Monday, 13 July 2026

மறையும் முன்பே தணிந்த அக்கினி!

இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றில் 1967 நக்சல்பாரி பேரெழுச்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்க வைத்ததோடு, அரசியல் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களைக் காந்தமாய் ஈர்த்தது. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் தொடக்க காலப் பாதையிலிருந்து, 1980-களின் தொடக்கத்தில் மக்களைத் திரட்டும் புதிய பாதையை நோக்கி நக்சல்பாரி இயக்கம் பயணித்தது. அந்த வரலாற்றுப் பின்னணியில் உருவானதுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக).

அக்காலத்தில், தமிழ்நாட்டின் மேடைகள் கம்பன் கழக இலக்கியச் சொற்பொழிவுகளாலும், இலக்கற்ற பட்டிமன்ற அரட்டைகளாலும், வழக்கமான பகுத்தறிவு மற்றும் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரங்களாலும் மட்டுமே சூழப்பட்டிருந்தன. அந்தச் சூழலில், “புதிய ஜனநாயகப் புரட்சி” எனும் மாற்று அரசியலை அதிரடியாக முன்வைத்து, மேடைகளில் நக்சல்பாரி அரசியலை முழங்கியவர்கள் மகஇக தோழர்கள். கடந்து செல்வோரையும் காதுகொடுத்துக் கேட்க வைத்து, கட்டிப்போடும் ஆற்றல் கொண்டதாக மகஇக-வின் மேடைப் பேச்சுகளும் பாடல்களும் விளங்கிய காலம் அது.

தோழர் கதிரவன்

தோழர்கள் காளியப்பன், சீனிவாசன், தமிழ்மணி, கதிரவன் என மகஇக-வின் மேடைப் பேச்சாளர்கள் புரட்சிகர மேடைப்பேச்சு வரலாற்றில் ஒரு புதிய தடத்தைப் பதித்தனர். தோழர் காளியப்பனின் உரை மடைதிறந்த வெள்ளமென ஓடும்; தமிழ்மணியும் சீனிவாசனும் மேடைகளில் அதிரடி காட்டுவர்; அதற்குப் பிறகு தோழர் மருதையனின் மேடைப்பேச்சு புதிய மைல் கல்லைத் தொட்டது.

இந்த வரிசையில், மாற்று அரசியலை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மதுரையைச் சேர்ந்த  தோழர் கதிரவன் @ அக்கினியின் பங்கு அளப்பரியது.
தோழர் கதிரவனின் உரை படபடக்கும் வெடிகளைப் போல வெடித்துச் சிதறுவது மட்டுமல்ல, மக்களின் நெஞ்சங்களை உருக்கும் ஆற்றல் வாய்ந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில், வரதட்சணைக் கொடுமைகளை விவரித்து அவர் ஆற்றிய உரையைக் கேட்டு, அங்கிருந்த முதியோர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவெனக் கொட்டியது.

"போராட்டத்திற்கு அவர் மேடையில் அறைகூவல் விடுத்தால், தோழர்கள் அணிஅணியாய்த் திரளும் அசாத்திய வலிமை அவரது பேச்சிற்கு இருந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த  தோழர் கதிரவனின் தலைமையில்தான் எனது திருமணமும் நடைபெற்றது. 

தொடக்க காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் களப்பணியாளராகவும், மேனாள் மாநில செயலாளராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர் அவர்.

சிறு சிறு செயல்களைக்கூட விளம்பரமாக்கி முகநூலில் புகழ் தேடும் சமூக ஊடகக் காலம் இது. ஆனால் அன்றைய தோழர்களின் அளப்பரிய உரைகள் கேட்போர் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை முறைப்படி பதிவு செய்யப்படாமலேயே கால ஓட்டத்தில் மறைந்து போனது பெருஞ்சோகம்.

2020-ஆம் ஆண்டு வாக்கில் அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிக்கலால், மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு இருந்த உறவை துண்டித்துக் கொண்டு ஒரு சிறு குழுவினரோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், அன்றிலிருந்து அமைப்பில் அவருடைய செயல்பாடுகள் முடங்கிப் போயின. கதிரவன் தனது மகஇக அடையாளத்தையும் இழந்து,  மறையும் முன்பே தணிந்து போனதால், அவரோடு எமக்கு இருந்த தோழமை உறவும் அறுந்துபோனது.

அரசியல் ரீதியாக எமது உறவுகள் அறுந்துபோனாலும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவில் அவரோடு இணைந்து பயணித்த 20 ஆண்டு கால நினைவுகள் மட்டும் என்றும் எம்மை விட்டு நீங்காது.

தோழர் கதிரவன் அவர்களுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்மணி

Thursday, 9 July 2026

நோபல் பரிசும் ஏகாதசி விரதமும்: அறிவியல் உண்மையா? ஆன்மீகப் புனைவா?

சமூக ஊடகங்களில் சமீபகாலமாக ஒரு பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஏதேனும் ஒரு புதிய அறிவியல் உண்மையைக் கண்டுபிடித்து அதற்கு நோபல் பரிசு வழங்கினால் போதும்; உடனே சிலர் கிளம்பி விடுவார்கள்—"இதைத்தான் எங்கள் சனாதன தர்மம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டது" என்று வக்காலத்து வாங்க.


முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்வோம். ஏகாதசி விரதம் இருப்பது தவறு என்று யாரும் கூறவில்லை. மத நம்பிக்கையின் அடிப்படையிலோ, ஆன்மீக ஒழுக்கத்தின் அடிப்படையிலோ அல்லது உடல்நலக் காரணங்களுக்காகவோ ஒருவர் விரதம் இருப்பது அவருடைய தனிப்பட்ட உரிமை. கேள்வி அதுவல்ல.

இன்று நவீன அறிவியல் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு உண்மையையும், "இதைத்தான் எங்கள் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்துவிட்டார்கள்" என்று கூறுவது அறிவியல் அணுகுமுறையா என்பதுதான் கேள்வி.

ஒரு பழக்கத்தில் சில உடல்நல நன்மைகள் இருப்பது ஒரு விஷயம்; அந்தப் பழக்கத்தை உருவாக்கியவர்கள் நவீன உயிரியல் அறிவியலை முழுமையாக அறிந்திருந்தார்கள் என்று கூறுவது வேறு விஷயம். இந்த இரண்டையும் குழப்பக் கூடாது.

இதன் பின்னணியில் உள்ள உண்மைகளை பகுத்தறிவுப் பார்வையோடு அணுக வேண்டியது அவசியம்.

1.யோஷினோரி ஓசுமியின் கண்டுபிடிப்பு என்ன? (ஆட்டோஃபேஜி என்றால் என்ன?)

2016-ல் ஜப்பான் விஞ்ஞானி Yoshinori Ohsumi நோபல் பரிசு பெற்றது உண்மைதான். ஆனால் அவர் கண்டுபிடித்த "ஆட்டோஃபேஜி" (Autophagy) என்பது நீங்கள் நினைப்பது போல மனிதர்கள் "ஏகாதசி விரதம்" இருப்பதைக் குறிப்பது அல்ல.

