Showing posts with label மார்க்சியம். Show all posts
Showing posts with label மார்க்சியம். Show all posts

Sunday, 22 September 2024

மார்க்சியவாதிகளே! மாணவர்களாய் மாறுங்கள்!

மார்க்சியம் பேசும் எல்லோருமே  கம்யூனிஸ்ட் அறிக்கை, மூலதனம், லெனின் தேர்வு நூல்கள், தேசிய இனப் பிரச்சனை குறித்து ஸ்டாலின், மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் என மூல நூல்களைத்தான் படிக்கின்றனர். 

ஓம்சின் மின்சார விதி,  பித்தாகரசின் கணித விதி, ஆர்க்கிமிடிஸின் மிதவை விதி என அறிவியலின் பலப்பல மூலவிதிகளைப் படிப்பவர்கள் அனைவருமே உலகம் முழுக்க ஒரே மாதிரியாகத்தான் புரிந்து கொள்கின்றனர், நடைமுறைப் படுத்துகின்றனர்.  ஆனால் மார்க்சிய மூல நூல்களைப் படிப்போருக்கு மட்டும் மாறுபட்டப் புரிதல்களும் நடைமுறைகளும்  இருப்பதற்குக் காரணம் என்ன? மார்க்சியம் ஒரு அறிவியல் இல்லையா? 


ஒன்று மார்க்சியம் படிப்போருக்கு மார்க்சிய விதிகள் புரியாமல் இருக்க வேண்டும் அல்லது புரிந்தாலும் தங்களின் விருப்பமே இதில் மேலோங்கி இருக்க வேண்டும். திருக்குறளை தங்கள் வசதிக்கேற்ப சங்கிகள் வேண்டுமென்றே திரித்துப் புரட்டுவதைப் போல மார்சியத்தையும் இவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப புரட்டுகிறார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

இந்தியாவின் அரசியல் பொருளாதாரம் இன்று என்னவாக இருக்கிறதோ அது அதுவாகத்தான் இருக்கிறது. இதைப் புரிந்து கொள்வதிலும் மார்க்சியவாதிகள் வேறுபடுகிறார்களே, ஏன்? இந்தியாவின் அரசியல் பொருளாதரத்தில் பல உண்மைகள் இருக்க முடியாதே? ஒரு உண்மைதானே இருக்க முடியும்? அப்படி இருக்க மார்க்சியவாதிகளுக்கு மட்டும் பலநூறு புரிதல்கள் வருவது ஏன்? 

தான் நம்புவதுதான் (கடவுள்) உண்மை என நம்பும் ஒரு பக்தனுக்கும், தான் நம்புவதுதான் உண்மையான மார்க்சியம் என நம்பும் ஒரு மார்க்சியவாதிக்கும் என்ன வேறுபாடு?

மார்க்சியம் என்றால் இதுதான் மார்க்சியம் என்றும், இந்தியாவில் சமூக மாற்றம் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றும் ஒரு முன்முடிவை வைத்துக்கொண்டு, அதற்கான ஆதாரங்களைத்தான் மூல நூல்களில் இன்றைய மார்க்சியவாதிகள் தேடுகிறார்களோ என்றுகூட ஐயுறவேண்டி உள்ளது.

அதிகத் தரவுகள் கிடைக்கும் போதுதான் ஒரு சிக்கலுக்கான காரணங்களைக் கண்டறிந்து அதைத் தீர்க்கவும் முடியும் என்பது இன்றைய அறிவியல் அணுகுமுறை.

சிலர் மார்க்சிய நூல்களைக் கட்டுக் கட்டாகப் புதுப்பிக்கின்றனர். இரவு பகலாகச் சிலர் படிக்கின்றனர். பலர் வண்டி வண்டியாக எழுதிக் குவிக்கின்றனர். அப்படியானால் நிறையத் தரவுகள் கிடைக்கிறது என்றுதானே பொருள். தரவுகள் அதிகரிக்க அதிகரிக்க இந்தியப் புரட்சி குறித்தப் புரிதலில் ஒத்தக் கருத்தை நோக்கி நகருவதுதானே நடக்க வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இவர்கள் தரவுகளைத் தேடத் தேட
சிக்கல்கள் அதிகமாவதோடு கருத்து வேறுபாடுகளும் அதிகரித்து ஒற்றுமைக்குப் பதிலாக பிளவுகளே எஞ்சி நிற்கின்றன.

