Wednesday, 13 August 2025

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் பொதுத்தன்மை என்ன?

கடந்த ஆண்டுகளில் ஒப்பந்த முறை குறித்த சட்டங்கள் எப்படி இருந்தன, தற்போதைய அதன் நிலை என்ன? புதிய தொழிலாளர் நல சட்ட திருத்தம் இது குறித்து என்ன சொல்கிறது?  ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தி படிப்படியாக நிரந்தரம் செய்வது என்கிற பழைய சட்டம் முடக்கப்பட்டு இனி கேந்திரமானப் பணிகளில்கூட ஒப்பந்த முறையை நடைமுறைப்படுத்தலாம் என்கிறது புதிய சட்டம். பழைய சட்டம் இருக்கும் போதே ஒப்பந்த முறை எல்லாத் துறைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதை நாம் அறிவோம்.


இதன் ஒரு பகுதியாகத்தான் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 மண்டலங்களில் ஒப்பந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இனி புதிய தொழிலாளர் சட்டம் அமுலாகும் பொழுது எல்லா இடங்களிலும் ஒப்பந்த முறை நீக்கமற நிறைந்திருக்கும்.

மேலும், புதிய தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டு அளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) சில முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. மற்றபடி புதிய சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழ்நாடு அளவிலோ அல்லது இந்திய அளவிலோ போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, போராட்டம் நடத்தவோ அரசியல் கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ முன்வரவில்லை என்பது கவலையோடு நோக்கத்தக்கது. வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்களிலிருந்துகூட இன்றைய முன்னேறிய நவீன பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

இதுதான் சென்னையில் தற்போது ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் கொண்டு வரப்படும் ஒப்பந்த முறைக்கு எதிரானப் போராட்டத்தில் நாம் பேச வேண்டிய பொதுத்தன்மை. இதைப் பேசினால்தான் தற்போதைய போராட்டத்தில் மூக்கை நுழைக்கும் சனாதன சங்கிகளையும், இன்னபிற பிழைப்புவாதிகளையும், விளம்பரம் தேடும் சாகசவாதிகளையும் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த முடியும்.

நிற்க, ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் தற்போது பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகப் பணியார்களா அல்லது வேறு வகைப் பணியாளர்களா, அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் இதுவரை வழங்கப்பட்டு வந்தன என்பது பற்றி இதுவரை எந்த அக்கறையும் காட்டாத சங்கிகள் உள்ளிட்ட சிலர் போராட்டக் களத்தில் குதிப்பதற்கான பின்னணி என்ன? திமுக அரசு ஒன்றும் பாட்டாளி வர்க்க அரசு அல்ல; அது ஏற்கனவே 12 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த முயன்று, கடுமையான எதிர்ப்பினால் பின் வாங்கிக் கொண்டது. அப்பொழுதெல்லாம் தலை காட்டாத சங்கிகள் இப்பொழுது தலைகாட்டுவதற்குக் காரணம் திமுக எதிர்ப்பு-தேர்தல் அறுவடை என்பதைத் தவிர இதில் தொழிலாளர் நலன் துளி அளவும் கிடையாது என்பது பாமரனுக்குக்கூட புரியும்.

ஒப்பந்த முறைக்கு எதிராகக் கடுமையானப் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பாட்டாளி வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு பரந்ததொரு தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் போராடுகின்ற தொழிலாளர் பக்கம் உண்மையிலேயே யார் யார் நிற்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். 

இது ஒன்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அல்ல; பண்பாட்டுத் தளத்தில் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கி, சாகசங்களை நிகழ்த்திக்காட்டி ஒரிரு நாட்களில் முடிவு காண்பதற்கு? இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி. அதற்கு ஏற்ப வர்க்க சக்திகளின் அணி சேர்க்கையும், விடாப்பிடியான தொடர் பிரச்சாரமும் போராட்டமும் தேவைப்படுகிறது. 

இதன் மூலமாகத்தான் எந்த ஒரு துறையிலும் அது தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஒப்பந்த முறை கொண்டு வருவதை தடுத்து நிறுத்தவும், ஒப்பந்த முறையை அங்கீகரிக்கும் சட்டத்தை ஒழித்துக் கட்டவும் முடியும். இதுதான் சென்னை தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்று நான் கருதுகிறேன்.

தமிழ்மணி

Tuesday, 12 August 2025

பொறுக்கி அரசியல்!

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

ப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல. பொறுக்கி அரசியல். இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் – வசவுகள், பேசும் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித் தாள்கள்-பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

“நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது” என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும் மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழ்வும், அதையே ரசிக்கவும்கூடப் பழகி விட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர் (Crowd Pullers) – கவர்ச்சி நிறை தலைவர்கள் (Charismatic Leaders) தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

“பொறுக்கி அரசியல்” என்று சொல்லும்போது இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு – விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்லுகிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்தாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல் நான்.

பொறுக்கி அரசியலின் சமூக அடிப்படை – உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புறப் பாமர மக்கள்:

காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்திய கிராம சமுதாயத்தில் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத் தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கொடுத்து குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையாயிருந்தது. காலனிய ஆட்சியும், அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

வருடத்தில் பல நாட்கள் வேலை வாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரை குறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள். படித்தும் வேலை வாய்ப்பின்றி சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கனவே நகரத்து குடிசைப் பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.

பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்புற சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோத சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களை பொறுக்கி அரசியலும் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள்.

பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)

பிற்போக்கு சிந்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன.

ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடி மறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.

பொறுக்கி அரசியலின் தமிழக கதாநாயகி; தொண்டர்களுக்கு பால்கனியிலிருந்து தரிசனம் தருகிறார்.

கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர் உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய ”அண்ணாயிசம்” பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். “முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்” மூன்றும் இணைந்ததுதான் ’அண்ணாயிசம்’ என்று எம்.ஜி.ஆர் அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து ‘அண்ணாயிச’த்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தரகு அதிகார முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது, அதே சமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிக மிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதுதான் எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுபடுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீ, நிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமுகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் “அன்பளிப்பு”களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால் அரசாங்க “இலவச –  அன்பளிப்பு”த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது – இதுதான் எம்.ஜி.ஆரின் ‘அண்ணாயிசம் – கவர்ச்சிவாதம்’.

பொறுக்கி அரசியல் வேர்விட்டுப் பரவுகிறது. ஜானகி கட்சிக் கூட்டத்துக்கு ரயில் கூரை மீதேறி தொண்டர்களின் யாத்திரை.

பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்:

காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேதகாரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை – அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால் பிழைப்பு வாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் – அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயக்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.

தலைவர்கள் மட்டுமல்ல நகர வட்டங்கள் – கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்பு வாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எத்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதை பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்பு வாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள்.

தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்ளுகிறார்கள். மற்ற காலங்களில் சத்துணவுத் திட்டம் போன்ற இலவசத் திட்டங்கள், வெள்ளம் – வறட்சி – தீ விபத்து ஆகியவற்றுக்கு முன்னின்று அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்ளுகிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீஸ் நிலைய வழக்குகள், வேலைவாய்ப்புகள் – சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் ”அங்கீகரிக்கப்பட்ட” தரகர்களாக இருக்கிறார்கள்.

கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்பு வாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி எம்.எல்.ஏக்-கள், எம்.பி-கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியில் கோவில்கள், வாரியங்கள், பள்ளி – கல்லூரிகள் போன்ற சகலமட்டங்களிலும் கட்சி பிழைப்பு வாதிகளுக்கு “பொறுப்புகள்” பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு “ஏற்பாடு” செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் – அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார் எம்.ஜி.ஆர்.

பொறுக்கி அரசியல், தமிழகத்துக்கு ஒரு பாரம்பரியம் உண்டு:

பொறுக்கி அரசியலை அறிமுகப்படுத்தி, நிறுவி வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கு ஒரு பாரம்பரியப் பெருமை உண்டு, அதன் பிதாமகனும் பெருமைக்குரியவரும் கருணாநிதிதான்! மூப்பனார், வாண்டையார், தென்கொண்டார், மன்றாடியார் போன்ற நிலப்பிரபுக்களின் பண்ணை வீடுகளிலும், கோவை நாயுடுக்கள், வடபாதி மங்கலம் முதலியார், சென்னை டி.டி.கே – சிவசைலம், மதுரை டிவிஎஸ் போன்ற முதலாளிகளின் விருந்தினர் மாளிகைகளிலும் காமராஜர் தேர்தல் அரசியல் நடத்தி வந்தார். வோட்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சாதி அரசியல் பேரங்கள் மூலமே ஆட்சி நடத்தினார்.

