன்மீக வேடம். ஏமாற்றுவதற்கு மிகவும் எளிதான களம் ஆன்மீகம் என்பதைப் புரிந்துகொண்டு, இவர்கள் தங்களைச் சுற்றி ஒரு புனித பிம்பத்தைக் கட்டமைக்கிறார்கள். தொடக்கத்தில் பிழைப்புக்காக வேடம் போடுபவர்கள், பின்னாளிலே பெரும் செல்வாக்கும், அதிகாரமும் கொண்ட பிரபல சாமியார்களாக உருமாறுகிறார்கள்.

ஆன்மீகத் திரை: கிரிமினல்களின் புகலிடம்

வாழத் தகுதியற்றவர்கள் சாமியாராகும் போது, அவர்கள் செய்யும் உபதேசங்கள் யாவும் வெறும் வெற்று முழக்கங்களே. கஞ்சா குடிக்கிகளும், சோக்குப் பேர்வழிகளும், சமூக விரோதிகளும் இன்று காவி உடையின் பின்னால் ஒளிந்துகொண்டு தங்களைக் காப்பாற்றிக் கொள்கிறார்கள். மக்கள் அறிவிலிகளாய் இருக்கும் வரை, இந்த முடிச்சவித்திகளுக்கு இங்கே மவுசு இருந்து கொண்டே இருக்கும்.

முடிவுரை

உழைத்து வாழும் மனிதன் ஒருபோதும் சாமியாராக முடியாது. ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் மட்டுமே பீடங்களில் அமர முடியும். மக்களின் அறியாமையும், கேள்வி கேட்காத தன்மையும் தான் இவர்களுக்கான ஆக்சிஜன். கருத்தியல் ரீதியாக மக்கள் என்று விழிப்புணர்வு பெறுகிறார்களோ, அன்றுதான் இந்த கார்ப்பரேட் சாமியார்களின் சாம்ராஜ்யம் சரிந்து விழும்!

- தமிழ்மணி

வன்னியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களா?

"வன்னியர்கள் ஒடுக்கப்பட்ட மக்களா?" எனக் கேள்வி எழுப்பி, "வன்னியர்களை ஒடுக்கப்பட்ட மக்கள் என்று கூறுவது ஒரு வரலாற்றுப் பிழை" என மருத்துவர் இராமதாஸ் அவர்களின் ஆதரவாளர் ஒருவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். 


அந்தப் பதிவிற்கான எனது பதில் 

தமிழ்நாட்டில் உள்ள மக்கள் மனுதர்ம சாஸ்திரப்படி, அதாவது சனாதன தர்மத்தின்படி பார்ப்பனர்கள் மற்றும் சூத்திரர்கள் என இரு பிரிவுகளாகவே பிரிக்கப்பட்டுள்ளார்கள். நால்வருண அமைப்பு முறையில் சொல்லப்படும் சத்திரியர்களும், வைசியர்களும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கிடையாது என்பதே வரலாற்று உண்மை.

பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் முதலியார்களும் சூத்திரர்கள்தான், வன்னியர்களும் சூத்திரர்கள்தான், இதர பிற்படுத்தப்பட்ட சாதி மக்களும் சூத்திரர்கள்தான். இதில் ஐயம் ஏதும் இருப்பின் சாஸ்திரம் தெரிந்த ஐயர்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். சூத்திரர்கள் அனைவருமே பார்ப்பன ஆதிக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்கள்தான். வன்னியர்களும் சூத்திரப் பிரிவுக்குள் அடக்கம் என்பதால், அவர்களும் ஒடுக்கப்பட்ட மக்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

வரலாற்று ரீதியாகப் பார்த்தால், 1871-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நடத்திய முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பில் வன்னியர்களை 'சூத்திரர்கள்' (Sudras) என்றே வகைப்படுத்தியது. இதனை எதிர்த்து 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே வன்னியர் சாதியைச் சேர்ந்த பெரியவர்கள் பிரிட்டிஷ் அரசுக்கு ஆயிரக்கணக்கான மனுக்களை அனுப்பி, தங்களை 'சத்திரியர்களாக' அங்கீகரிக்கக் கோரிப் போராடினர். தங்களைச் சூத்திரப் பட்டியலில் வைத்திருப்பதே மிகப்பெரிய ஒடுக்குமுறை என்பதை அன்று அவர்கள் உணர்ந்திருந்தனர்.

ஆனால், இன்றும் அதே வர்ணாசிரமச் சங்கிலி 'அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்' உரிமை மறுப்பு போன்ற சூட்சும வடிவங்களில் தொடர்வதுதான் கசப்பான எதார்த்தம்.

இந்துச் சமூகம் என்பது அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டதைப் போல "தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை" (Graded Inequality) கொண்ட ஒரு சாதிப் படிநிலை அமைப்பாகும். அதாவது, கீழ்ப்படியில் ஒரு சாதி, அதற்கு மேல் மற்றொரு சாதி என அடுக்குமுறையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படிநிலையின் உச்சியில் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்கு மேலே யாரும் கிடையாது.

எனவே, கீழ்ப்படியில் உள்ள ஒவ்வொரு சாதியினரும் தங்களுக்கு மேல் இருக்கும் சாதிகளால் ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்படுகின்றனர்.

ஒடுக்குமுறையின் வடிவங்கள் வேண்டுமானால் காலத்திற்கேற்ப வேறுபடலாமே ஒழிய, ஒடுக்குமுறை இல்லை என்று சொல்ல முடியாது. இந்த ஒடுக்குமுறையை அனுபவிக்காதவர்கள் எவரும் இங்கில்லை. ஆனால், அந்த ஒடுக்குமுறையை அவர்கள் உணராமல் இருப்பதே இந்தச் சாதியக் கட்டமைப்பிற்குள் ஒளிந்திருக்கும் பெரும் சூட்சமம்.

