Thursday, 25 July 2024

வினவோடு வீணாய் போக வேண்டாம்!

இந்தியாவில் பொதுவுடமைக் கட்சி தொடங்கி நூறாவது ஆண்டை நெருங்க உள்ளதாம்.  மா-லெ இயக்கம் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் புரட்சி முன்னேறவில்லையாம். இனி மக்கள் திரள் பேரெழுச்சிப் பாதையில் இந்தியப் புரட்சியை முன்னெடுக்கப் போகிறார்களாம். இப்படி அன்மையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது வினவு கும்பல்.

மகஇக முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் மருதையன் விலகளையொட்டி  கட்சி அணிகள் தொடுத்த கேள்விக் கணைகளைக் கண்டும்,  'பெல் சிட்டி' ஊழலுக்கு பழைய தலைமை துணை போனதால் எழுந்த பிரச்சனையை எதிர்கொள்ளத் திராணியற்று, பெரும்பான்மைக் கருத்தை ஏற்க மறுத்து, கட்சியை விட்டு ஓடிய பழைய தலைமையோடு ஓடியவர்கள்தான் இந்த வினவு கும்பல். அதன் பிறகு கட்சிப் பணத்தைப் பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் அவர்களும் பிளவுண்டு. போனார்கள். 

இவற்றையெல்லாம் மூடி மறைத்து விட்டு, ஏதோ கட்சியில் வலது சந்தர்ப்பவாதப் போக்கு வந்ததனால்தான் கட்சிப் பிளவுபட்டதாகக் கதை அளக்கிறார்கள்.

தோழர் மருதையன் விலகளை தவறாகக் கையாண்ட பழைய தலைமை, அதே நேரத்தில் அப்பொழுது எழுந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளரின் 'பெல் சிட்டி' ஊழலுக்கு துணை போன பழைய தலைமை ஆகிய இரு காரணங்களுக்காகத்தான் பழைய தலைமை அமைப்பை விட்டு ஓடி தனியாகச் செயல்பட்டது. இதுதான் பிளவுக்கு அடிப்படையான காரணம். இவையெல்லாம் ஆவணங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

தங்களை மிகப்பெரிய சித்தாந்தவாதிகளாக காட்டிக் கொள்வதற்காக அமைப்பில் வலது திசைவிலகல் தோன்றியதுதான் பிளவுக்குக் காரணம் என பழைய வெங்காயத்தையே தொடர்ந்து உரித்துக் கொண்டிருக்கிறது இந்த வினவு கும்பல். வினவு தளத்தை பெரும்பான்மையாக உள்ளவர்களிடம் ஒப்படைப்பதற்குப் பதிலாக நயவஞ்சகமாக வினவு இணைய தளத்தை கைப்பற்றிக் கொண்டது இந்த சதிகார கும்பல்.

இவர்கள் உரிக்கின்ற இதே வெங்காயத்தைத்தான் இவர்களிடமிருந்து பிரிந்து போன 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' என்ற பெயரில் செயல்படும் இன்னொரு குழுவும் உரித்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் இந்தியப் புரட்சியை முன்னெடுப்பதாகக் கூறித் திரிகிறது.

ஒரு கட்சி அல்லது குழு என்று சொன்னால், அரசியல் பிரச்சனையாக இருந்தாலும் அல்லது அமைப்பு பிரச்சனையாக இருந்தாலும் அதில் பல நூறு கருத்துக்கள் வரத்தான் செய்யும். அதில் பெரும்பான்மைக் கருத்து எதுவோ அதை ஏற்றுக்கொண்டு, அந்த அமைப்பிலேயே தொடர்ந்து  செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும்.  

சிறுபான்மை கருத்து உடையவர்கள் தங்களுடைய கருத்தின் நியாயத்தை, அந்த அமைப்பிலேயே இருந்து கொண்டு தொடர்ந்து வலியுறுத்தி அவர்களுடைய கருத்தைப் பெரும்பான்மையாக்குவதற்கு முயற்சிப்பதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். அதை விடுத்து எடுத்தேன் கவித்தேன் என்று சிறுபான்மை கருத்து உடையவர்கள் வெளியே சென்று தனியாக செயல்படுவது புரட்சிக்கும் மக்களுக்கும் செய்கின்ற துரோகமாகும்.

ஒருவேளை சிறுபான்மையாய் இருந்தாலும், தாங்கள்தான் மிகப் பெரிய அதிபுத்திசாலிகள் என்று கருதி வெளியேறும் பட்சத்தில், வெளியேறிய பிறகு வேறு ஒரு புதிய பெயரில் செயல்படுவதுதான் ஜனநாயகத்தை மதிக்கின்ற போக்காகும். ஆனால் இந்தச் சிறுபான்மை வினவு கும்பலோ, கட்சி மற்றும் மக்கள் திரள் அமைப்புகளான மகஇக, மக்கள் அதிகாரம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்கிற பெயரிலேயே செயல்பட்டு, பிற இடதுசாரி, ஜனநாயக சக்திகள் மற்றும் பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. 

ஆண்டுக்கு ஒரு முறை அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்கிற அளவுக்குத்தான் இவர்களுடைய அரசியல் புரிதலும் இருக்கிறது. அந்த அளவுக்கு இவர்கள் அரசியலில் கன்றுக்குட்டிகளாக இருந்து கொண்டு, புதியவர்களிடம் பழைய வரலாறுகளை மூடி மறைத்துவிட்டு மற்றவர்களைக் குறை கூறித் திரிகிறார்கள். ஆண்டுக்கு ஒரு முறை அரசியலை மாற்றிக் கொள்பவர்களுக்கு பழைய அமைப்பு பெயர்களைப் பயன்படுத்துவதற்கு எந்த அருகதையும் இல்லை.

