Friday, 17 April 2026

சந்தையின் தந்திரங்கள்: நாம் ஏய்க்கப்படுகிறோமா?

முன்னுரை

அறிவார்ந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்றுவிட்டுத் திரும்பும்போது, மாலை நேர சாலையோரக் கடை ஒன்றில் வாங்கிய 'செவ்வாழை' எனக்குள் சில கேள்விகளை எழுப்பியது.

“மற்ற கடைகளில் 80 ரூபாய்க்கு விற்கப்படும் இதே செவ்வாழை, இங்கு மட்டும் 100 ரூபாயா” என வினவிய போது, "அது ஆந்திரா சரக்கு, இது நம்ம ஊர் டேஸ்ட்" என்ற ஒற்றை வரி விளக்கம் வந்தது. இந்த 'டேஸ்ட்' என்ற மாயைக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வியாபாரத் தந்திரம் என்ன?


ருசியா? சத்தா?

வாழைப்பழங்களில் பூவன், ரஸ்தாலி, கற்பூரவல்லி, பச்சைவாழை எனப் பல ரகங்கள் இருப்பதும், ஒவ்வொன்றுக்கும் ஒரு தனித்துவமான சுவை இருப்பதும் நாம் அறிந்ததே. ஆனால், செவ்வாழை என்ற ஒரே ரகத்தில் மாநிலம் மாறினால் சத்துக்கள் மாறிவிடுமா என்ன? 

மண்ணும் நீரும் மாறினால் சுவையில் சிறு வேறுபாடு இருக்கலாம். ஆனால் பொட்டாசியம், நார்ச்சத்து, வைட்டமின்கள் போன்ற முக்கிய சத்துக்கள் பெரும்பாலும் ஒரே மாதிரிதானே இருக்கும்.

நாம் பழத்தைச் சுவைக்காகச் சாப்பிடுகிறோமா அல்லது சத்துக்காகவா? கூடுதல் விலை கொடுத்துச் செவ்வாழை வாங்குபவர்கள் அதன் மருத்துவக் குணத்திற்காகவே வாங்குகிறார்கள்.

அப்படியிருக்கையில், "ஆந்திரா பழம் ருசிக்காது" என்ற வியாபாரியின் வாதம், நுகர்வோரின் அறியாமையைப் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு 'விலை உயர்வு' தந்திரமே அன்றி வேறல்ல.

பேரிச்சம்பழம்

செவ்வாழைக்குச் சொல்லப்பட்ட அதே கதைதான் பேரிச்சம்பழத்திற்கும் பொருந்தும். அரேபிய நாடுகளிலிருந்து வரும் ஒரே வகை பேரிச்சம்பழத்திற்கு, இங்கே உள்ளூர் வியாபாரிகள் விதவிதமான 'பிராண்டு' பெயர்களைச் சூட்டுகிறார்கள். 

பழத்தின் 'சைசில்' சிறு மாற்றம் இருந்தால் கூட, அதை ஒரு 'பிரீமியம்' ரகமாகச் சித்தரித்து அதிக விலைக்கு விற்கிறார்கள். உண்மையில், இங்கே கெட்டுப்போகாமல் இருக்கப் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் வேண்டுமானால் மாறுபடலாமே தவிர, சுவையிலும் சத்துக்களிலும் பெரிய வேறுபாடு இருக்க வாய்ப்பில்லை.

‘பிராண்டிங்’ எனும் மாயவலை (The Branding Trap)

ஒரே பொருள்தான், ஆனால் அது விளம்பரப்படுத்தப்படும் விதத்தில் அதன் மதிப்பு தீர்மானிக்கப்படுகிறது. வட மாவட்டங்களில் 'களம்பூர் அரிசி' என்றால் அதற்குத் தனி மவுசு. வேறு பகுதியில் விளைந்த அரிசியைக் கூட... 'களம்பூர்' என்ற முத்திரையோடு விற்றால்கூட  மக்கள் ஏமாறுகிறார்கள். பொருளின் உண்மையான தரத்தைவிட அதன் பெயரே விலையை நிர்ணயிக்கும் நிலை உருவாகிறது.

ஒரு பொருளின் தரத்தைவிட, அந்தப் ‘பிராண்டின்’ மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை வியாபாரிகள் பணமாக்குகிறார்கள். 
ஒரே குட்டையில் ஊறிய மட்டையை வெவ்வேறு பைகளில் அடைத்து விற்கும் நுட்பத்தை நாம் எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறோம்?

மக்களை ஏய்க்கும் சந்தை அரசியல்

விளம்பரங்களினாலும், பழகிப்போன சுவை விருப்பங்களினாலும் மக்கள் ஒரு குறிப்பிட்ட ‘பிராண்டிற்கு' அடிமையாகிறார்கள். இதைச் சாதகமாகப் பயன்படுத்தும் நிறுவனங்கள், ஒரே தரத்திலுள்ள பொருளை வெவ்வேறு விலைகளில் சந்தைப்படுத்துகின்றன.
  • "உள்ளூர் தயாரிப்பு"
  • "இயற்கை உரமிட்டது"
  • "பாரம்பரிய ரகம்"
எனச் சொல்லப்படும் பல அடைமொழிகள் பெரும்பாலும் கூடுதல் விலையை நியாயப்படுத்த உருவாக்கப்படும் கற்பனைக் கதைகளே.

