இங்கேதான் என் வாழ்வின் உண்மையான கணக்கு தொடங்குகிறது.
ஆக, என் மொத்த மாத வருமானம் 15,700 ரூபாய்.
ஆனால் வெளியுலகம் அப்படியே நிற்கிறதா?
பொன் சேகர்
(ஊரான்)
முதலில் வழக்குகளைத் திரும்பப் பெறுங்கள், பிறகு பேச்சுவார்த்தை என இழுத்தடித்தது நிர்வாகம். இறுதியில் இரு தரப்பும் வழக்குகளைத் திரும்பப் பெற்று, புதிய ஊழியர் எண்ணோடு புதிதாய்ப் பணிக்குச் சேர்ந்தோம்.
மூவர் ஹைதராபாத்திலும், ஒருவர் இராணிப்பேட்டையிலும் சேர்ந்துவிட, பெங்களூர் EDN எனை எடுக்கத் தயங்க, என்றோ நான் கேட்ட இராணிப்பேட்டை என்னைத் தேடி வந்தது. 'தமக்கெதுவும் தகவல் இல்லை' என அங்கும் மறுக்க, பிறகு தாய்ச் சொல்லை தட்டாமல், மூன்று நாள் கழித்து 26.03.1998 முன் தேதியிட்டு என்னை ஏற்றுக் கொண்டது இராணிப்பேட்டை.
திருச்சியில் என்னை இடைநீக்கம் செய்த பாபுதான் இங்கு தலைமை அதிகாரி. மூட்டு வலியிலிருந்து மீண்டவன் எனத் தெரிந்தும், பணி நிமித்தமாய் அடிக்கடி வெளியூர் செல்லும் நிர்மாணச் சேவைத் துறையில் இணைக்கப்பட்டேன். சில ஆண்டுகள் தமிழகத்தின் நரிமணம், நரிப்பையூர், ஒடிசாவின் அங்குல், டால்ச்சர் என மன நிறைவாய் பணி செய்தும், சில சமயம் முடியாத வேலைகளுக்கு, அவை பின்னால் முடிக்கப்படும் என்றாலும்கூட, முன்கூட்டியே முடிந்ததாய் கணக்கெழுத என் மனம் இடம் கொடாததால் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் உள்ள அளவீட்டியல் (metrology) பிரிவில் என்னைப் பிணைத்துக் கொண்டேன்.
மேற்பார்வையாளர்கள், அதிகாரிகளாய் பதவி உயர்வு பெறுவதற்கான நேர்காணலைச் சந்தித்தேன். தகுதி உடையோரில் நான் ஒருவன்தான் பட்டதாரி எனத் தெரிந்தும், திருச்சியை நினைவில் கொண்டு பதவி உயர்வு மறுக்கப்பட்டது. எத்தனை முறைதான் ஒரு மாட்டைத் தோலுரிக்க முடியும்? தவிர்க்க முடியா நபராய் நான் நிலை பெற்றதால், மேற்கொண்டு என்னை முடக்க முடியவில்லை.
அளவீட்டியல் பிரிவின் தலைமையாய், தரக் கட்டுப்பாட்டுத் துறை-விசிறிகள் பிரிவின் தலைமையாப் பொறுப்பேற்று, பழனிச்சாமி-ஏகாம்பரத்தின் அனுபவங்களைக் கணக்கில் கொண்டு, முர்மு-சுகன்யாவின் கடின உழைப்போடு
பதினைந்து ஆண்டுகளாய் அளவீட்டியல் கூடத்திற்கு இல்லாதிருந்த NABL அங்கீகாரத்தை 2017-ல் பெற்றுத் தந்து 24.06.2018-ல் பணி நிறைவு பெற்றேன். பணி நிறைவு விழாவின் போது கூட, எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அவை 'புரோட்டாக்காலாய்' இருந்தும் கூட, மாலையையும் பொன்னாடையையும் புறக்கணித்தேன்.