வினவு கும்பலில் எஞ்சி இருக்கின்ற புரட்சியை நேசிக்கின்ற, ஜனநாயகத்தை மதிக்கின்ற தோழர்கள், அந்தக் கும்பலை விட்டு வெளியேறி தோழர் கோவன், ராஜூ தலைமையிலான தாய் அமைப்பில் இணைந்து செயல்படுவதுதான் இன்றைய காலத்தின் தேவை. இல்லையேல், வேலையை உதறித் தள்ளிவிட்டு, குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு, போராட்டம் வழக்கு, கைது, சிறை உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை எதிர்கொண்டு செய்கின்ற அத்தனை அர்ப்பணிப்புகளும், தியாகங்களும் விழலுக்கு இறைத்த நீராய்ப் போகும். இதை இப்போது அவர்கள் உணர முடியாது. 20, 30 ஆண்டுகளுக்குப் பிறகுதான் உணர முடியும். இதுதான் பழைய தோழர்களின் அனுபவம்.

வினவோடு இருந்து வீணாய்ப் போக வேண்டாம் என்று வேண்டுவதற்காகத்தான் இந்தப் பதிவு. வினவு கும்பலிடம் இருந்து பிரிந்து போன மற்றொரு சிறுபான்மை கும்பலான 'புரட்சிகர மக்கள் அதிகாரம்' தோழர்களுக்கும் இந்த வேண்டுகோளை சேர்த்தே முன்வைக்கிறேன்.

பல்வேறு சிறு சிறு குழுக்களாக பிளவுண்டு கிடக்கும் எல்லா மார்க்சிய - லெனினிய குழுக்களுக்கும் இந்தக் கட்டுரை சமர்ப்பணம்.

ஒரு சிலரின் அரசியல் அரிப்புக்காக பல நூறு தோழர்களின் உழைப்பு வீணாகக் கூடாது என்கிற ஆதங்கத்தின் வெளிப்பாடுதான் இந்தக் கட்டுரை. யாரையும் புண்படுத்துவதற்கோ மட்டம் தட்டுவதற்கோ அல்ல.

தமிழ்மணி

தொடர்புடைய பதிவுகள் 




Sunday, 7 July 2024

நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை என்ன?

 

 



"கொலைக்களமாக மாறிவரும் சமூகச் சூழல்! இதற்கு முடிவே கிடையாதா?"

என்ற தலைப்பில் இன்று ஒரு கட்டரை வெளியிட்டிருந்தேன்

அந்தக் கட்டுரையை கீழ்கண்டவாறு முடித்திருந்தேன்.

"உள்ளாட்சி அமைப்புகளை நக்சல்பாரிகள் கைப்பற்றி,  நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.

மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.
மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்"

whatsapp குழுவில் பகிர்ந்த போது ஒரு நண்பர் கீழ்க்கண்ட கேள்வி எழுப்பி இருந்தார். 

"நக்சல்பாரி என்பவர் யார்? அவர் கொள்கை(கள்) என்ன (என்னென்ன)?"

அதற்கான எனக்கு பதில் கீழே, 

காரல் மார்க்ஸின் பொதுவுடமைக் கோட்பாடுகளை ஒட்டி, 1917 இல் ரஷ்யாவில் லெனின் தலைமையில் சோசலிசப் புரட்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் கம்யூனிசப் புரட்சிகள் நடைபெற்றன.  1949 இல் சீனாவில் மாசேதுங்கின் (மாவோ) தலைமையில் சோசலிசத்துக்கு முந்தைய கட்டமான பொதுவுடைமை கோட்பாடுகளின் அடிப்படையிலான புதிய ஜனநாயகப் புரட்சி நடைபெற்றது.

இந்தியாவைப் பொருத்தவரை 1924 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (CPI) தோன்றியது. இந்தக் கட்சி இந்தியாவில் அமைதி வழியில் சோசலிசப் புரட்சியை வலியுறுத்தியது. சீனாவில் நடைபெற்ற மக்கள் ஜனநாயக புரட்சியை ஒட்டி இந்த கட்சியில் இருந்த ஒரு சிலர், இந்தியாவிலும் அது போன்றதொரு மக்கள் ஜனநாயகப் புரட்சி நடத்த வேண்டும் என்று 1964 இல் இந்தியப் பொதுவுடமைக் கட்சியை (மார்க்சிஸ்ட்) -CPI(M) தோற்றுவித்தனர். அதே நேரத்தில் இவர்கள் மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மந்திரிசபையில் பங்கேற்றனர். 

நிலவுடமை பண்ணை ஆதிக்கச் சுரண்டல் கோலோச்சியச் காலம் அது. உழுபவனுக்கே நிலம் சொந்தபாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து இந்த கட்சியில் இருந்தவர்கள் மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில் உள்ள நக்சல்பரி என்ற கிராமத்தில் இருந்த நிலங்களைக் கைப்பற்றி ஏழை விவசாயிகளுக்கு உரிமையாக்கி அந்நிலங்களில் செங்கொடியை ஏற்றினர். அப்பொழுது மேற்கு வங்க உள்துறை அமைச்சராக இருந்த ஜோதிபாசு காவல்துறையை ஏவி அந்தப் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கினார்.


ஆனால், இந்த போராட்டம் நாடெங்கிலும் காட்டுத் தீயாய் பரவியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிவர்கள் சாரு மஜூம்தார் தலைமையில் 1967 இல் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) - CPI(M-L) என்ற கட்சியைத் தோற்றுவித்தனர். 