அந்த சாதி அரசியலை வீழ்த்த பொறுக்கி அரசியலால்தான் முடிந்தது. “பேரறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர்” போன்றவர்கள் மட்டுமே இருந்திருந்தால் காமராஜரின் சாதி அரசியலை வீழ்த்தியிருக்க முடியாது. அதை முறியடிக்க மாவட்டத்துக்கு ஒரு பொறுக்கி அரசியல் தலைமையை உருவாக்கினார் கருணாநிதி. நெல்லைக்கு ஒரு தூத்துக்குடி சாமி, மதுரைக்கு ஒரு முத்து, திருச்சிக்கு ஒரு அன்பில், தஞ்சைக்கு ஒரு மன்னை, கோவைக்கு ஒரு ராஜமாணிக்கம், சேலத்துக்கு ஒரு வீரபாண்டி, ஆற்காடுக்கு ஒரு ப.உ.ச என்று பொறுக்கி அரசியலுக்குரிய சகல தகுதிகள் கொண்ட தலைமையை உருவாக்கியவர் கருணாநிதி.

அவர்கள் திராவிட அரசியலின் ”பழக்கதோஷம்” உள்ளவர்கள் – கருணாநிதிக்கு விசுவாசமாக நின்று விட்டவர்கள் – என்ற நிலையில் முழுக்க முழுக்க தமது ரசிகர்களை மட்டும் கொண்ட புதிய பிழைப்புவாதக் கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர். இன்று வீரப்பன் கும்பலின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மந்திரிகள், ஜேப்பியார் போன்றவர்கள், ஜெயலலிதா கும்பலின் கருப்பசாமி பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சென்னை மதுசூதனன், திருநாவுக்கரசு.போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் பொறுக்கி அரசியலின் செல்லப் பிள்ளைகள். இவர்களில் எவருக்கும் திராவிடம், தேசியம் என்கிற பேதமில்லை. “எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்”தான் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம். பிழைப்பு வாதம்தான் இவர்களின் லட்சியம். பொறுக்கி அரசியல்தான் இவர்களின் கொள்கை!

பொறுக்கி அரசியலில் தேசியவாதிகளும் தஞ்சம் புகுந்தார்கள்.

காங்கிரசின் ஜனநாயக சோசலிசப் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி 1987 தேர்தலில் பல மாநிலங்களில் தோற்கடித்தனர். மத்தியிலும் சொற்பப் பெரும்பான்மையே பெற்றது. கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த இந்திரா மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமை, அரசுத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் போன்ற போலி சோசலிச நாடகமாடத் துவங்கினார். மொரார்ஜி, காமராஜ், பாடீல், சஞ்சீவரெட்டி, அதுல்யாகோஷ், சி. பி. குப்தா போன்ற பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகளுக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது போன்ற பிழைப்புவாதத் தலைவர்களை அணிசேர்த்தார். இந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுக்கி அரசியல் வழிமுறைகளில் கூட்டம் சேர்க்கத் தலைப்பட்டார். 1921 வங்கதேசப்போரும், தேர்தல் வெற்றியும் ஏற்படுத்திய செல்வாக்கு மங்கி அரசியல் பொருளாதார நெருக்கடிகள் முற்றியது. நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது அரசு எந்திரத்தைக் கொண்டு அவற்றை அடக்கிய அதே சமயம் பிழைப்புவாதிகளைக் கொண்டு அரசியல் முட்டுக் கொடுத்து காங்கிரசைத் தூக்கி நிறுத்தினார்.

எதிரணியை வீழ்த்த கவர்ச்சிவாதத்தில் தஞ்சம் புகுந்தார் பாசிச இந்திரா.

குஜராத், பீகார் போராட்டங்கள் வெடித்து, வளர்த்து கடைசியாக இந்திரா தேர்தல் செல்லாது என்கிற தீர்ப்பு வந்து அவரது ஆட்சியே ஆட்டங்கண்டபோது, நாடாளுமன்றத்துக்கு வெளியே நேரடியான மோதலில் எதிர்க்கட்சிகள் இறங்கின. இந்திரா காங்கிரசு முழுக்க முழுக்க பொறுக்கி அரசியலில் தஞ்சம் புகுந்தது. பணத்தை வாரி இறைத்து லாரிகளில் ஆள் பிடித்து வந்து இந்திரா வீட்டு முன்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சஞ்சய் காந்தி இந்திராவின் வாரிசாக மட்டுமல்ல,பொறுக்கி அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிழைப்புவாதிகளின் குண்டர்படை கட்டினார். அவசரநிலை ஆட்சியின்போது உள்ளூர் அதிகாரம் அவர்களின் கைகளில்தான் இருந்தது.

அவசரநிலை ஆட்சிக்குப்பிறகு பிரச்சாரங்கள், கூட்ட ஏற்பாடுகள் உட்பட எல்லாத் தேர்தல் வேலைகளும் தொழில் ரீதியில் நடத்துபவர்களுக்கே ஒப்படைத்தது காங்கிரசு. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின. டெல்லி, பம்பாய் போன்ற பெரும் நகரங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு (ஆள் சப்ளை) மக்களைத் திரட்டித் தருவதையே தொழிலாகக் கொண்டே கும்பல்கள் உள்ளன. பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிரிமினல் குற்றவாளிகளே எம்.எல்.ஏக்-கள் மந்திரிகளாகும் அளவுக்குப் பொறுக்கி அரசியல் வளர்த்து விட்டது.

பொறுக்கி அரசியலுக்குப் பலியான நடுத்தர வர்க்கம் ராஜீவின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறது.

சஞ்சய் காந்தியின் பொறுக்கி அரசியலை எதிர்ப்பதாகவும், அரசியல் தரகர்களை ஒழிக்கப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தபோது சவடாலடித்தார் ராஜீவ். ஃபேர் பேக்ஸ், போபார்ஸ் விவகாரங்கள் அம்பலமாகி ராஜீவின் யோக்கியதைகள் தெரிந்துவிட்ட நிலையில் அவரும் பேரணிகள் நடத்தத் துவங்கி விட்டார். நவீனப்படுத்துவது, தொழில் மயமாக்குவது, திறமை -நிர்வாகத்துக்கு முதலிடம் தரப் போவதாக சவடாலடித்தவர் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் தமது கொள்கையென்று சஞ்சம் புகுந்து விட்டார். பிழைப்புவாத அரசியல் கும்பலிடம் சரணடைந்து விட்டார். எம்.ஜி.ஆர் பாணியிலான “இலவச அன்பளிப்பு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி தேர்தலைக் குறிவைத்து செயல்படுகிறார். எம்.ஜி.ஆர் பாணியிலே சினிமா நடிகர்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில் இறங்கியுள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதி நிலை பொறுக்கி அரசியல்:

காமராஜரின் காலத்தில் பண்ணையார் – முதலாளிகள் மாளிகையில் நடந்த சாதி அரசியல் வீழ்த்தப்பட்டு கருணாநிதியின் பொறுக்கி அரசியல் முன்னுக்கு வந்தபோது “பழுத்த ஜனநாயகவாதிகள்” அருவருப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் அண்ணாத் துரையின் ”பெருந்தன்மை”, கருணாநிதியின் ”நிர்வாகத் திறமை”, பிறகு எம்.ஜி.ஆரின் ”மனிதாபிமானம்” ஆகியவற்றைச் சொல்லிச் சகித்துக் கொண்டார்கள். சஞ்சய் காந்தியின் அவசரநிலை ஆட்டங்கள் அந்தப் பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு பீதியூட்டினாலும் ராஜீவ் பதவிக்கு வந்தபோது “பரிசுத்தம்” வந்ததென்று மகிழ்ந்து போனார்கள். இப்போது தமிழ்நாட்டில் வீரப்பன் – ஜெயலலிதா கும்பல்களும், டில்லியில் ராஜீவும் பொறுக்கி அரசியலை முழு வீச்சில் நடத்துகிறார்கள். அது “பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு” பீதியூட்டுகிறது.

