Showing posts with label தாளமுத்து. Show all posts
Showing posts with label தாளமுத்து. Show all posts

Tuesday, 25 January 2022

வேலூரில் மொழிப் போர் தியாகிகள் நினைவு நாள்!

ஒரு பொதுவான மொழி, ஆட்சிப் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய நான்கு அம்சங்களும் ஒரு தேசிய இனத்தை வரையறுப்பதற்கான அடிப்படையான அம்சங்களாகும். இதில் எது ஒன்று குறைந்தாலும் அதை ஒரு தேசிய இனமாகக் கருத முடியாது.

நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்பட்டு முதலாளித்துவம் வளர்ந்து வந்த 19 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் தேசிய இன உருவாக்கங்கள் நடந்தேறின. அதே காலகட்டத்தில் நிலவுடைமைச் சமூகம் ஒழிக்கப்படாத, முதலாளித்துவ வளர்ச்சி பலவீனமாக இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த இந்தியா, தமிழ், தெலுங்கு, மலையாளம், வங்காளம் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களை உள்ளடக்கிய ஒரு நாட்டரசாக உருவாகியது.

பொருளாதாரப் பரிவர்த்தனைத் தேவைகளுக்காக பெரும்பான்மையோரது மொழியைக் கற்றுக் கொள்ளும்படி ஆளும் வர்க்க முதலாளிகள் எப்போதும் பிற தேசிய இன மக்களை நிர்பந்தம் செய்வர். அதன்படி, 1939 ஆம் ஆண்டிலேயே இந்தியைத் திணிக்க அன்றைய ஆளும் வர்க்கம் முயற்சித்தது. அதன் பிறகு 1963 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட அரசுப்பணி மொழி சட்டம் மூலம் இந்தியைத் திணிக்க காங்கிரசு அரசு முயன்ற போது, 1965-ல் இந்தித் திணிப்புக்கு எதிராகத் தமிழக மக்கள் தீவிரமாகப் போராடினர். நடராசன், தாளமுத்து உள்ளிட்ட எண்ணற்றோர் அப்போராட்டத்தில் களப் பலியாகினர். இந்தித் திணிப்புக்கு எதிரானப் போராட்டம் என்பது தமிழ் மொழியை-தமிழ்த் தேசிய இனத்தைக் காப்பதற்கானதொரு போராட்டமாகும்.

தேசிய இன ஒடுக்குமுறை எந்த ஒரு வடிவத்தில் நிகழ்ந்தாலும் அதற்கெதிரானப் போராட்டங்கள் அன்றாடம், இடைவிடாது, நுட்பமான வழிகளில் நடத்தப்பட வேண்டும். 2014-ல் மோடி தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு கார்ப்பரேட் முதலாளிகள் தங்களது சந்தை விரிவாக்கம் உள்ளிட்டப் பொருளாதாரத் தேவைகளுக்காகவும், ஆர்எஸ்எஸ் காவிக் கும்பல் தங்களது பார்ப்பன சனாதனத் தேவைக்காவும் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பு உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் பிற தேசிய இனங்கள் மீது ஒடுக்கு முறையை ஏவி வரும் இன்றைய சூழலில், அதை முறியடிக்க வேண்டுமானால் தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிராக நமது முன்னோர்கள் நடத்தியக் களப் போராட்டங்களை நினைவு கூர்வது பாட்டாளி வர்க்கத்தின் கடமையாகும்.

அதன்படி, மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒருங்கிணைத்த மொழிப் போர் தியாகிகள் நினைவு நாள் 25.01.2022 அன்று வேலூரில் பெரியார் சிலை அருகில் மிகச் சிறப்பாக நினைவு கூறப்பட்டது. மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் இராவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் வாணி, தமிழ்ப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த தோழர் குட்டி, புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த தோழர் அழகொளி ஆகியோர் உரையாற்றினர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் செல்வம் நன்றி கூறினார். உரைகள், முழக்கங்கள் என சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.






தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்