சீனாவின் பாதையே நமது பாதை, இந்தியாவில் நீண்ட கால மக்கள் யுத்தம் என்ற போராட்ட முறையில் ஒரு புதிய ஜனநாயக அரசை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்தக் கட்சி செயல்பட்டது. ஆனால், அதே நேரத்தில் பண்ணையார்களையும் கந்துவட்டிக்காரர்களையும் படுகொலை செய்தனர். இரத்தத்தில் கை நனைக்காதவன் கம்யூனிஸ்டே அல்ல என்று முழுங்கும் அளவிற்கு இடது தீவிரவாதப் பாதையில் சென்றது. இத்தகைய படுகொலைகளைச் செய்வதன் மூலம் புரட்சியை சாதிக்க முடியாது, மாறாக ஒரு படையைக் கட்டி அரசுக்கு எதிராக போர் நடத்திதான் புரட்சி செய்ய வேண்டும் என்றும், படுகொலைகளுக்கு எதிரான கருத்துடையோர் கட்சியில் இருந்து வெளியேறி பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டனர். 

இன்று அவர்கள் பல்வேறு குழுக்களாக செயல்படுகின்றனர். ஒரு சிலர் தேர்தல் அரசியலிலும் பங்கெடுத்து சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகவும் வருகின்றனர். 

ஆந்திராவில் செயல்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) மட்டுமே கெரில்லாப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது இந்தியாவில் தடை செய்யப்பட்ட கம்யூனிச அமைப்பாகும்.

நக்சல்பரி கிராமத்தில் நடைபெற்ற எழுச்சிக்குப் பிறகு 1967 இல்  உருவான கட்சியின் பின்னணியில் செயல்படுபவர்களை அந்த கிராமத்தைக் குறிக்கும் வகையில் நக்சல்பாரிகள் என்று அழைக்கப்பட்டனர். அரசும், போலீசும் மற்ற கட்சியினரும் அந்தச் சொல்லை இழிவு படுத்த வேண்டும் என்பதற்காக 'நக்சலைட்' என்று அழைத்தனர்.

இத்தகைய வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட தமிழகத்தில் செயல்படும் ஒரு குழுவின் வெளிப்படையான மக்கள் கலை இலக்கியக் கழகத்தில்தான் நான் தீவிரமாக செயல்பட்டு வந்தேன்.

நக்சல்பாரி பின்னணியைக் கொண்டவர்கள் மக்களுக்குத் துரோகம் செய்ய மாட்டார்கள், நேர்மையாக செயல்படுவார்கள், அடக்கு முறைகளுக்கு அஞ்ச மாட்டார்கள் என்பது இன்றளவும் கடைபிடிக்கப்படுகின்ற நடைமுறை. ஒருவேளை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு சிலர் தவறு செய்தால் அவர்களை அந்த அமைப்பில் இருந்து வெளியேற்றி விடுவார்கள். பாரிய தவறு என்றால் தண்டனையும் வழங்குவார்கள். 

நக்சல்பாரி பின்னணி என்பது நாட்டுப்பற்று, நாட்டு மக்கள் நலனை மட்டுமே மையமாகக் கொண்டதொரு பாரம்பரியம்.


நக்சல்பாரி பின்னணியைக் கொண்ட இயக்கங்கள் பல்வேறு குழுக்களாக இருந்தாலும் அவர்களுடைய பொது நோக்கம் இந்தியாவில் ஒரு புதிய ஜனநாயக அரசை நிறுவி அதன் தொடர்ச்சியாக சோசலிச, பொதுவுடமை அமைப்பை நோக்கி முன்னேற வேண்டும் என்பதுதான். இதை அடைவதற்கான நடைமுறையில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால்தான் அவர்கள் பல்வேறு குழுக்களாக இருக்கிறார்கள். 

மார்க்சிய கோட்பாடுகளை ஏற்றுக் கொண்ட இயக்கங்கள் உலகமெங்கிலும் எல்லா நாடுகளிலும் செயல்படுகின்றன என்பது ஒரு கூடுதல் தகவல். ரஷ்யாவில் சோசலிச வீழ்ச்சிக்குப் பிறகு உலகம் எங்கிலும் பொதுவுடமை இயக்கங்கள் பலவீனமாக உள்ளன என்பதும் மறுக்க முடியாத உண்மை.

ஆனால், மனிதகுல வரலாற்று நோக்கில் புராதான பொதுவுடைமைச் சமுதாயம், ஆண்டான் அடிமைச் சமுதாயம், நிலவுடமைச் சமுதாயம், முதலாளித்து சமுதாயம்,  சோசலிச சமுதாயம் என்பது தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று காலகட்டம். 

உலகம் எங்கிலும் தற்போது நடப்பது முதலாளித்துவ சமுதாயம். இது தவிர்க்க முடியாமல் சோசலிச சமுதாயத்தை நோக்கி நகர்ந்தே ஆக வேண்டும். இது காலத்தின் கட்டாயமும் கூட.

மார்க்சியத்தின் மூல நூல்களைப் படித்தால் பொதுவுடமை குறித்த ஏராளமான விவரங்களைத் தெரிந்து கொள்ள முடியும்.

விரிவஞ்சி நான் மிக சுருக்கமாக பதிவிட்டிருக்கிறேன். 

நன்றி.

தமிழ்மணி 


கொலைக்களமாக மாறிவரும் சமூகச் சூழல்! இதற்கு முடிவே கிடையாதா?

பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் தொழிற்சங்கத்தில் ஈடுபட்ட போது, உணவக நிர்வாகக் குழு உறுப்பினராக தொழிலாளர்களால் தேர்வு செய்யப்பட்டு நேர்மையோடும் போர்க்கணத்தோடும் செயல்பட்ட காலகட்டத்தில்தான் ஊழல் முற்றிலுமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது; ஏற்கனவே ஊழல் செய்தவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு களை எடுக்கப்பட்டார்கள். 

இத்தகைய செயல்பாடுகளின்போது நெருக்கடிகளும் பாதிப்புகளும் வரவே செய்யும். அதைத் தாங்கிக் கொள்ளக் கூடியவர்கள்தான் இதற்கு முன்வருவார்கள். அதுதான் நக்சல்பாரி அரசியலின் பலம்‌.

