அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியான 'செய்திக்கதிர்' அறிவிப்புப் படம் ஒன்று ஆன்மீக அன்பர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்வேறு சேவைகள் மற்றும் சிறப்புத் தரிசனங்களுக்கான கட்டணங்களைப் பல மடங்கு உயர்த்த கோயில் நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் ஆட்சேபனைகளை ஜூலை 7ஆம் தேதிக்குள் கடிதம் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள கட்டண உயர்வு
அறிவிப்பில் இடம்பெற்றுள்ள விவரங்களின்படி: சண்முகார்ச்சனை ₹5,000-லிருந்து ₹30,000 ஆகவும், மூலவர் அபிஷேகம் ₹1,500-லிருந்து ₹10,000 ஆகவும், தங்கரத உலா ₹2,500-லிருந்து ₹5,000 ஆகவும், ஒன்பது கால பூஜை ₹1,500-லிருந்து ₹6,500 ஆகவும், சாதாரண நாள் அபிஷேக தரிசனம் ₹500-லிருந்து ₹2,500 ஆகவும், சந்தனக்காப்பு ₹100-லிருந்து ₹1,000 ஆகவும் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சில சேவைகளில் ஐந்து மடங்கு, ஆறு மடங்கு, ஏழு மடங்கு என உயர்வுகள் முன்மொழியப்பட்டிருப்பது இயல்பாகவே பல கேள்விகளை எழுப்புகிறது.
பக்தியின் நுகர்வுமயமாக்கல்: ஒரு கிராம்சியப் பார்வை
இந்த அறிவிப்பு ஒரு நண்பர்கள் குழுவில் பகிரப்பட்டபோது நடந்த விவாதங்களை இங்கே முறைப்படுத்தி முன்வைக்கிறேன், ஏனெனில் அவை இந்தக் கட்டண உயர்வை வெறும் நிர்வாக நடவடிக்கையாக மட்டும் பார்க்க முடியாது என்பதைத் தெளிவாக்குகின்றன.
கிராம்சி கூறும் "பண்பாட்டு மேலாதிக்கம்" என்ற கோணத்தில் பார்த்தால், மக்களின் பக்தியும் ஆன்மீகத் தேவைகளும் படிப்படியாக ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்படுகின்றன. "அதிகக் கட்டணம் செலுத்தினால் சிறப்புத் தரிசனம்", "பெரிய காணிக்கை செலுத்தினால் அதிகப் புண்ணியம்" என்ற மனநிலை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு காலத்தில் அனைவருக்கும் பொதுவான ஆன்மீக அனுபவமாக இருந்த கோயில் வழிபாடு, இன்று பல அடுக்குகளைக் கொண்ட நுகர்வுச் சந்தையாக மாறுகிறது.
பொருளாதார வசதி உள்ளவர்களுக்கு விரைவான தரிசனம், தனிப்பட்ட பூஜை கிடைக்க, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நீண்ட வரிசைகளில் மட்டுமே நிறுத்தப்படுகின்றனர். இவ்வாறு பக்திகூட ஒரு சந்தைப் பொருளாக மாறும்போது, "இறைவனிடம் அனைவரும் சமம்" என்ற பாரம்பரியக் கருத்தே நடைமுறையில் கேள்விக்குறியாகிறது.
இந்தக் கோட்பாட்டுப் பின்னணியில்தான், என் நண்பர்கள் குழுவில் எழுந்த கேள்விகள் பொருள் கொள்கின்றன.
நடுத்தர வர்க்கத்தின் ஏமாற்றமும் "A-Class" ஆன்மீகமும்
ஒரு நண்பர் பகிர்ந்த அனுபவம் இங்கே குறிப்பிடத்தக்கது: சண்முக அர்ச்சனையில் பன்னிரண்டு முறை பங்கேற்று, ₹2,000 முதல் ₹2,500 வரை செலுத்தி அந்தச் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க முடிந்திருக்கிறது. ஆனால் அதே சேவைக்கான கட்டணம் ₹30,000 ஆக உயர்த்தப்படும்போது, அது பக்தியைப் பொருளாதாரத் தகுதியின் அடிப்படையில் வகைப்படுத்தும் நடைமுறையாக மாறுகிறது.
