Saturday, 28 March 2026

நீதிமன்றங்கள் சட்டக் காவலர்களா அல்லது தார்மீகக் காவலர்களா? - அலகாபாத் தீர்ப்பு எழுப்பும் விவாதங்கள்!

சமீபத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கிய இரண்டு வெவ்வேறு தீர்ப்புகள், இந்தியச் சட்ட உலகில் ஒரு முக்கியமான விவாதத்தைத் தொடங்கி வைத்துள்ளன. குறிப்பாக, விவாகரத்து பெறாமல் 'லிவ்-இன்' (Live-in) உறவில் ஈடுபடும் தம்பதியினருக்குப் பாதுகாப்பு கோரும் வழக்கில், நீதிபதிகளின் மாறுபட்ட பார்வைகள் சட்டத்தின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்குகின்றன.


1. இருவேறு தீர்ப்புகள்: ஒரு ஒப்பீடு

இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக விளங்கும் இரண்டு வழக்குகளை நாம் முதலில் கவனிக்க வேண்டும்:

தனி நீதிபதியின் வழக்கு (Single Judge Bench):
ஏற்கனவே திருமணமான ஒரு ஆணும் பெண்ணும் (இருவருக்கும் வெவ்வேறு நபர்களுடன் திருமணம் ஆகி இருந்தது), தங்கள் முதல் துணையிடமிருந்து விவாகரத்து பெறாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். தங்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதி விவேக் குமார் சிங் தள்ளுபடி செய்தார்.

"சட்டப்பூர்வமான விவாகரத்து இன்றி வேறொருவருடன் வாழ்வது IPC 494/495-ன் படி தண்டனைக்குரியது. ஒரு குற்றத்தைச் செய்பவர்களுக்கு நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கி, அதை ஊக்கப்படுத்த முடியாது" என்பதே இவரது தீர்ப்பின் சாரம். 

இங்கே 'சமூக ஒழுக்கம்' மற்றும் 'குடும்பக் கட்டமைப்பு' முன்னிறுத்தப்பட்டுள்ளது.

இரு நீதிபதிகள் அமர்வின் வழக்கு (Division Bench):
இதே போன்றதொரு சூழலில் (திருமணமான நபர் வயது வந்த பெண்ணுடன் வாழ்வது), நீதிபதிகள் ஜே.ஜே. முன்ஷி மற்றும் தருண் சக்சேனா ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியது. "சமூகத்தின் தார்மீகக் கண்ணோட்டங்கள் சட்டத்தை மாற்ற முடியாது. வயது வந்த இருவர் தங்கள் சம்மதத்துடன் இணைந்து வாழ்வதை 'குற்றம்' என்று சொல்ல முடியாது. ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தில் (Article 21) சமூகம் தலையிடக் கூடாது" என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

2. பிரிவு 21 மற்றும் IPC 494/495 (BNS 82) : ஒரு சட்ட ரீதியான அலசல்

இங்கே ஒரு முக்கியமான சட்ட முரண்பாட்டை நாம் கவனிக்க வேண்டும். 

இந்தியத் தண்டனைச் சட்டம் (IPC) பிரிவுகள் 494 மற்றும் 495 ஆகியவை "மறுமணம்" (Remarriage) செய்துகொள்வதைத் தான் குற்றமாக வரையறுக்கின்றனவே தவிர, "உடனுறைவு" (Live-in relationship) கொள்வதைக் குற்றம் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

அப்படியிருக்கையில், மனுதாரர்கள் திருமணம் செய்து கொண்டார்களா இல்லையா என்பது தெரியாமலேயே, அவர்கள் இணைந்து வாழ்வதே குற்றம் என்று கருதிப் பாதுகாப்பை மறுப்பது சட்டப்படி ஏற்புடையதல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 21 மிகத் தெளிவாகக் கூறுகிறது: "சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட நடைமுறையின்படி அன்றி (Procedure established by law), எவருடைய உயிரையோ அல்லது தனிநபர் சுதந்திரத்தையோ பறிக்கக் கூடாது." 

உடனுறைவு (Live-in) என்பது சட்டப்படி குற்றம் என்று எந்த ஒரு அரசாங்கப் புத்தகத்திலும் இல்லாதபோது, அதன் அடிப்படையில் ஒருவரின் தனிநபர் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் மறுப்பது அரசமைப்புச் சட்டம் பிரிவு 21-க்கு எதிரானது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

3. சட்டமா? தார்மீகமா? - ஒரு வழக்கறிஞரின் பார்வை

எந்தவொரு சிக்கலையும் அணுகும்போது, நீதிமன்றங்கள் சட்டப்படிதான் (Rule of Law) அணுக வேண்டுமே ஒழிய, தார்மீகத்தின் (Morality) அடிப்படையில் அல்ல. அதற்கான சில முக்கியக் காரணங்கள்:

1.சட்டம் vs ஒழுக்கம்: சட்டம் என்பது எழுதப்பட்ட விதிகள், அது அனைவருக்கும் சமமானது. ஆனால் தார்மீகம் அல்லது ஒழுக்கம் என்பது தனிநபர் சார்ந்தது; காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுபடக்கூடியது. தார்மீகத்தின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட்டால், அது நீதித்துறையில் பெரும் குழப்பத்தை விளைவிக்கும்.

2.தனிநபர் சுதந்திரம்: அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை (Fundamental Rights), சமூகத்தின் பொதுவான ஒழுக்கக் கண்ணோட்டங்களுக்காகப் பறிக்க முடியாது.

3.ஆன்மீகமும் சட்டமும்: ஆன்மீகமோ அல்லது சமூக விழுமியங்களோ மதிக்கப்பட வேண்டுமானால், அவை முதலில் சட்டமாக்கப்பட (Codified) வேண்டும். அவ்வாறு சட்டமாக்கப்பட்ட பிறகு மட்டுமே, அவற்றின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும். சட்டத்தில் இல்லாத ஒரு விதியை 'தார்மீகம்' என்ற பெயரில் புகுத்துவது நீதித்துறையின் அதிகார வரம்பை மீறுவதாகும்.

முடிவுரை

நீதிமன்றங்கள் தார்மீகக் காவலர்களாக (Moral Guardians) செயல்பட வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை, தார்மீக அடிப்படையில் அல்லது மக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று கருதினால், அந்த நம்பிக்கைகளும் தார்மீக விழுமியங்களும் முதலில் சட்டமாக்கப்பட வேண்டும். அவ்வாறு சட்டமாக்கப்பட்டால் மட்டுமே அது சட்டப்படி நியாயமானதாக (Legally Justifiable) அமையும்.

சட்டத்தின் எழுத்துக்களையும் (Letter of the Law), அரசியலமைப்பின் ஆன்மாவையும் (Spirit of the Constitution) உயர்த்திப் பிடிப்பதே நீதியின் உண்மையான நோக்கம். சட்டம் சொல்லாத தார்மீகத்தை நீதிபதிகள் திணிக்க முற்படுவது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானதல்ல.

பொன்.சேகர், BE, ML, MPhil
வழக்கறிஞர்


No comments:

Post a Comment