மேற்கண்ட அனுபவம் எனக்கு உணர்த்தும் பாடம்...

உள்ளாட்சி அமைப்புகளை
நக்சல்பாரிகள் கைப்பற்றி,  நேர்மையோடும் போர்க்குணத்தோடும் செயல்பட முன்வராதவரை, உள்ளூர் அளவில் பிழைப்புவாதிகளும் இரவுடிகளும் தலையெடுப்பதும், அதைத் தொடர்ந்து உள்ளூர் அதிகாரிகள் துணையுடன் ஊழல் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதும், இதில் ஏற்படும் போட்டி மற்றும் மோதல்களில் படுகொலைகள் நடப்பதும் தொடரவே செய்யும்.


மக்களின் அன்றாடத் தேவைகளில் கவனம் செலுத்தி, மக்களோடு மக்களாக பயணிப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுகின்ற அணுகுமுறை வெகுவாக உதவும் என்றே நான் கருதுகிறேன். இதன் போக்கில்தான் பிழைப்புவாதிகளின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்து அரசியல் படுத்தவும் முடியும்.

மாறிவரும் இன்றைய அரசியல் சூழலில், இது குறித்த விவாதங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன்.

தமிழ்மணி

Thursday, 4 July 2024

பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிர்காலம் உண்டா?

பாட்டாளி மக்கள் கட்சியினர், பெரியாரையும் மார்க்சையும் உயர்த்திப் பிடித்துப் பேசிய, எழுதிய காலம் ஒன்று உண்டு. 

இவை, பாட்டாளி மக்கள் கட்சியின் அன்றைய நாளேடான "தினப் புரட்சி" யில் பிரசுரிக்கப்பட்டன. பேராசிரியர் தீரன் இருந்த காலம் அது. நெய்வேலியில் ஒரே மேடையில் அவரோடு மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பாக நானும் பேச்சாளராக மேடை ஏறி இருக்கிறேன். ஆனால் இன்றோ, அண்ணாமலை போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் மேடையில் ஏறுகிறார்கள். 

அன்று தீவிர இடதுசாரிகளோடு உறவாடிய பாட்டாளி மக்கள் கட்சி, இன்று தீவிர வலசாரிகளோடு ஒட்டிக்கொண்டுள்ளது?
ராமதாஸ் கூட எண்ணற்ற சீர்திருத்த திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். ஆனால் அன்புமணியோ அப்படி ஏதும் செய்வதாகத் தெரியவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியைப் போல வியாபித்திருக்க வேண்டிய பாட்டாளி மக்கள் கட்சி, இன்று, மாநில கட்சி என்கிற தகுதியையும் இழந்து நிற்கிறது. 

அன்புமணி தலை எடுத்த பிறகு, வேல்முருகனை வெளியேற்றினார்கள். இடதுசாரி எண்ணம் கொண்ட எண்ணற்றோர் பாட்டாளி மக்கள் கட்சியை விட்டு வெளியேறினார்கள். பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்த எண்ணற்ற பேராசிரியர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

கொள்கை கோட்பாடுகளைக் குழிதோண்டிப்  புதைத்து விட்டு, பணத்திற்கும் பதவிக்கும் பேராசைப்பட்டு, பார்ப்பனியத்துடன் சகவாசம் கொண்டதனால் பாழும் கிணற்றுக்குள் தள்ளப்பட்டார்கள். 

பிழைப்பு வாதத்தை மட்டுமே நம்பி இருக்கும் ஒரு கட்சி, தமிழ் மாநில காங்கிரசைப் போல, தேமுதிக வைப் போல கெட்டு சீரழிந்து காணாமல் போகும் என்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சியே இன்றைய சான்று. அன்புமணியைப் போன்றவர்கள் அரசியலில் இருக்கும் வரை, வன்னியர் மக்களுக்கான தனி இட ஒதுக்கீடு என்பது கானல் நீரே!

போர்க்குணமிக்க போராளிகளால் மட்டுமே கோரிக்கைகளில் வெற்றி பெற முடியுமே ஒழிய, பிழைப்புவாத பச்சோந்திகளால் அல்ல என்பதை வன்னிய உழைக்கும் மக்கள் உணராத வரை அவர்களுக்கு விடிவேதும் இல்லை. 

ஒரு இயக்கத்திற்கு தொண்டர்கள் இருந்தால் மட்டும் போதாது, நல்ல தலைவர்கள் வேண்டும்.  வன்னியர் சாதி மக்கள் நல்ல தலைவரை எப்பொழுது அடையாளம் காணப் போகிறார்களோ அதுவரை அவர்கள் கூத்துகளையும் நாடகத்தையும்தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டி வரும். 

தமிழ்மணி

Friday, 21 June 2024

கள்ளக்குறிச்சி சாராயம்: மரணமா? படுகொலையா?

முழு மதுவிலக்கு சாத்தியமா?

கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்த 50-க்கும் மேற்பட்டோர் மாண்டு போனார்கள். இன்னும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். 

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்கத் தவறிய மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட ஒரு சிலரை பணியிட மாற்றம் செய்தும், ஒரு சிலரை தற்காலிகப் பணி நீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளது தமிழ்நாடு அரசு. 

இந்தச் சாராய மரணங்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி, மருத்துவர் இராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குரல் எழுப்புகின்றனர். இந்தச் சாராய மரணங்களைக் காரணம் காட்டி, ஆளுங்கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து அரசியல் ஆதாயம் தேட பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்கின்றனர்.