மார்க்சியம் பேசும் பலரும் ஏற்கனவே படித்த விவரங்களிலிருந்து ஒரு முடிவுக்கு வந்துவிட்டு, அந்த முடிவுக்கான ஆதாரங்களைத்தான் இவர்கள் மார்க்சிய மூலநூல்களில் தேடிக் கொண்டிருக்கின்றனர். தங்களுடைய முடிவுதான் அறுதியானது, இறுதியானது என்கிற இறுமாப்பும் இவர்களைத் தொற்றிக் கொள்வதால் இவர்கள் தங்களை மார்க்சிய அதிமேதாவிகளாகக் கருதிக் கொள்வதோடு, தங்களது முடிவோடு மாறுபடுகிறவர்களை ஓடுகாலிகள், சந்தர்ப்பவாதிகள், திருத்தல்வாதிகள் என வசைபாடி, நேற்று வரை தோழர்களாகப் பழகியவர்களிடம் பங்காளிச் சண்டைக்குத் தூபம் போடுவதோடு மார்க்சியவாதிகள் மேலும் மேலும் பிளவுபடுவதற்குக் காரணமாக அமைகின்றனர்.  

என்னைப் பொறுத்த வரையில் இந்தியாவில் மார்க்சியத்தில் கரை கண்டவர்கள் எவரும் இல்லை. எல்லோரும் மாணவர்கள்தான். ஆனால், ஒரு சிலரோ தங்களை ஆசிரியர்களாக, பேராசிரியர்களாகக் கருதிக் கொண்டு எல்லோருக்கும் மேலானவர்களாக தங்களை நிறுத்திக் கொள்கின்றனர். அந்த மார்க்சே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்தாலும் அவருக்கே இவர்கள் வகுப்பெடுக்கத் தொடங்கிவிடுவார்கள்.

எனவே, மார்க்சியவாதிகளே, மாணவர்களாய் மாறுங்கள். மார்க்சியம் பற்றிப் படருவதை யாராலும் தடுக்க முடியாது. மாணவர்களே எதையும் சாதிக்க வல்லவர்கள்.

தமிழ்மணி 

Friday, 7 June 2024

மார்க்சிய-லெனினிய வாதிகளுக்கு இந்திய வாக்காளர்கள் உணர்த்தும் பாடம் என்ன?

அரசியல் துறையிலும், அமைப்புத் துறையிலும் கருத்து வேறுபாடுகள் இல்லாத எந்த ஒரு கட்சியும், இயக்கமும் இருக்கவே முடியாது.

ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில் எடுக்கப்படும் பெரும்பான்மை முடிவுக்கு சிறுபான்மையாக உள்ளவர்கள் கட்டுப்படுவதும்,

அதேபோல பல்வேறு கிளைகளைக் கொண்ட ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில் கீழ்மட்ட அணிகள் தலைமைக்குக் கட்டுப்படுவதும், 

ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுவில் உள்ள ஒவ்வொருவருக்கும் கருத்துச் சொல்ல சுதந்திரம் அளிப்பதும்

ஆகிய இந்த மூன்றும்தான் ஒரு அமைப்பைத் தூக்கி நிறுத்துவதற்கான ஜனநாயகத்தின் தூண்கள். இதைத்தான் ஜனநாயக மத்தியத்துவம் என்கிறார்கள்.

இவற்றை முழுமையாகக் கடைபிடிக்காத போதுதான் ஒரு கட்சியில் அல்லது அமைப்பில் அல்லது குழுக்களில் பிளவுகள் ஏற்படுகின்றன. பொதுவுடமை இயக்கங்கள், குறிப்பாக மார்க்சிய-லெனினிய இயக்கங்கள் பல்வேறு குழுக்களாக, துண்டு துண்டாக சிதறிக் கிடப்பதற்கு இந்த ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாட்டை கடைபிடிக்காத,  வன்முறைப் (அராஜகப்) போக்குதான் அடிப்படைக் காரணம்.

திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட தேர்தல் அரசியல் கட்சிகளில் இல்லாத கருத்து வேறுபாடுகளா? உள் முரண்களா? எங்கே இல்லை முரண்பாடுகள்? கருத்து வேறுபாடுகள்? அந்தக் கட்சிகளில் எல்லாம் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துண்டு துண்டாக சிதறிப் போவதில்லையே? தலைமைக்குக் கட்டுப்படுகிறார்களே? ஏன்?

பிழைப்புவாத அரசியல் கட்சிகளிடம் இருக்கின்ற குறைந்தபட்ச ஜனநாயக உணர்வுகூட மார்க்சியம்-லெனினியம் பேசும் தோழர்களிடம் இல்லாதது வேதனை அளிக்கிறது. 

இந்திய அரசியலைக் கணிப்பதில், 'எல்லாம் எமக்குத்தான் தெரியும்' என்கிற அதிமேதாவித்தனமும், மார்க்சியம்-லெனினியம் பேசும் இயக்கங்களின் பிளவுகளுக்கு முக்கியப் பங்காற்றுகின்றன.

ஒரு கட்சி அல்லது அமைப்பு அல்லது குழு என்று எடுத்துக் கொண்டால், அதில் ஓராயிரம் கருத்துக்கள் வரத்தான் செய்யும். அத்தகைய கருத்துக்களில் எது பெரும்பான்மையான கருத்தோ அதை ஏற்றுக் கொண்டு செயல்படுவதும், சிறுபான்மையான கருத்துக்கள்தான் சரி என்று கருதுவோர் அதைப் பெரும்பான்மை ஆக்குவதற்கான போராட்டத்தை உள்ளிருந்தே செய்வதும்தான் ஒரு அமைப்பு கட்டுக்கோப்பாக இருப்பதற்கும் வளர்ச்சியை நோக்கிச் செல்வதற்கும் உதவும்.

நூறு பூக்கள் மலரட்டும் என்று மாவோ சொன்னதை, நூறு குழுக்கள் உருவாகட்டும் என்று இவர்கள் புரிந்து கொண்டார்களோ? சிறுபான்மை கருத்தைக் கொண்டு வெளியேறி தனிக் குழுவாக செயல்பட்டுவோர், எந்தக் குழுவிலிருந்து வெளியேறினார்களோ அந்தக் குழுவை மட்டுமே வசைப்பாடிக் கொண்டு காலத்தைத் தள்ளுகின்ற போக்கு இன்று அதிகரித்துள்ளது. அதேபோல தனி நபர்களாக வெளியேறிய இத்தகைய நபர்களும் இதே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். 

மேற்கண்ட சிறுபான்மையினரும் தனி நபர்களும், எந்த மார்க்சிய-லெனினியத்தை நேசிப்பதாகச் சொல்கிறார்களோ அவற்றை பலவீனப்படுத்துகின்ற வேலையைத்தான் தாங்கள் செய்வதாகவோ அல்லது மார்க்சிய-லெனினியத்தின் மீதான வெறுப்பை மக்களிடையே பரப்புகின்ற வேலையைத்தான் தாங்கள் செய்வதாகவோ அவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

இந்து மதவெறிப் பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்கிற கடமையை சாதாரண இந்திய வாக்காளர்கள் உணர்ந்திருக்கின்ற அளவுக்குக்கூட மார்க்சியம்-லெனினியம் பேசும் இந்தச் சிறுபான்மைக் குழுவினர் மற்றும் தனி நபர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை. 

இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு, இனியாவது மார்க்சியம்-லெனினியம் பேசுபவர்கள் தங்களுக்கான ஒரு பொது மேடையை உருவாக்கி ஒரே அமைப்பாக ஒன்றிணைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்றால் இந்தியாவில் மார்க்சிய-லெனினியத்தின் சுவடுகளே இல்லாமல் போகும். 