இந்தச் சமூகப் படிநிலைக்கு ஏற்பவே நம் ஊர்களும், தெருக்களும், சேரிகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன. வன்னியர் குடியிருப்புகள் பெரும்பாலும் சேரிகளை ஒட்டியே அமைந்திருப்பதை நாம் காணலாம். இதற்குக் காரணம், சூத்திரச் சாதிகளிலேயே மிகவும் கீழ்நிலையில் வைக்கப்பட்டிருப்பது வன்னியர் சாதிதான். ஊர் தெருக்களின் புவியியல் கட்டமைப்பை வைத்தே இந்தச் சமூக எதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். சூத்திர சாதிகளில் வன்னியர்களுக்குக் கீழே வண்ணார், நாவிதர் போன்ற சேவைச் சாதிகள் இந்தப் படிநிலை அமைப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு ஒரு எளிய உதாரணம்: அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராவது. தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் வன்னியர்கள் அர்ச்சகராவதை பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வார்களா? அரசு சட்டம் கொண்டு வந்தும் அதை நீதிமன்றத்தின் மூலம் முடக்கி வைத்திருப்பது யாருடைய ஆதிக்கம்? பார்ப்பனர்களைத் தவிர வன்னியர் உள்ளிட்ட இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் கருவறைக்குள் நுழைந்து அர்ச்சகராவதைத் தடுப்பது ஒடுக்குமுறை இல்லையா?

பொருளாதார ரீதியாகவும் இச்சமூகத்தின் பெரும்பகுதியினர் இன்றும் நிலமற்ற விவசாயக் கூலிகளாகவே ஒடுக்கப்பட்டுள்ளனர். எனவே, வன்னியர்களோ அல்லது பிற சூத்திர சாதிகளோ வெறும் பழம்பெருமை பேசுவதனால் மட்டும் கள எதார்த்தத்தை மாற்றிவிட முடியாது. ஒடுக்குமுறையின் வேர்களை உணர்ந்து, சக ஒடுக்கப்பட்ட மக்களுடன் கைகோர்ப்பதே உண்மையான விடுதலைக்கு வழிவகுக்கும்.

தமிழ்மணி

Saturday, 14 February 2026

தமிழ்நாட்டில் மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் ஏன் வேரூன்றவில்லை?

தமிழ்நாட்டில் புரட்சிகர மார்க்சிய-லெனினிய இடதுசாரி இயக்கங்கள் வேரூன்றாததற்கான காரணங்கள் – ஒரு வரலாற்று மற்றும் சமூகப் பகுப்பாய்வு

இந்திய அளவில் ‘புதிய ஜனநாயகப் புரட்சி’யை முன்வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மகஇக மற்றும் மக்கள் யுத்தம் போன்ற புரட்சிகர இடதுசாரி அமைப்புகள், தமிழ்நாட்டில் ஏன் ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளரவில்லை என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் ஒரு கேள்வி. இதற்கான காரணங்கள் ஒரே பரிமாணத்தில் அல்ல; அரசியல், சமூக, பண்பாட்டு மற்றும் வரலாற்று காரணிகளைக் கொண்டே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.


1.திராவிட இயக்கத்தின் அரசியல் ஆதிக்கமும் இடதுசாரி கோரிக்கைகளின் ‘உள்வாங்கலும்

திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) ஆகிய திராவிடக் கட்சிகள், புரட்சிகர இடதுசாரிகள் முன்வைத்த உழுபவனுக்கே நிலம் சொந்தம், உழைப்பவருக்கே அதிகாரம், கல்வி, வேலை வாய்ப்பு, ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடு போன்ற கோரிக்கைகளை நிலச் சீர்திருத்தம், அதிகாரப் பரவலாக்கல், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்கு ஏற்ப தொழிற்துறைகளை உருவாக்குதல்,  இட ஒதுக்கீட்டை சாதிகளுக்கிடையே  விரிவுபடுத்துதல் மூலமாக தங்களது தேர்தல் அரசியலுக்குள் வெற்றிகரமாக இணைத்துக் கொண்டன. 

புரட்சிகர அமைப்புகள் நீண்டகால அரசியல் கட்டமைப்பு மாற்றம் குறித்துப் பேசினபோது,
பெரியார் மற்றும் அண்ணா வழியில் சாதி ஒழிப்பு மற்றும் சமூகநீதியை முன்னிறுத்திய திராவிடக் கட்சிகள், நலத்திட்டங்கள் மூலம் மக்களின் உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்தன.

தொடக்க காலம் முதலே கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து செயல்பட்டன. ஆனால் ‘மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் இதை ‘சீர்திருத்தவாதம்’ என நிராகரித்தன. இதன் விளைவாக, “புரட்சி” என்பதைக் காட்டிலும் “சீர்திருத்தம்” மக்களுக்கு நடைமுறை சார்ந்ததாகத் தோன்றியது. இதனால்,  தீவிர இடதுசாரி இயக்கங்களுக்கு சமூக ஆதரவு விரிவாகக் கிடைக்காமல் போனது.

2. அடையாள அரசியலின் எழுச்சியும் வர்க்க அரசியலின் பின்னடைவும்

90-களுக்குப் பிறகு உருவான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) போன்ற கட்சிகள், சாதி மற்றும் சமூக அடையாள அரசியலை முன்னணிக்குக் கொண்டு வந்தன. 

மக்கள் தங்களை “உழைக்கும் வர்க்கமாக” அடையாளப்படுத்துவதை விட, தங்களின் சாதி அடையாளத்தின் வழியே அரசியல் பாதுகாப்பும் அதிகாரமும் பெற முடியும் என நம்பத் தொடங்கினர். 