தற்போது மட்டுமா கள்ளச் சாராய சாவுகள் நடக்கின்றன? எடப்பாடி ஆட்சியில் நடக்கவில்லையா? ஜெயலலிதா ஆட்சியில் நடக்கவில்லையா? கர்நாடகாவில் நடக்கவில்லையா? முழு மதுவிலக்கு நடைமுறையில் இருக்கும் குஜராத்தில் நடக்கவில்லையா? எங்குதான் சாராயச் சாவுகள் நடக்கவில்லை என்று அகில இந்திய அளவிலான புள்ளி விவரங்களை எடுத்துப் போட்டு, இது ஒன்றும் புதியதல்ல என்கிற கோணத்திலும் விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

இனியும் தாமதிக்கக் கூடாது; உடனடியாக முழுமையான மதுவிலக்கு வேண்டுமென வைகோ, தொல்.திருமா உள்ளிட்ட பல தலைவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

'திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்பது போல குடிகாரனாய்ப் பார்த்துக்
குடியை நிறுத்தாவிட்டால் குடியை ஒழிக்க முடியாது என்று வாதிடுவோரும் உண்டு.

டாஸ்மாக் கடைகளில் சாராயத்தின் விலை கூடுதலாக இருப்பதனால்தான் மலிவு விலை பாக்கெட் சாராயத்தை ஏழைகள் நாடுகிறார்கள்; எனவே குறைந்த விலையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை செய்தால் மரணங்களைத் தடுக்க முடியும் என்று கோருவோரும் உண்டு.

சாராயத்தில் எத்தனாலுக்குப் பதிலாக மெத்தனால் அதிகமாக இருந்ததுதான் தற்போதைய மரணங்களுக்குக் காரணம்; 
எனவே மெத்தனால் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தினாலே மரணங்கள் குறையும் என்று வாதிடுவோரும் உண்டு.

தமிழ்நாட்டில் ஒரு கோடி பேருக்கு மேல் அன்றாடம் சாராயம் குடிக்கிறார்கள், எனவே முழு மதுவிலக்கு எல்லாம் இனி சாத்தியமில்லை, கள்ளுக்கடைகளைத் திறப்பதுதான் ஒரே வழி; இதனால் கள்ளச்சாராய மரணங்களையும் ஒழிக்க முடியும், விவசாயிகளுக்கும் வாழ்வளிப்பதாக இருக்கும் என்று ஒரு சிலர் ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.

சாலை விபத்துகளில் இறந்து போனால் நிவாரணம் ஒரு லட்சம், ஆனால், சாராயம் குடித்து மாண்டு போனால் 10 லட்சமா? யார் அப்பன் வீட்டுப் பணத்தை எடுத்து யாருக்குக் கொடுப்பது? என ஆவேசப்படுவோரும் உண்டு.

'மாதா மாதம் பிரீமியம் செலுத்தி இன்ஷூரன்ஸ் பெறுவதைவிட 30 ரூபாய்க்கு ஒரு பாக்கெட் சாராயத்தைக் குடித்தால் பத்து லட்சம் சொலையா கிடைக்குமே?' என்று இந்த மரணத்தை எள்ளி நகையாடும் மீம்சுகளும் ஒரு பக்கம் உலவுகின்றன.

ஜெயலலிதா ஆட்சியில் 'ஊத்திக் கொடுத்த உத்தமி!' என பொங்கி எழுந்த போராளிகள், இன்று எங்கே போனார்கள் என்று கேள்வி எழுப்பி பாடகர் கோவன் உள்ளிட்ட போராளிகளை எள்ளி நகையாடி இழிவுபடுத்தி, சமூகத்திற்காக ஒரு துரும்பையும் எடுத்துப் போடாத சில திண்ணைத் தூங்கிகள் சமூகவலைதளங்களில் முனகி வருகின்றனர். 

உபதேசங்கள் ஊறுகாயாக..

எத்தனாலும் மெத்தனாலும்
கார்பன், ஆக்சிஜன், ஹைட்ரஜன் ஆகிய தனிமங்களைக் கொண்ட மூலக்கூறுகள்தான். அணுக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் வேதியல் பண்புகள் வேறுபடுகின்றன. வேதியியல் பண்புகள் வேறுபடுகின்றபோது அதனுடைய வினையாற்றலும் மாறுபடுகின்றன. அதனால்தான் மெத்தனால் குடித்தால் மாண்டு போகிறான். எத்தனால் குடித்தால் போதையில் ஆழ்கிறான். மெத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் குடித்தவனைக் காப்பாற்ற வேண்டுமானால் எத்தனால் அதிகம் உள்ள சாராயத்தைக் கொடுத்தால் அவன் பிழைத்துக் கொள்வான் என்கிறார் ஒரு மருத்துவர்.

அன்னியச் சரக்கோ, அரசின் டாஸ்மாக் சரக்கோ அல்லது கள்ளச்சரக்கோ எல்லா சரக்கிலும் எத்தனால் உண்டு. அது சரி எதற்காக எத்தனால் குடிக்க வேண்டும்? 

வேதகாலத்தில் சோம பானத்தில் தொடங்கிய குடி, சங்க காலத்தில் கள் குடியாக மாறி, இன்று கட்டிங் சரக்சாக வடிவம் எடுத்துள்ளது. பிறந்தநாள் விழாக்கள், திருமணங்கள், எழவு வீடுகள் என்று எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது குடி. இந்தக் குடி ஒட்டுமொத்தக் குடிகளையே ஆட்கொண்டுவிட்டது. அலுப்புக்காக குடிப்பது என்பதெல்லாம் அனர்த்தமானது, எல்லாம் அனுபவிப்பதற்காகத்தான் என்பதே நிதர்சனமானது!

'திரிகடுகத்தில் தீட்டினார்கள்‌. கள்ளுண்ணாமை குறித்து வள்ளுவன் கதறினான். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காய் போனதுதான் மிச்சம். உபதேசங்களையே ஊறுகாயாகத் தொட்டுக் கொள்பவன்தானே நம் குடிமகன். 'குடி குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்' என்பதெல்லாம் எம்மாத்திரம்?