முடிவுரை

சாலையோரக் கடையில் 20 ரூபாய் கூடுதலாகக் கொடுத்து வாங்கிய அந்தச் செவ்வாழை எனக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது. நாம் வாங்குவது பழத்தை மட்டுமல்ல, அந்தப் பழத்தைச் சுற்றிப் பின்னப்பட்ட 'சுவை' 'சத்து' என்ற மாயக் கதையையும் சேர்த்துத்தான்.

சந்தை என்பது ஒரு மாயக் காடு. அந்தக் காட்டில் வழிகாட்டியாக இருப்பது விளம்பரங்கள்; நம்மை வழி தவறச் செய்வது வியாபாரிகளின் கதைகள். அங்கே விளம்பரங்களும், வியாபாரிகளின் வாய்ஜாலங்களும் நம்மை வழிநடத்த நாம் அனுமதித்தால், சத்துக்களுக்குப் பதில் வெறும் கதைகளையே உண்டு கொண்டிருப்போம். 

ஊரான்

Thursday, 16 April 2026

மிரள வைக்கும் ‘சிலிகா துகள்கள்’: நம் நுரையீரலில் எழும் 'ஹாலோ பிளாக்குகள்'!

முன்னுரை

கோடைக்காலம் என்றாலே வெப்பம் ஒரு பக்கம் வாட்டுகிறது என்றால், இந்த ஆண்டு 'எல்நினோ' (El Niño) வின் வருகை வேறு நம்மை அச்சுறுத்துகிறது. பசிபிக் பெருங்கடல் வெப்பமடைவதால், நிலப்பரப்பில் வெயில் அதிகரித்து மக்களின் உயிருக்கு உலை வைக்கும் என்று அபாயச் சங்கு ஊதப்படுகிறது. 


சென்ற ஆண்டு வடகிழக்குப் பருவமழை பொய்த்துப் போனதால் தற்போது ஏரி, குளங்கள் வறண்டு, ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. 
இந்தப் பருவத்தில் பெய்ய வேண்டிய கோடை மழையும் பொய்த்துப் போனால், புதிய புல்லும் முளைக்காது, இருக்கும் பயிரும் கருகிவிடும்.

இதெல்லாம் கிராமத்து மக்களின் பிரச்சினை என்று நகரவாசிகள் ஒதுங்கிவிட முடியாது. ஏனெனில், உங்கள் 'ஜன்னல்'  இடுக்குகளில் நுழைந்து உங்களைக் கபளீகரம் செய்யக் காத்திருக்கிறது ஒரு நுண்வினை எதிரி.

கண்ணுக்குத் தெரியாத கபளீகரம்

வெயிலின் கொடுமையைத் தணிக்க வீட்டுக்குள் தஞ்சம் புகலாம். ஆனால், காற்றில் கலந்து வரும் தூசு மாசுகளை யாரால் தடுக்க முடியும்? சாலையில் ஓடும் வாகனங்கள் கிளப்பும் புழுதி ஒருபுறம் என்றால், மறுபுறம் அருகிலுள்ள கல் 'குவாரி'களிலிருந்து (Stone Quarries) வெளியேறும் மிக நுண்ணிய பாறைத் துகள்கள் நம் வீடுகளை ஆக்கிரமிக்கின்றன. இது வெறும் தூசு அல்ல; நம் நுரையீரலுக்குள் புகுந்து 'ஹாலோ பிளாக்களை' உருவாக்கும் நச்சுச் துகல்கள்.

தீராத தும்மலும் நேனோ துகள்களும்

வீட்டில் யாருக்காவது தீராத தும்மலா? தும்மலுக்கு மருத்துவம் பார்ப்பதைவிட, அதன் காரணத்தைக் களைவதே நிரந்தரத் தீர்வு. 'ஜன்னல்' சட்டங்கள், 'லாஃப்ட்டுகள்', 'பீரோக்கள்' என எங்கும் படிந்துள்ள தூசைத் துடைத்துவிட்டு, ஒரு நாளைக்குப் பலமுறை தரையை ‘மாபிங்’ செய்தாலும் தும்மல் நிற்கவில்லையா?

அதிர்ச்சியான காரணம் ஒன்று இருக்கிறது. உங்கள் வீட்டிலிருந்து தொலைதூரத்தில் ஒரு கல்'குவாரி' இருந்தாலும், அங்கிருந்து பாறைகளை உடைக்கும்போது எழும் ‘நேனோ வடிவிலான சிலிகா துகள்கள்’ (Nano Particles) காற்றோடு கலந்து உங்கள் அறைக்குள் நுழைந்துவிடுகின்றன. 

ஈரத்துணியால்  தரையைத் துடைத்துவிட்டு, அந்தத் துணியை நீரில் அலசிப் பாருங்கள்; நீர் கலங்கலாக மாறும். வெறும் கையால் தரையை தடவிப் பாருங்கள். உங்கள் கைகளில் பாறைத் துகள்கள் ஒட்டியிருக்கும். இதுதான் உங்கள் தீராத தும்மலுக்கும், மூச்சுத்திணறலுக்கும் மூலக்காரணம்.

மெல்லக் கொல்லும் கொலைகாரர்கள்

கல்'குவாரி'கள் பூமித்தாயை மட்டும் சிதைக்கவில்லை; நம்மையும் சேர்த்துத்தான் மெல்லக் கொல்கின்றன. நீங்கள் எத்தனை பாதுகாப்புக் கவசங்களை அணிந்தாலும், காற்றில் மிதந்து வரும் இந்த நுண்ணிய துகள்களைக் கட்டுப்படுத்த முடியாது. இந்தக் 'குவாரி'களை நிரந்தரமாக இழுத்து மூடுவதுதான் ஒரே தீர்வு. ஆனால், அது கொள்ளையர்கள் உலாவும் இந்த நாட்டில் அவ்வளவு எளிதல்ல.