பழைய ஊதியம் பாதுகாக்கப்படும் என்ற உத்திரவாதம் புதிய ஆணையில் குறிப்பிட்டிருந்த போதும், முறையீடுகளோடு அது முடிந்து போனது. அரை ஊதியத்தில் பாதி பணிக்காலம் முடிந்து, ஓய்வூதியமும் பாதிதான் என்பதால் முறையீடுகளும் தொடர்கின்றன. கிட்ட வில்லை என்பதற்காக விலங்குகள் கூட சோர்ந்து விடுவதில்லை.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9
இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7
இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6
இராணிப்பேட்டையில் 1980 ல் தொடங்கப்பட்ட பெல் ஆலைக்கு ஆட்கள் தேவைப்பட்ட காலம் அது. அங்குச் செல்வோருக்கு இரண்டு 'இன்கிரிமெண்ட்' கூடுதல் என்பதால் திருச்சியில் இருந்து பலர் முண்டியடித்தனர். ஊர், பக்கம் என்பதால் 1982 ல் நானும் முயன்றேன்; முடியவில்லை.
தம்பி, தங்கை, அக்கா மகன் ஆகியோர் படிப்புக்காக திருச்சி வர, குடும்பம் விரிந்தது.
பதவி உயர்வுக்குப் பயன்படுமே என எல்லோரையும் போல REC (NIT) ல் நானும் பொறியியல் பட்டம் பெற்றேன். இதிலும் கூட சிபாரிசு கொடிகட்டிப் பறந்ததால், 'மெக்கானிக்கலுக்குப்' பதிலாக, ET எழுத பெருமளவில் உதவாது என்றாலும், ஒரு பட்டம் இருக்கட்டுமே என 'மெட்டலர்ஜி' படித்தேன். இதுவே பின்னாளில் சட்டம் பயில உதவியது.
வேலூரிலும் மகஇக செயல்பட்டதால், இயக்க வேலைகள் தடைபடாது என்பதால் இராணிப்பேட்டைக்கு மாற்றலாகும் முயற்சியைக் கைவிடவில்லை. ஃபெலிக்சோடு 'மியூட்சுவல்' போட்டேன். தங்கை மற்றும் அக்கா மகன் இருவரின் படிப்பை வாலாசாப்பேட்டைக்கு நம்பிக்கையோடு மாற்றினேன். அவர்களைக் காக்க அத்திமூரான் கொட்டாயிலிருந்து தாய் தந்தையரும் வாலாஜா சென்றனர். எனக்கோ இரட்டிப்புச் செலவு.
பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் 1991 நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட தனியார்மயம்-தாராளமயம்-உலகமயக் கொள்கையின் நேரடி விளைவு, 1992 ஆம் ஆண்டு பெல் நிறுவனத்தில் முதன் முறையாக போனஸ் மறுக்கப்பட்டது. இது அநீதி என தன்னெழுச்சியாய் ஆர்ப்பரித்தனர் தொழிலாளர்கள். செல்வாக்குள்ள தொழிற்சங்கங்களாலேயே மட்டுப் படுத்த முடியாமல் போராட்டம் இரவு வரை நீடித்தது. காரணம் மகஇக தான் என நிர்வாகத்தோடு மாற்றுத் தொழிற்சங்கத் தலைவர்கள் சிலர், கூட்டுச் சேர்ந்து சதி செய்ததால் மூன்று தொழிலாளர்கள் விசாரணையின்றி வேலை நீக்கம் செய்யப்பட்டனர். அதில் இருவர் மகஇக தோழர்கள். தொழிற்சங்கங்களில் கருங்காலிகள், உணரவைத்தப் போராட்டம் அது.
வேலை நீக்கத்தைக் கண்டஞ்சிய எமது செயலாளர் உள்ளிட்ட சங்க முன்னோடிகள் சிலர் நோட்டீஸ் அடித்துக் கொடுத்துவிட்டு கொத்தாய் ஓடிவிட, சிங்கமாய் நின்ற தலைவர் சிங்கராயராரும், விவேகமாய் வினையாற்றிய தோழர் நாராயணசாமியும், மற்ற சில தோழர்களும் சங்கத்தைக் கட்டிக் காக்கத் தூணாய் நின்றவர்கள். நினைவில் வாழும் அவர்கள் இருவரும் அன்று துவண்டிருந்தால் இன்று திருச்சியில் 'பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன்' ஏது?
வேலை நீக்க உத்தரவுக்கு, நீதி மன்றம் விதித்த இடைக்காலத் தடை ஆணையை எடுத்துக் கொண்டு 25.11.1992 அன்று இரு மகஇக தோழர்களும் ஆலைக்குள் சென்றபோது ஏற்பட்ட சம்பவத்தில், நான் அவ்விடத்தில் இல்லாத போதும், நானும் கந்தசாமியும், 'ED ஒழிக!' என கத்திக் கொண்டு செக்யூரிட்டிகளைத் தள்ளிவிட்டு, அவ்விருவரையும் மெயின் கேட் வழியாக ஆலைக்குள் அழைத்துச் சென்றதாகப் பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக்கப்பட்டு இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டோம்.