அவர் 'ஈஸ்ட்' (Yeast) எனப்படும் ஒருசெல் பூஞ்சை உயிரினங்களின் செல்களை ஆராய்ந்து, செல்லுக்குள் இருக்கும் கழிவுகள் எவ்வாறு மறுசுழற்சி செய்யப்படுகின்றன என்ற உயிரியல் செயல்முறையை விளக்கினார். இதற்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

உண்ணாவிரதம் அல்லது உணவுக் கட்டுப்பாடு சில சூழல்களில் ஆட்டோஃபேஜியைத் தூண்டக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால் அதற்கும் பதினோராவது திதியான "ஏகாதசி"க்கும் நேரடியான அறிவியல் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இல்லை.

வாரத்தில் ஒருநாள் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் உணவைக் குறைத்துக் கொள்வது உடலுக்கு நன்மை தரலாம் என்பது ஒரு பொதுவான மருத்துவக் கருத்து. இதை உலகின் பல்வேறு சமூகங்களும், பல மதங்களும், பல்வேறு வடிவங்களில் பின்பற்றியுள்ளன. எனவே இதை ஒரு குறிப்பிட்ட மதத்தின் தனிப்பட்ட அறிவியல் சாதனையாகக் காட்டுவது தவறான அணுகுமுறையாகும்.

2. வளிமண்டல அழுத்தக் கட்டுக்கதை

ஏகாதசி அன்று பூமியின் வளிமண்டல அழுத்தம் மிகக் குறைவாக இருக்கும் என்றும், அதனால் அன்றைய தினம் உணவு உட்கொள்வது செரிமானக் கோளாறுகளை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுவது அறிவியல் ஆதாரமற்ற கூற்றாகும்.

பூமியின் வளிமண்டல அழுத்தம் என்பது அந்தந்தப் பகுதியின் காலநிலை, வெப்பநிலை, காற்றழுத்த மாறுபாடுகள் மற்றும் புவியியல் அமைப்புகளைப் பொறுத்து மாறுகிறது. அது ஏகாதசி திதியோடு தொடர்புடையது என்பதற்கான எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை.

நிலவின் ஈர்ப்பு விசை கடல் அலைகளில் தாக்கத்தை ஏற்படுத்துவது உண்மைதான். ஆனால் ஏகாதசி திதிக்கும் மனிதர்களின் செரிமானக் கோளாறுகளுக்கும் இடையே காரண-காரியத் தொடர்பு இருப்பதாக அறிவியல் நிரூபிக்கவில்லை.

வானியல் (Astronomy) என்ற பெயரில் ஜோதிடக் கருத்துக்களை அறிவியல் உண்மைகளாகக் காட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

3. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித அறிவு எங்கு இருந்தது?

"பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் முன்னோர்கள் ஆட்டோஃபேஜி மற்றும் செல் சுழற்சியைத் துல்லியமாக அறிந்திருந்தார்கள்" என்று கூறுவது வரலாற்று ரீதியாக நிலைக்க முடியாத வாதமாகும்.

மனித குல வரலாற்றில், செல்களின் இருப்பு பற்றிய அறிவே மிகவும் பிற்காலத்தில் உருவானது. 17-ஆம் நூற்றாண்டில் Robert Hooke நுண்ணோக்கி வழியாக செல்களைப் பார்வையிட்ட பிறகுதான் "செல்" என்ற உயிரியல் கருத்து அறிவியல் உலகில் தெளிவாக அறியப்பட்டது.

கத்தி, கோடாரி போன்ற அடிப்படை கருவிகளைக் கண்டறிவதற்கே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் எடுத்த மனித சமூகம், செல்லுக்குள் நடைபெறும் மூலக்கூறு அளவிலான செயல்முறைகளை அறிவியல் ரீதியாக அறிந்திருந்தது என்று கூறுவது ஆதாரமற்ற மிகைப்படுத்தலாகும்.

அக்கால மனிதர்கள் தங்களது அனுபவங்களின் அடிப்படையில் சில பழக்கவழக்கங்களை உருவாக்கியிருக்கலாம். "தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருந்தால் உடலுக்கு சிரமம் ஏற்படுகிறது; சில நேரங்களில் உணவைக் கட்டுப்படுத்தினால் உடல் லேசாக இருக்கிறது" போன்ற அனுபவ அறிவுகள் அவர்களிடம் இருந்திருக்கலாம்.

அதில் எந்த மறுப்பும் இல்லை.
ஆனால் அந்த அனுபவ அறிவை, நவீன உயிரியல் அறிவியலுக்கு இணையான அறிவாக மாற்றிக் காட்டுவது வரலாற்றையும் அறிவியலையும் குழப்புவதாகும்.

4.அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பழைய நம்பிக்கைகளின் மீது ஏன் பொருத்திப் பார்க்க வேண்டும்?

இது ஒரு முக்கியமான உளவியல் மற்றும் அரசியல் போக்காகும்.
இன்றைய அறிவியல் உலகில் ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகள் பல தசாப்தங்களாக ஆய்வகங்களில் உழைத்து கண்டுபிடிக்கும் உண்மைகளை, தங்களின் பழைமைவாத நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.

அப்படியானால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் உண்மைகள் அனைத்தும் தெரிந்திருந்தன என்றால்:
  • ஏன் காலரா, அம்மை, பிளேக் போன்ற நோய்கள் வந்தபோது லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தார்கள்?
  • ஏன் தடுப்பூசிகள், கிருமிக் கோட்பாடு, பென்சிலின் போன்ற மருத்துவ முன்னேற்றங்கள் நவீன அறிவியல் வளர்ச்சிக்குப் பிறகுதான் உருவாகின?
  • ஏன் மனிதகுலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நோய்களுடன் போராட வேண்டியிருந்தது?
உண்மை என்னவென்றால், பழங்கால வழக்கங்களில் இருந்த சில எதேச்சையான நன்மைகளை எடுத்துக்கொண்டு, அவற்றுக்கு இக்கால அறிவியல் சாயம் பூசி, பழைமைவாத நம்பிக்கைகளுக்கு புதிய நியாயங்களை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

முடிவுரை: வரலாற்றை வரலாற்றுப் பார்வையில் அணுகுவோம்

கடந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குத் தெரிந்த இயற்கை அறிவின் அடிப்படையில் சில பழக்கவழக்கங்களை உருவாக்கினர். அறிவியல் வளராத அக்காலத்தில், சடங்குகளும் மத நம்பிக்கைகளும் மட்டுமே அந்தப் பழக்கங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஊடகங்களாக இருந்தன.
அந்தப் பழக்கங்களில் சில உடல்நல நன்மைகள் இருந்திருக்கலாம். ஆனால் அதனால் அவற்றை உருவாக்கியவர்கள் நவீன உயிரியல், மருத்துவம் அல்லது மூலக்கூறு அறிவியலை அறிந்திருந்தார்கள் என்று முடிவு செய்ய முடியாது.

கடந்த கால நம்பிக்கைகளை வரலாறாகப் புரிந்துகொள்ள வேண்டும். இன்றைய அறிவியலை அறிவியல் முறையின் அடிப்படையில் மதிப்பிட வேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளை மத நம்பிக்கைகளுக்கான ஆதாரங்களாகவும், மத நம்பிக்கைகளை அறிவியல் உண்மைகளாகவும் மாற்ற முயலும் போக்குகளை விமர்சனப் பார்வையோடு அணுக வேண்டும்.

அறிவியலை அறிவியலாகவும், வரலாற்றை வரலாறாகவும் புரிந்துகொள்வதே ஒரு முற்போக்கான சமூகத்தின் அடையாளமாகும்.

— ஊரான்


Wednesday, 8 July 2026

அமைச்சர் கீர்த்தனாவின் ‘ரீல்ஸ்’ அரசியலும் அரசுப் பள்ளி மாணவர்களின் மரியாதையும்

பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவைச் சோதிக்கிறேன் என்ற பெயரில், அரசுப் பள்ளி மாணவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் காணொளிகள் வெளியிடுவது கல்வி மீதான அக்கறையின் வெளிப்பாடு அல்ல; அது அதிகார மனோபாவத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.

அமைச்சர் கீர்த்தனா

ஒரு அமைச்சர் மாணவர்களிடம் கேள்வி கேட்கலாம். அவர்களின் கற்றல் நிலையை அறியலாம். ஆனால் அதனை சமூக ஊடகக் காட்சிப் பொருளாக மாற்றி, மாணவர்களின் தடுமாற்றங்களை “ரீல்ஸ்” உள்ளடக்கமாகப் பரப்புவது கல்வித் தரத்தை உயர்த்தாது. மாறாக, மாணவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.

மாணவர்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் பருவத்தில் உள்ளவர்கள். அவர்களிடம் குறைகள் இருப்பது இயல்பானது. ஆனால் ஒரு அரசுப் பிரதிநிதியின் கடமை, அந்தக் குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவது அல்ல; அவற்றைக் களைவதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதுதான்.

அரசுப் பள்ளிகளை இகழ்வது என்பது வெறும் மாணவர்களை இகழ்வதல்ல. பல தலைமுறைகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் அறிவொளி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியர்களின் உழைப்பையும் அவமதிப்பதாகும்.

நானே மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய கிராம அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்றவன். எழுத்தறிவு குறைந்த சமூகச் சூழலில் இருந்த என்னை எழுத்துலகிற்கும் அறிவுலகிற்கும் அழைத்துச் சென்றது அரசு பள்ளி ஆசிரியர்கள்தான். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும்தான் என்னை தொழில்நுட்பக் கல்விக்கும், சட்டக் கல்விக்கும், உயர்கல்விக்கும் இட்டுச் சென்றது.

இது என்னுடைய கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கதையும் இதுதான். அவர்களில் பெரும்பாலோர் அரசு பள்ளிகளின் பிள்ளைகள்.

நாம் சாதனை மனிதர்களைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் அமைதியாகத் தங்கள் துறைகளில் பணியாற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நின்றிருக்கும் எண்ணற்ற அறிவாளிகளும் அரசு பள்ளிகளில் உருவானவர்கள்தான்.

உண்மையான கல்வி என்பது ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசுவதால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அது சிந்திக்கும் திறன், மனிதநேயம், நாவடக்கம், பணிவு மற்றும் பிறரை மதிக்கும் பண்புகளால் அளவிடப்படுகிறது.

பதவி கிடைத்தவுடன் மாணவர்களைச் சோதித்து 'ரீல்ஸ்' எடுப்பது எளிது. ஆனால் அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவது, நூலகங்களையும் ஆய்வகங்களையும் வலுப்படுத்துவது, மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்துவது ஆகியவையே ஒரு அமைச்சரின் உண்மையான சாதனைகளாக இருக்க வேண்டும்.

மாணவர்களின் அறியாமையை வெளிக்காட்டுவது பெருமையல்ல; அவர்களின் அறிவை வளர்ப்பதுதான் கல்வியின் நோக்கம்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மரியாதையையும், ஆசிரியர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை. கல்வி என்பது காட்சிக்கான பொருள் அல்ல; எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு.

மாணவர்களை அவமானப்படுத்தும் 'ரீல்ஸ்' அரசியலை விட, மாணவர்களை முன்னேற்றும் கல்வி அரசியலே தமிழ்நாட்டிற்குத் தேவை.

பொன். சேகர், B.E., M.L., M.Phil.,
வழக்கறிஞர்

Tuesday, 30 June 2026

திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு: ஆன்மீகமா, வணிகமா?

அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான 'செய்திக்கதிர்' அறிவிப்புப் படம் ஒன்று ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்வேறு சேவைகள் மற்றும் சிறப்புத் தரிசனங்களுக்கான கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்த கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.

பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஜூலை 7ஆம் தேதிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு

அறிவிப்பில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி: சண்முகார்ச்சனை ₹5,000-லிருந்து ₹30,000 ஆகவும், மூலவர் அபிஷேகம் ₹1,500-லிருந்து ₹10,000 ஆகவும், தங்கரத உலா ₹2,500-லிருந்து ₹5,000 ஆகவும், ஒன்பது கால பூஜை ₹1,500-லிருந்து ₹6,500 ஆகவும், சாதாரண நாள் அபிஷேக தரிசனம் ₹500-லிருந்து ₹2,500 ஆகவும், சந்தனக்காப்பு ₹100-லிருந்து ₹1,000 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சில சேவைகளில் ஐந்து மடங்கு, ஆறு மடங்கு, ஏழு மடங்கு என உயர்வுகள் முன்மொழியப்பட்டிருப்பது இயல்பாகவே பல கேள்விகளை எழுப்புகிறது.


பக்தியின் நுகர்வுமயமாக்கல்: ஒரு கிராம்சியப் பார்வை

இந்த அறிவிப்பு ஒரு நண்பர்கள் குழுவில் பகிரப்பட்டபோது நடந்த விவாதங்களை இங்கே முறைப்படுத்தி முன்வைக்கிறேன், ஏனெனில் அவை இந்தக் கட்டண உயர்வை வெறும் நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக்குகின்றன.

கிராம்சி கூறும் "பண்பாட்டு மேலாதிக்கம்" என்ற கோணத்தில் பார்த்தால், மக்களின் பக்தியும் ஆன்மீகத் தேவைகளும் படிப்படியாக ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்படுகின்றன. "அதிகக் கட்டணம் செலுத்தினால் சிறப்புத் தரிசனம்", "பெரிய காணிக்கை செலுத்தினால் அதிகப் புண்ணியம்" என்ற மனநிலை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு காலத்தில் அனைவருக்கும் பொதுவான ஆன்மீக அனுபவமாக இருந்த கோயில் வழிபாடு, இன்று பல அடுக்குகளைக் கொண்ட நுகர்வுச் சந்தையாக மாறுகிறது. 

பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு விரைவான தரிசனம், தனிப்பட்ட பூஜை கிடைக்க, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நீண்ட வரிசைகளில் மட்டுமே நிறுத்தப்படுகின்றனர். இவ்வாறு பக்திகூட ஒரு சந்தைப் பொருளாக மாறும்போது, "இறைவனிடம் அனைவரும் சமம்" என்ற பாரம்பரியக் கருத்தே நடைமுறையில் கேள்விக்குறியாகிறது.
இந்தக் கோட்பாட்டுப் பின்னணியில்தான், என் நண்பர்கள் குழுவில் எழுந்த கேள்விகள் பொருள் கொள்கின்றன.

நடுத்தர வர்க்கத்தின் ஏமாற்றமும் "A-Class" ஆன்மீகமும்

ஒரு நண்பர் பகிர்ந்த அனுபவம் இங்கே குறிப்பிடத்தக்கது: சண்முக அர்ச்சனையில் பன்னிரண்டு முறை பங்கேற்று, ₹2,000 முதல் ₹2,500 வரை செலுத்தி அந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க முடிந்திருக்கிறது. ஆனால் அதே சேவைக்கான கட்டணம் ₹30,000 ஆக உயர்த்தப்படும்போது, அது பக்தியைப் பொருளாதாரத் தகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தும் நடைமுறையாக மாறுகிறது.

ஒரு நண்பர் இதை "ABC analysis" என்ற வணிக சொல்லாடலுடன் ஒப்பிட்டார்: C கட்டணம் என்றால் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இருக்கும்; ஆனால் இந்த உயர்வுக்குப் பின் A வகை பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுள் சென்றடையக்கூடியவராக மாறுகிறார். பணம் உள்ளவர்களுக்கு விரைவான அணுகல், பிரத்யேக சேவை; மற்றவர்களுக்கு நீண்ட வரிசை — இது ஆன்மீக ஜனநாயகமா அல்லது பொருளாதார அடிப்படையிலான பிரிவினையா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.

நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையும் ஆலயத்தின் நோக்கமும்

விவாதத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்வி இதுவே: ஆலயம் என்பது வியாபார நோக்கில் கட்டப்பட்டதல்ல என்றும், கோவில் உண்டியல் மற்றும் சொத்துக்களில் இருந்து வரும் வருமானமே பராமரிப்புச் செலவை விட ஏற்கனவே அதிகமாக இருக்கிறது என்றும் ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார். அப்படியிருக்க, இவ்வளவு பன்மடங்கு உயர்வு ஏன் தேவைப்படுகிறது?

சண்முகார்ச்சனை தினமும் இரண்டு முறை நடைபெறுவதால், ஆண்டு வருமானம் தோராயமாக ₹36.5 லட்சத்திலிருந்து ₹2.19 கோடியாக உயரக்கூடும் என்று ஒரு நண்பர் கணக்கிட்டார். இந்த வருமானம் எந்தத் தேவைக்காக, எந்தத் திட்டத்திற்காக என்பதை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டாமா? "ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்" என்ற அறிவிப்பு ஜனநாயக நடைமுறையாகத் தோன்றலாம்; ஆனால் எத்தனை ஆட்சேபனைகள் வந்தால் இந்த முடிவு திரும்பப் பெறப்படும், மக்களின் கருத்துக்கு நடைமுறையில் என்ன மதிப்பு அளிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை. கணக்கு வழக்குகளைத் தெரிவித்து, காரணங்களை நியாயப்படுத்தி நிர்வாகம் அறிவித்தால் மட்டுமே இது ஏற்புடையதாக இருக்கும் என்ற கருத்தும் விவாதத்தில் முன்வைக்கப்பட்டது.

வரிசையிலும் நுழையும் ஊழல்

கட்டண உயர்வு ஒரு வகையான ஊழலாக இருந்தாலும், இன்னொரு வடிவிலும் இது ஏற்கனவே நிலவுகிறது என்று ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார்: வரிசையில் நிற்காமல் சாமியை நேராகப் பார்க்க, பருவத்திற்கேற்ப ரூ.500 முதல் ரூ.2,000 வரை தனிநபர் மட்டத்தில் லஞ்சம் வாங்கிக்கொள்ளும் நடைமுறை. இது வரி கொடுப்பவரும் வாங்குபவரும் இணைந்து செய்யும் அநீதி என்று அவர் குறிப்பிட்டார். நிறுவன ரீதியான கட்டண உயர்வும், இந்த தனிநபர் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே — இரண்டுமே பணத்தின் அடிப்படையில் இறைவனை அணுகும் வாய்ப்பைப் பிரிக்கின்றன.

சிலப்பதிகாரப் பார்வையில் இன்றைய சூழல்

தனக்கு நேர்ந்த அநீதிக்காகக் கண்ணகி மதுரையை எரித்தபோது, அங்கிருந்த தெய்வங்கள் கூட அந்த அநீதியை ஏற்காமல் ஊரை விட்டு வெளியேறின என சிலப்பதிகாரம் கூறுகிறது. ஒரு நண்பர் இதை இன்றைய சூழலுடன் இணைத்துப் பேசினார்: அநீதி நடக்கும் இடங்களில் ஆண்டவன் கர்பகிரகத்தை விட்டே வெளியேறியிருப்பார்; நாம் கடவுள் என்று நம்பி வணங்கும் இடத்தில் கடவுள் உண்மையில் இல்லாமல் போயிருக்கலாம் என்ற அவரது கருத்து கூர்மையானது. கடவுள் இல்லாவிட்டாலும் இருப்பது போல் ஜோடனை செய்து காசு பார்க்கும் கும்பல் இருப்பதாகவும், அந்தக் கும்பலை மீறி கடவுள் எதுவும் செய்ய முடியாதவாறு கடவுளையே சிறையில் வைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

இன்று பல இடங்களில், பக்தியின் பெயரில் நடைபெறும் இந்த பொருளாதார பிரிவினைகள் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காசில்லாதவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க, பணமுள்ளவர்கள் குறுக்கு வழிகளில் விரைவாக தரிசிக்கும் நடைமுறைகள் வளர்ந்து வருவது ஆன்மீகத்தின் பெயரில் உருவாகும் புதிய சமூகப் பிரிவினையை நினைவூட்டுகிறது.

முடிவுரை

திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு என்பது வெறும் கட்டண மாற்றம் மட்டுமல்ல; ஆன்மீகம் எந்தத் திசையில் நகர்கிறது என்ற பெரிய கேள்வியையும் எழுப்புகிறது.

பக்தி ஒரு தனிநபர் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்கே விலை நிர்ணயிக்கப்படும்போது, ஆன்மீகமும் சந்தை நியதிகளின் கீழ் இயங்கத் தொடங்குகிறது. இதுவே பக்தியின் நுகர்வுமயமாக்கல் ஆகும்.

இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்றால், அவரை அணுகுவதற்கான வாய்ப்புகளும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். கோயில்கள் பணக்காரர்களுக்கான பிரத்யேக ஆன்மீக மையங்களாக அல்லாமல், மக்களின் பொதுவான பண்பாட்டு மற்றும் ஆன்மீக இடங்களாகத் தொடர வேண்டும். இல்லையெனில், "பணக்காரர்களின் கடவுள்" மற்றும் "ஏழைகளின் கடவுள்" என்ற புதிய பிரிவினையை இந்தக் கட்டண உயர்வுகள் உருவாக்கும் அபாயம் உள்ளது.

எனவே, கட்டண உயர்வின் அவசியம், அதன் பொருளாதார அடிப்படை, மக்களுக்கான பயன்பாடு ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விளக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஆன்மீகத்தை வணிகச் சந்தையின் தர்க்கத்திற்குள் முழுமையாக ஒப்படைக்கும் போக்குகள் குறித்தும் சமூக அளவில் தீவிரமான விவாதங்கள் நடைபெற வேண்டிய தேவை உள்ளது.

ஊரான்

Wednesday, 24 June 2026

ஊழல் ஒழிப்பும் சாதி ஒழிப்பும் சாத்தியமா?

புதிய அரசியல் சக்திகள் தோன்றும் போதெல்லாம், அவர்கள் ஆட்சிக்கு வந்துவிட்டால் ஊழலையும் சாதியையும் ஒழித்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவாக்கப்படுகிறது. சமீப காலமாக நடிகர் விஜய் குறித்தும் இத்தகைய எதிர்பார்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. விஜய் வந்த பிறகு சிலர் சாதி ஒழிந்துவிட்டது போலவும் பேசுகின்றனர்.



ஊழலும் சாதியும் ஏதோ சில தனிநபர்கள் செய்கின்ற ஒழுக்கக் கேடான தவறுகள் என்றும், நல்லவர்கள் ஆட்சிக்கு வந்தால் அவை மறைந்துவிடும் என்றும் ஒரு மேம்போக்கான பார்வை பரவலாக உள்ளது. 

ஆனால், மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதப் பார்வையின் வழியே இந்த இரண்டு சமூகப் பிரச்சினைகளையும் ஆராயும்போது, அவற்றின் வேர்கள் தனிநபர்களிடம் அல்ல; சமூக-பொருளாதாரக் கட்டமைப்புகளுக்குள்ளேயே இருப்பதை காண முடிகிறது.
 
பகுதி 1: ஊழலின் வேர் — சொத்துடைமைச் சமூக அமைப்பு

ஊழல் என்பது சில தனிநபர்களின் ஒழுக்கக் குறைபாடு மட்டுமல்ல. அதிகாரமும் செல்வக் குவிப்பும் சாத்தியமாக இருக்கும் சமூக அமைப்பில் தொடர்ந்து உருவாகும் ஒரு கட்டமைப்புச் சிக்கல்.

இன்று அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்கள் என பல்வேறு நிலைகளில் ஊழல் பரவிக் கிடக்கிறது. இதற்குக் காரணம் சிலர் மட்டும் பேராசைக்காரர்களாக இருப்பதல்ல; மாறாக, செல்வத்தைக் குவிப்பதற்கான வாய்ப்புகளை சமூக அமைப்பே உருவாக்கித் தருகிறது.

ஊழல் என்பது நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல. அதற்கான அடிப்படை, தனிச்சொத்துடைமைச் சமூக அமைப்பிலேயே இருக்கிறது.
மண்ணையும், மூலதனத்தையும், செல்வத்தையும் வரம்பின்றி தனிநபர்கள் குவித்துக் கொள்ளலாம் என்ற நிலை இருக்கும் வரை, அதைப் பெறுவதற்கான சட்டபூர்வ மற்றும் சட்டவிரோத வழிகளும் தொடர்ந்து உருவாகிக் கொண்டே இருக்கும். ஆண்டான்-அடிமை சமூகத்தில் தோன்றிய இந்தச் சுரண்டல் நடைமுறைகள், நிலப்பிரபுத்துவத்தைத் தாண்டி முதலாளித்துவக் காலகட்டத்தில் மேலும் விரிவடைந்துள்ளன.

ஊழலைக் குறைக்க முடியுமா?

தற்போதைய சமூக அமைப்பில் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது என்றாலும், அதைக் கணிசமாகக் குறைக்க முடியும்.
அதற்கு முதலில் ஒப்பந்த (Contract) முறையின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும். ஏனெனில், இந்த ஒப்பந்த முறையில்தான் பொதுப் பணிகளுக்கான நிதியில் பெரும் பகுதி கமிஷன், இடைத்தரகர் லாபம், அரசியல் செல்வாக்கு போன்ற வடிவங்களில் கைமாறுகிறது.

தொழிலாளர்களுக்குச் சேர வேண்டிய கூலியில் ஒரு பகுதி ஒப்பந்ததாரர்களின் இலாபமாக மாறுகிறது. அரசாங்கமே நேரடியாகப் பணிகளை மேற்கொள்ளும் போது இந்த இடைநிலைச் சுரண்டல் ஓரளவு குறையும்.

அதே நேரத்தில், அரசாங்கம் நேரடியாகப் பணிகளை மேற்கொண்டாலும் பொருட்கள் கொள்முதல், நிர்வாக முடிவுகள், அதிகார முறைகேடு போன்ற வழிகளில் ஊழல் தொடரும் என்பதையும் மறுக்க முடியாது.

இன்று விஜய் அரசு ஒருபுறம் ஊழல் ஒழிப்பைப் பேசிக்கொண்டே, மறுபுறம் பொதுச் சேவைகளை குறிப்பாக தூய்மைப் பணிகளை ஒப்பந்த மற்றும் தனியார் மயப்படுத்தலின் வழியே நடத்த முனைகிறது. இந்த முரண்பாட்டை கவனிக்காமல் விட முடியாது.

ஊழலின் பொருளாதார அடித்தளம்

ஊழல் மூலம் சேர்க்கப்படும் கருப்புப் பணம் பெரும்பாலும் நிலம், தங்கம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படுகிறது.

ஒருவர் எவ்வளவு நிலத்தைக் குவித்துள்ளார், எத்தனை பினாமி பெயர்களில் சொத்துகளை வைத்திருக்கிறார், எவ்வளவு தங்கத்தைச் சேமித்துள்ளார் என்பதைக் கண்காணிப்பது நடைமுறையில் மிகவும் கடினம்.
எனவே, நிலமும், தங்கம் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி வளங்களும் தனிநபர் சொத்தாக அல்லாமல் சமூகக் கட்டுப்பாட்டின் கீழ் இருக்க வேண்டும் என்ற கருத்தை மார்க்சியம் முன்வைக்கிறது.

ஒருவருக்குப் பயிரிட நிலம் தேவைப்பட்டால் பயன்படுத்தும் உரிமை வழங்கலாம். குடியிருப்பதற்கு இடம் தேவைப்பட்டால் அதையும் வழங்கலாம். ஆனால், அந்த வளங்கள் சமூகத்தின் கட்டுப்பாட்டிற்கு வெளியே தனிப்பட்ட செல்வக் குவிப்பிற்கான கருவிகளாக மாறக் கூடாது.
இதுவே சமூக உடைமை (Social Ownership) நோக்கிய சிந்தனையின் அடிப்படை.
 