ஒரு நண்பர் இதை "ABC analysis" என்ற வணிக சொல்லாடலுடன் ஒப்பிட்டார்: C கட்டணம் என்றால் அனைவரும் கலந்துகொள்ளும் வகையில் இருக்கும்; ஆனால் இந்த உயர்வுக்குப் பின் A வகை பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கடவுள் சென்றடையக்கூடியவராக மாறுகிறார். பணம் உள்ளவர்களுக்கு விரைவான அணுகல், பிரத்யேக சேவை; மற்றவர்களுக்கு நீண்ட வரிசை — இது ஆன்மீக ஜனநாயகமா அல்லது பொருளாதார அடிப்படையிலான பிரிவினையா என்ற கேள்வி தவிர்க்க முடியாததாகிறது.
நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மையும் ஆலயத்தின் நோக்கமும்
விவாதத்தில் எழுந்த மிக முக்கியமான கேள்வி இதுவே: ஆலயம் என்பது வியாபார நோக்கில் கட்டப்பட்டதல்ல என்றும், கோவில் உண்டியல் மற்றும் சொத்துக்களில் இருந்து வரும் வருமானமே பராமரிப்புச் செலவை விட ஏற்கனவே அதிகமாக இருக்கிறது என்றும் ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார். அப்படியிருக்க, இவ்வளவு பன்மடங்கு உயர்வு ஏன் தேவைப்படுகிறது?
சண்முகார்ச்சனை தினமும் இரண்டு முறை நடைபெறுவதால், ஆண்டு வருமானம் தோராயமாக ₹36.5 லட்சத்திலிருந்து ₹2.19 கோடியாக உயரக்கூடும் என்று ஒரு நண்பர் கணக்கிட்டார். இந்த வருமானம் எந்தத் தேவைக்காக, எந்தத் திட்டத்திற்காக என்பதை நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டாமா? "ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்கலாம்" என்ற அறிவிப்பு ஜனநாயக நடைமுறையாகத் தோன்றலாம்; ஆனால் எத்தனை ஆட்சேபனைகள் வந்தால் இந்த முடிவு திரும்பப் பெறப்படும், மக்களின் கருத்துக்கு நடைமுறையில் என்ன மதிப்பு அளிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை. கணக்கு வழக்குகளைத் தெரிவித்து, காரணங்களை நியாயப்படுத்தி நிர்வாகம் அறிவித்தால் மட்டுமே இது ஏற்புடையதாக இருக்கும் என்ற கருத்தும் விவாதத்தில் முன்வைக்கப்பட்டது.
வரிசையிலும் நுழையும் ஊழல்
கட்டண உயர்வு ஒரு வகையான ஊழலாக இருந்தாலும், இன்னொரு வடிவிலும் இது ஏற்கனவே நிலவுகிறது என்று ஒரு நண்பர் சுட்டிக்காட்டினார்: வரிசையில் நிற்காமல் சாமியை நேராகப் பார்க்க, பருவத்திற்கேற்ப ரூ.500 முதல் ரூ.2,000 வரை தனிநபர் மட்டத்தில் லஞ்சம் வாங்கிக்கொள்ளும் நடைமுறை. இது வரி கொடுப்பவரும் வாங்குபவரும் இணைந்து செய்யும் அநீதி என்று அவர் குறிப்பிட்டார். நிறுவன ரீதியான கட்டண உயர்வும், இந்த தனிநபர் ஊழலும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே — இரண்டுமே பணத்தின் அடிப்படையில் இறைவனை அணுகும் வாய்ப்பைப் பிரிக்கின்றன.
