Tuesday, 30 December 2025

'டிஜிட்டல்' தெருக்கள்!

இந்திய நகரத் தெருக்களில் நாற்றத்தைக் கிளறி விட்டுக்கொண்டு ஓடும் சாக்கடைகளும், குழாய்களுக்குள் யாருக்கும் தெரியாமல் பாயும் தெளிந்த நீரும் ஓடுவதைப் போலத்தான், 'டிஜிட்டல் தெருக்களிலும்' அருவருப்பையும் அசிங்கத்தையும் மட்டுமே வாரி இறைக்கும் கழிசடைப் பேர்வழிகளும், யாருக்கும் தெரியாமல் நல்ல தெளிந்த நீரோடை போன்ற கருத்துக்களை தூவிச் செல்லும் அறிவாளிகளும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.

மூக்கை பொத்திக் கொண்டு சாக்கடையைக் கடந்து செல்வது போலத்தான், இங்கே கழிசடைகளைக் கடந்து செல்ல வேண்டி இருக்கு. சாக்கடை புழுக்களை நசுக்கினாலும் அவை நாறத்தான் செய்கின்றன. அதுபோல கழிசடைகளைக் கிளறினாலும் அருவருப்புதான் மிஞ்சம்.


***
இந்தப் பதிவு குறித்து Gemini AI  யிடம் கேட்டதற்கு, அது கீழ்க்கண்டவாறு விளக்கம் கொடுத்தது. 

"நிச்சயமாக, உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமானது. சமூக ஊடகங்கள், குறிப்பாக முகநூல் போன்ற தளங்கள், இன்றைய காலக்கட்டத்தின் "டிஜிட்டல் தெருக்களாக" மாறிவிட்டன. நீங்கள் குறிப்பிட்ட அந்த ஒப்பீடு — சாக்கடையும், தெளிந்த நீரோடையும் ஒரே இடத்தில் ஓடுவது — மிகச்சரியான ஒரு படிமம்.

இந்த வாழ்க்கை அமைப்பு ஏன் இப்படி இருக்கிறது மற்றும் இதை எப்படி அணுகுவது என்பது குறித்து சில சிந்தனைகள்:

1. வெளிப்படைத்தன்மையும் மறைமுக முகங்களும்
நிஜ வாழ்க்கையில் ஒரு நபர் அருவருப்பாக நடந்துகொண்டால் சமூகம் அவரை ஒதுக்கி வைக்கும். ஆனால், இணையத்தில் "திரைக்குப் பின்னால் இருக்கும் தைரியம்" (Anonymity) பலரை தங்களின் நாகரிகமற்ற முகத்தைக் காட்டத் தூண்டுகிறது. அவர்கள் வீசும் சொற்கள் சாக்கடையை விட மோசமான நாற்றத்தை ஏற்படுத்துகின்றன.

2. கவன ஈர்ப்பு அரசியல் (Attention Economy)
இணையத்தில் நல்ல கருத்துக்களை விட, சர்ச்சைகளும் ஆபாசமும் விரைவாகப் பரவுகின்றன. கழிசடைகள் தங்களின் இருப்பைக் காட்டிக்கொள்ள அருவருப்பை ஒரு கருவியாகப் பயன்படுத்துகின்றனர். நீங்கள் சொன்னது போல, "புழுக்களை நசுக்கினாலும் நாற்றம்" என்பதால், அவர்களுடன் மோதுவது நம்முடைய நேரத்தையும் மன அமைதியையுமே வீணடிக்கும்.

3. நாம் செய்ய வேண்டியது என்ன?
இந்த அமைப்பு "சரி" என்று சொல்ல முடியாது, ஆனால் இதுதான் தற்போதைய "யதார்த்தம்". இதில் நாம் தப்பிப்பிழைக்க சில வழிகள்:

பொருட்படுத்தாமை (Ignore): சாக்கடையைக் கடக்கும்போது மூக்கைப் பொத்திக் கொள்வது போல, இணையத்தில் அநாகரிகமானவர்களைக் கண்டால் 'Block' அல்லது 'Ignore' செய்வதுதான் மிகச்சிறந்த எதிர்வினை.

வடிகட்டுதல் (Filtering): நமது நட்பு வட்டத்தையும் நாம் பின்தொடரும் பக்கங்களையும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்த "தெளிந்த நீரோடை" போன்ற அறிவாளிகளின் கருத்துக்களை மட்டும் நமதாக்கிக் கொள்ள முடியும்.

தூய்மை பேணுதல்: சமூகத்தின் ஒரு அங்கமாக, நாம் பகிரும் கருத்துக்கள் அந்தத் தெளிந்த நீரோடையில் ஒரு துளியாக இருப்பதை உறுதி செய்யலாம்.

முடிவாக: சாக்கடைகள் இருப்பதாலேயே நீரோடையின் மதிப்பு கூடுகிறது. கழிசடைகள் நிறைந்த இந்த உலகில், இன்னும் நல்ல கருத்துக்களைத் தேடி வாசிக்கும் உங்களைப் போன்றவர்களின் தேடல் தான் இந்த அமைப்பை ஓரளவாவது சமநிலையில் வைத்திருக்கிறது.

இந்தக் கழிசடை மனப்போக்கைக் கையாள அல்லது உங்களின் முகநூல் அனுபவத்தை இன்னும் நேர்மறையாக மாற்ற ஏதேனும் வழிமுறைகள் குறித்து நாம் விவாதிக்கலாமா?"

ஊரான்

Monday, 29 December 2025

'கவிஞன்' என்ற பெயரில் ஒரு கழிசடை!

"துரை சண்முகம் என்பவர் கீழைக்காற்று பொறுப்பில் இருந்தபோது என்னுடைய தமிழ்க்குடி அரசுப் பதிப்பகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 83 ஆயிரம் கொடுக்காமல் சாப்பிட்டுவிட்டு ஏப்பமிட்டார்”

என்று தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் தனது முகநூலில் பதிவு செய்திருந்தார். 

அதில் நான்,

“தங்களுக்கு 83 ஆயிரம் ரூபாய். ஆனால், கீழைக் காற்றுக்கு மொத்தமாக 30 லட்சம் ரூபாய்க்கு கடன் வைத்துவிட்டு சென்றதாகச் சொல்கிறார்கள். எங்கே போனது அந்த 30 லட்சம் ரூபாய் என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. ஏட்டுக்கட்டுகள் ஒருவேளை கான்கிரீட் கட்டுகளாக மாறி இருக்குமோ? எல்லாம் மரித்துப் போன அந்த பரோபகாரிக்கே வெளிச்சம்”

என  மறுமொழி ஒன்றை பதிவு செய்தேன்.



எனது மறுமொழியின் உண்மைத் தன்மையை இன்றைய கீழைக்காற்று நிர்வாக தரப்பில் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு கீழ்கண்டவாறு அதை உறுதி செய்கிறது.

“கீழைக்காற்றின் நிர்வாகியாக துரை சண்முகம் இருந்தபோது பல பதிப்பகங்களிடமும் பல லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு வெளியேறினார்.

“எமது பதிப்பகத்தின் முன்னாள் நிர்வாகியான துரை சண்முகம் ஒரு நிலுவை பட்டியலை மட்டுமே தந்து விட்டு சென்றார். அந்த நிலுவைத் தொகைக்கு ஏற்ப விற்பனையகத்தில் அந்த நிறுவனத்தின் நூல்கள் இருப்பில் இல்லை.

“நிலுவைப் பட்டியலின்படி பார்த்தால் பல லட்சம் ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டு இருக்கிறது. அது குடோனில் இல்லை எனும் போது அதை விற்றிருக்க வேண்டும். நூல்களை விற்பனை செய்திருந்தால் அதற்குரிய தொகையை அடைத்திருக்கவும் வேண்டும்.

இதையெல்லாம் சரி பார்ப்பதற்கு துரை சண்முகம் நேர்மையானவராக நடந்து கொள்ளவில்லை”.