பாறைகள் முழுவதுமாக வெட்டி முடிக்கப்படும் வரை நாம் உயிரோடு இருந்தால் மட்டுமே பிழைத்திருக்க முடியும். இல்லையென்றால், நம் நுரையீரல்களில் எழுப்பப்படும் ‘ஹாலோ பிளாக்குகள்’ நம்மை எமலோகத்திற்கு இழுத்துச் செல்லும்.

இயற்கைதான் ஒரே துணை

கல்'குவாரி'கள், ஆளுங்கட்சியினருக்கு மட்டுமன்றி சர்வகட்சிப் பிரமுகர்களுக்கும் 'கரன்சிகளை' வாரிக் கொடுக்கும் ‘ஏடிஏம்’ கள். எனவே இவர்கள் யாரும் நம்மைக் காக்க வர மாட்டார்கள்.

இப்போது நம் முன்னால் இருக்கும் ஒரே நம்பிக்கை 'கோடை மழை' மட்டுமே. மழை பெய்தால் காற்றில் இருக்கும் ஈரப்பதம் (Mist/Humidity), பறந்து வரும் இந்த நுண்ணிய துகள்களைத் தடுத்து கீழே தள்ளும். காற்றின் ஈரப்பதம் மட்டுமே நம் நுரையீரலுக்குச் சற்றே இளைப்பாறுதல் தரும். 

இயற்கையின் மழை மட்டுமே இந்த நுண்துகள்களைத் தணிக்க முடியும்; வேறு எந்த சக்தியாலும் அதை முழுமையாகத் தடுக்க முடியாது.

முடிவுரை

வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையைச் சுரண்டும் கல்'குவாரி'கள், மனிதனின் சுவாசத்தைச் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. 

எப்போதோ வரும் பெருமழை நம் தாகத்தைத் தீர்க்கலாம், ஆனால் அடிக்கடி பெய்ய வேண்டிய கோடை மழை மட்டுமே நம் சுவாசத்தைக் காக்கும். 

மிரள வைக்கும் இந்த கரும்பாறை 'நேனோ வடிவிலான சிலிகா' துகள்களிடமிருந்து தப்பிக்க, ‘மேகம் கருக்காதா’ என வானத்தைப் பார்ப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை!

ஊரான்

Saturday, 11 April 2026

தேர்தல் 2026: இது ஜனநாயகத் திருவிழாவா அல்லது ஜகஜால வித்தைக்காரர்களின் மேடையா?

முன்னுரை

தமிழகத்தில் கோடை வெயில் சதத்தைத் தாண்டித் தகித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த வெப்பத்தையும் மீறி மக்களை ஒருபுறம் சிரிக்கவும் மறுபுறம் சிந்திக்கவும் வைத்துக் கொண்டிருக்கிறது தேர்தல் களம்.

ஐந்து ஆண்டுகள் பொதுமக்களின் கண்களுக்குப் புலப்படாமல் இருந்த பலர், தேர்தல் வந்தவுடன் திடீரென மக்களின் நடுவில் தோன்றுவது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அரசியல் நாடகத்தின் வழக்கமான காட்சியாக மாறிவிட்டது.


வேட்பாளர்களின் விஸ்வரூப ‘நடிப்பு’ அவதாரங்கள்

தேர்தல் வந்துவிட்டால் போதும், அதுவரை குளிரூட்டப்பட்ட அறைகளிலும் சொகுசு கார்களிலும் வலம் வந்தவர்கள் திடீரென “மண்ணின் மைந்தர்கள்” ஆக மாறிவிடுகிறார்கள். ஐந்து ஆண்டுகள் காணாமல் போனவர்கள், ஐந்து நிமிட வீடியோவுக்காக மண்ணில் இறங்கும் அதிசய காலம் இதுதான்.
  • களத்தில் இறங்கிய ‘விவசாயிகள்’: சேற்றில் இறங்கி நாற்று நடும் வேட்பாளர், அந்த நாற்றைத் தலைகீழாகப் பிடித்திருப்பது கூடத் தெரியாமல் கேமராவுக்குப் போஸ் கொடுக்கிறார்.
  • தொழிலாளர் அவதாரம்: சிமெண்ட் தொழிலாளியாக மாறி ஹாலோ பிளாக் கல் வடிப்பது, டீக்கடையில் வடை சுடுவது, காய்கறி கடையில் தராசு பிடித்து வியாபாரம் செய்வது என இவர்களின் நடிப்புக்கு எல்லையே இல்லை. துணி துவைக்கும் பெண்ணிடம் இருந்து துணியைப் பிடுங்கி, 'வாஷிங் மெஷின்' தோற்கும் அளவுக்குத் துவைத்துக் காட்டும் வேட்பாளர்களும் உண்டு.
  • அப்பளம் முதல் பிரியாணி வரை: ஒரு வேட்பாளர் அப்பளம் காய வைக்கிறார், தோசை சுடுகிறார்; மற்றொருவர் லாவகமாகப் பிரியாணி பொட்டலம் கட்டித் தருகிறார். சாலையில் செல்லும் பாட்டியின் காலில் விழுவது முதல், குழந்தைகளைத் தூக்கி வைத்துக் கொஞ்சுவது வரை இவையனைத்தும் 'பெர்ஃபார்மன்ஸ்' என்பதே அனைவருக்கும் தெரிந்த உண்மை.