பொய்சாட்சிச் சொல்ல செக்யூரிட்டிகளே முன்வராததால், அன்று SSTP ஆலையில் வேலை பார்த்த ஒரு பாதுகாவல் அதிகாரியையும், புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு ஊழியரையும் சாட்சிகளாக 'செட் அப்' செய்தனர். புலனாய்வு ஊழியர் பிறழ் சாட்சியாய் ஆன போதும், அவ்விடத்திலேயே வேலை பார்க்காத பாதுகாப்பு அதிகாரியின் சாட்சியத்தை மட்டும் வைத்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் துறை விசாரணைக்குப் பிறகு 1994, அக்டோபர் 14 அன்று இருவரும் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டோம். அன்று சிசிடிவி கேமராக்கள் இருந்திருந்தால் ஒரு வேளை குற்றச்சாட்டுகளை முறியடித்திருக்க முடியுமோ?
வேலைநீக்கம் ஈவிரக்கமின்றி கழுத்தருக்கும் கொடும் பலி. தருணம் பார்த்துக் காத்திருந்து என்னைத் தீர்த்துக் கட்டி உள்ளனர் என்பதை, 'சேகருக்குப் பதிலாக வேறு ஆளைப் பாருங்கள்!' என நிர்வாகத் தரப்பில் சொன்னதாக என்னோடு இராணிப்பேட்டைக்கு 'மியூச்சுவல்' போட்ட ஃபெலிக்ஸ் மூலம் பின்னாளில் தெரிந்து கொண்டேன்.
தற்காலிகப் பணிநீக்கக் காலத்தில் கிடைத்த பாதி ஊதியத்தில் காலத்தை தள்ளியாச்சு. இனி வருவாய்க்கு என்ன செய்ய? பெல் ஊழியர்கள் பரிவோடு கொடுத்த நன்கொடையால் சிறிது காலம் ஓடியது. பணிநீக்கம் செய்யப்பட்ட நான்கு தோழர்கள் மகஇக-வினர். கூட்டாக ஏதேனும் சிறு தொழில் செய்ய முயற்சி செய்தும், எதுவும் கைகூடவில்லை. ஒருவர் கூட்டுக் குடும்பத்தோடு ஐய்க்கியமாக, ஒருவர் செங்கல் சூளையில் ஈடுபட, ஒருவர் பெட்டிக் கடையில் சங்கமிக்க, நானோ பார் கவுன்சில் நோக்கிப் பயணமானேன்.
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்
பட்டயப் படிப்பு முடிந்து விட்டது. பெயருக்குப் பின்னால் பெருமையாய் DME (diploma in mechanical engineering) ஒட்டிக் கொண்டது. ஆனால் வேலை? கிடைக்காமலா போய் விடும் என்ற நம்பிக்கையோடு திருச்சி பெல் நிறுவனம் நடத்திய எழுத்துத் தேர்வை முடித்துவிட்டு கிராமத்துக்குத் திரும்பினேன். 'ஐந்தைப் பெற்றவன் ஆண்டியாவான்' என்பார்கள். நாங்களோ அதற்கும் மேலே, இரண்டு ஆண் வாரிசுகளோடு ஈன்றவர்கள் உட்பட ஒன்பது பேர். கைக்கும் வாய்க்குமே எட்டாத சூழலில் பட்டணத்துப் படிப்பு என்றால் சும்மாவா? ஒரு இளங்காளையையும் அரை ஏக்கர் புன்செய்யையும் DME உள்வாங்கிக் கொண்டது.
இடையில் திருச்சி பெல்லுக்குச் சென்று மற்றுமொரு எழுத்துத் தேர்வையும் நேர்காணலையும் எதிர்கொண்டு தேர்ச்சி பெற்றுத் திரும்பினேன். தேர்வில் நான் 'காப்பி' அடிப்பதாக நினைத்துக் கொண்டு "ஏய் யு ப்ளு சர்ட்?" என மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஒரு அதிகாரி என்னைப் பார்த்துக் கூச்சலிட்ட போது, எனது திறமையை சந்தேகிக்கிறாரே என, வந்த வேலை கெட்டு விடக்கூடாது என்பதற்காக என்னுள் எழுந்த ஆத்திரத்தை உள் அழுத்திக் கொண்டேன். மாதங்கள் உருண்டோடின. ஆனால் அழைப்பு மட்டும் வந்தபாடில்லை.