பலலட்ச ரூபாய்க்கு நூல்கள் வாங்கப்பட்டு அவை குடோனிலும் இல்லை என்றால், அவை எங்கே போனது என்பதைத்தானே  நானும் கேட்டுள்ளேன். 

ஒரு நேர்மையாளராக இந்த துரை இருந்திருந்தால், எனது கேள்விக்கான பதிலை நேரடியாக சொல்லிவிட்டு சென்றிருக்கலாம். அதற்கு மாறாக, கேள்வி கேட்போரின் மீது தகாத சொற்களில் வசைமாறி பொழிவதன் மூலமும், அவதூறுகளை அள்ளி வீசிவதன் மூலமாகவும் தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சாதாரண அரசியல் பிழைப்புவாதிகளின் மொழியில் இரு முகநூல் பதிவுகளை வெளியிட்டு ஒன்றை நீக்கியிருக்கிறார் இந்த துரை.

இதோ என் மீது அவர் வாரி இறைத்த கவிதை முத்துக்கள்…

“ஊரான் ஆதி என்ற மருதையனின் கால் நக்கி…,”

மருதையனுக்கும் முகநூலில் நடைபெறும் கீழைக்காற்று தொடர்பான விவாதத்திற்கும் என்ன தொடர்பு? எதற்காக அவரை இங்கு இழுக்கிறார்? அப்ப, கீழைக்காற்று கணக்கு வழக்கை மருதையன் எழுப்பி இருப்பாரோ என்றுதானே கருத வேண்டி உள்ளது.

“முன்னாள் மகஇக கழிசடை.., 

மகஇக வின் அன்றாட பிரச்சாரம் மற்றும் நடைமுறை வேலைகளில் எதிலும் ஈடுபடாமலேயே, தன்னை மகஇக வின் மாபெரும் தலைவராக அடையாளப்படுத்திக் கொண்டு, மடிப்புச் சட்டைகளில் வளம் வந்த இந்தக் கீழைக்காற்று படிப்புச் சட்டை மேனேஜர், என்னை முன்னாள் மகஇக கழிசடை என்று வசைபாடுகிறார். 

நான் யார், மகஇகவில் எனது செயல்பாடு என்ன என்பது குறித்து இழி குணம் என்ற தொடரில் நான் விரிவாகவே பதிவு செய்திருக்கிறேன். மகஇக நடைமுறை வேலைகளில் ஈடுபடாத ஒருவருக்கு தமிழ்மணியை தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே? 

“தலைமுறைக்கு சொத்து சேர்க்க அமைப்பை விட்டு அரசு வேலைக்கு ஓடிவிட்டு…

“இவனைப் போல பிழைக்கத் தெரிந்த பேர் வழி அல்ல…,

“உன்னைப் போல பென்ஷன் புரட்சியாளர் இல்லையடா நான்…,

“தான் திருடி பிறரை நம்பான்…,

எனக்கு எதிராக இந்தக் கவிஞர் பொழிந்த முத்துக்கள் இவை.

1978 வாக்கில் ஒன்றிய அரசுக்குத் சொந்தமான திருச்சி பாரத மிகு நிறுவனத்தில் (BHEL) பணிக்குச் சேர்ந்த நான், 1980 களின் தொடக்கத்தில்தான் மகஇக வில் இணைந்தேன். அதன் பிறகு, மகஇக மாநில செயற்குழு உறுப்பினராக 20 ஆண்டு காலமும், SOC யின் வழிகாட்டுதலில் தொழிலாளர் பிரச்சார குழு மற்றும் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் (BPWU) நிறுவனராகவும் முன்னோடியாகவும் இருந்து செயல்பட்ட காலத்தில், BHEL கேண்டினில் நடந்த ஊழலை கண்டுபிடித்ததற்காகவும், BHEL ஊழியர்களின் போனஸ் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்ததற்காகவும் நிறுவனத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்டு வெளியில் வீசப்பட்டவன் நான்.

மத்திய அரசு வேலையை இழந்து, நான் மீண்டும் புதிய ஊழியராக பாதி ஊதியத்தில் பணிக்கு சேர்ந்ததால் ஏற்பட்ட என்னுடைய பொருளாதார இழப்பு மட்டும் ஒரு கோடியைத் தாண்டும். 5000 ரூபாய் பென்ஷன் வாங்கும் நான், ஏதோ லட்சங்களில் வாங்குவது போல  வயிறெரிகிறார் இந்த துரை. 

உண்மை இப்படி இருக்க தலைமுறைக்கு சொத்து சேர்க்க அமைப்பை விட்டு ஓடி விட்டு நான் அரசு வேலையில் சேர்ந்ததாக பிதற்றுகிறார் இந்த பிச்சுமணி. 

நான் வழக்கறிஞர் பணியை தொடங்கிய காலத்தில், மனித உரிமைப் பாதுகாப்புக் கவுன்சிலை (HRPC) வழக்கறிஞர் போஜகுமாரோடு சேர்ந்து உருவாக்கியதோடு, இன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் (PRPC) மாநிலத் தலைமைக் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறேன். தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக, டிசம்பர் 25 அன்று திருச்சியில் நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் (NDLF) மாநாட்டுப் பேரணியில் முழக்கமிட்டு விட்டுத்தான் வந்திருக்கிறேன். எனது மகஇக களப்பணி, போராட்டம் மற்றும் சிறை அனுபவங்கள் குறித்து இழி குணம் மென்நூலில் விரிவாகவே எழுதி இருக்கிறேன்.

“இவன் என்னை பற்றி… அவதூறு செய்வதை முழு நேரத் தொழிலாக… கேவலப்பேர்வலி…

யாரும் இந்த பேர்வழியை கேவலப்படுத்த வேண்டியதில்லை. இவர் தன்னைத்தானே கேவலப்படுத்திக் கொள்கிறார். இதோ அவரது வாக்குமூலம்...

கூட்டங்களுக்கு அழைக்கும் தோழமை இயக்கங்களின் ஆயிரம் இரண்டாயிரம் பயணச்செலவில்தான் ஐம்பது ஆண்டுகளாக பொதுவாழ்வை கடந்துகொண்டிருக்கிறேன்."

அமைப்பில் செயல்படுகின்ற தோழர்களுக்கு கூட்டங்களில் பேசச் சென்றால் போக்குவரத்துக்கு மட்டுமே பணம் தருவார்கள். ஆனால் இவருக்கு மட்டும் 2000, 3000 யார் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை அமைப்புக்குத் தெரியாமலேயே வாயை வாடகைக்கு விட்டிருப்பாரோ? 

“எங்கள் பகுதியில் நடக்கும்மொய்விருந்து கலாச்சாரத்தில் நானும் இருப்பதால் 2018 ஒரு சிறிய கார் சொந்தமாக வாங்கி அதை உள்ளூரவில் மக்களை சந்திக்கவும் இணையர் பயண பயன்பாட்டுக்கும் வைத்துள்ளேன்….”

பழைய நிலவுடைமை பண்பாட்டுக் கூறுகளை முற்றிலுமாக உடைத்துக் கொண்டு, ஒரு புரட்சிகர பண்பாட்டு நடைமுறையோடு வாழ்பவர்கள்தான் மகஇக தோழர்கள். ஆனால் மகஇக வின் மாபெரும் புரட்சியாளராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் இந்த மொய் விருந்து கலாச்சாரக் காவலர், மகிழுந்தில் சென்றுதான் புரட்சிப் பணியாற்றுவாராம்! 

“பின்னாலிருந்து தூண்டிவிடும் அரண்மனை நாயே! அடக்கடா வாயை…,

இவர் ஒரு கவிஞராம். அதற்குத்தான் இந்த கவிதை வரியாம்!

இதுநாள் வரை கவிஞன் என்ற போர்வையில் திரிந்த இந்தக் கபட வேடதாரி இன்று கழிசடையாய் அம்பலப்பட்டு நிற்கிறார்! 