சின்னம் மாறும் சித்து விளையாட்டுகள்

கூட்டணி அரசியலில் நடக்கும் குழப்பங்கள் தனி ரகம். நேற்று வரை ஒரு கட்சியின் கொடியைத் தன் வாகனத்தில் கட்டியவர், இன்று சீட் கிடைக்கவில்லை என்றதும் அந்தக் கொடியைக் கழற்றிவிட்டுப் புதிய கொடியைக் கட்டுகிறார். கொடி மாறும் வேகம் தேர்தல் காற்றின் திசையை விட வேகமாக இருக்கும். 

சில இடங்களில் உச்சகட்டக் காமெடியாக, கூட்டணி வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட சின்னத்தை மறந்துவிட்டு, தன் பழைய கட்சியின் சின்னத்திற்கோ அல்லது பக்கத்துத் தொகுதி சின்னத்திற்கோ வாக்கு சேகரிக்கும் காட்சிகளும் அரங்கேறுகின்றன.

‘பல்’ இளிக்கும் புகழுரைகள்

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்பதற்குத் தேர்தல் காலமே பெரிய சான்று. நேற்று வரை மேடைக்கு மேடை யாரைத் தரம் தாழ்ந்து விமர்சித்தார்களோ, இன்று அதே நபரை “நல்லவர், வல்லவர், ஆற்றல் மிக்கவர்” என்று பல் இளித்துக் கொண்டே புகழ்கிறார்கள். 

நேற்று விமர்சனங்கள் மழையாகப் பொழிந்த மேடைகளிலேயே இன்று புகழ்ச்சிகள் மலர்கின்றன. அரசியலில் “நினைவிழப்பு நோய்” மிக வேகமாகப் பரவும் தொற்றுநோயாகத் தோன்றுகிறது.

சட்டமன்ற உறுப்பினர்: உரிமையும் அறியாமையும்

ஒரு சட்டமன்ற உறுப்பினரின் அடிப்படை உரிமை என்ன, கடமை என்ன, ஒரு சட்டம் எப்படி உருவாகிறது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் சிலர் களத்தில் குதிக்கிறார்கள்.

“வானத்தை வில்லாக வளைப்பேன்”, “வைகையை வண்டலூருக்கு கொண்டு வருவேன்” போன்ற சாத்தியமற்ற வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. இவர்களின் பேச்சைக் கேட்கும் போது இது ஜனநாயகத் தேர்தலா அல்லது ஜகஜால வித்தைக்காரர்களின் திருவிழாவா என்ற சந்தேகம் எழுகிறது.

நரகலில் நல்லரிசி தேடும் படலம்

இந்தக் காட்சிகள் எல்லாம் வெளிப்படையாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றலாம். ஆனால் அதன் பின்னால் ஒரு கசப்பான உண்மை இருக்கிறது.

நான் மக்கள் கலை இலக்கியக் கழகத்தில் (ம.க.இ.க) முன்பு களப்பணியில் இருந்தபோது அடிக்கடி பயன்படுத்திய ஒரு வாசகம் உண்டு: 

“நரகலில் நல்லரிசி தேடுவதுதான் இந்தத் தேர்தல்.” 

இன்றும் அந்த நிலை பெரிய மாற்றமின்றித் தொடர்கிறது. இத்தனை வேஷங்களையும், பொய்களையும், அரசியல் நாடகங்களையும் தாண்டியே மக்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்ய வேண்டியிருக்கிறது.

காமெடி பீசுகளும் ஆபத்தான அரசியலும்

இந்தத் தேர்தல் காமெடிகளை நாம் சிரித்தபடியே கடந்து செல்லலாம். ஆனால் அதே நேரத்தில் சமூக சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் பின்னோக்கித் தள்ளக்கூடிய சனாதன மதவாத சக்திகள் அரசியல் களத்தில் அமைதியாக முன்னேறிக் கொண்டிருப்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. 

ஒரு வேட்பாளரின் காமெடி என்பது தனிப்பட்ட ஏமாற்றமாக முடிந்துவிடலாம். ஆனால் சனாதன சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றினால் அது மிகப்பெரும் ஆபத்தில் முடியும்.

பிழைப்புவாதிகளும், காமெடி பீசுகளும், சனாதன சக்திகளும் கோலோச்சும் இந்தத் தேர்தல் அரசியலில், நேரடியாகப் பங்கேற்காமல் இதுவரை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்த புரட்சிகர சக்திகள் இனிவரும் காலங்களிலாவது நேரடியாகக் களம் இறங்கி மக்களிடையே செல்வாக்கு செலுத்தவில்லை என்றால் இந்த அவலம் தொடரவே செய்யும்.

முடிவுரை

தேர்தல் களம் ஒரு காமெடி மேடையாக மாறியிருக்கலாம். ஆனால் அந்த மேடையில் நடக்கும் நாடகங்களைத் தாண்டியும் வாக்காளர்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கிறது. 

“நரகலில் நல்லரிசி தேடுவது” போன்ற கடினமான சூழ்நிலையிலும், சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தான சக்திகள் முன்னேறாதபடி காமெடியன்களைச் சகித்துக் கொண்டாலும், சமூக நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் ஆபத்தான சக்திகளைத் தடுத்து நிறுத்துவதுதான் இன்றைய காலத்தின் முக்கிய பொறுப்பு.

தமிழ்மணி

Thursday, 9 April 2026

தேர்தல் 2026: யாரிடம் கேட்பது? யாரை மாற்றுவது? – வாக்காளர்களின் தற்குறித்தனம்!