தமிழ்மணி

Monday, 11 January 2021

இழி குணம்: ஓய்வறியாப் போராளிகள்!.....11

இதுவரை நான் எடுத்துச் சொன்னவை ஒரு வகை மாதிரிதான். இப்படி எண்ணற்றத் தோழர்களின் அளப்பரிய தியாகம் மற்றும் கடும் உழைப்பால், மக்களின் நம்பிக்கையைப் பெற்றுச் செயல்படும் அமைப்புகள்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் மக்கள் அதிகாரம் உள்ளிட்ட அதன் தோழமை அமைப்புகள்.

திருச்சி பெல் நிறுவன ஊழியர்களைக் கொண்டுதான் 1982 ல் மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி கிளை தொடங்கப்பட்டது. இராணிப்பேட்டை பெல் ஊழியர்களைக் கொண்டுதான் வேலூர் கிளையும் செயல்பட்டு வந்தது. திருச்சி, வேலூர் மட்டுமன்றி மதுரை, கோவை, கடலூர், சென்னை, சிவகங்கை ஆகிய கிளைகளிலும் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்கள் மத்திய மாநில அரசு ஊழியர்கள்தான். ஒரு சில தோழர்கள் தங்களது அலுவலக வேலையை விட்டுவிட்டு இயக்கப் பணிகளையே நிரந்தர வேலையாக மேற்கொண்டனர். 


நிரந்தரமான வேலை, அதுவும் அரசு வேலை, கை நிறைய ஊதியம் என சொகுசாக வாழ முடியும் - அதாவது 'மார்க்சியர்கள்' வார்த்தையில் குட்டி முதலாளித்துவ வாழ்க்கை வாழ முடியும்-என்ற போதிலும் கூட, தங்களுடைய வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து‌க் கொண்டு செயல்பட முன்வந்ததற்கான அடிப்படைக் காரணம் மார்க்சியத்தின்பால் இவர்கள் கொண்ட காதல்தான். முதலாளித்துவ சுரண்டல் அமைப்பிலிருந்து மக்களை மீட்பதற்கு மார்க்சியம்தானே இன்றும் ஒரே மாமருந்தாக உள்ளது.


மக்கள் கலை இலக்கியக் கழகத்தைத் தொடர்ந்து விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி என அந்தந்தப் பிரிவு மக்களுக்கான அமைப்புகள் தொடங்கப்பட்டன. மிகச் சாதாரண மக்களையும் இந்த அமைப்புகள் தன்வசம் ஈர்த்தன. 2015 ல் மக்கள் அதிகாரம் தொடங்கப்பட்டு, அது முன்னெடுத்த போராட்டங்களால், பெருவாரியான மக்களை ஈர்த்ததோடு, அது ஒரு அரசியல் சக்தியாக பிறரால் அங்கீகரிக்கும் அளவுக்குப் பிரபலமடைந்தது. அரசு மற்றும் ஆலை ஊழியர்கள் மட்டுமன்றி, சிறு வியாபாரிகள், நடுத்தர விவசாயிகள் உள்ளிட்ட சகல பிரிவு மக்களையும் இந்த அமைப்புகள் தம்பக்கம் ஈர்க்கத் தொடங்கின.


மற்ற கட்சிகளில், கட்சி வேலைகள்-களப்பணி என்பது வேறாகவும், வாழ்க்கை முறை என்பது வேறாகவும் இருக்கும். பொதுவுடைமை இயக்கத்தினர் மற்றும் பெரியாரிய சிந்தனையாளர்கள் மட்டும் இதில் விதிவிலக்காக இருப்பர். தங்களது வாழ்க்கை முறையையும் இயக்கக் கோட்பாடுகளுக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்கின்றனர். சாதி-மத-சடங்கு- சம்பிரதாயங்கள் மற்றும் மூட நம்பிக்கைகளை விட்டொழித்து பகுத்தறிவு வாழ்க்கை முறையை கைக்கொள்கின்றனர் பெரியாரிய சிந்தனையாளர்கள். மேற்கண்ட அம்சங்களுடன் கூடுதலாக சாதாரண ஏழை எளிய உழைப்பாளி மக்களைப் போல எளிமையான வாழ்க்கை முறையையும் மேற்கொள்கின்றனர் பொதுஉடைமை சிந்தனையாளர்கள். 


