Monday, 27 January 2025

அகந்தையில் சிக்கித் தவிக்கும் மார்க்சிய லெனினிய அமைப்புகள்!

அதிகரித்து வரும் சமூகப் பதட்டங்கள், வேலையின்மை, பொருளாதார நிலைகள் குறித்து சில இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதோடு, ஏற்கனவே செயல்பட்டு வரும் ஒருசில பொதுவுடமை அமைப்புகளில் அவர்கள் தங்களை இணைத்துக் கொண்டு களமாட விரும்புகின்றனர். 

சமூக எதார்த்தம் குறித்தப் போதிய அனுபவப் புரிதலின்மையால், அவர்கள் விரைவில் சோர்வுற்று, தாங்கள் சேர்ந்த அமைப்பில் ஏதோ கோட்பாட்டுப் பிரச்சனை இருப்பதாகக் குழம்பி, புதிய வழிகள் கிடைக்குமா என புத்தகங்களில் தேடுகின்றனர். நாலு புத்தகங்களைப் படித்து விட்டு அவர்களும் வேறு வேறு திசைகளில் சிந்திக்கத் தொடங்கி அவர்களுக்குள்ளும் வேறுபட்டு விரத்தியின் விளிம்புக்குச்  சென்று எதுவுமே சரி இல்லை என்று புலம்பத் தொடங்குகின்றனர். 


புரட்சிக்கு புதிய வழியைக் கண்டுபிடித்து விட்டதாக அதில் சில இளைஞர்கள் துள்ளிக் குதிக்கின்றனர். சில பக்கங்களை எழுதி, சில கூட்டங்களை நடத்தி புரட்சி பூபாலம் பிறந்து விட்டதாக புலகாங்கிதம் அடைகின்றனர். சில மாதங்களிலேயே 'கடை விரித்தும் கேட்பாரில்லை' என்ற கதையாக மீண்டும் விரக்திக்குத் தள்ளப்பட்டு சொந்த வாழ்க்கைக்குத் திரும்பி ஏற்கனவே செயல்படும் இயக்கங்களைச் சீண்டிக் கொண்டே காலத்தை ஓட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் மார்க்சியம் பேசுவோரின் பொதுத் தன்மை இது. தமிழ்நாட்டின் மாற்று புரட்சிகர அரசியல் சக்தியாக வளர்ந்து கொண்டிருந்த மகஇக - வின் இன்றைய நிலையும் இதுதான்.

2019-20 ஆம் ஆண்டுகளில் அன்றைய மகஇக பொதுச் செயலாளர் தோழர் மருதையன் மீது காழ்ப்பு கொண்ட கட்சியின் மூத்தத் தோழர் ஒருவரால் மருதையன் அமைப்பை விட்டே வெளியேற நேர்ந்தது. இந்தப் பிரச்சினையில் அமைப்பின் பெரும்பான்மையினர் மருதையனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த போதும், அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒரு தோழரும் வேறு சிலரும் அமைப்பை விட்டு வெளியேறினர். அதன் பிறகு அவர்களும் இரண்டாக உடைந்தனர். 

அமைப்பு பிளவுக்குக் காரணமாக இருந்த அந்த இரு மூத்த தோழர்களுமே தற்போது உயிரோடு இல்லை. இந்த நிலையிலாவது பிரிந்து சென்றவர்கள் ஒன்று படுவார்கள் என்று பார்த்தால், அதற்கும் வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. இதில் மகஇக-விலிருந்து பிரிந்து சென்றதாக, "இளம் கம்யூனிஸ்ட் கழகம்" என்ற பெயரில் சில இளைஞர்கள் புறப்பட்டிருக்கிறார்கள். எதற்கு இந்த வீண் முயற்சி என்று தெரியவில்லை. பிளவு பட்டவர்களை ஒன்றிணைத்து கூட்டாகச் சேர்ந்து அமைப்பில் இருப்பதாக கருதும் 'கோட்பாட்டுப் பிரச்சனையைத்' தீர்ப்பதால் மட்டும்தான் அது தோழர்களுக்கும் நல்லது பொதுவுடமையை நேசிப்பவர்களுக்கும் நல்லது. அதை விடுத்து தனியாக ஆவர்த்தனம் பாடிக் கொண்டிருப்பதால் சில காலம் கழித்து விரக்தி மட்டும்தான் மிச்சமிருக்கும். வரலாறு உணர்த்தும் பாடம் இது.

எல்லோரும் இங்கு கன்றுக்குட்டிகள்தான். உழவுக்கு பழக்கப்படாத வரை கன்றுக் குட்டிகள் துள்ளிக் கொண்டுதான் இருக்கும். பயன்பாட்டுக்குரிய எருதுகளாய் மாறுவதற்கு கூட்டு முயற்சி ஒன்றுதான் இன்றைய தேவை. ஒற்றைக் காளையால் ஒரு போதும் உழ முடியாது.