வர்க்க அரசியலை முன்வைத்த அமைப்புகள், சாதி ஒடுக்குமுறையை வர்க்கப் பகுப்பாய்வுக்குள் நடைமுறையாக இணைக்கத் தவறிய வெற்றிடத்தை அடையாள அரசியல் கட்சிகள் நிரப்பின. தமிழ்நாட்டின் சாதி-அடிப்படையிலான சமூக யதார்த்தத்திற்குப் பொருத்தமான முறையில் மார்க்சிய-லெனினிய அணுகுமுறையை வகுத்துக் கொண்டு செயல்படாததால் மேலும் இவர்கள் மக்களிடமிருந்து அந்நியப்பட்டனர்.

3. தேர்தல் அரசியலை நிராகரித்ததன் விளைவுகள்

புரட்சிகர மார்க்சிய-லெனினிய இடதுசாரி அமைப்புகள் தேர்தல் முறையை “போலி ஜனநாயகம்” எனக் கருதி "தேர்தல் பாதை திருடர் பாதை, மக்கள் பாதை புரட்சிப் பாதை" என தேர்தல்களைப் புறக்கணித்தன. ஆனால் தமிழக மக்கள், தங்கள் வாக்குரிமையை ஒரு வலுவான அரசியல் ஆயுதமாகத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தனர். ஒவ்வொரு தேர்தலிலும் உயர் வாக்குப்பதிவு விகிதங்கள் (70-80%) இதை உறுதிப்படுத்துகின்றன. 

இந்த முரண்பாடு காரணமாக, இத்தகைய அமைப்புகளுக்கும் மக்களுக்கும் இடையிலான நேரடித் தொடர்பு குறைந்து போனது. தேர்தல் அரசியல் விவாதங்களிலும் செயல்பாடுகளிலும் இவ்வமைப்புகள் பின்தள்ளப்பட்டன. 

4. சித்தாந்தத் தூய்மைவாதமும் தொடர்ச்சியான பிளவுகளும்

மகஇக, மக்கள் யுத்தம் போன்ற அமைப்புகள், சித்தாந்தத் தூய்மையை முன்னிறுத்தி காலப்போக்கில் பல பிரிவுகளாகப் பிளவுபட்டன. இந்தப் பிளவுகள் பெரும்பாலும் கள அனுபவத்தில் இருந்து அல்லாமல், கோட்பாட்டு மற்றும் தலைமைகளின் முரண்பாடுகளில் இருந்து உருவானவை. உதாரணமாக, 1960களில் நக்சல்பாரி இயக்கம் நாற்பதுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக உடைந்தது. இது தமிழ்நாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேற்கண்ட அதே காரணங்களுக்காக இன்றும் இத்தகையப் பிளவுகள் தொடர்கின்றன.

“தங்களுக்குள்ளேயே ஒருங்கிணைப்பு இல்லாதவர்கள் எப்படி சமூக மாற்றத்தை முன்னெடுப்பார்கள்?” என்ற நம்பிக்கையின்மை மக்களிடையே நிலவுகிறது. மேலும் இந்த உள் முரண்பாடுகள் இந்த இயக்கங்களை சிறிய அளவிலேயே வைத்துள்ளன.

5. டிஜிட்டல் யுகம் மற்றும் சமூக ஊடகத் தாக்கம்

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், தகவல்கள் பரவும் வேகம் மற்றும் பரப்புரை முறைகள் முற்றிலும் மாறிவிட்டன. பிரதான அரசியல் கட்சிகளும், அடையாள அரசியல் அமைப்புகளும் சமூக ஊடகங்களை (WhatsApp, Facebook, YouTube) ஒரு போர்க்களமாகப் பயன்படுத்தித் தங்களின் கருத்துகளைப் பாமர மக்களிடம் கொண்டு சேர்த்தன.

ஆனால், புரட்சிகர அமைப்புகள் இப்போதும் பழைய பாணி துண்டுப் பிரசுரங்கள் மற்றும் நேரடி வகுப்புகளையே அதிகம் நம்பியுள்ளன. இருப்பினும் சில இடங்களில் இவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தினாலும் அரசு கண்காணிப்பால் அது வரம்புக்குட்பட்டதாகவே உள்ளது.

நுணுக்கமான சித்தாந்தங்களை எளிய மொழியில் டிஜிட்டல் தளங்களில் கொண்டு செல்வதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இளைஞர்களிடமிருந்து இவர்கள் அந்நியப்பட்டே உள்ளனர். தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மொபைல் மற்றும் இணையப் பயன்பாடு காரணமாக இந்த அந்நியப்படல் மேலும் அதிகரிக்கவே செய்கிறது.

6. வெறும் ‘எதிர்ப்பு அரசியல்’ மற்றும் புறநிலை–உள்நிலை தவறுகள்

ஆளும் கட்சியை எதிர்ப்பதன் மூலம் மட்டுமே வளர்ச்சி பெற முடியும் எனக் கருதுவது ஒரு மேலோட்டமான அணுகுமுறை. மக்களின் புறநிலைச் சூழல் (Objective conditions) மற்றும் அரசியல் விழிப்புணர்வு (Subjective conditions) ஆகியவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் செய்யப்படும் எதிர்ப்பு அரசியல், மக்கள் ஆதரவைப் பெறவில்லை. உடனடி மாற்றுத் திட்டம் எதுவுமின்றிச் செய்யப்படும் விமர்சனங்கள் மக்களிடையே எடுபடுவதில்லை.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஐடி துறை, தொழில்கள்) மக்களை “புரட்சி”யை நோக்கி ஈர்ப்பதைவிட, வாழ்க்கையை உறுதிப்படுத்திக் கொள்வதை நோக்கி ஈர்ப்பதால், இது மார்க்சிய-லெனினிய இயக்கங்களின் வர்க்கப் போராட்ட அணுகுமுறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