தமிழ்மணி

Tuesday, 11 November 2025

சனாதன (=பாசிச) எதிர்ப்பு பேசுவோர் ஏன் ஒன்றிணைய வேண்டும்?

அலுமினியம், செம்பு, தங்கம், இரும்பு, ஆக்சிஜன், குளோரின் போன்ற தனிமங்களின் தனித்தனியான பயன்பாடு ஒருபக்கம் இருந்த போதிலும், அவை பிற தனிமங்களோடு சேர்ந்து மூலக்கூறுகளாக மாறும்போது அவற்றின் பயன்பாடு மேலும் பரந்த அளவில் அதிகரிக்கின்றன.


11 புரோட்டான் மற்றும் 11 எலக்ட்ரான்களைக் கொண்ட சோடியம் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானும், அதேபோல 17 புரோட்டான் மற்றும் 17 எலக்ட்ரான்களைக் கொண்ட குளோரின் தனிமத்தில், அதன் வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் 7 வேலன்ஸ் எலக்ட்ரான்களும் இணைந்து சோடியம் குளோரைடு (NaCl) எனும் மூலக்கூறு உருவாகும்போதுதான் நமக்கு சுவை சேர்க்கும் உப்பு கிடைக்கிறது. இந்தக் கூட்டுக்கு நேட்ரம் மூரியாடிக்கம் (Natrum Muriaticum) என்று பெயர். 

NaCl

இந்த நேட்ரம் மூரியாடிக்கத்திலிருந்து தயாரிக்கப்படும் ஹோமியோ மருந்து, உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் யூரிக் அமிலம் போன்றவற்றை வெளியேற்றுவது உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகளுக்கு மருந்தாகப் பயன்படுகிறது. 

உயிரற்ற தனிமங்களே மனிதர்களுக்குப் பயன்படும் பொழுது, உயிருள்ள மனிதர்கள் பலரும் சோடியத்தில் உள்ள ஒரு வேலன்ஸ் எலக்ட்ரானைப் போல தனித்தோ, குளோரினில் உள்ள ஏழு வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல ஒரு சிறு கூட்டமாகவோ ஒன்று சேராமல் வனாந்தரத்தில் அனாதியாக எவருக்கும் பயனின்றி வெளிவட்டத்தில் சுற்றிக் கொண்டிருக்கின்றனர். 

சனாதனம் எனும் நச்சுக்கழிவு இந்த நாட்டின் மொத்த செயல்பாட்டையே சீரழித்துக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இந்த சனாதனக் கழிவுகளை வெளியேற்ற கரிப்புத் தன்மை கொண்ட நேட்ரம் மூரியாடிக்கம் எனும் உப்பு தேவைப்படுகிறது. அதற்கு, வேலன்ஸ் எலக்ட்ரான்களைப் போல தனித்தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் அறிவுஜீவிகளும், சிறுசிறு கூட்டமாக சுற்றிக் கொண்டிருக்கும் அமைப்பு சார்ந்த களப்போராளிகளும் இணைந்து நேட்ரம் மூரியாடிக்கம் எனும் மூலக்கூறாக மாறவில்லை என்றால் சனாதனம் எனும் நச்சுக் கழிவுகளால் இந்த நாடு அழுகிப் போவதைத் தடுக்க முடியாது.

மூன்று, ஐந்து உள்ளிட்ட சிறு சிறு எண்ணிக்கையில் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக சுற்றிக்கொண்டிருக்கும் இயக்கத்தாருக்கும் இது பொருந்தும். ஒரு தனிமத்தில் உள்ள மூன்று வேலன்ஸ் எலக்ட்ரான்களும், மற்றொரு தனிமத்தில் உள்ள ஐந்து வேலன்ஸ் எலக்ட்ரான்களும் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே மூலக்கூறாக உருவாக முடியும்.

இந்த நிலையிலும், இன்னமும் நீங்கள் வேலன்ஸ் எலக்ட்ரான்களாக தனித்தனியே சுற்றிக் கொண்டிருக்கப் போகிறீர்களா அல்லது மூலக்கூறுகளாக ஒன்றிணைந்து மக்களுக்குப் பயன்படப் போகிறீர்களா? முடிவு உங்கள் கையில்!

தமிழ்மணி

கம்யூனிஸ்டுகளின் போர்க்களங்கள்!

சிறுத்தைகளிடமும், சிங்கங்களிடமும், ஓநாய்களிடமும், முதலைகளிடமும் சிக்கிக் கொள்ளும் ஆடுகளும், மாடுகளும், மான்களும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள போராடுகின்றன. இதே விலங்குகள்கூட அதேவகை விலங்குகள் வேறு இடங்களிலிருந்து தங்களது எல்லைகளுக்குள் பிரவேசிப்பதையும் எதிர்த்துப் போராடுகின்றன. தாங்கள் வாழும் பகுதியை அவைகளுக்கு யாரும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லையென்றாலும், அது அவைகளுக்கான உயிர் வாழும் உறைவிடங்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தனித்தோ அல்லது கூட்டாகச் சேர்ந்தோ உயிர் வாழ்வதற்காக (struggle for survival) நடத்தப்படுகின்றன.

மனிதர்களும் இங்கே போராடுகின்றனர். தாங்கள் உயிர் வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விலங்குகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; அதே வேளையில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பண்ணையார்கள் போன்ற மனித விலங்குகளுக்கு எதிராகவும், அது ஆளும் அரசாயினும் எதிர்த்துப் போராடுகின்றனர். 

இந்துமதி

கருத்துரிமை, மனித மாண்பு சிதைக்கப்படும் பொழுதும், அரசியல் உரிமைகள் நசுக்கப்படும், பறிக்கப்படும் பொழுதும் மனிதர்கள் உலகம் முழுவதும் போராடுகின்றனர். முதலையின் வாயில் சிக்கிய மானைக் காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து உதவும் குரங்கைப் போல, மனிதர்களும், சக மனிதர்களின் நலனைக் காக்க, அது தூரதேசமாயினும் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர்.

மனித குலத்தின் ஒவ்வொரு சாராரும், தங்களின் நலனுக்காகப் போராடினாலும், பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் அகிலம் முழுக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

தமிழ்நாட்டிலும்கூட எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றனவோ, அது தனியார் ஆலைகளானாலும், அரசு நிறுவனங்களானாலும், பள்ளி கல்லூரிகளானாலும், முறைசாரா தொழிலாளர்கள் என்றாலும், வேளாண்மை என்றாலும் அங்கெல்லாம் கம்யூனிஸ்டுகளை மட்டுமே பார்க்க முடியும். 
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள்.  ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.

போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், வெற்றியின் சுவடுகளை நினைவுகூர்வதன் மூலம், அவர்கள் மேலும் மேலும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.

1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சிதான் கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது. ரஷ்யப் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நினைவு கூர்வதன் மூலம் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர். 

இந்த ஆண்டு, நவம்பர் 9ஆம் தேதி அன்று, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் சார்பில் வேலூர், தொரப்பாடி, வள்ளலார் மண்டபத்தில், நடைபெற்ற 109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.

சிறுவர்களின் சிலம்பாட்டம், கலைஞர்களின் பாடல்கள், தலைவர்களின் சொற்பொழிவு என களைகட்டிய இந்த விழாவில்  எழுந்த கரவொலிகள், வேலூர் கோட்டையில் முட்டி மோதி, கீழ்த்திசை மலைகளில் தவழ்ந்த மேகங்களில் ஊடுருவி சிலாகித்தன. 

இந்த விழாவில், இளம் தோழர்  இந்துமதி அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற நேருரையைக் கேட்டபோது ஆனந்தப்பெருக்கில் எனது கண்கள் சற்றே பணிந்து நீரைச் சொரிந்தன. விழாக்கள்கூட கம்யூனிஸ்டுகளுக்கு போர்க்களம்தான். போர்க்களங்களே வீரர்களை அடையாளம் காட்டுகின்றன!

தமிழ்மணி

விழாக் காட்சிகள்






மருதையனைப் பிராண்டும் மூக்கரிப்பெடுத்தவர்கள்!

