வடலூரைப் 'புனித நகரமாக' அறிவித்தால் அங்கு என்ன நடக்கும்?
வடலூர் நகர எல்லைக்குள் ஆடு, கோழி, மீன் உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் (கவிச்சிக் கடைகள்) முற்றிலுமாகத் தடை செய்யப்படும். மக்கள் தங்கள் வீடுகளில் கூட அசைவம் சமைக்க முடியாது!
இறைச்சி சாப்பிட விரும்பினால், மக்கள் வடலூர் நகரை விட்டு வெளியே சென்று, அங்கேயே சாப்பிட்டு, அதைச் செரித்து, அங்கேயே கழிவை வெளியேற்றிவிட்டுப் புனிதர்களாகத்தான் வடலூருக்குத் திரும்ப வேண்டும்!
என்னவொரு அராஜகமான கோரிக்கை இது! மனிதர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் இந்த வன்கொடுமையை என்னவென்று சொல்வது?
'கவிச்சி' (அசைவம்) என்பது அருவருப்பானது, தீட்டானது என்பது அப்பட்டமான பார்ப்பனிய-சனாதனக் கருத்து.
வரலாற்றில் ஒடுக்கப்பட்ட, தீண்டாமைக்கு உள்ளாக்கப்பட்ட மக்களுக்கு உணவு மறுக்கப்பட்ட போது, அவர்கள் உயிர் வாழச் செத்த மாட்டையும் விலங்குகளையுமே உண்ண வேண்டிய சூழல் இருந்தது. தீண்டத்தகாதவர்கள் கவிச்சி உண்ணுவதால் கவிச்சியும் தீட்டாகக் கருதப்பட்டது. காலப்போக்கில், அசைவ உணவே உடலுக்கு வலு சேர்க்கும் மலிவான சத்துணவு என்பதால் அது உழைக்கும் மக்களின் முதன்மை உணவாக மாறியது.
'புனித' நகரமான ஹரித்துவாரில் அசைவ உணவு கிடைக்காமல் மக்கள் எங்ஙனம் அவதிப்படுகிறார்கள் என்பதை நேரில் பார்த்தவன் நான். எனவே, வடலூரைப் 'புனித நகரமாக' அறிவிக்கக் கோரி உழைக்கும் மக்களின் உணவு உரிமையில் கைவைக்கும் இந்த நபர்களின் கோரிக்கையை, அசைவப் பிரியர்களும் உழைக்கும் மக்களும் உறுதியாக முறியடிக்க வேண்டும்!
வடலூருக்கு தேவையானது புனிதமா? தூய்மையா?
வடலூருக்கு உண்மையில் தேவையானது புனிதம் அல்ல; தூய்மை. சாக்கடை நீர் ஓடாத தெருக்கள், குப்பைகள் இல்லாத பொதுவெளிகள், அனைவருக்கும் குடிநீர், சுகாதாரம், மருத்துவ வசதிகள் கொண்ட நகரம்தான் மக்களுக்கு தேவை. ஆனால் மக்களின் உணவுத் தட்டில் என்ன இருக்க வேண்டும் என்று கட்டளையிடும் 'புனித நகரம்' யாருக்குத் தேவை?
வள்ளலாரை சனாதன உலைக்களத்திற்குள் தள்ளும் சதி!
உண்மையிலேயே வள்ளலார் விலங்கு வதைக்கு எதிராகப் பேசியதை விட, சனாதன-பார்ப்பனிய வதைக்கு எதிராகப் பேசியதுதான் அதிகம்! அவர் ஒரு சமரசமற்ற சனாதன எதிர்ப்புப் போராளி. அப்படிப்பட்ட வள்ளலாரை மீண்டும் சனாதனப் பிடிக்குள் தள்ளி, அவரது பெயரால் 'புனிதக் கூச்சல்' போடுவது அவரது தத்துவத்திற்கே செய்யும் துரோகமாகும்.
வள்ளுவரின் புலால் மறுப்பும் காலச் சூழலும்
வள்ளுவர் கூட 'புலால் உண்ணாமை' குறித்துத் திருக்குறளில் (அதிகாரம் 26) பத்து குறட்பாக்களை எழுதியுள்ளார். வேளாண் உற்பத்தி பெரிய அளவில் பெருகாத, வேட்டையாடி உண்பதே வழக்கமாக இருந்த அக்காலகட்டத்தில் உயிர் பலியைத் தடுப்பதற்காக வள்ளுவர் அதை எழுதி இருக்கக்கூடும்.
ஆனால், அன்றைய வரலாற்றுச் சூழலில் எழுதப்பட்ட ஒன்றை இன்றைக்கும் அப்படியே பொருத்த முடியாது. இன்றைக்கு அசைவ உணவே உழைக்கும் மக்களுக்கு மலிவாக வலு சேர்க்கக்கூடிய உணவாக இருக்கும் போது, வள்ளுவரை அப்படியே பின்பற்ற முடியாது.
எந்தவொரு அறநெறியையும் அந்தந்தக் காலச் சூழலுக்கு ஏற்பப் புரிந்துகொள்ள வேண்டுமே தவிர, அதில் ஆன்மீகப் பொருள் தேடி மூர்க்கமாகப் பின்பற்றுவது அறிவீனம்!
அசைவமும் குற்றமும்: அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை!
"அசைவம் சாப்பிட்டால் முரட்டு குணம் வரும், குற்றம் செய்வான்" என்று சனாதனம் பேசுகிறது. இது முற்றிலும் அறிவியலுக்குப் புறம்பான கட்டுக்கதை! அசைவ உணவு உண்பவர்கள் மட்டும்தான் குற்றம் செய்கிறார்களா? சைவப் போர்வையில் வலம் வரும் உத்தமர்கள் யாரும் குற்றம் செய்வதில்லையா?
தூய்மை-தீட்டு (purity-pollution) என்கிற உயர்மை-தாழ்மை என்கிற இந்து மதக்கோட்பாடுதான் சாதியத் தீட்டையும் வாழ்வியல் தீட்டையும் வரையறுக்கிறது. எங்கெல்லாம் புனிதம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தீட்டும் சேர்ந்தே இயங்குகிறது.
முடிவுரை
வடலூரைப் புனித நகரமாக அறிவிக்கக் கோருவதன் உள்ளே ஒளிந்திருப்பது மறைமுகத் தீண்டாமையே அன்றி வேறில்லை. எனவே, 'புனிதம்' என்ற பெயரில் மக்களின் உணவு உரிமையைப் பறிக்கவும் சாதியத் தீட்டைத் திணிக்கவும் யார் பேசினாலும், அவர்கள் மீது வன் கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் (SC/ST Act) கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்!
வள்ளலார் வாழ்ந்த வடலூரை குப்பைகள் இல்லாத, சாக்கடைகள் இல்லாத, நோய்நொடியற்ற "தூய்மை நகரமாக" மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கட்டும். அதுதான் மக்கள் வாழத் தகுதியான நகரமாக இருக்கும். அதை விடுத்து, 'புனித நகரம்' என்ற பெயரில் மக்களின் வாழ்வுரிமையை உணவோடு சேர்த்துப் பறிக்க நினைப்பது அப்பட்டமான சனாதன பாசிசமே!
— ஊரான்

No comments:
Post a Comment