பகுதி 2: சாதி ஒழிப்பு — சமூகப் புரட்சியின் நீண்ட பயணம்

அடுத்து, சாதி ஒழிப்பு குறித்து பலரும் பேசுகிறார்கள். ஆனால், பட்டியல் சாதி மக்களுக்கு சில பதவிகள் கிடைத்துவிட்டாலோ அல்லது அரசியல் பிரதிநிதித்துவம் அதிகரித்துவிட்டாலோ சாதி ஒழிந்துவிட்டது என்று கருதுவது ஒரு மாயையான பார்வை.

சாதியின் அடித்தளம்

சாதி என்பது வெறும் தனிநபர் மனநிலை அல்ல; அது சமூக உறவுகளிலும், திருமண முறைகளிலும், மதச் சடங்குகளிலும், பண்பாட்டு பழக்கவழக்கங்களிலும் ஆழமாகப் பதிந்திருக்கும் ஒரு சமூக அமைப்பு.
இந்தியச் சமூகத்தில் சாதி அமைப்பு நீடித்து நிற்பதற்கு இந்து மதத்தின் வர்ணாசிரமக் கருத்தியல் முக்கிய பங்காற்றியுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

எனவே, சாதியை நியாயப்படுத்தும் மத, பண்பாட்டு மற்றும் சமூகக் கருத்தாக்கங்கள் பலவீனப்படுத்தப்படாமல் சாதி ஒழிப்பு முழுமையடையாது.
சட்டங்கள் மூலமாக சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைத் தடுக்கலாம். பொதுக் குடியிருப்புகள், சமத்துவபுரங்கள், இடஒதுக்கீடு போன்ற நடவடிக்கைகள் மூலம் சாதியப் பகைமையைக் குறைக்கலாம்.
ஆனால், இவை அனைத்தும் சாதியின் வெளிப்பாடுகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளே தவிர, அதன் அடிப்படை சமூக வேர்களை முற்றாக அகற்றும் செயல்முறைகள் அல்ல.

புதிய பண்பாட்டின் தேவை

சாதி அமைப்பைத் தகர்க்க வேண்டுமானால், சாதியைப் பாதுகாக்கும் பண்பாட்டு மற்றும் மத அடையாளங்கள் தங்களின் சமூகச் செல்வாக்கை இழக்க வேண்டும்.
அதற்குப் பதிலாக மனித சமத்துவம், உழைப்பின் மதிப்பு, சமூக நீதி, பகுத்தறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகப் பண்பாடு உருவாக வேண்டும்.

இது ஒரே தேர்தலில் அல்லது ஒரு அரசின் ஐந்து ஆண்டு ஆட்சியில் நிறைவேறக்கூடிய செயல் அல்ல. இது பல தலைமுறைகள் நீளக்கூடிய சமூக மற்றும் கருத்தியல் போராட்டமாகும்.

மார்க்சியப் பார்வையில், மனிதனின் வாழ்க்கையை ஆளும் பொருளாதார மற்றும் சமூக முரண்பாடுகள் குறைந்து, கூட்டுச் சமூக வாழ்வு வலுப்பெறும் போது, மதமும் சாதியும் தங்களது சமூகத் தேவையை இழந்து மெல்ல மெல்ல பின்னுக்குத் தள்ளப்படும்.
 
முடிவுரை

எனவே, ஊழலும் சாதியும் சில கெட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரச்சினைகள் அல்ல; அவை குறிப்பிட்ட சமூக-பொருளாதாரக் கட்டமைப்புகளின் விளைவுகள்.

அதனால், எந்த ஒரு புதிய அரசியல் தலைமையோ, எந்த ஒரு தனிநபர் பிம்பமோ ஆட்சிக்கு வந்த உடனே ஊழலையும் சாதியையும் ஒழித்துவிட முடியும் என்று நம்புவது எளிமைப்படுத்தப்பட்ட அரசியல் கற்பனையாகும்.

ஊழலை உருவாக்கும் தனிச்சொத்துடைமை மற்றும் செல்வக் குவிப்பு அமைப்புகளையும், சாதியைப் பாதுகாக்கும் சமூக மற்றும் பண்பாட்டு அடித்தளங்களையும் மாற்றாமல், இந்த இரு பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்காது.

உண்மையான சாதி ஒழிப்பிற்கும், ஊழல் ஒழிப்பிற்கும் தேவையானது வெறும் ஆட்சிமாற்றம் அல்ல; சமூகக் கட்டமைப்பை மாற்றும் நீண்டகால கருத்தியல், பண்பாட்டு மற்றும் பொருளாதாரப் போராட்டம்தான்.

அந்தப் போராட்டத்தை நோக்கி மக்களைத் தயார்படுத்துவதுதான் சமூக மாற்றத்தை விரும்புகிறவர்களின் உண்மையான வரலாற்றுப் பொறுப்பாகும்.

ஊரான்



Tuesday, 23 June 2026

பொதுவுடைமைக்குத் தடை: வர்ணமா, வர்க்கமா?

முன்னுரை

சமீபத்தில் எனது வலைப்பூவில் வெளியான தோழர் மகேந்திரனின் த.வெ.க. சேர்க்கை மற்றும் “மனித ஆளுமையின் சிதைவு” குறித்த கட்டுரையின் மீது, நண்பர் ஒருவருடன் வாட்ஸ்அப் குழுவில் நடைபெற்ற ஆரோக்கியமான சித்தாந்த விவாதத்தின் சுருக்கப்பட்ட தொகுப்பு இது.

வாசகர்களின் சிந்தனைக்கே இந்த உரையாடலை அர்ப்பணிக்கிறேன்.

1. தனிநபர் விலகலும், கட்சிகளின் தடம்மாற்றமும்

நண்பர்: கம்யூனிச இயக்கத்தில் நீண்ட காலம் இருந்த மகேந்திரன் த.வெ.க.-விற்கு மாறுவதை “முதலாளித்துவச் சிதைவு” என்றும், மற்ற கட்சிகள் கூட்டணி மாறுவதை “நுகர்வுப் பண்டங்கள்” என்றும் பிரித்துப் பார்ப்பது முரண்பாடாக உள்ளது. இரண்டுமே ஒன்றுதானே?

ஊரான்: நிச்சயமாக இரண்டும் தன்மையில் ஒன்றுதான்.

முதலாளித்துவ நுகர்வுச் சந்தை என்பது தனிநபரை மட்டும் பண்டமாக்குவதில்லை; அது தேர்தல் அரசியல் கட்சிகளின் நிறுவன ஆளுமையையும்கூட ஒரு நுகர்வுப் பண்டமாகவே (Commodity) மாற்றியமைக்கிறது. தேர்தல் ஆதாயங்களுக்காகக் கட்சிகள் தடம்மாறுவது குட்டி முதலாளித்துவ ஊசலாட்டத்தின் கூட்டு வடிவமே தவிர வேறல்ல.