கூட்டு முயற்சியில் ஜனநாயக மத்தியத்துவம் என்கிற அடிப்படையான அமைப்புக் கோட்பாட்டு நடைமுறை மிக மிக அவசியம். பெரும்பான்மைக்குச் சிறுபான்மை கட்டுப்பட்டு ஒன்றாகச் செயல்பட்டால் மட்டும்தான் தமிழ்நாட்டில் புரட்சிகர அரசியல் மீண்டும் உயிர் பெற்று எழ முடியும். 

பல்லாயிரக்கணக்கான தோழர்களின் அர்ப்பணிப்பு தியாகங்கள் தொகுக்கப்படாத நிலையில் அவர்களின் வலி காற்றில் கரைந்து கொண்டிருக்கிறது. துயரர்களின் வலியை தனது வலியாக உணர்ந்தால் மட்டுமே நோயைத் தீர்க்க முடியும்.
 
தமிழ்மணி
முன்னாள் மகஇக மாநில செயற்குழு உறுப்பினர் 

Thursday, 23 January 2025

டங்ஸ்டன் சுரங்க எதிர்ப்புப் போராட்டம் உணர்த்தும் பாடம் என்ன?

ஆரிய சங்கிகளும் தமிழ்த்தேச சங்கிகளும் ஆட்டம் போடும் இந்தக் காலகட்டத்தில் மார்க்சியம் பேசுவோரும், பெரியாரையும் அம்பேத்கரையும் உயர்த்திப் பிடிப்போரும், துண்டு துக்கடா அமைப்புகளாக சிதறுண்டு கிடப்பது காலக்கொடுமை! ஒவ்வொருவரும் தங்களுடைய அகந்தையை விட்டொழித்து எதிரிகளை வீழ்த்த ஒரே அமைப்பாய் ஒன்றிணையுங்கள். இல்லையேல் வரலாறு உங்களை மன்னிக்காது. 

சரியானவர்கள் பலம் பெறுவார்கள், வளருவார்கள் என்ற சால்ஜாப் எல்லாம் இங்கு தேவையில்லை. அதற்குள் சங்கிகள் உங்களது சல்லி வேரையே அறுத்து விடுவார்கள். இதில் கூத்து என்னவென்றால் ஒரே பெயரில் மூன்று, நான்கு கோஷ்டிகள். மூன்று பேர் நின்று முஷ்டியை உயர்த்தினாலே புரட்சி வந்துவிட்டதாக பம்மாத்து வேறு! 


சமூகத்தை மாற்ற நினைக்கும் சிறு சிறு அமைப்புகள் பெரும்பாலும் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் ஏற்றுக் கொண்டவர்கள்தான். பிறகு எதற்குத் தனித்தனி அமைப்புகள்? 

எழுத்துக்களில் புரட்சியைத் தேடியது போதும். உங்களது பங்காளிச் சண்டைகளில் போராட வருவோரின் வாழ்க்கையை நாசமாக்காதீர்கள். 

டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டத்தில் எளிய மக்கள் தங்களது ஒற்றுமையை பறைசாற்றி இருக்கிறார்கள். அவர்கள் மார்க்சையும் பெரியாரையும் அம்பேத்கரையும் படிக்கவில்லை. ஏன் டங்ஸ்டன் எதற்குப் பயன்படும் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. தங்கள் வாழ்வு பரிபோகும் என்பதைத் தவிர அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. 

சங்கிகளால் நாடே நாசமாகிக் கொண்டிருக்கிறது. எல்லாம் தெரிந்த நீங்களோ உங்களது சித்தாந்தம்தான் உயர்ந்தது என்று இன்னமும் சிலாகித்துக் கொண்டிருக்கிறீர்கள். 

இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது சங்கிகளுக்கு எதிரான கோபத்தைவிட உங்களுக்கு எதிராகத்தான் கோபம் அதிகரிக்கிறது. 

சீமானின் சில்லறைகளைப் போல நீங்களும் உங்களது அமைப்புகளில் தற்குறிகளாய் இருக்கப் போகிறீர்களா இல்லை இன்றைய அவல நிலையை எண்ணி தலைமையைத் தட்டி கேட்கப் போகிறீர்களா?

கடந்த 40 ஆண்டு காலத்தில் எண்ணற்ற தியாகங்களையும் அர்ப்பணிப்புகளையும் இழுப்புகளையும் சந்தித்து இன்றைய நிலை கண்டு நொந்து போனவனின் குரல் இது.

தமிழ்மணி

Monday, 6 January 2025

இரு பறவைகள் : ஒரு உரையாடல்!

கவிதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு மாவோவைப் படியுங்கள்!
***
மா சேதுங்

இரு பறவைகள் : 
ஒரு உரையாடல்
(இலை உதிர் காலம் 1965)

அந்தப் பெரும் பறவை (1) 
தன் இறகுகளை விசிறியாய் விரித்து,
தொண்ணூராயிரம் லி தொலைவு உயர்ந்து
சீறும் புயலைக் கிளப்புகிறது.
அதன் முதுகுக்கு மேலே நீலவான் இருக்க,
ஊர்களும் நகரங்களும் உள்ளடங்கிய 
மனிதனின் உலகை அளவிட 
அது 
கீழே பார்க்கிறது;
துப்பாக்கி வெடிப்புகள் விண்ணைச் சிராய்க்கின்றன
பீரங்கிக் குண்டுகள் நிலத்தினைத் துளைக்கின்றன,
ஒர் சிட்டுக் குருவி (2) தன் புதருக்குள்ளே 
அஞ்சி விறைந்து நிற்கிறது
"சே, என்ன இது ஓர் குழப்பப் பாழ் நரகம்!
ஓ, நான் இதிலிருந்து நழுவிப் பறந்து விட விரும்புகிறேன்".

"எங்கே என நான் கேட்கலாமோ?" எனப் பெரும் பறவை வினவ, சிட்டுக் குருவி விடை சொன்னது:
"தேவதை நாட்டு மலைகளின் மீதே இரத்தினங்கள் பதித்த மாளிகைக்கு.
இரண்டாண்டு முன்பு,
இலையுதிர் கால ஒளிமிகு நிலவில் மும்முனை ஒப்பந்தம் (3) கையெழுத்தானது 
உனக்குத் தெரியாதா?

அங்கே வயிறு புடைக்கத் தின்னலாம்,
ஆவி பறக்கும் உருளைக் கிழங்குடன்,
மாட்டிறைச்சி நிறைந்த உணவு வகை உண்டு (4)".
பெரும் வரவை சொன்னது:
"நிறுத்து உன் வெற்று உளறலை. உற்று நோக்கு - உலகம் தலை கீழாய்ப் புரட்டப்படுவதை".

- மாவோ
****
(1)- பெரும் பறவை: இது சீனப் பழங்கதைகளில் கூறப்படும் கற்பனைப் பறவை. ஆயிரம் லி நீளமுள்ள குன் எனும் வட கடல் மீன் ஆயிரம் லி நீளமுடைய பறவையாக மாறியது என்று இக்கதைகள் கூறுகின்றன. இப்பறவை தொண்ணூறாயிரம் லி உயரம் பறக்கக் கூடியதாம். மேகம் போல விரியும் இதன் இறகுகள் சூறாவளியைக் கிளப்பக் கூடுமாம். இங்கு இது மார்க்சிய-லெனினியப் புரட்சியாளர்களுக்கான குறியீடாக நிற்கிறது.

(2)-சிட்டுக் குருவி: புரட்டலாளருக்கான குறியீடு; புரட்சி முதன்மையானதல்ல, உற்பத்தியே முதன்மையானது என்பவர்கள் இவர்கள்-உலக அளவில் குருச்சேவைத் தலைவனாகக் கொண்டவர்கள். உலகிலும் சீனத்திலும் ஏற்பட்ட புரட்சி எழுச்சியையும் கொந்தளிப்பையும் 'குழப்பப்பாழ் நரகம்" எனக் கருதுபவர்கள்.

(3)-மும்முனை ஒப்பந்தம்: 1963 ஆம் ஆண்டு குருச்சேவ் காலத்தில் சோவியத் யூனியன், அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியவை செய்து கொண்ட போலித்தனமான அணு ஆயுதச் சோதனைத் தடை ஒப்பந்தம்.

(4)-புரட்டலாளர்கள் குருச்சேவின் சுரண்டல் கொள்கையில் நம்பிக்கை வைக்கிறார்கள். மும்முனை ஒப்பந்தத்தை மதிக்கிறார்கள். குருச்சேவின் 'மாட்டிறைச்சி-உருளைக் கிழங்கு' சோசலிசத்தைப் பாராட்டி நாடுகிறார்கள்.  'பாட்டாளி வர்க்கம் தனது உலகக் கண்ணோட்டத்திற்கேற்ப உலகை மறுவார்ப்புச் செய்தல்' என்பதை மறுக்கிறார்கள்-இவைதான் சிட்டுக் குருவி உவமையில் சொல்லப்படுகின்றன. புரட்சியாளர்களோ (பெரும்பறவை) உலகம் புரட்சிகரமாக மாற்றப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

1965-ஆம் ஆண்டு முதலில் எழுதப்பட்ட கவிதை மீண்டும் 1976-ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு நாளில் வெளியிடப்பட்டது. புரட்டலாளர்களுக்கு எதிராக மாவோ நடத்திய இறுதிப் போராட்டத்தில் இக் கவிதைக்கும் குறிப்பிடத்தக்க இடம் உண்டு.

***
கவிதை என்றால் உவமைகள் இப்படி அல்லவோ இருக்க வேண்டும்?

நூல்: மா சே துங் கவிதைகள்: பொதுமை வெளியீடு, 1981.