Monday, 30 March 2026

காகிதக் காலமும் கருப்பு அங்கிகளும்: பார் கவுன்சில் தேர்தல் அனுபவம்

"காதும் கண்ணும் இருக்கும் போது காகிதங்களுக்கு இங்கென்ன வேலை?" என்று கேட்கும் அளவுக்கு இது டிஜிட்டல் மயமாகிப்போன உலகம். மின்னஞ்சல்களும், குறுஞ்செய்திகளும், சமூக ஊடகச் செய்திகளும் ஆதிக்கம் செலுத்தும் இந்த யுகத்தில், கடிதங்கள் நம் வீட்டுக்கதவுகளைத் தட்டுவதே அபூர்வமாகிவிட்டது. 

ஆனால், கடந்த பத்து நாட்களாக என் வீட்டுக் கதவுகள் 'தடதட'த்தன. எட்டிப் பார்த்தால், வாக்கு கேட்டு வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதங்கள் அங்கே விரவிக் கிடந்தன.

வீட்டுக்கதவுகள் மட்டுமல்ல, கைபேசிகளும்கூட இதற்கு விதிவிலக்கல்ல. குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் வழியாக வந்து விழும் தேர்தல் செய்திகள் காதுகளை அதிர வைத்தன. இவையெல்லாம் 30.03.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு மற்றும் புதுவை பார் கவுன்சில் தேர்தலுக்கான பரபரப்புகள். 

'சாராய ‘பார்' பக்கம் ஒதுங்காதவர்களைக்கூடத் தன்பக்கம் இழுக்கும் வல்லமை கொண்டது இந்தப் ‘பார் கவுன்சில்’ தேர்தல். இதில் நானும் ஒரு வாக்காளனாக ஈர்க்கப்பட்டேன்.


வெயிலூரும் பயணமும்

எனக்கான வாக்குச்சாவடி வேலூரில் இருந்ததால், சக வழக்கறிஞர் தோழரோடு மதியம் 12 மணி வாக்கில் வாலாஜாவிலிருந்து இருசக்கர வாகனத்தில் பயணமானேன். நல்லவேளையாக, அன்று மேகங்கள் கதிரவனைச் சற்றே போர்த்திக் கொண்டதால் அனல் தெறிக்கும் வேலூர், 'வெயிலூராக' மாறாமல் தப்பிப் பிழைத்தது.

வாக்குச்சாவடிக்கு வெளியே வழக்கமான தேர்தல் திருவிழாக் கோலம். வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து துண்டுச் சீட்டுகளைக் கொடுத்து வாக்கு வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். 
உள்ளாட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களின் அதே பிம்பம் இங்கும் நிழலாடியது. 

வருத்தமளிக்கும் விதமாக, 'நம்ம ஆளு' என்கிற சாதியப் பற்றும் இங்கே தலைதூக்கி நின்றது. பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனைத் துரத்தும் சாதி, அறிவுசார் தளமான கருப்பு அங்கிகளையும் விட்டு வைக்கவில்லை என்பது கசப்பான உண்மை.

டிஜிட்டல் யுகத்தில் ஒரு 'மன்னராட்சி' முறை

பிற்பகல் ஒரு மணியைத் தாண்டியும் வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்தது. வாக்களிக்கக் காத்திருந்த சிலரிடம் பேச்சுக் கொடுத்தபோது, 'வராகனுக்காக' (பயன்) காத்திருப்பவர்கள் போலத் தெரிந்தனர்.

தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக QR Code முறையைச் சமூக ஊடகங்கள் வழியாக அறிந்திருந்தேன். என் கைபேசியில் இருந்த குறியீட்டைக் காட்டினால் போதும் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்றேன். ஆனால், அங்கே ஏற்கனவே அச்சிட்டு வைக்கப்பட்டிருந்த QR Code தாள்களின் வரிசையில் என்னுடையது இல்லை. பிறகு கிரிமினல் பாருக்குச் சென்று, ஐந்து ரூபாய் செலவழித்து ஒரு அச்சுப் பிரதியை எடுத்துக் கொண்டு மீண்டும் வரிசையில் நின்றேன்.

அடையாள அட்டை சரிபார்ப்பு மற்றும் புகைப்படப் பதிவுக்குப் பின், வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக வலது கை ஆட்காட்டி விரலில் மை வைக்கப்பட்டது. (பொதுவாக தேர்தல் ஆணையம் இடது கை ஆட்காட்டி விரலில் மை வைப்பது வழக்கம்). அதன் பிறகு வழங்கப்பட்ட 'பாயளவு' வாக்குச்சீட்டு என்னை வியப்படையச் செய்தது.

விசித்திரமான வாக்குச்சீட்டு முறை

இது சற்றே மாறுபட்ட தேர்தல் முறை. மொத்தம் 23 பேருக்கு வாக்களிக்க வேண்டும். வேட்பாளர்களின் பெயருக்கு எதிரே 1, 2, 3 என விருப்ப வரிசைப்படி எண்களை இட வேண்டும். எனக்குத் தெரிந்த பத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு வாக்களித்துவிட்டு வெளியே வந்தேன்.

வெளியே வந்தபோது பசி வயிற்றைக் கிள்ளியது. இன்னமும் பல வழக்கறிஞர்கள் வாக்களிக்காமல் தங்களது 'பசையற்ற' கைகளைப் பிசைந்து கொண்டு காத்திருந்தனர். 

வாக்குச்சீட்டு முறையில் முறைகேடுகள் நடக்காது என்று நம்பினாலும், இந்த அதிவேக டிஜிட்டல் உலகில் இந்த நடைமுறை எனக்கு ஒரு 'மன்னராட்சி காலத் தேர்தல்' முறையாகவே தோன்றியது.

மாற்றத்திற்கான தேவை

சுமார் ஒரு லட்சம் வழக்கறிஞர்கள் வாக்களிக்கும் இந்தத் தேர்தலில், 'முதல் விருப்ப' வாக்குகளைப் பெறுபவர் மற்றும் அதற்கு அடுத்தடுத்த வாக்குகளைப் பெறுபவர்கள் உள்ளிட்ட  23 பேரும் 'பார் கவுன்சில் உறுப்பினர்’ ஆகிவிடுவார்கள்.

இந்த முழு நடைமுறையையும் பார்த்தபோது, ஆன்லைன் முறையிலேயே இந்தத் தேர்தலைப் பாதுகாப்பாகவும், எளிமையாகவும் நடத்த முடியும் என்பது மட்டும் திண்ணமாகப் புரிந்தது.

எனது ‘பர்சில்’ கூடுதல் ‘சுமையும்’ ஏறாமல், விரலில் படிந்த கறைபடா கருப்பு மையுடன் மட்டும் மாலைப்பொழுதில் தெம்புடன் வீடு திரும்பினேன்.

பொன்.சேகர்
வழக்கறிஞர்
வாலாஜாபேட்டை

No comments:

Post a Comment