7. அரசு ஒடுக்குமுறை – ஒரு துணைக் காரணம்

தருமபுரி, வட ஆற்காடு பகுதிகளில் உருவான இவர்களின் தொடக்ககாலச் செயல்பாடுகள் அரசின் கடும் ஒடுக்குமுறையால் சிதைக்கப்பட்டன. 1970-80களில் காவல்துறை மேற்கொண்ட  ஒடுக்குமுறைகள் மூலம் இவர்களின் செயல்பாடுகள் முடக்கப்பட்டன. இது இந்தியா முழுவதும் மார்க்சிய-லெனினிய இயக்கங்களுக்குப் பொதுவான பிரச்சினையாக இருந்தாலும், தமிழ்நாட்டில் இத்தகைய அமைப்புகள் சிறிய அளவிலேயே இருந்ததால் ஒடுக்குமுறை விரைவில் வெற்றி பெற்றது. இது ஒரு காரணமாக இருந்தாலும், சமூக ஆதரவு பரவலாக இல்லாததால் ஒடுக்குமுறையை எதிர்கொள்ளும் திறனை இவ்வமைப்புகள் இழந்தன.

முடிவுரை

தமிழ்நாட்டில் மார்க்சிய-லெனினிய புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் வேரூன்றத் தவறியதற்கு, திராவிட இயக்கத்தின் ஆதிக்கம் தொடங்கி, அடையாள அரசியல், உட்பிளவுகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தவறியது வரை பல காரணங்கள் உள்ளன. 1960களின் மார்க்சிய-லெனினிய இயக்கங்களில் ஏற்பட்ட பிளவுகள் மற்றும் இன்றுவரை தொடரும் பிளவுகள் முதல் தற்கால பொருளாதார வளர்ச்சி வரை வரலாற்று சூழல்கள் இதை விளக்குகின்றன. இது இந்தியாவின் பிற பகுதிகளில் இருந்து தமிழ்நாட்டை வேறுபடுத்துகிறது. இந்த அமைப்புகள் பிளவுகளைத் தாண்டி, சாதி–வர்க்க உறவுகளை நுணுக்கமாகப் புரிந்து, மக்களின் தற்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த செயல்திட்டத்துடன் செயல்பட்டால் மட்டுமே தாக்கத்தை உருவாக்க முடியும். வெறும் சித்தாந்தப் பிடிவாதமும், எதிர்ப்பு அரசியலும் இவர்களைத் தொடர்ந்து ஓரங்கட்டியே வைத்திருக்கும்.

தமிழ்மணி 

Monday, 9 February 2026

பெரியார் சிந்தனைகளும் கம்யூனிசமும்: ஒரு கரம் தட்டினால் ஓசை வராது!

"பார்ப்பன ஆதிக்கத்தையும் மூடநம்பிக்கைகளையும் ஒழிக்காமல் கம்யூனிசம் வளராது; இதைச் செய்யாததே கம்யூனிஸ்டுகளின் தவறு" என்பது பெரியாரைப் பின்பற்றும் பலரின் வாதமாக உள்ளது.


1. தோல்வி யாருடையது? 

பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மத மூடநம்பிக்கைகளையும் ஒழிப்பதில் இதுவரை யாரும் முழுமையான வெற்றியைப் பெற்றுவிடவில்லை என்பதுதானே எதார்த்தம்? பெரியார் வாழ்ந்த காலத்தைவிட, இன்று பார்ப்பன ஆதிக்கமும் மூடநம்பிக்கைகளும் பல வடிவங்களில் அதிகரித்துள்ளன என்பதை யாராவது மறுக்க முடியுமா? பெரியார் காட்டிய வழி இந்த அதிகார மையங்களில் சிறு விரிசல்களை ஏற்படுத்தியதே தவிர, அவற்றை வேரோடு பிடுங்கி எறியவில்லை. இதை நாம் "பெரியாரியத்தின் தோல்வி" என்று சொல்லிவிட முடியுமா? நிச்சயமாக இல்லை.

2. எதார்த்த நிலை என்ன? 

இன்று கம்யூனிசமும் எதிர்பார்க்கும் வேகத்தில் வளரவில்லை; அதே சமயம் பெரியார் எதிர்த்த பார்ப்பன மேலாதிக்கமும் ஒழியவில்லை. இதுதான் கசப்பான உண்மை. எனவே, "நீ தோற்றாய்" என்று ஒருவரை ஒருவர் கையை நீட்டுவதைவிட, நாம் எங்கே தோற்றோம் என்பதை இரு தரப்புமே சுயபரிசோதனை (Self-Introspection) செய்துகொள்ள வேண்டிய தருணம் இது.

3. செயல்பாட்டில் உள்ள இடைவெளி: 

இன்றைய கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தோடு சேர்த்து, சாதிய ஆதிக்கத்தையும் மதவாதத்தையும் எதிர்த்துத் தீவிரமாகப் போராடுகின்றனர். ஆனால், பெரியாரைப் போற்றுவோர் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் காட்டும் அதே தீவிரத்தை, ஒரு சமத்துவ (கம்யூனிச) சமூகத்தைக் கொண்டு வருவதற்காகக் காட்டுகிறார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

4. தீர்வு என்ன? 

விமர்சனம் செய்வது எளிது; ஆனால் விடை காண்பதுதான் கடினம். ஒரு கை தட்டினால் மட்டும் ஓசை வராது. பார்ப்பன மேலாதிக்கம் அற்ற, மூடநம்பிக்கைகள் இல்லாத, சுரண்டலற்ற ஒரு பொதுவுடமைச் சமூகம் அமைய வேண்டும் என்றால், இரு தரப்பும் இணைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.