பட்டணத்து வாசிகளுக்குப் பிரச்சனை இல்லை. நாலு கம்பெனி படி ஏறினாலே ஏதாவது ஒன்றில் நுழைந்து விட முடியும். அத்திமூரான் கொட்டாயில் நான் எங்கே தேட? பெல்லிலிருந்து தபால் வருமா என ஆறு மாதம் காத்திருந்து பட்டணத்திற்குப் பயணமானேன். தபாலே வந்தாலும், தபால்காரரின் பாதம் படாத கொட்டாய்க்கு மட்டும் வந்து விடுமா என்ன? தபால்காரர் கை மாற்ற, வழிப்போக்கர்களே கடுதாசியைச் சேர்க்கும் காலம் அது. 'ஏதோ கடுதாசி!, கொடுக்கலாம்!' என எரவாணத்தில் (தாழ்வாரக் கூரை) சொருகிவிட்டால் அது 'அப்பாயின்மெண்ட் ஆர்டராக' இருந்தாலும் அத்தோடு முடிந்தது கதை; ஆடு மாடுகளோடு காலத்தைக் கடத்த வேண்டியதுதான்.
ஊரைத் தாண்டி நடந்து வந்தேன். எதிர்ப்பட்டான் இளைய பங்காளி. உள்ளத்தில் பகை இருந்தாலும், வஞ்சிக்க எண்ணாமல், அவன் கொடுத்த கடுதாசியே பட்டணத்துப் பயணத்தைத் திருச்சிக்குத் திசை மாற்றியது. டிசம்ர் 4, 1978, திருச்சி பெல் நிறுவனத்தில் தொழில்நுட்ப உதவியாளராய் தற்காலிகப் (NMR) பணி. ஒரு நாள் ஊதியம் ரூ.13.20. வாடகை, போக்குவரத்து, உணவு, பராமரிப்பு போக மாதம் 100 ரூபாய் வீட்டுக்கும் அனுப்பி வந்தேன். ஓராண்டு NMR, ஓராண்டு பயிற்சி முடித்து, மீண்டும் ஒரு நேர்காணலைச் சந்தித்து ரூ.520 அடிப்படை ஊதியத்தில் 28.03.1981 ல் பொறுப்பாளராய் நிரந்தரப் பணி.
சிலகாலம் கீழரண் சாலை முருகன் திரையரங்கு எதிரில் லிபர்ட்டி, லாட்ஜ், அதன் பிறகு அல்லிமால் தெரு அமுதா லாட்ஜ் வாசம்.
1980 களின் தொடக்கத்தில், பெல்லில் பணியாற்றிய சில ஊழிர்களை ஈர்த்தது போலவே என்னையும் உள்வாங்கிக் கொண்டது மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக). அதுமுதல் தமிழ்மணி ஆனேன். பகலில் ஆலைப்பணி, மாலையில் மக்கள் பணி என்பது வழமையாய் மாறிப்போனது. நக்சலைட் பயங்கரவாத அமைப்பு என்கிற பயம் பலரை அச்சுறுத்தினாலும் பிரசுரம், சுவரெழுத்து, சுவரொட்டி, தெருமுனைப் பிரச்சாரம், பேச்சு என அனைத்திலும் ஆர்வத்துடன் அஞ்சாமல் பயணத்தைத் தொடர்ந்தேன்.
நண்பர்களோடு வீடெடுத்து தில்லை நகரிலும், மலைக்கோட்டை தெற்குத் தெருவிலும் கருணா-காங்க்ஸ்-எபி-கோவிந்தா-குணா-ராம்கியோடு சிலகாலம் வாசம். உறவுகள் கூட வெறுக்கும் சொரியாசிஸ் என்னை ஆட்கொண்ட போதும் பண்போடு அரவணைத்த பாசக்கார நண்பர்கள். சமையலுக்கு ஆள் வைத்தோம். அன்னமிட்ட காடப்பன் மட்டும் இன்றும் என் நினைவில்.
வயது கூடியது. பருவ வயதில் பலரைப் கண்டாலும் காதல் மட்டும் எட்டாக் கனியாய், வாழ்க்கைத் துணையைத் தேடி....
தொடரும்
தமிழ்மணி
தொடர்புடைய பதிவுகள்: