ஆனால், அண்மையில் செங்கல்பட்டு மாவட்டம் தையூர் பகுதியில் நடந்த படுகொலை, நமது சமூக ஆய்வை அடுத்த தளத்திற்கு நகர்த்தியிருக்கிறது.
பறையர் சாதியைச் சேர்ந்த, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரவீன்குமார் என்கிற ஒரு ஏழை இளைஞன், அதே பறையர் சாதியைச் சேர்ந்த வசதியான வீட்டுப் பெண்ணைக் காதலித்ததற்காகக் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
கொலையுண்ட இளைஞரின் தாயார், "வசதி இல்லை, பணம் இல்லை; யார் வந்து கேட்கப் போகிறார்கள் என்று இப்படிச் செய்துவிட்டார்கள்" என்று கூறியிருப்பது, இந்தக் கொலையின் பின்னால் செயல்பட்ட பொருளாதார அதிகார உறவை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுகிறது.
எனவே, தையூரில் நடந்தது சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட வழக்கமான ஆணவப் படுகொலை அல்ல; ஒரே சாதிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வின் அடிப்படையில் நிகழ்ந்த வர்க்க ஆணவப் படுகொலை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இது நம்மை ஒரு முக்கியமான கேள்வியை நோக்கி நகர்த்துகிறது: ஆணவப் படுகொலைகளுக்கு அடிப்படை சாதி மட்டும்தானா? அல்லது பொருளாதார ஏற்றத்தாழ்வும் வர்க்க ஆதிக்கமும் அவற்றில் செயல்படுகின்றனவா?
நகர வாழ்வும் கிராமப்புறச் சாதி–வர்க்க உறவுகளும்
நகர்ப்புறங்களில் கல்வி, வேலைவாய்ப்பு, தனிநபர் வருமானம், இடப்பெயர்வு போன்ற காரணிகளால் குடும்பம் மற்றும் சாதி சார்ந்த நேரடி கட்டுப்பாடுகள் சில நேரங்களில் தளர்கின்றன. பொருளாதாரச் சுயாதீனம் அதிகரிக்கும்போது, தனிநபரின் காதல் மற்றும் திருமணத் தேர்வுகளும் ஓரளவு சுதந்திரம் பெறுகின்றன. ஆனால் இதனால் நகரங்களில் சாதி ஆதிக்கம் மறைந்துவிட்டது என்று பொருள் கொள்ள முடியாது.
கிராமப்புறங்களில் நிலைமை இன்னும் சிக்கலானது. பல பகுதிகளில் நிலஉடைமை உறவுகள், சாதி ஆதிக்கம், குடும்ப அதிகாரம், சமூகக் கட்டுப்பாடு ஆகியவற்றின் எச்சங்கள் இன்னும் வலுவாகச் செயல்படுகின்றன.
அதே நேரத்தில், தையூர் போன்ற சம்பவங்கள் இன்னொரு உண்மையையும் நமக்குக் காட்டுகின்றன: ஒரே சாதிக்குள் இருந்தாலும் பொருளாதார அதிகாரத்தில் ஏற்றத்தாழ்வு இருந்தால், அந்த ஏற்றத்தாழ்வே மனித உறவுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாக மாற முடியும்.
சாதியும் வர்க்கமும்: இந்தியச் சூழலில்
சாதியும் வர்க்கமும் ஒரே தட்டில் வைத்து சமன்படுத்த முடியாது; இரண்டும் தன்மையில் வேறுபட்டவை.
சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து நிரந்தர சமூகப் படிநிலையில் நிறுத்தும் அமைப்பு — இதை வெறும் பொருளாதார வேறுபாட்டோடு ஒப்பிட முடியாது. வர்க்கம் என்பது உற்பத்திச் சாதனங்களுடனான மனிதர்களின் உறவு, சொத்து உடைமை, உழைப்பு மற்றும் பொருளாதார அதிகாரம் ஆகியவற்றோடு தொடர்புடையது.
ஆனால் இந்தியச் சமூகத்தின் தனித்துவம் என்னவென்றால், இரண்டும் ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் பிரிந்து இயங்குவதில்லை. வரலாற்றில் நிலம், கல்வி, தொழில், அதிகாரம் ஆகியவை குறிப்பிட்ட சாதிக் குழுக்களிடம் குவிந்திருந்தன — சாதி ஆதிக்கமும் பொருளாதார ஆதிக்கமும் ஒன்றுக்கொன்று துணைபுரியும் உறவுகளாக வளர்ந்துள்ளன.
இதன் பொருள் ஒரே சாதியைச் சேர்ந்த அனைவரும் ஒரே வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பதல்ல. ஒரே சாதிக்குள்ளேயும் பொருளாதார ஏற்றத்தாழ்வு உருவாகிறது — அந்த வேறுபாடு ஒரு கட்டத்தில் குடும்ப அதிகாரமாக மாறும்போது, அது காதல் மற்றும் திருமணத் தேர்வுகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரமாகவும் மாறுகிறது. தையூர் சம்பவம் இந்த இரட்டை இயங்கியல் ஐப்பசியில் புரிந்துகொள்வதற்கான ஒரு முக்கியமான நிகழ்வாக அமைகிறது.
சட்டமா? சமூக மாற்றமா?
ஆணவப் படுகொலைகளுக்குத் தனிச் சட்டம் அவசியம் — குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கவும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்கவும் அது இன்றியமையாதது. ஆனால் சட்டம் மட்டும் சமூகத்தின் அடிப்படை உறவுகளை மாற்றிவிட முடியாது.
சாதி ஆதிக்கத்தை உருவாக்கும் சமூகக் கட்டமைப்புகளையும், பொருளாதார ஆதிக்கத்தை உருவாக்கும் வர்க்க உறவுகளையும் மாற்றுவதற்கான போராட்டமும் அவசியம். சாதி முற்றிலுமாக ஒழிக்கப்படும் வரை சாதி ஆணவப் படுகொலைகளும், வர்க்க வேறுபாடுகள் களையப்படும் வரை வர்க்க ஆணவப் படுகொலைகளும் தொடரும்.
சாதி இயக்கங்களின் மௌனமும் வர்க்கப் பார்வையும்
தையூர் படுகொலை குறித்து பேசும்போது, பட்டியல் சாதி இயக்கங்களும் அடையாள அரசியல் பேசுபவர்களும் ஏன் இந்த பொருளாதாரப் பரிமாணத்தைப் பேசுவதில்லை?
தையூரில் கொல்லப்பட்ட இளைஞனும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவன்தானே? அப்படியானால், ஒரே சாதிக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வு எவ்வாறு அதிகாரமாக மாறுகிறது என்பதையும் நாம் பேச வேண்டாமா?
அடையாள அரசியலுக்கு அப்பாற்பட்ட மார்க்சிய–லெனினிய வர்க்கப் பார்வை இருந்தால்தான், தையூரில் நடந்தது சாதியைத் தாண்டி செயல்பட்ட வர்க்க ஆணவம் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால் இதன் பொருள் சாதி ஆணவப் படுகொலைகளைப் பின்னுக்குத் தள்ளுவது அல்ல. மாறாக, சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமும், வர்க்க ஆணவப் படுகொலைக்கு எதிரான போராட்டமும் ஒன்றுக்கொன்று எதிரானவை அல்ல; அவை இரண்டும் சுரண்டல் மற்றும் ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தின் வெவ்வேறு தளங்கள்.
சாதியாலும் வர்க்கத்தாலும் ஒரே சமயத்தில் எதிரெதிர் திசைகளில் இழுக்கப்படும் தமிழக உழைக்கும் மக்களுக்கு, இரண்டையும் ஒருங்கே புரிந்துகொள்ளும் கண்ணோட்டம் இன்று முன்பைவிட அதிக அவசியமாகியுள்ளது.
தையூர் நமக்கு உணர்த்தும் பாடம் இதுதான்: ஆதிக்கம் என்பது சாதியின் பெயரால் மட்டுமல்ல; பணத்தின் பெயராலும் செயல்படும். ஒரே சாதி என்ற அடையாளம் மட்டும் இருவரையும் சமமானவர்களாக்கிவிடாது. அந்த உண்மையை நாம் கண்டுகொள்ளும் வரை, தையூர் நமக்கு விடை கேட்டுக்கொண்டே இருக்கும்.
— ஊரான்
.jpeg)
No comments:
Post a Comment