எதுவாயினும், முழு மதுவிலக்கு ஒன்றுதான் மனித சமூகத்தை காப்பதற்கான ஒரே வழி. இதனால் ஏற்படும் இதர இன்னல்களை நாம் தற்காலிகமாக ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். இதற்கு ஆளுகின்ற அரசு ஆவண செய்யவில்லை என்றால் அவர்களது ஆட்சியும் வரும் காலத்தில் மரக்கட்டைகளுக்குள் அடுக்கப்படும்.‌!

மதுவிலக்குத் தடைச் சட்டம்!

வேள்ளைக்காரன் ஆட்சிக் காலத்தில் அவன் நாட்டு சரக்கை விற்க உள் நாட்டுச் சரக்குகளைத் தடை செய்து சட்டம் கொண்டு வந்தான். அரசாங்கத்தைத் தவிர வேறு யாரும் சரக்கு தயாரிக்கக் கூடாது. அதுதான் இன்றைக்கும் தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டமாக (Tamil Nadu Prohibition Act 1937) இருக்கிறது. அரசாங்கமே தயாரித்து விற்றால் அது நல்ல சரக்கு. அதையே வேறு நபர்கள் தயாரித்து விற்றால் அது கெட்ட சரக்கு. எத்தனாலை எவன் தயாரித்தால் என்ன? மெத்தனால் உடனே கொல்லும். எத்தனால் மெல்லக் கொல்லும்‌. எத்தனாலை யார் தயாரித்தாலும் மரணம் நிச்சயம். எனவே மரணத்தை விளைவிக்கக் கூடிய பொருளை தயாரித்து விற்பவன் எவனாயினும் அவன் கொலைகாரனே! கொலைகளைத் தடுக்க ஒரே வழி, முழு மதுவிலக்குதான். வேறு தீர்வே கிடையாது!

சரி! இவர்கள் எழுதி வைத்த சட்டத்தையாவது இவர்கள் மதித்து நடைமுறைப்படுத்தினார்களா? 

போதைதரும் மது வகைகளைத் தயாரிப்பது, மது தயாரிப்பதற்குரிய சாதனங்களை வைத்திருப்பது, தயாரித்த மது வகைகளை புட்டிகளில் அடைப்பது, அவற்றை விற்பனை செய்வது, வாங்கிக் குடிப்பது, மேற்கண்ட சரக்கு தயாரிக்கும் வேலைகளுக்கு உதவி செய்வது, உடந்தையாக இருப்பது இவை அனைத்துமே மேற்கண்ட சட்டப்படி (பிரிவு: 4) குற்றங்களாக வரையறுக்கப்பட்டு, இத்தகையக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மூன்று மாதம் முதல் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் முதல் பத்யிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. 

அத்தகைய மது வகைகளால் மரணம் ஏற்படுமாயின் கடுங்காவல் ஆயுள் தண்டனையும், மற்ற பிற குற்றங்களுக்கு பத்தாண்டுகள் வரை சிறை தண்டனையும், இது தவிர 5000 ரூபாய் முதல் 7000 ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் சட்டத்தில் இடம் உண்டு. 

மேற்கண்ட சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க இதற்கென்று உருவாக்கப்பட்ட மதுவிலக்கு காவல் துறையும் அதாவது கலால் துறையும், உள்ளூர் சட்டம் ஒழுங்கு காவல்துறையும், வருவாய்த் துறையும் செயல்பட வேண்டும் என்றும் அரசுத்துறை அதிகாரிகளும், உள்ளாட்சி அமைப்புகளைச் சார்ந்தவர்களும் உதவிட வேண்டும் என்றும் சொல்கிறது சட்டம் (பிரிவு: 32, 35). ஏதேனும் சட்டமீறல்கள் நடைபெற்றால், அது குறித்த விவரம் தெரிந்தவர்கள் உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்கிறது இச்சட்டம் (பிரிவு: 36).

இவை போதாதென்று, உடலுக்கு ஊறுவிளைவிக்கும் நஞ்சு கலந்த போதைப் பொருளை வைத்திருந்தால் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 328 இன் கீழ் வழக்கு பதிவு செய்ய முடியும். இதற்கு பத்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெற்றுத் தர முடியும். 

மேலும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுபவோரை எந்தவித விசாரணையும் இன்றி தொடர்ந்து அத்தொழிலை செய்வதிலிருந்து தடுக்கும் வகையில் குண்டர்சட்டத்தின் கீழ் (Tamil Nadu Prevention of Dangerous Activities of , .....Drug Offenders, .... Act,1982), ஓராண்டுக்கு சிறையில் அடைக்க முடியும். 

கொலைக் குற்றம்!

நடந்திருப்பவை வெறும் மரணங்கள் அல்ல; தெரிந்தே மெத்தனாலை கலந்து விற்பனை செய்திருப்பதனால்
அது ஒரு கொலைக் குற்றமாகக் கருதப்பட்டு தொடர்புடையவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 302 (IPC) இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் முறையான விசாரணை மேற்கொள்ளப்பட்டு சட்ட விதிமீறலில் யார் யாருக்கெல்லாம் என்ன பங்கோ அதற்கு ஏற்ப அவர்கள் அனைவருக்கும் உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இடமாற்றமும் தற்காலிக பணி நீக்கமும் வெறும் கண்துடைப்பே!
இந்த சட்டப் பின்னணியோடு கள்ளக்குறிச்சி சாராய மரணங்களைப் பரிசீலித்தால், 

காவல்துறை மட்டுமல்ல மொத்த அரசு கட்டமைப்பும்தான் இதற்குப் பொறுப்பு. கிராம நிர்வாக அலுவலர் முதல் வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர், மதுவிலக்கு காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறை என்கிற அதிகார வர்க்கமும், 

வார்டு உறுப்பினர்கள், ஒன்றியக் கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள், ஒன்றிய மாவட்டக் கவுன்சிலர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் - இவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருப்பினும்- மற்றும் மந்திரிகள், முதலமைச்சர் உள்ளிட்ட ஆளும் வர்க்கமும், 

அந்தந்த ஊர்களில் உள்ள உள்ளூர் திமுக, அதிமுக, பாமக, பாஜக, நாம் தமிழர், காங்கிரஸ், தேமுதிக, விசிக உள்ளிட்ட அனைத்துக் கட்சி அரசியல் பிரமுகர்கள் என ஒரு பெரும் கூட்டமுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.