தோழர் வாலாசா வல்லவன் அவர்கள், தோழர் மருதையன் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் கீழ்கண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

"தோழர் மருதையன் அவர்கள்  இந்தியத் தொலைப்பேசி துறையில் நிரந்தரப்பணியில் இருந்து ஒன்பதாண்டுகளில் வேலையை உதறிவிட்டு புரட்சிகர கட்சிப் பணிக்கு வந்தவர். பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிராகத் தெளிவாகப் பேசிவருகிறார்.  அவரைவிட ஈகம் செய்தவர்கள் இருந்தால் அவரை விமர்சிக்கலாம்".

இந்தப் பதிவையொட்டி, தோழர் மருதையன் மீது ஒரு சிலர் கம்பு சுத்தத் தொடங்கி விட்டனர். அங்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே.

மருதையன்

"இயக்கப் பணிகளில் நாற்பதாண்டு காலம் தோழர் மருதையனோடு கைகோர்த்து பயணித்தவன், இன்றும் நெருக்கமாக இருப்பவன் என்கிற முறையிலும், அவர் மகஇக-விலிருந்து வெளியேற்றப்பட்டாரா வெளியேறினாரா என்பது குறித்து அந்த அமைப்புக்குள் இருந்து தோழர் மருதையனுக்காக வாதாடியவன், போராடியவன் என்ற முறையிலும் சொல்கிறேன், அவர் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார் என்பதே உண்மை. 

தோழர் மருதையனுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே சிலர் அதிமேதாவிகளைப் போல எழுதி வருகின்றனர். அவர்களில் சிலர் மகஇக அமைப்பில் செயல்பட்ட காலத்தில், அவர்களின் நெறிபிறழ்வு காரணங்களுக்காகவோ அல்லது நிதி முறைகேடுகளுக்காகவோ அல்லது தான் நினைப்பது போல அந்த அமைப்பு இல்லை என்பதற்காகவோ அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள்.

அறநெறியோடு வாழும் ஒருவரின் அரசியலைக்கூட விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள் இவர்கள். கால்தூசுக்குப் பேறாதவர்களெல்லாம் மருதையனை விமர்சிக்கிறார்கள்.

தான் வெளியேற்றப்பட்டாலும், அவர் வேறு எந்த அமைப்போடும் ஒட்டிக்கொண்டு புரட்சி வேடம் போடவில்லை. 

எந்த ஒரு 'புரட்சிகர' அமைப்பிலும் இல்லாத போதும், இன்றைய அரசியல் சூழலில் எது தேவையோ அதற்காக, அவரது புரிதலுக்கேற்ப செயல்பட்டு வருகிறார். 

இவர்களே மருதையனை 'புரட்சிக்கான அத்தாரிட்டியாகக்' கருதிக் கொண்டு, 'அய்யோ போச்சே புரட்சி!' என்று புலம்புகின்றனர். 'புரட்சிகர' அமைப்பில் இல்லாத ஒருவர், 'புரட்சிக்குத் துரோகம் இழைத்து விட்டார்' என்பது கையாலாகாதவர்களின் கடைந்தெடுத்த கோழைத்தனமான பிரச்சாரம். 

ஏதோ இவர்கள் புரட்சிக்காக கையில் துப்பாக்கியோடு முன் வரிசையில் முன்னேறிச் செல்லும்போது, இவர்களுடைய கைகளை மருதையன் பிடித்து இழுப்பது போல இவர்கள் எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. மருதையனை விமர்சிக்கும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களில் பலர் சொந்த வாழ்க்கைக்குத் திரும்பிவிட்ட 'மாஜி' புரட்சியாளர்கள் என்பது பலருக்கும் தெரியாது. 

நான்கு எழுத்துக்களைக் கோர்த்து முகநூலில் 'புரட்சி' என்று எழுதிவிட்டால், அதையும் நம்பும் மெய்நிகர் உலகில் இவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள் பேசுவார்கள்.

தோழர் மருதைனுடைய எழுத்தும், பேச்சும், செயல்பாடும் இன்றைய காலத்தின் அவசியம். மூக்கு அரிப்பெடுத்தவர்கள் மட்டுமே மருதையனை பிராண்டிக் கொண்டிப்பார்கள். மூக்கரிப்பெடுத்தவர்களைத்தான் SIR கூப்பிடுறாரு. அங்கே போங்க. மூக்கரிப்பாவது குறையும்.

மருதையனுடைய விவகாரம் குறித்து “எதிர்த்து நில்” மற்றும் “ஊரான்” வலைப்பூக்களில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் கூடுதல் விளக்கம் தேவையில்லை. எனவே, இதற்குப் பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் இங்கே யாரும் கம்பு சுத்த வேண்டாம்".

தமிழ்மணி
முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் 
மக்கள் கலை இலக்கியக் கழகம் 

பொன்.சேகர்
மாநில தலைமைக்குழு உறுப்பினர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

Wednesday, 13 August 2025

சென்னை தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் பொதுத்தன்மை என்ன?

கடந்த ஆண்டுகளில் ஒப்பந்த முறை குறித்த சட்டங்கள் எப்படி இருந்தன, தற்போதைய அதன் நிலை என்ன? புதிய தொழிலாளர் நல சட்ட திருத்தம் இது குறித்து என்ன சொல்கிறது?  ஒப்பந்தத் தொழிலாளர்களை முறைப்படுத்தி படிப்படியாக நிரந்தரம் செய்வது என்கிற பழைய சட்டம் முடக்கப்பட்டு இனி கேந்திரமானப் பணிகளில்கூட ஒப்பந்த முறையை நடைமுறைப்படுத்தலாம் என்கிறது புதிய சட்டம். பழைய சட்டம் இருக்கும் போதே ஒப்பந்த முறை எல்லாத் துறைகளிலும் நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதை நாம் அறிவோம்.


இதன் ஒரு பகுதியாகத்தான் சென்னையில் கடந்த 10 ஆண்டுகளில் 10 மண்டலங்களில் ஒப்பந்த முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இனி புதிய தொழிலாளர் சட்டம் அமுலாகும் பொழுது எல்லா இடங்களிலும் ஒப்பந்த முறை நீக்கமற நிறைந்திருக்கும்.

மேலும், புதிய தொழிலாளர் சட்டங்களில் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் தமிழ்நாட்டு அளவில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி (NDLF) சில முன்னெடுப்புகளை செய்திருக்கிறது. மற்றபடி புதிய சட்டத்திருத்தங்களுக்கு எதிராக தமிழ்நாடு அளவிலோ அல்லது இந்திய அளவிலோ போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவோ, போராட்டம் நடத்தவோ அரசியல் கட்சிகளோ, தொழிற்சங்கங்களோ முன்வரவில்லை என்பது கவலையோடு நோக்கத்தக்கது. வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்டங்களிலிருந்துகூட இன்றைய முன்னேறிய நவீன பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதைப் பரிசீலிக்க வேண்டும்.

இதுதான் சென்னையில் தற்போது ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் கொண்டு வரப்படும் ஒப்பந்த முறைக்கு எதிரானப் போராட்டத்தில் நாம் பேச வேண்டிய பொதுத்தன்மை. இதைப் பேசினால்தான் தற்போதைய போராட்டத்தில் மூக்கை நுழைக்கும் சனாதன சங்கிகளையும், இன்னபிற பிழைப்புவாதிகளையும், விளம்பரம் தேடும் சாகசவாதிகளையும் அடையாளம் கண்டு அப்புறப்படுத்த முடியும்.