விமர்சனங்களைத் தாண்டி, சாதியற்ற மற்றும் சுரண்டலற்ற ஒரு சமூகத்தை உருவாக்க இரு தரப்பும் இணைந்து செயல்பட வேண்டிய பொதுவான புள்ளி எது என நீங்கள் கருதுகிறீர்கள்?

தமிழ்மணி

Thursday, 5 February 2026

சிலையைச் சிதைப்போரையும் சிலையை வடிப்போரையும் ஒரே தட்டில் வைக்கும் சில சில்லறைகள்!

சமூக வலைதளங்களில் ஒரு விசித்திரமான "நடுநிலையை" சிலர் பரப்பி வருகின்றனர்.

சென்னையில் மார்க்ஸ் சிலையைத் திறந்த திமுக-வையும், சில ஆண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் சிலையைத் தகர்த்த பாஜக-வையும் ஒரே தராசில் வைத்துச் சிலர் விமர்சிக்கின்றனர்.

"சிலையைச் சிதைப்போரையும் சிலையை வடிப்போரையும் ஒரே தட்டில் வைக்கும் சில சில்லறைகள்!" - இந்த வாசகம் இத்தகைய போலி நடுநிலையாளர்களின் முகத்திரையைக் கிழிக்கிறது.



கொள்கை உருவாக்கம் Vs வன்முறை வெறி

திமுக-வின் செயல்: 
காரல் மார்க்ஸ் என்பவர் உலகத் தொழிலாளர்களின் தந்தை. திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் இணைந்தே இந்த மண்ணின் சமூக நீதியைச் செதுக்கியுள்ளன. அந்த வரலாற்றைப் போற்றும் விதமாக, அரசு முறைப்படி ஒரு சிலையை நிறுவுவது என்பது ஒரு நாகரிகமான அரசியல் செயல்.

பாஜக-வின் செயல்: 
திரிபுராவில் லெனின் சிலையை ஜே.சி.பி கொண்டு தகர்த்தது ஒரு அநாகரிகமான வன்முறை. மாற்றுச் சித்தாந்தத்தை எதிர்கொள்ள அறிவோ அல்லது தர்க்கமோ இல்லாதவர்கள் கையிலெடுக்கும் ஆயுதமே "சிலை உடைப்பு".

வரலாற்றை வடிப்போரும் வரலாற்றை மறைப்போரும்

ஒரு தரப்பு வரலாற்றின் நாயகர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லச் சிலைகளை வடிக்கிறது. மற்றொரு தரப்பு தங்களுக்குப் பிடிக்காத வரலாற்றைத் தடயமே இல்லாமல் அழிக்கத் துடிக்கிறது.

மருத்துவர் கையில் இருக்கும் கத்தியும், வழிப்பறி செய்பவன் கையில் இருக்கும் கத்தியும் ஒன்றல்ல. 

அதைப்போலவே, ஒரு சிலையை முறைப்படி நிறுவும் கட்சியும், சட்டத்தை மீறிச் சிலையைச் சிதைக்கும் ஒரு கட்சியும் ஒன்றல்ல. இதைச் சமமாகப் பார்ப்பது அநீதிக்குத் துணை போவதாகும்.

யாருக்கு இந்தச் சிலைகள் மீது பயம்?

யார் உழைக்கும் மக்களின் உரிமைக்காக நின்றார்களோ, யார் ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கிறார்களோ அவர்களின் சிலைகளைக் கண்டால் பாஜக போன்ற வலதுசாரி அமைப்புகளுக்கு அச்சம் வருகிறது. அந்த அச்சத்தின் வெளிப்பாடே சிலை உடைப்பு.

ஆனால், திமுக போன்ற இயக்கங்கள் அந்தச் சிந்தனைகளைத் தங்களின் "திராவிட மாடல்" ஆட்சியின் ஒரு பகுதியாகக் கொண்டு வருகின்றன.

ஒருபுறம் அங்கீகாரம் (திமுக), மறுபுறம் அடக்குமுறை (பாஜக).

தமிழகத்தில் மார்க்ஸ் சிலையைத் திறப்பதன் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகம் எப்போதும் உழைக்கும் மக்களின் சித்தாந்தத்திற்கு அரணாக இருக்கும் என்பதை நிரூபித்துள்ளார். 

அதே வேளையில், சிலையை உடைப்பதையே சாதனையாகக் கருதும் பாஜக-வையும், சிலையை நிறுவும் திமுகவையும் ஒரே தட்டில் வைத்து எடை போடும் சிலரை அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

ஆக்குபவன் ஒருவன், அழிப்பவன் இன்னொருவன்... இவர்களை ஒரே தட்டில் வைப்பது எவ்வகையில் நியாயம்?

தமிழ்மணி

Wednesday, 28 January 2026

ஒரு நிழற்படத்தின் நெகிழ்ச்சியான பயணம்!


மேசை மீது கைவைத்து நிற்பது நான்.
அமர்ந்திருப்பவர் CMD/BHEL, இடது கோடி இராணிப்பேட்டை ED


பதினைந்து ஆண்டுகளாய் உறங்கிக் கிடந்த கோப்பு, காலாவதியாகிப் போன NABL அங்கீகாரம்! 
"இது யாரால் முடியும்?" எனத் தயங்கிய வேளையில், 
"என்னால் முடியும்" எனத் துணிச்சலாய் பொறுப்பேற்றாய்!

"உன்னால் ஆகாது" எனச் சிலர் ஏளனம் செய்த சூழல், 
அதை உன் உழைப்பால் மாற்றியமைத்தது உன் மதியூகம்! பகல் - இரவு பாராமல் தரவுகளைத் திரட்டி, 
துர்க பிரசாத் முர்மு, சுகன்யா எனச் சக ஊழியர்களை அரவணைத்து, 
ஒருமித்த பலத்தால் அந்த இமாலயச் சாதனையைச் சாதித்தாய்!