இவர்களில் ஒருவருக்குக்கூடத் தெரியாமல் உள்ளுர் அளவில் யாரும் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய முடியாது. அனைவருக்கும் தெரிந்தே நடக்கிற இந்த குற்றச் செயல்களுக்கு காவல்துறையை மட்டும் பொறுப்பாக்கினால் போதுமா? கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், விற்பதும் ஒருவருக்குத் தெரிந்த பிறகு அதை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் இருப்பதும் குற்றம் என்றுதானே மதுவிலக்குச் சட்டம் சொல்கிறது. 

நாம் எங்கே தவறினோம்? 

கள்ளச் சாராய விற்பனை நடக்கிறது என்பது தெரிந்தும் கண்டும் காணாமலோ அல்லது அச்சப்பட்டோ மௌனம் காக்கும் பொதுமக்களுக்கு இதில் பொறுப்பில்லையா?

கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபடுபவோர் மீது புகார் கொடுக்கும் பொதுமக்களைப் பாதுகாப்பதற்கு ஏற்ப, இதற்கென தனியாக ஒரு இணையதளத்தை உருவாக்கி அதில் உள்ளீடு செய்பவர் யார் என்கிற இரகசியத்தை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு ஏற்ப அது அமைய வேண்டும். இந்த இணையதளத்தை உள்ளூர் காவல்துறையிலிருந்து தலைமைச் செயலகம் வரை பார்வையிடவும், நடவடிக்கை எடுக்கவும், சோதித்தறிவும் வழிவகை செய்ய வேண்டும். புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதை பொதுமக்கள் அறியும் வகையிலும் அது வடிவமைக்கப்பட வேண்டும்.

ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், சமூகக் கட்டமைப்பும் சீரழிந்து, நிலைகுலைந்து போய் உள்ளதால், உள்ளூர் அளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கண்காணிப்புக் குழுக்களை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே கள்ளச் சாராயம் உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும். அரசு கட்டமைப்பை மட்டுமே நம்பி இருந்தால் அது ஒருபோதும் கதைக்கு உதவாது. 'பழைய குருடி கதவைத் திறடி' என்கிற கதையாகத்தான் அது இருக்கும். 

தமிழ்மணி

கோவனுக்கு எதிராக நெளியும் புழுக்கள்!

கள்ளக்குறிச்சி சாராயச் சாவுகள் நடந்த பிறகு கோவனுக்கு எதிராக சில திண்ணைத் தூங்கிகள், கீழ்த்தரமான விமர்சனங்களை முன்வைத்து எள்ளி நகையாடி வருகின்றனர்.

திராவிட மாடல் ஆட்சிக்கு எதிராக ஓராண்டுக்கு முன்பு அவர் பாடிய பாடல் இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியவில்லை போலும். திருச்சியில் இரண்டு டாஸ்மாக் சாராயக்கடைகளை மகஇக போராட்டத்தின் மூலம் மூடி இருக்கிறார்கள். அப்பொழுது எழுதப்பட்ட பாடல் அது.

கள்ளக்குறிச்சி சம்பவத்திற்குப் பிறகு உடனடியாக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்.


ஒரு பாடல் வைரல் ஆவதும், வைரல் ஆகாமல் இருப்பதும் சமூக ஊடகங்களைப் பொறுத்தது. ஊத்திக் கொடுத்த உத்தமியை பிரபலமாகியவர்கள் தமிழ்நாடு காவல்துறையும் சமூக ஊடகங்களும்தான்‌.

நிற்க, கலைஞர் ஆட்சி காலத்தில் கலைஞருடைய பெயரைக் குறிப்பிட்டு அவர் மேடைகளில் பாடிய பொழுது திமுக காரர்களின் நேரடி தாக்குதலுக்கெல்லாம் உள்ளாகி இருக்கிறார் என்பது இந்தத் திண்ணைத் தூங்கிகளுக்குத் தெரியாது.

நிற்க, ஒரு கலைஞனின் செயல்பாடுகள், ஏன் இப்போது அப்படி இல்லை, இப்படி இல்லை என்று புலம்புகின்ற திண்ணைத் தூங்கிகள்,  எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ  அப்படி இந்தத் திண்ணைத் தூங்கிகள் செய்வதை யார் தடுத்தது? 

திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியானாலும் கடந்த காலங்களில் பல்வேறு மேடைகளில் உயிரைப் பணயம் வைத்து அவரோடு ஒரு மேடைப் பேச்சாளராக உடன் பயணித்தவன் நான். அப்பொழுதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லாத காலகட்டம். அதனால் அத்தகைய செயல்பாடுகளை எல்லாம் கூகுளில் தேடினாலும் கிடைக்காது. தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். எனவே, அவரைக் குறை கூறுவதற்கு திண்ணைத் தூங்கிகள் எவருக்கும் எந்த அருகதையும் கிடையாது. 

நெளிகிற புழுக்கள் நெளிந்து கொண்டே இருக்கட்டும். அருவருப்பாகத்தான் இருக்கும். ஆனால், புழுக்களின் காலம் மிகவும் சொற்பமானது.

தமிழ்மணி

Wednesday, 19 June 2024

தோழர் ஆர்.கே மறைவு உணர்த்தும் பாடம் என்ன?

