Tuesday 22 December 2020

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....4

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் இடிபாடுகளின் மீது கார்ப்பரேட்டுகளின் சேமிப்புக் கிடங்குகள்

எம்.எஸ் சுவாமிநாதன் குழு முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலையைத் தருவதாக சவடால் அடித்துதான் மோடி கும்பல் ஆட்சிக்கு வந்தது. ஆனால் இன்று குறைந்தபட்ச ஆதார விலையை ஒழித்துக் கட்டும் வேலையில் இறங்கியுள்ளது. 23 பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு இருந்தாலும் 7 பொருட்களை மட்டுமே அந்த விலைக்கு வாங்குகிறது. விளைவிக்கும் நெல், கோதுமை உள்ளிட்ட விளை பொருட்களில் 20-30 % பொருட்களை மட்டுமே குறைந்த பட்ச ஆதார விலைக்கு அரசு வாங்குகிறது. கிடங்குகள் நிறைந்து விட்டன என்று அரசு கைவிரித்து விடுவதால் மற்றவர்கள் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு விற்கத் தள்ளப்படுகிறார்கள். விளை பொருட்களை வாங்கிய கடனுக்காக கடன்காரனிடமோ அல்லது கமிஷன் மண்டிக்காரனிடமோதான் அவர்கள் கேட்கிற விலைக்கு களத்து மேட்டிலேயே விற்பனை வருகிறார்கள். 

ஒரு பக்கம் சில விளைபொட்களுக்கு கொள்முதல் விலையை அரசு சில சமயங்களில் உயர்த்துவதோடு சரி. ஆனால் பொருட்களை வாங்குவதற்கான கொள்முதல் நிலையங்களைத் திறப்பதே இல்லை. அப்படியே திறந்தாலும் ஒரு சில நிலையங்களை மட்டும் திறப்பது என்பதை அரசு திட்டமிட்டே செய்கிறது. இதனால் வேறு வழியின்றி வெளிச் சந்தையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் தள்ளப்படுகிறார்கள்.

கொள்முதல் செய்த தானியங்களைக் கூட பாதுகாக்க வக்கற்றுப் போன அரகளைத்தான் நாம் இந்தியாவெங்கும் பார்த்து வருகிறோம். கொள்முதல் நிலையங்களில் பாழாகிப் போன அரிசி-கோதுமையைத்தான் நியாயவிலைக் கடைகளில் வழங்குகிறார்கள். அதைக் கொண்டுதான் நாமும் உயிர் வாழ்ந்து வருகிறோம்.


உள்ளூரிலேயே நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் இருக்கும் சிறு குறு விவசாயிகள் இணையவழி மூலம் இந்தியாவெங்கும் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டுகிறது மோடி அரசு. ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஒழிக்கப்பட்டு, உள்ளூர் சிறுவணிகர்களும் ஒழிக்கப்பட்டுவிட்ட சூழலில் இணையவழி மூலம் எவனுமே பொருளை வாங்க முன் வரவில்லை என்றால் விவசாயி என்ன செய்வான்? ஒன்று சாலையில் கொட்ட வேண்டும், இல்லை என்றால் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட்டுகளிடம் அள்ளிக் கொடுக்க வேண்டும். 'உள்ளூரில் ஓணான் பிடிக்க முடியாதவன் அசலூரில் ஆணை பிடிக்கப் போனானாம்்' என்ற கதையாக உள்ளூரிலேயே குறைந்த பட்ச ஆதார விலை கிடைக்காத போது ஆன்லைன் மூலம் அகிலமெங்கும் விற்று லாபத்தை அள்ளலாம் என்று புதுமொழி எழுதுகிறது மோடி கும்பல்.

அனைத்து விளை பொருட்களையும் குறைந்த பட்ச ஆதார விலை கொடுத்து அரசாங்கமே கொள்முதல் செய்தால் அனைவருக்கும் பயன்படுமே! அதை விடுத்து இருக்கிற அரைகுறை கொள்முதல் முறையையும் ஒழித்துக் கட்டுவதால் யாருக்கு பயன்? அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட்டுகளைத் தவிர? அதனால்தானோ என்னவோ கார்ப்பரேட்டுகள் நவீன சேமிப்புக் கிடங்குகளை கட்டி வருகிறார்கள். சன் குழுமம் கூட தொலைக்காட்சி மட்டும் நடத்தினால் போதாது, சேமிப்புக் கிடங்குகளையும் கட்டட்டுமே என்று அங்கலாய்க்கிறார் அக்கா வானதி. 

தமிழ்மணி 

தொடரும்

தொடர்புடைய பதிவுகள்

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....3

விவசாயிகளின் டெல்லி முற்றுகை உணர்த்துவது என்ன?.....2










No comments:

Post a Comment