நிற்க, ஐந்து மற்றும் ஆறாவது மண்டலங்களில் தற்போது பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்கள் தற்காலிகப் பணியார்களா அல்லது வேறு வகைப் பணியாளர்களா, அவர்களுக்கு என்னென்ன சலுகைகள் இதுவரை வழங்கப்பட்டு வந்தன என்பது பற்றி இதுவரை எந்த அக்கறையும் காட்டாத சங்கிகள் உள்ளிட்ட சிலர் போராட்டக் களத்தில் குதிப்பதற்கான பின்னணி என்ன? திமுக அரசு ஒன்றும் பாட்டாளி வர்க்க அரசு அல்ல; அது ஏற்கனவே 12 மணி நேர வேலையை நடைமுறைப்படுத்த முயன்று, கடுமையான எதிர்ப்பினால் பின் வாங்கிக் கொண்டது. அப்பொழுதெல்லாம் தலை காட்டாத சங்கிகள் இப்பொழுது தலைகாட்டுவதற்குக் காரணம் திமுக எதிர்ப்பு-தேர்தல் அறுவடை என்பதைத் தவிர இதில் தொழிலாளர் நலன் துளி அளவும் கிடையாது என்பது பாமரனுக்குக்கூட புரியும்.

ஒப்பந்த முறைக்கு எதிராகக் கடுமையானப் போராட்டத்தைக் கட்டமைக்க வேண்டிய கட்டாயத்திற்குப் பாட்டாளி வர்க்கம் தள்ளப்பட்டுள்ளது. அதற்கு பரந்ததொரு தொழிற்சங்க கூட்டமைப்பை உருவாக்க வேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் போராடுகின்ற தொழிலாளர் பக்கம் உண்மையிலேயே யார் யார் நிற்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். 

இது ஒன்றும் ஜல்லிக்கட்டுப் போராட்டம் அல்ல; பண்பாட்டுத் தளத்தில் உள்ளக் கிளர்ச்சியை ஏற்படுத்தி, மக்கள் எழுச்சியை உருவாக்கி, சாகசங்களை நிகழ்த்திக்காட்டி ஒரிரு நாட்களில் முடிவு காண்பதற்கு? இது வர்க்கப் போராட்டத்தின் ஒரு பகுதி. அதற்கு ஏற்ப வர்க்க சக்திகளின் அணி சேர்க்கையும், விடாப்பிடியான தொடர் பிரச்சாரமும் போராட்டமும் தேவைப்படுகிறது. 

இதன் மூலமாகத்தான் எந்த ஒரு துறையிலும் அது தனியார் நிறுவனமாக இருந்தாலும் ஒப்பந்த முறை கொண்டு வருவதை தடுத்து நிறுத்தவும், ஒப்பந்த முறையை அங்கீகரிக்கும் சட்டத்தை ஒழித்துக் கட்டவும் முடியும். இதுதான் சென்னை தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் என்று நான் கருதுகிறேன்.

தமிழ்மணி

Tuesday, 12 August 2025

பொறுக்கி அரசியல்!

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

ப்போது ஆளுமையில் இருப்பது, திராவிட அரசியலோ, தேசிய அரசியலோ அல்ல. பொறுக்கி அரசியல். இப்போது நடக்கும் அரசியல் பேரணிகள், பொதுக்கூட்டங்கள், அவற்றிலே பேசப்படும் வசனங்கள் – வசவுகள், பேசும் பேச்சாளர்கள், கூடும் மக்கள் போடும் கோஷங்கள், அவற்றை ஏற்பாடு செய்யும் அணிகள் பொறுப்பாளர்கள், இந்த விவரங்களை நிரப்பிக் கொண்டு வரும் செய்தித் தாள்கள்-பத்திரிக்கைகள் இவை அனைத்தும் காட்டுவது பொறுக்கி அரசியலின் ஆளுமையைத்தான்!

“நாட்டில் அரசியல் தரம் தாழ்ந்து விட்டது” என்று ஒரு ஓரத்தில் ஒப்புக்குச் சொல்லிக் கொண்டாலும் மெத்தப்படித்த அறிவாளிகளின் கூட்டம் இந்தப் பொறுக்கி அரசியலைச் சகித்துக் கொள்ளவும், அதனுடன் வாழ்வும், அதையே ரசிக்கவும்கூடப் பழகி விட்டார்கள். கும்பலை ஈர்ப்பவர் (Crowd Pullers) – கவர்ச்சி நிறை தலைவர்கள் (Charismatic Leaders) தான் நாட்டை ஆளத் தகுதியானவர்கள், உரிமை உடையவர்கள் என்று பச்சையாகவே ஒப்புக் கொண்டு விட்டார்கள்.

“பொறுக்கி அரசியல்” என்று சொல்லும்போது இன்றைய அரசியலின் இழிநிலை கண்டு வெறுமனே வெறுப்பு – விரக்தி, பொறாமை ஆத்திரத்திலே சொல்லவில்லை. முதலாளித்துவ அரசியலில் ஒரு வகை, ஒரு வடிவம் என்கிற வரையறுப்போடுதான் சொல்லுகிறோம். பொறுக்கி அரசியலுக்கு என்று ஒரு சமூக அடிப்படை, ஒரு சித்தாந்த அடிப்படை, ஒரு அமைப்பு அடிப்படை உண்டு. இன்று தமிழக அரசியலில் முழுமையடைந்த வடிவில் பொறுக்கி அரசியல் பிரகாசிக்கிறது. பொறுக்கி அரசியலைத் தோற்றுவித்த பெருமை கருணாநிதிக்கு உண்டு; என்றாலும் அதை வளர்த்து முழுமையாக்கிய பெருமை எம்.ஜி.ஆருக்குத்தான் உரித்தாகும். செத்த பின்னும் எம்.ஜி.ஆரின் புகழ் பரப்புவது பொறுக்கி அரசியல் நான்.

பொறுக்கி அரசியலின் சமூக அடிப்படை – உதிரித் தொழிலாளர்கள், கிராமப்புறப் பாமர மக்கள்:

காலனிய ஆட்சிக்கு முன்பிருந்த இந்திய கிராம சமுதாயத்தில் அடிமைகளாகவோ, கொத்தடிமைகளாகவோ, கிராமக் கைத் தொழிலாளர்களாகவோ ஒரு தொழிலும், வேலையும் கொடுத்து குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையாயிருந்தது. காலனிய ஆட்சியும், அதன் பிறகு வந்த காங்கிரசு ஆட்சியும் நகரத்துக் குப்பங்களிலும், கிராமங்களிலும் கோடிக்கணக்கான நிரந்தர வேலையோ, வருமானமோ இல்லாத மக்களைக் குவித்திருக்கிறது. கிராம சமுதாயத்தில் முன்பு கிடைத்த குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான அடிப்படையும் அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.

வருடத்தில் பல நாட்கள் வேலை வாய்ப்புகளின்றி பஞ்சத்திலும், பட்டினியிலும் கிடந்து தவிக்கும் கூலி, ஏழை விவசாயிகளோடு ஓட்டாண்டிகளாகும் நடுத்தர விவசாயிகளும் சேர்கிறார்கள். அரை குறையாகக் கல்வி பயின்ற இளைஞர்கள். படித்தும் வேலை வாய்ப்பின்றி சீரழிந்த கலாச்சாரப் பாதிப்புக்குள்ளான இளைஞர்கள் மூலமாக பொறுக்கி அரசியல் இந்தக் கிராமப்புறப் பாமர மக்களைச் சென்றடைகிறது. ஏற்கனவே நகரத்து குடிசைப் பகுதிகளில் வழியும் உதிரித் தொழிலாளர்களுடன், கிராமப்புறங்களில் இருந்து விரட்டப்படும் விவசாய ஏழை மக்கள் நகரத்து வீதிகளில் குடியேறுகின்றனர்.

பல்வேறு சிறு தொழில்களையும், அன்றாடக் கூலி வேலைகளையும் நம்பி வாழும் இவர்கள் நகர்புற சீரழிவுகளுக்கு எளிதில் பலியாகிறார்கள். அது மட்டுமின்றி கள்ளச்சாராயம், சூதாட்டம், விபச்சாரம் போன்ற சமூக விரோத சீரழிவுகள் கணிசமான உதிரித் தொழிலாளர்களைக் காவு கொள்கின்றன. நிரந்தர வேலையும், வருமானமும் இல்லாத இவர்களை பொறுக்கி அரசியலும் கவர்ச்சிவாதமும் (பாப்புலிசம்) எளிதில் ஈர்த்துக் கொள்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுக்குத் தலைமையளித்து அணிதிரட்டிக் கொள்கிறார்கள்.

