Friday 24 September 2021

வேலூர் மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீனிவாசனின் அடாவடி!

மோடி அரசு ஆட்சிக்கு வந்த கடந்த ஏழு ஆண்டுகளில், வேலை வாய்ப்புகள் எதுவும் புதிதாக உருவாக்கப்படவில்லை. மாறாக அரசு கடைபிடித்து வரும் பொருளாதாரக் கொள்கைகளால் பலர் வேலையிழந்து வாழ வழியற்று நிற்கின்றனர்வேளாண்மை செய்தால் வயிற்றைக் கூட இனி கழுவ முடியாது என்பதால் பலர் நகரங்களில் தஞ்சமடைகின்றனர். பலர் சித்தாள்-கொத்தனார்களாக, சுமைதூக்கும் தொழிலாளர்களாக, சாலையோர சிறு வணிகர்களாக, ஆட்டோத் தொழிலாளர்களாக வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

இவர்களில் தரைக்கடை-தள்ளு வண்டி  வியாபாரிகளும், ஆட்டோத் தொழிலாளர்களும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் தொடர்ந்த அச்சுறுத்தலுக்கும், தாக்குதலுக்கும் ஆளாகி வருகின்றனர். போக்குவரத்துக்கு இடையூறு செய்வதாக ஆட்டோக்களை பறிமுதல் செய்வதும், தள்ளுவண்டிகளைத் தாக்கி பொருட்களைச் சேதப்படுத்துவதும், தொழிலாளர்களை அச்சுறுத்துவதும், பொய் வழக்குப் புனைவதும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரின் கடமையாகவே மாறிவிட்டது.

சாலையோர வியாபாரிகளின் கடையை ஜனாதிபதியே நினைத்தால்கூட அப்புறப்படுத்த முடியாது; மாறாக சாலையோர வியாபாரிகள் சட்டப்படி (Street Vendors Act 2014) அமைக்கப்படும் குழுதான் (vending committee) இவர்களின் பிரச்சனையில் தலையிட முடியும். ஆனால் ஒரு அடி மட்ட 'கான்ஸ்டபிளே' தன்னை ஒரு ‘டொனால்டு ட்ரம்ப்பாக' நினைத்துக் கொண்டு சாலையோர வியாபாரிகளின் வாழ்வில் அத்துமீறி மூக்கை நுழைத்து அடாவடித்தனம் செய்வதைக் காண முடியும்.   

வேலூரில் ஒரு டொனால்டு ட்ரம்ப்

தனது கணவர் உடல் நலிவுற்று உழைக்க முடியாத சூழலில், வேலூரில் கவிதா என்கிற தொழிலாளி சாலையோரத்தில் வேர்க்கடலை, தண்ணீர் பாட்டில், மாங்காய் போன்றவற்றை விற்பனை செய்து தனது குடும்பத்தைக் காத்து வருகிறார். இவர் ஏதோ சாலையின் குறுக்கே ஷாப்பிங் மால்' வைத்து தொழில் செய்து, வேலூர் மாநகர போக்குவரத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது போல அவரை அச்சுறுத்தி,  மிரட்டி, அசிங்கப் படுத்தி உள்ளார் வேலூர் மாநகரப் போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் சீனிவாசன் என்பவர்.

ஆய்வாளர் சீனிவாசனின் அடாவடிக்கு எதிராக, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்புச் சங்கமான தோழர் பகத்சிங் அமைப்புசாரா தொழிலாளர் நலச் சங்கம் கவிதாவுக்கு ஆதரவாக களம் இறங்கிப் போராடி வருகிறது. போராட்டங்கள் மட்டுமே 'டொனால்டு ட்ரம்ப்பு'களை புறமுதுகிட்டு ஓடச் செய்யும்.

00000

அ. போக்குவரத்து ஆய்வாளர் சீனிவாசனுக்கு எதிராக கண்டன சுவரொட்டி



ஆ. போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


இ. அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு












தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வேலூர் மாவட்டம்


No comments:

Post a Comment