முன்னுரை

தேர்தல் வந்துவிட்டால் வாக்கு கேட்டு ஊருக்குள் வரும் வேட்பாளரிடம் “எங்கள் ஊருக்குச் சாக்கடை இல்லை, சாலை இல்லை, குடிநீர் இல்லை” என்று கோபப்படுவது வழக்கமாகிவிட்டது.
ஆனால், நாம் யாரிடம் இந்தக் கோரிக்கைகளை வைக்கிறோம்? அந்தப் பிரச்சினைகளுக்கு உண்மையில் யார் பொறுப்பு? என்ற அடிப்படைப் புரிதலே வாக்காளர்களிடையே குறைவாக உள்ளது. இந்தத் தெளிவின்மையே “ஒருவர் வந்துவிட்டால் எல்லாம் மாறிவிடும்” என்ற தனிமனித வழிபாட்டு அரசியலுக்கு (Cult Politics) வழிவகுக்கிறது.


அதிகாரப் பகிர்வு: யார் எதற்குப் பொறுப்பு?

மக்களின் அன்றாடத் தேவைகள் மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை யாருடைய பொறுப்பில் உள்ளன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

1. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் (ஊராட்சித் தலைவர்கள், கவுன்சிலர்கள், மேயர்கள்)

உங்கள் தெருவின் சாக்கடை, தெருவிளக்கு, உள்ளூர்ச் சாலைகள், குடிநீர் விநியோகம், குப்பை அகற்றுதல் போன்ற அடிப்படை வசதிகளுக்கான நேரடிப் பொறுப்பு இவர்களுக்கே உண்டு.

ஒரு நகராட்சித் தலைவரோ அல்லது ஊராட்சித் தலைவரோ செய்ய வேண்டிய வேலையைச் சட்டமன்ற உறுப்பினரிடம் கேட்பது, பள்ளித் தலைமையாசிரியரிடம் சென்று “என் வீட்டுக் குழாய் உடைந்துவிட்டது” என்று புகார் கூறுவதற்கு ஒப்பாகும்.

2. சட்டமன்ற உறுப்பினர் (MLA)

சட்டமன்ற உறுப்பினரின் முதன்மைப் பொறுப்பு சட்டங்களை உருவாக்குவதும், தனது தொகுதிக்குத் தேவையான பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களை—மேம்பாலங்கள், அரசு மருத்துவமனைகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் போன்றவற்றை—கொண்டு வருவதும்தான்.

இவர்கள் ஒரு ‘சூப்பர் கவுன்சிலர்’ அல்ல. சட்டமன்றத்தில் தொகுதியின் கொள்கை ரீதியான தேவைகளை முன்வைத்து விவாதிப்பதே இவர்களின் முக்கிய கடமை. ஆனால் இன்று பல இடங்களில் எம்.எல்.ஏக்கள் வெறும் ‘அன்பளிப்பு வழங்குபவர்களாகவும்’, உள்ளாட்சிப் பணிகளில் தலையிடுபவர்களாகவும் சுருங்கிவிட்டனர்.

3. அரசு அதிகாரிகள் (நிர்வாகக் கட்டமைப்பு)

திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது அரசியல்வாதிகளின் பொறுப்பு என்றால், அதை நடைமுறைப்படுத்துவது கலெக்டர் முதல் கீழ்மட்ட அதிகாரிகள் வரை உள்ள நிர்வாக அமைப்பின் பொறுப்பு.

அரசியல்வாதிகள் மாறினாலும், இந்த நிரந்தர நிர்வாகக் கட்டமைப்பு மாறாது. இந்த அதிகாரிகளிடம் இருந்து வேலை வாங்கத் தெரியாத உள்ளாட்சிப் பிரதிநிதிகளால் எந்த மாற்றமும் நிகழாது.

விஜய் போன்ற ‘ஒற்றை மனிதர்’ மாற்றத்தை நிகழ்த்திவிட முடியுமா?

“முதலமைச்சரை மாற்றிவிட்டால் போதும்; எல்லாம் தலைகீழாக மாறிவிடும்” என்பது ஒரு மாயை. விஜய் போன்ற ஒரு புதிய முகம் அரசியலுக்கு வருவது மாற்றத்திற்கான ஒரு வாய்ப்பாக நீங்கள் கருதலாம். ஆனால் ஒரே ஒரு தலைவரை மாற்றுவதால் மட்டும் அமைப்பு முழுவதும் மாறிவிடாது.

முதலமைச்சர் என்பவர் ஒரு கொள்கை வகுப்பாளர் மட்டுமே. அவருக்குக் கீழே இருக்கும் பத்தாயிரக்கணக்கான கவுன்சிலர்களும், ஊராட்சித் தலைவர்களும், இலட்சக்கணக்கான அதிகாரிகளும் ஊழலற்றவர்களாகவும் கடமை தவறாதவர்களாகவும் மாறாதவரை, எந்த ‘இரட்சகராலும்’ உங்கள் தெருச் சாலையைச் சரிசெய்துவிட முடியாது. 

முதலமைச்சரை மாற்றினால் எல்லாம் மாறிவிடும் என்று நம்புவது வாக்காளர்களின் அரசியல் அறியாமையைக் காட்டுகிறது.

அதிகாரம் என்பது ஒரு பிரமிடு போன்றது. அதன் அடிப்பகுதி (உள்ளாட்சி) வலுவாக இருந்தால் மட்டுமே உச்சியில் (முதலமைச்சர்) இருக்கும் மாற்றம் அடித்தட்டு மக்களைச் சென்றடையும்.

வாக்காளர்கள் தற்குறிகளா?