உழைப்பை மட்டுமே விற்று வாழக்கூடிய ஏழை எளிய மக்கள்தானே பாட்டாளிகள். புரட்சிக்குத் தலைமை தாங்கும் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால், பொதுவுடமை இயக்கத்தில் செயல்பட முன் வருகின்ற படித்த, வசதி படைத்த பிரிவில் இருந்து வருபவர்கள் தங்களது சிந்தனை மற்றும் வாழ்க்கை முறையை பாட்டாளிகள் நிலைக்கு மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் உணர்த்துகிறது. 

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மீது "நக்சலைட்" என்று முத்திரை குத்தி அச்சுறுத்த ஒரு சிலர் முயற்சி செய்தாலும், அதையெல்லாம் துச்சமெனத் தூக்கி எறிந்து செயல்பட பலர் முன் வருகின்றனர். அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டே, மாலை நேரம், விடுமுறை நாட்களை இயக்கப் பணிகளுக்காக ஒதுக்குகின்றனர். மிக முக்கியமான வேலை என்றால் சம்பள இழப்பைக் கூட பொருட்படுத்தாமல் விடுப்பு எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். தங்களுடைய வருவாயில் ஒரு பகுதியை இயக்கத்திற்கு மாதந்தோரும் நன்கொடையாக அளிக்கின்றனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகம் தடைசெய்யப்பட்ட அமைப்பும் அல்ல; ஒரு கலை இலக்கிய அமைப்பில் ஒரு அரசு ஊழியரோ, ஆலைத் தொழிலாளியோ செயல்படுவது சட்டப்படி தவறான நடத்தையும் அல்ல என்பதையும் இவர்கள் தெரிந்தே வைத்துள்ளனர்.


தமிழகத்தின் எந்த மூலையில் போராட்டம் நடந்தாலும், நீண்ட தூரப் பயணத்தையும், பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் குடும்பத்தோடு போராட்டங்களில் பங்கேற்கின்றனர். தங்களுடைய சேமிப்பின் பெரும் பகுதியை இயக்க வேலைகளுக்காகச் செலவிடுகின்றனர். கைது-வழக்கு-சிறை  எதுவரினும் துணிச்சலோடு எதிர்கொள்கின்றனர். சுருக்கமாகச் சொன்னால் தம்முடைய வாழ்க்கையில் கணிசமான நேரத்தையும், தங்களது வருவாயில் கணிசமானத் தொகையையும் இயக்கப் பணிகளுக்காக ஒதுக்குகின்றனர்.


இவர்களில் சிலர் அரசு அலுவலகங்களில் பணியாற்றினாலும், கையூட்டுப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதும், இவர்கள் இலஞ்ச ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதில்லை. இவர்கள் மதுபோதைக்கு ஆட்படுவதில்லை; ஆணாதிக்கத் திமிரோடு பெண்களை இழிவாக நடத்துவதில்லை. ஆதிக்கச் சாதி பின்னணி கொண்டவர்களாக இருந்தாலும் சாதிப் பாகுபாடு பார்ப்பதில்லை. சாதி மறுப்புத் திருமணங்களை மிக இயல்பாக மேற்கொள்கின்றனர். பாதிக்கப்படுகிற மக்களுக்குத் தங்களால் இயன்றவரை ஓடோடி உதவிகள் செய்கின்றனர். இவர்களிடம் இழி குணம் ஏதும் இல்லை என்பதால் இவர்கள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாகின்றனர். மொத்தத்தில் இவர்கள் ஓய்வறியாப் போராளிகள்.


தொடரும்


தமிழ்மணி


தொடர்புடைய பதிவுகள்


இழி குணம்: பெல்லில் இரண்டாவது அத்தியாயம்.....10

இழி குணம்: மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன்!.....9

இழி குணம்: போனஸ் போராட்டமும் களப்பலியும்!.....8


இழி குணம்: நாலரை கோடி 'பெல்' உணவக ஊழல்!.....7


இழி குணம்: எதிர் கொண்ட கசையடிகளும், சிறைக் கொட்டடிகளும்!.....6


இழி குணம்: இராகு காலத்தில் இணை ஏற்பு! .....5