Monday, 13 July 2026

மறையும் முன்பே தணிந்த அக்கினி!

இந்தியப் பொதுவுடமை இயக்க வரலாற்றில் 1967 நக்சல்பாரி பேரெழுச்சி ஆளும் வர்க்கத்தை நடுநடுங்க வைத்ததோடு, அரசியல் மாற்றத்தை விரும்பிய இளைஞர்களைக் காந்தமாய் ஈர்த்தது. வர்க்க எதிரிகளை அழித்தொழிக்கும் தொடக்க காலப் பாதையிலிருந்து, 1980-களின் தொடக்கத்தில் மக்களைத் திரட்டும் புதிய பாதையை நோக்கி நக்சல்பாரி இயக்கம் பயணித்தது. அந்த வரலாற்றுப் பின்னணியில் உருவானதுதான் மக்கள் கலை இலக்கியக் கழகம் (மகஇக).

அக்காலத்தில், தமிழ்நாட்டின் மேடைகள் கம்பன் கழக இலக்கியச் சொற்பொழிவுகளாலும், இலக்கற்ற பட்டிமன்ற அரட்டைகளாலும், வழக்கமான பகுத்தறிவு மற்றும் பார்ப்பன எதிர்ப்புப் பிரச்சாரங்களாலும் மட்டுமே சூழப்பட்டிருந்தன. அந்தச் சூழலில், “புதிய ஜனநாயகப் புரட்சி” எனும் மாற்று அரசியலை அதிரடியாக முன்வைத்து, மேடைகளில் நக்சல்பாரி அரசியலை முழங்கியவர்கள் மகஇக தோழர்கள். கடந்து செல்வோரையும் காதுகொடுத்துக் கேட்க வைத்து, கட்டிப்போடும் ஆற்றல் கொண்டதாக மகஇக-வின் மேடைப் பேச்சுகளும் பாடல்களும் விளங்கிய காலம் அது.

தோழர் கதிரவன்

தோழர்கள் காளியப்பன், சீனிவாசன், தமிழ்மணி, கதிரவன் என மகஇக-வின் மேடைப் பேச்சாளர்கள் புரட்சிகர மேடைப்பேச்சு வரலாற்றில் ஒரு புதிய தடத்தைப் பதித்தனர். தோழர் காளியப்பனின் உரை மடைதிறந்த வெள்ளமென ஓடும்; தமிழ்மணியும் சீனிவாசனும் மேடைகளில் அதிரடி காட்டுவர்; அதற்குப் பிறகு தோழர் மருதையனின் மேடைப்பேச்சு புதிய மைல் கல்லைத் தொட்டது.

இந்த வரிசையில், மாற்று அரசியலை எளிய மொழியில் மக்களிடம் கொண்டு சேர்த்ததில் மதுரையைச் சேர்ந்த  தோழர் கதிரவன் @ அக்கினியின் பங்கு அளப்பரியது.
தோழர் கதிரவனின் உரை படபடக்கும் வெடிகளைப் போல வெடித்துச் சிதறுவது மட்டுமல்ல, மக்களின் நெஞ்சங்களை உருக்கும் ஆற்றல் வாய்ந்தது. 35 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு திருமண விழாவில், வரதட்சணைக் கொடுமைகளை விவரித்து அவர் ஆற்றிய உரையைக் கேட்டு, அங்கிருந்த முதியோர்களின் கண்களிலிருந்து கண்ணீர் பொலபொலவெனக் கொட்டியது.

"போராட்டத்திற்கு அவர் மேடையில் அறைகூவல் விடுத்தால், தோழர்கள் அணிஅணியாய்த் திரளும் அசாத்திய வலிமை அவரது பேச்சிற்கு இருந்தது. அத்தகைய சிறப்பு வாய்ந்த  தோழர் கதிரவனின் தலைமையில்தான் எனது திருமணமும் நடைபெற்றது. 

தொடக்க காலத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் களப்பணியாளராகவும், மேனாள் மாநில செயலாளராகவும், மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டவர் அவர்.

சிறு சிறு செயல்களைக்கூட விளம்பரமாக்கி முகநூலில் புகழ் தேடும் சமூக ஊடகக் காலம் இது. ஆனால் அன்றைய தோழர்களின் அளப்பரிய உரைகள் கேட்போர் மனங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவை முறைப்படி பதிவு செய்யப்படாமலேயே கால ஓட்டத்தில் மறைந்து போனது பெருஞ்சோகம்.

2020-ஆம் ஆண்டு வாக்கில் அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிக்கலால், மக்கள் கலை இலக்கியக் கழகத்தோடு இருந்த உறவை துண்டித்துக் கொண்டு ஒரு சிறு குழுவினரோடு அவர் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டதால், அன்றிலிருந்து அமைப்பில் அவருடைய செயல்பாடுகள் முடங்கிப் போயின. கதிரவன் தனது மகஇக அடையாளத்தையும் இழந்து,  மறையும் முன்பே தணிந்து போனதால், அவரோடு எமக்கு இருந்த தோழமை உறவும் அறுந்துபோனது.

அரசியல் ரீதியாக எமது உறவுகள் அறுந்துபோனாலும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலச் செயற்குழுவில் அவரோடு இணைந்து பயணித்த 20 ஆண்டு கால நினைவுகள் மட்டும் என்றும் எம்மை விட்டு நீங்காது.

தோழர் கதிரவன் அவர்களுக்கு
எனது ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்மணி

No comments:

Post a Comment