கலை —
ஒரு தூய ஆறு!
ஆனால்,
சில கரங்கள்
அதைத் தொடும் போது
அந்த நீர்கூட அழுக்காகி விடுகிறது!
சொல்லடுக்குகளால்
மேடைகளை அதிரவைப்பவன்,
வாழ்க்கைப் பாதையில்
தறிகெட்டுத் தடுமாறுகிறான்.
கருணை சொட்டும் கதைகள்
அவனது உதடுகளில் மலர்கின்றன;
ஆனால்
அந்தச் சொற்களே
அவனது வக்கிரங்களுக்கு
மெல்லியக் கவசமாகின்றன.
கவிதையில் வழியும்
கண்ணீர்த் துளிகள் —
சில நேரங்களில்
குற்றங்களை மறைக்கும்
வண்ணக் கலவைகள்.
ஓவியத்தின் கோடுகள்
அழகை வரையலாம்;
ஆனால்
அவன் உள்ளத்தின் கோடுகளோ
அழுக்கை வெளிப்படுத்தலாம்!
திரையில்
நாயகனாய் ஒளிரும் ஒருவன்
உண்மை வாழ்க்கையில்
ஒரு வீழ்ந்த மனிதன் ஆகலாம்!
மக்களே —
ஒளியை மட்டும் பார்க்காதீர்.
அதன் பின்னாலுள்ள
இருளையும்
ஒருமுறை பாருங்கள்!
பொருளாதாரக் குற்றங்களில்
சமூகத்தைச் சுரண்டுபவனும்,
பாலியல் வேட்டையில்
புரளுபவனும் —
எவ்வளவு பெரிய கலைஞனாக இருந்தாலும்
அவன் நாயகன் அல்ல;
வரலாற்றில் ஒரு கரும்புள்ளி!
நல்லவன் யார்?
நயவஞ்சகன் யார்?
சமுதாயக் கண்ணாடியை
துடைத்துப் பாருங்கள்!
புறந்தள்ளப்பட வேண்டியவர்களை
போற்றத் தொடங்கினால்
தூய்மையான கலைகூட
ஒருநாள்
தீயாய் எழுந்து
தன்னைத்தானே எரித்துக் கொள்ளும்!
விழிப்பாய் இருப்போம்!
திறமை
ஒரு மனிதனை உயர்த்தலாம்;
ஆனால்,
தனிமனித ஒழுக்கமே
மனித வாழ்வின்
உண்மையான அடித்தளம்!
தமிழ்மணி

புலனத்தில் அரசு: வாழ்நாள் முழுவதும் கபட வேடதாரிகளை தோலூரியுங்கள். நாங்களும் கற்றுக் கொள்கிறோம்.
ReplyDeleteகலை கருத்து படைப்பு என கற்றுக் கொள்கிறோம்.
புலனத்தில் கலீல்: இவை யாவும் சில நேரங்களில் சில மனிதர்களாக இருப்பவர்கள்.
ReplyDeleteபுலனத்தில் கனகராஜ்: ஒருவன் கூட உங்கள் வடிகட்டியில் தேற மாட்டான். எல்லாவற்றிலும் அளவோட கண்ணியம், நேர்மை, ஆசை இருக்கவேண்டும். 100% பூரணம்(perfect) உலகில் எந்த ஒரு பொருட்களும், உயிரினங்களும் ஏன் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் perfect (ideal) கிடையாது. உங்களது எதிர்பார்ப்பு சற்று அதிகம் தான்.
ReplyDeleteபுலனத்தில் இராஜசேகரன்: உண்மை தான், பல கலைஞர்கள் வாழ்க்கை வேறு விதமாக தான் இருந்து இருக்கிறது. அவனது வக்கிரங்களுக்கு,……கவசமாகின்றன,… கொஞ்சம் கடுமையான வார்த்தைகள்…. இப்படி சொல்லலாமே, அவனுக்கு வாழ்க்கையில் பிரச்னைகள் இருக்கும் அதற்காக எழுதுவான், ஆதங்கத்தை தீர்த்து கொள்ள,….இதை psychology யில் Coping mechanism என்று சொல்வார்கள்.
ReplyDelete