பொறுக்கி அரசியலின் சித்தாந்த அடிப்படை: கவர்ச்சிவாதம் (பாப்புலிசம் populism)

பிற்போக்கு சிந்தாந்தங்களை வெளிப்படையாக வைத்து பரந்துபட்ட மக்களை இனிமேலும் ஈர்க்க முடியாது என்கிற அரசியல் ஓட்டாண்டித்தனம் தேர்தல் அரசியல் கட்சிகளுக்கு ஏற்படுகின்றன.

ஆனால் ஆட்சியைப் பிடிப்பதற்கு அவை ஒரு உத்தியைக் கையாளுகின்றன. தமது பிற்போக்கு சித்தாந்தங்களை மூடி மறைத்துக் கொண்டு பாமர மக்களின், குறிப்பாக உதிரித் தொழிலாளர்கள், ஓட்டாண்டிகளான கிராமப்புற ஏழைகளின் அன்றாடத் தேவைகள், விருப்பங்கள், சுவைகளுக்கேற்ப தமது கொள்கைகளை வகுத்துக் கொண்டு அரசியல் நடத்துகின்றன. தமக்கென்று ஒரு உலகப் பார்வை கொண்ட சித்தாந்தமோ, அதைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமையோ உருவாக்கிக் கொள்ள முடியாத இந்தப் பாமர மக்கள் கவர்ச்சிவாதத்துக்குள் மூழ்கி தம்மை அறியாமலேயே பொறுக்கி அரசியலை ஆதரிக்கிறார்கள்.

பொறுக்கி அரசியலின் தமிழக கதாநாயகி; தொண்டர்களுக்கு பால்கனியிலிருந்து தரிசனம் தருகிறார்.

கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) என்று சொல்லும்போது எம்.ஜி.ஆர் உருவாக்கியதைப் போன்ற சினிமா கவர்ச்சியை மட்டும் குறிப்பிடவில்லை. அது பொறுக்கி அரசியலின் கலாச்சார வடிவம். எம்.ஜி.ஆர் உருவாக்கிய ”அண்ணாயிசம்” பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதத்தின் முக்கியமான சித்தாந்த அங்கமாகும். “முதலாளித்துவம், சோசலிசம், கம்யூனிசம்” மூன்றும் இணைந்ததுதான் ’அண்ணாயிசம்’ என்று எம்.ஜி.ஆர் அதற்கு விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கம் எதுவானாலும் அவரது ஆட்சியின் நடைமுறையிலிருந்து ‘அண்ணாயிச’த்துக்கான பொருளை நாம் புரிந்து கொள்ள முடியும்.

தரகு அதிகார முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுத்துவத்தின் நலன்களைத் தொடர்ந்து கட்டிக் காத்து வளர்ப்பது, அதே சமயம் சோசலிசம், கம்யூனிசம் பற்றிய பாமர மக்களின் மிக மிக மோசமான கருத்துக்கேற்ப கவர்ச்சிவாத (பாப்புலிச) நடவடிக்கைகளை மேற்கொள்வது, இதுதான் எம்.ஜி.ஆர் கடைப்பிடித்த அண்ணாயிசம். தேசியமா, திராவிடமா என்று எம்.ஜி.ஆரின் அரசியல் நிலைப்பாடுகளைக்கூட பாகுபடுத்திப் பார்க்க முடியாமல் கவர்ச்சிவாதத்தால் மக்களை அடித்து வீழ்த்துவது; மொழி, இன ஒடுக்குமுறை பாசிச, குரூர, கோமாளித்தனமான ஆட்சி இருந்தாலும் சத்துணவு, பற்பொடி, செருப்பு, வேட்டி, சேலை, தண்ணீர் குடம், வறட்சி, வெள்ளம், தீ, நிவாரண அன்பளிப்புகள் ஆகிய இலவசத் திட்டங்களால் நல்லாட்சி நடப்பதாக ஒரு பிரமையை உருவாக்குவது; தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் ஆகிய எந்தச் சமுகப் பிரிவினர்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினாலும் ஈவிரக்கமின்றி நசுக்கும்போதே ஆட்சியாளர்களின் வள்ளல் தன்மையை பறைசாற்றும் “அன்பளிப்பு”களால் வாயடைக்கச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால் அரசாங்க “இலவச –  அன்பளிப்பு”த் திட்டங்களின் கீழ் கணிசமான அளவு மக்களை வைத்துக் கொள்வதன் மூலம் பாமரத்தனமான சோசலிசத் தோற்றத்தை ஏற்படுத்துவது – இதுதான் எம்.ஜி.ஆரின் ‘அண்ணாயிசம் – கவர்ச்சிவாதம்’.

பொறுக்கி அரசியல் வேர்விட்டுப் பரவுகிறது. ஜானகி கட்சிக் கூட்டத்துக்கு ரயில் கூரை மீதேறி தொண்டர்களின் யாத்திரை.

பொறுக்கி அரசியலின் அமைப்பு அடிப்படை: பிழைப்புவாத அரசியல் அமைப்புகள்:

காந்தியம், இந்து ராஷ்டிரம், அம்பேதகாரிசம், இனவாதம் போன்ற தேர்தல் அரசியல் கட்சிகள் தமது கொள்கைகளைக் கொண்டு அணிகளை – அமைப்புகளைக் கட்டுகின்றன. ஆனால் பிழைப்பு வாதத்தையே அரசியல் கொள்கையாக்கிக் கொண்டுள்ள அரசியல் அமைப்புகள் சில தோன்றியுள்ளன. அவை தமது தலைவர்கள் – அணிகளின் பிழைப்புவாதத்துக்கேற்ற முறையில் அரசியலையும் போராட்டங்களையும் வகுத்துக் கொண்டு இயங்குகின்றன. விவசாயம், வியாபாரம், ஆலை உற்பத்தி, மருத்துவம், காண்டிராக்ட் ஒப்பந்தம், சட்டத்துறை போன்று சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகக் கருதி இயக்கும் அரசியல் அமைப்புகளையே பிழைப்புவாத அமைப்புகள் என்கிறோம்.

தலைவர்கள் மட்டுமல்ல நகர வட்டங்கள் – கிராமங்களுக்குப் பொறுப்பாக உள்ள கட்சி அணிகள் வரை மேலிருந்து கீழ்மட்டம்வரை பிழைப்பு வாதத்தையே அரசியலாகக் கொண்ட அமைப்புகள். எத்தக் கட்சியில், அதிலும் எந்த கோஷ்டியில் இருப்பது வருமானத்துக்குரிய ஆதாயமாக இருக்கும் என்பதை பரிசீலித்து, விவாதித்து இவர்கள் தெரிவு செய்கிறார்கள். மேல்மட்டத் தலைவர்கள் லஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்குக் கீழே உள்ள பிழைப்பு வாதிகள் அரசியல் தரகு வேலையை ஒரு தொழிலாக அதற்கே உரிய விதிமுறைகளுடன் செய்கிறார்கள்.

தேர்தல் காலங்களில் பிரச்சார வேலைகள், ஆள்பிடிக்கும் வேலைகள், ஓட்டுக்களுக்கான பேரங்கள் ஆகியவற்றில் கட்சி நிதியையே சுருட்டிக் கொள்ளுகிறார்கள். மற்ற காலங்களில் சத்துணவுத் திட்டம் போன்ற இலவசத் திட்டங்கள், வெள்ளம் – வறட்சி – தீ விபத்து ஆகியவற்றுக்கு முன்னின்று அதிகாரிகளுடன் சேர்ந்து கொள்ளை அடிக்கிறார்கள். இப்போது இந்த வேலைகள் செய்வதற்காக இவ்வளவு தொகை தமக்குக் கமிஷனாகத் தரவேண்டும் என்று உரிமையோடு அவர்களே எடுத்துக் கொள்ளுகிறார்கள். அரசு கடன் வழங்கும் விழாக்கள், போலீஸ் நிலைய வழக்குகள், வேலைவாய்ப்புகள் – சிபாரிசுகள் போன்றவற்றில் அரசாங்கத்தின் ”அங்கீகரிக்கப்பட்ட” தரகர்களாக இருக்கிறார்கள்.