“உலகிலேயே சிறந்தது, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை; சில பிழைப்புவாதிகள் அரசியலில் புகுந்து கெடுத்து விட்டார்கள்; அரசியல் தரம் தாழ்ந்து போய்விட்டது” என்று ‘சமாதானம்’ சொல்லுகிறார்கள், போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா, காங்கிரசிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசியலுக்கு வெளியிலுள்ள “பழம் தேசபக்தர்கள்” ஆகிய “பழுத்த ஜனநாயகவாதிகள்”. ஆனால் பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்க ரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசியவாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைத்ததைப் போல கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) பாசிச ராஜீவ் கும்பலுக்கு உதவும். நாஜிக் கட்சியைப் போல பிழைப்பு வாதிகளைக் கொண்ட காங்கிரசு, எம்.ஜி ஆர், கருணாநிதி கட்சிகள் அரசியல் – அமைப்பு அடிப்படையைக் கொடுக்கும்.

ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரவாதத்தின செல்வாக்கில் இருக்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளின் பிழைப்பு வாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதார வாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து பாமரத்தனமான சோசலிச சித்தாந்தத்தைப் போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதனால்தான் பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டை சமூக அடிப்படையாகவும், மார்க்சிய – லெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக இருந்து அதை முறியடிக்க முடியும்.


ஆர்.கே.

(புதிய ஜனநாயகம் – மார்ச் 01 – 15, 1988 இதழ்)

மார்ச் 01 – 15, 1988 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை 

Friday, 9 May 2025

அரசியலில் 'அப்டேட்' ஆகாத அரைகுறைகள்!

ஒரே கட்சியில், ஒரே சங்கத்தில், ஒரே அமைப்பில், ஒரே அலுவலகத்தில், ஒரே குடும்பத்தில், ஒரே தெருவில், ஒரே ஊரில் எனப் பல்வேறு தளங்களில் சக மனிதர்களோடு பயணிக்கிறவர்கள் பல்வேறு அம்சங்களில் ஒன்றுபட்டிருந்தாலும் ஒரு சில அம்சங்களில் மாறுபட்டு இருப்பார்கள். 

இந்த மாறுபாடுகள் அந்தத் தனிநபரின் ஒழுக்கம் மற்றும் நடத்தை சார்ந்ததாகவோ அல்லது அவர் ஏற்றுக் கொண்டுள்ள அரசியல் சார்ந்ததாகவோ, ஆக, எது வேண்டுமானாலும் இருக்கலாம். 



தரவுகள் மற்றும் புரிதலில் உள்ள வேறுபாடுகளால் மாறுபாடுகள் இருப்பது தவிர்க்க இயலாததுதான். இந்த மாறுபாடுகளோடு பயணிக்கும் போதுதான் கொண்ட இலக்கை நோக்கி நகர முடியும். எல்லாவற்றிலும் ஒத்தக் கருத்தோடு ஒருவர் பயணிப்பது என்பது அறிவியலுக்குப் புறம்பானது. ஆனாலும் ஒத்தக் கருத்தை வந்தடைவதற்கான புரிதலுக்கு தேடல் அவசியம். இந்தத் தேடல் எவர் ஒருவரிடம் இல்லாமல் போகிறதோ அங்கே மாறுபாடுகள் மோதலாக மாறி பிளவுகள் ஏற்படுகின்றன. 

இப்படித்தான் குடும்பங்கள் மற்றும் அமைப்புகள் சிதைகின்றன. ஆளுக்கு ஒரு திசையில் பயணிக்கும் போது எதுவுமே விளங்காது. 

அண்மைக்காலமாக, இத்தகைய போக்குகள் அதிகரித்துவிட்டன. முகநூல் விவாதங்களில் நாம் இதை ஏராளமாகக் காண முடிகிறது. இதன் வெளிப்பாடாக வன்மமும் காழ்ப்புணர்ச்சியும் அதிகரித்து ஏற்கனவே நட்பாய் இருந்தவர்கள் பகையாய் மாறுகிறார்கள். வன்மத்தை வெளிப்படுத்தும் விதமும் மிகவும் கீழ்த்தரமானதாக மாறி வருகிறது. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பலரும் லும்பன்களாக மாறி இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. மாறி இருக்கிறார்கள் என்பதைவிட அதுதான் அவர்களின் உண்மை சொரூபமோ என்று எண்ணத் தோன்றுகிறது. 

அதிலும் குறிப்பாக ஏற்கனவே ஏதோ ஒரு அமைப்பில் சில காலம் பயணித்துவிட்டு அதன் பிறகு சொந்த வாழ்க்கையை நாடிச் சென்றவர்கள் செய்கின்ற அலப்பறைகள் சகிக்க முடியவில்லை.

அத்தகைய நபர் ஒருவருக்கு முகநூலில் நான் அளித்த பதில், கீழே: புரிதலுக்காக:

"அரசியலில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருந்தால் நடப்பு அரசியல் எதுவும் புரியாது. நபர்களை என்றுமே நேசிக்கக் கூடாது. அரசியலைத்தான் நேசிக்க வேண்டும். 

எடுத்துக்காட்டாக, உங்களை ஒருவர் நேசித்திருந்தால் தற்போது நீங்கள் அரசியலில் இல்லை என்பதனால் உங்கள் மீது அவருக்கு வெறுப்புகூட வரும். 

அதேபோலத்தான், ஒருவர் நேற்று பேசிய அரசியலையே இன்றும் பேச வேண்டும் என்பது இன்றைய அரசியல் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாத அல்லது வளர்த்துக் கொள்ளாத தன்மையின் வெளிப்பாடு. அன்று பேசியதை இன்று பேசவில்லை என்று நினைத்தால் வெறுப்புதான் வரும்.

நபர்கள் மாறக்கூடும். அரசியலும் மாறக்கூடும். மாறுகிற அரசியல் சரிதானா என்பதை உரசிப் பார்க்கிற ஆற்றல் இருந்தால் குழப்பமும் விரக்தியும் எதுவும் வராது. 

தேர்தலில் ஏன் வாக்களிக்க வேண்டும்? யாருக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை தீர்மானிப்பது எதிரிகள்தான். 

எல்லாவற்றையும் முகநூலில் எழுதி புரிய வைத்துவிட முடியாது. அல்லது அடுத்தவர் சொல்லியும் புரிய வைக்க முடியாது. சுயமாகச் சிந்திக்கும் பொழுதுதான் புரிந்து கொள்ளவும் உணர்ந்து கொள்ளவும் முடியும். 

இப்படித்தான் அரசியலில் இல்லாத பலர்கூட இன்றைய அரசியலை சரியாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஏதாவது ஒரு நோக்கம் என் போன்றவர்களை மாற்றி உள்ளது என்பது உண்மைதான். இன்று வளர்ந்து வருகிற பார்ப்பன மேலாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கம்தான் அது.

நபர்களை வைத்து நீங்கள் செய்யும் விமர்சனம்தான் காழ்புணர்ச்சி. அரசியல் நிலைப்பாட்டை விமர்சனம் செய்யுங்கள். அதுதான் ஆரோக்கியமானது. நபர்கள் மாறிவிட்டார்கள் என்றால் ஏதோ பொருளாதாரத்திற்காக மாறிவிட்டார்கள் என்கிற தொணியில்தான் பலரும் இதை வெளிப்படுத்துகிறார்கள். கோவன் உள்ளிட்டோரின் வாழ்நிலையை நேரில் கண்டால்தான் இதைப் புரிந்து கொள்ள முடியும். அரசியலில் இருந்து ஒதுங்கி தங்களுடைய வாழ்க்கையை மட்டும் பார்த்துக் கொண்டவர்களுக்கு இதன் வலி புரியாது. கோவன் வசிக்கும் இடம்தான் உங்களுக்குத் தெரியுமே. ஒரு எட்டு போய் பார்த்துவிட்டு வாருங்கள்.

என்னை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களையும் நான் அறிந்திருக்கக்கூடும். ஆனால் நீங்கள் யார் என்று தற்போது எனக்குத் தெரியவில்லை. வாய்ப்பிருந்தால் நேரில் சந்தித்துப் பேசுவோம்."

