Sunday, 15 March 2026

ஒரு விரல் புரட்சி ஊழலை ஒழிக்குமா?

“ஊழலை ஒழிப்பேன்” என்று முழங்கி ஆட்சிக்கு வந்தவர்கள் வரலாற்றில் பலர். ஆனால் அவர்களில் யாராவது உண்மையில் ஊழலை ஒழித்திருக்கிறார்களா? வரலாறு அப்படி சொல்லவில்லை.

மாறாக, அதிகாரம் கைக்கு வந்தவுடன் அவர்களும் அதே ஊழல் சுழலில் மூழ்கிப்போனதையே நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம்.
இதற்கு தனிநபர் ஒழுக்கக் குறைவு மட்டுமே காரணமல்ல. நாம் வாழும் சமூக-பொருளாதார அமைப்பே கோளாறானது.

இன்றைய அரசியல் அமைப்பில், கட்சிப் பதவிகளை வைத்துக்கொண்டே முறைகேடாகச் செல்வம் சேர்க்கும் ஆற்றல் பலருக்கும் உள்ளது. இவர்களிடம் அரசியல் அதிகாரமும் சேர்ந்து கொண்டால், ஊழல் பெருகுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.


ஊழலின் வேர் எங்கே?

ஒரு மனிதன் எதற்காக ஊழல் செய்கிறான்?
“எனக்கும் என் பிள்ளைகளுக்கும் பின்னால் சொத்து இருக்க வேண்டும்” என்ற பயமும் பேராசையும்தான் அதன் அடிப்படை காரணம்.

எவ்வளவு வேண்டுமானாலும் சொத்து சேர்க்கலாம் என்ற உரிமை (தனிச்சொத்துரிமை) இருக்கும் வரை, எந்தக் கொம்பன் ஆட்சிக்கு வந்தாலும் ஊழலை முழுமையாக ஒழிக்க முடியாது.

மாற்றத்திற்கான வழிமுறைகள்

1.நிலமும் பொன்னும் அரசின் கட்டுப்பாட்டில்

மண்ணையும் (நிலம்), பொன்னையும் (தங்கம்) தனிநபர்கள் வாங்கவோ விற்கவோ முடியாபடி இருந்தால், பெரும்பாலான ஊழல்களுக்கு அடிப்படையாக இருக்கும் பதுக்கல் தானாகவே குறையும்.
நில விற்பனை இல்லையெனில் ரியல் எஸ்டேட் ஊழலுக்கு இடமிருக்காது. தங்கம் பதுக்க முடியாத நிலை ஏற்பட்டால் கறுப்புப் பணம் புழங்குவற்கும் வழியில்லை.

2.அடிப்படைத் தேவைகளை அரசு உறுதி செய்ய வேண்டும்

ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான உணவு, வீடு, கல்வி, மருத்துவம் ஆகியவற்றை அரசே உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், அதற்கு மேல் அளவில்லாத சொத்துச் சேர்க்கும் வாய்ப்புகளை கட்டுப்படுத்த வேண்டும்.

சேர்த்து வைக்க முடியாத சூழல் உருவானால், ஊழல் செய்ய வேண்டிய உந்துதலும் இல்லாமல் போகும்.

3.உழைப்பவனுக்கே உரிமை

நாட்டில் உள்ள முக்கிய உற்பத்தித் துறைகள் அரசின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

“உழைத்தால்தான் உணவு” என்ற நிலை உருவானால், உழைப்பின் மதிப்பு உயரும்; பதுக்கிப் பணம் சேர்ப்பது குறையும்.

முடிவுரை

வெறும் மேடைப் பேச்சாலும், தேர்தல் வாக்குறுதிகளாலும் ஊழலை ஒழித்துவிட முடியாது.
சொத்துச் சேர்க்கும் இந்த அமைப்பை மாற்றாமல், ஆள்வோரை மட்டும் மாற்ற முயல்வது அறிவுடமை அல்ல.

சொத்து சேர்ப்பதை கட்டுப்படுத்தும் ஒரு பொதுவுடைமை நோக்குடைய சமூக அமைப்பு உருவானால்தான் ஊழலை உண்மையாகவே ஒழிக்க முடியும்.

அதற்கான முன்னெடுப்புகளே நீண்டகால நோக்கில் பயனளிக்கும்.

யாருக்கு வாக்களிப்பது? 

கம்யூனிஸ்டுகள் பலவீனமாயுள்ள இன்றைய சூழலில் பொதுவுடைமைச் சமூகம் உடனடி சாத்தியமா என்ற ஐயம் உங்களுக்குள் எழுவது இயல்புதான். 

பிறகு என்ன செய்வது?

சனாதனத்தை நிறுவத் துடிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக ஒன்றிய அரசை அதிகாரத்திலிருந்து அகற்றுவதும், இந்துத்துவ மதவாத சக்திகளை ஒழித்துக் கட்டுவதும் நமது உடனடித் திட்டமாக இருக்க வேண்டும். 

அதேவேளையில், தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் ஒருசில மக்கள் நலத் திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போடும் பாஜகவையும், அதற்கு ஒத்தூதும் அதன் நேரடி மற்றும் மறைமுகமான ஆதரவு கட்சிகளையும் தோற்கடிப்பது ஒன்றுதான் இன்றையத் தேவையாக உள்ளது. 

ஒரே வரியில் சொன்னால், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் மீது நமக்கு ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும், அந்தக் கூட்டணியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகத்தான் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளையாவது தக்க வைத்துக் கொள்ள முடியும்!

தமிழ்மணி

No comments:

Post a Comment