2. இந்தியக் கட்சிகளும் சனாதன சித்தாந்தமும்

நண்பர்: பா.ஜ.க. முதல் கம்யூனிஸ்டுகள், தி.மு.க., காங்கிரஸ் வரை இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே ஏதோ ஒரு புள்ளியில் இந்து சனாதன தர்மத்தோடு ஒன்றுபடுகின்றன அல்லது அதை எதிர்ப்பதில்லை. திராவிட இயக்கங்கள்கூட அதிகாரத்தில் சாதிவாரிப் பங்கீட்டை உருவாக்கினரே தவிர, முழுமையான சாதி ஒழிப்பைச் செய்யவில்லை. எனவே எல்லாரும் சனாதன ஆதரவாளர்களே.

ஊரான்: பா.ஜ.க.-வைத் தவிர மற்ற கட்சிகளை ஒரே சனாதன முகாமிற்குள் அடைப்பது அரசியல் ரீதியாக மிகைப்படுத்தப்பட்ட பார்வையாகும்.

பா.ஜ.க. மட்டுமே சனாதனத்தைத் தனது அதிகாரப்பூர்வ அரசியல் அடையாளமாக முன்வைக்கிறது. மற்ற கட்சிகளில் தனிநபர்கள் சனாதன நம்பிக்கைகளைக் கொண்டிருக்கலாம்; அல்லது தேர்தல் அரசியலின் அழுத்தங்களாலும் வாக்கு வங்கி கணக்குகளாலும் சனாதனத்தோடு சமரசம் செய்து கொள்ளலாம். ஆனால் அதனால் அவை அனைத்தும் ஒரே அரசியல் முகாமாகிவிடாது.

மேலும், பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக உருவான திராவிட இயக்கத்தின் தோற்றமே சனாதன எதிர்ப்பின் ஒரு முக்கிய அங்கமாகும்.

சாதி ஒழிப்பின் அவசியத்தை பெரியாரும் அம்பேத்கரும் வலியுறுத்தினர். இருப்பினும், இந்தியச் சமூகத்தில் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அரசியல்-சமூகச் செயல்திட்டம் இன்னும் நிறைவேறவில்லை. அதேவேளையில், இடஒதுக்கீடு, சமூகநீதி, பொதுக்குடியிருப்புத் திட்டங்கள் போன்றவற்றின் மூலம் சாதிய அடக்குமுறையை பலவீனப்படுத்திய பங்கும் திராவிட இயக்கங்களுக்கே உரியது.

3. பொதுவுடைமைக்குத் தடை: வர்ணமா, வர்க்கமா?

நண்பர்: 1936-லேயே அம்பேத்கர் சுட்டிக்காட்டியபடி, இந்தியாவில் சாதி அமைப்பு (சனாதனம்) உள்ளவரை பொதுவுடைமை சாத்தியமில்லை. மேற்கத்திய நாடுகளில் வர்க்க முரண்பாடு (முதலாளி – தொழிலாளி) உள்ளது; ஆனால் இந்தியாவில் வர்ண முரண்பாடுதான் அடிப்படையானது. தொழிலை மாற்ற முடிந்தாலும், சமூக நிலையை மாற்ற முடியாது. எனவே இந்தியாவில் சனாதனம் இருக்கும் வரை பொதுவுடைமை சாத்தியமில்லை.

ஊரான்: அம்பேத்கர் சுட்டிக்காட்டிய சாதி முரண்பாடு இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு மிக முக்கியமானது. ஆனால் பொதுவுடைமை வளர்ச்சியை விளக்குவதற்கு அது மட்டும் போதுமான காரணியாக இல்லை.

சனாதனத்தின் வலுவான செல்வாக்கு கொண்ட இந்தியாவிலேயே மேற்கு வங்கம் மற்றும் கேரளாவில் கம்யூனிஸ்டுகள் நீண்டகால அரசியல் செல்வாக்கையும் ஆட்சியையும் பெற்றனர். எனவே, பொதுவுடைமை வளர்ச்சிக்கு எதிரான தடைகளை சாதி என்ற ஒரே காரணிக்குள் அடக்க முடியாது.

வர்ண அமைப்பும் முதலாளித்துவ வர்க்க அமைப்பும் ஒன்றல்ல. சாதி இந்தியச் சமூகத்தின் வரலாற்றுப் பிரச்சினை; முதலாளித்துவம் மூலதனக் குவிப்பு மற்றும் உபரி மதிப்புச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு.

இன்றைய உலகளாவிய நுகர்வுப் பண்பாடும், முதலாளித்துவத்தின் கலாச்சார ஆதிக்கமும், கூட்டு சமூக உணர்வுகளைச் சிதைத்து தனிநபர் மைய மனநிலையை வளர்ப்பதும் பொதுவுடைமை வளர்ச்சிக்கான முக்கிய தடைகளில் ஒன்றாகும்.

மேலும், கம்யூனிசம் என்பது கருத்துமுதல்வாத (Idealist) தத்துவம் அல்ல; வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை (Historical Materialism) அடிப்படையாகக் கொண்ட சமூக அறிவியல் அணுகுமுறையாகும்.

4. நக்சல்பாரி இயக்கமும் மாற்றுப் பாதையும்

நண்பர்: காடுகளிலும் மலைகளிலும் கார்ப்பரேட் கனிமக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் நக்சல்பாரிகளை மதிக்கிறேன். ஆனால் அரசு அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரிப்பதால் பொதுச் சமூகம் அவர்களை ஏற்கவில்லை. ஒட்டுமொத்த மக்களும் திரளாத வரை ஆயுதப் போராட்டம் வெல்லாது; இதற்கும் சனாதனமே தடையாக உள்ளது.

ஊரான்: ஆளும் வர்க்க அரசுகள், தங்களுக்கு எதிராகப் போராடும் இயக்கங்களை “தேச விரோதம்” அல்லது “தீவிரவாதம்” என்ற அடையாளங்களின் கீழ் சித்தரிப்பது புதிய நிகழ்வு அல்ல. இது அதிகார அரசியலின் வழக்கமான பரப்புரைத் தந்திரங்களில் ஒன்றாகும்.

ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் சாதி மக்களின் பல கோரிக்கைகள் இன்றும் நிறைவேறாமல் இருப்பதற்குக் காரணம் சமூக கட்டமைப்பின் ஆழமான முரண்பாடுகளே.

இந்தியச் சமூகத்தில் சாதி ஆதிக்கமும் முதலாளித்துவச் சுரண்டலும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. எனவே சமூக விடுதலைக்கான போராட்டம், சாதி ஒழிப்பையும் வர்க்க விடுதலையையும் இணைத்தே முன்னேற வேண்டியுள்ளது.

நிறைவாக...

நண்பர்: “நமது இருவரின் கருத்துப் பரிமாற்றத்தையும், அதற்கான புரிதலையும் வாசகர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். நன்றி.”