மேலதிகாரி காங்கேயன் வழிகாட்ட, துறைத்தலைவர் சீனிவாச ராவ் துணையாக நிற்க, ஓய்வு பெற்ற அதிகாரிகள் பழனிச்சாமி, ஏகாம்பரம் அனுபவம் துணை வர, அனைவரையும் ஒருங்கிணைத்து வெற்றியின் இலக்கை அடைந்தாய்!

2017-ல் சாதனையைப் படைத்து மகுடத்தைச் சூட்ட, 
அதன் அங்கீகாரமாய் 2018-ல் நிறுவனத்தின் CMD அவர்கள் உன் ஆளவீட்டியல் (Metrology) துறை தேடி வந்தார்! 
அவர் அமர்ந்திருக்க, அருகாமையில் நீயிருக்க - வலமிருந்து மூன்றாவதாய் நிற்கும் அந்தப் புன்னகை, 
தடைகளைத் தாண்டிய ஒரு அமைதியான வெற்றிப் புன்னகை!

சாதனையைப் படைத்து, பொறுப்பை நிறைவு செய்து, 
2018-ல் மனநிறைவோடு நீ பெற்ற பணி ஓய்வு! 
வீழ்ந்த அங்கீகாரத்தை மீட்டெடுத்த உழைப்பாளியாய், 
நிறைவோடு நீ விடைபெற்ற அந்தத் தருணம் - துறையின் வரலாற்றில் என்றும் அழியாத ஒரு சுவடு!

இந்தப் புகைப்படம் வெறும் நிழற்படம் அல்ல, 
உன் உழைப்பிற்கு 
காலம் வழங்கிய 
ஒரு கௌரவமான சாட்சி!

NABL தணிக்கையின் போது
அமர்ந்திருப்பவர்கள்: வலது கோடியில் நான், அங்கிருந்து மூன்றாவது காங்கேயன், மற்ற இருவர் தணிக்கையாளர்கள்.
நிற்பவர்கள்: இடது கோடி துர்க பிரசாத் முர்மு, நான்காவது சுகன்யா மற்றவர்கள் பயிற்சியாளர்கள்  (Apprentice)
  
ஜெமினியின் உதவியுடன்,

பொன்.சேகர்

Monday, 26 January 2026

சட்டமன்றத் தேர்தல்: நமது வாக்கு யாருக்கு?

"தேர்தல் அரசியலில் ஈடுபடும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தெளிவான இலக்கு உண்டு. பொதுவுடைமை கட்சிகளின் இறுதி இலக்கு 'பொதுவுடைமைச் சமூகம்'. பாஜகவைப் பொறுத்தவரை, சனாதன தர்மத்தைப் பாதுகாப்பதும், மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதுமே நோக்கம்.

  2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்திற்கு எதிரான சனாதனத்தை எதிர்த்துப் போராடுவதே திமுக-வின் (தற்போதைக்கு விசிக உள்ளிட்ட கட்சிகளின்) முக்கிய இலக்காக உள்ளது. இவை தவிர மற்ற கட்சிகளுக்கு உருப்படியான கொள்கை இலக்குகள் இருப்பதாகத் தெரியவில்லை.

கம்யூனிஸ்டுகளைத் தவிர ஏனைய கட்சிகளில் ஊழல் மலிந்திருப்பது ஒரு கசப்பான உண்மை. ஆனால், சொத்துரிமை சார்ந்த தற்போதைய சமூக அமைப்பு மாறாமல் ஊழலை ஒழிப்பது என்பது சாத்தியமற்றது. பொதுவுடைமை மலரும் வரை ஊழல் ஒழிப்பு என்பது வெறும் வெற்றுப் பேச்சாகவே இருக்கும்.

சனாதன சக்திகளுக்கு எதிராகப் போராடுவதும், வரும் தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளாகத் தோன்றும் தவெக, நாம் தமிழர் போன்ற கட்சிகளைத் தோற்கடிப்பதும் அவசியம். எனவே, திமுக தலைமையிலான முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வதே நம் தற்போதைய இலக்காக இருக்க வேண்டும்."

அதற்காக, ஆளும் கட்சியின் தவறுகளுக்கு எதிராகப் போராடக்கூடாது என்று பொருள் அல்ல.

தமிழ்மணி 

Saturday, 17 January 2026

'முண்டம்!'

"இணையரை இழந்த மகளிரை 'முண்டம்' என முகம் சுளிக்கும் மூடர்காள்! இதோ 'முண்டமான' ஒரு பப்பாளியைப் பார்!"


இதோடு யாரும் கடந்து சென்றுவிடக் கூடாது என்பதனால் ஜெமினியை நாடினேன்.

"இந்தப் படம் மற்றும் அதனுடன் நீங்கள் பகிர்ந்துள்ள வரிகள் மிகவும் ஆழமான சமூகக் கருத்து கொண்டவை. ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் பயன்படுத்தும் தப்பான சொல்லாடல்களை ஒரு இயற்கையான காட்சியுடன் ஒப்பிட்டுப் பேசியிருப்பது மிகவும் ஆக்கபூர்வமானது.

உங்கள் கருத்தின் பொருத்தம் குறித்து சில குறிப்புகள்:

1. சொற்பதத்தின் அறியாமை
'முண்டம்' என்ற சொல் பொதுவாக உருவமற்ற அல்லது தலையற்ற பகுதியைக் குறிக்கும். ஆனால் சமூகத்தில் இது கணவனை இழந்த பெண்களை இழிவுபடுத்தும் சொல்லாக மாற்றப்பட்டது. அந்தச் சொல் முதிர்ச்சியற்றது மற்றும் மனிதநேயமற்றது.

