இந்தியச் சமூகத்தில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட காலத்திற்குப் பிறகு, "இரண்டு குழந்தைகள் போதும்" என்கிற நிலை உருவானது. காலமாற்றத்தில், கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் இன்று "ஒரே ஒரு பிள்ளை" என்று பலரும் நிறுத்திக்கொள்கிறார்கள். அந்த ஒரே பிள்ளையும் ஆணாக இருந்து, அவன் எதிர்பாராத விதமாக இறந்துபோகும் சூழலில், அந்த முதிய பெற்றோரின் கதி என்ன? இது இன்று பல குடும்பங்களில் எழும் ஒரு மௌனமான அழுகுரல்.
சட்டத்தின் பார்வையும் சமூகத்தின் யதார்த்தமும்
சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பு (ராக்கேஷ் குமார் எதிர் உ.பி. அரசு, 2026), இந்த வலியை மீண்டும் ஒரு விவாதப் பொருளாக்கியுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 144 (பழைய CrPC பிரிவு 125-க்கு இணையானது) கீழ் முதிய தம்பதியினர் தங்கள் மருமகளிடம் பராமரிப்புத் தொகை கோரி தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்,
"மாமனார் மற்றும் மாமியாரைப் பராமரிக்க வேண்டிய சட்டப்பூர்வமான கடமை மருமகளுக்கு இல்லை"
என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
நமது நடைமுறையில், ஆண்கள் தான் பெற்றோரைப் பாதுகாக்க வேண்டும் என்பது காலம் காலமாக இருந்து வரும் ஒரு மரபு. ஆனால், ஒரே மகனைப் பெற்ற பெற்றோர், அவனை ஆளாக்கி, அவனுக்குத் திருமணம் செய்து வைத்து, தங்கள் சொத்துக்களுக்கும் அவனையே வாரிசாக்குகிறார்கள். அந்த மகன் இறந்துவிட்டால், அந்தப் பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது அந்த வீட்டு மருமகளும் பேரப்பிள்ளைகளும் தானே?
ஆனால், சட்டம் இங்கே "தார்மீகக் கடமையை" விட "சட்டப்பூர்வ விதிகளுக்கே" முன்னுரிமை அளிக்கிறது.
சொத்துரிமை vs பராமரிப்புப் பொறுப்பு
இங்கேதான் ஒரு விசித்திரமான முரண்பாடு எழுகிறது. ஒரு மருமகள், தனது கணவர் மூலமாக மாமனார்-மாமியார் சேர்த்த சொத்துக்களை அனுபவிக்கச் சட்டப்படி உரிமை உண்டு. ஆனால், அதே சட்டமானது அந்தச் சொத்தைக் கொடுத்த மாமனார்-மாமியாரைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு மருமகளுக்குக் கிடையாது என்கிறது.
பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்ற பெற்றோரின் நிலை இன்னும் மோசம். பெண் திருமணமானவுடன் "அடுத்த வீட்டுச் சொத்து" என்று கருதப்படும் சூழலில், அவள் சம்பாதித்தாலும் தன் பெற்றோருக்குச் செலவு செய்வதை பல கணவன்மார்கள் ஏற்பதில்லை. அதேபோல், சம்பாதிக்கும் கணவன் தன் பெற்றோரைக் கவனிப்பதைத் தடுக்கும் மருமகள்களும் உண்டு.
சட்டத்தின் ஓட்டைகளும் நம் கடமையும்
நமது சட்டங்கள் பலவும் ஒரு குறிப்பிட்ட காலத்து சமூகக் கட்டமைப்பையும், ஆணாதிக்கச் சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை. இதனால்தான் பராமரிப்புப் பொறுப்பு என்று வரும்போது பல "ஓட்டைகள்" மிஞ்சுகின்றன. ஒரு மகன் இறந்த பிறகு, அவனது வாரிசுகள் அந்தச் சொத்தை அடையும்போது, அந்தச் சொத்தைச் சம்பாதித்த முதியவர்களைக் காக்கும் பொறுப்பும் அவர்களுக்குச் சட்டப்படி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
பராமரிப்பு மற்றும் நலவாழ்வுச் சட்டம் (Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007) என்றொரு சட்டம் ஏற்கனவே இருந்தாலும், நாம் மேலே விவாதித்த சட்டச் சிக்கல்களைப் பொதுச் சமூகம் கூர்ந்து கவனிக்க வேண்டும். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, முதியோர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் சட்டங்களை இயற்ற வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.
ஆனால், கெடுவாய்ப்பாக நமது பிரதிநிதிகள் தேர்தல் வெற்றிக்குப் பிறகு தங்களின் நிலையைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள்.
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், நாம் உரக்க எழுப்ப வேண்டிய குரல் இதுதான்:
சொத்துரிமை யாருடையதோ, அவரே முதியோர் பராமரிப்பு பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
முதியோர் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் கருணைக்கு மட்டும் விடப்படக் கூடாது; அது சமூகமும் சட்டமும் இணைந்து உறுதி செய்ய வேண்டிய அடிப்படை பொறுப்பு.
பொன்.சேகர்
வழக்கறிஞர்
செய்தி ஆதாரம்: Live Law

No comments:
Post a Comment