இந்த விவாதத்தில் வெளிப்பட்டது வெறும் இரண்டு தனிநபர்களின் கருத்து வேறுபாடு மட்டுமல்ல; இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதில் "சாதியா முக்கியம், வர்க்கமா முக்கியம்" என்ற நூற்றாண்டு பழமையான ஒரு சித்தாந்த விவாதத்தின் தொடர்ச்சியாகும்.

தொகுப்பு: ஊரான்

Monday, 22 June 2026

கம்யூனிச இயக்கங்களிலிருந்து சி.மகேந்திரன்கள் ஏன் வெளியேறுகிறார்கள்? — ஒரு மார்க்சியப் பார்வை

புதிய ஜனநாயகம் தினசரி முகநூல் பக்கத்தில் தோழர் ஆல்பர்ட் எழுதியுள்ள "கம்யூனிசத்தின் பெயரால் நடக்கும் பிழைப்பு வாதம்" என்ற கட்டுரை, பொதுவுடமை இயக்கங்களில் இருந்து வெளியேறும் சில தோழர்களின் அரசியல் ஊசலாட்டத்தையும், குட்டி முதலாளித்துவ வர்க்கத்தின் நிலையற்ற தன்மையையும் சுட்டிக்காட்டுகிறது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள பல அம்சங்கள் உண்மையைக் கொண்டவை. 

தவெக-வில் CPI கட்சியின் சி.மகேந்திரன்

ஆனால், அந்த நிகழ்வை வெறும் தனிநபர் ஒழுக்கக் குறைபாடாகவோ அல்லது அரசியல் நேர்மையின்மையாகவோ மட்டும் விளக்குவது முழுமையான மார்க்சிய அணுகுமுறையாகாது.
மார்க்சியப் பார்வையில், மனிதர்கள் தாங்கள் விரும்பியபடி தங்களை உருவாக்கிக் கொள்வதில்லை; அவர்கள் வாழும் சமூக உறவுகளும் பொருளாதாரச் சூழல்களும் அவர்களது சிந்தனையையும் ஆளுமையையும் வடிவமைக்கின்றன. 

எனவே, கம்யூனிச இயக்கங்களில் இருந்து சிலர் வெளியேறுவதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், அவர்கள் பின்னால் நிற்கும் சமூக-பொருளாதார சக்திகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

மாக்ஸிம் கார்க்கி தனது “மனித ஆளுமையின் சிதைவுகள்” நூலில் குறிப்பிட்டது போல, முதலாளித்துவம் மனிதர்களின் ஆளுமையை விரிவுபடுத்துவதில்லை; மாறாக அதைச் சுருக்கி, சந்தை மதிப்புகளுக்குள் அடைத்து விடுகிறது. குறிப்பாக தாராளமய பொருளாதாரக் காலத்தில், மனிதனின் மதிப்பு அவனது லட்சியம், தியாகம் அல்லது சமூகப் பங்களிப்பால் அல்ல; அவனது வருமானம், புகழ், நுகர்வுத் திறன் மற்றும் தனிப்பட்ட வெற்றியால் அளவிடப்படுகிறது.

இதற்கு இன்னொரு காரணமும் உண்டு. பொதுவுடமை இயக்கங்களில் செயல்படும் சில திறமையான தோழர்கள், தாங்கள் உருவாக்கிய அரசியல் செல்வாக்கு மற்றும் ஆளுமைக்கான உரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்ற உணர்வுக்கு ஆளாகிறார்கள். 

சில நேரங்களில் இயக்கத் தலைமைகளும், வளர்ந்து வரும் ஆளுமைகளை இயல்பாக வளர்த்தெடுப்பதற்குப் பதிலாக, அவர்களைப் போட்டியாளர்களாகக் கருதி ஒதுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முயற்சிக்கின்றன. தனது ஆளுமையை இன்னொருவர் அபகரித்து விடுவார் என்ற அச்சம் தலைமைகளிடமும் உருவாகலாம். 

இதனால் ஏற்படும் விரக்தி, மனச்சோர்வு மற்றும் அரசியல் தனிமை உணர்வு காரணமாக சிலர் இயக்கத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

ஆனால் இந்த முரண்பாடுகளும் வெறும் தனிநபர் உளவியல் பிரச்சினைகள் அல்ல. போட்டி, தனிநபர் முன்னேற்றம், புகழ் வேட்டை மற்றும் நுகர்வு மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் இன்றைய தாராளமய சமூக-பொருளாதாரச் சூழலின் தாக்கங்களாகவே இவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நுகர்வு என்பது வெறும் பொருட்களை வாங்குவதோடு முடிவதில்லை. அது புகழ், அந்தஸ்து, தனிநபர் அங்கீகாரம், சமூக மதிப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கியது. சமூக வலைத்தளங்கள் வளர்ந்துள்ள இன்றைய காலத்தில், கூட்டுச் செயல்பாட்டைவிட தனிநபர் புகழ் அதிக முக்கியத்துவம் பெறுகிறது. 

இதன் விளைவாக, இயக்கத்திற்காக உழைக்கும் ஒருவரின் மனதிலும் "எனக்கு என்ன கிடைக்கிறது?" என்ற கேள்வி இயல்பாகவே உருவாகிறது.
இதனால், கட்சிக்குள் இருக்கும் வரை ஒரு தோழர் "புரட்சியாளர்" என மதிக்கப்படுகிறார்; ஆனால் சமூகத்தின் நுகர்வு மற்றும் தனிநபர் வெற்றி சார்ந்த மதிப்பீடுகள் தொடர்ந்து அவரை வேறு திசையில் இழுக்கின்றன. 

இந்த முரண்பாடு தீவிரமடையும் போது, அவரது அரசியல் ஆளுமை மெல்ல சிதையத் தொடங்குகிறது. அந்தச் சிதைவின் விளைவாகவே சிலர் தங்களது பழைய இலட்சியங்களை விட்டு விலகிச் செல்கிறார்கள்.

எனவே, சி.மகேந்திரன் போன்றவர்களின் அரசியல் நகர்வுகளை வெறும் "துரோகம்" என்று மட்டும் கூறிவிட முடியாது. அதே நேரத்தில் அதை சாதாரண தனிநபர் சுதந்திரமாகவும் குறைத்துவிட முடியாது. இது ஒரு வர்க்கத்தின் முரண்பாடு; தாராளமய முதலாளித்துவ சமூகத்தின் தாக்கம்; மேலும் சில நேரங்களில் இயக்கங்களுக்குள்ளேயே உருவாகும் அரசியல் மற்றும் அமைப்புரீதியான குறைபாடுகளின் வெளிப்பாடு.

இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல், வெளியேறுபவர்களை மட்டும் குற்றம் சாட்டுவதாலும், அல்லது அவர்களை முழுமையாக நியாயப்படுத்துவதாலும் எந்தப் பயனும் இல்லை. 

மாறாக, மனித ஆளுமைகளைச் சிதைக்கும் சமூக-பொருளாதாரச் சூழலையும், அதற்கு எதிராக நிற்க வேண்டிய இயக்கங்களின் உள்முரண்பாடுகளையும் ஆய்வு செய்வதே மார்க்சிய அணுகுமுறையாகும்.

ஊரான்