பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவைச் சோதிக்கிறேன் என்ற பெயரில், அரசுப் பள்ளி மாணவர்களைப் பொதுவெளியில் அவமானப்படுத்தும் வகையில் காணொளிகள் வெளியிடுவது கல்வி மீதான அக்கறையின் வெளிப்பாடு அல்ல; அது அதிகார மனோபாவத்தின் வெளிப்பாடாகவே தோன்றுகிறது.
அமைச்சர் கீர்த்தனா
ஒரு அமைச்சர் மாணவர்களிடம் கேள்வி கேட்கலாம். அவர்களின் கற்றல் நிலையை அறியலாம். ஆனால் அதனை சமூக ஊடகக் காட்சிப் பொருளாக மாற்றி, மாணவர்களின் தடுமாற்றங்களை “ரீல்ஸ்” உள்ளடக்கமாகப் பரப்புவது கல்வித் தரத்தை உயர்த்தாது. மாறாக, மாணவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கும்.
மாணவர்கள் இன்னும் கற்றுக் கொண்டிருக்கும் பருவத்தில் உள்ளவர்கள். அவர்களிடம் குறைகள் இருப்பது இயல்பானது. ஆனால் ஒரு அரசுப் பிரதிநிதியின் கடமை, அந்தக் குறைகளை வெளிச்சம் போட்டு காட்டுவது அல்ல; அவற்றைக் களைவதற்கான சூழலையும் வாய்ப்புகளையும் உருவாக்குவதுதான்.
அரசுப் பள்ளிகளை இகழ்வது என்பது வெறும் மாணவர்களை இகழ்வதல்ல. பல தலைமுறைகளாக அர்ப்பணிப்புடன் பணியாற்றி, கிராமங்களிலும் நகர்ப்புறங்களிலும் அறிவொளி பரப்பிய அரசு பள்ளி ஆசிரியர்களின் உழைப்பையும் அவமதிப்பதாகும்.
நானே மலை அடிவாரத்தில் உள்ள ஒரு சிறிய கிராம அரசு தொடக்கப் பள்ளியில் கல்வி கற்றவன். எழுத்தறிவு குறைந்த சமூகச் சூழலில் இருந்த என்னை எழுத்துலகிற்கும் அறிவுலகிற்கும் அழைத்துச் சென்றது அரசு பள்ளி ஆசிரியர்கள்தான். தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும்தான் என்னை தொழில்நுட்பக் கல்விக்கும், சட்டக் கல்விக்கும், உயர்கல்விக்கும் இட்டுச் சென்றது.
இது என்னுடைய கதை மட்டுமல்ல. தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், நிர்வாகிகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களின் கதையும் இதுதான். அவர்களில் பெரும்பாலோர் அரசு பள்ளிகளின் பிள்ளைகள்.
நாம் சாதனை மனிதர்களைப் பற்றியே பேசுகிறோம். ஆனால் அமைதியாகத் தங்கள் துறைகளில் பணியாற்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக நின்றிருக்கும் எண்ணற்ற அறிவாளிகளும் அரசு பள்ளிகளில் உருவானவர்கள்தான்.
உண்மையான கல்வி என்பது ஆங்கிலத்தில் சில வார்த்தைகள் பேசுவதால் மட்டும் அளவிடப்படுவதில்லை. அது சிந்திக்கும் திறன், மனிதநேயம், நாவடக்கம், பணிவு மற்றும் பிறரை மதிக்கும் பண்புகளால் அளவிடப்படுகிறது.
பதவி கிடைத்தவுடன் மாணவர்களைச் சோதித்து 'ரீல்ஸ்' எடுப்பது எளிது. ஆனால் அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவது, நூலகங்களையும் ஆய்வகங்களையும் வலுப்படுத்துவது, மாணவர்களின் கற்றல் தரத்தை உயர்த்துவது ஆகியவையே ஒரு அமைச்சரின் உண்மையான சாதனைகளாக இருக்க வேண்டும்.
மாணவர்களின் அறியாமையை வெளிக்காட்டுவது பெருமையல்ல; அவர்களின் அறிவை வளர்ப்பதுதான் கல்வியின் நோக்கம்.
அரசுப் பள்ளி மாணவர்களின் மரியாதையையும், ஆசிரியர்களின் கண்ணியத்தையும் பாதுகாப்பது அரசின் கடமை. கல்வி என்பது காட்சிக்கான பொருள் அல்ல; எதிர்கால தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு.
மாணவர்களை அவமானப்படுத்தும் 'ரீல்ஸ்' அரசியலை விட, மாணவர்களை முன்னேற்றும் கல்வி அரசியலே தமிழ்நாட்டிற்குத் தேவை.
பொன். சேகர், B.E., M.L., M.Phil.,
வழக்கறிஞர்

Samson: I don't understand where this lady learnt ways and means to improve the mindset of students to improve their educational qualities... Most humbug is the dressing down given to students... This is the problem when people not qualified to handle certain portfolios are given at a patterplate such portfolios... They misbehave... An able proof of the quality of the present government... Only God can save this state or some other people intervention...
ReplyDeleteAyyappan: In the light of present day scenario - this may be thoroughly not correct and acceptable.
ReplyDeleteBut the other side of the coin is - too much of shielding too will distort the growth.