வன்மமும் வக்கிரமும்தான் முகநூலில் நிரம்பி வழிகிறது. வன்மத்தைக் கக்குவோருடனான முகநூல் விவாதங்கள் கசப்பைத்தான் ஏற்படுத்துகிறது. அதனால் பலரையும் நான் எனது நட்பு வட்டத்திலிருந்து வெளியேற்றி வருகிறேன். 

தமிழ்மணி


Tuesday, 6 May 2025

கழிசடைகளின் கூடாரமாக "புரட்சிகர மக்கள் அதிகாரம்"!

"புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற கோஷ்டியைச் சேர்ந்த புவன் என்கிற ஒரு நபர், பாடகர் கோவனுக்கு எதிராக முகநூலில் ஒரு காணொளி வெளியிட்டிருந்தார். 

புவன் காணொளி

Sekar P: "நீங்கள் பேசியதை நீங்களே ஒரு முறை கேட்டுப் பாருங்களேன். ஏதாவது புரிகிறதா என்று பார்ப்போம். எல்லாம், காணொளிகளுக்கு வந்தக் கேடு."

என அதற்கு ஒரு மறுமொழியை நான் வெளியிட்டிருந்தேன்.

அதற்கு, அதே "புரட்சிகர மக்கள் அதிகாரம்" கோஷ்டியைச் சேர்ந்த பென்னாகரம் "தோழர் கோபிநாத்" என்ற நபருக்கும் எனக்கும் இடையில் நடந்த உரையாடலை அப்படியே தருகிறேன்.

"கோபிநாத்": நீங்க இப்படி பேசுறதெல்லாம் கேக்குறது எங்களுக்கு சாபக்கேடு.

Sekar P:  வாண்டுகளின் வசவுகளைக் கேட்பதும் ஒரு சாபக்கேடுதான்.

"கோபிநாத்": உங்களைப் போன்ற துரோகிகளின் தூற்றலை கேட்பதும் சாபக்கேடுதான்.

Sekar P:  நான் உமக்கு என்ன துரோகம் பண்ணினேன் தம்பி? வசவு பாடி வம்படிப்பதுதான் உங்கள் வேலையோ? மீசைக்கார தாத்தா நல்லா வளத்திருக்காரு. வேறென்ன செய்ய? பெல் சிட்டி ஊழலை வளர்த்தவரின் வாரிசுகள் இப்படித்தானே பேசுவீங்க. நல்லா வருவீங்க தம்பி. வாழ்த்துகள். பணம் கொடுத்து ஏமாந்த பெல் ஊழியர்கள், அகவை 65 ஐத் தாண்டியும் மீசைக்கார ஆசானைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள், நியாயம் கேட்க?

"கோபிநாத்": நீ எனக்கு துரோகம் செயல சேகரு, கட்சியை காட்டி கொடுத்து திமுகவுக்கு அடகு வைத்து, மருதையனின் ரசிகர் குஞ்சியா ? வளம் வந்து புரட்சிகர கட்சியை துரோகம் பாதைக்கு எடுத்துட்டு போன திருடர்களுக்கு, துணை போன நீ துரோகி இல்லையா.

பெரிய தியாகி நீ, பெல் சிட்டி ஊழல் என்றால், அங்கு தங்கி கூத்தடித்த மருதையனும், காளியப்பனும் தியாகியா? சேகர். நீ துரோகிகளின் வாரிசு. அமைப்பு சொத்தை விற்று பங்கு போட்டுக் கொண்ட துரோகிகளின் கூட்டத்தில் உலாவும் பெருச்சாளி நீ. அமைப்பை உடைக்க பெல் சிட்டி ஊழல் என்கிற பதத்தை பயன்படுத்திய அயோக்கியர்கள். ஊழல் இருப்பின் ஏன் மருதையன்  ஓடி ஒளிந்து கொண்டான். எங்கு போனான், ஏன் எந்த கூட்டத்திற்கு வரவில்லை. ஏன் தலை மறைவு, ஏன் வெளிப்படையாக பேசவில்லை, ஏன் அணிகளிடம் வைத்து போராட வில்லை, இப்படி எத்தனையோ கேள்விகள் இருக்கிறது. ஏனென்றால் கட்சி உடைக்க துரோகி மருதையனுக்கு கிடைத்த ஆயுதம் பெல்சிட்டி ஊழல், சரி உங்களுக்கு இதற்கெல்லாம் கேள்வி கேட்க நேரமில்லை, பாவம் திமுகவிற்கு போய் சொம்புபடியுங்கள். உனக்கு எப்படி புரியும். நாங்க பேசறது .

நீங்க போயி திமுக கூட சேர்ந்து புரட்சி பண்ணுங்கள்.

***
இதைத் தொடர்ந்து நான் எழுதிய மறு மொழிகளை வெளியிடாமல் முடக்கிவிட்டது அந்த கோஷ்டி.

***
தொடர்ந்து எனக்கு எதிராக வசவுச் சொற்களை வாரி இறைத்தது.

"கோபிநாத்": டேய் பொறுக்கி, திமுக கிட்ட காசு வாங்கி வேலை செய்ற அயோக்கிய பயலே, உனக்கு கட்சியை பத்தியோ அல்லது நக்சல்பாரி அரசியல் பற்றியோ ஒரு மயிரும் தெரியாதுடா. கட்சியை திமுககிட்ட அடகு வச்சி பிழைப்பு நடத்துற அயோக்கிய பயலுகளுக்கு குண்டி கழுவி விடற நாயி நீ. எவண்டா உன்கிட்ட வரணும். நான் வரண்டா , உன் தலைவனை வர சொல்லுடா பேசுறதுக்கு. எனக்கு புத்தி சொல்ல உனக்கு என்னடா தகுதி இருக்கு அயோக்கிய பயலே.

***
கோபிநாத் என்ற இந்த நபருக்கு ஒரு 35 வயது இருக்கும். எனக்கோ வரும் 27 இல் 67 வயது முடிகிறது.

நான் மகஇக தொடங்கிய 1980 களின் தொடக்கத்திலிருந்து சுமார் இருபது ஆண்டு காலம் மகஇக மாநில செயற்குழுவிலும், தற்போது "மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின்" மாநில நிர்வாகக் குழுவிலும் செயல்பட்டு வருகிறேன். எனது புரட்சிகர வாழ்க்கை அனுபவங்களை "இழி குணம்" என்ற தொடரில் விரிவாக இதே தளத்தில் எழுதி உள்ளேன்.

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் அதிகாரம் அமைப்பிற்குள் வந்த புதிய தலைமுறையைச் சேர்ந்த கோபிநாத் போன்ற இத்தகைய நபர்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கு லாயக்கற்றவர்கள் என்பதை இந்த உரையாடலே உணர்த்தி விடுகிறது.

'பெல் சிட்டி' ஊழலுக்கு உடனிருந்த இந்தக் கும்பலின் தலைவர் இருவர் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த போது, மக்கள் அதிகாரம் அமைப்பிலிருந்து சில நபர்களுடன் வெளியேறி, சில காலம் 'மக்கள் அதிகாரம்' பெயரிலேயே செயல்பட்டு, தற்போது "புரட்சிகர‌ மக்கள் அதிகாரம்" என்ற பெயரில் செயல்படுகின்றனர். இது ஒரு ரவுடிக் கும்பல் என்பதை பழைய தோழர் ஒருவர் மிகச்சரியாகவே கணித்திருக்கிறார்.

எனவே, கோபிநாத் போன்ற நபர்களையும், இத்தகைய நபர்களை முன்னணியாளர்களாகக் கொண்ட "புரட்சிகர மக்கள் அதிகாரம்" என்ற குப்பலையும் அடையாளம் கண்டு புறந்தள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ்மணி
மகஇக முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர்
06.05.2025

Sunday, 4 May 2025

கண்ணீர்த் துளிகளில் வாழும் மனிதர்கள்!

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொருளாளராக இருந்த களப்பணியாளர் தோழர் சீனிவாசன் மறைந்த நாள் (05.05.2012) இன்று. 

தோழர்கள் மருதையன், காளியப்பன், கதிரவன், சீனிவாசன், தமிழ்மணி ஆகிய ஐந்து பேர் கொண்ட அன்றைய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு செயல்பட்ட காலமே மகஇக-வின் பொற்காலம். 

தோழர் சீனிவாசனோடு பழகிய காலங்கள் என்றும் பசுமையாய் நினைவில்.

தோழர் சீனிவாசன் மறைவின் போது நான் எழுதிய நினைவஞ்சலி.

