சிறுத்தைகளிடமும், சிங்கங்களிடமும், ஓநாய்களிடமும், முதலைகளிடமும் சிக்கிக் கொள்ளும் ஆடுகளும், மாடுகளும், மான்களும் தங்களது உயிரைக் காத்துக் கொள்ள போராடுகின்றன. இதே விலங்குகள்கூட அதேவகை விலங்குகள் வேறு இடங்களிலிருந்து தங்களது எல்லைகளுக்குள் பிரவேசிப்பதையும் எதிர்த்துப் போராடுகின்றன. தாங்கள் வாழும் பகுதியை அவைகளுக்கு யாரும் பட்டா போட்டுக் கொடுக்கவில்லையென்றாலும், அது அவைகளுக்கான உயிர் வாழும் உறைவிடங்கள். இந்தப் போராட்டங்கள் அனைத்தும் தனித்தோ அல்லது கூட்டாகச் சேர்ந்தோ உயிர் வாழ்வதற்காக (struggle for survival) நடத்தப்படுகின்றன.
மனிதர்களும் இங்கே போராடுகின்றனர். தாங்கள் உயிர் வாழ்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் விலங்குகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர்; அதே வேளையில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேம்படுத்திக் கொள்வதற்காகவும் தங்களது உழைப்பைச் சுரண்டும் முதலாளிகள், பண்ணையார்கள் போன்ற மனித விலங்குகளுக்கு எதிராகவும், அது ஆளும் அரசாயினும் எதிர்த்துப் போராடுகின்றனர்.
இந்துமதி
கருத்துரிமை, மனித மாண்பு சிதைக்கப்படும் பொழுதும், அரசியல் உரிமைகள் நசுக்கப்படும், பறிக்கப்படும் பொழுதும் மனிதர்கள் உலகம் முழுவதும் போராடுகின்றனர். முதலையின் வாயில் சிக்கிய மானைக் காப்பாற்ற தனது உயிரையும் பணயம் வைத்து உதவும் குரங்கைப் போல, மனிதர்களும், சக மனிதர்களின் நலனைக் காக்க, அது தூரதேசமாயினும் முடிந்தவரை அவர்களுக்கு ஆதரவாகப் போராடுகின்றனர்.
மனித குலத்தின் ஒவ்வொரு சாராரும், தங்களின் நலனுக்காகப் போராடினாலும், பெரும்பான்மையான அடித்தட்டு மக்களின் நலனுக்காகப் போராடுபவர்கள் அகிலம் முழுக்க கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
தமிழ்நாட்டிலும்கூட எங்கெல்லாம் சுரண்டலும், ஒடுக்குமுறையும் நிலவுகின்றனவோ, அது தனியார் ஆலைகளானாலும், அரசு நிறுவனங்களானாலும், பள்ளி கல்லூரிகளானாலும், முறைசாரா தொழிலாளர்கள் என்றாலும், வேளாண்மை என்றாலும் அங்கெல்லாம் கம்யூனிஸ்டுகளை மட்டுமே பார்க்க முடியும்.
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள். ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
ஆம்! கம்யூனிஸ்டுகள் மட்டுமே ஒடுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த மக்களின் நலன்களுக்காகப் போராடுபவர்கள். ஒரு உழைப்பாளி சுரண்டப்படுவதையும், அவனது உரிமைகள் பறிக்கப்படுவதையும் அவனுக்கு உணர்த்துபவர்கள் கம்யூனிஸ்டுகள் மட்டுமே.
போராட்டங்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும். தோல்வியைக் கண்டு துவண்டுவிடாமல், வெற்றியின் சுவடுகளை நினைவுகூர்வதன் மூலம், அவர்கள் மேலும் மேலும் தங்களை ஊக்கப்படுத்திக் கொள்கின்றனர்.
1917 ஆம் ஆண்டு, நவம்பர் 7 அன்று நடைபெற்ற ரஷ்ய சோசலிசப் புரட்சிதான் கம்யூனிஸ்ட்களின் போராட்டங்களில் முதன்மையாகத் திகழ்வது. ரஷ்யப் புரட்சியை ஒவ்வொரு ஆண்டும் குதூகலத்துடன் நினைவு கூர்வதன் மூலம் அவர்கள் தங்களை மெருகேற்றிக் கொள்கின்றனர்.
இந்த ஆண்டு, நவம்பர் 9ஆம் தேதி அன்று, மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இரு அமைப்புகளின் சார்பில் வேலூர், தொரப்பாடி, வள்ளலார் மண்டபத்தில், நடைபெற்ற 109-வது ரஷ்ய சோசலிசப் புரட்சி விழா நிகழ்ச்சியில் நானும் ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டேன்.
சிறுவர்களின் சிலம்பாட்டம், கலைஞர்களின் பாடல்கள், தலைவர்களின் சொற்பொழிவு என களைகட்டிய இந்த விழாவில் எழுந்த கரவொலிகள், வேலூர் கோட்டையில் முட்டி மோதி, கீழ்த்திசை மலைகளில் தவழ்ந்த மேகங்களில் ஊடுருவி சிலாகித்தன.
இந்த விழாவில், இளம் தோழர் இந்துமதி அவர்களின் தெளிந்த நீரோடை போன்ற நேருரையைக் கேட்டபோது ஆனந்தப்பெருக்கில் எனது கண்கள் சற்றே பணிந்து நீரைச் சொரிந்தன. விழாக்கள்கூட கம்யூனிஸ்டுகளுக்கு போர்க்களம்தான். போர்க்களங்களே வீரர்களை அடையாளம் காட்டுகின்றன!
தமிழ்மணி
விழாக் காட்சிகள்





.jpeg)