தமிழ்நாட்டு வாக்காளர்கள் உண்மையில் ‘தற்குறிகள்’ அல்ல; பல சமயங்களில் நிர்வாகத் தோல்விகளால் விரக்தியில் தள்ளப்பட்டவர்கள். கீழ்மட்ட அமைப்புகள் சரியாகச் செயல்படாதபோது, அவர்கள் தங்களின் கடைசி நம்பிக்கையாக ஒரு பெரிய தலைவரை நோக்கி பார்க்கிறார்கள்.

ஆனால் உண்மையான அரசியல் விழிப்புணர்வு என்பது:
  • உங்கள் வார்டு கவுன்சிலரை வேலை வாங்கக் கற்றுக்கொள்வது.
  • கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு கேள்வி கேட்பது.
  • அடிப்படை வசதிகளுக்குச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை (RDO, BDO, நகராட்சி ஆணையர் போன்றோர்) நேரடியாக அணுகுவது.

முடிவுரை

சாலை வசதி இல்லை என்று எம்.எல்.ஏ வேட்பாளரிடம் சண்டையிடுவது உங்கள் உரிமையாக இருக்கலாம். ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் உங்கள் வார்டு கவுன்சிலரிடம் நீங்கள் எத்தனை முறை கேள்வி கேட்டீர்கள்?

தனிமனிதர்களை மாற்றுவது மட்டுமே ஜனநாயகம் அல்ல; அதிகார அமைப்புகளைப் புரிந்து கொண்டு அவற்றைக் கண்காணிப்பதே உண்மையான ஜனநாயகம். 

முதலமைச்சர் நாற்காலியில் யார் உட்கார வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதே வேளையில், உங்கள் தெருவில் யார் வேலை செய்ய வேண்டும் என்பதையும் கண்காணிக்கும் பொறுப்பை வாக்காளர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் ஜனநாயகம் உண்மையான பலனைத் தரும்.

பொன். சேகர்
வழக்கறிஞர்

வேடன் வீசும் வலை

வேடன் வீசும் வலை

கூண்டில் இருக்கும் கிளிக்குத் தெரியும்
அது சிறை என்று.

ஆனால்
ஜாதகக் கூண்டுக்குள் இருக்கும் மனிதனுக்குத் தெரியவில்லை —
அது ஒரு கல்லறை என்று!

பச்சை நிறச் சிறகுகள் விரித்து
வானம் தொட்டுப் பறக்க வேண்டிய பறவை,
சீட்டெடுத்துக் கொடுத்துவிட்டு
ஒரு தானியத்திற்காகத் தவமிருக்கிறது.

பகுத்தறிவுச் சிறகுகள் கொண்ட மனிதனோ —
காகிதச் சிறை கட்டிக்கொண்டு
கிரகங்களுக்கு அஞ்சிக்
கண்ணுக்குத் தெரியாத வேலிக்குள்
முடங்கிக் கிடக்கிறான்.

வனத்துறையே…
கிளிக்குப் பேசத் தெரிந்திருந்தால்
அதுவே கேட்டிருக்கும்:

“என் சிறையை உடைக்க வந்த நீ,
உன் அறிவை அடைத்திருக்கும்
இந்த ஜோதிட வேடர்களை
எப்போது வேட்டையாடப் போகிறாய்?” என்று.

விதி என்பது
வேடன் வீசும் வலை.

அதை அறுக்கத் துணிந்தவன் —
பறவை!

அதில் சிக்குண்டு கிடப்பவன் —
கிளியை விட பரிதாபமான கைதி!

காலம் எனும் காட்டில்
கிரகங்கள் மரங்கள் அல்ல;
நீதான் அதன் வேர்!

வேரை மறந்துவிட்டு
வெறும் கட்டம் சொல்பவர்களிடம்
எத்தனை காலம்
உன் அறிவை அடகு வைப்பாய்?

தமிழ்மணி

Wednesday, 1 April 2026

From 'Outsider' to 'Legal Daughter': Resolving the Paradox of the Daughter-in-Law

The recent contradictory stance of the Allahabad High Court (in cases like Akul Rastogi) has reignited a critical debate on the status of women within the Indian family hierarchy.

On one hand, the judiciary affirms that a daughter-in-law holds no legal obligation to maintain her elderly parents-in-law. 

On the other, it mandates that a father-in-law must provide for his widowed daughter-in-law. 

These polar opposite rulings expose a deep-seated legal and social crisis that we must urgently address.


The Mirage of 'Female-Centric' Laws

There is a prevailing, somewhat naive, narrative that modern Indian laws are heavily biased in favor of women. This perception is often fuelled by sensationalized reports of the misuse of dowry or maintenance laws.

However, a closer look reveals a different reality. While the law provides for a woman’s survival (maintenance), it rarely grants her substance (authority or property). When a woman must plead in court for basic sustenance from her husband’s family, it is not a "privilege"—it is an admission that her fundamental rights to equality and dignity have been denied.

The Gold is Accepted, the Woman is Not

In our society, the dowry and gold a woman brings into her marital home are embraced with open arms. Yet, the woman herself is often denied the status of a blood relation.

The common refrain to "treat a daughter-in-law like a daughter" remains hollow rhetoric. When it comes to property rights and decision-making, she is still treated as an "outsider." This is precisely why the court continues to view her through a transactional lens: granting her the "right to be maintained" as a third party, while absolving her of the "duty to maintain" as a family member.

Restitution, Not 'Double Benefit'

Critics often argue that receiving property rights from both her biological parents and her marital family constitutes a "double benefit." We must refute this using the principle of Compensatory Justice.