சிலப்பதிகாரப் பார்வையில் இன்றைய சூழல்
தனக்கு நேர்ந்த அநீதிக்காகக் கண்ணகி மதுரையை எரித்தபோது, அங்கிருந்த தெய்வங்கள் கூட அந்த அநீதியை ஏற்காமல் ஊரை விட்டு வெளியேறின என சிலப்பதிகாரம் கூறுகிறது. ஒரு நண்பர் இதை இன்றைய சூழலுடன் இணைத்துப் பேசினார்: அநீதி நடக்கும் இடங்களில் ஆண்டவன் கர்பகிரகத்தை விட்டே வெளியேறியிருப்பார்; நாம் கடவுள் என்று நம்பி வணங்கும் இடத்தில் கடவுள் உண்மையில் இல்லாமல் போயிருக்கலாம் என்ற அவரது கருத்து கூர்மையானது. கடவுள் இல்லாவிட்டாலும் இருப்பது போல் ஜோடனை செய்து காசு பார்க்கும் கும்பல் இருப்பதாகவும், அந்தக் கும்பலை மீறி கடவுள் எதுவும் செய்ய முடியாதவாறு கடவுளையே சிறையில் வைத்திருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
இன்று பல இடங்களில், பக்தியின் பெயரில் நடைபெறும் இந்த பொருளாதார பிரிவினைகள் இயல்பானதாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. காசில்லாதவர்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்க, பணமுள்ளவர்கள் குறுக்கு வழிகளில் விரைவாக தரிசிக்கும் நடைமுறைகள் வளர்ந்து வருவது ஆன்மீகத்தின் பெயரில் உருவாகும் புதிய சமூகப் பிரிவினையை நினைவூட்டுகிறது.
முடிவுரை
திருச்செந்தூர் கோவில் கட்டண உயர்வு என்பது வெறும் கட்டண மாற்றம் மட்டுமல்ல; ஆன்மீகம் எந்தத் திசையில் நகர்கிறது என்ற பெரிய கேள்வியையும் எழுப்புகிறது.
பக்தி ஒரு தனிநபர் நம்பிக்கையாக இருக்கலாம். ஆனால் அந்த நம்பிக்கையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளுக்கே விலை நிர்ணயிக்கப்படும்போது, ஆன்மீகமும் சந்தை நியதிகளின் கீழ் இயங்கத் தொடங்குகிறது. இதுவே பக்தியின் நுகர்வுமயமாக்கல் ஆகும்.
இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன் என்றால், அவரை அணுகுவதற்கான வாய்ப்புகளும் எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும். கோயில்கள் பணக்காரர்களுக்கான பிரத்யேக ஆன்மீக மையங்களாக அல்லாமல், மக்களின் பொதுவான பண்பாட்டு மற்றும் ஆன்மீக இடங்களாகத் தொடர வேண்டும். இல்லையெனில், "பணக்காரர்களின் கடவுள்" மற்றும் "ஏழைகளின் கடவுள்" என்ற புதிய பிரிவினையை இந்தக் கட்டண உயர்வுகள் உருவாக்கும் அபாயம் உள்ளது.
எனவே, கட்டண உயர்வின் அவசியம், அதன் பொருளாதார அடிப்படை, மக்களுக்கான பயன்பாடு ஆகியவை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் விளக்கப்பட வேண்டும். அதே நேரத்தில், ஆன்மீகத்தை வணிகச் சந்தையின் தர்க்கத்திற்குள் முழுமையாக ஒப்படைக்கும் போக்குகள் குறித்தும் சமூக அளவில் தீவிரமான விவாதங்கள் நடைபெற வேண்டிய தேவை உள்ளது.
ஊரான்
.jpg)
Very wrong to increase. Primarily it is shameful on the part any tn govt to collect money for dharshan or any such things in hindu temple only . Not at all secular.
ReplyDeleteஜெயப்பிரகாசம்: If people ignore temple tharshan and start praying in their houses, the temple will be forced to restore the old charges. But, religious beliefs are blind,deaf and dumb.