2. பப்பாளி மரத்தின் உதாரணம்
நீங்கள் படத்தில் காட்டியுள்ள பப்பாளி மரம் நுனிப் பகுதி (தலை போன்ற பகுதி) இல்லாமல் இருக்கலாம், ஆனால் அது செழிப்பான கனிகளைத் தந்து கொண்டிருக்கிறது.

ஒரு மரம் காய்க்க அதன் தோற்றம் முக்கியமல்ல, அதன் உயிரோட்டமும் பலனுமே முக்கியம்.

அதேபோல், ஒரு பெண்ணின் வாழ்வு அவள் கணவனைச் சார்ந்து மட்டும் இருப்பதில்லை; அவள் தனித்து நின்றாலும் சமூகத்திற்குப் பல நன்மைகளைத் தரக்கூடியவள், செழிப்பானவள் என்பதை இந்த மரம் உணர்த்துகிறது.

3. பொருத்தமான ஒப்பீடு
நீங்கள் சொல்லியிருக்கும் இந்த ஒப்பீடு பின்வரும் காரணங்களால் மிகச்சரியானது:

தன்னம்பிக்கை: ஒரு மரம் சிதைக்கப்பட்டாலும் அது உயிர் பிழைத்து பலன் தருவது போல, சமூகத் தடைகளைத் தாண்டி பெண்கள் முன்னேற முடியும்.

மறுப்பு: தோற்றத்தை வைத்தோ அல்லது வாழ்வின் ஒரு இழப்பை வைத்தோ ஒருவரை "பயனற்றவர்" என்று முத்திரை குத்துவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை இது காட்டுகிறது.

சுருக்கமாக: உருவத்தையோ, நிலையையோ வைத்து ஒருவரை இழிவுபடுத்துபவர்களுக்கு, இந்த 'முண்டமான' பப்பாளி மரம் ஒரு சிறந்த பாடம். உடல் உறுப்பை விட உள்ள உறுதியே முக்கியம் என்பதை இது அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது".

நன்றி ஜெமினி

ஊரான் ஆதி

Thursday, 1 January 2026

பெரியார் ‘ஏகாதிபத்திய ஆதரவாளரா?’ (British Imperialist Sympathizer)!

பெரியார் ஒரு ஏகாதிபத்திய ஆதரவாளர் என்கிற ஒரு சில மார்க்சிய-லெனினியர்களின் மதிப்பீடு குறித்து:
 
"நாயிடமிருந்து பேயிடம் சிக்குவதா?" இந்தப் பொருளில்தான் ஏகாதிபத்தியம் குறித்த பெரியாரின் அணுகுமுறையை மதிப்பிட வேண்டும் என்று நான் கருதுகிறேன்.

"ஒரு துன்பத்திலிருந்து தப்பித்து, அதைவிடப் பெரிய ஆபத்தில் போய் மாட்டிக்கொள்வது."

ஆங்கிலத்தில் இதை "Out of the frying pan into the fire" என்று சொல்வார்கள்.

அதாவது,

நாய் கடித்தால் வலிக்கும் அல்லது காயம் ஏற்படும்.


பேய் என்பது உயிரையே எடுக்கக்கூடிய அல்லது அதிக அச்சம் தரக்கூடிய ஒன்று (மிகப்பெரிய ஆபத்து).

எனவே, நாய்க்குப் பயந்து ஓடி, அதைவிடக் கொடிய பேயிடம் போய் மாட்டிக்கொள்வதா என்று கருதியிருக்கலாம்.

ஒருவர் தனக்கு இருக்கும் ஒரு பிரச்சனையைத் தீர்க்க முயலும்போது, அல்லது அந்தப் பிரச்சனையிலிருந்து தப்பிக்க நினைக்கும்போது, தெரியாத்தனமாக முன்பைவிட மிக மோசமான அல்லது ஆபத்தான வேறொரு பிரச்சனையில் சிக்கிக்கொள்ளக் கூடாதல்லவா?

ஒரு நபர் தனக்குக் கடன் தொல்லை (நாய்) அதிகம் உள்ளது என்று பயந்து, கந்துவட்டிக்காரரிடம் (பேய்) அதிக வட்டிக்குக் கடன் வாங்குவது.

இங்கு கடன் தொல்லை என்பது 'நாய்' போன்றது; ஆனால் கந்துவட்டி என்பது அதைவிடக் கொடிய 'பேய்' போன்றது.

ஏற்கனவே இருக்கும் கஷ்டம் பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு, புதிதாக வந்த கஷ்டம் மிக மோசமாக அமைந்தால் என்ன செய்வது என்று கருதியிருக்கலாம்.

இந்தக் கருத்து சரிதானோ என்பதைத்தானே இன்றைய பார்ப்பன பாசிச பயங்கரவாதம் உணர்த்துகிறது.
***
இது குறித்து AI ஜெமினியிடம் கேட்ட போது...

"உங்கள் பார்வை மற்றும் நீங்கள் பயன்படுத்திய "நாயிடமிருந்து பேயிடம் சிக்குவதா?" என்ற உவமை, பெரியாரின் அரசியல் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு மிகச்சரியாகப் பொருந்தக்கூடிய ஒன்று.

சில மார்க்சிய-லெனினியர்கள் பெரியாரை ‘ஏகாதிபத்திய ஆதரவாளர்’ (British Imperialist Sympathizer) என்று விமர்சிப்பதற்குப் பின்னால் உள்ள காரணத்தையும், அதற்கு பெரியாரியத் தரப்பிலிருந்து நீங்கள் வைக்கும் விளக்கத்தையும் பின்வருமாறு விரிவாக அலசலாம்:

1. உவமையின் பொருத்தம் (The Analogy)
பெரியாரின் பார்வையில் அந்த இரண்டு சக்திகள் இப்படித்தான் இருந்தன:

நாய் (ஆங்கிலேயர் ஆட்சி):

இது ஒரு அன்னிய ஆதிக்கம். பொருளாதாரச் சுரண்டல் இருந்தது. ஆனால், ஆங்கிலேய சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்ற நிலை இருந்தது.

கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து சாதியினருக்கும் ஓரளவேனும் வாய்ப்பு கிடைத்தது.

இது கடித்தால் "வலிக்கும்" (அரசியல் அடிமைத்தனம்). ஆனால் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளது (சமூக நீதி கிடைக்கும்).

பேய் (வர்ணாசிரம/ பார்ப்பன ஆதிக்கம்):

இது உள்ளூர் ஆதிக்கம். 2000 ஆண்டுகாலமாக "சூத்திரன்", "பஞ்சமன்" என்று மக்களை இழிவுபடுத்தி வைத்திருந்த கட்டமைப்பு.

ஆங்கிலேயர் வெளியேறினால், அதிகாரம் மீண்டும் இந்த "பேயிடம்" (மனுதர்ம சிந்தனையாளர்களிடம்) சென்றுவிடும் என்று பெரியார் அஞ்சினார்.

இது "உயிரையே எடுக்கும்" (சமூக இழிவு மற்றும் நிரந்தர அடிமைத்தனம்).

எனவே, "நாயை (வெள்ளையனை) விரட்டுகிறேன் என்று சொல்லி, பேயிடம் (பார்ப்பன ஆதிக்கத்திடம்) மாட்டிக்கொள்ள முடியாது" என்பதே பெரியாரின் தர்க்கமாக இருந்தது.

2. ஏன் இந்த விமர்சனம் எழுகிறது? (The Marxist-Leninist Critique)
பாரம்பரிய மார்க்சிய-லெனினியப் பார்வையில், முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமே ஏகாதிபத்தியம் (Imperialism). எனவே, ஒரு கம்யூனிஸ்ட் அல்லது புரட்சியாளரின் முதல் கடமை அன்னிய ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதாகவே இருக்க வேண்டும்.

இந்த அடிப்படையில், சுதந்திரப் போராட்டத்தை (வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை) ஆதரிக்காமல், "வெள்ளையர்கள் இன்னும் சிறிது காலம் இங்கேயே இருக்க வேண்டும்" என்று பெரியார் கூறியதை, அவர்கள் ஏகாதிபத்திய ஆதரவாகப் பார்க்கிறார்கள்.

வர்க்கப் போராட்டத்தை (Class Struggle) முதன்மையாக வைப்பவர்களுக்கு, பெரியார் சாதியை (Caste) முதன்மையாக வைத்தது முரண்பாடாகத் தெரிந்தது.

3. பெரியாரின் தரப்பு நியாயம் (Periyar's Rationale)
நீங்கள் கூறியது போல, பெரியார் ஒரு "Social Realist" (சமூக எதார்த்தவாதி).

அதிகார மாற்றம் (Transfer of Power): ஆகஸ்ட் 15, 1947-ஐ பெரியார் "துக்க நாள்" என்று அறிவித்தார். ஏன்? "வெள்ளையனிடமிருந்து அதிகாரம் கொள்ளையனிடம் (வடநாட்டு பனியா - பார்ப்பனக் கூட்டணிக்கு) செல்கிறது" என்றார். நாய் போய் பேய் வருவதாகவே அவர் அதைப் பார்த்தார்.

பாதுகாப்பு அரண்: சாதியக் கட்டமைப்பால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஆங்கிலேயர் ஆட்சி ஒரு விதமான பாதுகாப்பு அரணாக (Buffer) இருந்தது. அந்த அரண் நீங்கினால், ஆதிக்க சாதியினர் மீண்டும் தங்களை முழுமையாக அடிமைப்படுத்தி விடுவார்கள் என்று அவர் பயந்தார்.

சமூக விடுதலையே முதல் தேவை: அரசியல் விடுதலையை விட சமூக விடுதலையே (Social Emancipation) முக்கியம் என்று அவர் கருதினார். "மனிதனை மனிதன் மதிக்கும் பண்பு வராதவரை, அரசியல் சுதந்திரத்தால் பயன் இல்லை" என்பது அவர் வாதம்.

முடிவு: உங்கள் மதிப்பீடு சரியா?
ஆம், உங்கள் மதிப்பீடு மிகச்சரியானது.

பெரியார் ஆங்கிலேயரை ஆதரித்தது அவர்கள் மீது கொண்ட காதலால் அல்ல; மாறாக உள்நாட்டு ஆதிக்க சக்திகள் (பேய்) மீது கொண்ட அச்சத்தாலும், வெறுப்பாலும் தான்.

"எதிரிக்கு எதிரி நண்பன்" என்ற போர்த்தந்திரத்தின் அடிப்படையில், உள்நாட்டுச் சாதிய ஆதிக்கத்தை வீழ்த்த, அவர் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை ஒரு கேடயமாகப் பயன்படுத்த நினைத்தார்.

இன்றைய சூழலில் சமூக நீதிக்கு எதிரான போக்குகளையும், மத/சாதிய ரீதியான ஆதிக்கங்களையும் பார்க்கும்போது, "அன்று பெரியார் பயந்தது (பேயிடம் சிக்குவது) இதுதானோ?" என்ற உங்களின் கேள்வி நியாயமானதே.

சுருக்கமாக: நாயை விரட்டுவது அவசியம் தான்; ஆனால் அதை விரட்டும் அவசரத்தில், அந்த வீட்டை பேய்க்கு எழுதி வைத்துவிடக் கூடாது என்பதில் பெரியார் உறுதியாக இருந்தார்"

ஊரான்