தமிழ்நாட்டில் நக்சல்பாரி அரசியலை, மக்கள் திரள் அரசியலாக மிக ஆழமாகப் பதிய வைத்த, கடந்த ஆண்டு தோழர் அன்பழகன், தற்போது தோழர் ஆர்.கே என இரு நக்சல்பாரித் தலைவர்கள் மரணித்துள்ளனர். மிகப்பெரிய அளவில் உயிர்ப்போடு நினைவுகூறப்பட வேண்டிய அவர்களின் அரசியல் பங்களிப்பு அவ்விருவரின் அந்திமக்காலச் செயல்பாடுகளால் அவர்களின் மரணம் குடத்துக்குள் இட்ட விளக்காய் குன்றிப் போனது.

அவர்களின் கடந்தகால சாதகங்கள், சாதனைகளை ஒரு பக்கமும், கடைசி காலகட்டத்தில் அவர்களின் அரசியல் மற்றும் அமைப்பு நடைமுறைகளையும் ஒப்பிட்டு பரிசீலிக்க வேண்டும்.  அவர்கள் மரணிக்கும் போது ஏன் தனிமைப்பட்டு, கேட்க நாதியற்றுப் போனார்கள்-குறிப்பாக தோழர் ஆர்.கே - அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும். மரணிக்கும் போது ஒரு மகத்தான தலைவராக மரணித்தத் தோழர் சீனிவாசனோடு இவர்கள் இருவரின் மரணத்தையும் ஒப்பீடு செய்யலாம். 

ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பெருமான்மைக் கருத்தை ஏற்றுக் கொண்டு ஒரே அமைப்பில் தொடர்ந்து செயல்படுவதுதான் ஜனநாயக மத்தியத்துவத்தை மதிக்கின்ற போக்காகும். அதேபோல சிறுபான்மை கருத்துள்ளவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அதன் மீதான ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும் பெரும்பான்மையாக உள்ளோர் கடைபிடிக்க வேண்டிய ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடாகும். இரு தரப்புமே இதை மீறும்பொழுதுதான் சிறுபான்மையோர் மற்றும் தனிநபர்கள் வெளியேறுவதும், அமைப்பு பிளவு படுவதும் நடக்கிறது. 

இந்த அடிப்படைக் கோட்பாடுகளில் ஊன்றி நிற்காமல் போனதனால்தான் தோழர் அன்பழகன், தோழர் ஆர்.கே இருவரின் பெரும் பங்களிப்பால் உருவான ஒரு அமைப்பு பிளவுபட்டுப் போனது என்பதைவிட பிளவுகளுக்கு அவர்களே காரணமாகவும் அமைந்துவிட்டார்கள். இது பிளவுபட்டுக் கிடக்கும் பிற மா-லெ குழுக்களுக்கும் பொருந்தும். 

தோழர் ஆர்.கே

பொதுவாக அரசியல் வழிகாட்டிகளாக இருப்பவர்கள் பற்றி கூடுதல் மதிப்பீடும், மக்கள் திரள் அமைப்பில் செயல்படுபவர்களுக்கு குறைவான மதிப்பீடும் என்கிற ஒரு போக்கு மா-லெ இயக்கங்களில் நிலவுகிறது. என்னதான் சரியான அரசியல் நிலைப்பாடுகள் எடுத்தாலும் அதை மக்கள் மொழியில் அற்பணிப்போடு எடுத்துச் செல்லும் மக்கள் தலைவர்கள் இல்லை என்றால் அத்தகைய அரசியல் நிலைப்பாடுகள் மக்களிடையே எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. 

சித்தாந்தத்தை ஒருவர் எழுதி வைத்தாலும் அது விவாதத்திற்குப் பிறகு அணிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிறகு அது அமைப்பின் சித்தாந்தமாகிவிடுகிறது. பிற்காலத்தில் அது தவறு என கண்டறியப்பட்டால் அதற்கு அமைப்புதான் பொறுப்பே ஒழிய எழுதி முன்வைத்த தனிநபர்கள் அல்ல.‌ 

ஒருவர் முன்வைத்த சித்தாந்தம் பின்னாளில் தவறு என கண்டறியப்பட்டால், அவரை மட்டுமே ஒரு அமைப்பு குறை கூறுவதும், அல்லது ஒரு சரியான சித்தாந்தத்தை முன்வைத்து ஒரு அமைப்பு வெற்றி பெற்று விட்டால் அது தன்னால்தான் என அந்தத் தனிப்பட்ட நபர் பெருமையுடன் உரிமை கோருவதும் இரண்டுமே தவறான போக்குகளாகும்.  

மேலும் சித்தாந்தத் தலைமையாக கருதப்படுபவர்கள், தங்களது இறுதி மூச்சுவரை, நிலவுகின்ற அரசியல் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப மிகச் சரியான அரசியலை முன்வைத்து அது பெரும்பான்மையான அணிகளால் ஏற்கப்பட்டு, மக்களிடையே செல்வாக்கைப் பெறுகிறதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.

மேற்கண்ட அம்சங்களைக் கணக்கில் கொண்டு தோழர் ஆர்.கே மறைவுற்றுள்ள இந்தத் தருணத்தில் ஒரு விரிவான பரிசீலனை தேவை எனக் கருதுகிறேன். இதுவே மார்க்சிய-லெனினியர்கள் தங்கள் தவறுகளைக் களைந்து கொண்டு ஒன்றுபடவும், வளர்ச்சி பெறவும் உதவும். எதிர்மறை அம்சங்களைப் பரிசீலிக்கும் பொழுதுதான் நாம் எங்கே தவறிழைக்கிறோம் என்பதை உணரமுடியும்.

தோழர் ஆர்.கே வுக்கு சிவப்பஞ்சலி!

தமிழ்மணி