தோழர் சீனிவாசன்

***
"எனது 54 ஆண்டு வாழ்நாளில் நான் யாருக்காகவும் இவ்வளவு கண்ணீர் வடித்ததில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர் மரணப் படுக்கையில் கிடந்த போது தோழரை சந்திக்கச் சென்றேன். அன்று அவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நான் ஒரு அரை மணிநேரம் பேசாமல் இருந்தேன். பேசும் ஆற்றல் அன்று எனக்கில்லை. கண்ணீரால் கைக்குட்டை நனைந்ததே தவிர என் கண்களை திறக்க முடியவில்லை.

"தமிழ்மணியா இது?" என அவர் கேட்ட பிறகும் எனக்கு பேச நா எழவில்லை. அவரது முகத்தைப் பார்க்க முயலும் முன்பே என் கண்கள் குளமாகிவிடும். பிறகு எப்படி அவரை நான் பார்ப்பது?

இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரைப் பார்த்தேன். தைரியத்தை வரவழைத்துக் கொண்டு துயரைத்து மறைத்து ஒரு சில வார்த்தைகள் பேசினேன்.

அவர் மரணமடைந்த செய்தி கேட்டு வழியத் தொடங்கிய கண்ணீர் இன்னும் நிற்கவில்லை. அவர் மரணம் உறுதி செய்யப்பட்டதால் ஏற்கனவே குடும்பத்தினர் மற்றும் தோழர்களின் கண்ணீர் வற்றிப் போய்விட்டதாக இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தோழர் மருதையன் குறிப்பிட்டார். ஆனால் எனக்கு இன்னும் வற்றவில்லை. கண்ணீர் வழிந்தோடி கொண்டுதான் இருக்கிறது.

ஒரு முப்பது ஆண்டு காலம் உற்ற தோழனாய், நண்பனாய், உறவாய் என என்னுள் அமைப்பு வேலைகளில், எமது உடல் நலனில், எமது குடும்ப உறவில் இரண்டறக் கலந்தவர் தோழர் சீனிவாசன். பொதுக்கூட்டங்களில் பேசும் பொழுது ”ஏன்னு சொல்ச்சுனா” என்று அவர் பயன்படுத்திய சொற்றொடர் எப்படி என் நினைவிலிருந்து அகலாதோ அது போல என் கண்களிலிருந்து எவ்வளவுதான் கண்ணீர் வழிந்தாலும் அது ஒரு போதும் வற்றாது.

ஆனாலும் வெறும் கண்ணீர் மட்டும் அவர் விட்டுச் சென்ற புரட்சிப்பணியை நிறைவேற்ற உதவாது என்பதை உணர்ந்தே இருக்கிறேன். அவரைப் போல வீருகொண்டு எழுவதே அவருக்கு நான் செலுத்து நினைவஞ்சலியாக இருக்க முடியும்.

தோழர் சீனிவாசனுக்கு வீர வணக்கம்!"

தமிழ்மணி

Friday, 2 May 2025

சோளக்கொல்லை பொம்மை!

'பெல் சிட்டி: ஊழல்வாதியின் பக்கம் நின்று, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளத் திராணி இன்றி அஞ்சி நடுங்கி அமைப்பை விட்டு ஓடிய ஒரு சிறுகும்பல் பக்கம் ஒட்டிக் கொண்ட, ஒரு கிளையின் உறுப்பினரான  ராமலிங்கம் என்ற ஒற்றை நபர் மகஇக பெயரில், தோழர் கோவன் உள்ளிட்ட மகஇக ஒட்டுமொத்த மாநிலத் தலைமையையும் அமைப்பிலிருந்து  நீக்கியதாக வீனாப்போன வினவு தளத்தில் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 

கோவனின் ரசிகர் ராமலிங்கம், 

ஜனநாயகம் பற்றி பீற்றித் திரியும் இந்தக் கும்பல் கடைபிடிக்கும் ஒற்றை நபர் ஜனநாயகம் என்பது ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டுக்கு எதிரானதொரு  புதுவகை. 

நிற்க, கோவன் கோவையில் ஆணாதிக்கத் திமிரோடு பேசினார் என்று ஒரு செய்தியை அள்ளி இறைத்திருக்கிறது இந்தக் கும்பல். செய்வது கலைப்புவாதம் என்பதைக்கூட புரிந்து கொள்ள முடியாத மூடர் கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?

தோழர்கள் மருதையன், கோவன் உள்ளிட்டோரின் கடும் உழைப்பால் உருவான மகஇக வின் பாடல்கள் உள்ளிட்ட படைப்புகளுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் மேடைக்கு முன்னால் அமர்ந்து பல் இளித்த இந்த இரசிகர்.

பிரம்மன் படைத்ததை அழிப்பதே ஈசனின் வேலை என்பது புராணங்களில் மட்டும் அல்ல, பலரின் கடும் உழைப்பால் உருவான மகஇக அமைப்பையும் அழிக்கப் புறப்பட்டவனும் ஒரு 'கோட்டீஸன்'தான் என்பது இன்றைய நிஜக்கத்தை.

மக்கள் கலை இலக்கியக் கழகம் என்பதை முழுமையாகக்கூட உச்சரிக்கத் தெரியாத ஒரு நபர், அறிக்கை எல்லாம் தயாரிக்கிற அளவுக்கு ஆற்றல் உள்ளவர் அல்ல.  எல்லாம் அந்த ஈசன் செயலே! பாவம் சோளக் கொல்லை பொம்மையாய் ராமலிங்கம்!

தமிழ்மணி 

Thursday, 24 April 2025

மணவிழாவில் ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்று கூடல்!

முன்னிரவு  தொடங்கிய மேடை அலங்கார வேலைகள் முடியும் தருவாயில் ஒரு பக்கம், மாலைநேர மணவிழா விருந்துக்கான சமையல் வேலைகள் மறுபக்கம் நடந்து கொண்டிருக்க, பங்குனியின் கடைசிநாள் ஞாயிறு பிற்பகலில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஒவ்வொருவராக மண்டபத்தை நோக்கி வரத்தொடங்கினர். 

நண்பர்களும் உறவினர்களும் தோழர்களும் மண்டபத்தின் கீழ்வாசல் வழியாக திரள் திரளாய் நுழைவதைக் கண்டு அச்சமோ என்னவோ, கதிரவன் மேற்கு நோக்கி வேகமாக ஓடியதால்  வெக்கையும் சற்றே தணிந்தது.  வந்திருந்தோரின் நேச மழையில், நானோ கொடுங்கோடையிலும் உறைந்து போனேன்.

நண்பர்களை ஆரத்தழுவி கட்டி அணைப்பது வழக்கம்தான் என்றாலும், பல ஆண்டுகள் கழித்து சிலரைக் கட்டித் தழுவியபோது ‘ஸ்பைடர்மேனாக’ நான் பறக்கலானேன். 


வாழ்நாள் முழுக்க கூடவே பயணிக்கின்ற சொந்தங்கள், பொது வாழ்வில் களப்போராட்டங்களில் கைகோர்த்து பயணிக்கின்ற தோழர்கள், மிக நீண்டகாலம் அருகருகே அமர்ந்து வேலை பார்க்கும் சக ஊழியர்கள் 

என இவர்கள், சிலசமயங்களில் சிலபல காரணங்களுக்காக விலகி நிற்கவோ, தோழமையை துண்டித்துக் கொள்ளவோ, மனம் கசிந்து போகவோ நேரிடலாம்.

“நட்பு செய்வதற்கு தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்” என்கிறான் வள்ளுவன் (785)

அண்மையில் சென்னையில் மின்சாரத்தால் தாக்குண்டு மழை நீரில்  தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனை ஒரு இளைஞன் காப்பாற்றிய போது அவன் மீது அதைப் பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடுதானே? 

உலகையே உலுக்கிய சுனாமியின்போது உணவுக்காக நீண்ட வரிசையில் பலர் பசியோடு காத்திருக்க, முன்வரிசையில் தான்பெற்ற உணவை ‘என்னைவிடப் பசியோடு பலர் காத்துக் கிடக்கின்றனர்’ எனக்கூறி மீண்டும் மொத்த உணவோடு தனது உணவைச் சேர்த்த சிறுவனின் நடத்தையைப் படிக்கும் போது, அவன் எப்படி இருப்பான் என்பதுகூட தெரியவில்லை என்றாலும், அவன் மீது ஏற்படுகிற பரிவு ஒத்த உணர்ச்சியின் வெளிப்பாடன்றோ? 

அதனால்தான் நாம் உணர்வதை, நாம் செய்ய விரும்புவதை, பிறர் உணரும் போதும், செய்யும் போதும் ஏற்படும் உணர்ச்சிதான் நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கிறது என்கிறானோ வள்ளுவன்?

இரத்த உறவு எப்பொழுது ஒத்த உணர்ச்சியை ஏற்படுத்துகிறதோ அப்பொழுது உறவினர்களும் நண்பர்களாகி விடுவார்கள்; தோழர்களும்தான். ஒத்த உணர்ச்சி இருக்கும்வரை உறவையும் தோழமையையும் நட்பையும் ஒருவராலும் உடைக்க முடியாது. 

இப்படித்தான், நான் எனது உறவினர்களையும் தோழர்களையும் நண்பர்களையும் பார்க்கிறேன்; பாவிக்கிறேன்.

முதுமையையும் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் தூத்துக்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை, திருச்சி, தஞ்சை, கோவை, பொள்ளாச்சி, தாராபுரம், பாண்டிச்சேரி, சென்னை, காஞ்சிபுரம், தருமபுரி, பெங்களூரு, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கம் மட்டவெட்டு-அத்திமூரான் கொட்டாய்  என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தொலை தூரங்களிலிருந்தும் அந்த ஒத்த உணர்ச்சிதான் எனது இல்ல மணவிழாவிற்கு  
திருப்பத்தூரை நோக்கி பலரையும் ஈர்த்ததோ?

இதுஒரு மணவிழா என்பதையும் தாண்டி, இது ஒத்த உணர்ச்சி கொண்டோரின் ஒன்றுகூடல் (get together) என்பதாகத்தான் ஒவ்வொருவரையும் உணர வைத்தது. 

“குற்றமற்றவனாகவும், குடிமக்களின் நலத்திற்குப் பாடுபடுபவனாகவும் இருப்பவனை தமது உறவினனாகக் கருதி, மக்கள் சூழ்ந்து கொள்வார்கள்” என்கிறான் வள்ளுவன் (1025). இந்த ஒன்றுகூடல் கூட அப்படித்தானோ?

ஆம்! குற்றமற்றவர்களாகவும், குடிமக்களின் நலன்களுக்கு பாடுபடுவோராகவும் நம்மால் முடிந்தவற்றை செய்ய முனைவோம். நண்பர்களாய், மக்கள் நம்மைச் சூழ்ந்திருக்க நமக்கென்ன கவலை?

மணவிழாவில் பங்கேற்ற அனைவருக்கும் 
நன்றிப் பெருக்குடன்,

பொன்.சேகர்

Tuesday, 11 March 2025

இந்துக்களை மட்டுமே வட்டமடிக்கும் கெரகச் சக்கரம்!

ஜாதகத்தையும், ஜோதிடத்தையும் நம்பும் ஐயன்மீர்! ஐயம் தீர்ப்பீர்!

கிரகங்களின் தாக்கம் இந்த பூமியில் உள்ள அனைத்து மனிதர்கள் மீதும் உள்ளது என்றால், அது ஏன் இந்துக்கள் மீது மட்டும், அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு இந்துக்கள் மீது மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

அக்கம் பக்கமாக வாழுகின்ற இஸ்லாமிய, கிறிஸ்தவர்கள் மீது ஏன் அந்தக் கிரகக் கதிர்கள் விழுவதில்லை? கீழ் வீட்டில் இருக்கிற இந்து மீது, அதுவும் சாதிக்குத் தகுந்தவாறு விழுகிற கிரகக் கதிர்கள், மாடி வீட்டில் இருக்கிற இஸ்லாமிய - கிறிஸ்தவன் மீது விழுவதில்லையே. கிரகங்களுக்கே 'செலெக்ட்டிவ் அம்னீசியாவா'? இல்லை, இஸ்லாமிய - கிறிஸ்தவர்களைக் கண்டு கிரகங்களுக்ககே அச்சமா? 

கிரகங்களப் பாத்து இந்துக்கள் அச்சப்படுகிறார்கள். ஆனால், கிறிஸ்தவர்களையும், இஸ்லாமியர்களையும் பார்த்து கிரகங்களே அஞ்சுகின்றன. என்ன கொடுமை 'சார்' இது?


ஓ! புரியுது! புரியுது! உங்க அச்சம் ஏன்னு? இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள். அவிங்க குண்டு போட்டா கிரகங்களின் குண்டியே கிழிஞ்சிடுமோ? பெறவு, கிருஸ்தவன்? ஏசுவ பகைச்சிக்கிட்டா தேசம் போன இந்துக்கள் எல்லாம் திரும்ப வர வேண்டி இருக்குமே? அவங்களுக்கும் சேர்த்து பலன் பாக்கணும்னா கிரகங்களுக்கு 'ஒர்க்லோடு' அதிகமாயிடுமே? படா கில்லாடிங்கப்பா நீங்க?

அவன் இந்து, இவன் இஸ்லாமியன், இவன் கிருஸ்தவன் என்ற 'டேட்டாவை' கிரகங்களுக்கு யாரப்பா கொடுத்தது? மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவே அரசுகள் ஓடி ஒளியும் பொழுது நீங்க எப்படிப்பா கணக்கெடுப்பு நடத்துனீங்க? அந்த ரகசியத்தை டாக்டர் ஐயாகிட்ட சொல்லலாம் இல்ல? பாவம் புலம்பிக்கிட்டே இருக்காரு.

ஜாதகம், ஜோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம், ராகு காலம், எமகண்டம், குளிகை, பொறந்த நேரம், புண்ணாக்கு நேரம் இதெல்லாம், ஏன்டா இந்துக்களுக்கு மட்டுமே வைக்கிறீங்க? 

எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவீர் இந்த நாட்டிலே?

ஊரான்

Thursday, 6 March 2025

தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டுமா?

தமிழன் என்பதற்கு அடையாளம் என்ன? ஒருவன் தமிழன்தான் என்பதை எதை வைத்து முடிவு செய்வது? தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவன் எல்லாம் தமிழன் ஆகிவிட முடியுமா? தமிழன் என்பதை மரபணு ரீதியாக நிரூபிக்க வேண்டாமா? 

கருப்புதானே ஆதி தமிழனின் நிறம். அப்படியானால்
மரபணு ரீதியாக மாநிறம் மற்றும் சிவப்பாய் இருகிறவன் எவனும் தமிழனாக இருக்க முடியாதே? 


யார் தமிழன் என்பதற்கே இத்தனை சோதனைகளைச் செய்ய வேண்டி இருக்கிறது. அதற்காக கருப்பா இருக்கிற பாலியல் குற்றவாளி சீமான் போன்றவர்கள் எல்லாம் ஆள வந்தால் என்னவாகும்? 

ஆள வருகிறவன் நல்லவனா கெட்டவனா என்பதுதானே முதன்மைத் தேவை. இதையெல்லாம் பார்க்காமல் தமிழன்தான் ஆள வேண்டும் என்றால் சாக்கடைகள்கூட உங்களை ஆள நேரிடும். பிறகு நீங்கள் புழுக்களாய்தான் நெளிந்து கொண்டிருப்பீர்கள்.

கடைசியாக ஒரு கேள்வி. பள்ளிக்கல்வி முதல் கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் டெல்லிதானே தமிழ்நாட்டை ஆளுகிறது.  டெல்லியை ஆளுகிறவன் குஜராத்தியாக இருக்கிறானே? என்ன செய்ய?

தமிழ்மணி

Monday, 3 March 2025

சிந்து சமவெளி நாகரிகத்தை 'ஐஜேக்' பண்ண ஆளுநர் ஆர்.என்.ரவி முயற்சி!

உலகில் வெள்ளை, மஞ்சள், கருப்பு ஆகிய மூன்று இனங்களில் வெள்ளை இனம்தான் உயர்ந்தது என, நிற அடிப்படையில் பாகுபாடு இருந்ததாகவும், வின்சன்ட் சர்ச்சில் மற்ற இனத்தை நாய் போலக் கருதினார் என்றும் அங்கலாய்க்கிறார் ஆர்.என்.ரவி. 