For centuries, women have been systematically excluded from economic power. Much like the constitutional reservations designed to uplift socially marginalized groups, a specific legal framework for women is not an "extra perk"—it is an essential tool to reclaim stolen rights and balance the scales of patriarchy.

Power masquerading as Fear

A recurring defensive argument asks: "If a woman is given full rights and then leaves the family, isn't that a massive loss?" This is not a fear of the woman; it is an attachment to power. Why is this "loss" never feared when a son inherits property? It is because we still view a woman as an "object" to be guarded rather than a "subject" with agency. When we respect a woman as a human being and a partner, the concept of "loss" vanishes.

A Roadmap for Legal Transformation

We cannot wait for social attitudes to evolve organically. The law must lead the way:

1.Legal Status: Upon marriage, a woman should legally attain the status of a "Daughter by Law" in her new family, moving beyond the traditional, distant label of "daughter-in-law."

2.Reciprocal Rights and Duties: Once she is legally recognized as a daughter, the responsibility to care for her parents-in-law will naturally shift from a moral choice to a legal duty. Where there is a right to the home, there is a duty to the family.

3.Legislative Clarity: A unified legal definition of a woman’s status in her marital home is necessary to prevent inconsistent judicial interpretations.

Conclusion

Today, the law treats a woman in her marital home as a "protected tenant"—she may have a roof over her head, but she has no deed to the house. True social change will only occur when the law recognizes the daughter-in-law as a true daughter.

The culture of valuing a woman for the gold she brings must be replaced by a legal framework that values her as an equal member of the family. Only then will we move from superficial maintenance to genuine empowerment.

P.Sekar
Advocate

பிறந்த வீட்டின் மகள், புகுந்த வீட்டிலும் மகளாக முடியுமா? ஓர் அலசல்!

சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு (அகுல் ரஸ்தோகி வழக்கு), இந்தியக் குடும்ப அமைப்பில் ஒரு பெண்ணின் நிலையை மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது. 

ஒருபுறம், வயதான மாமனார் - மாமியாரைப் பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வக் கடமை மருமகளுக்கு இல்லை என்று நீதிமன்றம் கூறுகிறது. 

மறுபுறம், கணவன் இறந்த பிறகு மருமகளுக்குப் பராமரிப்புத் தொகை வழங்க வேண்டிய கடமை மாமனாருக்கு உண்டு என்கிறது. 

இந்த இரு துருவத் தீர்ப்புகளுக்குப் பின்னால் இருக்கும் சட்டச் சிக்கல்களையும், சமூக யதார்த்தங்களையும் நாம் ஆழமாக விவாதிக்க வேண்டியுள்ளது.


சட்டங்கள் பெண்களுக்குச் சாதகமானவையா? - ஒரு மாயை

இன்றைய சட்டங்கள் அனைத்தும் பெண்களுக்குச் சாதகமாகவே இருப்பதாகப் பலரும் மேலோட்டமாக, ஒருவித அப்பாவித்தனத்தோடு கருதுகிறார்கள். இதற்குக் காரணம், வரதட்சணைக் கொடுமை அல்லது பராமரிப்புத் தொகை தொடர்பான சில சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகச் சித்திரிக்கப்படும் ஒரு சில செய்திகளே.

ஆனால், ஆழமாகப் பார்த்தால் உண்மை வேறானது. சட்டம் ஒரு பெண்ணுக்குப் பராமரிப்புத் தொகைக்கு (Maintenance) வழிவகை செய்கிறதே தவிர, அந்த வீட்டின் 'அதிகாரத்தில்' அல்லது 'சொத்தில்' அவளுக்குச் சமமான இடத்தைத் தருவதில்லை. ஒரு பெண் தன் அடிப்படைத் தேவைகளுக்காகக் கணவனிடமோ அல்லது மாமனாரிடமோ நீதிமன்றத்தில் மண்டியிட்டுப் போராடிப் பெறுவது 'சலுகை' அல்ல; அது அவளது உரிமை மறுக்கப்பட்டதன் அடையாளம்.

தங்கத்தை ஏற்கும் குடும்பம், பெண்ணை ஏற்பதில்லை

ஒரு பெண் புகுந்த வீட்டிற்கு வரும்போது, அவளோடு வரும் சீதனத்தையும், தங்கத்தையும் வாரி எடுத்துக் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அதே வீட்டில் அந்தப் பெண்ணைத் தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக ஏற்காமல் பங்கமாக நடத்துகிறார்கள்.

சமூக ரீதியாக "மருமகளை மகளாகப் பாருங்கள்" என்ற அறைகூவல் வெறும் மேடைப் பேச்சாகவே இருக்கிறது. நடைமுறையில் சொத்துரிமை மற்றும் அதிகாரப் பகிர்வு என்று வரும்போது அந்தப் பெண் 'அந்நியமாகவே' (Outsider) நடத்தப்படுகிறாள். இதனால்தான் நீதிமன்றமும் அவளை ஒரு 'வெளி ஆளாகக்' கருதி, "உனக்குக் கடமை இல்லை, ஆனால் உரிமை உண்டு" என்று தீர்ப்பளிக்கிறது.

இரட்டைப் பலனா அல்லது ஈடா?

பிறந்த வீட்டில் பெற்றோரிடமிருந்து சொத்துரிமை பெறுவது, புகுந்த வீட்டில் மாமனார் வழியே உரிமை கோருவது என்பது ஒரு பெண்ணுக்கு 'இரட்டைப் பலன்' தருவது போல் ஒரு பிம்பம் உண்டு. ஆனால், இதை நாம் ஒரு 'ஈடுசெய்தல்' (Compensatory justice) என்ற கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும்.

