Tuesday 27 June 2023

பாம்பு படமெடுத்து சீறுகிறது! என்ன செய்யப் போகிறோம்?

தமிழ்நாட்டை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்தியாவையும் இன்று அச்சுறுத்திக் கொண்டிருப்பது பாஜக-ஆர் எஸ் எஸ் அபாயம். ஆட்சி அதிகாரத்திலிருந்து பாஜக - வை விரட்டியடிக்கவில்லை என்றால் நாம் அனைவரும் புதை குழிக்குத் தள்ளப்படுவோம் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

பாஜகவுக்கு எதிரானக் கருத்துக்களை கூர்மைப்படுத்தி அனைவரிடமும் எடுத்துச் செல்ல வேண்டிய கடமை பாஜகவை எதிர்க்கின்ற அனைவருக்கும் உண்டு. பாஜகவுக்கு எதிராக திராவிட இயக்கங்கள், அம்பேத்கர் இயக்கங்கள், பொதுவுடமை இயக்கங்கள் என பலரும் களமாடி வருகின்றனர். இதுகுறித்து ஒவ்வொருவரும் தங்களுடைய போராட்டச் செய்திகள் மற்றும் கருத்துக்களைச் சமூக ஊடகங்களில் பதிவேற்றி வருகின்றனர். 

ஆனால், இத்தகையக் செய்திகளை/கருத்துக்களை, கட்சி வேறுபாடு இன்றி அனைவரும் பகிர வேண்டும்; பரப்ப வேண்டும். அதற்கு மாறாக, தங்களுடைய இயக்கம் சார்ந்த அல்லது தங்களுக்குப் பிடித்த இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை மட்டும் பகிர்வது, மாற்று இயக்கங்களுடைய செய்திகளை/கருத்துக்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது என்பது பாஜகவுக்கு மட்டுமே வலு சேர்க்கும் என்பதை பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்புகிற அனைவரும் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

தங்களுடைய கட்சிகளை/இயக்கங்களை மட்டுமே வளர்ப்பது என்பதை சற்று ஒதுக்கி வைத்து விட்டு, பிஜேபி-யை வீழ்த்துவதற்காக செயலாற்ற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். பாஜக மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் தொடர அனுமதிப்போமேயானால், வரும் காலத்தில் பெரும்பாலான இயக்கங்களும் கட்சிகளுமே காணாமல் ஆக்கப்பட்டுவிடும். குறைந்தபட்சம் தங்களுடைய இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காகவாவது மேற்கண்ட ஆலோசனையை கணக்கில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதே எனது அவா.

உங்களைக் கொத்திக் கொல்ல கொடிய நச்சுப் பாம்பு படமெடுத்து நிற்கிறது. மக்கள் படைக்கட்டி, களத்தில் முட்டி மோதி படமெடுத்து நிற்கும் பாம்பை வீழ்த்துவோம் என வீரவசனம் பேசிக்கொண்டு அதற்கான வியூகங்களை நீங்கள் வகுப்பதற்குள் அது உங்களைப் போட்டுத் தள்ளிவிடும். கால் செருப்போ, தோளில் உள்ள  கைத்துண்டோ எது கிடைக்கிறதோ அதைக்கொண்டு, படை எடுத்து நிற்கும் பாம்பைத் தட்டி விட்டு, பிறகு அதை ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு தடிகளை எடுப்பதே அறிவுடைமை. 

தமிழ்மணி

No comments:

Post a Comment