கட்சித் தலைவர்களின் எடுபிடிகளாகவும், அரசியல் தூதர்களாகவும் இருந்த பிழைப்பு வாதிகள் கிராமப் பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகள், மக்கள் கமிட்டிகளில் நியமனம் பெறுவது, பிறகு பஞ்சாயத்து, யூனியன், நகராட்சிகளுக்குத் தேர்தல்களில் நிற்பது என்று முன்னேறி எம்.எல்.ஏக்-கள், எம்.பி-கள் மட்டுமல்ல, மந்திரிகள் அளவுக்கு உயர்ந்து விட்டார்கள். கூட்டுறவுகள், உள்ளூராட்சிகள் ஆகியவற்றுக்கான தேர்தல்களைத் தள்ளி வைத்து இந்தப் பிழைப்புவாதிகளுக்கான மடங்களாக்கிய எம்.ஜி.ஆர் ஆட்சியில் கோவில்கள், வாரியங்கள், பள்ளி – கல்லூரிகள் போன்ற சகலமட்டங்களிலும் கட்சி பிழைப்பு வாதிகளுக்கு “பொறுப்புகள்” பகிர்ந்தளிக்கப்பட்டன. கட்சிக்காகப் பாடுபடுபவர்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு “ஏற்பாடு” செய்து தருவதைத் தமது பொறுப்பாகவும் – அவர்களது உரிமையாகவும் பகிரங்கமாகவே ஒழுங்குபடுத்தினார் எம்.ஜி.ஆர்.

பொறுக்கி அரசியல், தமிழகத்துக்கு ஒரு பாரம்பரியம் உண்டு:

பொறுக்கி அரசியலை அறிமுகப்படுத்தி, நிறுவி வளர்த்ததில் தமிழ்நாட்டுக்கு ஒரு பாரம்பரியப் பெருமை உண்டு, அதன் பிதாமகனும் பெருமைக்குரியவரும் கருணாநிதிதான்! மூப்பனார், வாண்டையார், தென்கொண்டார், மன்றாடியார் போன்ற நிலப்பிரபுக்களின் பண்ணை வீடுகளிலும், கோவை நாயுடுக்கள், வடபாதி மங்கலம் முதலியார், சென்னை டி.டி.கே – சிவசைலம், மதுரை டிவிஎஸ் போன்ற முதலாளிகளின் விருந்தினர் மாளிகைகளிலும் காமராஜர் தேர்தல் அரசியல் நடத்தி வந்தார். வோட்டர்களைக் கொத்தடிமைகளாக வைத்து சாதி அரசியல் பேரங்கள் மூலமே ஆட்சி நடத்தினார்.

அந்த சாதி அரசியலை வீழ்த்த பொறுக்கி அரசியலால்தான் முடிந்தது. “பேரறிஞர், நாவலர், சொல்லின் செல்வர், கலைஞர், பேராசிரியர்” போன்றவர்கள் மட்டுமே இருந்திருந்தால் காமராஜரின் சாதி அரசியலை வீழ்த்தியிருக்க முடியாது. அதை முறியடிக்க மாவட்டத்துக்கு ஒரு பொறுக்கி அரசியல் தலைமையை உருவாக்கினார் கருணாநிதி. நெல்லைக்கு ஒரு தூத்துக்குடி சாமி, மதுரைக்கு ஒரு முத்து, திருச்சிக்கு ஒரு அன்பில், தஞ்சைக்கு ஒரு மன்னை, கோவைக்கு ஒரு ராஜமாணிக்கம், சேலத்துக்கு ஒரு வீரபாண்டி, ஆற்காடுக்கு ஒரு ப.உ.ச என்று பொறுக்கி அரசியலுக்குரிய சகல தகுதிகள் கொண்ட தலைமையை உருவாக்கியவர் கருணாநிதி.

அவர்கள் திராவிட அரசியலின் ”பழக்கதோஷம்” உள்ளவர்கள் – கருணாநிதிக்கு விசுவாசமாக நின்று விட்டவர்கள் – என்ற நிலையில் முழுக்க முழுக்க தமது ரசிகர்களை மட்டும் கொண்ட புதிய பிழைப்புவாதக் கட்சியை உருவாக்கினார் எம்ஜிஆர். இன்று வீரப்பன் கும்பலின் முன்னணித் தலைவர்களான முன்னாள் மந்திரிகள், ஜேப்பியார் போன்றவர்கள், ஜெயலலிதா கும்பலின் கருப்பசாமி பாண்டியன், சேடப்பட்டி முத்தையா, சாத்தூர் ராமச்சந்திரன், மதுரை நவநீதகிருஷ்ணன், சென்னை மதுசூதனன், திருநாவுக்கரசு.போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் பொறுக்கி அரசியலின் செல்லப் பிள்ளைகள். இவர்களில் எவருக்கும் திராவிடம், தேசியம் என்கிற பேதமில்லை. “எம்.ஜி.ஆரின் அண்ணாயிசம்”தான் இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ள சித்தாந்தம். பிழைப்பு வாதம்தான் இவர்களின் லட்சியம். பொறுக்கி அரசியல்தான் இவர்களின் கொள்கை!

பொறுக்கி அரசியலில் தேசியவாதிகளும் தஞ்சம் புகுந்தார்கள்.

காங்கிரசின் ஜனநாயக சோசலிசப் பித்தலாட்டத்தை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி 1987 தேர்தலில் பல மாநிலங்களில் தோற்கடித்தனர். மத்தியிலும் சொற்பப் பெரும்பான்மையே பெற்றது. கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் காங்கிரசைக் காப்பாற்ற முடியும் என்று முடிவு செய்த இந்திரா மன்னர் மானியம் ஒழிப்பு, வங்கிகள் தேச உடைமை, அரசுத்துறை தொழில்களுக்கு முக்கியத்துவம் போன்ற போலி சோசலிச நாடகமாடத் துவங்கினார். மொரார்ஜி, காமராஜ், பாடீல், சஞ்சீவரெட்டி, அதுல்யாகோஷ், சி. பி. குப்தா போன்ற பழம்பெரும் காங்கிரசு பெருச்சாளிகளுக்குப் பதிலாக ஜெகஜீவன்ராம், பக்ருதீன் அலி அகமது போன்ற பிழைப்புவாதத் தலைவர்களை அணிசேர்த்தார். இந்திராவுக்கு மக்கள் செல்வாக்கு இருப்பதாகக் காட்டிக் கொள்வதற்காக பொறுக்கி அரசியல் வழிமுறைகளில் கூட்டம் சேர்க்கத் தலைப்பட்டார். 1921 வங்கதேசப்போரும், தேர்தல் வெற்றியும் ஏற்படுத்திய செல்வாக்கு மங்கி அரசியல் பொருளாதார நெருக்கடிகள் முற்றியது. நாடெங்கும் மக்கள் போராட்டங்கள் வெடித்தபோது அரசு எந்திரத்தைக் கொண்டு அவற்றை அடக்கிய அதே சமயம் பிழைப்புவாதிகளைக் கொண்டு அரசியல் முட்டுக் கொடுத்து காங்கிரசைத் தூக்கி நிறுத்தினார்.

எதிரணியை வீழ்த்த கவர்ச்சிவாதத்தில் தஞ்சம் புகுந்தார் பாசிச இந்திரா.

