Tuesday, 11 November 2025

மருதையனைப் பிராண்டும் மூக்கரிப்பெடுத்தவர்கள்!

தோழர் வாலாசா வல்லவன் அவர்கள், தோழர் மருதையன் குறித்து, தனது முகநூல் பக்கத்தில் கீழ்கண்ட பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். 

"தோழர் மருதையன் அவர்கள்  இந்தியத் தொலைப்பேசி துறையில் நிரந்தரப்பணியில் இருந்து ஒன்பதாண்டுகளில் வேலையை உதறிவிட்டு புரட்சிகர கட்சிப் பணிக்கு வந்தவர். பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும் பார்ப்பனியத்துக்கு எதிராகத் தெளிவாகப் பேசிவருகிறார்.  அவரைவிட ஈகம் செய்தவர்கள் இருந்தால் அவரை விமர்சிக்கலாம்".

இந்தப் பதிவையொட்டி, தோழர் மருதையன் மீது ஒரு சிலர் கம்பு சுத்தத் தொடங்கி விட்டனர். அங்கு நான் எழுதிய பின்னூட்டம் கீழே.

மருதையன்

"இயக்கப் பணிகளில் நாற்பதாண்டு காலம் தோழர் மருதையனோடு கைகோர்த்து பயணித்தவன், இன்றும் நெருக்கமாக இருப்பவன் என்கிற முறையிலும், அவர் மகஇக-விலிருந்து வெளியேற்றப்பட்டாரா வெளியேறினாரா என்பது குறித்து அந்த அமைப்புக்குள் இருந்து தோழர் மருதையனுக்காக வாதாடியவன், போராடியவன் என்ற முறையிலும் சொல்கிறேன், அவர் வெளியேறவில்லை வெளியேற்றப்பட்டார் என்பதே உண்மை. 

தோழர் மருதையனுடைய அரசியல் நிலைப்பாடுகள் குறித்து கடந்த சில ஆண்டுகளாகவே சிலர் அதிமேதாவிகளைப் போல எழுதி வருகின்றனர். அவர்களில் சிலர் மகஇக அமைப்பில் செயல்பட்ட காலத்தில், அவர்களின் நெறிபிறழ்வு காரணங்களுக்காகவோ அல்லது நிதி முறைகேடுகளுக்காகவோ அல்லது தான் நினைப்பது போல அந்த அமைப்பு இல்லை என்பதற்காகவோ அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் அல்லது வெளியேறியவர்கள்.

அறநெறியோடு வாழும் ஒருவரின் அரசியலைக்கூட விமர்சிப்பதற்கு அருகதையற்றவர்கள் இவர்கள். கால்தூசுக்குப் பேறாதவர்களெல்லாம் மருதையனை விமர்சிக்கிறார்கள்.

தான் வெளியேற்றப்பட்டாலும், அவர் வேறு எந்த அமைப்போடும் ஒட்டிக்கொண்டு புரட்சி வேடம் போடவில்லை. 

எந்த ஒரு 'புரட்சிகர' அமைப்பிலும் இல்லாத போதும், இன்றைய அரசியல் சூழலில் எது தேவையோ அதற்காக, அவரது புரிதலுக்கேற்ப செயல்பட்டு வருகிறார். 

இவர்களே மருதையனை 'புரட்சிக்கான அத்தாரிட்டியாகக்' கருதிக் கொண்டு, 'அய்யோ போச்சே புரட்சி!' என்று புலம்புகின்றனர். 'புரட்சிகர' அமைப்பில் இல்லாத ஒருவர், 'புரட்சிக்குத் துரோகம் இழைத்து விட்டார்' என்பது கையாலாகாதவர்களின் கடைந்தெடுத்த கோழைத்தனமான பிரச்சாரம். 

ஏதோ இவர்கள் புரட்சிக்காக கையில் துப்பாக்கியோடு முன் வரிசையில் முன்னேறிச் செல்லும்போது, இவர்களுடைய கைகளை மருதையன் பிடித்து இழுப்பது போல இவர்கள் எழுதுவதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை. மருதையனை விமர்சிக்கும் வீராதி வீரர்கள், சூராதி சூரர்களில் பலர் சொந்த வாழ்க்கைக்குத் திரும்பிவிட்ட 'மாஜி' புரட்சியாளர்கள் என்பது பலருக்கும் தெரியாது. 

நான்கு எழுத்துக்களைக் கோர்த்து முகநூலில் 'புரட்சி' என்று எழுதிவிட்டால், அதையும் நம்பும் மெய்நிகர் உலகில் இவர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள் பேசுவார்கள்.

தோழர் மருதைனுடைய எழுத்தும், பேச்சும், செயல்பாடும் இன்றைய காலத்தின் அவசியம். மூக்கு அரிப்பெடுத்தவர்கள் மட்டுமே மருதையனை பிராண்டிக் கொண்டிப்பார்கள். மூக்கரிப்பெடுத்தவர்களைத்தான் SIR கூப்பிடுறாரு. அங்கே போங்க. மூக்கரிப்பாவது குறையும்.

மருதையனுடைய விவகாரம் குறித்து “எதிர்த்து நில்” மற்றும் “ஊரான்” வலைப்பூக்களில் எண்ணற்ற கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். இதற்கு மேலும் கூடுதல் விளக்கம் தேவையில்லை. எனவே, இதற்குப் பதில் அளிக்கிறேன் என்ற பெயரில் இங்கே யாரும் கம்பு சுத்த வேண்டாம்".

தமிழ்மணி
முன்னாள் மாநில செயற்குழு உறுப்பினர் 
மக்கள் கலை இலக்கியக் கழகம் 

பொன்.சேகர்
மாநில தலைமைக்குழு உறுப்பினர் 
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

No comments:

Post a Comment