"ஆரியர்-திராவிடர் வெவ்வேறு இனம். இந்தியா மீது ஆரியர் படை எடுத்தனர்" என்பதெல்லாம் கடந்த 60-70 ஆண்டுகளில் திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டதாம். அதை பெரியார் தமிழகத்தில் திணிக்க முயற்சித்தாராம். ஆர்.என்.ரவி சொல்கிறார்.

இந்து தமிழ் மார்ச் 4, 2025

சர்ச்சில் ஒருபக்கம் இருக்கட்டும் சார், எங்களைப் போன்று கருப்பாய் இருப்பவர்களைப் பற்றி, பார்ப்பனர்களாகிய நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எங்களையெல்லாம் 'சூத்திரவாள்' 'வேசி மக்கள்' என்று, நாயைவிட மிகக் கேவலமானவர்களாக சொன்னது நீங்கள்தானே சார்? உங்கள் கூட்டம்தானே சார்? இன்றும்கூட எங்களை 'சூத்திரவாள்' என்றுதானே சார் விளிக்கிறீர்கள்!

பார்ப்பனர்கள் அனைவரும் இந்தியா முழுக்க ஏன்
வெள்ளையாக இருக்கிறார்கள்? 'வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்' என்று பார்ப்பனர்கள் பெருமை பேசுவததற்கும் சர்ச்சிலுக்கும் என்ன வேறுபாடு ஐயா ஆர்.என். ரவி அவர்களே? இப்போ என்ன தீடீர் ஞானோதயம்? 

வரலாற்றைத் திருத்துவதுதானே உங்களது வேலை. அறநெறி தந்த வள்ளுவனை இந்து மத ஆன்மீக சன்யாசியாக்க முயற்சிப்பவர்கள்தானே நீங்கள். அதனால்தானே இன்று "சிந்து சமவெளி" நாகரிகத்தை 'சிந்து சரஸ்வதி' நாகரிகம் என்று கூற வேண்டும் என தொல்லியல் தரவுகள் எதுவும் இன்றி மடைமாற்ற முனைகிறீர்கள்.

ஆரியன் என்ற சொல்லை பெரியாரா உருவாக்கினார்? நீங்கள்தானே அந்தச் சொல்லை சமஸ்கிருதத்தில் வேதங்களில் வைத்திருக்கிறீர்கள்? ஆரியர்கள் என்றால் உயர்ந்தவர்கள் என்று நேற்று வரை நீங்கள்தானே பெருமை பேசிக் கொண்டிருந்தீர்கள்? 

அப்புறம், ஆரியர்கள் என்றால் 'ஆசிரியர்கள், சிறந்தவர்கள்' என்பதைக் குறிப்பிடவே 'ஆரியர்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டது என்று புது 'டிக்ஷனரி' எழுதுகிறீர்கள். அது எப்படி சார், பார்ப்பனர்கள் மட்டுமே ஆசிரியர்களாகவும், சிறந்தவர்களாகவும் இருந்தார்கள்? இதற்கு யார் சார் காரணம்? வெள்ளைத் தோல் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் எல்லாம் ஆசிரியர்களாக ஆவது இருக்கட்டும், நாலு எழுத்துக் கூட்டிப் படிப்பதற்குக்கூட முடியாமல் போனதற்கு யார் சார் காரணம்? 

கடைசியா "அனைவரும் சமம், அனைவரும் ஒரே குடும்பம்" என்று ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதாகச் சொல்கிறீர்கள். இருக்கட்டும். இருக்கட்டும். அப்படியானால் இந்துக் கோவில்களில் அனைத்து சாதி அர்ச்சகர் விசயத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே பூசை செய்ய வேண்டும் என்று ஏன் சார் அடம்பிடிக்கிறீர்கள்? 

நீங்கள் மட்டுமே ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக இருந்த காலமெல்லாம் மலையேறிவிட்டது சார். இப்பொழுது நாங்களும் ஆசிரியர்களாக, சிறந்தவர்களாக வளர்ந்துவிட்டோம் என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள் ரவி சார். 

தமிழ்மணி

Monday, 27 January 2025

அகந்தையில் சிக்கித் தவிக்கும் மார்க்சிய லெனினிய அமைப்புகள்!

அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்கள், வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்து சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதோடு, ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒருசில பொதுவுடமை அமைப்புகளில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு களமாட விரும்புகின்றனர். 

சமூக எதார்த்தம் குறித்தப் போதிய அனுபவப் புரிதலின்மையால், அவர்கள் விரைவில் சோர்வுற்று, தாங்கள் சேர்ந்த அமைப்பில் ஏதோ கோட்பாட்டுப் பிரச்சனை இருப்பதாகக் குழம்பி, புதிய வழிகள் கிடைக்குமா என புத்தகங்களில் தேடுகின்றனர். நாலு புத்தகங்களைப் படித்து விட்டு அவர்களும் வேறு வேறு திசைகளில் சிந்திக்கத் தொடங்கி அவர்களுக்குள்ளும் வேறுபட்டு விரத்தியின் விளிம்புக்குச்  சென்று எதுவுமே சரி இல்லை என்று புலம்பத் தொடங்குகின்றனர். 


புரட்சிக்கு புதிய வழியைக் கண்டுபிடித்து விட்டதாக அதில் சில இளைஞர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். சில பக்கங்களை எழுதி, சில கூட்டங்களை நடத்தி புரட்சி பூபாலம் பிறந்து விட்டதாக புலகாங்கிதம் அடைகின்றனர். சில மாதங்களிலேயே 'கடை விரித்தும் கேட்பாரில்லை' என்ற கதையாக மீண்டும் விரக்திக்குத் தள்ளப்பட்டு சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி ஏற்கனவே செயல்படும் இயக்கங்களைச் சீண்டிக் கொண்டே காலத்தை ஓட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் மார்க்சியம் பேசுவோரின் பொதுத் தன்மை இது. தமிழ்நாட்டின் மாற்று புரட்சிகர அரசியல் சக்தியாக வளர்ந்து கொண்டிருந்த மகஇக - வின் இன்றைய நிலையும் இதுதான்.

2019-20 ஆம் ஆண்டுகளில் அன்றைய மகஇக பொதுச் செயலாளர் தோழர் மருதையன் மீது காழ்ப்பு கொண்ட கட்சியின் மூத்தத் தோழர் ஒருவரால் மருதையன் அமைப்பை விட்டே வெளியேற நேர்ந்தது. இந்தப் பிரச்சினையில் அமைப்பின் பெரும்பான்மையினர் மருதையனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதும், அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு தோழரும் வேறு சிலரும் அமைப்பை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர்களும் இரண்டாக உடைந்தனர். 

அமைப்பு பிளவுக்குக் காரணமாக இருந்த அந்த இரு மூத்த தோழர்களுமே தற்போது உயிரோடு இல்லை. இந்த நிலையிலாவது பிரிந்து சென்றவர்கள் ஒன்று படுவார்கள் என்று பார்த்தால், அதற்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதில் மகஇக-விலிருந்து பிரிந்து சென்றதாக, "இளம் கம்யூனிஸ்ட் கழகம்" என்ற பெயரில் சில இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். எதற்கு இந்த வீண் முயற்சி என்று தெரியவில்லை. பிளவு பட்டவர்களை ஒன்றிணைத்து கூட்டாகச் சேர்ந்து அமைப்பில் இருப்பதாக கருதும் 'கோட்பாட்டுப் பிரச்சனையைத்' தீர்ப்பதால் மட்டும்தான் அது தோழர்களுக்கும் நல்லது பொதுவுடமையை நேசிப்பவர்களுக்கும் நல்லது. அதை விடுத்து தனியாக ஆவர்த்தனம் பாடிக் கொண்டிருப்பதால் சில காலம் கழித்து விரக்தி மட்டும்தான் மிச்சமிருக்கும். வரலாறு உணர்த்தும் பாடம் இது.

எல்லோரும் இங்கு கன்றுக்குட்டிகள்தான். உழவுக்கு பழக்கப்படாத வரை கன்றுக் குட்டிகள் துள்ளிக் கொண்டுதான் இருக்கும். பயன்பாட்டுக்குரிய எருதுகளாய் மாறுவதற்கு கூட்டு முயற்சி ஒன்றுதான் இன்றைய தேவை. ஒற்றைக் காளையால் ஒரு போதும் உழ முடியாது.