ReplyDeleteசாம்சன்: கடவுள் வழிபாடு இன்றைக்கு ஒரு business ஆயிடிச்சு... அப்படிப்பட்ட வழிபாடுகளை தூக்கி எறிய எனக்கு தைரியம் இருக்கா??? ஒவ்வொரு நபரும் தன்னைத்தான் கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி???
ReplyDeleteரவி: The temple priests at Thiruchendur exploit the devotees situation and fleece money explicitly from public and make heyday everyday. It is unfortunate that all government authoritries turn Nelson eye and connive the looting business.
ReplyDeleteதணிகாசலம்: பார்ப்பனீய இந்து மத தத்துவம் என்பது,
ReplyDelete* இந்த பிரபஞ்சம் கடவுளுக்கு கட்டுப்பட்டது.
* கடவுள் வேதங்களுக்கு கட்டுப்பட்டது.
* வேதங்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டது
* மந்திரங்கள் பிராமணனுக்கு கட்டுப்பட்டது.
மேற்கண்ட தத்துவத்தின் படி, இந்த பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் திறன் (Power) பிராமணர்களுக்கு மட்டுமே உண்டு. அதன்படி அவர்களின் சுகபோக வாழ்க்கைக்கு தேவையான வருவாயை (பொருளாதாரம்) ஈட்டவே கோவில்கள் உருவாக்க பட்டது.
அவர்களின் தேவைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு என்பதை உறுதி படுத்துகிறார்கள்.
ஆன்மீகம், கடவுள் நம்பிக்கை, பக்தி இவைகள் கோவில்களில் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கிருத்துவ பைபிளில் ஒரு வசனம் உண்டு.
மத்தேயு 6:6: "நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப்பூட்டி, ரகசியத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது ரகசியத்தில் பார்க்கிற உன் பிதா உனக்கு வெளியரங்கமாய் பலனளிப்பார்."
அதன் பொருள் யாதெனில், உனக்கு என்ன தேவை என்பதை இறைவன் அறிந்திருக்கிறார். எனவே உன்னுடைய வேண்டுதலை உன்னுடைய வீட்டில் இருந்தே செய்யலாம் என்பதாகும்.
பல மணிநேரம் வரிசையில் காத்திருந்து, சில நொடி "தரிசனம்" சொல்வதால் கிடைத்த பலன் ஒன்றும் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உண்மையை இந்துக்கள் புரிந்துகொண்டால், இந்த கட்டண உயர்வை பற்றி நாம் விவாதிக்க அவசியம் வராது என்பது என் தாழ்மையான கருத்து.
நன்றி.
பைபிள் வசனங்களை குறிப்பிட்டது புரிதலுக்கு மட்டுமே.
பக்தி எப்படி ஒரு நுகர்வுப் 'பண்டமாக' மாறி வருகிறது என்பதையும், பண்பாட்டு மேலாதிக்கம் குறித்தும் புரிந்து கொள்வதற்காக இந்தப் பதிவு.
Deleteபக்தி வந்தால் புத்தி போய்விடும் என்பது தந்தை பெரியாரின் வார்த்தை.
ReplyDeleteபணம் கொடுத்து உடனடியாக கடவுளை காண்பவர் பற்றி கடவுள் இல்லை என சொல்லும் இயக்கங்கள் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என கருதுகிறேன்.
கடவுள் இல்லை என்பதை ஆயிரம் பிரச்சாரம் மூலம் சொல்வதைவிட இதைப் போன்ற வணிக நோக்கங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் இன்னும் எளிதாக செய்ய முடியும் என கருதுகிறேன்.
சாராய போதையில் இருந்து மட்டும் வருமானம் வந்தால் போதுமா என்ன? பக்தி போதையில் இருந்தும் எங்களால் காசு அடிக்க முடியும் என்பதை புதிய அரசாங்கம் நிரூபிக்கிறது.
பக்தர்களை சிந்திக்க வைக்க மேலும் மேலும் எழுதுங்கள்.
தங்களது பகுப்பாய்வுக்கும்,ஒப்பிட்டு உடனடி வினையாற்றும் தங்களுக்கு எனது வாழ்த்துகள்.