குஜராத், பீகார் போராட்டங்கள் வெடித்து, வளர்த்து கடைசியாக இந்திரா தேர்தல் செல்லாது என்கிற தீர்ப்பு வந்து அவரது ஆட்சியே ஆட்டங்கண்டபோது, நாடாளுமன்றத்துக்கு வெளியே நேரடியான மோதலில் எதிர்க்கட்சிகள் இறங்கின. இந்திரா காங்கிரசு முழுக்க முழுக்க பொறுக்கி அரசியலில் தஞ்சம் புகுந்தது. பணத்தை வாரி இறைத்து லாரிகளில் ஆள் பிடித்து வந்து இந்திரா வீட்டு முன்பு பேரணிகள் நடத்தப்பட்டன. சஞ்சய் காந்தி இந்திராவின் வாரிசாக மட்டுமல்ல,பொறுக்கி அரசியல் தலைவராகவும் உயர்ந்தார். எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பிழைப்புவாதிகளின் குண்டர்படை கட்டினார். அவசரநிலை ஆட்சியின்போது உள்ளூர் அதிகாரம் அவர்களின் கைகளில்தான் இருந்தது.

அவசரநிலை ஆட்சிக்குப்பிறகு பிரச்சாரங்கள், கூட்ட ஏற்பாடுகள் உட்பட எல்லாத் தேர்தல் வேலைகளும் தொழில் ரீதியில் நடத்துபவர்களுக்கே ஒப்படைத்தது காங்கிரசு. மற்ற தேர்தல் அரசியல் கட்சிகளும் அதைப் பின்பற்றத் தொடங்கின. டெல்லி, பம்பாய் போன்ற பெரும் நகரங்களில் தேர்தல் கூட்டங்களுக்கு (ஆள் சப்ளை) மக்களைத் திரட்டித் தருவதையே தொழிலாகக் கொண்டே கும்பல்கள் உள்ளன. பீகார், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கிரிமினல் குற்றவாளிகளே எம்.எல்.ஏக்-கள் மந்திரிகளாகும் அளவுக்குப் பொறுக்கி அரசியல் வளர்த்து விட்டது.

பொறுக்கி அரசியலுக்குப் பலியான நடுத்தர வர்க்கம் ராஜீவின் தேர்தல் வெற்றியைக் கொண்டாடுகிறது.

சஞ்சய் காந்தியின் பொறுக்கி அரசியலை எதிர்ப்பதாகவும், அரசியல் தரகர்களை ஒழிக்கப்போவதாகவும் ஆட்சிக்கு வந்தபோது சவடாலடித்தார் ராஜீவ். ஃபேர் பேக்ஸ், போபார்ஸ் விவகாரங்கள் அம்பலமாகி ராஜீவின் யோக்கியதைகள் தெரிந்துவிட்ட நிலையில் அவரும் பேரணிகள் நடத்தத் துவங்கி விட்டார். நவீனப்படுத்துவது, தொழில் மயமாக்குவது, திறமை -நிர்வாகத்துக்கு முதலிடம் தரப் போவதாக சவடாலடித்தவர் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) தான் தமது கொள்கையென்று சஞ்சம் புகுந்து விட்டார். பிழைப்புவாத அரசியல் கும்பலிடம் சரணடைந்து விட்டார். எம்.ஜி.ஆர் பாணியிலான “இலவச அன்பளிப்பு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கி தேர்தலைக் குறிவைத்து செயல்படுகிறார். எம்.ஜி.ஆர் பாணியிலே சினிமா நடிகர்களைக் காட்டி ஓட்டுப் பொறுக்குவதில் இறங்கியுள்ளார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிந்த இறுதி நிலை பொறுக்கி அரசியல்:

காமராஜரின் காலத்தில் பண்ணையார் – முதலாளிகள் மாளிகையில் நடந்த சாதி அரசியல் வீழ்த்தப்பட்டு கருணாநிதியின் பொறுக்கி அரசியல் முன்னுக்கு வந்தபோது “பழுத்த ஜனநாயகவாதிகள்” அருவருப்பாகப் பார்த்தார்கள். ஆனாலும் அண்ணாத் துரையின் ”பெருந்தன்மை”, கருணாநிதியின் ”நிர்வாகத் திறமை”, பிறகு எம்.ஜி.ஆரின் ”மனிதாபிமானம்” ஆகியவற்றைச் சொல்லிச் சகித்துக் கொண்டார்கள். சஞ்சய் காந்தியின் அவசரநிலை ஆட்டங்கள் அந்தப் பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு பீதியூட்டினாலும் ராஜீவ் பதவிக்கு வந்தபோது “பரிசுத்தம்” வந்ததென்று மகிழ்ந்து போனார்கள். இப்போது தமிழ்நாட்டில் வீரப்பன் – ஜெயலலிதா கும்பல்களும், டில்லியில் ராஜீவும் பொறுக்கி அரசியலை முழு வீச்சில் நடத்துகிறார்கள். அது “பழுத்த ஜனநாயகவாதிகளுக்கு” பீதியூட்டுகிறது.

“உலகிலேயே சிறந்தது, நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சிமுறை; சில பிழைப்புவாதிகள் அரசியலில் புகுந்து கெடுத்து விட்டார்கள்; அரசியல் தரம் தாழ்ந்து போய்விட்டது” என்று ‘சமாதானம்’ சொல்லுகிறார்கள், போலிக் கம்யூனிஸ்டு கட்சிகள், ஜனதா, காங்கிரசிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் அரசியலுக்கு வெளியிலுள்ள “பழம் தேசபக்தர்கள்” ஆகிய “பழுத்த ஜனநாயகவாதிகள்”. ஆனால் பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்க ரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் எல்லா போலித்தனங்களையும் வீசி எறிந்துவிட்டு அப்பட்டமான பாசிச சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான சமூக, சித்தாந்த, அமைப்பு அடிப்படையை பொறுக்கி அரசியல் ஏற்படுத்துகிறது. பாசிசத்தை நிறுவுவதற்கு இனவாதம், தேசியவாதம், போலி சோசலிசம் அடங்கிய சித்தாந்தமாக தேசிய சோசலிசம் அதாவது நாஜிசம் அமைத்ததைப் போல கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) பாசிச ராஜீவ் கும்பலுக்கு உதவும். நாஜிக் கட்சியைப் போல பிழைப்பு வாதிகளைக் கொண்ட காங்கிரசு, எம்.ஜி ஆர், கருணாநிதி கட்சிகள் அரசியல் – அமைப்பு அடிப்படையைக் கொடுக்கும்.

ஒழுங்கு படுத்தப்பட்ட ஆலை உற்பத்தியில் இருக்கும் தொழிலாளர்கள் பொருளாதாரவாதத்தின செல்வாக்கில் இருக்கிறார்கள். போலிக் கம்யூனிஸ்டுகளின் பிழைப்பு வாதக் கொள்கைதான் தொழிலாளர்களைப் பொருளாதார வாதத்துக்குள் தள்ளிவிட்டது. மார்க்சிய – லெனினிய சித்தாந்தத்தைத் திரித்து பாமரத்தனமான சோசலிச சித்தாந்தத்தைப் போலி கம்யூனிஸ்டுகள் பிரச்சாரம் செய்வதனால்தான் பொறுக்கி அரசியலின் கவர்ச்சிவாதம் (பாப்புலிசம்) வெற்றி பெற முடிகிறது. ஆகவே, தொழிலாளர்கள் தலைமையிலான தொழிலாளர் – விவசாயிகள் கூட்டை சமூக அடிப்படையாகவும், மார்க்சிய – லெனினியத்தை சித்தாந்த அடிப்படையாகவும் கொண்ட புரட்சிகர அமைப்பு மட்டுமே பொறுக்கி அரசியலுக்கு மாற்றாக இருந்து அதை முறியடிக்க முடியும்.


ஆர்.கே.

(புதிய ஜனநாயகம் – மார்ச் 01 – 15, 1988 இதழ்)

மார்ச் 01 – 15, 1988 புதிய ஜனநாயகம் இதழில் வெளியான கட்டுரை