காலம் காலமாகப் பெண் உரிமைகள் மறுக்கப்பட்டவளாகவும், ஒடுக்கப்பட்டவளாகவும்தான் நடத்தப்பட்டு வருகிறாள். இதன் விளைவுதான் ஆணாதிக்கம் மற்றும் பெண் அடிமைத்தனம். 

எப்படி கல்வி மறுக்கப்பட்டும் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்டும் கிடக்கும் மக்களுக்குப் பொதுப்பட்டியலிலும், தனியான இட ஒதுக்கீட்டிலும் முன்னுரிமை கொடுத்து அவர்களைக் கைதூக்கி விடச் சட்டங்கள் இருக்கிறதோ, அதுபோன்றதொரு சிறப்பு ஏற்பாடு சட்டரீதியாகப் பெண்களுக்குச் செய்யப்பட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்பதற்கு இத்தகையக் 'கூடுதல் பாதுகாப்பு' அவசியமாகிறது.

அச்சம் என்பது அதிகாரப் பற்றே!

"ஒரு பெண்ணுக்கு எல்லா உரிமைகளையும் கொடுத்துவிட்டு, அவள் வேறொருவருடன் சென்றுவிட்டால் அது குடும்பத்திற்கு மாபெரும் இழப்புதானே?" என்ற கேள்வி எழக்கூடும். இது பல நூற்றாண்டுகளாகப் பெண்களைச் சொத்துரிமையிலிருந்தும், குடும்ப அதிகாரத்திலிருந்தும் விலக்கி வைப்பதற்குச் சொல்லப்படும் ஒரு தற்காப்பு வாதம்.

பெண்ணுக்கு உரிமை கொடுத்தால் அவள் குடும்பத்தை விட்டுச் சென்றுவிடுவாள் என்ற இந்த அச்சம், உண்மையில் பெண்ணின் மீதுள்ள பயம் அல்ல; அது குடும்பத் தலைவர்களின் 'அதிகாரப் பற்று'. 

ஒரு மகனுக்கு உரிமை கொடுக்கும்போது வராத இந்த அச்சம், மருமகளுக்குக் கொடுக்கும்போது மட்டும் ஏன் வருகிறது? ஏனென்றால், இன்றும் நாம் பெண்ணை ஒரு குடும்பத்தின் 'உறுப்பினராகப்' பார்க்காமல், பாதுகாத்து வைக்க வேண்டிய ஒரு 'பொருளாகவே' பார்க்கிறோம். 

பெண்ணை மனிதனாக மதிக்கத் தொடங்கினால், 'இழப்பு' என்ற சொல்லுக்கே அங்கே இடமிருக்காது.

சட்டமே தீர்வாக வேண்டும்:
மாற்றத்திற்கான பரிந்துரை

மருமகளை மகளாகப் பார்க்கும் சமூகம் இப்போதைக்குச் சாத்தியமில்லை என்பது கசப்பான உண்மை. சமூக அமைப்பு தானாக மாறும் வரை நாம் காத்திருக்க முடியாது.

1.சட்டப்பூர்வ அங்கீகாரம்: ஒரு பெண் திருமணமானவுடன், அந்தப் புதிய குடும்பத்தின் 'சட்டப்பூர்வ மகள்' என்ற அங்கீகாரத்தை அவர் பெற வேண்டும். இது தார்மீகக் கடமையாக இல்லாமல் சட்டக் கடமையாக ஆக்கப்பட வேண்டும்.

2.சமமான கடமைகளும் உரிமைகளும்: இவ்வாறு சட்டம் தெளிவாக இருந்தால், மாமனார் - மாமியாரைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மருமகளுக்குத் தவிர்க்க முடியாத சட்டக் கடமையாக மாறும். உரிமை இருக்கும் இடத்தில் கடமையும் தானாக வந்து சேரும்.

3.முரண்பாடுகளைத் தவிர்த்தல்: சட்டம் இவ்வாறு தெளிவாக வரையறுக்கப்பட்டால் மட்டுமே, நீதிமன்றங்கள் வெவ்வேறு வழக்குகளில் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்குவதைத் தடுக்க முடியும்.

முடிவுரை

சட்டம் பெண்களுக்குச் சாதகமானது என்பது ஒரு மாயை; அது பெண்களைப் புகுந்த வீட்டில் 'வாடகைக்கு இருப்பவர்களாகவே' வைத்திருக்கிறது. 

வாடகைதாரருக்குச் சில பாதுகாப்புகள் இருக்கலாம், ஆனால் அந்த வீட்டின் மீது அவருக்கு அதிகாரம் இருக்காது.
அந்த அதிகாரம் வேண்டும் எனில், சட்டம் மருமகளை 'மகளாக' அங்கீகரிக்க வேண்டும். 

பெற்றோரின் சொத்தில் உரிமையும், புகுந்த வீட்டில் குடும்ப அங்கமாக வாழும் உரிமையும் சட்டபூர்வமாக்கப்பட வேண்டும். 

தங்கத்திற்காகப் பெண்ணை ஏற்கும் கலாச்சாரம் ஒழிந்து, ஒரு குடும்பத்தின் முழுமையான அங்கமாகப் பெண்ணை ஏற்கும் சட்டம் மலர வேண்டும். அதுவே உண்மையான சமூக மாற்றம்.

பொன்.சேகர்
வழக்கறிஞர்

தொடர்புடைய பதிவு