கூட்டு முயற்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்கிற அடிப்படையான அமைப்புக் கோட்பாட்டு நடைமுறை மிக மிக அவசியம். பெரும்பான்மைக்குச் சிறுபான்மை கட்டுப்பட்டு ஒன்றாகச் செயல்பட்டால் மட்டும்தான் தமிழ்நாட்டில் புரட்சிகர அரசியல் மீண்டும் உயிர் பெற்று எழ முடியும். 

பல்லாயிரக்கணக்கான தோழர்களின் அர்ப்பணிப்பு தியாகங்கள் தொகுக்கப்படாத நிலையில் அவர்களின் வலி காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. துயரர்களின் வலியை தனது வலியாக உணர்ந்தால் மட்டுமே நோயைத் தீர்க்க முடியும்.
 
தமிழ்மணி
முன்னாள் மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் 

Thursday, 23 January 2025

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டம் உணர்த்தும் பாடம் என்ன?

ஆரிய சங்கிகளும் தமிழ்த்தேச சங்கிகளும் ஆட்டம் போடும் இந்தக் காலகட்டத்தில் மார்க்சியம் பேசுவோரும், பெரியாரையும் அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிப்போரும், துண்டு துக்கடா அமைப்புகளாக சிதறுண்டு கிடப்பது காலக்கொடுமை! ஒவ்வொருவரும் தங்களுடைய அகந்தையை விட்டொழித்து எதிரிகளை வீழ்த்த ஒரே அமைப்பாய் ஒன்றிணையுங்கள். இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது. 

சரியானவர்கள் பலம் பெறுவார்கள், வளருவார்கள் என்ற சால்ஜாப் எல்லாம் இங்கு தேவையில்லை. அதற்குள் சங்கிகள் உங்களது சல்லி வேரையே அறுத்து விடுவார்கள். இதில் கூத்து என்னவென்றால் ஒரே பெயரில் மூன்று, நான்கு கோஷ்டிகள். மூன்று பேர் நின்று முஷ்டியை உயர்த்தினாலே புரட்சி வந்துவிட்டதாக பம்மாத்து வேறு! 


சமூகத்தை மாற்ற நினைக்கும் சிறு சிறு அமைப்புகள் பெரும்பாலும் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான். பிறகு எதற்குத் தனித்தனி அமைப்புகள்? 

எழுத்துக்களில் புரட்சியைத் தேடியது போதும். உங்களது பங்காளிச் சண்டைகளில் போராட வருவோரின் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள். 

டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டத்தில் எளிய மக்கள் தங்களது ஒற்றுமையை பறைசாற்றி இருக்கிறார்கள். அவர்கள் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்கவில்லை. ஏன் டங்ஸ்டன் எதற்குப் பயன்படும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வு பரிபோகும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. 

சங்கிகளால் நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த நீங்களோ உங்களது சித்தாந்தம்தான் உயர்ந்தது என்று இன்னமும் சிலாகித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது சங்கிகளுக்கு எதிரான கோபத்தைவிட உங்களுக்கு எதிராகத்தான் கோபம் அதிகரிக்கிறது. 

சீமானின் சில்லறைகளைப் போல நீங்களும் உங்களது அமைப்புகளில் தற்குறிகளாய் இருக்கப் போகிறீர்களா இல்லை இன்றைய அவல நிலையை எண்ணி தலைமையைத் தட்டி கேட்கப் போகிறீர்களா?

கடந்த 40 ஆண்டு காலத்தில் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இழுப்புகளையும் சந்தித்து இன்றைய நிலை கண்டு நொந்து போனவனின் குரல் இது.

தமிழ்மணி

Monday, 6 January 2025

இரு பறவைகள் : ஒரு உரையாடல்!

கவிதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு மாவோவைப் படியுங்கள்!
***
மா சேதுங்

இரு பறவைகள் : 
ஒரு உரையாடல்
(இலை உதிர் காலம் 1965)

அந்தப் பெரும் பறவை (1) 
தன் இறகுகளை விசிறியாய் விரித்து,
தொண்ணூராயிரம் லி தொலைவு உயர்ந்து
சீறும் புயலைக் கிளப்புகிறது.
அதன் முதுகுக்கு மேலே நீலவான் இருக்க,
ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய 
மனிதனின் உலகை அளவிட 
அது 
கீழே பார்க்கிறது;
துப்பாக்கி வெடிப்புகள் விண்ணைச் சிராய்க்கின்றன
பீரங்கிக் குண்டுகள் நிலத்தினைத் துளைக்கின்றன,
ஒர் சிட்டுக் குருவி (2) தன் புதருக்குள்ளே 
அஞ்சி விறைந்து நிற்கிறது
"சே, என்ன இது ஓர் குழப்பப் பாழ் நரகம்!
ஓ, நான் இதிலிருந்து நழுவிப் பறந்து விட விரும்புகிறேன்".

"எங்கே என நான் கேட்கலாமோ?" எனப் பெரும் பறவை வினவ, சிட்டுக் குருவி விடை சொன்னது:
"தேவதை நாட்டு மலைகளின் மீதே இரத்தினங்கள் பதித்த மாளிகைக்கு.
இரண்டாண்டு முன்பு,
இலையுதிர் கால ஒளிமிகு நிலவில் மும்முனை ஒப்பந்தம் (3) கையெழுத்தானது 
உனக்குத் தெரியாதா?

அங்கே வயிறு புடைக்கத் தின்னலாம்,
ஆவி பறக்கும் உருளைக் கிழங்குடன்,
மாட்டிறைச்சி நிறைந்த உணவு வகை உண்டு (4)".
பெரும் வரவை சொன்னது:
"நிறுத்து உன் வெற்று உளறலை. உற்று நோக்கு - உலகம் தலை கீழாய்ப் புரட்டப்படுவதை".

- மாவோ
****
(1)- பெரும் பறவை: இது சீனப் பழங்கதைகளில் கூறப்படும் கற்பனைப் பறவை. ஆயிரம் லி நீளமுள்ள குன் எனும் வட கடல் மீன் ஆயிரம் லி நீளமுடைய பறவையாக மாறியது என்று இக்கதைகள் கூறுகின்றன. இப்பறவை தொண்ணூறாயிரம் லி உயரம் பறக்கக் கூடியதாம். மேகம் போல விரியும் இதன் இறகுகள் சூறாவளியைக் கிளப்பக் கூடுமாம். இங்கு இது மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்களுக்கான குறியீடாக நிற்கிறது.

(2)-சிட்டுக் குருவி: புரட்டலாளருக்கான குறியீடு; புரட்சி முதன்மையானதல்ல, உற்பத்தியே முதன்மையானது என்பவர்கள் இவர்கள்-உலக அளவில் குருச்சேவைத் தலைவனாகக் கொண்டவர்கள். உலகிலும் சீனத்திலும் ஏற்பட்ட புரட்சி எழுச்சியையும் கொந்தளிப்பையும் 'குழப்பப்பாழ் நரகம்" எனக் கருதுபவர்கள்.

(3)-மும்முனை ஒப்பந்தம்: 1963 ஆம் ஆண்டு குருச்சேவ் காலத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை செய்து கொண்ட போலித்தனமான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம்.

(4)-புரட்டலாளர்கள் குருச்சேவின் சுரண்டல் கொள்கையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மும்முனை ஒப்பந்தத்தை மதிக்கிறார்கள். குருச்சேவின் 'மாட்டிறைச்சி-உருளைக் கிழங்கு' சோசலிசத்தைப் பாராட்டி நாடுகிறார்கள்.  'பாட்டாளி வர்க்கம் தனது உலகக் கண்ணோட்டத்திற்கேற்ப உலகை மறுவார்ப்புச் செய்தல்' என்பதை மறுக்கிறார்கள்-இவைதான் சிட்டுக் குருவி உவமையில் சொல்லப்படுகின்றன. புரட்சியாளர்களோ (பெரும்பறவை) உலகம் புரட்சிகரமாக மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

1965-ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட கவிதை மீண்டும் 1976-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. புரட்டலாளர்களுக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப் போராட்டத்தில் இக் கவிதைக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

***
கவிதை என்றால் உவமைகள் இப்படி அல்லவோ இருக்க வேண்டும்?

நூல்: மா சே துங் கவிதைகள்: பொதுமை வெளியீடு, 1981.